Showing posts with label அணு உலை. Show all posts
Showing posts with label அணு உலை. Show all posts

Friday, September 21, 2012

கூடங்குளம்: சி.பி.எம்மின் புரட்சி! அறிஞர் அ.மார்க்ஸின் மகிழ்ச்சி!!

சி.பி.எம்-மின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் “இறக்குமதி அணு உலைகள் ஆகாது பாதுகாப்பில் சமரசம் கூடாது” என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். முதலில் இந்தக்கட்டுரையை அவர் ஏன் எழுதினார்? கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஆதரிக்கும் சி.பி.எம் கட்சி மராட்டிய மாநிலம் ஜெய்தாப்பூர் திட்டத்தை மட்டும்  ஏன் எதிர்க்கிறது என்ற கேள்விக்குத்தான் இந்த பதில். அதாவது சி.பி.எம்மின் இரட்டை வேடத்தை அல்லது டபுள் ஆக்டிங் சரிதான் என்பதே காரத்தின் பதில்.

காரத் எழுதிய இந்த வழா வழா கொழா கொழா கட்டுரையின் சாரம் என்ன? அல்லது ஏற்கனவே சி.பி.எம் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை இந்தக் கட்டுரை மறுக்கின்றதா அல்லது ஆதரிக்கின்றதா? நிச்சயமாக ஆதரிக்கவே செய்கிறது.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த்திற்கு முன்பேயே ரசியாவிடமிருந்து இரண்டு அணு உலைகள் வாங்கப்பட்டு 15,000 கோடி ரூபாய் செலவில் கூடங்குளத்தில் கட்டப்பட்டு விட்டதால் அதை மூடுவது சாத்தியமானது அல்ல என்பதோடு நாட்டு நலனிற்கும் உகந்தது இல்லையாம்.

இதைத் தவிர்த்த மற்ற அணு உலைகள் அமெரிக்க ஒப்பந்தத்திற்கு பிறகு வந்தவையாம். இந்திய சுதேசி அணு உலைகளை விட இவை மிகுந்த செலவு பிடிப்பவையாம். அதனால் அமெரிக்க, ஐரோப்பாவிலிருந்து இறக்குமடி செய்யப்பட்ட அணு உலைகளை சி.பி.எம் கட்சி எதிர்க்கிறதாம். சரி, இதன்படி இந்த ஐரோப்பாவின் மேப்பில் ரசியா வராது போலும். மேலும் இத்தகைய அணு உலைகளின் பாதுகாப்பும் பிரச்சினையாம். அதாவது ஒரு இடத்தில் இரண்டு உலைகள் இருந்தால் பிரச்சினை அல்ல, நான்கு, ஆறு என்று இருந்தால் பிரச்சினை என்பதை காரத் சுற்றி வளைத்து கூறுகிறார். இதற்கு ஆதாரமாய் புகுஷிமா வில் ஆறு உலைகள் இருந்ததை காரத் கண்டுபிடித்துக் கூறுகிறார்.

புகுஷிமா விபத்திற்குப் பிறகு அணு உலைகள் குறித்த மக்களின் அச்சம் அதிகரித்திருக்கிறதாம். இதை நிவர்த்தி செய்யுமாறு சுயேச்சையான நிபுணர்கள் அடங்கிய கமிட்டி ஆய்வு செய்து அறிக்கையை மக்கள் முன் வைக்க வேண்டுமாம். பாதுகாப்பு தொடர்பான அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தில் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை அரசு தெளிவு படுத்தி அதையும் மக்கள் முன் வைக்க வேண்டுமாம்.

அணுமின் நிலையங்களை ஆதரிக்கும் அப்துல் கலாம் உள்ளிட்டு பலரும் காரத் பேசுவதைப் போலத்தான் பேசுகின்றனர். மக்களின் அச்சத்தை போக்குவது என்ற போர்வையில்தான் கூடங்குளம் அணுமின்நிலைய அனுமதியும், துவக்கமும் தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது. இதையெல்லாம் செய்து விட்டால் அணுமின்நிலையங்களை சேமமாக நடத்திக் கொள்ளலாம் என்பதுதான் காரத் மற்றும் அவரது கட்சியின் நிலைப்பாடு.

தந்திரமான மொழியிலும், விவாதத்திலும் மறைந்து கொண்டாலும் காரத்தின் சந்தர்ப்பவாதம் இங்கே பட்டவர்த்தனமாக காட்டிக் கொள்ளவே செய்கிறது. இந்தியாவின் தரகு முதலாளிகள் மற்றும் அவர்களது பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காகவே இங்கு அணுமின்நிலையங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதில் அமெரிக்கா முதல் ஆதாயம் அடைகிறது என்றால் பிரான்ஸ், ரசியா அடுத்தடுத்து ஆதாயம் அடைகின்றன. இதில் ஒன்றை எதிர்த்து விட்டு பிறிதொன்றை ஆதரிப்பது என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

