Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Sunday, August 1, 2021

சென்னை பயணிகள் செல்லும் மின்சார ரயில்களை வேண்டுமென்றே காவு கொடுக்கும் திமுக அரசு



சென்னையில்  ஒரு நாளைக்கு 10 லட்சம் ஏழை, நடுத்தர மக்கள் போகிற எலெக்ட்ரிக் ட்ரெய்ன்கள்ல, வேணும்னே ஆண்கள் இந்தந்த டைம்ல போகமுடியாது என்று சொல்லி கண்டிஷன் மேல் கண்டிஷனா போட்டு, எலெக்ட்ரிக் ட்ரெய்ன்ல போற மக்கள் வயிற்றில் அடிக்கிறாங்க திமுக அரசு. 

மின்சார ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் டிக்கெட். போகவர 10 ரூபாய் தான் ஆகும். இப்போது அப்படி முடியாது. ரிட்டர்ன் டிக்கெட் தர மாட்டார்கள். ரிட்டர்ன் வரும்.நேரம் ஆண்கள் அனுமதிக்கப்படும் நேரமாக இருந்தாலே மட்டுமே டிக்கெட் கிடைக்கும். வழக்கம் போல  பெண்கள் மட்டும் போகலாம்னு சொல்வாங்க. அப்போ ஆண்களும் பெண்களுமாக குடும்பமாகப் போனால் அவ்வளவு தான் தொலைஞ்சீங்க.

கேட்டா கொரோனாவாம். காரணம் சொல்றாங்க.

இதே நேரத்தில்தான், மெட்ரோ ட்ரெய்ன்களில் நல்லா புல்லா ஏசி போட்டுட்டு நாள் பூரா எல்லாரும் தாராளமா போகலாமாம். அங்கே மட்டும் கொரோனா வரவே வராதாம். மெட்ரோவில் குறைந்த பட்ச ஒன்வே டிக்கட் மட்டுமே 30 ரூபாய். போய வரனும்னா 60.ரூபாய். 

படிச்ச மிடில் க்ளாஸ் மக்கள், படு கூட்டமாக நிரம்பி வழிந்து செல்லும் பஸ்களில் போக முடியாத நிலையில், இந்த மெட்ரோ ரயில்களில், வேற வழி இல்லாமல் போறாங்க. தினசரி ரெகுலராக போகும் செலவு அதிகம்.
5 ரூபாய் கொடுத்து எலெக்ட்ரிக் ரயில்களில் போன மக்கள் இனி 20-30 ரூபாய் கொடுத்து போகனும் ஒவ்வொரு தடவையும்.

சென்னையில், ஒரு நாளைக்கு 2-3 லட்சம் பேர் தான் அதிக பட்சம் மெட்ரோவுல போறாங்க. ஆனால், எலெக்ட்ரிக் ரயிலில் போறவங்க ஒரு நாளைக்கு பத்து லட்சம் பேர்.

இப்படி ஏன்யா ஏழை மக்கள் போற ட்ரெய்ன்களை கவர்மென்ட் பஸ் மாதிரி அழுக்கா அசிங்கமாக வெச்சுருக்கீங்கன்னு யார் கேக்குறது ?

புதுசா தரைக்கடியில் தோண்டி பாதைகள் போடுறாங்க. பெரும் செலவு. ஏற்கனவே இருக்கிற மின்சார ரயில்கள் இருக்கும் போது  எதுக்கு வெட்டிச் செலவு பண்றீங்கன்னு யாரும் கேக்கறதில்லை. மெட்ரோ ட்ரெய்ன்களுக்கு வருஷா வருஷம் நானூறு கோடி பட்ஜெட்டில் ஒதுக்கி செலவு புதுசா செய்றாங்க. 

ஆனால் பாமரர்கள் செல்லும் மின்சார ரயில்களுக்கு ? பட்ஜெட்டில் பேச்சே இல்லை. எலெக்ட்ரிக் ட்ரெய்ன்களையும் ஏழைகள் மாதிரி அழுக்காவே ஓட்டுறானுங்க.

எடப்பாடி ஆட்சில தான் இப்படின்னு பாத்தா, விடியல் தரும் ஸ்டாலின் ஆட்சியும் அதே கதை தான்.

நாங்க தான் மெட்ரோ இங்கே கொண்டு வந்தோம்னு பெருமை வேற பேசுவாங்க திமுககாரங்க.



இதில் ஒரு வினோதம் என்னன்னா மின்சார ரயில்கள் போகும் அதே பீச்-தாம்பரம் வழித்தடத்தில் , அதே சென்ட்ரல்-எண்ணூர் வழித்தடத்தில் தான் மெட்ரோ ரயில்களின் வழித்தடமும் இருக்குது..இதற்கு என்ன பொருள் ? கொஞ்சம் கொஞ்சமாக எலெக்ட்ரிக் ரயில்களை காலி செய்து மக்களை மெட்ரோவை பயன்படுத்தியே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திக்க முன்கூட்டியே ப்ளான் போடப்பட்டது போலவே இருக்கிறது.

ஸ்டாலினிடம் இதையெல்லாம் கேட்டால்  மின்சார ரயில் ஒன்றிய அரசின் கீழ் வருதுன்னு சொல்லி ஈசியா தப்பிப்பாரு. மெட்ரோவுக்கு மாநில அரசும் ஒன்றிய அரசும் சேர்ந்து தான் பட்ஜெட் திட்டம் போடுறாங்க.

மெட்ரோ ரயில்களை படிப்படியாக தனியார் மயமாக்கும் வேலையும் நடந்து வருகிறது. ரயில்வேயையே தனியாருக்கு விக்கிறவங்க இதை மட்டும் விட்டுடுவாங்களா ? திமுக  அரசும் இதில் உடந்தை. ஜிஆர்டி, முத்தூட் என்று பெரிய போர்டுகள் வைத்து விளம்பரமா , இல்லை ரயில் நிலையத்தின் பெயரே இதுதானா என்று புரியாத அளவிற்கு மெட்ரோ ரயில் நிலையங்கள் ஒவ்வொரு தனியார் நிறுவனப் பெயரை தாங்கி நிற்கின்றன. எல்லாம் தனியார் மயம். 

இதுதான் திமுக ஆளும் லட்சணம். கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக செயல்படாமல் திமுகவோ , ஸ்டாலினோ மாநில.ஆட்சியில் நீடிக்கவே முடியாது. கூர்ந்து  பார்த்தால் இந்த உண்மை தெரியவரும்.

 MRTS என்று பீச் முதல் வேளச்சேரி வரை ஓடும் பழைய மெட்ரோ ரயில்களின், ரயில் நிலையங்களின் நிலை காயலான் கடைபோலத்தான்.

இனி, ஏற்கனவே 10 ஆயிரம் பிச்சைச் சம்பளம் வாங்குகிற உழைக்கும் மக்கள்  அதில் கால்வாசியை மெட்ரோவில் வேலைக்கு போய் வர பாஸ் , டிக்கெட்டுக்கு கட்டி அழவேண்டும்.

சென்னை எலெக்ட்ரிக் ரயில்கள் மெது மெதுவாக விரைவில் அழிக்கப்படும். டில்லி மின்சார ரயில்களுக்குக் கூட இதே நிலைமைதான் என்று கேள்வி.

இன்றைக்கு எலெக்ட்ரிக் ட்ரெய்னில போய்விட்டு வந்து தான் இதை எழுதுகிறேன்.

தொழில் தொடங்குவோருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டால் தமிழ்நாடு வல்லரசாகிவிடும் என்று நினைக்கும் முதல்வர் எப்படி தனியாரை பகைத்து மின்சார ரயிலையே நம்பி போகும் சாமான்ய மக்களுக்கு நல்லது செய்வார் ? 

அதிமுக சொல்ல வேண்டாம் , அது.பாஜக அடிமை. ஆனால் திமுகவும் கண்டிப்பாக மின்சார ரயிலுக்கு உயிர் தர மாட்டார்கள் என்று தான் தோன்றுகிறது.

ஏனென்றால் ஏழைகள் மின்சரா ரயில்களில் போனால் என்ன போகாவிட்டால் யாருக்கு என்ன ? அவர்களால் இந்த அரசுக்கு ஒரு புண்ணியமும் இல்லையல்லவா ?

31-7-2021
அம்பேதன்.

Sunday, October 25, 2015

ஒரே வாரத்தில் 75 ஆயிரம் டன் பருப்புகள் பறிமுதல் ! யார்கிட்டே கதை விட்றீங்க.?

பருப்பு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கிலோ 200 ரூபாய்க்கு போன வாரம் வந்தது. உடனே மத்திய அரசு தனியார் இறக்குமதியாளர்கள் மூலம் 2 லட்சம் டன் பருப்பை இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்தது. உலக சந்தையில் கிலோ 50 ரூபாய்க்கு விற்கும் பருப்பை தனியார் இறக்குமதியாளர்கள் வாங்கி அரசிடம் 130 ரூபாய்க்கு விற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தூங்கிக் கொண்டிருந்த அரசு இயந்திரம் திடீரென் விழித்துக் கொண்டது போல ஒரே வாரத்தில் இந்தியா முழுவதும் மத்திய மாநில அரசுகள் நடத்திய சோதனையில் 75 ஆயிரம் டன் பதுக்கல் பருப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மீடியாக்களில் செய்திகள் பரப்பரப்பாக வெளிவருகின்றன. அந்தப் பட்டியலைப் பார்ப்போம்.

இந்தியா முழுவதும், 13 மாநிலங்களில், 6077 இடங்களில் அரசுகள் சோதனை செய்தன. அதில் மஹாராஷ்ட்ராவில் மட்டும் 46 ஆயிரம் டன்னும், கர்நாடகத்தில் 8755 டன்னும், பீகாரில் 4933 டன்னும், சத்தீஸ்கரில் 4500, தெலங்கானாவில் 2546, மத்தியப் பிரதேசத்தில் 2295, ராஜஸ்தானில் 2222 டன் என்று ஆயிரக்கணக்கில் பருப்பு வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அரசு வெளியிட்டுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பதுக்கல் கைப்பற்றல் செய்திகளின் பின்னால் வேறு எதுவும் இருக்கிறதா என்று 'தனி ஒருவன்' படத்தில் ஜெயம் ரவி சொல்வது போல நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. சேம்பிளுக்கு சில கேள்விகள்.

ஒரே வாரத்தில் பரபரப்பாக செயல்பட்ட அரசு இயந்திரம் 75 ஆயிரம் டன் பருப்பு வகைகளை பிடித்துள்ளது. அப்போ இவ்வளவு நாள் அரசு செயல்படாமலேயே இருந்ததா ? அல்லது பதுக்கல்களை கண்டுகொள்ளாமல் இருந்ததா ?

பதுக்கல் சோதனைகளில் ஏன் பருப்பு தவிர, அரிசி, கோதுமை போன்ற எந்தப் பொருட்களும் பிடிபடவில்லை ? பருப்பு பதுக்கல்காரர்களை மட்டும் குறிவைத்து சோதனை நடத்தினார்களா ? பதுக்குபவர்களில் பருப்பு மட்டும் கடத்துபவர், வேறு எதையும் கடத்தவே மாட்டாரா ?

6 ஆயிரம் இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் எத்தனை பேர் பிடிபட்டனர். ஏன் ஒருவரது புகைப்படம் கூட செய்தித் தாளிலோ அல்லது சேனல்களிலோ காட்டப்படவில்லை? ஒருவேளை இந்தப் பதுக்கல் பிடிப்புக் கணக்கு மக்களுக்கு காட்டப்படும் பொய்க்கணக்கா ? ஒரு சாதாரண பைக் திருடனை, செயின் திருடனை பத்திரிக்கையில் போட்டோ போட்டு, சேனல்களில் சுற்றிச் சுற்றிக் காட்டும் மீடியாக்களுக்கு மக்களின் வாழ்வாதாரத்தையே அசைக்கும் இந்தக் கேடிகளில் ஒருத்தருடைய போட்டோ கூடவா கிடைக்கவில்லை ?

