Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, September 8, 2016

ஹரியானா சட்டசபையில் நிர்வாணச் சாமியார் உரை!


இந்தியாவில் மதவெறியை ஊட்டி பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தாலும் வந்தது. அன்றிலிருந்து தொடர்ந்து கோமாதா, குலக்கல்வி, சமஸ்கிருதத் திணிப்பு, திரைப்படத்துறை, வணிகத்துறை போன்ற சகல துறைகளிலும் இந்துத்துவாவின் ஊடுருவல் என இந்தியாவை 'இந்துயா'வாக்கப் பார்க்கிறார்கள்.

சமீபத்தில் ஹரியானா சட்டசபையில் உரையாற்ற ஜெயின் மதச் சாமியாரான தருண் சாகரை அழைத்திருந்தார் ஹரியானா கல்வியமைச்சர் ராம் பிலாஸ் சர்மா. வந்த ஜெயின் சாமியார் தருண் சாகர் கண்களில் கண்ணாடி அணிந்திருந்தார்; கையில் வாட்ச் கட்டியிருந்தார்; ஆனால் வேறு எதுவும் உடையே அணியாமல் அம்மணமாய் 'ஹாய்யாக..' வந்திருந்தார். வந்தவர் பெண்களை கோயிலுக்குள், மசூதிக்குள் அனுமதிப்பது தவறு என்கிற ரேஞ்சிலும், பாகிஸ்தான் எப்படி இந்தியாவுக்கு எதிரி என்பது பற்றியும், திருமணமான பெண் எப்படி கணவனுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பது பற்றியும் சட்டசபைக்கு வீராவேசமாக லெக்சர் கொடுத்தார்.

இந்தச் செயல்கள் எதிலும் உங்களுக்குத் தவறே தென்படவில்லை என்றால் நீங்கள் பி.ஜே.பி ரத்தம் ஓடும் ஒரு இந்துத்துவாவாதி தான் என்பதில் சந்தேகமில்லை. முதலில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டமானது அனைத்து மதத்தினரையும் சமமாகப் பாவிக்கிறது. ஆகையால் சட்டசபையில் மதம் சார்ந்த ஒரு தலைவரை அழைத்துப் பேசவைப்பது முற்றிலும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகும்.

வந்து பேசிய சாமியாரும் 'அன்பாயிருங்கள்..பண்பாயிருங்கள்' என்று ஜக்கி ஸ்டைலில் ஒரு உரையை நிகழ்த்திச் சென்றிருந்தால் பிரச்சனைக்குப் பெரிய வாய்ப்பில்லை. ஆனால் அவர் பேசியது அனைத்தும் இந்துத்துவா ரத்தம் ஏற்றிய மனிதர் பேசுவது போலவே வெறியேற்றியது சட்டசபையிலேயே மதவெறியைக் கிளப்பும் செயலாகும்.

22 மொழிவாரி மாநிலங்கள், பல நூறு இனங்கள், டஜன் கணக்கில் மதங்கள் கொண்ட கலவையான மனிதர்கள் வாழும் மதச்சார்பற்ற இந்தியாவுக்கு, ஒரே காவி வர்ணமடிக்கும் செயல்களில் மோடியின் மத்திய அரசும், பி.ஜே.பி ஆட்சியமைத்துள்ள குஜராத், ஒடிஸ்ஸா, கர்நாடகா உட்பட அனைத்து மாநிலங்களிலும் ஏதாவது இப்படி லூசுத்தனமான விஷயங்கள் அரங்கேறுகின்றன.  

தருண் சாகர் பேசிய விஷயங்கள் பற்றிய விவாதம் இருக்கட்டும். இப்படி பொது இடத்தில், அதுவும் மாநிலத்துக்கான சட்டங்களை நிறைவேற்றும் ஆண் மற்றும் பெண் உறுப்பினர்கள் நிறைந்த சபையில், இப்படி டண்டணக்கா..டணக்கா என்று ஆட்டியபடி (கையைத் தான்) பேசுவதெல்லாம் ஈவ்டீசிங் இல்லைனா பப்ளிக் ஹாராஸ்மென்ட் கேஸ்ல உள்ளே போடப்படவேண்டிய கேஸ்தானே.

சட்டசபை என்பது மத ரீதியான, சாதீய ரீதியான பாகுபாடுகள் எதுவும் இல்லாமல் மக்களின் நலனுக்காக செயல்படவேண்டிய அவை. அங்கே வந்து மதப் பிரச்சாரம் செய்யவேண்டிய தேவையென்ன என்பது தான் கேள்வி.

Sunday, October 25, 2015

ஒரே வாரத்தில் 75 ஆயிரம் டன் பருப்புகள் பறிமுதல் ! யார்கிட்டே கதை விட்றீங்க.?