மேலும் ஏகாதிபத்தியங்களின் சுரண்டலை மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் என்று என்.ஜி.ஓ மொழியில் விளக்கமளிப்பது சி.பி.எம்மின் மறைமுக ஆளும் வர்க்க சேவையையே குறிக்கிறது. ஒரு வேளை போராடும் மக்கள் அப்படித்தான் அதை புரிந்து கொண்டு எதிர்த்தாலும் அதை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்துக் கொண்டு செல்வது நமது  கடமை. மேலும் கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்ப்பது என்பது இந்திய அரசையே எதிர்ப்பதாக கருதப்பட்டு அங்கு அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதை ஒரு பகுதியின் பொருளாதார பிரச்சினையாக சுருக்கி பார்ப்பதன் மூலம் சி.பி.எம் கட்சி தனது மறைமுக இந்திய முதலாளிகளது சேவையை தொடர்கிறது.

அடுத்து கூடங்குளம் திட்டம் அமெரிக்க ஒப்பந்தத்திற்கு முன்பேயே வந்தாலும் அது முற்றிலும் தற்போதைய அமெரிக்க ஒப்பந்த்தத்தின் ஷரத்துக்களின் படியே அமல்படுத்தப்படுகிறது. அதில் முக்கியமானது விபத்து ஏற்பட்டால் அணுஉலைகளை அளித்த நாடுகள் நிவாரணம் வழங்கத் தேவையில்லை என்பது. இதை காரத் குறிப்பிட்டாலும் பெரிய மனதுடன் இரண்டு உலைகளை அங்கே செயல்படலாம் என்று அனுமதிக்கிறார். அங்கு கூடுதலாக வரும் இரண்டு உலைகளை மட்டும் அவரது கட்சி எதிர்க்குமாம்.

கூடங்குளம் மக்கள் போராட்டம் வெற்றி பெற்றால் அது இதர அணு உலை எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்குமென்பதால்தான் இந்திய அரசு இரும்புக் கரம் கொண்டு அதை அடக்க முனைகிறது. இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு கூட காரத்திற்கு அறிவு இல்லை என்பதல்ல, அவரது சந்தர்ப்பவாதம் இங்கே உண்மைகளை கொன்று விடுகிறது.

இதற்கு மேல் நிறைய செலவு செய்து விட்டார்கள் என்று கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஆதரிப்பதை இப்படியும் சொல்லலாம். அதாவது முதலாளித்துவம் இதுவரை செலவழித்து உருவாக்கியிருக்கும் பல கோடி பில்லியன் டாலர் பொருளாதாரத்தை கைப்பற்றி சோசலிச சமூகத்தை படைக்கும் புரட்சி கூட நாட்டு நலனுக்கு உகந்தது அல்லதான். அதனால்தான் சி.பி.எம் கட்சி புரட்சியிலிருந்து விலகி மனமகிழ் மன்றமாக மாறிவிட்டது போலும்.

அதே நேரம் காரத்தின் இந்தக் கட்டுரை அறிஞர் அ.மார்க்சை குஷிப்படுத்தியிருக்கிறது. முகநூலில் இது குறித்து விரிவாக எழுதியிருக்கும் அ.மா அதில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

   

 ” மக்கள் திரளைச் சார்ந்து இயங்கும் ஒரு கட்சி இப்படியான ஒரு கருத்தியல் மாற்றத்தையும், அதனடிப்படையில் ஒரு நிலைபாட்டு மாற்றத்தையும் மேற்கொள்வது கேலிக்குரியதோ, இழிவானதோ அல்ல. மக்களைத் திரட்டுவது குறித்துக் கவலை இல்லாத இரும்புக் கொள்கையர்களுக்கு வேண்டுமானால் தாங்கள் கொள்கை மாற்றம் இல்லாமல் என்றோ உருவாக்கப்பட்ட பழைய திட்டத்தின் அடிப்படையில்  கறாராகச் செயல்படுவது பெருமையாக இருக்கலாம். இந்த அடிப்படையில் காரட்டின் கட்டுரையினூடாக வெளிப்படும் அணுகல் முறை மாற்றம் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, தனி மனித ஆர்வங்கள், சுற்றுச் சூழல் இயக்கங்கள், சிறு கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் துணையுடனேயே இதுவரை நடைபெற்று வந்த அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களில் இந்தியாவின் முக்கிய இடதுசாரி அமைப்பான மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு ஒரு பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் நம்பலாம்.”

இந்தக்கட்டுரை சி.பி.எம்மிடம் எந்த நிலைப்பாட்டு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பதே காரத்தே ஒத்துக் கொண்டாலும் அறிஞர் அ.மா மறுப்பார் போலும். நிலவுகின்ற சமூக அமைப்பை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக் கொண்டு சீர்திருத்தம் கோரும் ஒரு நிலையை மாபெரும் புரட்சி என்று சித்தரிக்கும் அளவு அறிஞரின் காமன்சென்ஸ் குறுகிவிட்டது. அணு மின்சாரம் தவிர்த்த மாற்று எரி சக்தி திட்டங்களை மையமாகக் கொள்ள வேண்டும் என்று காரத் கூறயிருப்பதெல்லாம் அ.மாவுக்கு மாபெரும் கலக குரலாக தென்படுகிறது. இதைத்தான் டிராபிக் ராமசாமி முதல் சூரிய விளக்கிற்காக என்.டி.டி.வியுடன் கூட்டணி அமைத்து செயல்படும் பிரியங்கா சோப்ரா, ஷாருக்கான் வரை பலரும் சலிப்பூட்டும் விதத்தில் சொல்கிறார்கள். அதன்படி அவர்களையும் புரட்சிக்காரர்களாக அ.மா ஏற்றுக்கொள்வார் என்று நம்புவோம்.