பதுக்கியவர்கள் எல்லோரும் தனிப்பட்ட ஆட்களா ? நிறுவனங்களே இல்லையா ? சில பல டன்களை தனியாக ஒரு ஆள் கடத்தி விட முடியுமா ? தனியார் நிறுவனங்கள் தான் கடத்தலில் ஈடுபட்டிருக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் உணவுப் பதுக்கலில் ஈடுபட்டால் அது குற்றமாக கருதப்படாதா ? அல்லது ஏன் பதுக்கலில் ஈடுபட்டது என்று ஒரு நிறுவனத்தின் பெயரையும் பேப்பரில் போடவில்லை அரசு ?

இது பற்றி ஏன் ஒரு மாநில அரசு கூட வாய் திறக்கவில்லை ? 45 ஆயிரம் டன் பதுக்கலை கண்டு பிடித்த மஹாராஷ்டிரா முதல்வர் கூட இது பற்றி வாய் திறக்கவில்லை. மோடி வாய் திறக்கவில்லை. ஆனால் அரசு பிடித்தது என்று செய்தி மட்டும் வருகிறது. அப்போ உண்மையிலேயே இதெல்லாம் பதுக்கல் கைப்பற்றல் கணக்கா ? இல்லை, நாங்களும் செயல்படுகிறோம் பாருங்கள் என்று மக்களுக்குக் காட்ட அரசு சும்மா வெளிவிடும் செய்தியா ?

யாருக்காவது தெரிந்தால் பதில் சொல்லுங்கள்.

Monday, October 12, 2015

காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ஒரு வழியாக கைவிட்டது அரசு!

காவிரி டெல்டா மாவட்டங்களி்ல் பூமிக்கடியில் பல கி.மீ ஆழத்தில் பெரிய நிலக்கரிப் படுகை உள்ளது. அந்தப் படுகையின் மேலே மீத்தேன் வாயு பெருமளவில் நிரவி நிற்கிறது. இதை எடுத்துத்தான் நமக்கு கேஸ் சிலிண்டர்களில் அடைத்து சமையல் எரிவாயுவாக விற்கிறார்கள்.
சரி. நல்லது தானே. அதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா?  இருக்கிறது. அந்த வாயுவை எப்படி எடுக்கிறார்கள். அந்த வாயுவை அப்படி எடுப்பதால் பாதிக்கப்படுவது என்னென்ன போன்ற விஷயங்கள் இதை ஒரு ஆபத்தான விஷயமாக்கி இருக்கின்றன.
மீத்தேன் வாயுவை மேலே கொண்டு வர பெரிய ஆழ்துளைக் கிணறுகள் போடுவார்கள். பின்பு அதில் மிகுந்த அழுத்தத்துடன் டன் கணக்கில் தண்ணீர், மண் கலந்த கலவையைக் கொண்டு அடிப்பார்கள். அதில் பாறைகளிடையே துளைகள் ஏற்பட்டு வாயுக்கள் வெளியே வரும். இந்தக் கலவையை தொடர்ந்து சுவாசித்தால் கேன்ஸர் கன்பர்ம். சுற்றுப் புறச் சூழலுக்கும் பெரும் கேடு. இந்த வாயு வெளியேற்றத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். இன்னும் மோசமாக நிலத்தடியில் உள்ள பாறைகளைத் துளையிட்டு பொருட்களை வெளியேற்றி வெற்றிடமாக்குவதால் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும். இவ்வளவு பிரச்சனைகள் உள்ள இந்தத் தொழில்நுட்பத்தை வெளிநாடுகள் ஏற்கனவெ 1957லிருந்து உலகெங்கும் பிரயோகித்து பல நாடுகளில் பாதிப்புகள் ஏற்ப்பட்டிருக்கின்றன. இப்போதுதான் இதற்கென உலக அளவில் ஒரு கண்காணிப்புக் குழுவை போட்டிருக்கிறார்கள்.
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஹரியானாவைச் சேர்ந்த கிரீன் ஈஸ்டர் எனர்ஜி கார்ப்பரேஷன் என்கிற பன்னாட்டுதனியார நிறுவனத்திற்கு லைசென்சு வழங்கியிருந்தது. ஆனால் காவிரி டெல்டா விவசாயிகள் தங்கள் எதிர்காலம் பாழாகப் போவதை உணர்ந்து தொடர்ந்து போராட, அவர்களுக்கு சமூகவியல் ஆர்வலர்களும், இடதுசாரிகளும் விழிப்புணர்வு ஊட்ட கடைசியில் வேறு வழியின்றி அரசு இதை விசாரிக்க ஒரு குழுவை அமைத்தது.
இந்தக் குழுவின் முடிவுகள் இந்தத் திட்டத்தின் தீய விளைவுகள் கிடைக்கும் எரிவாயு நன்மையை விடப் பல நூறு மடங்கு தீயது என்று அறிக்கை கொடுத்ததைத் தொடர்ந்து அரசு மீத்தேன் எடுக்க இன்று தடை விதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் இந்த திட்டத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என அந்த தொழில்நுட்ப வல்லுனர் குழு அளித்த அறிக்கையின் படி அரசு முடிவெடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, November 28, 2013

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடந்த காமன்வெல்த்

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், பாலியல் வன்முறைகள், இனத்தை வன்கலப்பு செய்வது, சிங்களர்களை கொண்டு வந்து குடிவைப்பது என்று இன அழிப்பின் எல்லா விஷயங்களையும் கடந்த 60 வருடங்களாக சிங்கள அரசுகள் செய்த அளவில் சற்றுக் கூட அளவுகுறையாமல் செய்து அதன் உட்சபட்ச வெற்றியையும் ஈட்டியது் ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு. ஐக்கிய நாட்டு சபையில் அமெரிக்கா உட்பட எல்லா நாடுகளின் கள்ளத்தனமான மௌன அங்கீகாரத்தில் தான் இவற்றைப் புரிந்தது. இருந்தாலும் பிரிட்டன், கனடா போன்ற நாடுகளின் தலையீடு இருப்பதால் போர்க்குற்ற விசாரணை ஒன்றை சும்மா உப்புக்கு சப்பாணியாக நடத்தியும் முடித்தது. இத்தோடு நிற்காமல் 2009ல் தொடங்கி உலக திரைப்பட விழா, கிரிக்கெட் போட்டிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை கோலாகலமாக நடத்துவதன் மூலம் பிண ஓலத்தை மறைக்கவும் முயற்சி செய்கிறது. இந்த கொலைபாதகச் செயல்கள் அனைத்திற்கும் சர்வதேச நாடுகளில் ஆதரவு தெரிவிப்பவர்களே அதிகம். இதில் கியூபா, சீனா, ரஷ்யா போன்ற கம்யூனிஸ்ட்டு நாடுகளும் அடக்கம். ஐக்கிய முண்ணணி தந்திரத்தின் பக்கங்களுக்குள் பாவம் இந்த கம்யூனிச நாடுகளும் சிக்கிக் கொண்டன. இவர்கள் இதற்கு சொல்ல இருக்கும், விரும்பும் காரணம் அனேகமாக அமெரிக்காவுக்கு எதிரான வியூகம் என்கிற சாக்கு தான். இந்தப் பிண்ணணியில் மேலும் தைரியம் பெற்ற ராஜபக்சேவின் அரசு காமன்வெல்த் மாநாட்டையும் நடத்தி மொத்தப் பாவத்தையும் பூசணிக்காயில் மறைக்க முயன்றது.

 இப்படியொரு நேரத்தில் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற இருந்ததையொட்டி, இலங்கை அதை நடத்துவதையும் அதன் மூலம் மறைமுகமாக இந்தியா அதன் படுகொலைப் பாவத்தை கடலுக்குள் கரைப்பதையும் தெரிந்திருந்தாலும் தமிழ்நாட்டில் மக்கள் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லைதான். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திராவிட கட்சிகளல்லாத மற்றைய கட்சிகள் சமத்துவ கட்சி, பெரியார் திராவிட கழகம், சீமானின் நாம்தமிழர், வைகோவின் மதிமுக, திருமாவின் விடுதலைச் சிறுத்தைகள், நெடுமாறனின் அமைப்பு போன்ற பல கட்சிகள் சேர்ந்து ஆர்ப்பாட்டங்கள் பல நடத்தி, ரயில்களை மறித்து தமிழ்நாட்டு மக்களின் அடி ஆழத்தில் உள்ள அதிருப்தியை மத்திய அரசுக்கு கொஞ்சம் வெளிக்காட்டினர். இந்தப் போராட்டங்கள் தொலைக்காட்சிகளில் செய்திகளாக காட்டப்பட்ட வேளைகளில் தான் நம் தமிழ் மக்களும் ஈழப் படுகொலைகளை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டனர். கலைஞர் கருணாநிதி வழக்கம் போல 'துரும்பைக்' கூட கிள்ளிப் போடாமல் தனது டெசோ அமைப்பை வைத்து அறிக்கைகள் விட்டு மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை என்றதும் ஏமாற்றமளிக்கிறது என்று கையை கட்டி நின்றுகொண்டார். அம்மாவின் தீர்மானங்கள் தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க தொண்டர்கள் யாருக்கும் இதற்காக போராட வேண்டும் எனத் தோன்றாதது ஆச்சரியமான விஷயமல்ல. ஒரு மாநகராட்சி உணவகத் திறப்பு விழா முதல் , ஈழ ஆதரவு போராட்டத்தைக் கூட அம்மா மட்டுமே முன் நின்று நடத்தவேண்டும் என்பது அந்தக் கட்சியின் முக்கியமான கொள்கையல்லவா?

 முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையின் முந்தைய தீர்மானத்தை மத்திய அரசு மதிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளவே கூடாது என்கிற தீர்மானத்தையும் முன்வைத்தார். உலக சமூகத்தின் பார்வையில் இது முக்கியமான ஒரு தீர்மானமே. ஆனால் மத்திய அரசு வழக்கம் போல இதையும் கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் கிளம்பிய இத்தகைய எதிர்ப்பு அலைகளை மத்திய அரசு வழக்கம் போல அலட்சியமாக கடந்து சென்றது. மாநாட்டிற்குச் சென்று ராஜபக்சேயுடன் விருந்து சாப்பிடும் மூடில் இருந்த மன்மோகன் சிங் ஜெயலலிதாவின் தீர்மானம் தந்த அழுத்தத்தினால் வயிற்று வலி போன்ற காரணங்களால் வரமுடியவில்லை என்று ராஜபக்சேவுக்கு மிகுந்த வருத்தம் தெரிவித்து லீவ் லெட்டர் அனுப்பியதுடன் இந்தியா சார்பாக சல்மான் குர்ஷித்தை வேறு அனுப்பி வைத்தார். ஜெயலலிதாவின் கனவு பிரதமர் ஆவதோடு நின்றுவிட்டதால், அவர் இந்தியா தாண்டி உலகப் பிரச்சனைகளைப் பற்றி யோசிக்க விருப்பமில்லாமல் இது வெளியுறவுப் பிரச்சனை எனவே தீர்மானம் போடுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எல்லை வைத்திருக்கிறார்.

 இது தெரியாமல் நெடுமாறன் ஐயா ஜெயலலிதா அம்மையாரின் பரம எதிரியான நடராஜனின் நிலத்தில் நடராஜனின் முக்கிய பணப்பங்களிப்பில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்கிற நினைவுச் சின்னத்தை கட்டினார். அதைத் திறக்க முற்படும் போது தான் அவருக்கு பிரச்சனை வருகிறது. நெடுஞ்சாலைத்துறை முந்திய நாள் அதிகாலையில் வந்து முள்ளிவாய்க்கால் முற்றத்தின் காம்பவுண்ட் சுவர் அரசின் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கிறது எனவே இடிக்கிறோம் என்று நோட்டீசு கூட கொடுக்காமல் வந்து இடித்துவிட்டார்கள். நெடுமாறன், சீமான், வைகோ, நடராஜன் போன்ற யாருக்குமே தெரியவில்லை யார் இப்படி இடிக்கச் சொன்னதென்று. ஒருவர் மத்திய அரசின் சதி என்கிறார். இன்னொருவர் எனக்கும் அந்த விழாவுக்கும் சம்பந்தமில்லை என்கிறார். ஒருத்தர் ஜெயலலிதா ஈழத்தாயே தான் ஆனால் அவர் அரசு இப்படிச் செய்துவிட்டதே என்று திகைக்கிறார். ராஜபக்சே எதுவழியாகவோ புத்தர் போல சிரிக்கிறார்.

