Showing posts with label சி.பி.எம். Show all posts
Showing posts with label சி.பி.எம். Show all posts

Sunday, May 30, 2010

ஈழத் தமிழருக்கு சி.பி.எம் தரும் ‘சாரிடான்’ மாத்திரை.

ஈழத் தமிழருக்கு சி.பி.எம் தரும் ‘சாரிடான்’ மாத்திரை.

மே 28, வெள்ளிக்கிழமை, மாலை 6 மணி.
இடம்– சென்னை, பூந்தமல்லி ஹை ரோடு, ஆர்யசமாஜம்.

‘இலங்கைத் தமிழர்ப் பிரச்சனைக்கு தீர்வு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் சி.பி.எம்.மின் இந்தியப் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் பேசப்போகிறார் என்ற விளம்பரம் தீக்கதிரில் படித்ததும் வந்து சரியாக 6 மணிக்கு ஆஜராகி நின்றோம்.

ஆர்யசமாஜம் இருந்த தெருவில் இருபுறமும் மார்கசிஸ்ட் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. தோழர்கள் ஆறுமணியிலிருந்தே வரத் தொடங்கிவிட்டனர். பத்திரிக்கையாளர் கூட்டமும் நின்றது. சுமார் ஆயிரம் பேர் கொள்ளளவு கொண்ட உள்ளரங்கில் இருக்கைகள் போடப்பட்டு பழங்காலத்து காதல் பாடல்கள் ஸ்பீக்கரில் மெலிதாக ஒலித்துக்கொண்டிருந்தன. தோழர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து வணக்கம் சொல்லுதலும், அளவளாவுதலும் ஆங்காங்கே நடந்துகொண்டேயிருந்தது. எங்களுடன் வந்த கல்லூரி நண்பர் ஒருவர் பிரபாகரன் படம் போட்ட டி.சர்ட் அணிந்திருந்தார். அவ்விடத்தில் அவரை கடந்து சென்ற எல்லாரும் லேசாக திரும்பிப் பார்த்தபடி சென்றனர். அப்போது ஒரு சி.பி.எம் தோழர் அவரிடம் வந்து சட்டையில் இருந்த பிரபாகரனின் போட்டோவைக் காட்டி “யார் இவர்?” என்று நக்கலாகக் கேட்டார்.

6.30 மணியளவில் பிரகாஷ் காரத் (சிறப்புரை), சத்தியமூர்த்தி(இலங்கை பத்திரிக்கையாளர்), டி.கே.ரங்கராஜன் (தலைமை) என்று அனைவரும் ஒன்றாக ஹாலுக்குள் நுழைந்தனர். கூட்டம் ஆரம்பமானது.

முதலில் பேசியவர் டி.கே.ரங்கராஜன். ஆரம்பித்தவர் “ஈழப் பிரச்சனை முடிவடைந்து ஒரு வருடம் ஆகியும்” என்றவர் பின் கொஞ்சம் சுதாரித்து “போர் முடிவுக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் இன்னும் அங்கிருக்கும் தமிழ் மக்கள் முகாம்களில் சிறைப்பட்டிருக்கிறார்கள். இலங்கை அரசு உடனே ஆவண செய்து அவர்களை மீள்குடியமர்த்தி ‘ஒன்றுபட்ட இலங்கை’யில் அவர்களின் வாழ்வுரிமைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்” என்றார். இரண்டாவது முறையும் 'ஈழப் பிரச்சனை முடிவடைந்து' என்று கூறிவிட்டு பின் திருத்திக் கொண்டார். விடுதலைப்புலிகள் செத்தவுடன் ‘பிரச்சனை’யும் முடிந்துவிட்டதாகக் கருதுவது தான் இவர் போன்ற தலைவர்களின் கருத்து என்றால் மற்றவர்களின் கதி ? இனவாதப் போரில் ஈடுபட்ட கடைசி 3 மாதங்களில் மட்டும் 30 ஆயிரம் மக்களை கொன்று குவித்த இலங்கை அரசை ‘போர்க்குற்றவாளி’ எனத் தீர்ப்பளித்த மனித உரிமை தீர்ப்பாணயம் இவர்கள் கண்ணிலே எப்படிப் படாமலே போனது. மாலைக்கண் வியாதியோ ?