பருப்பு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கிலோ 200 ரூபாய்க்கு போன வாரம் வந்தது. உடனே மத்திய அரசு தனியார் இறக்குமதியாளர்கள் மூலம் 2 லட்சம் டன் பருப்பை இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்தது. உலக சந்தையில் கிலோ 50 ரூபாய்க்கு விற்கும் பருப்பை தனியார் இறக்குமதியாளர்கள் வாங்கி அரசிடம் 130 ரூபாய்க்கு விற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தூங்கிக் கொண்டிருந்த அரசு இயந்திரம் திடீரென் விழித்துக் கொண்டது போல ஒரே வாரத்தில் இந்தியா முழுவதும் மத்திய மாநில அரசுகள் நடத்திய சோதனையில் 75 ஆயிரம் டன் பதுக்கல் பருப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மீடியாக்களில் செய்திகள் பரப்பரப்பாக வெளிவருகின்றன. அந்தப் பட்டியலைப் பார்ப்போம்.

இந்தியா முழுவதும், 13 மாநிலங்களில், 6077 இடங்களில் அரசுகள் சோதனை செய்தன. அதில் மஹாராஷ்ட்ராவில் மட்டும் 46 ஆயிரம் டன்னும், கர்நாடகத்தில் 8755 டன்னும், பீகாரில் 4933 டன்னும், சத்தீஸ்கரில் 4500, தெலங்கானாவில் 2546, மத்தியப் பிரதேசத்தில் 2295, ராஜஸ்தானில் 2222 டன் என்று ஆயிரக்கணக்கில் பருப்பு வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அரசு வெளியிட்டுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பதுக்கல் கைப்பற்றல் செய்திகளின் பின்னால் வேறு எதுவும் இருக்கிறதா என்று 'தனி ஒருவன்' படத்தில் ஜெயம் ரவி சொல்வது போல நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. சேம்பிளுக்கு சில கேள்விகள்.

ஒரே வாரத்தில் பரபரப்பாக செயல்பட்ட அரசு இயந்திரம் 75 ஆயிரம் டன் பருப்பு வகைகளை பிடித்துள்ளது. அப்போ இவ்வளவு நாள் அரசு செயல்படாமலேயே இருந்ததா ? அல்லது பதுக்கல்களை கண்டுகொள்ளாமல் இருந்ததா ?

பதுக்கல் சோதனைகளில் ஏன் பருப்பு தவிர, அரிசி, கோதுமை போன்ற எந்தப் பொருட்களும் பிடிபடவில்லை ? பருப்பு பதுக்கல்காரர்களை மட்டும் குறிவைத்து சோதனை நடத்தினார்களா ? பதுக்குபவர்களில் பருப்பு மட்டும் கடத்துபவர், வேறு எதையும் கடத்தவே மாட்டாரா ?

6 ஆயிரம் இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் எத்தனை பேர் பிடிபட்டனர். ஏன் ஒருவரது புகைப்படம் கூட செய்தித் தாளிலோ அல்லது சேனல்களிலோ காட்டப்படவில்லை? ஒருவேளை இந்தப் பதுக்கல் பிடிப்புக் கணக்கு மக்களுக்கு காட்டப்படும் பொய்க்கணக்கா ? ஒரு சாதாரண பைக் திருடனை, செயின் திருடனை பத்திரிக்கையில் போட்டோ போட்டு, சேனல்களில் சுற்றிச் சுற்றிக் காட்டும் மீடியாக்களுக்கு மக்களின் வாழ்வாதாரத்தையே அசைக்கும் இந்தக் கேடிகளில் ஒருத்தருடைய போட்டோ கூடவா கிடைக்கவில்லை ?

பதுக்கியவர்கள் எல்லோரும் தனிப்பட்ட ஆட்களா ? நிறுவனங்களே இல்லையா ? சில பல டன்களை தனியாக ஒரு ஆள் கடத்தி விட முடியுமா ? தனியார் நிறுவனங்கள் தான் கடத்தலில் ஈடுபட்டிருக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் உணவுப் பதுக்கலில் ஈடுபட்டால் அது குற்றமாக கருதப்படாதா ? அல்லது ஏன் பதுக்கலில் ஈடுபட்டது என்று ஒரு நிறுவனத்தின் பெயரையும் பேப்பரில் போடவில்லை அரசு ?

இது பற்றி ஏன் ஒரு மாநில அரசு கூட வாய் திறக்கவில்லை ? 45 ஆயிரம் டன் பதுக்கலை கண்டு பிடித்த மஹாராஷ்டிரா முதல்வர் கூட இது பற்றி வாய் திறக்கவில்லை. மோடி வாய் திறக்கவில்லை. ஆனால் அரசு பிடித்தது என்று செய்தி மட்டும் வருகிறது. அப்போ உண்மையிலேயே இதெல்லாம் பதுக்கல் கைப்பற்றல் கணக்கா ? இல்லை, நாங்களும் செயல்படுகிறோம் பாருங்கள் என்று மக்களுக்குக் காட்ட அரசு சும்மா வெளிவிடும் செய்தியா ?

யாருக்காவது தெரிந்தால் பதில் சொல்லுங்கள்.

Thursday, October 8, 2015

சிகரெட்டை ஒழி.. மக்களுக்கு 'தண்ணி' காட்டு !- அரசின் புதிய கொள்(ளை)கை.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சிகரெட்டின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தற்போது சிகரெட் குடிப்பவர்களின் எண்ணிக்கை குடிப்பவர்களின் எண்ணிக்கையை விடக் குறைய  ஆரம்பித்துள்ளது. காரணம் அரசுகள் சிகரெட்டுக்கு எதிராக முடுக்கி விடும் கடுமையான பிரச்சாரங்கள் ஆகும்.