 ஆனால் பாருங்கள் இந்த காமன்வெல்த் மாநாட்டில் ஈழப்பிரச்சனையை வைத்து சிக்ஸர் அடித்தவர் பிரிட்டன் பிரதமர் கேமரூன். இவ்வளவு நாளும் ஏன் போர் நடந்த நேரங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் முள்ளிவாய்க்காலில் வதங்கிய போதும் ஐ.நாவின் பான்கிமூன் இலங்கை வந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டுச் சென்ற போதும் சும்மா இருந்தவர் திடீரென்று ஒருநாள் சேனல் - 4 டி.வியை பார்த்துவிட்டார் போலிருக்கிறது. உடனே வீராவேசமாக பேசியிருக்கிறார். காமன்வெல்த்தில் நிறைய பணம் ஸ்பான்ஸார் செய்த ஒரு பிரிட்டன் நாட்டு செல்போன் கம்பெனிக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன தொடர்பு என்று விசாரணை செய்ய உத்தரவிட்டிருக்கிறார். ராஜபக்சேவின் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது மாறாக சர்வதேச விசாரணை வேண்டும் என்று சூடு கிளப்பிவிட்டிருக்கிறார். நம்பமுடியாத நிகழ்வுதான் இல்லையா?

 ஈழப்பிரச்சனையின் போக்கை தீர்மானிக்கும் கருவியாக இருந்த பிரபாகரனை இதே பிரிட்டன் உட்பட இந்த நாடுகள் எல்லோரும் சேர்ந்துதான் வேட்டையாடி அழித்தார்கள். முக்கிய காரணி பிரபாகரன் இறந்துவிட்டதால் இனிமேல் இதை யார் வேண்டுமானாலும் கையில் எடுத்துக்கொள்ள முடியும். ஈழப்பிரச்சனையை அமெரிக்காவோ, பிரிட்டனோ, பிரான்சோ, கையில் எடுத்து இலங்கையை மிரட்ட முடியும். அதேபோல இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இலங்கையின் கூட நின்றுகொண்டு 'அதெல்லாம் ஓண்ணுமே நடக்கலை.. ஒரு அப்பாவி கூட சாகலை.. செத்தது யாரோ அவங்க எல்லாமே எல்.டி.டி.ஈ' என்று சாதித்து பின்புலத்தில் இலங்கையின் தொழில் வர்த்தக லாபங்களை தாங்கள் அடைந்துகொள்ள முடியும். பிரபாகரன் இருந்தவரை தமிழ்நாட்டு தமிழர்களுக்கு ஈழப்பிரச்சனையால் எதுவும் பெரிய பிரச்சனை வந்துவிடவில்லை. ஆனால் இனிமேல் இது உலக வல்லரசுகள் இந்திய கடல் பகுதியில் தங்களது ஆளுமையை ஏற்படுத்திக்கொள்ள, மற்ற நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்க இந்தப் பிரச்சனையை தங்கள் இஷ்டத்துக்கு எழுப்புவார்கள். முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் ஒரு குறியீடாக மாற ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அது தமிழருக்கு விடிவுதரும் குறியீடாகுமா என்பது கேள்விக்குரியதே. ஏனென்றால் முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு இன்னும் தமிழர் தரப்பிலிருந்து சிங்களருக்கு ஒரு பதிலடி கொடுக்கப்படவில்லை. மாறாக சிங்கள ஆதிக்கத்திற்கு தமிழர்கள் அடிபணிந்து, கேவலப்பட்டு பரிதாபமாக நிற்கும் நிலையே உள்ளது. உள்நாட்டு அகதி முகாம்கள் எனும் சிறைகள் இன்னும் இருக்கின்றன. தமிழர் வசிக்கும் பகுதிகளில் சிங்களர்கள் அரசால் அழைத்து வரப்பட்டு குடியமர்த்தப்படுகிறார்கள். தமிழர்களை ராணுவம் வீட்டு வாசலில் நின்று கண்காணிக்கிறது. இப்படி ஈழத்தமிழர்கள் வாழ்வில் சீரழிவுகள் மட்டுமேயுள்ளனவேயன்றி முன்னேற்றங்களில்லை.

 இந்தியாவுக்குள்ளே வடக்கத்திய ஆரியர்களும் தெற்கத்திய திராவிடர்களும் இரு எதிர் பிரிவுகளாக இருப்பது போல இலங்கையில் எதிரெதிராக வைக்கப்படும் இனங்களில் சிங்களர்கள் ஆரியர்களாகவும், தமிழர்கள் திராவிடர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டிருப்பது இந்திய ஆளும்வர்க்கத்துக்குள்ளே நடந்திருக்கிறது. இந்திய சுதந்திர காலத்திலிருந்து ஆளும் இந்திய வர்க்கம் தமிழனை மதராஸி என்று இழிவாகப் பார்க்கும் எண்ணம் கொண்டே இருந்திருக்கிறது . இலங்கை மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தமிழர்களுக்கு எதிரானதாக அமைக்கப்பட்டதை திராவிடர்களுக்கு எதிரான ஆரியர்களுக்கு ஆதரவான கொள்கையாக இது அமைந்ததுடன் ஒப்பிட்டால் இந்த சிங்கள-ஆரிய பாசம் புரியவரும். திராவிடத் தமிழர்களால் இதை மாற்றவே இயலாமல் போனது. தமிழர்கள் அரசியல் ராஜதந்திர ரீதியாக இது பற்றி பெரிதாகவும் கவலையுற்றதில்லை. இப்போதாவது நாம் இதைக் கருத்தில் கொள்ளவில்லையென்றால் பிற்காலத்தில் ராகுலின் பேரன் இந்தியாவை ஆளும்போது, விஜய் நம்பியாரின் பேரன் சுனில் நம்பியார் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் போது, இலங்கை சிங்களர்களின் தேசமாக முற்றிலும் ஆகியிருக்கும்.

 முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடந்த காமன்வெல்த்தில் ராஜபக்சே வெற்றிக் கொடி நாட்ட பின்னாலிருந்து மன்மோகன் சிங் கைதட்ட, கேமரூன் கடைசி வரிசையில் நின்றுகொண்டு விசிலடித்து கூட்டத்தை கலைக்கப் பார்க்கிறார். அம்மாவோ கோட்டைச் சுவருக்கு வெளிப்பக்கம் நின்று தீர்மானம் இயற்றுகிறார். நெடுமாறன் ஐயா போன்றவர்கள் இடிந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுவரின் இடிபாடுகளில் நின்று அம்மாவை எப்படித் திட்டுவது என்று முழிக்கிறார்கள். இத்தகைய நாடகங்களின் முடிவுகள் ஈழத்தின் தீர்வுகளாய் ஆகாது. ஈழ ஆதரவு மற்றும் ஈழ எதிர்ப்பு நாடகங்கள் எல்லாவற்றையும் மக்கள் பொறுமையாக கவனித்தால் மட்டுமே யதார்த்தம் புரியும். மக்கள் கவனிப்பார்களா ? உண்மை வெல்லுமா ? நூற்றுக்கு தொன்னூறு சதவீதம் வாய்ப்பில்லை.

Saturday, July 6, 2013

ஓநாய்களும் இரு ஆட்டுக்குட்டிகளும்...சாதிகள் ஒழிவதில்லை.

பா.ம.க கட்சியின் நிறுவனரான ராமதாஸ் 80களில் செய்த சாதி அரசியல் அப்போது மிகப் பிரபலமானது. தனது வன்னியசாதி இனமக்களுக்கு அதிக இடஒதுக்கீடு தரவேண்டும் என்று அவர் நடத்திய போராட்டத்தில் வன்னிய இன மக்கள் பெரும்வாரியாக சேர்ந்து குதித்து நடுரோட்டில் பெரிய மரங்களை வெட்டிப் போட்டு தமிழ்நாட்டையே சில வாரங்கள் ஸ்தம்பிக்கச் செய்தனர். அப்படி தமிழகத்தையே உலுக்கியதில் அந்தச் சாதியினருக்கு கர்வம் கூட இருந்தது (நாங்க யாரு தெரயும்ல..).

அப்போது சாதியவெறி பற்றிய விழிப்புணர்வும் அது தவறு என்கிற மனப்பான்மையும் பெரிதும் மக்களிடம் வளர்ந்துவிடவில்லைதான். ஏனெனில் அது ஊடகங்கள் வளர்ந்திராத காலம். அன்று மக்களின் உணர்வுகளை மாற்றும் வலிய ஊடகம், அதுவும் ஒன்றே ஒன்றுதான். அது தூர்தர்ஷன் மட்டுமே.

ஆனால் 30 வருடங்களுக்குப் பின் இன்றைய நவீன செல்போன்கள் மற்றும் தொலைதொடர்பு யுகத்தில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 200 டி.வி. சேனல்கள் இருக்கின்றன. குடும்பத் தொலைக்காட்சிகள், கட்சி தொலைக்காட்சிகள், மதத் தொலைக்காட்சிகள் என்று விஷயங்கள் 200 மடங்கு அதிகமாக மக்களைச் சென்று அடைகின்றன.

மக்கள் மாறியிருக்கிறார்களா? ஆம் மாறியிருக்கிறார்கள். சாதியின் மீதான நம்பிக்கையின்மை அதிகரித்திருக்கிறது. பொருளாதார ஏற்றம் சாதியை மழுங்கடிக்கச் செய்யும் சக்தியை பெற்றிருப்பதால் சாதியை பொருட்படுத்தாமலிருக்க பழகியிருக்கிறார்கள். ஆனால் இந்த மாற்றங்களோடு சேர்ந்து சாதிய வெறித்தனமும் அதன் வடிவத்தைக் கூர்மையாக்கியிருக்கிறது.

தர்மபுரியில் அது அடையாளமாக வெடித்துக் கிளம்பி இன்று பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது. கடைசியாக காவு வாங்கப்பட்டது இளவரசன். நத்தம் காலனிப் பகுதியில் வன்னியசாதியைச் சேர்ந்த திவ்யாவும் தலித்சாதியைச் சேர்ந்த இளவரசனும் காதலித்து ஊரைவிட்டு ஓடிவிடுகின்றனர். திவ்யாவின் தந்தை போலீசில் பெண்ணை மீட்டுத் தரும்படி புகார் செய்கிறார்.

இந்நிகழ்ச்சிக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்து பா.ம.க கட்சி அரசியல் நிலையில் பலமிழந்து போனதாலும், கட்சி வன்னியருக்கு என்ன செய்து கிழித்துவிட்டது என்று பெரும்பாலான வன்னியர்கள் எண்ணிப் பார்த்து 'போங்கடா போய் புள்ளக் குட்டிகள படிக்க வைங்கடா.. வெட்டியா இவனுங்க பின்னாடி சுத்திக்கிட்டு அலையாம' என்று போய்விட்டதாலும் கட்சிக்கு வரும்படி குறைந்து விட்டது. தனது பலத்தை மீண்டும் நிலைநிறுத்த தனது பிரம்மாஸ்திரத்தை எடுத்தார் பா.ம.க ராமதாஸ்.

'ஜீன்ஸ் பேன்ட், கூலிங் க்ளாஸ் போட்டுக் கொண்டு எங்கள் பெண்களை மயக்கி காதல் திருமணம் செய்யும் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பாடம் புகட்டுவோம்' என்பது போன்ற புரட்சி வசனங்களை ராமதாஸூம் அவரது அடிபொடி 'குரு'க்களும் சேர்த்துப் பேச ஆரம்பித்தனர். கீழே உள்ளது மருத்துவர் ஐயாவின் பொழிப்புரையிலிருந்து ஒரு சேம்பிள்..