மக்களை அணிதிரட்டும் கவலை இல்லாத இரும்புக் கொள்கையர்கள் மட்டும் இது போல ஏதாதாவது கூவிக் கொண்டிருப்பார்கள் என்று கூறுகிறார் அ.மா. இதைத்தான் கருணாநிதி பலமுறை ஈழம் குறித்து சொல்லியிருக்கிறார். அதாவது ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியும், ஆட்சியில் இருக்கும் போது எச்சரிக்கையாகத்தான் செயல்பட முடியும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட முடியாது…. இதெல்லாம் கூட அ.மாவின் இந்த இரும்பு இலக்கணத்தில் கண்டிப்பாக வரும். ஒரு பிரச்சினைக்கு இறுதித் தீர்வு என்ன என்பதும் அதை நோக்கியே தற்கால போராட்டங்கள் இருக்க வேண்டும் என்பதும் புரட்சி குறித்து ஒரு கம்யூனிஸ்ட்டு கட்சி அறிய வேண்டிய அடிப்படைப் பாடம். அதாவது புரட்சிக்காகத்தான் மக்களை திரட்டுகிறோமே அன்றி மக்கள் எதற்காகவாவது திரண்டு விட்டால் அது புரட்சி அல்ல. ஆனால் அ.மா இரண்டாவதைத்தான் புரட்சி என்று நம்புவதால் அதை அதற்கு உரிய சி.பி.எம்மிற்கும் விருதாக அளித்து மகிழ்கிறார்.

அணுமின்நிலையத்தை சுற்றுசூழல் பிரச்சினையாக மட்டும் பார்ப்பது என்பது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உத்தி. சி.பி.எம் அதையும் பேசிக் கொண்டு அமெரிக்க எதிர்ப்பு என்பதாகவும் நாடகம் ஆடுகிறது. உள்நாட்டு உலை பாதுகாப்பானது, வெளிநாட்டு உலை ஆபத்தானது என்ற காரத்தின் அபத்தத்தை சுட்டிக்காட்டும் அ.மா அதன் அரசியல் சந்தர்ப்பவாதத்தை புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் எப்படியும் புரட்சி வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் போது ஒரு அறிவாளியின் நடவடிக்கையில் சந்தர்ப்பவாதம் மட்டும்தானே மையமாக இருக்க முடியும்? ஆனாலும் இது ஒரு நாசுக்கான, நாகரீகமான முறையில் வெளிப்படும் என்று அறிஞர் அ.மார்க்ஸ் நம்பிக் கொண்டிருந்தால் அவருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

 

--நன்றி. வினவு இணையதளம்(http://www.vinavu.com).

தொடர்புடைய சுட்டிகள்

Thursday, March 22, 2012

கூடங்குளம் மக்கள் நடத்தும் அநியாயமான(?!) போராட்டம்..

நமது பாரதப் பிரதமர் புரட்சி சிங், முப்பெரும் டாக்டர் பட்டம் பெற்ற அண்ணல் மன்மோகன் சிங் ஜி சொல்லியும் கேளாமல்...

நமது புரட்சித் தலைவி, அம்மா, சங்கரன் கோவிலில் அமோக வெற்றி பெற்ற புரட்சி நாயகி, போன மாதம் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாகவும் பின்பு ஒரே மாதத்தில் பெங்களூர் கோர்ட் வழக்கில் வாய்தா கெடு தீர்வதற்குள் கூடங்குளம் மக்களுக்கு ஆப்பு கொடுக்கவும் மாபெரும் தமிழ் நாடு சட்டசபையில் தீர்மானம் போட்டுச் சொல்லியும் கேளாமல்..

அண்ணல் சூப்பர் ஸ்டார்  அப்துல்கலாம் அவர்கள் சூறாவளிச் சுற்றுப்பயணம் அணு உலைக்குள் நடத்தி, வெளிவந்து வாசலில் நின்றபடியே தயாரித்து அளித்த நாற்பது பக்க 'பாதுகாப்பானது உலை' என்கிற இன்ஸ்டென்ட் காபி, இன்ஸ்டென்ட் டீ போன்ற சூடான மணமான இன்ஸ்டன்ட் அறிக்கையைப் படித்தும் திருந்தாமல்...

அதற்குப் பின் மத்திய அரசின் ஐயாவும், மாநில அரசின் அம்மாவும் அனுப்பிய அணு உலையை கடனுக்கு சுற்றிப் பார்க்கும் குழுவின் அறிக்கையையும் மதிக்காமல்..