குடிப்பழக்கம் சிகரெட்டை விட பன்மடங்கு தீமையானது. சிகரெட் குடிப்பதால் மட்டுமல்லை, குடித்தாலும் கூட கேன்சர் வரும். ஆனாலும் குடிப்பழக்கம் எல்லா நாடுகளிலும் சகஜமாக கருதவைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசே இதை நடத்துகிறது. தமிழக அரசு சிகரெட் கம்பெனி நடத்தி இத்தனை ஆயிரம் கோடிகள் வருடத்துக்கு சம்பாதிக்க முடியுமா ?   குடிப்பவர்களால் கிடைக்கும் வருமானம் சிகரெட் குடிப்பவர்களை விட பலமடங்கு அதிகம் என்கிற வியாபராக் கணக்கே குடியை விடுத்து சிகெரட்டை மட்டும் அரசுகள் குறிவைப்பதன் காரணம்.  குடிக்கு அடிமையானவர்கள் மூளையும் வேலை செய்வதில்லை. அவர்கள் பாதி அடிமைகள் என்பதால் இந்தப் பழக்கத்திலிருந்து மீளவே முடியாது. 

அதன் வெளிப்பாடாக  உத்தரப் பிரதேசத்தில், சில்லறையில் சிகரெட் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தப்பட்டுள்ளது.

இம்மாநில முதன்மை செயலர் (சுகாதாரம்) அர்விந்த் குமார் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

"உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் சில்லறையில் சிகரெட் விற்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்.

சில்லறையில் சிகரெட் விற்க தடை விதிக்கும் அவசர சட்டம் கொண்டுவர அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. அந்தச் சட்டத்துக்கு ஆளுநர் ராம் நாயக்கும் அனுமதி வழங்கி விட்டார்.

புதிய சட்டத்தின்படி சில்லறையில் சிகரெட் விற்பது கண்டறியப்பட்டால், முதல் முறையாக ரூ.1000 அபராதம் ஓராண்டு சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மறுபடியும் குற்றம் செய்தால் ரூ.3000 அபராதம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். சில்லறையில் சிகரெட் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.5000 அபராதம், 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்." இவ்வாறு அர்விந்த் குமார் கூறியுள்ளார்.

இது சில்லறை வர்த்தகம் எனப்படும் பெட்டிக் கடைக்காரர்களின் வயிற்றில் அடித்து அந்தத் தொழிலை இல்லாமல் செய்வதற்கே. அமெரிக்கா போன்ற நாடுகளில் தெருமுனைப் பெட்டிக் கடைகள் எல்லாம் சுத்தமாக ஒழிக்கப்பட்டுவிட்டன. காரணம் சிகரெட்டை கூட வால்மார்ட்டில் தான் வாங்கவேண்டும் என்று கார்ப்பரேட் கம்பெனிகள் நினைப்பதால்.

இதே போன்றதொரு கடுமையான தடையை மதுபாட்டில் விற்பவர்களுக்கும், குடிப்பவர்களுக்கும் ஏன் ஐயா கொண்டு வரவில்லை ? வருமானம் போயிடுமே ஐயா. அதுதான் அவங்க கவலை. மக்கள் மேல் அக்கறையும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல்லை. புரிஞ்சுக்கோங்க.

Tuesday, September 22, 2015

இந்தியாவுக்கு அமெரிக்கா 16ஆயிரம் கோடி ராணுவ தளவாடங்கள் விற்கிறதாம்!!

அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் இயற்ற இருக்கிறது. மோடியின் அரசு தமிழர்களைக் கொன்றழித்த இலங்கை ராணுவத்துடன் போர்ப்பயிற்சி செய்ய இருக்கிறது. ஐ.நாவில் அமெரிக்கா இலங்கை்கு ஆதரவாக போடப்படும் தீர்மானத்தை மோடி ஆதரிக்கவிருக்கிறார். இப்போது அமெரிக்காவிற்கு போகவிருக்கிறார் மோடி. அதையொட்டி அந்நாட்டின் போயிங் நிறுவனத்திடமிருந்து பல ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ ஹெலிகாப்டர் ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஓ.கே.செய்திருக்கிறது. பாதுகாப்பு விவகாரங்களுக்கான (சிசிஎஸ்) அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இம்முடிவின்படி அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து  22 அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் 15 சினூக் கனரக ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. 2013-ம் ஆண்டில் மன்மோகன் ஆட்சியிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. மாட்டுச் சந்தை போல விலை நிர்ணயம் தொடர்பாக துண்டு இழுபறி 2 வருடங்கள் நடைபெற்றதால் நடைபெறவில்லை.இப்போது இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ.16,500 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். இந்தப் பயணத்தின்போது போயிங் நிறுவனத்துடன் ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோக இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள், ராடார்கள் மற்றும் மின்னணு போர்த்தளவாடங்களை வாங்குவது தொடர்பாகவும் ஒரு ஒப்பந்தம் அமெரிக்க அரசுடன் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.
இந்தியாவின் ராணுவ தளவாட சந்தையைக் கைப்பற்றுவதற்காக, மத்திய அரசை அமெரிக்கா பல்வேறு வகைகளில் அழுத்தி வந்தது.