இந்நிலையில்தான் இளவரசனும்-திவ்யாவும் ஊரைவிட்டு ஓடிவிடுகின்றனர். இதில் இளவரசன் 17 வயதேயான மைனர். திவ்யா இளவரசனை விட மூத்த பெண். அவரது குடும்பம் நடுத்தர சராசரிக் குடும்பம். இளவரசனின் குடும்பமோ கொஞ்சம் வசதியானது. அதற்காக பெரும்பணக்காரர்கள் இல்லை. அவனது அப்பா அரசு பிணமருத்துவக் கிடங்கில் அறைக் காப்பாளராக வேலை செய்கிறார். அரசு வேலை.

இப்போது தர்மபுரியில் இருக்கும் சாதீயப் பெருந்தலைகளுக்கு நம் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஒரு தலித் பையன் ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டானே என்கிற வெறி. நேரே திவ்யாவின் அப்பாவைக் கூப்பிட்டு நாலு காய்ச்சு காய்ச்சி நீயெல்லாம் சாதிகெட்டவன் என்கிற ரீதியில் அவரை மிரட்டி, திட்டித் தீர்க்க அவர் வீட்டில் வந்து தூக்கில் தொங்கிவிட்டார்.

இதைச் சொல்லி வன்னிய சமூக மக்களிடையே வெறுப்பை ஊதியதில் தர்மபுரியில் நத்தம் காலனியில் 200 தலீத்துகளின் வீடுகள் தீக்கிரையாயின. இதையெல்லாம் தாண்டி திவ்யாவும் இளவரசனும் தங்களது திருமணத்தில் உறுதியாக நின்றார்கள்.

இந்தக் கலவரங்களுக்குக் காரணமாய் நம் மருத்துவர் ஐயா சொன்ன முத்துக்களில் சில கீழே..

"நம் வீட்டுப் பெண் பிள்ளைகளை 14 வயது பெண் குழந்தைகளை காதல் நாடகமாடி கடத்திச் சென்று கர்ப்பமாக்கி கை விட்டு விடுகிறார்கள். தருமபுரியில் நடந்தது அது தான். தருமபுரி கலவரத்தில் ஒரு உயிருக்கு சேதம் ஏற்பட்டதா? ஒரு பன்றிக் குட்டியைக் கூட கொல்லவில்லை. ஆனால் அந்தப் பெண்ணோட அப்பன் செத்துப் போனான். இழப்பு எங்களுக்குத்தான். காதல்-கலப்புத் திருமணம் இதையெல்லாம் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிராமணர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முசுலீம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காதல் பிரச்சனையில் பெற்றோர்கள் தலையிடக் கூடாது. உரிமை இல்லை என்று சொல்றான். பெற்றோர் தலையிடாமல் பின் யார் தலையிடுவது? காதலுக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. எங்கள் சாதி பெண்களிடம் அதை வைத்துக் கொள்ளக் கூடாது"  - மருத்துவர் ஐயா மேதகு ராமதாசு அவர்கள்.

திவ்யாவின் அம்மாவின் மூலம் போலீசுக்குப் போன பாமக தரப்பு திவ்யாவை அம்மாவிடம் திரும்பித் தர கோரியது. கோர்ட்டிற்கு அழைத்துவரப்பட்ட திவ்யா தான் விருப்பத்துடனேயே இளவரசனுடன் திருமணம் செய்து வாழ வந்ததாகக் கூறிவிட்டார். சாதிவெறியினர் முகத்தில் கரியைப் பூசிய அவரை விட்டுவிட்டு திவ்யாவின் அம்மாவை குறிவைத்தனர். திவ்யாவின் அம்மாவை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்ததில் கதறிக் கொண்டு திவ்யா ஓடிவந்தார்.

அம்மா செத்துப் போவாரோ என்று பயந்து போன திவ்யா இளவரசனை விட்டுவிட்டு அம்மாவிடம் திரும்பினார். இப்போது திவ்யாவுக்கு இளவரசனுடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தால் என்ன விளைவுகள் வரும் என்று விளக்கிச் சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னதில் அவர் இளவரசனுடன் இனிச் சேர்ந்து வாழமாட்டேன். அவரைப் பார்த்தால் இறந்துபோன என் தந்தை ஞாபகம் வருகிறது. என்று இருநாட்கள் முன்பு பத்திரிக்கைகளைக் கூட்டி விரிவான அறிக்கை கொடுத்துவிட்டார்.

அதைப் பத்திரிக்கையில் படித்த இளவரசன் தனது மாமாவிடம் இப்படி பத்திரிக்கையில் சொல்லியிருக்கிறாளே அவள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்பட்டுவிட்டு, தான் போலீஸ் வேலையில் சேர்வதற்கான பயிற்சிகளை எடுக்கப்போவதாயும், போலீஸ் வேலை வாங்கிய பின் திவ்யா மனம் மாறி மீண்டும் வந்துவிடுவாள், தான் அவளை வைத்துக் காப்பாற்றுவேன் என்றும் கூறிவிட்டுச் சென்றிருக்கிறான். பின்பு தனது தந்தையிடம் அவரது பைக்கை வாங்கிக் கொண்டு சற்றுத் தள்ளியுள்ள ஊரிலிருக்கும் தனது நண்பன் ஒருவனைப் பார்க்கச் செல்கிறேன் என்று கிளம்பியிருக்கிறான் இளவரசன். காலையில் தருமபுரி ரயில் நிலையத்தருகே நின்று கொண்டிருந்த அவனது பைக்கைத் தொடர்ந்து சென்று பார்த்ததில் ரயில்வே பாதையோரம் மூளை சிதைந்து இறந்து கிடந்திருக்கிறான் இளவரசன்.

ரயிலில் அடிபட்டு இறந்தானா அல்லது ரயிலில் தள்ளப்பட்டு இறந்தானா அல்லது கொல்லப்பட்டு தள்ளப்ப்ட்டானா ? இளவரசன் இறந்து கிடந்ததை காலை அத்தனை நேரம் வரை அப்பகுதியைக் கடந்து சென்ற எந்த ரயில்களின் டிரைவர்களும் பார்த்து ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுக்கவில்லை. இது ஏன் என்பது ஒரு கேள்வி.

இளவரசன் இறந்ததைக் கேள்விப்பட்ட தர்மபுரி பாமக கட்சியினர் பலர் ஊர்ஊராகச் சென்று அந்தச் செய்தியை வேட்டுக்கள் வெடித்து மகிழ்ச்சி பொங்க அறிவித்தபடியே சென்றார்களாம்.

இளவரசனும் அவரது அப்பாவும் கடைசியாக இன்று மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள். இம்முறை அப்பா வேலை செய்யும் பிணக்கிடங்கிலேயே பிணமாக வந்து கிடக்கிறான் மகன் இளவரசன்.

இந்தச் சாதீயப் பிரச்சனையில் தலித்துக்களுக்காக நின்று போராடும் சக்தி திருமாவளவனுக்கு இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே. 15 வருடங்களுக்கு முன்பிருந்த திருமாவளவனாயிருந்தால் இந்நேரம் இளவரசனுடன் துணையாக நின்று அவனுக்குத் தோள் கொடுத்திருப்பார் திருமா. இப்போதோ கலைஞர் தாத்தாவின் செல்லப் பேரனாக அவர் தரும் பணத்தின் நிழலில் வாழ்ந்து பழகிவிட்டதால் வெறும் அறிக்கைகளோடே நின்றுவிட்டார். மற்ற கட்சிகள் இடதுசாரிகள் உட்பட இப்பிரச்சனையின் ஆழம் புரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் கோட்டை விட்டுவிட்டனர். ஜெ. அம்மாவிடம் கேட்டால் இவன் யார் மேல்சாதிப் பெண்ணை திருமணம் செய்ய ? இவனுக்கு இது வேண்டியதுதான் என்று சொன்னாலும் சொல்வார். அவருடைய எல்லைகள் பாமகவை இந்தப் பிரச்சனையை வைத்து ரவுண்ட் கட்டிவிடுவதோடு நின்றுவிடுகிறது.  இப்படி எல்லாரும் கைவிரித்து விட்ட நிலையில் அவன் கொல்லப்படுவதை தடுக்க ஆளேயில்லாமல் போய்விட்டது. இப்போது அது தற்கொலை என்று பிரச்சனையை மூடிவிடப் பார்க்கிறதாம் போலீசு.

சாதிகள் இல்லையடி பாப்பா - பாரதியார். குழந்தைகள் முதலே இந்த எண்ணம் வரவேண்டும் என்று நினைத்த அவர் ஒரு தீர்க்கதரிசி தான்.

Wednesday, March 27, 2013

சிங்கள-தமிழ் பிரச்சனையை வடஇந்தியர்-தமிழர் பிரச்சனையாக்க கரியவாசம் செய்த தந்திரம்


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் முன்பு காலத்தில் ஈழத்தமிழருக்கு எதிராகப் பேசியவரே என்றாலும் கடந்த சில வருடங்களாக ஈழத்தமிழருக்கு ஆதரவாக செயல்படுவது தெரிந்ததே. ஈழத்துக்கு ஆதரவாக மாணவர்களின் போராட்டத்தில் கூட அவர் வெளிப்படையாக மாணவர்களை ஆதரிக்கவில்லை.

சென்ற வாரம் ஈழமக்களின் துயரங்களை கேள்விப்பட்ட சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவி மனம் வருந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்குக் கூட அரசிடமிருந்து எதுவும் நிவாரணங்கள் சென்றதாகத் தெரியவில்லை. ஊடகங்களும் அந்தச் செய்தியை வெளியிடவில்லை. ஒருவேளை இனி ‘நாம் சாவது தேவையில்லை நம்மை சாகடிப்பவர்களை சாகடிப்போம்’ என்கிற போராட்ட உணர்வு எழுந்திருப்பதுவும் காரணமாக இருக்கலாம்.

அம்மையார் மற்றவர்கள் போராடுவதை விட தான் தன் அதிகாரத்தின் மூலம் செயல்களைச் செய்வதையே விரும்புகிறார் என்பதை காட்டும் விதமாக மூன்று நான்கு முறை இந்தியாவுக்கு “நட்பு”ரீதியில்(கொல்றதையும் செஞ்சுக்கிட்டு நட்பு என்னா நட்பு?) விளையாட வந்த சிங்களவர்களைத் தமிழக அரசே வெளியேற்றியது.

இப்போது ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் மாணவர்களைக் குறிவைத்து காசு பார்க்க நடத்தப்பட இருக்கும் வேளையில் அதில் இலங்கை வீரர்கள்-நடுவர்கள் பங்கேற்கும் ஐபிஎல் போட்டிகள் எதுவும் சென்னையில் நடக்க விடமாட்டோம் என்று அம்மா அதிரடியாக அறிவித்துவிட்டார். இதே அறிவிப்பை ஈழத்துக்கான மாணவர் போராட்டக் குழுவினரும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சென்று தெரிவித்திருக்கின்றனர். அவர்களுடைய அறிக்கையில் சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாடும் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாமென்றும், அப்படி விளையாடினால் மைதானத்துக்குள் நுழைந்து போராடுவோம் என்றும் அறிவித்திருக்கின்றனர்.

ஐபிஎல் என்கிற தனியாருக்கு கொள்ளை லாபம் பெற்றுத் தரும் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் டீமிலேயே வெட்கமில்லாமல் இரண்டு சிங்கள வீரர்களை வைத்திருக்கின்றனர். இது போல மற்ற அணிகளிலும் இருக்கும் இலங்கை வீரர்களின் எண்ணிக்கை பனிரெண்டு. இந்தப் பனிரெண்டு பேரும் சென்னையில் நடைபெறும் எந்தப் போட்டிகளிலும் விளையாட மாட்டார்கள் என பிசிசிஐயும் பிரச்சனை எதுக்கு என்று நினைத்து அறிவித்துவிட்டது. ஆனால் அவர்கள் மற்ற மாநிலங்களில் நடைபெறும் போட்டிகளில் விளையாடுவார்கள். ஏனென்றால் வட இந்தியர்களுக்கு தமிழன் இந்தியாவைச் சேர்ந்தவன் என்று கருதுவதில் கஷ்டம் இருக்கிறது.