இன்று அம்மா கருணை கூர்ந்து அனுப்பியுள்ள, 10 ஆயிரம் போலீசார் மற்றும் ராணுவம் ஆகியவை துப்பாக்கி சகிதம் கூடங்குளம் ரோடுகளில் எல்லையில் நடப்பது போல் 'பரேட்' நடந்து காட்டியும், அஞ்சாமல்...

இப்படி...











உண்ணாவிரதம் இருந்து போராடுவது எவ்வளவு அநியாயம்..?

மக்களே ! நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.. உங்களில் பத்து பேரையாவது கவர்மென்ட் சுட்டாகனுமா இல்லையா ? அப்போதானே  செத்தவனுக்கு நஷ்ட ஈடு, கோர்ட், கேசுன்னு பிரச்சனையை திசை திருப்பி சத்தமில்லாமல் அணு உலையை முதலாளிங்க திறந்து பிசுனஸ் ஸ்டார்ட் பண்ண முடியும்.

கரண்ட்.. கட்.. கரண்ட்.. கட்ன்னுட்டு எல்லாரையும் பழி வாங்கி... ஏதோ கூடங்குளம் வந்தவுடனே உங்களுக்கெல்லாம் 25 பைசாவுக்கு ப்ரீயா கரண்ட் தரப்போற மாதிரி பீலா உட்ற அம்மாவும், ஐயாவும்... இவ்வளவு கரண்ட் கட் நாடு பூரா வந்தப்ப.. 8 மணி நேரம்... 12 மணி நேரம்னுட்டு சிறு தொழில்களும், மக்களும் ராத்திரிப் பகல்ன்னு கரண்ட் இல்லாம கஷ்டப்பட்டப்போ.. ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோனுகளுக்கு மட்டும் ஒரு செகண்ட்ன்னா.. ஒரே செகண்ட் கூட கரண்ட் கட்டே பண்ணாம 24 மணி நேரமும் கரண்ட் விட்டுட்டு இருக்கிற ரகசியம் என்னாங்க ?  கூடங்குளம் மாதிரி அவியளுக்கு மட்டும் ரகசியமா ஒரு மாடங்குளம் திறந்திருக்கீகளோ ?

கூடங்குளம் மக்களுக்கு இரண்டு நாட்களாக மின்சாரம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. பால், குடிநீர், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. எதற்கு ? அவுங்க தான் உண்ணாவிரதம் இருக்காங்களே.. எதுக்கு இதெல்லாம் அவுங்களுக்குன்னுட்டு கவர்மென்ட் நினைச்சிட்டாங்க போல..

உதயகுமார் அமெரிக்காவோட ஆதரவுல போராட்டம் பண்றார்ன்னுட்டு கூசாம சொல்ற பிரதமர் ஐயா.. நீங்க போட்ட மிகப் பெரிய அணு உலை ஒப்பந்தம்  1..2.. 3 அது ஏதோ 50 லட்சம் கோடியாமே.. ரஷ்யா கூட போட்ட இந்த ஒப்பந்தமெல்லாம் அமெரிக்கா போட்ட ஒப்பந்தத்துக்கு கால் தூசி அளவு பணமாமே... அப்போ உதயகுமார் போராடினா... இந்த அணு உலை நின்னா...பின்னால எல்லா அணு உலையும் நின்னு போகுமில்லையா.. இதனால் எதிர்காலத்துல யாருக்கு பெரிய ஆப்பு...? அமெரிக்காவுக்கா..? ரஷ்யாவுக்கா..? கம்யூனிஸ்ட்டு தோழர்களே வழக்கம் போல 'அமைதி'க்கு வேண்டுகோள் வெச்சுட்டு அமைதியாயிட்டீங்க.. இனி உங்க பாஸ் மிச்சத்தை பாத்துக்குவாருன்னா..?

நம்ம தினமலம்.. போன்ற பத்திரிக்கைகளெல்லாம்.. வரிஞ்சுகட்டிட்டு அணு உலை வேணும்.. இடிந்த கரை மக்கள் ரவுடிகள்னு.. எழுதறத படிச்சா நமக்கு என்ன தோணும்?

இது அநியாயமான போராட்டம்னு தானே..
 கூடங்குளத்துக்கு வெளியே இருக்கும் மக்களே.. நீங்க யோசியுங்க.. யாரையாவது கவர்மெண்ட் சுட்டு  பலி எடுக்கிறதுக்குள்ள யோசியுங்க..