கடந்த 10 ஆண்டுகளில், பி-81 ரக கடற்பகுதி கண்காணிப்பு விமானங்கள், சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் மற்றும் சி-17 குளோப்மாஸ்டர்-3 ரக விமானங்கள் வாங்குவது உட்பட ரூ.66 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. இதை யாரைக் கேட்டு யாரிடம் டெண்டர் விட்டுச் செய்தார்கள் ? என்று மக்களாகிய நாம் கேட்க முடியாது. 600 ரூபாய் கேஸ் மானியத்தை விட்டுத் தா என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நடுத்தர மனிதனிடம் கேட்க முடிந்த அரசு, 16 ஆயிரம் கோடிக்கு ஹெலிகாப்டர் எல்லாம் வாங்கித் தானாகவேண்டுமா ? என்றும் கேட்க முடியாது. உடனே பாகிஸ்தான் தீவிரவாதம் என்று கைகாட்டுவார்கள். பாகிஸ்தானுக்கும் இதே அமெரிக்கா ஆயுதம் வழங்குகிறதே என்று யோசிக்கும் அளவுக்கு இங்கிருக்கும் தேசபக்திக் கொழுந்துகளுக்கு அறிவு இருப்பதில்லை.

இதை எதுக்கு இப்போ வாங்குறாங்கன்னு தெரியலை.  இரண்டு வருஷமா அமெரிக்கா இதை விக்க பேரம் பேசிட்டு இருந்தப்பவும் நமக்கு பாகிஸ்தான்ல இருந்து இலங்கை வரைக்கும் எல்லார் கூடவும் எல்லைத் தகராறு, தாக்குதல்கள் தான். இரண்டு வருஷமா இந்த ஹெலிகாப்டர் ஆயுதம் இல்லாம நாம் ஒன்னும் அழிஞ்சு போயிடலை. இனியும் இதை வாங்கி என்ன பண்றது ? ஒருவேளை தற்கொலை செஞ்சுக்கிற விவாசாயிகளை ஒருவேளை வயக்காட்டிலிருந்து தூக்கிட்டு வர்றதுக்காக வாங்குறாங்களோ என்னவோ

Thursday, September 17, 2015

போர்க்குற்றம் நடந்தது உண்மையே !- ஐ.நா. அறிக்கையின் நோக்கம் என்ன?

சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை 16ம் தேதி புதன்கிழமை ஐநா மனித உரிமைகள் ஆணையர் சையத் அல் உசைன் ஆல் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் முக்கிய அம்சம் உள்நாட்டு விசாரணையை மறுதலித்து, மாறாக பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம் மூலம் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதாகும். இது இலங்கைக்கு வைக்கப்படும் நெருக்கடியாகும். ஆனால் இதில் எவ்வளவு தூரம் விஷயங்கள் வெளிவரும் என்பது கேள்விக்குறியே.

இதுதவிர அறிக்கையிலுள்ள மேலும் சில முக்கிய அம்சங்கள்:
இறுதிகட்ட போரின்போதும், போருக்கு முன்பாகவும், அப்பாவி மக்கள், இலங்கை ராணுவத்தாலும், விடுதலை புலிகளாலும் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்தவர்களையும் இலங்கை ராணுவம் கொன்றுள்ளது. தங்களுக்கு எதிராக செயல்பட்டோரை விடுதலை புலிகள் கொன்றுள்ளனர். இதில் தமிழ் அரசியல் தலைவர்களும் அடங்குவர். இரு தரப்பிலுமே மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. போர் முடிந்து இத்தனை வருடங்கள் ஆகியும், ஒருவர் கூட போர்க்குற்றத்திற்காக இலங்கையில் தண்டிக்கப்படவில்லை.

இலங்கை ராணுவ வீரர்கள், தங்களால் கைது செய்யப்படும், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதிராக பலாத்காரங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, இறுதி போர் முடிந்த பிறகு, இலங்கை ராணுவத்தினர் அதிக பாலியல் குற்றங்களில் ஈடுட்டுள்ளனர். இந்த பாலியல் பலாத்காரங்களை, ஒரு தண்டனை முறையாக செய்திருக்கின்றனர். விடுதலை புலிகளோடு தொடர்புள்ளவர்கள் என்று தெரிந்தால் அவர்களை இழிவுபடுத்தும் செயலாகவும் ராணுவம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அச்சம், வெட்கம் போன்ற காரணங்களால், பாதிக்கப்பட்டோர் தங்களது பாதிப்பு குறித்த முழு விவரத்தையும் தெரிவிக்காததால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை முழுமையாக கண்டறிய முடியவில்லை. ஆனால் பெருமளவில் இக்குற்றங்கள் நடந்துள்ளன. இசைப்பிரியா, பாலச்சந்திரன், நடேசன் போன்றோரை சிங்கள ராணுவம் படுகொலை செய்தது தெளிவாகியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறி, இலங்கை ராணுவத்தினர் பாலியல் பலாத்காரங்களில் ஈடுபட்டுள்ளனர். சில பலாத்காரங்களும், அதையொட்டிய டார்ச்சர்களும், மனித குலத்திற்கே எதிரான அளவுக்கு மோசமாக இருந்துள்ளன.