அடுத்ததாகப் பேசியவர் சத்தியமூர்த்தி என்கிற ஈழத்துப் பத்திரிக்கையாளர். இவர் ‘வடக்கு வசந்தம்’ என்கிற இலங்கை அரசின் புதிய திட்டத்தை ஆதரித்தவர் என்கிறார்கள். அவர் சொன்ன முதல் விஷயம் இலங்கையின் 235 எம்.பி.க்களில் 46 பேர் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்கள், ஒருவர் மட்டும் சிங்களர். இந்த 46 பேர்களிடையே ஒருமித்த கருத்து என்ற ஒன்று இல்லை. எல்லாம் 16 பிரிவுகளாக பிரிந்து ஒற்றுமையில்லாமல் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இருந்தால் தமிழருக்கு என்ன நீதி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது ? இரண்டாவது விஷயம் இங்கிருக்கும் அரசியல் சக்திகள் இடது சாரிகளும் சேர்த்து அங்கிருக்கும் முற்போக்கு சக்திகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்களா ? இருந்தார்களா ? இனிமேலாவது இருப்பார்களா?. அவர் வேறு எதுவும் விரிவாகப் பேசவில்லை. தமிழ்ச் சக்திகள் வேறு வேறாக நின்றால் கூட அனைவரும் ஒருவரை ஒருவர் ஆதரித்துக்கொள்ள வேண்டுமே தவிர உள்ளுக்குள் அடித்துக் கொண்டு எதிராளியை பலமானவனாக மாற்றக் கூடாது என்று வலியுறுத்தினார்.



முதலில் பேசிய டி.கே.ரங்கராஜனும், சத்தியமூர்த்தியும் ஆளுக்கு பதினைந்து, பதினைந்து நிமிடங்கள் பேசி அமர்ந்து விட இறுதியாக பேச வந்தார் பிரகாஷ் காரத். அவர் பேச்சை உடனுக்குடன் மொழிபெயர்ப்பு செய்ய ஒருவரும் உடன் நின்றார். சரிதான் அக்குவேறாக் ஆணிவேராக பிரச்சனையை அலசப் போகிறாரோ என்று நினைத்தபடி கேட்டால் பிரகாஷ் காரத் பேசியது மேலும் அபத்தமானதாக இருந்தது. முதலில் முன்னர் பேசிய சத்தியமூர்த்திக்கு பதில் கொடுக்கும் வகையில் நாங்கள் 1980களிலிருந்து இலங்கையில் உள்ள அனைத்து கட்சிகளுடன் JVP உட்பட பேசிக்கொண்டுதான் இருந்தோம். 2004ல் இலங்கையில் சிங்கள மக்களின் முன் நடத்தப்பட்ட ஒரு பொதுக்கூட்டத்தில் நான் பேசிய போது இந்தியாவில் இருந்த சமஷ்டி முறை (Federal Setup) இலங்கைக்கு நன்கு பொருந்தும் என்று எடுத்துரைத்தாகவும் தெரிவித்தார். JVP கட்சியுடன் தொடர்ந்து பேசினாலும் அவர்கள் தங்களது இனவாதப் பார்வையை விடாதிருந்ததால் அவர்களுடனான தொடர்பு அறுந்துவிட்டது என்றார். அதைத் தவிர மற்றைய தமிழ்க் கட்சித் தலைவர்களுடனும் பேசியதாகவும், ஜனநாயக ரீதியாக போராட அவர்களும் இசைந்ததாகவும், ஆனால் அவர்கள் எல்லாம் புலிகளால் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். சிங்கள அரசு பெரும்பான்மை இனவாதமும், புலிகள் சிறுபான்மை பிரிவினைவாதமும் பேசியதால் நடைபெற்ற இந்தப் போரில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்றார். அதாவது சுருக்கமாக சத்தியமூர்த்தி குற்றம் சாட்டியது போல் சி.பி.எம் நிலைப்பாட்டிலும், செயல்பாட்டிலும் பிறழ்வதே இல்லை: தவறே செய்யவில்லை என்று நிரூபித்தார். அதுதானே முக்கியம் முன்னால் உடகார்ந்திருக்கும் சி.பி.எம் பாமரத் தோழர்களுக்கு. 'கட்சி நிலைப்பாட்டில் தவறிழைத்ததில்லை..தவறிழைக்காது' என்று அவர்கள் பரிபூரணமாக நம்ப வேண்டும். அது மிக முக்கியம்.