சற்று முன் உதயகுமாரிடன் பேசினோம்,,,, அங்கு மக்கள் கடல் மார்க்கமாக
குவிந்து கொண்டு இருக்கிறார்கள்... குழந்தைகளுக்கு தேவையான எதுவும்
சென்று சேரவில்லை... தண்ணீர் தடுக்கப்பட்டு இருக்கிறது.. கழிவறைகள்
மூலமாக சுகாதார கேடு வெகு சீக்கிரமாக பரவும் ஆபத்து அதிகமாக இருக்கிறது..
கிட்ட தட்ட 10000 மக்கள் 3 நாட்களாக ஒரு இடத்தில் குவிந்து
இருப்பதால்சுகாதார கேடுகள் மோசமடையும் என்று கவலை தெரிவித்தார்..
மருத்தவமனை இருக்கிறது, மருத்துவர்கள் இல்லை, மருந்துகள்
இல்லை...ஊடகங்கள் வட இந்திய ஊடகங்கள் மட்டுமே உள்ளே வந்து இருக்கின்றன...” என்றார்..... தமிழ் நாட்டு ஊடகங்கள் வாய் திறக்க மறுக்கின்றன. தோழர்களே அடுத்த முள்ளிவாய்க்கால் இது...

கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.!
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மொத்த மின் உற்பத்தி
மொத்த நிறுவுதிறன் - 1000 Mw
உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் - 450 Mw (only 45% output)
இதில் தமிழகத்தின் பங்கீடு / ஒதுக்கீடு - 157 Mw (only 35% for TN)
இந்த மின்சாரம் நம்மை வந்தடையும் போது நமக்கு கிடைக்கும் மின்சாரம் 25% இழப்பு போக - 117 Mw
இந்த 117 மெகாவாட் மின்சாரத்தைக் கொண்டு தமிழகத்தின் ஒட்டு மொத்த பற்றாக்குறையும் சரி செய்ய முடியும், என்று நீங்கள் நம்பினால்
நாங்கள் அல்ல முட்டாள்கள்!!
போராடுவது மனித இனத்தைக் காக்கவே அன்றி.! ஆதாயத்துக்காக அல்ல..! உனக்கும் எனக்குமான போராட்டம் தான் இது...

Saturday, December 24, 2011

கூடங்குளம். அணு உலை. சில விவரங்கள்.

கூடங்குளம். அணு உலை. சில விவரங்கள்.
07-டிசம்-2011
நியூஸ் பேப்பர்ல டெய்லி கூடங்குளம் போரட்டம், அணு உலை பாதுகாப்பானது என்று மன்மோகன் சிங் விளக்கம், அப்துல்கலாம் அவர்களின் நேரடி ஆய்வு, மக்களின் தொடர் உண்ணாவிரதம் என்று பார்த்திருப்பீர்களே.. உங்களுக்காக கொஞ்சம் கூடங்குளம் அணு உலை பற்றிய விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
கூடங்குளம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் அருகே உள்ள ஊர்.
1988ல் ராஜீவ் காந்தி ரஷ்யாவுடன் உடன்படிக்கை செய்து கூடங்குளத்தில் அணுஉலைகள் அமைப்பது என்று முடிவானது.
நடுவில் ரஷ்யா உடைந்து, ராஜீவ் காந்தி அரசியல் படுகொலையாகியதில் ப்ராஜக்ட் கிடப்பில் போடப்பட்டு பின் 2001ல் திரும்பவும் அக்ரிமண்ட் போடப்பட்டது.
கூடங்குளத்தில் 8 அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றைக் கட்ட ஆகும் செலவு 13,615 கோடி ரூபாய். இவற்றிலிருந்து வருடத்திற்கு 9000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அதில் பாதி கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு விற்கப்படும்.
கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.பி.உதயகுமார் என்பவர் தலைமையிலான  
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கூடங்குளத்தைச் சுற்றி 20 கிமீ சுற்றளவில் வாழும் சுமார் 3 லட்சம் மக்களுடன் இணைந்து கூடங்குளம் உலையை மூடக் கோரி போராட்டம் நடத்திவருகிறது.
ஒரு சாதாரண அணு உலை வருடத்திற்கு 25-30 டன் கதிரியக்க எரிபொருள் கழிவை வெளியேற்றுகிறது. இக்கழிவுகளும் ஆபத்தானவை. கதிரியக்கம் கொண்டவை. இவற்றை உறுதியான காரீயக் கலன்களில் அடைத்து வைப்பதுடன் சில வருடங்களுக்கு தண்ணீரால் குளிர்வித்துக் கொண்டே இருக்கவேண்டும். அதற்குப் பின் இவற்றை 2000 அடி ஆழத்தில் புதைத்து கதிர்வீச்சு வெளியாகிறதா என்று 20 ஆயிரம் வருடங்கள்(ஆமாங்க 20 ஆயிரம் வருஷம் தான்...20 வருஷ வாழ்க்கைக்கே இந்தப் பாடு. இதில் 20 ஆயிரம் வருஷத்துக்கு எங்கே போக..) கல்பாக்கத்திலும், கூடங்குளத்திலும் இந்தமாதிரி வருஷம் வருஷம் வெளியாகும் அணுஉலைக் கழிவை எங்கே கொண்டு புதைக்கிறாங்க, என்ன செய்யறாங்கன்னு இதுவரை தகவலே வெளிய வரலை. ஜெய்ராம் ரமேஷை கேட்டால் இன்னும் நமக்கு அந்தப் பிரச்சனை வரவேயில்லைன்னு சொல்றார்.
அணு உலைகளைச் சுற்றி வாழும் மக்களிடம் சர்வே எடுத்ததில் அவர்களுக்கு பலவித நோய்கள் குறிப்பாக ரத்தப் புற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம் எனத் தெரியவந்திருக்கிறது.