இதை உறுதிப் படுத்தும் விதமாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவாசம் எனும் சிங்களர் வட இந்திய ஊடகங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊடகங்களுக்கு நைஸாக அனுப்பிய மின்னஞ்சல் (ஈமெயில்) இப்போது அம்பலமாகியுள்ளது. அந்த ஈமெயிலில் அவர் இலங்கையின் சிங்களவர்கள் கி.மு. 300களில் வட இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலிருந்து (கலிங்கம்) வந்தவர்கள் என்றும், அசோகர் புத்தமதத்தை பரப்ப தனது மகள் சங்கமித்ரையையும், மகன் அரிஹத் மஹிந்தாவையும் அனுப்பினார் என்றும், அவர்கள் இலங்கையில் வந்திறங்கி பெருகியவர்களே இன்று சிங்களர்களாக இருக்கிறார்கள் என்றும், எனவே, இந்தியா 12 சதவீதமே இருக்கும் தமிழர்களின் உரிமைகளுக்காக கவனம் செலுத்துவதை விட 75 சதவீதமாய் இருக்கும் வட இந்தியர்களான சிங்களர்களின் நலனில் அக்கறை செலுத்தவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழராக இருந்தாலும் பிராமணரான சுப்பிரமண்ய சாமி இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா திருத்துவதை தடுக்க அமெரிக்கா சென்று அமெரிக்க தலைவர்களை சந்தித்து பேசிப் போராடி இலங்கைக்கு எதிரான வாசகங்கள் ‘இனப்படுகொலை’, ‘சர்வதேச விசாரணை’ வராமல் பார்த்துக் கொண்டார். இது இன்னும் இனப் பிரச்சனை அல்ல சும்மா போர்க்குற்றங்கள் தான் என்று பேசும் தமிழ்நாட்டு தேசியக் கட்சிகள் இப்போதாவது விழித்தெழுந்து கொள்வார்களா?

கரியவாசம் போன்ற இலங்கை நாட்டின் தூதர் எனப்படும் மிகப் முக்கியமான பதவியிலிருப்பவரே சிங்களர்களின் மூதாதையர்கள் வடஇந்தியர்கள் என்கிற கருத்தை முன்வைக்கும் போது நமக்குள் பல கேள்விகள் எழுகின்றன. ஒருவேளை இதனால் தான் இந்தியா சிங்களருக்குச் சாதகமாகவே இவ்வளவு காலமாக நடந்துவருகிறதா? இலங்கைக்கான இந்திய வெளியுறவுக் கொள்கை தமிழர்களைக் காப்பதற்குப் பதில் சிங்கள மூதாதையர்களான வட இந்தியர்களைப் பாதுகாக்கவே அமைக்கப்பட்டதா?  அதனால் தான் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்தே தமிழர்களின் உரிமைகள் படிபடிப்படியாக பறிக்கப்பட்டு இன்று இன அழிப்பு உச்சத்திலிருக்கிறதா ? கி.மு. 300ல் போன சிங்களர்களுக்கு இலங்கை என்றால் அவர்களுக்கு 5000 வருடங்களுக்கு முன்பே அங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு இலங்கை சொந்தமில்லையா ? அவர்கள் இலங்கையின் மூதாதையர்கள் இல்லையா ?
தமிழர்களே யோசியுங்கள். இலங்கையின் சிங்களன்-தமிழன் பிரச்சனை இந்தியாவின் வட இந்தியன் -தென்னிந்தியன் பிரச்சனையாக மாற்றப்படுகிறதா ? அதனால் தான் மற்ற மாநிலங்களில் இலங்கை வீரர்கள் ஐபிஎல் மேட்ச் விளையாட அனுமதிக்கப்படுகிறார்களா?

Friday, November 23, 2012

தெய்வநாயகம் என்கிற மனிதநேய மருத்துவர்

பிரபல நெஞ்சு நோய் நிபுணரும், அமைதி இயக்கம் என்கிற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தவருமான டாக்டர் சி.என். தெய்வ நாயகம் அவர்கள் கடந்த திங்களன்று காலமானார். அவருக்கு வயது 70.

தெய்வநாயகம் அவர்களை சில வருடங்களுக்கு முன்பு எனது நண்பர் ஒருவருக்கு தண்டுவடத்தில் டி.பி. நோய் தாக்கி நடக்க இயலாமல் போனபோது,

அவருக்காக சரியான மருத்துவர்களைத் தேடியலைந்த போது தான் முதன்முதலாய் சந்தித்தேன்.

மிகப் பெரிய மருத்துவ பதவிகளை வகித்த அவர் வெறும் 50 ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு தனது சேவை அமைப்பின் க்ளினிக்கில் அம்பாசடர் பல்லவா ஹோட்டல் அருகில் இருந்த கட்டிடத்தில் இலவசமாக மருத்துவம் செய்து கொண்டிருந்தார்.

அவர் நினைத்தால் அவருக்கு லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுக்க பெரிய பணக்கார நோயாளிகள் கூட்டம் இருக்கிறது. ஆனாலும் அவர் சேவை செய்வதையே விரும்பினார். பணக்காரர்களும் கார் போட்டுக் கொண்டு, விமானங்களில் வெளிநாடுகளிலிருந்து அங்கு வந்து காத்து நிற்பார்கள். அவர்களுக்கும் அதே 50 ரூபாய் தான்.

இந்த 50 ரூபாயும் வெறும் பதிவுக் கட்டணமே. அதற்குப் பின்னர் எத்தனை முறை நீங்கள் சென்றாலும் இலவசமாகத் தான் பார்ப்பார்.

1942, நவம்பர் 15ல் பிறந்த தெய்வநாயகம், சென்னை மருத்துவக் கல்லூரியில் 1965ல் மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளில் 18 மாதங்கள் பயிற்சி பெற்றார். FRCS பட்டமும் பெற்றார். அவர் உலக அளவில் புகழ் பெற்ற எடின்பர்க்கில் உள்ள ராயல் ஸ்கூல் ஆப் பிசிசியன்ஸ் (Royal School of physicians)ல் உறுப்பினராவார். பிரிட்டனின் மருத்துவ ஆய்வுக் கவுன்சிலில் ஆய்வு அதிகாரியாகவும் இருந்தார்.

1970 முதல் 2000 வரை சென்னை மருத்துவக் கல்லூரியில் நெஞ்சு நோய்த் துறையின் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இந்திய நெஞ்சு நோய் கழகம் என்கிற அமைப்பையும் லங் இந்தியா என்கிற இதழையும் நடத்தி வந்தார்.

சென்னை மருத்துவமனையில் கடுமையான எதிர்ப்பை மீறி எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யும் பிரிவை உண்டாக்கினார்.
மருத்துவத்தில் அவருடைய முக்கிய பங்கு அல்லோபதி மருத்துவத்துடன் நமது நாட்டின் பாரம்பரிய சித்த மருத்துவத்தையும் கலந்து வெற்றிகரமாகப் பயன்படுத்தியதாகும். இதற்காக எம்.பி.பி.எஸ் மருத்துவரான அவர் சித்த மருத்துவப் படிப்பையும் படித்துத் தேர்ந்தார்.

சென்னை சானேட்டோரியத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சித்த மருந்து ஆய்வு ஒன்றைச் செய்தார். அதில் சுமார் 80 எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சித்த மருந்தான ரஸகந்தி மெழுகு எவ்வாறு நோயைக் கட்டுப்படுத்துகிறது என்று ஆராய்ந்ததில் 90 சதவீத நோயாளிகள் நோயின் கடுமையிலிருந்து விடுபட்டு சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பினர். அவர்கள் எல்லோரும் வாழ்நாள் முழுதும் அந்த மருந்தை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். மற்றபடி சாதாரணமாக வாழ ஆரம்பிக்கலாம். நோய் அவர்களை கொல்வதிலிருந்து காத்துக் கொள்ள முடியும்.

தனது கண்டுபிடிப்புக்களை ஐ.நாவில் இருக்கும் மருத்துவ அமைப்பின் வருடாந்திர மாநாட்டில் சென்று சமர்ப்பித்தார். எல்லோரும் சித்தமருத்துவத்தை வியந்து பார்க்க வைத்தார். வழக்கம் போல நமது அரசின் தொடர் உதவிகள் இல்லாததில் அந்த முயற்சியை மேலும் பரவலாக்கி நாடு முழுவதும் கொண்டு செல்ல முடியாமல் போனது.

அவரது சித்த மருத்துவ சேவையினால் அவர் தேசிய சித்த மருத்துவக் கவுன்சிலின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மிகக் கண்டிப்பாகவும், கறாராகவும் பேசக் கூடியவர். எளிமையாக வேட்டி, சட்டை அல்லது குர்த்தா அணிந்திருப்பார். செயின் இணைக்கப்பட்ட கண்ணாடி அணிந்திருப்பார்.

நடக்க இயலாமல் போன எனது நண்பரை ஆட்டோவில் வைத்துக் கூட்டிப் போய் அவரை அலேக்காகத் தூக்கிச் சென்று அவரது க்ளினிக்கில் பெஞ்ச்சில் படுக்க வைத்திருந்தோம். நண்பரின் முறை வந்ததும் மிக சகஜமாகப் பேசி அவரது ஸ்கேன் மற்றும் அனைத்து ரிப்போர்ட்களையும் ஒரு முறை பார்த்தார்.

பின்பு தனது பரிசோதனையின் மூலம் கால் செயலிலழந்து போனதை பரிசோதித்தார். பரிசோதித்து விட்டு சர்வ சாதாரணமாகச் சொன்னார். 'டி.பி. கட்டி ஸ்பைனல் கார்டுல இருந்து போகிற நரம்புகளை அழுத்திட்டு சில எலும்புகளை அரிச்சுட்டு இருக்கு. சரிபண்ணிடலாம்.'

நடக்கவே இயலாது எனக் கைவிடப்பட்ட எனது நண்பர் அவரது அல்லோபதி மற்றும் சித்த மருத்துவ முறையால் ஒரு வருடத்தில் திரும்பவும் எழுந்து நடந்தார். அதற்குப் பின் நிறைய பேரை அவரிடம் போய்ப் பார்க்க அழைத்துச் சென்றிருக்கிறேன்.

மக்கள் டி.வியில் தினமும் மக்களின் மருத்துவ கேள்விகளுக்கு பதில் சொல்லும் தொடரை நடத்தி வந்தார். இயற்கை உணவு மற்றும் மருந்துகளையும், பக்க விளைவுகளில்லாத சித்த மருந்துகள் பற்றியும் விரிவாக சாதாரண மக்களுக்கும் புரியும்படி விளக்குவார்.

அவர் வாழ்க்கையில் நடந்ததாக பின்வரும் நிகழ்வைச் சொல்வார்கள். அவர் மிகச்சிறந்த மருத்துவ நிபுணராக அறியப்பட்ட காலம் அது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்தவர் வெங்கட்ராமன்.

ஒரு நாள் காலை தெய்வநாயகம் அவர்களின் க்ளினிக்கிற்கு அரசு மாளிகைக் கார் வந்து நிற்கிறது. க்ளினிக்கில் சில பேஷண்ட்டுகள் இருக்கிறார்கள்.

அவசரமாக காரில் வந்த அதிகாரி ஒருவர் வெங்கட்ராமன் அவர்களுக்கு உடல் நிலை சிறிது சரியில்லை எனவும் உடனே மருத்துவரை அழைத்து வர கார் அனுப்பினார்கள் என்றும் சொன்னார்.

அதற்குப் பதிலளித்த தெய்வநாயகம், தனது பேஷண்ட்டுகளை சிறிது நேரத்தில் பார்த்து முடித்துவிட்டு உடனே வருவதாகக் கூறினார். அதிகாரியோ குடியரசுத் தலைவர் விஷயம் நீங்கள் எல்லாவற்றையும் போட்டுவிட்டு உடனே வந்தாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார்.