அடுத்து காரத் இந்தப் போர் நடைபெற்று முடிந்தவுடன் போரில் இடம்பெயர்ந்த மக்களின் புனர் வாழ்விற்கு உடனடியாக இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்தோடு முடித்திருந்தால் பரவாயில்லை. “இந்தியா ஒரு இறையாண்மை மிக்க நாடு. இலங்கையும் இறையாண்மை மிக்க நாடு. இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க இந்தியா உதவியது. எனவே இந்நிலையில் வரும் ஜூன் 8ஆம் தேதி பிரதமரை சந்திக்க வரும் ராஜபக்சேவை மக்களின் புனரமைப்புப் பணிகளை உடனே செய்யும் படி வற்புறுத்தவேண்டியது இந்தியாவின் உரிமை கூட” என்றார். போரே மிகக் கொடூரமான இன அழிப்புப் போர் என்று எல்லோரும் கூக்குரலிட்டுக்கொண்டிருக்க நம்ம தோழர் காரத் அதற்கு உதவி செய்தது இந்தியாவின் சட்டபூர்வ உரிமை(Legal Right) என்கிறார். நாம் எங்கே போய் முட்டிக்கொள்வது ? செத்துப் போன பல்லாயிரக்கணக்கான மக்களுக்கான நியாயம் என்ன ? சி.பி.எம்முக்கு கவலையில்லை என்பது தான் உண்மை. அதன் மேல்மட்டத் தோழர்களிடம் பேசுங்கள். இந்த மனப்பான்மை அப்படியே மாறாமல் தெறிக்கும். பின்னர் வழக்கமான பொத்தாம் பொதுவான வார்த்தைகள். "இலங்கையில் இருக்கும் முற்போக்கு, ஜனநாயக சக்திகளை ஒன்று சேர்த்து தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராட முயற்சிகள் செய்யவேண்டும்".

அவ்வளவுதான் முடிந்தது காரத்தின் உரை. முப்பது நிமிடங்களில். அதில் சரிபாதி நேரம் அதை மொழிபெயர்ப்பவர் எடுத்துக் கொண்டார். என்றால் வெறும் பதினைந்து நிமிடங்களில் பிரகாஷ் காரத் இலங்கைத் தமிழருக்கான தீர்வை வழங்கிவிட்டார். தலைவலியோ, மூக்கடைப்போ, ஈழத் தமிழர் பிரச்சனையோ, ஒரு சாரிடான் போடுங்கள்; பதினைந்தே நிமிடங்களில் வலி பறந்துவிடும். காரத் பறக்கடித்துவிடுவார்.

பின் வரும் கேள்விகள் எனக்கு எழுகின்றன.

1. உத்தப்புரத்தில் சாதிக் சுவர் கட்டி, கொடுமைப் படுத்தி, அங்கு வாழ்ந்த இருநூறு தலித் மக்களை ஓடஓட விரட்டி அடித்தது காவல்துறை என்று சாடி ஆர்ப்பாட்டம் செய்யும், காரத்தை நேரடியாக அழைக்கும், கோர்ட்டில் போராடி வந்த தீர்ப்பு வரை ‘ஆவணப்படம்’ எடுக்கும் சி.பி.எம்மின் ‘மனித நேயம்’ தமிழ் மக்கள் அங்கே பல்லாயிரக் கணக்கில் இலங்கையில் கொத்துக் கொத்தாக செத்தபோது, கற்பழிக்கப்பட்ட போது,ரசாயனக் குண்டுகளால் கருகிய போது, அதைத் தடுத்து நிறுத்த என்ன என்னவெல்லாம் செய்தது ?

2. அமெரிக்காவே போ..போ.. கியூபாவை நசுக்காதே.. இந்தியாவுடன் ஒப்பந்தம் போடாதே என்று அமெரிக்காவை, புஷ்ஷை எதிர்த்து அமிஞ்சிக்கரையில் கூட்டம் போட்டு நேருக்கு நேர் ஒபாமாவையே மேடையில் 'தில்'லாகக் கேட்க முடிந்த உங்களுக்கு, பாலஸ்தீனத்திற்கு உதவிப் பொருட்கள் ஏற்றிச் சென்ற கப்பலை மறித்துப் பிடித்த இஸ்ரேலை அடுத்த நாளே அத்தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி கண்டிக்க முடிந்த உங்களுக்கு, இலங்கையையும், ராஜபக்சேவையும் வலியுறுத்த மட்டும் ‘இறையாண்மை’ வெட்கம் வந்து தடுப்பதன் ரகசியம் என்ன ? அதற்கு மட்டும் இந்திய அரசையும், மன்மோகனையும் நீங்கள் தூதனுப்பி கேட்டுக் கொள்வதன் அர்த்தம் என்ன ? இங்கிருந்து சற்று உரக்கக் கத்தினாலே கூட ராஜபக்சேவுக்கு நம் குரல் கேட்குமே ? ஏன் இதே போல ஈழத்தமிழர்களுக்கு தாய்மண் என்கிற பெயரில் கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட உணவுப்பொருட்கள் இலங்கையால் திருப்பி அனுப்பப்பட்டு சென்னை துறைமுகத்தில் அல்லாடியதே அப்போது எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தீர்களா ?

3. ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் ஊற்றுவது முதல் ஊழல் பல புரிந்த, திமுக ரவுடிகளை தட்டிக் கேட்டதற்கு, அரசியல் பகையால் வெட்டிக் கொல்லப்பட்ட கவுன்சிலர் லீலாவதியின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தி உருக முடிந்த உங்களுக்கு, பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும் மக்களையும், அதற்கு நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் போடும் சோனியாவையும், மேனன்களையும், நம்பியார்களையும் கருணாநிதியையும் அம்பலப்படுத்தி தமிழ் மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்ப தன் உயிரை எரித்துக்கொண்டானே முத்துக்குமரன், அவனது தியாகம் எந்த விதத்தில் குறைந்தது ? அவனுக்கு அஞ்சலி என்று ஒரு அறிக்கை விடமுடியாத அளவுக்கு இளம் DYFI தோழர்கள் கூட சொரணையற்றுப் போனார்களா ?

4. விடுதலைப் புலிகளுடன் சி.பி.எம் சார்பாக என்றாவது பேசினீர்களா ? அதன் பலன் என்ன என்று வெளியே அறிக்கை விட்டீர்களா ? அட்லீஸ்ட் மாவோயிஸ்ட்டுகளிடமாவது பேசுவீர்களா ? ப.சிதம்பரம் தான் பேசவேண்டும் என்று என்ன தலையெழுத்து ? இல்லையில்லை ஆயுதத்தை வைத்திருப்பவன் கூடவெல்லாம் பேசமாட்டோம் என்றால் CRPFம் இலங்கை-இந்திய ராணுவங்களும் கையில் பூச்செண்டுகளோடா லால்காரிலும், யாழ்ப்பாணத்திலும் நடந்து போனார்கள் ?

5. ஈழப்பிரச்சனையில் 'ஈழம்' என்கிற வார்த்தை கூட அவர்களுக்கு தனிநாடு கேட்பதாக அமையும் என்று அந்த வார்த்தையைக் கூட பயன்படுத்தாமல் 'இலங்கை' என்று கவனமாகக் கூறும் நீங்கள், கேட்டால், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றிப் பலவாறாக வியாக்கியானங்கள் கூறுகிறீர்கள். இஸ்ரேலை தனி நாடாக்கியது அமெரிக்காதான். அப்படி இல்லாவிட்டால் அது பாலஸ்தீனத்தின் ஒரு பகுதிதான். அமெரிக்கா இஸ்ரேலைப் பிரித்தால் அது உங்களுக்குப் பிரச்சனையில்லை. ஆனால் புலிகள் தனிநாடு அட அட்லீஸ்ட் சுயநிர்ணய உரிமையுள்ள பிரதேசம் அந்தஸ்து கேட்டால் உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை? பிரபாகரன் எத்தனையோ பேரை கொன்றவர் தான். ஸ்டாலின் கொல்லாமல் இருந்தாரா ? ஸ்டாலினை பயங்கரவாதி என்று நீங்கள் சொல்வீர்களா ?

இதற்கு சி.பி.எம் நண்பர்களின் பதில் 'சிறு நாடுகளாய் பிரிந்தால் ஏகாதிபத்தியம் எளிதில் வசப்படுத்தி அடிமையாக்கிவிடும். எனவே, நாடுகளைப் பிரிக்காமலிருப்பது முக்கியம்'. இலங்கை மொத்தமாகவே ஏற்கனவே அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் அடிமைதான். இதில் தமிழ் ஈழம் என்பது உயிர் போகும் பிரச்சனை அல்லவா ? என்றைக்கோ வந்து அடிமைப்படுத்தப் போகும் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதா ? இல்லை இந்தக் கணத்தில் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து வெடித்துக் கொல்லும் சிங்களவனை எதிர்ப்பதா ? எது சாத்தியம் ? எது முக்கியம் தோழர்களே ?

இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு நேரடியாக வந்து டயோட்டா கார் கம்பெனிக்காரன் கலைஞரிடம் MOU போட்டு ஏரியாவை வளைத்துப் பிடிக்கிறான். இதை எதிர்க்க தமிழ்நாட்டு சி.பி.எம் என்ன செய்தது ? (ஹுயூண்டாய் கம்பெனிக்காரன் தொழிலாளர்களை சுரண்டுவதைத் தடுக்க போராடி தொழிற்சங்கம் வைத்தது பெரிய முயற்சி .. எனினும்) தமிழ்நாடு தனிநாடாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் டயோட்டாக்காரனும், நோக்கியாக்காரனும் வராமலா இருப்பான் ? ஈழத்துப் பிரச்சனையில் மட்டும் 1983ன் பின் உங்கள் நிலைப்பாடு மாறவேயில்லையே ஏன் ? இந்த 30 ஆண்டுகள் நடைபெற்ற ஈழப்போராட்டத்தை வெறும் 'புலிகள் பயங்கரவாதிகள்' என இந்திய-சிங்கள அரசுகள் போல் சொல்லி நீங்களும் முகத்தைத் திருப்பிக் கொண்டால் நீங்கள் உண்மையில் யார் பக்கம் ?

சிந்தியுங்கள் தோழர்களே. உங்கள் போக்கில் மாற்றம் வேண்டுமா ? அல்லது உங்கள் தலைமைகள் உங்களை வேண்டுமென்றே திசை திருப்புகிறார்களா ? ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை (Genocide) என்று இந்தக் கூட்டத்தில் பிரகாஷ் காரத் உட்பட எல்லா சி.பி.எம் தோழர்களும் கவனமாக ஒரு இடத்தில் கூட வார்த்தை உபயோகிக்காதது ஏன் ? (நீங்கள் அழைத்த விருந்தினர் சத்தியமூர்த்தி கூட இனப்படுகொலை தான் என்று உறுதியாக பலமுறை சொன்னபோதும்..)

Thursday, August 6, 2009

உத்தபுரம் – தடைச் சுவற்றில் ஒரு சிறிய காற்று இடைவெளி

மீள் பதிப்பு : 28 அக்டோபர் 2009.
5 ஆகஸ்ட் 2009.
உத்தபுரத்தில் 1989 ல் மேல் சாதியினரான பிள்ளைமார்கள், தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் பகுதிக்கு வரக்கூடாது, தங்கள் கோயிலில் வழிபாடு செய்யக்கூடாது என 600 மீட்டர் நீளச் சுவரை ஊரின் குறுக்கே கட்டியிருந்தனர். தீண்டாமையின் கோரப்பிடியில் அடிக்கடித் தாக்கப்பட்ட தலித்களிடம் ஒரு மிரட்டல் ஒப்பந்தம் செய்து இதுபோன்ற ஒரு சுவரை ஊரின் குறுக்கே கட்டியிருந்தனர் ஆதிக்க சாதியினர். தனி பள்ளிக்கூடம், தனி பாதை, எல்லாம் தனி. தலித் மக்கள் பிள்ளைமாரிடமிருந்து தள்ளி நிற்க, விலகி வாழ கற்றுக்கொண்டிருந்தனர். அரசு இயந்திரமும் இதற்கு வழி செய்வது போல தனிப் பள்ளிக் கூடம், தனி டீக்கடை என்று ‘எல்லாம் நல்லாத் தான் போய்கிட்டிருந்தது..’ 18 வருஷங்களாக, சி.பி.எம்காரர்கள் 2008 ல் தீண்டாமை பற்றி சர்வே எடுக்கும்வரை. அப்புறம் பிடித்தது தலித்துகளுக்குச் சனி. சி.பி.எம் இதை ஊடகங்களில் கொண்டு வர முயற்சித்தபோது ஊடகவியலாளர்கள் போட்டோ ஆதாரம் கேட்டுள்ளனர். சுவரை இவர்கள் போட்டோ எடுத்து வெளியிட பெரிய சலனம் ஏதுமில்லை. பின்னர் வட இந்தியப் பத்திரிக்கைகளும் இதை எழுத, சுவரில் மின்சாரம் பாய்ச்சி வைத்திருப்பதாக எழுந்த தகவலால் விஷயம் சூடானது.