சாதாரண இயக்க நிலையில் அணு உலையிலிருந்து அதிக அளவு கதிரியக்கம் வெளியேறாது. அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் கதிரியக்கம் மற்றும் மாசுகள் அதிகம் தான். ஆனால் அணு உலை சம்பந்தமான அணு எரிபொருள் தேடுதல், எடுத்தல், அரைத்தல், செறிவூட்டுதல், போன்ற இதர செயல்களையும் கணக்கிலெடுத்தால் அணுப் பொருட்களினால் அடையும் மாசு மிக அதிகம்.

அணு உலையில் யுரேனிய அணு உருகும் போது சீசியம் உருவாகிறது. 1986ல் செர்னோபிலில் அணு உலை வெடித்த போது 100 டிரில்லியன் டிரில்லியன்(1க்கு அடுத்து 26 சைபர்கள் போட்டுக்கொள்ளவும்) அளவு சீசியம் அணுக்கள் ரஷ்யாவின் வடக்குப் பகுதி முழுவதும் பரவின. சதுர மீட்டருக்கு நூறு கோடி சீசியம் அணுக்கள் நீரிலும், நிலத்திலும் கலந்தன. கதிரியக்கமுள்ள இந்த சீசியம் சிதையும் போது அது மனிதர்கள், விலங்குகள், தாவரங்களை கடுமையாக பாதிக்கும், கொல்லும். 2046ம் ஆண்டு வரை இக்கதிரியக்கம் செர்னோபிலைச் சுற்றி இருக்கும். அங்குள்ள தாவரங்கள் சீசியம் அணு பொட்டாசியம் அணு போலவே இருப்பதால் சீசியத்தை உறிஞ்சிக் கொண்டன. தாவரத்திலிருந்து சீசியம் அவற்றை சமைத்து உட்கொண்ட மனிதர்கள், விலங்குகளுக்கு பரவியது. புகுஷிமாவில் குடிதண்ணீரிலும், காய்கறிகளிலும் கதிரியக்கம் கலந்ததும் இதே போலத் தீங்கிழைத்தது.



ஜெர்மனி தனது நாட்டிலுள்ள 17 அணு உலைகளையும் 2022க்குள் முழுதும் மூடிவிடத் திட்டமிட்டுள்ளது. இவ்வணுவுலைகளின் மூலம் நாட்டின் 23 சதவீத மின் தேவை நிறைவேற்றப்பட்டு வந்தாலும், புகுஷிமா நிகழ்வுக்குப் பின், நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாற்று ஆற்றல் மூலங்களான காற்றாலை, உயிரினத் தொகுதி (bio-mass), நீர், மற்றும் சூரிய சக்திகளில் இருந்து 20.7 சதவீதம் மின்சாரம் கிடைத்து வந்துள்ளது. அம்மின்சாரத்தை விற்காமல் தனக்கு உபயோகப்படுத்திக் கொள்வதன் மூலம் ஜெர்மனி தனது மின்சாரத் தேவையை சரி செய்யும். மேலும் மாற்று ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தி 2013க்குள் ஜெர்மனியின் 30 சதவீத மின் தேவையை ஈடுகட்டமுடியும் என்று கணக்கிட்டுள்ளனர்.

கூடங்குளம் அணுஉலையைச் சுற்றி முப்பது கிலோமீட்டர் தூரத்திற்குள் சுமார் மூன்று லட்சம் பேர் வசிக்கிறார்கள். புகுஷிமாவில் அணு உலைகளில் இரண்டில் வெடிப்பு நிகழ்ந்த போது அது அதைச் சுற்றி 30 கி.மீக்குள் இருந்த மக்களைக் கடுமையாக பாதித்தது. புகுஷிமாவில் நேரடியாக இறந்தவர்கள் யாருமில்லை இதுவரை. இனி வரும் வருடங்களில் அதன் கதிரியக்கத்தால் புற்றுநோய் மற்றும் பல்வேறு விதமான நோய்களுக்கு இறப்போர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும். ஆனால் அது புகுஷிமாவின் கணக்கில் சேராது. புரிகிறதா ?