"ஐயா, உங்களது குடியரசுத் தலைவருக்கு உடல் நலமில்லை என்றாலும் தலை போகும் அவசரமில்லை. இதோ எனது பேஷண்ட் வயிற்று வலி என்று துடித்துக் கொண்டிருக்கிறார். இவரை கவனித்து விட்டுத் தான் என்னால் வரமுடியும்" என்று உறுதியாகக் கூறி தனது பேஷண்ட்களை கவனித்து அனுப்பி விட்டே வெங்கட்ராமனைச் சென்று கவனித்தார்.

டாக்டர் தெய்வநாயகம் போன்ற மனித நேயம் நிரம்பிய மனிதர்கள் மருத்துவர்களாய் இருந்த காலம் போய் மணிக்கு ஒரு ஆப்பரேஷன் என்று கல்லா கட்டும் மருத்துவர்களே பெருகியிருக்கிறார்கள்.

சித்த மருத்துவத்தை ஆங்கில மருத்துவத்துடன் கலந்து செய்ததன் மூலம் சித்த மருத்துவத்துக்கும் அங்கீகாரம் பெற்றுத் தந்த அந்த நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் மூன்று மகள்களுக்கும் மற்றும் குடும்பத்தினர், அமைதி இயக்கத்தினர் எல்லோருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, September 21, 2012

கூடங்குளம்: சி.பி.எம்மின் புரட்சி! அறிஞர் அ.மார்க்ஸின் மகிழ்ச்சி!!

சி.பி.எம்-மின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் “இறக்குமதி அணு உலைகள் ஆகாது பாதுகாப்பில் சமரசம் கூடாது” என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். முதலில் இந்தக்கட்டுரையை அவர் ஏன் எழுதினார்? கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஆதரிக்கும் சி.பி.எம் கட்சி மராட்டிய மாநிலம் ஜெய்தாப்பூர் திட்டத்தை மட்டும்  ஏன் எதிர்க்கிறது என்ற கேள்விக்குத்தான் இந்த பதில். அதாவது சி.பி.எம்மின் இரட்டை வேடத்தை அல்லது டபுள் ஆக்டிங் சரிதான் என்பதே காரத்தின் பதில்.

காரத் எழுதிய இந்த வழா வழா கொழா கொழா கட்டுரையின் சாரம் என்ன? அல்லது ஏற்கனவே சி.பி.எம் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை இந்தக் கட்டுரை மறுக்கின்றதா அல்லது ஆதரிக்கின்றதா? நிச்சயமாக ஆதரிக்கவே செய்கிறது.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த்திற்கு முன்பேயே ரசியாவிடமிருந்து இரண்டு அணு உலைகள் வாங்கப்பட்டு 15,000 கோடி ரூபாய் செலவில் கூடங்குளத்தில் கட்டப்பட்டு விட்டதால் அதை மூடுவது சாத்தியமானது அல்ல என்பதோடு நாட்டு நலனிற்கும் உகந்தது இல்லையாம்.

இதைத் தவிர்த்த மற்ற அணு உலைகள் அமெரிக்க ஒப்பந்தத்திற்கு பிறகு வந்தவையாம். இந்திய சுதேசி அணு உலைகளை விட இவை மிகுந்த செலவு பிடிப்பவையாம். அதனால் அமெரிக்க, ஐரோப்பாவிலிருந்து இறக்குமடி செய்யப்பட்ட அணு உலைகளை சி.பி.எம் கட்சி எதிர்க்கிறதாம். சரி, இதன்படி இந்த ஐரோப்பாவின் மேப்பில் ரசியா வராது போலும். மேலும் இத்தகைய அணு உலைகளின் பாதுகாப்பும் பிரச்சினையாம். அதாவது ஒரு இடத்தில் இரண்டு உலைகள் இருந்தால் பிரச்சினை அல்ல, நான்கு, ஆறு என்று இருந்தால் பிரச்சினை என்பதை காரத் சுற்றி வளைத்து கூறுகிறார். இதற்கு ஆதாரமாய் புகுஷிமா வில் ஆறு உலைகள் இருந்ததை காரத் கண்டுபிடித்துக் கூறுகிறார்.

புகுஷிமா விபத்திற்குப் பிறகு அணு உலைகள் குறித்த மக்களின் அச்சம் அதிகரித்திருக்கிறதாம். இதை நிவர்த்தி செய்யுமாறு சுயேச்சையான நிபுணர்கள் அடங்கிய கமிட்டி ஆய்வு செய்து அறிக்கையை மக்கள் முன் வைக்க வேண்டுமாம். பாதுகாப்பு தொடர்பான அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தில் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை அரசு தெளிவு படுத்தி அதையும் மக்கள் முன் வைக்க வேண்டுமாம்.

அணுமின் நிலையங்களை ஆதரிக்கும் அப்துல் கலாம் உள்ளிட்டு பலரும் காரத் பேசுவதைப் போலத்தான் பேசுகின்றனர். மக்களின் அச்சத்தை போக்குவது என்ற போர்வையில்தான் கூடங்குளம் அணுமின்நிலைய அனுமதியும், துவக்கமும் தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது. இதையெல்லாம் செய்து விட்டால் அணுமின்நிலையங்களை சேமமாக நடத்திக் கொள்ளலாம் என்பதுதான் காரத் மற்றும் அவரது கட்சியின் நிலைப்பாடு.

தந்திரமான மொழியிலும், விவாதத்திலும் மறைந்து கொண்டாலும் காரத்தின் சந்தர்ப்பவாதம் இங்கே பட்டவர்த்தனமாக காட்டிக் கொள்ளவே செய்கிறது. இந்தியாவின் தரகு முதலாளிகள் மற்றும் அவர்களது பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காகவே இங்கு அணுமின்நிலையங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதில் அமெரிக்கா முதல் ஆதாயம் அடைகிறது என்றால் பிரான்ஸ், ரசியா அடுத்தடுத்து ஆதாயம் அடைகின்றன. இதில் ஒன்றை எதிர்த்து விட்டு பிறிதொன்றை ஆதரிப்பது என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

மேலும் ஏகாதிபத்தியங்களின் சுரண்டலை மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் என்று என்.ஜி.ஓ மொழியில் விளக்கமளிப்பது சி.பி.எம்மின் மறைமுக ஆளும் வர்க்க சேவையையே குறிக்கிறது. ஒரு வேளை போராடும் மக்கள் அப்படித்தான் அதை புரிந்து கொண்டு எதிர்த்தாலும் அதை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்துக் கொண்டு செல்வது நமது  கடமை. மேலும் கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்ப்பது என்பது இந்திய அரசையே எதிர்ப்பதாக கருதப்பட்டு அங்கு அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதை ஒரு பகுதியின் பொருளாதார பிரச்சினையாக சுருக்கி பார்ப்பதன் மூலம் சி.பி.எம் கட்சி தனது மறைமுக இந்திய முதலாளிகளது சேவையை தொடர்கிறது.

அடுத்து கூடங்குளம் திட்டம் அமெரிக்க ஒப்பந்தத்திற்கு முன்பேயே வந்தாலும் அது முற்றிலும் தற்போதைய அமெரிக்க ஒப்பந்த்தத்தின் ஷரத்துக்களின் படியே அமல்படுத்தப்படுகிறது. அதில் முக்கியமானது விபத்து ஏற்பட்டால் அணுஉலைகளை அளித்த நாடுகள் நிவாரணம் வழங்கத் தேவையில்லை என்பது. இதை காரத் குறிப்பிட்டாலும் பெரிய மனதுடன் இரண்டு உலைகளை அங்கே செயல்படலாம் என்று அனுமதிக்கிறார். அங்கு கூடுதலாக வரும் இரண்டு உலைகளை மட்டும் அவரது கட்சி எதிர்க்குமாம்.

கூடங்குளம் மக்கள் போராட்டம் வெற்றி பெற்றால் அது இதர அணு உலை எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்குமென்பதால்தான் இந்திய அரசு இரும்புக் கரம் கொண்டு அதை அடக்க முனைகிறது. இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு கூட காரத்திற்கு அறிவு இல்லை என்பதல்ல, அவரது சந்தர்ப்பவாதம் இங்கே உண்மைகளை கொன்று விடுகிறது.

இதற்கு மேல் நிறைய செலவு செய்து விட்டார்கள் என்று கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஆதரிப்பதை இப்படியும் சொல்லலாம். அதாவது முதலாளித்துவம் இதுவரை செலவழித்து உருவாக்கியிருக்கும் பல கோடி பில்லியன் டாலர் பொருளாதாரத்தை கைப்பற்றி சோசலிச சமூகத்தை படைக்கும் புரட்சி கூட நாட்டு நலனுக்கு உகந்தது அல்லதான். அதனால்தான் சி.பி.எம் கட்சி புரட்சியிலிருந்து விலகி மனமகிழ் மன்றமாக மாறிவிட்டது போலும்.

அதே நேரம் காரத்தின் இந்தக் கட்டுரை அறிஞர் அ.மார்க்சை குஷிப்படுத்தியிருக்கிறது. முகநூலில் இது குறித்து விரிவாக எழுதியிருக்கும் அ.மா அதில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

   

 ” மக்கள் திரளைச் சார்ந்து இயங்கும் ஒரு கட்சி இப்படியான ஒரு கருத்தியல் மாற்றத்தையும், அதனடிப்படையில் ஒரு நிலைபாட்டு மாற்றத்தையும் மேற்கொள்வது கேலிக்குரியதோ, இழிவானதோ அல்ல. மக்களைத் திரட்டுவது குறித்துக் கவலை இல்லாத இரும்புக் கொள்கையர்களுக்கு வேண்டுமானால் தாங்கள் கொள்கை மாற்றம் இல்லாமல் என்றோ உருவாக்கப்பட்ட பழைய திட்டத்தின் அடிப்படையில்  கறாராகச் செயல்படுவது பெருமையாக இருக்கலாம். இந்த அடிப்படையில் காரட்டின் கட்டுரையினூடாக வெளிப்படும் அணுகல் முறை மாற்றம் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, தனி மனித ஆர்வங்கள், சுற்றுச் சூழல் இயக்கங்கள், சிறு கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் துணையுடனேயே இதுவரை நடைபெற்று வந்த அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களில் இந்தியாவின் முக்கிய இடதுசாரி அமைப்பான மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு ஒரு பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் நம்பலாம்.”

இந்தக்கட்டுரை சி.பி.எம்மிடம் எந்த நிலைப்பாட்டு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பதே காரத்தே ஒத்துக் கொண்டாலும் அறிஞர் அ.மா மறுப்பார் போலும். நிலவுகின்ற சமூக அமைப்பை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக் கொண்டு சீர்திருத்தம் கோரும் ஒரு நிலையை மாபெரும் புரட்சி என்று சித்தரிக்கும் அளவு அறிஞரின் காமன்சென்ஸ் குறுகிவிட்டது. அணு மின்சாரம் தவிர்த்த மாற்று எரி சக்தி திட்டங்களை மையமாகக் கொள்ள வேண்டும் என்று காரத் கூறயிருப்பதெல்லாம் அ.மாவுக்கு மாபெரும் கலக குரலாக தென்படுகிறது. இதைத்தான் டிராபிக் ராமசாமி முதல் சூரிய விளக்கிற்காக என்.டி.டி.வியுடன் கூட்டணி அமைத்து செயல்படும் பிரியங்கா சோப்ரா, ஷாருக்கான் வரை பலரும் சலிப்பூட்டும் விதத்தில் சொல்கிறார்கள். அதன்படி அவர்களையும் புரட்சிக்காரர்களாக அ.மா ஏற்றுக்கொள்வார் என்று நம்புவோம்.