இச்சுவற்றைப் பற்றி கண்டு வெளிப்படுத்தியது சி.பி.எம் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவு. ஆனால் மாநில அரசோ, தலித் தலைவர்களோ இதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆதிக்க சாதிக்காரர்கள் அவர்களின் சொந்த இடத்தில் கட்டிக்கொண்ட சுவர் அது. தீண்டாமைச் சுவரல்ல என்று அரசு விளக்கம் வேறு கொடுத்தது. கலைஞரைச் சந்தித்துவிட்டு நேரே உத்தபுரம் போன புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உத்தபுரத்து மக்களிடம் பிள்ளைமார் சார்பில் தன்னை சந்தித்துப் பேசி கிருஷ்ணசாமி சொன்ன தீர்வை ஏற்றுக் கொண்டதாகவும் அதை நிறைவேற்றும் வரை பொறுத்திருங்கள் எனவும் வேண்டிக்கொண்டார். இதற்கிடையில் பிரகாஷ் காரத்தை அழைத்து வந்து அவர் முன்னிலையில் சுவரை இடித்து தேசிய அளவில் இப்பிரச்சனையை கவன ஈர்ப்பு செய்ய சி.பி.எம்மின் குழு முடிவு செய்தது. சி.பி.எம் மின் பங்கு இப்போராட்டத்தில் முக்கியமானது. தேசிய அளவில் இது கவன ஈர்ப்புப் பெற ஆரம்பித்ததை உணர்ந்த தமிழக முதல்வர் கலைஞர் 600 மீ சுவற்றில் 150 மீட்டர் நீளச் சுவர்ப் பகுதியை காவல்துறையினர் கொண்டு இடித்துவிட்டார்.

சுவர் சிறிது இடிந்தது. தீண்டாமைப் பிரச்சனை வெளிச்சமானது.

அதைத் தொடர்ந்து பிள்ளைமார்களும், தலித்துகளும் மோதிக்கொண்டனர். பிள்ளைமார்களுக்கு பக்கத்து கிராமங்களிலிருந்தும் தேவர் போன்ற ‘சம’ சாதியினரின் ஆதரவு கிடைத்தது. கூடவே காவல் துறையின் அதிகாரம் பிள்ளைமார்களின் பக்கம். (காவல் நிலையம் இருப்பதே பிள்ளைமார்கள் பகுதியில்தான்; இடத்தில்தான்.). பிரச்சனையை பெரிதுபடுத்த விரும்பிய பிள்ளைமார்களும் அவர்களுக்குத் துணைநின்ற சுத்துப்பட்டு முக்குலத்தோரும் வியூகங்கள் வகுத்தனர். முதலில் சற்றுத் தள்ளியிருந்த கிராமத்திலிருந்த முத்துராமலிங்கத்தேவர் சிலை மீது முக்குலத்தோர் ஆட்களே செருப்பு மாலை போட்டு விட்டு தலித்துகள் மீது பழிபோட முயல (அந்த ஊரில் இருந்ததே ஒரே ஒரு தலித் தான்) அங்கிருந்த எஸ்.பி அன்பு சமயோசிதமாக மோப்பநாய் கொண்டு மாலை போட்டவனை பிடித்துவிடுவேன் என்று மிரட்ட, அவர்களே தங்கள் ஆட்களைப் பிடித்து பஞ்சாயத்தில் அபராதம் கட்டவைத்து, சிலையை கழுவிவிட்டுவிட்டார்கள்.

பின்னர் ஒரு நாள் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் மகள் திருமண போஸ்டர் பிரச்சனைக்குரிய உத்தபுரம் அம்மன் கோயில் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது. இந்தக் கோயில் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் பிள்ளைமார்களால் உரிமை நிலைநாட்டப்பட்டு தலித்துகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தலித்துகள், தலித் குழந்தைகள் தவறி உள்ளே நுழைந்துவிடாமல் இருக்க கோயிலையொட்டி கோயில் மதிற்சுவர் போல் ஒரு சுவர் கட்டப்பட்டிருந்தது. இச்சுவர் தலித் பகுதியிலிருந்து தலித்துகள் கோயிலுக்குள் வருவதை தடுத்தது. கோயில் கும்பாபிஷேகம் நடக்கவிருந்த சமயத்தில் இந்தச் சுவற்றின் மீது வெள்ளையடிக்கப் பட, இதைத் தொடர்ந்து தலித்துகள் கோயிலினுள் புகுந்துவிடுவார்களோ என பிள்ளைமார்கள் பயப்பட்டனர். இருபக்கமும் கற்கள் பறந்தன.