கீழே அணு உலை ஆதரவாளர்களின் சில வாதங்களும் அதற்கு நாம் கண்ட பதில்களும்..
அணுஉலை ஆதரவாளர்:- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அணுவுலையின் சுவரானது 6 மீட்டர் அடர்த்தி (thickness) கொண்டது,,, கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாத அளவு பாதுகாப்பானது...முற்றிலும் திடமான இந்திய கான்க்ரீட் கவுன்சில்'ஆல் பரிசோதிக்க பட்ட பின்னரே அந்த concrete நிரப்பப்பட்டு உள்ளது,,, ஏவுகணை தாக்கினாலோ, விமானம் விழுந்தாலோ அணுவுலைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.
எதிர்ப்பாளர்: - கூடங்குளம் மட்டுமில்லை. செர்னோபில், ஜப்பானில் சமீபத்தில் வெடித்த புகுஷிமா அணு உலைகள் கூட இது மாதிரி 6 மீட்டர் அடர்த்தி கொண்ட சுவர்களால் ஆனவை தான். அவையெல்லாம் ஏன் வெடித்தன ? நம்மால் அணு உலையை வேலை செய்யாமல் நிறுத்த முடியும். ஆனால் உள்ளே  நிகழும் அணு வினையை நிறுத்தவே முடியாது. அதிலிருந்து வெளியாகும் வெப்பத்தை குளிர்வித்துக் கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் புகுஷிமாவின் கதி ஏற்படும்
அணு உலை ஆதரவாளர்:- திருநெல்வேலி மாவட்டமானது ஒரே நில தட்டில்
அமைந்து உள்ளதால், நிலநடுக்கம் வர வாய்ப்புகள் குறைவு, வந்தாலும் பூமி தட்டு பிரியவோ ஒன்று சேரவோ வாய்ப்பு இல்லை, ஏனெனில் நான் கூறியபடி ஒரே நிலதட்டில் உள்ளது நெல்லை மாவட்டம்..
எதிர்ப்பாளர்:- நிலநடுக்கம், சுனாமி பற்றி நமக்கு எவ்வளவு தெரியும் ?  நிலநடுக்கத்தின் அளவு ஒரே தட்டில் அதிகமாக வாய்ப்பு இல்லை என்று எதை வைத்து உறுதியாகக் கூற முடியும்?  வேகமாக மாறி வரும் பருவ சூழல்கள் மற்றும் புவியின் நிலைப்புத்தன்மையை  துல்லியமாக அறிவதில் நமக்கு உள்ள திறமைகள் போதுமா ?
அணு உலை ஆதரவாளர்:- சுனாமி வந்தாலும் அதை தடுக்க, அலை தடுப்பு பாறைகள் கடலுக்கு நீண்ட தூரத்திற்கு போடப்பட்டு உள்ளன, அணுஉலை கடல் மட்டத்திலிருந்து 13 மீட்டர் மேலேயே கட்டப்பட்டு உள்ளது,,, சுற்றி பாதுகாப்பு சுவரும் கட்டப்பட்டு உள்ளது.
இந்தியாவின் தென்மேற்கு பகுதியான இந்தோனேசியா சுமத்ரா தீவிலிருந்து
அதிகம் சுனாமி வர வாய்ப்பு இருந்தாலும், அங்கே இருந்து வரும் பேரலைகளோ இலங்கையில் மோதி விடும்... ஏற்கனவே சுனாமி தாக்கிய போது கூடங்குளத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை, சுனாமி வந்த பின்னரும் ஏற்கனவே சென்னையில் அமைந்துள்ள கல்பாக்கம் அணு உலையிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சில் மாற்றம் இல்லை..
எதிர்ப்பாளர்: -  சுனாமி வந்த போது கல்பாக்கத்தில் கதிர்வீச்சு ஏற்பட்டு பலபேருக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும், அந்தச் செய்தி அரசு வெளியில் பரவாமல் அமுக்கியதாகவும் குற்றச்சாட்டு உள்ளதே. சுமத்ரா தீவில் மட்டும் தான் அடுத்த நிலநடுக்கம் வருமா என்ன ? இங்கே பக்கத்திலே மொரிஷியஸில் கூட நிலநடுக்கம் வந்ததே. இது தவிர மனிதத் தவறுகளாலேயே அடிக்கடி கதிர்வீச்சு வெளிப்பட்டு விடுகிறது. சாதாரண விபத்து என்றால் விபத்துக்குள்ளான இடம் மட்டும் பாதிக்கப்படும். அணு உலையில் விபத்து என்றால் கதிரியக்கம் செல்ல முடிந்த தொலைவு வரை எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படும். 
 அணு உலை ஆதரவாளர்:- அணுவை பிரிக்கும் செயலானது கட்டுபடுத்த முடியாமல் போனால், உடனே அணு உலை தானாக செயல் இழந்து விடும்,அணுவை தன்னுள் அடக்கிவிடுமாறும் தயாரிக்க பட்டு உள்ளது.
எதிர்ப்பாளர்: - நம்மால் அணு உலையை வேலை செய்யாமல் நிறுத்திவிட முடியும். ஆனால் உலையின் உள்ளே நிகழும் அணு வினையை நிறுத்தவே முடியாது. அணு உலை வேலை செய்யாமல் நிறுத்தப்பட்டாலும் அதிலிருந்து வெளியாகும் வெப்பத்தை தொடர்ந்து குளிர்வித்துக் கொண்டே இருக்கவேண்டும். புகுஷிமாவில் நிறுத்தப்பட்ட அணுஉலையை குளிர்விக்க முடியாததால் தான் வெப்பம் அதிகமாகி உலை வெடித்தது.
அணு உலை ஆதரவாளர்:- உலை வெப்ப நீக்க முறையானது , உலகிலேயே மிக
நவீனமானது...,அதே போல அனைத்து நாடுகளிலும் அணுஉலைக்கு தேவையான coolant/குளிர்விப்பான் ஒன்றே ஒன்று மட்டுமே பயன்படுத்தப்படும் ஆனால் இங்கு நான்கு coolant/குளிர்விப்பான் பயன்படுத்த படுகிறது... ஒரு குளிர்விப்பான் செயல் இழந்தாலும் மற்ற மூன்றில் ஒன்றை பயன்படுத்தலாம், இந்த நான்கு குளிர்விப்பான்களுக்கும் நான்கு
generator'
கள் உபயோகப்படுத்த படுகின்றன...
எதிர்ப்பாளர்: -  புகுஷிமாவில் கூட ஒன்றுக்கு இரண்டு குளிர்விப்பான்கள், இரண்டு எமர்ஜென்ஸி ஜெனரேட்டர்கள் இது தவிர 8 மணி நேரத்தற்கு வரும்படியான
பேட்டரிகளும் இருந்தன.  ஆனாலும் அவர்களால் உடனே உலையை குளிர்வித்து விட முடியவில்லை.
அணு உலை ஆதரவாளர்:- வெளியேறும் புகை மிக மிக குறைவானதாக இருந்தாலும் அது சுற்று சூழலை எந்த விதத்திலும் பாதிக்காத வாறு புகைபோக்கி உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்ட படி 100 மீட்டர் உயரம் வரை உயர்த்தி கட்டப்பட்டு உள்ளது.
எதிர்ப்பாளர்: - வெளியேறும் புகையில் என்ன என்ன இருக்கும் என்று கேட்டுப் பாருங்கள். பின் அதன் அருகில் நீங்கள் குடியிருக்க முடியுமா என்பது விளங்கும். பொதுவாக அணு உலை மட்டுமல்ல, அனல் மின் நிலையங்கள், வேதிப் பொருள் தொழிற்சாலைகள், வெளியிடும் புகை மிக மிக ஆபத்தான சூழல் கேட்டை விளைவிக்கிறது. அதைக் கட்டுப்படுத்த, நெறிப்படுத்த அரசு தவறிவிட்டது. தனியாரிடம் எல்லா பொறுப்புக்களையும் கொடுக்கும் அரசு அவற்றை எப்படி கண்காணித்துச் சரிசெய்யும் என்று நாம் எதிர்பார்க்கலாம்