மக்களை அணிதிரட்டும் கவலை இல்லாத இரும்புக் கொள்கையர்கள் மட்டும் இது போல ஏதாதாவது கூவிக் கொண்டிருப்பார்கள் என்று கூறுகிறார் அ.மா. இதைத்தான் கருணாநிதி பலமுறை ஈழம் குறித்து சொல்லியிருக்கிறார். அதாவது ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியும், ஆட்சியில் இருக்கும் போது எச்சரிக்கையாகத்தான் செயல்பட முடியும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட முடியாது…. இதெல்லாம் கூட அ.மாவின் இந்த இரும்பு இலக்கணத்தில் கண்டிப்பாக வரும். ஒரு பிரச்சினைக்கு இறுதித் தீர்வு என்ன என்பதும் அதை நோக்கியே தற்கால போராட்டங்கள் இருக்க வேண்டும் என்பதும் புரட்சி குறித்து ஒரு கம்யூனிஸ்ட்டு கட்சி அறிய வேண்டிய அடிப்படைப் பாடம். அதாவது புரட்சிக்காகத்தான் மக்களை திரட்டுகிறோமே அன்றி மக்கள் எதற்காகவாவது திரண்டு விட்டால் அது புரட்சி அல்ல. ஆனால் அ.மா இரண்டாவதைத்தான் புரட்சி என்று நம்புவதால் அதை அதற்கு உரிய சி.பி.எம்மிற்கும் விருதாக அளித்து மகிழ்கிறார்.

அணுமின்நிலையத்தை சுற்றுசூழல் பிரச்சினையாக மட்டும் பார்ப்பது என்பது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உத்தி. சி.பி.எம் அதையும் பேசிக் கொண்டு அமெரிக்க எதிர்ப்பு என்பதாகவும் நாடகம் ஆடுகிறது. உள்நாட்டு உலை பாதுகாப்பானது, வெளிநாட்டு உலை ஆபத்தானது என்ற காரத்தின் அபத்தத்தை சுட்டிக்காட்டும் அ.மா அதன் அரசியல் சந்தர்ப்பவாதத்தை புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் எப்படியும் புரட்சி வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் போது ஒரு அறிவாளியின் நடவடிக்கையில் சந்தர்ப்பவாதம் மட்டும்தானே மையமாக இருக்க முடியும்? ஆனாலும் இது ஒரு நாசுக்கான, நாகரீகமான முறையில் வெளிப்படும் என்று அறிஞர் அ.மார்க்ஸ் நம்பிக் கொண்டிருந்தால் அவருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

 

--நன்றி. வினவு இணையதளம்(http://www.vinavu.com).

தொடர்புடைய சுட்டிகள்

Saturday, December 24, 2011

முல்லைப் பெரியார் அணை பிரச்சனை – கேரளாவின் அடாவடித்தனம்!

முல்லைப் பெரியார் அணை பிரச்சனை கேரளாவின் அடாவடித்தனம்!
14-டிசம்பர்-2011
முல்லைப் பெரியார் அணை பிரச்சனை மறுபடியும் மலையாளிகளால் பெரிதாக்கப்பட்டு, கேரள எல்லைகளில் தமிழர்கள் தாக்கப்பட்டு, பரபரப்பாகியிருக்கும் இச்சூழலில் இந்த அணை பற்றி கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்துக் கொள்வோம்.
பெரியாறு தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலுள்ள சிவகிரி மலைகளில் கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர்கள் உயரத்தில் உற்பத்தியாகி வடக்காக 48 கி.மீ பாய்ந்து தேக்கடி ஏரியில் மேற்கு நோக்கிச் செல்லும் முல்லையாற்றுடன் கலக்கிறது. அங்கிருந்து கேரளாவினுள் வடக்காகப் பாய்ந்து இடுக்கி வழியாகச் சென்று அரபிக் கடலில் கலக்கிறது.
முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே சுமார் பத்து அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதில் முதலில் வருவது தமிழ்நாட்டில் அமைந்துள்ள பழைமையான முல்லைப் பெரியாறு அணை. இது முல்லையாறும், பெரியாறும் கலக்குமிடத்தில் கட்டப்பட்டுள்ளது. இவ்வணையைத் தாண்டி தான்  பெரியாற்றின் போக்கில் கேரளாவினுள் புத்ததான்கெட்டு, மேட்டுப்பட்டி, மூணாறு (ஜாலி ட்ரிப் அடிப்பீங்களே), இடுக்கி என்று வரிசையாக சுமார் 10 அணைகள் கட்டப்பட்டுள்ளன. அவ்வணைகளுக்கு நீர் இன்னும் நிறைய வேண்டுமென்றால் தமிழ்நாட்டின் பொறுப்பில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணை இல்லாது போக வேண்டும்.
 கேரளா மலைப்பாங்கான நாடு. அங்கு மழை அதிகம். ஆறுகளும், ஏரிகளும் அதிகம். சுமார் 44 ஆறுகள் கேரளாவில் ஓடுகின்றன. 1880களில் தமிழ்நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் நதிகள் குறைவு. அவையும் தென்மேற்கு பருவமழையை நம்பியே இருக்கின்றன. சிவகிரி மலையில் உற்பத்தியாகி வடக்கு, மேற்காகச் சென்று கடலில் கலக்கும் பெரியாறு மற்றும் முல்லையாறு கலக்கும் இடத்தில் அணை கட்டி அதில் தேங்கும் நீரில் சிறிது பகுதியை மலையைக் குடைந்த பாதை வழியே தமிழ்நாட்டுக்கு கொண்டு வரும் எண்ணம் பிரிட்டிஷாருக்குத் தோன்றியது. அதன் விளைவே முல்லைப் பெரியாறு அணை.

முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாடு கேரள எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், 1887-1895களில், பெரியாற்றின் குறுக்கே பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த பொறியியலாளர் பென்னி குயிக் என்பவரின் மேற்பார்வையில் (அன்றைய தொகை 62 லட்சம் ரூபாய்கள் செலவில்) கட்டப்பட்ட அணை. இதன் சிறப்பம்சம் இது மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 2700 அடி உயரத்தில் உள்ளது.. அவ்வுயரத்திலிருந்து ஒரு சிறிய கணவாய் வழியாக முல்லைப் பெரியாறு தேக்கும் நீர் தேக்கடியில் சேருகிறது. பின் அங்கிருந்து 5000 அடிகள் நீளத்திற்கு மலையினுள் குடையப்பட்ட நீர்வழி வழியாக தமிழ்நாட்டின் சுருளியாற்றில் நீர் வந்து சேர்கிறது. வைகை அணை இந்நீரைத் தேக்குகிறது. தேக்கடி இருக்கும் உயரத்திலிருந்து நீர் திருப்பிவிடுவது மிக எளிது என்பதால் இது கைகூடியுள்ளது. பிரிட்டிஷ் காலத்துக்குப் பின் இவ்வணை கேரள வரம்பிற்குள் இருந்தாலும் ஒப்பந்தப்படி தமிழக அரசால் இன்றும் பராமரிக்கப்படுகிறது.
வைகை நதிக்கு திருப்பிவிடப்பட்ட முல்லைப் பெரியாறு தண்ணீரால் மதுரை, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, போன்ற மாவட்டங்களில் உள்ள 2 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களும், 10 லட்சம் விவசாயிகளும் பயன் பெறுகிறார்கள். சுமார் 60 லட்சம் பேருக்கு குடிநீரும் கிடைக்கிறது. இம்மாவட்டங்களில் உள்ள அனைத்து தண்ணீர் தேவைகளும் இத்தண்ணீரால் தீர்கின்றன.
ஆனால் துரதிர்ஷடவசமாக மலையாளிகளின் நோக்கம் முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதாகவே இருக்கிறது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 125 வருடங்களாகிறது. இது கட்டப்பட்ட போது சுண்ணாம்பு மற்றும் ஜல்லிகளால் குழைத்து கட்டப்பட்டது. 50 வருடங்கள் தான் இந்த அணை தாங்கும். எனவே இதை இடித்துவிட்டு வேறு அணையை கொஞ்சம் கீழே கட்டவேண்டும் என்று. இது உண்மையல்ல. உலகெங்கும் மிகப் பழைய அணைகள் காலாகாலமாக இன்னும் நீர் தேக்கியபடி நிற்கின்றன. நம் ஊர் கல்லணை கூட சுமார் ஆயிரம் ஆண்டுகளாக தற்போதைய தொழில் நுட்ப அறிவால் வலுவாக்கப்பட்டு உறுதியாக நிற்கிறது. எந்தக் கட்டிடமும் தொடர்ந்த பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப வலுவூட்டல்களாலேயே காலம் காலமாக நிற்கும். இது தான் யதார்த்தம்.
இன்னொரு அணைகட்டச் சொல்லும் கேரளாவின் பின்னாலிருக்கும் நயவஞ்சகம் என்னவென்றால் முல்லைப் பெரியாறிலிருந்து வைகை அணைக்கு தண்ணீர் திருப்ப பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட கணவாய் புது அணையை விட உயரத்திலிருக்கிறது. இவர்கள் சொல்லும் மாற்று இடத்தில் முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே அணையைக் கட்டினால் நீரை தேக்கடியில் தேக்கி வைத்து, வைகை அணைக்கு கொண்டு வரவே இயலாது. முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட்டால் அதிலிருந்து வருடத்தில் பெரும்பாலான மாதங்களில் தண்ணீர் பெறும் தமிழ்நாட்டின் 10 லட்சம் விவசாயிகள் வாழ்வாதாரம் பாழாய் போகும். மேலும் இவர்கள் கட்டுவதாகச் சொல்லும் புது அணையை முழுக்க முழுக்க மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப் போவதால் தண்ணீர் தேங்கவே தேங்காது. முழுதும் திறந்து விடப்படும். அப்போது தான் மின்சாரம் தயாரிக்கமுடியும். போதாததற்கு நீரை ஆற்றின் போக்கில் கீழே சமதளத்தில் தேக்க ஏற்கனவே இடுக்கி அணையை கட்டிவிட்டார்கள்.
இடுக்கி அணை முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 50 கி.மீ கீழே 1973ல் கட்டப்பட்டது. இதுதான் ஆசியாவிலேயே பெரிய வளைவு அணை’(Arch Dam). முல்லைப் பெரியாரைப் போல் 7 மடங்கு பெரிது இடுக்கி அணை. 70 டி.எம்.சி கொள்ளளவு. முல்லைப் பெரியாரின் கொள்ளளவோ 16 டி.எம்.சி மட்டுமே. அதிலும் 10 டி.எம்.சி தண்ணீரைத் தான் பாசனத்திற்கு திறந்துவிட முடியும்.
இடுக்கி அணையின் கொள்ளளவு மிக மிக அதிகம் ஆதலால் அணை நிரம்பவில்லை. எனவே முல்லைப் பெரியாறு அணை ரொம்ப வீக், அங்கு நிலநடுக்கம் வந்தது என்று பத்திரிக்கைகள் மூலம் புரளி கிளப்ப ஆரம்பித்தது கேரள அரசு. இப்பிரச்சனையில் இந்திய நீர்வள ஆணையம் தலையிட்டு ஆய்ந்து பரிந்துரை செய்ததன்படி முல்லைப் பெரியாறு அணையை 18 கோடி ரூபாயில் தமிழ்நாடு அரசு பலப்படுத்தியது.

பெரியாற்றில் செல்லும் மொத்த நீர் சுமார் 5 ஆயிரம் மில்லியன் கனமீட்டர்கள். இதில் கேரளாவிற்கு விவசாயம், தொழில், குடிநீர் அனைத்திற்கும் 2021ல் தேவை எப்படியிருக்கும் என்று பார்த்தால் கூட 2300 மில்லியன் கனமீட்டர்கள் தான். மீதித் தண்ணீர் அனைத்தும் (சுமார் 2 ஆயிரம் மி.க.மீ நீர்) கடலில் வீணாகக் கலக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்கி தமிழ்நாட்டிற்கு கொடுத்தால் கூட வெறும் 126 மி.க.மீட்டர் தான் வரும். இதைத் தரக் கூட மனமில்லாததுதான் கேரளா. இத்தனைக்கும் கேரளாவிற்கு 700 டன் அரிசி மற்றும் இதர உணவுப் பொருட்கள் தமிழ்நாட்டிலிருந்து தான் செல்கிறது.