'வெள்ளை வேன்' கலாசாரம் என்று அந்த நாட்டில் அழைக்கப்படும், ஆள் கடத்தலும், அதைத்தொடர்ந்த சித்திரவதைகளும் நின்றபாடில்லை. உலக அளவில் அதிக பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ள நாடு இலங்கை. ஐ.நா. ஆய்வாளர்கள் நேரில் சென்று விசாரணை நடத்த இலங்கை அனுமதிப்பதில்லை. இவ்வாறு அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதையொட்டி தமிழக சட்டசபையில் ஈழப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை கோரி ஏகமனதாக அனைத்துக் கட்சிகளின் ஆதரவில் தீர்மானம் இயற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அமெரிக்காவின் இந்த அறிக்கை மிகுந்த நேர்மையோடு விஷயங்களைப் பட்டியலிடுவது போலத் தோன்றினாலும் இதன் உண்மையான போக்கை அனுமானிக்க வசதியாக உள்ளது.

இந்த அறிக்கையில் அமெரிக்கா தற்போதை சிரிசேனாவின் அரசை பாராட்டியிருக்கிறது. அதே சமயம் முந்தைய அரசு போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டது எனக்குறிப்பிடுகிறது. இது ஈழப்படுகொலைகள் அத்தனைக்கும் ராஜபக்சேவை மட்டும் கட்டம் கட்டி காட்டிவிட்டு பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் தமிழர் X சிங்களர் இனப்பிரச்சனையை வெறும் போர்க்குற்றமாகச் சுருக்கி முடிக்கிறது. விடுதலைப் புலிகள் விடுதலைப் போராளிகளாகக் கருதப்படாமல் போர்க்குற்றம் புரிந்த ஒரு தீவிரவாதக் குழுவாகவே காட்டப்படுகிறார்கள். ஜெயவர்த்தனேயிலிருந்து தற்போதைய ரணில் வரை அனைவரும் தமிழனத்திற்கு எதிராக அநீதியாகச் செயல்பட்டவர்களே !

இந்த விசாரணையில் தமிழர்களை அழித்ததில் இந்தியாவின், அமெரிக்காவின் மற்றும் சீனாவின் பங்கும் மறைக்கப்படும். இதில் நிலைநாட்டப்படுவது அமெரிக்காவின் நீதியாக மட்டுமே இருக்கும். தமிழர்கள் கிடைத்த நீதியை வைத்து சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். தமிழினம் இலங்கையில் அமைப்பு ரீதியாக அழிக்கப்படுவதை இந்த அறிக்கையும் அதன் விளைவுகளும் கண்டுகொள்ளவே போவதில்லை.

Tuesday, September 15, 2015

ஈழப் படுகொலைகள், போர்க்குற்றம் – ஐ.நா வின் கள்ள அழுகை !

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 30-வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நேற்று தொடங்கியது. கவுன்சிலின் தலைவர் ஜெத்ராட் உல் உசேன் அதில் ஈழப் படுகொலைகள் பற்றி பேசியதாவது: “இலங்கை போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இறுதிகட்டப் போரின்போது மனித உரிமைகள் மீறப் பட்டுள்ளன. பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு இலங்கைக்கு உள்ளது.

இலங்கையின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனா மனித உரிமை விவகாரங்களில் காட்டும் அக்கறை வரவேற்கத் தக்கது. அதேநேரம் அந்த நாட்டில் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை புதன் கிழமை வெளியிடப்படும். அப்போது சில கடுமையான முடிவுகளும் அறிவிக்கப்படும்.” என்று அவர் தெரிவித்தார்.
ஐ.நா. சபையின் இந்த அறிக்கை இலங்கை அரசிடம் கடந்த வெள்ளிக்கிழமையை அளிக்கப்பட்டிருக்கிறது. 6 நாட்களில் இலங்கை பதில் அளிக்கவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் இலங்கை தரப்பில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் மங்கள சமர வீரா பங்கேற்றுள்ளார்.

மங்கள சமரவீரா ஐ.நா அறிக்கை பற்றி கூறியதாவது: “தென் ஆப்பிரிக்காவைப் பின்பற்றி உள்நாட்டுப் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும், இதுதொடர்பாக தென் ஆப்பிரிக்க அரசின் ஆலோ சனையைக் கோரியுள்ளோம். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய அரசியல் சாசனம் வரையறுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார். இலங்கை அரசு சார்பில் சுதந்திரமான விசாரணை அமைப்பு அமைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விஷயத்தை மேலோட்டமாகப் பார்த்தாலே இதன் போலித்தன்மை தெரியும். முதலாவதாக ‘போர்க் குற்றம்’ என்கிற வார்த்தை. இரு நாடுகளுக்கிடையே தான் போர் நடைபெற இயலும். இலங்கையில் நடந்ததோ உள்நாட்டில், கிளர்ச்சியாளர்களான விடுதலைப் புலிகளுடனான சண்டை மட்டுமே. இந்த உள்நாட்டுச் சண்டையே இரு நாடுகளுக்கிடைப்பட்ட போர் போல நடத்தப்பட்டிருப்பதிலிருந்து தமிழர்கள் வேறு நாட்டவராக, எதிரிகளாகவே நடத்தப்பட்டனர் என்பது தெளிவு. அதனாலேயே இன்னும் தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவம் நிற்கிறது. தமிழர்கள் பகுதிகளில் சிங்கள மக்களைக் குடியமர்த்தி அவர்களுக்கான பகுதிகள் சிங்களர் வசமாக்கப்படுகின்றன.