இத்தோடு அணு இழ்ப்பீட்டு மசோதா என்ற ஒன்றை வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு  சார்பாக நிறைவேற்றியுள்ளது நமது அரசு. அதன் படி அணு உலையை நமது நாட்டில் நிறுவும் வெளிநாட்டு கம்பெனியோ, அல்லது அந்த நாட்டு அரசோ அணு உலையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பாளர்கள் அல்ல. ஒருவேளை நஷ்ட ஈடு கொடுக்கும் நிலை வந்தால் 500 கோடி ரூபாய்க்கு மேல் தரவேண்டியதில்லை. அணு உலை செய்தது வெளிநாட்டுக் கம்பெனி, தொழில் நுட்பம் வழங்கியதும் அவர்களே, அதற்கு எரிபொருளும் வெளிநாட்டிலிருந்து தான் வரவேண்டும். ஆனால் விபத்து ஏற்பட்டால் மட்டும் அவர்கள் பொறுப்பில்லை. எப்படி இருக்கிறது கதை ? 'ஏழைகளின் உயிர்.. மயிர் போல..' என்பது இந்தியா என்கிற ஏழை நாட்டிற்கும் பொருந்தும் போலும்.

கூடங்குளம் போராட்டத்தை நாம் எல்லோரும் ஆதரிப்போம். மக்களின் நலன் பற்றி கவலைப் படாமல் பெரும் கம்பெனிகள், அவை ரஷ்யாவோ, அமெரிக்காவோ, சீனாவோ எங்கிருந்து வந்தாலும் சரி அரசின் துணை கொண்டு வந்து தங்கள் (பல்லாயிரம் கோடி ரூபாய்கள்) சுய லாபங்களுக்காக அணு உலை அமைப்பதில் தீவிரம் காட்டுவதை எதிர்த்து நிற்போம். மக்களின் உரிமைகளை, நமது பாதுகாப்பான வாழ்வை மீட்டெடுப்போம்.

அணுசக்திக்கு மாற்று எரிபொருள் தேடலைப் பற்றி அறிந்துகொள்ள பின்வரும் கட்டுரைகளைப் படியுங்கள்..
அணு உலைகளுக்கு மாற்று வெளிவராத உண்மைகள் - பாகம் 1
அணு உலைகளுக்கு மாற்று வெளிவராத உண்மைகள் - பாகம் 2
http://www.thenseide.com/cgi-bin/Details.asp?selNum=22&fileName=Dec1-11&newsCount=2