 
தமிழ்நாடு அரசு 1981 முதல் 1994 வரை அணையை பலப்படுத்தும் வேலைகளை செய்தது. அணைக்கு 12 ஆயிரம் டன் எடையுள்ள கான்கிரீட் தொப்பி(cap), கேபிள் ஆங்கரிங் என்கிற முறை மூலம் அணையின் உட்புறம் போடப்பட்ட கான்க்ரீட் கம்பிவடங்கள், தாங்கு அணையை வெளிப்புறம் மேலும் கான்க்ரீட் போட்டு உறுதிப்படுத்தல் போன்ற வேலைகள் செய்து அணை மிகப் பலமாய் ஆக்கப்பட்டது. இதைத் தவிர முல்லைப் பெரியாறு அணையுடன் கூடிய பேபி டேம் எனப்படும் சிறிய அணையையும் தமிழ்நாடு அரசு பலப்படுத்த ஆரம்பித்தது. இது நடந்தால் சுப்ரீம் கோர்ட் சொன்னபடி பழையபடி அணையில் 152 அடி நீர் தேக்கிக் கொள்ளலாம் என்கிற நிலை. உடனே கேரள அரசு வேலை செய்யவந்த தமிழக அதிகாரிகள் மேல் வழக்குகள் போட்டு வேலையை நடத்த விடாமல் செய்தது.
இரு அரசுகளும் கோர்ட்டுக்குப் போனதில் கோர்ட் நியமித்த நிபுணர் குழு 2000ஆம் ஆண்டு மீண்டும் அணையை சோதித்தது. அதன் அறிக்கையை வைத்து நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு அணையின் நீர் மட்டத்தை 146 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணையை தடையின்றி பலப்படுத்தவும் தீர்ப்பு வழங்கியது.
இப்போது 2011ல் மீண்டும் இணையதளம், சினிமா, கிராபிக்ஸ், பத்திரிக்கை, மியூசிக் ஆல்பம் என்று பல விதங்களில் முல்லைப் பெரியாறு பற்றி கேரள மக்களிடையே பீதியைக் கிளப்புகிறது கேரள அரசு. தமிழக ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் தங்களது கேரள அணி கேரளா பக்கம் நின்று பேசுவதும், தமிழ்நாட்டு அணி தமிழ்நாட்டுக்கு ஆதரவாகப் பேசுவதாகவும் இரட்டை வேடம் போடுகின்றன. காங்கிரஸ், பா.ஜனதா, இவற்றுடன் சி.பி.எம் கம்யூனிஸ்ட் கட்சியும் இதில் அடக்கம்.

சென்ற நான்கு தினங்களாக கட்சிகளை நம்பாமல் மக்கள் தேனி, கம்பம், பகுதி மக்கள் தாங்களாகவே கிளர்ந்தெழுந்து லட்சம் பேர் திரண்டு முல்லைப் பெரியாறு நோக்கிப் படையெடுக்க கேரள அரசு ஸ்தம்பித்தது. தடியடி நடத்தி காவல் துறை மக்களை விரட்டியது. இன்று லேட்டாக நம்ப விஜயகாந்தும், மு.க.ஸ்டாலினும் பேரணி நடத்துகிறார்கள் கண்துடைப்புக்கு. அம்மாதான் அரசு என்பதால் அம்மா நோட்டீஸ் விட்டு கோர்ட்டு பக்கம் நமக்கு வரும் ஞாயத்தை அடக்கமாகப் பேசுகிறார். மக்கள் தன்னிச்சையாக கிளர்ந்தெழ ஆரம்பித்துவிட்டார்கள் என்பது மகிழ்ச்சி தரும் விஷயம். எந்தக் கட்சியும் நியாயமாகவும், மனசாட்சியோடும் இல்லாமல் பூசிமெழுகினால் அவர்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்பதையும் கட்சிகள் புரிந்துகொள்ள இது உதவும். சுப்ரீம் கோர்ட் வேறு முல்லைப் பெரியாறு அணையை 120 அடிதான் தேக்கவேண்டும் என்கிற கேரளாவின் கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது நேற்று. 
  
தமிழர்களாகிய நாம் இவ்விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. ஒன்று படுவோம். அநீதியை தட்டிக் கேட்போம். இதில் தமிழன், மலையாளி என்கிற பாகுபாடு தவிக்க இயலாமல் பேசப்பட்டே ஆகவேண்டும். ஒன்றாக இணக்கமாக வாழும் எண்ணம் இருக்கும் பட்சத்தில் நாம் வேறுவேறாக இருந்தாலும் சகோதரத்துவத்துடன் பழகுவோம். ஆனால் அது இல்லாத பட்சத்தில் அந்த வேறுபாடும் பேசப்பட்டே ஆகவேண்டும்.
பின்வரும் வீடியோ முல்லைப் பெரியாறு அணைபற்றி தமிழக சிவில் இன்ஜினியர்கள் அமைப்பு உருவாக்கியுள்ள ஆவணப்படம்.

குடி: கெளடில்யன் முதல் டாஸ்மாக் வரை

குடி: கெளடில்யன் முதல் டாஸ்மாக் வரை
06-டிசம்-2011
”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”
கேட்க ரொம்பப் புரட்சியாய் தெரியும் இந்த வாசகம் எதற்குத் தெரியுமா ? மஹாராஷ்ட்ராவும் டில்லியும் தங்கள் மாநிலத்தில் குடிப்பவர்களின் வயது 25 என்று ஆக்கிவிட்டதை எதிர்த்துத்தான் இந்தப் புரட்சி வாசகம். வாசகத்தை வழங்கியது நம்ப டைம்ஸ் ஆப் இண்டியா(அமெரிக்கா?)’. இது தான் கார்ப்பரேட்கள் இன்றைய இளைஞர்களுக்கு வழங்கும் சுதந்திரப் பார்வை. தண்ணியடிக்கிறது ஏன் இஷ்டம். நீ (கவர்மெண்ட் தான்) யார் அதைக் கேக்குறது ?’
குடித்துவிட்டு மன்மோகனை மானாவாரியாகத் திட்டினாலும் மெளனமாகக் கடந்து செல்லும் அதே காவல்துறை, நான்கு பேர் சேர்ந்து குடிக்காமல் ஸ்டெடியாக ரோட்டில் நின்று வால்மார்ட்டுக்கு வால்பிடிக்கும் மன்மோகன் என்றால் நம்மைப் பிடித்து ஒரு பத்து நாள் உள்ளே வைப்பார்கள். ஏன் இந்த வித்தியாசம் ?
குடித்திருப்பவன் பலமற்றவன். தனது இயலாமையை மறக்க அவன் குடிக்கிறான். இயலாமையை மறைக்க அவன் ப.சி முதல் பக்கத்துவீட்டு பால்காரன் வரை திட்டுகிறான். அதனால் ப.சிக்கும் பங்கமில்லை, பால்காரனுக்கும் உபத்திரவம் இல்லை.
மக்கள் ஒன்றும் செய்ய இயலாதவர்களாக இருப்பது அரசுக்கு நல்லது. அப்போது தான் அதை நீங்கள் எதிர்த்துக் கேள்வி எழுப்ப மாட்டீர்கள்; போராட விரும்ப மாட்டீர்கள். பெட்ரோல் விலையை என்ன பெட்ரோமாக்ஸ் விலை பத்தாயிரம் ரூபாய் என்றாலும் பேசாமல் வாங்கிப் போவீர்களா இல்லையா ? குவார்ட்டர் கிடைத்தால் பத்தாதா ? வேறென்ன வேண்டும் ?
விடுதலை டவுசர், அறிவுக் கொழுந்து, பகுத்தறிவுப் புலி, சுதந்திரமான சுப்பாண்டி என்கிற பெயர்களாலும் படித்த, அறிவுள்ள ஆண்களும், பெண்களும் குடிக்கின்றனர். என்னிக்காவது குடிச்சால் பரவாயில்லை. என்னிக்குமே குடிப்பவர்களாக இருந்தா என்ன பண்றது. செத்த அன்னிக்கு பீர் ஊத்த வேண்டியதுதான்.
அரசே ஏற்று நடத்தி மக்களை நாசமாவும் ஆக்கி காசும் பார்க்கும் இந்தக் குடி அடிமை டெக்னிக் ஒன்றும் புதியதல்ல. சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம் தான் இவர்களுக்கு கைடு(Guide).
அதிகமாக குடிப்பதை தண்டனைக்குரிய குற்றமாகவும், அதனை கண்காணிக்கசுராதயக் ஷாஎன ஒரு கண்காணிப்பாளரையும் அவருக்குகீழ் அதயாக் ஷாஎனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைத்து குடி குறித்த கண்காணிப்பு வலையை விரிக்க வேண்டும் என்கிறான். மதுபானங்களை வடித்தெடுத்து அதனை நாடெங்கிலும் வணிகம் செய்யும் உரிமை அரசுக்கு மட்டுமே உண்டு என மது வணிகத்தை அரசுடைமையாக்கினான். அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கும் பணி, மேலே சொன்ன குழுவுக்கு உரியது. இக்குழு சமுகமெங்கும் கண்காணித்து மது குடிப்பதை ஒழுங்கமைக்க வேண்டும். மது அருந்தும் உயர்குடியினர் (nobels) கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். மது அருந்துவதற்கு என அரசு கட்டியுள்ள கட்டிடங்களில் மட்டுமே மது அருந்த வேண்டும். குறிப்பிட்ட விழாக்காலங்களில் மது காய்ச்சவும் குடிக்கவும் தடை விதிக்க வேண்டும். ஆனால், அந்நாட்களில் வீடுகளில் குடிக்கலாம்…” – இது அர்த்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட குடி நெறிமுறைகள்.
சோழர்கள் காலத்தில் குடிப்பவர்களிடமிருந்து பூச்சி வரி வசூலிக்கப்பட்டது.
1793-94 ல் தஞ்சை மாவட்டத்தில் ஆங்கிலேய அதிகாரிகளால் வசூலிக்கப்பட்ட கள் வரி 1088 ரூபாய்(700 சக்கமா).
1859ல் பூனாவின் பெரிய சாராய தாதாவான துபாஷ் ஆங்கிலேய அரசு நம் மக்களிடம் விற்பதற்காக 10 ஆயிரம் பேரை வைத்து சாராயம் காய்ச்ச ஆரம்பித்தான்.
1898ல் ஸ்காட்லாண்டைச் சேர்ந்த மெக்டொவல்ஸ் தென்னிந்தியாவில் சரக்கு தயாரிக்க ஆலையை நிறுவியது.
1902-03 ல் அதே தஞ்சை மாவட்டத்தில் கள் வரியாக கிடைத்தது 9,28,000 ரூபாய்.
2010-11 களில் தமிழ்நாட்டில் டாஸ்மாக்கின் குடியால் வந்த வருமானம் 14,965 கோடி ரூபாய்.
2011 – 12-ல் 2 ஆயிரம் இலட்சம் பீர் பெட்டிகளும், 1,100 இலட்சம் விஸ்கி பெட்டிகளும், 540 இலட்சம் ரம் பெட்டிகளும், 280 இலட்சம் பிராந்தி பெட்டிகளும், 20 இலட்சம் வோட்கா பெட்டிகளும், 60 இலட்சம் ஜின் பெட்டிகளும் இந்தியாவில் விற்கும் என கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு பெட்டியில் 48 ‘குவார்ட்டர்அல்லது 24 ‘ஆஃப்அல்லது 12 ‘ஃபுல்இருக்கலாம்.
இந்தியாவில் இப்போது 35 கோடிப் பேர் குடிகாரர்கள்.
நாம ஸ்..ஷ்..டெடியாத் தான் போய்க்கிட்டு இருக்கோம்.
மேலும் தெளிய படியுங்கள்... http://www.vinavu.com/2011/11/19/drunk/