ஐ.நா. கவுன்சில் தலைவர் ஜெத்ராட் போர்க்குற்றங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன என்று பொதுவாகத் தெரிவித்துள்ளார். அதே சமயம் இலங்கை அதிபர் மைத்திரிபால சிரிசேனாவை பாராட்டியுள்ளார். இதற்கு விசாரணை கமிஷனை இலங்கை அரசே அமைக்கப் போகிறது. அதாவது தான் செய்த குற்றங்கள் பற்றி தானே விசாரிக்கப் போகிறது. இதன் முடிவு என்னவாக இருக்கும் ?

முடிவு தமிழருக்கு சாதகமானதாக இருக்காது. சிங்களச் சார்பு ராஜபக்சே பலிகடாவாக்கப்பட்டு அவர் மேல் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படும். அதே சமயம் தமிழர் அழிப்புக்கு இலங்கையும், இந்தியாவும் சேர்ந்து செயல்பட்டு விசாரணையை ஒப்புக்கு நடத்தி முடிக்கும். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தொடரும். இந்திய நிறுவனங்களுக்கு இலங்கையில் கான்ட்ராக்டுகள் பல இதற்கு லஞ்சமாகக் கிடைக்கும். இந்திய அரசு தமிழருக்குச் செய்யும் துரோகம் தொடரும். அது மோடியோ அல்லது மன்மோகனோ அல்லது வேறு யாரோவாக இருந்தாலும் சரி.

Monday, March 23, 2015

காலம் தாழ்த்தும் தந்திரம் வாளேந்திய சிங்கள சிங்கத்தின் அரசியல் போர்வாள்! - ஜெயந்தரன்

காலம் தாழ்த்தும் தந்திரம்
அரசியலில் காலம் தாழ்த்தும் தந்திரம் (Delaying Tactics) என்பது ஒருவகை யுத்தமுறையாக பின்பற்றப்படுகிறது. கால தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகும். (Justice delayed is justice denied) என்பதற்கு அப்பால் அது நீதி நியாயம் உரிமை என்பனவற்றிற்கான கட்டமைப்பையே சல்லடையாக்கி விடுகிறது. பின்போடுதல் என்பதன் பொருள் இல்லை என்பதாகும். அதிக தாமதம் அதிக தீங்கானதாகும். சிங்களத் தலைவர்கள் தமிழரின் உரிமைகள் தொடர்பான விடயங்களை பின்போடுவதன் மூலம் அதனை தனித்து பின்பு பையவே இல்லாது அழித்துவிடுகிறார்கள். ஒன்றை அதிகம் தாமதப்படுத்துவதன் மூலம் அதனை அதற்குரியவர்களுக்கு தீங்கானதாக்கிவிடுகிறார்கள்.

காலதாமதப்படுத்தல் என்பது எப்போதும் அளவால் பெரிய இனத்திற்கு சாதகமானதாகவும் அளவால் சிறிய இனத்திற்கு பாதகமானதாகவும்
அமைந்துவிடுகிறது. ஆதலால் ஈழத்தமிழர் விவகாரத்தில் சிங்களத் தலைவர்கள் எப்போதும் காலதாமதப்படுத்தல் தந்திரத்தை ஈழத்தமிழருக்கு
எதிரான ஒரு முக்கிய ஆயுதமாக எப்போதும் வெற்றிகரமாக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் சிங்கள தலைவர்களிடமும் ஆட்சியாளர்களிடமும்
அரச இயந்திரம் அவர்களது கையில் இருப்பதினால் அதனை அவர்கள் ஒரு முக்கிய கருவியாக்கொண்டு அரச இயந்திரமற்ற தமிழ்மக்களை
காலதாமத்தால் இலகுவாக தோற்கடித்திட முடியும். அதாவது அரச இயந்திரத்தின் கூரிய வாளுக்கு தமிழர்கள் கொடுக்கும் காலதாமத வாய்ப்பு
இலக்காகி வெட்டுண்டு அந்த அரச இயந்திரத்தின் பாரத்துக்குள் அது நசிந்து அழிந்துபோய்விடும். ஆதலால் அரச இயந்திரம் உள்ளவர்களுக்கு
காலதாமதம் செய்யும் வாய்ப்பு ஏற்படும்போது அது இயல்பாகவே தமிழரின் இலக்கை அழித்துவிடும்.