இதை தினமலர் போன்ற பத்திரிக்கைகள் ஆதிதிராவிடர்கள் பிள்ளைமார்கள் தெருவை நோக்கி பெட்ரோல் குண்டு எறிந்தார்கள் அதனால் சண்டை மூண்டது என திரித்து எழுதின. ஆனால் தலித்துகள் கம்யூனிஸ்ட்டுகளின் அறிவுரையால் தற்காப்புக்கு ஆயுதங்களை வாங்காமல் தவிர்த்திருந்தனர். தலித் ஆண்கள் பலரின் மீதும் வழக்குகள் போடப்பட்டு போலீசால் ‘தேடப்பட’ தலித் ஆண்கள் மொத்தமும் தலைமறைவாயினர். ஆனால் காவல் துறையால் எந்த குண்டுகளோ, ஆயுதங்களோ உத்தபுர தலித்துகளிடமிருந்து கைப்பற்ற இயலவில்லை. காவல் துறையின் வழக்கம் எந்த இடத்தில் போராட்டம் தீவிரமடையுமோ, அவ்விடத்தில் தலித்துகளை ‘போட்டுப் பார்ப்பது’ என்பது. அப்படி உத்தபுரம் தலித்துகளை போட்டுப் பார்க்க காவல் துறை ரகசியமாய் முடிவுசெய்துகொண்டது. இதற்கிடையில் தலித் பெண்மணி ஒருவர் இறந்துவிட ஊரில் ஆண்கள் எல்லோரும் தலைமறைவாய் இருந்ததால் பெண்கள் மட்டுமே சேர்ந்து இறந்தவரை அடக்கம் செய்திருக்கிறார்கள்.

அக்டோபர் 2ம் தேதி மீண்டும் கலவரம் வெடித்து, இம்முறை காவல் துறையினர் தலித்துகளின் குடியிருப்புகளுள் நுழைந்து வீடுகளில் இருந்த பெண்களையும், குழந்தைகளையும் வயதானவர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கினர். அவர்கள் வீடுகளிலிருந்த கொஞ்ச நஞ்ச பொருட்களையும் நொறுக்கினர்.

சி.பி.எம் மற்றும் மார்க்ஸ் மற்றும் பெரியார் திராவிடர் கழகம் போன்றோர் இதற்காகப் போராடினர். கிருஷ்ணசாமி மற்றும் திருமாவளவன் போன்றோர் ஆர்வமாக வந்து சேர்ந்து போராடவில்லை. இவர்களுக்கு சேர்ந்து போராட அழைப்பு விடுத்ததாக சி.பி.எம் தரப்பு சொல்கிறார்கள். திருமாவளவன் போராட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டதோடு மட்டும் நிறுத்திக் கொண்டார் (ஏன் சார்?). சி.பி.எம் போன்ற கட்சிகளுடன் சாதிக் கட்சிகள் இணைந்து போராடுவதில் உள்ள சிக்கல்களைக் களைந்து ஒரு பொதுவான புரிதல்களுக்குள் வரவேண்டும். சி.பி.எம்மோ நாங்கள் கூப்பிட்டும் அவர்கள் வரத் தயங்குகிறார்கள் என்கின்றனர்.

கிருஷ்ணசாமியோ பிள்ளைமார்கள் வம்பு தும்புக்குப் போகாதவர்கள் என்கிற ரீதியில் ஸர்டிபிகேட் கொடுத்தார். பின்னர் பக்கத்து கிராமம் ஒன்றில் அவர் காரசாரமாகப் பேசிச் செல்ல அவரின் கார் தாக்கப்பட்டது. சில நாட்கள் கழித்து கிருஷ்ணசாமி தாக்கப்பட்டதைக் கண்டித்து எழுமலை கிராமத்தில் அமைதியான முறையில் சாலைமறியல் செய்த தலித் மக்களின் மீது ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி துப்பாக்கிச் சூடு நடத்தி சுரேஷ் என்கிற 25 வயது தலித் இளைஞரை சுட்டுக் கொன்றார். இதற்கு தனியாக அரசு திருப்பதி கமிஷன் நியமித்தது. அந்தக் கமிஷனின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 3 மாதங்களாகியும் அரசு அதை இன்னும் வெளியிடவில்லை. கிருஷ்ணசாமி இறந்த சுரேஷின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் நிவாரணம் வழங்கினார். ஆனால் வேறு எந்தக் கட்சியுடனும் சேர்ந்து இது பற்றி இனிமேல் பேசக்கூடாது என்று சுரேஷின் குடும்பத்தினர் வாயை அடைத்ததாக சி.பி.எம் தரப்பில் கூறப்படுகிறது.