இனவெறுப்பை தூண்ட  பௌத்தமதத்தை உபயோகப்படுத்துதல்
சிங்கள அரச இயந்திரம் தெளிவான சித்தாந்தங்களாலும் கோட்பாடுகளாலும் அதற்கு பொருத்தமான நடைமுறைகளினாலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 1972ஆம் ஆண்டு இலங்கை குடியரசின் அரசியல் யாப்பானது பின்வரும் மூன்று விடயங்களை அப்படியே உள்வாங்கி அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. 1956ஆம் ஆண்டு வெளியான பௌத்த ஆணைக்குழுவின் அறிக்கையை அப்படியே நிறைவேற்றிய யாப்பாக
இந்த யாப்பு காணப்படுகின்றது. அதாவது பௌத்தத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது (Betrayal of Buddhism) என்ற தலைப்புடைய இந்த
அறிக்கையானது எதிர்காலத்தில் இலங்கை அரசியலில் பௌத்தத்திற்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை
வற்புறுத்தியிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பௌத்தத்தை அரச மதமாக்கவேண்டும் என்றும் பௌத்த சாசன அமைச்சை உருவாக்க
வேண்டும் என்றும் பௌத்த நிறுவனங்களும் அமைப்புக்களும் ஓங்கி குரல் ஒலித்தன. இந்த அறிக்கை 1956ஆம் ஆண்டு தேர்தலை நிர்ணயிப்பதில்
பெரும் பங்கு வகித்தது. இவ்வறிக்கையின் அபிலாசையை அரசியல் யாப்பு ரீதியாக 1972ஆம் ஆண்டு யாப்பு உட்கொண்டிருந்தது. இதனை 1978ஆம்
ஆண்டு அரசியல் யாப்பு மேலும் வலுவுடன் முன்னெடுத்தது.

பௌத்தம் இலங்கையின் முதன்மையான மதம் என்றும் அதனை பேணிப்பாதுகாப்பதும் கட்டிவளர்ப்பதும் அரசின் பொறுப்பும் கடமையும் என்று
இந்த யாப்பு கூறுகிறது. இதன் மூலம் ஏறக்குறைய பௌத்தம் அரச மதம் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டது என்பதே உண்மை.1953ஆம் ஆண்டு டி.சி.விஜயவர்த்தன எழுதிய விகாரையில் புரட்சி (Revolt in the Temple) என்ற நூலும் அதே ஆண்டு வெளியான ஆதர் விஜயவர்த்தன தலைமையில் அமைக்கப்பட்ட அரசாங்க பாஷை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையும் 1956ஆம் வெளியான மேற்படி பௌத்த ஆணைக்குழுவின் அறிக்கையும் இணைந்து சிங்கள மக்களினதும் சிங்கள தலைவர்களினதும் அரசியல் மனப்பாங்கை தீவிர வலுவுடன் வடிவமைத்தனர். இம்மூன்று நூல்களும் இன மத விரோதங்களையும் சகிப்புத்தன்மையின்மையையும் பரந்து பட்ட சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்குவதில் பெரும் பங்குவகித்தன.

மஹாவம்சத்தின் பங்கு
ஏற்கனவே நீண்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றுப் பகை உணர்வை சுமந்த ஒரு நூலாக மகாவம்சம் காணப்படுகிறது. அந்த நூலில்
இருந்து இன மத பகைமையும் விரோதமும் கருவாக பெறப்பட்டு நவீன இனவிரோத வரலாற்றுக்கு ஏற்ப வடிவமைப்பட்டன. சிங்கள அறிஞர்களினதும் ஆராய்ச்சியாளர்களினதும் எழுத்தாளர்களினதும் தீவிர பங்களிப்புடன் இனவாத அரச இயந்திரம் கட்டமைக்கப்பட்டது.
ஆதலால் இந்த அரச இயந்திரமானது தமிழின வெறுப்பையும் அழிப்பையும் தமது இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது என்ற வகையில் தமிழின பகைமையும் தமிழினத்தை அழிக்கும் மனப்போக்கும் சிங்கள மக்களின் மனங்களில் ஒரு தர்மமாக நியாயமாக கடமையாக வளர்ந்துள்ளது. இதனை பிரதிப்பலிப்பதும் நிறைவேற்றுவதும்தான் எந்த ஒரு சிங்களத் தலைவர்களினதும் எந்த ஒரு சிங்கள அரசாங்கத்தினதும் பணியாகிறது. அதலால் சிங்கள அரச இயந்திரம் அந்த அரச இயந்திரத்திற்கு பின்னால் உள்ள மூளைகள் அதற்கு இசைவான நிர்வாக கட்டமைப்புக்கள் இவற்றை முன்னெடுக்கவல்ல தலைவர்கள் அதன் வழி அரசாங்கங்கள் என்ற அனைத்தையும் ஒன்றில் இருந்து இன்னொன்றை பிரித்துப்பார்க்காது அனைத்தையும் ஒரு திசை வழி இலக்கென பார்க்க வேண்டும்.

அரசியலை மேடையில் காட்சியளிக்கும் தலைவர்களின் சந்தர்ப்பவாத வார்த்தைகளுக்கு உள்ளால் அரசியலை பார்க்காது அதனை அரச இயந்திர
கட்டமைப்புக்கு உள்ளாலும் அந்தக் கட்டமைபுக்குரிய மூலச் சித்தாந்தம் கோட்பாடு என்பனவற்றிற்கு ஊடாகவும் அது வரலாற்று நடைமுறையில்
ஈட்டியிருக்கும் வெற்றி அடைந்திருக்கும் ஸ்தானம் என்பவற்றிற்கு ஊடாகவும் எடைபோடவேண்டும். அப்படி எடை போட்டால் நுனிப்புல் மேயும்
அரசியல் கண்ணோட்டத்திற்கு உட்படாமல் வெறும் சலசலப்பு தளம்பல் அரசியலுக்கு பலியாகாமல் ஏமாற்று வித்தைகளுக்குள்ளும் காலம் தாழ்த்தல்களுக்கு உள்ளும் சிக்குண்டு அழியாமல் ஈழத்தமிழரை பாதுகாப்பதற்கான வழிகளைத் தேட முடியும்.