அ.மார்கஸ் போன்றோர் அடங்கிய உண்மை அறியும் குழு உத்தபுரத்தில் நிலவிவரும் தீண்டாமையின் ரத்தக் கீறலை உறுதி செய்தது. உண்மைப் பிரச்சனையான தீண்டாமைப் பிரச்சனையின் மீது இன்னும் ஒரு விவாதமோ, கேஸோ நடக்கவில்லை. ஊரில் இருந்த ஒரு ஆதிக்கசாதியினன் கூட வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைதாகவில்லை.

இந்நிலையில், சி.பி.எம் சார்பாக, காவல்துறையினரின் அத்துமீறல் தாக்குதல்களுக்கு எதிராக உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் இடைக்கால தீர்ப்பாக காவல் துறையின் தாக்குதலில் காயம் அடைந்த தலித்துகளுக்கு மருத்துவ இழப்பீட்டுத் தொகையாக 15 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. வழக்கானது திசை திரும்பி பிள்ளைமார்கள் X தலித்துகள் என்பது போய், காவல்துறை X தலித்துகள் என நிறுத்தப்பட்டிருக்கிறது. இவ் வழக்கின் இறுதியில் காவல்துறை மேல் ஏதாவது எச்சரிக்கைகள் விடப்படலாம். காக்கிச் சட்டைகள் சில சஸ்பெண்ட் பண்ண்ப்படலாம். இதைத் தவிர பெரிதாக எதுவும் செய்ய வாய்ப்பில்லை. பிள்ளைமார்களும், கோயிலும், தலித்துகளுக்காக திறக்க வழியில்லை. தலித்துகளைத் தாக்கியவர்கள் மீது சட்டங்கள் இதுவரை பாயவில்லை.

ஆனாலும் காற்றுப் புகாத கான்கிரீட் சுவற்றில் இந்தத் தீர்ப்பு ஒரு சின்ன ஓட்டை என்று நினைத்து ஆறுதலடையலாம். இந்தச் சின்ன வெற்றிக்குப் பெருங்காரணம் சி.பி.எம் தான். இந்த ஓட்டை விரிந்து என்று சுவர் முழுதும் இடியும் ?

கண்ணுக்கெட்டிய தூரம் வரை காட்சி எதுவும் தெரியவில்லை.

பின்குறிப்பு:
சி.பி.எம்மின் தீண்டாமை ஒழிப்பு ஆர்வங்களின் காரணங்கள் என்ன என்று ஆராய்ச்சியை நாம் பிறகு தனியே செய்து கொள்ளலாம். தீண்டாமை ஒழிப்புப் பிரச்சனையை முப்பது வருடங்களுக்கு முன் கேலி செய்து அசட்டை செய்த சி.பி.எம் இன்று காலங்கடந்து அப்பிரச்சனையைக் கையிலெடுத்துள்ளது. இதனால் முப்பது வருடங்கள் அதன் வளர்ச்சி தேங்கி நின்றது.

தீண்டாமைக்காக இவ்வளவு ஆழமாக இறங்கிப் போராடிய சி.பி.எம் இந்த நூற்றாண்டில் கண்முன்னே நடந்த கொடூரமான இலங்கை இனப் படுகொலைக்கு ஏன் எச்சில் கையால் காக்கை கூட விரட்டவில்லை ? முத்துக்குமாரின் மகத்தான தியாகத்தை மறுதலித்ததன் மூலம் சி.பி.எம் ஆளும் வர்க்கத்திற்குத் துணையாய்ப் போயிற்றே என்பது எங்கள் வேதனை. அதே போல் இலங்கைப் பிரச்சனையிலும் இன்று சி.பி.எம் தேசிய இனங்களின் போராட்டத்திற்கு எதிரான நிலை எடுக்கிறது. அதை இப்போதாவது உணருமா ?
- அம்பேதன்