ராஜபஷ எனும் சுனாமி
ராஜபக்ஷ அரசாங்கம் ஓர் அகால தோல்வி அடைந்துவிட்டது. இந்த தோல்வி ஒரு பெரும் அதிசயம் போல் தோன்றுகிறது. ஆனால் சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் இந்த தோல்வியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதேவேளை சிங்களமக்கள் மத்தியில் இருந்து ராஜபக்ஷவுக்கு 60 வீத வாக்குகள் கிடைத்துள்ளன. ராஜபக்ஷ தோல்வியடைந்தது அதிசயம் போல் தோன்றுவதை விடவும் உண்மையான அதிசயம் இனிமேல்தான் நடக்க இருக்கிறது.

இதுபற்றி முதுபெரும் ஆங்கில பத்திரிகையாளரான டி.மஹிந்தபாலா The Birth and Rise of the Nugegoda Man என்ற ஆங்கில கட்டுரையில் மகிந்த ராஜபக்ஷ ஓரு சுனாமியாய் அதாவது ஆழிப்பேரலையாய் இப்பொழுது இருக்கும் அரசாங்கத்தை நடைபெறவுள்ளதாக கூறப்படும் எதிர்வரும் சூலை நாடாளுமன்றத் தேர்தலில் அடித்துச் சென்றுவிடுவார் என்று கூறுவதன் மூலம் நிகழவிருக்கும் அதிசயத்தை இப்போதே ஆருடம் கூறுகிறார்.

சிங்கள மக்களின் மனப்பாங்கை புரிந்துகொண்ட அனுபவம் வாய்ந்த ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் இவர் கூறும் ஆருடத்தை நாம் புறந்தள்ள முடியாது. அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி நுகேகோடவில் நடந்த மாபெரும் பேரணியில் லட்சக்கணக்கில் சிங்கள மக்கள் பெரு வெள்ளமென திரண்டதாகவும் இது ஆழிப்பேரலையாய் இப்போது இருக்கும் அரசாங்கத்தை சூலை மாதத்தில் அடித்துச் சென்றுவிடும் என சிங்கள பேரினவாத மனப்பாங்கிற்கு ஊடாக அவர் அதனை விளக்குகிறார்.

47 வேறுபட்ட கட்சிகளும் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.யும் இந்திய உளவு அமைப்பான றோவும் சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்களும் இணைந்து மக்கள் எதிர்பாராத விதமாக இரகசிய சதிகாரத்தனமாக ராஜபக்ஷாவை வீழ்த்தி விட்டதாகவும் ஆனால் ராஜபக்ஷாவோ வெளிப்படையான மக்கள் வெள்ளத்தொடர் எழுச்சிபெற தொடங்கிவிட்டதாகவும் அக்கட்டுரையில் அவர் விவரிக்கிறார். மேலும் ஜனவரி மாதம் நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தல் 1960ஆம் அண்டு மார்ச் மாதம் நிகழ்ந்த நாடாளுமன்ற தேர்தல் மூலம் டட்லி செனநாயக அரசாங்கம் அமைத்ததுடன் ஒப்பிட்டு பின் அதே ஆண்டு சூலை மாதம் நிகழ்ந்த நாடாளுமன்றத் தேர்தலில் டட்லி தோற்கடிக்கப்பட்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக வெற்றிபெற்று அரசு அமைத்தது போல ராஜபக்ஷவின் ஜனவரி தோல்வியையும் சூலையில் வெற்றி பெறக்கூடும் என்பதையும் அக்கட்டுரை விவரித்தது. இங்கு கருத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் சிங்கள இனவாத அரசியல் மனப்பாங்கை பற்றி மேற்படி மஹிந்தபால கொண்டிருக்கும் கண்ணோட்டமும் அது மேலும் வீரியத்துடன் எழுச்சிபெறும் என்ற அவரது கருத்தான அடிப்படைகள் புறந்தள்ளப்பட முடியாதவை என்பதுதான்.

இன அழிப்புத் தன்மையோடு வடிவமைக்கப்பட்டு வலுப்பெற்று ஸ்தாபிதம் அடைந்திருக்கும் சிங்கள அரச இயந்திரம் பற்றிய அரசியல் உடற்கூற்றினை (Poitical Anatomy) புரிந்துகொள்ளாமல் அதுபற்றிய அரசியல் பார்வை இல்லாமல் எழுமாத்திரத்தில் அரசியல் அணுகுமுறைகளை மேற்கொண்டால் அது தமிழ்மக்களுக்கு புதைகுழி தோண்டுவதாகவே அமையமுடியும்.

போர்க்குற்ற விசாரணையை நீர்த்துப் போகச்செய்ததில் சிங்களம் அடைந்த வெற்றி
‘போர்குற்ற விசாரணையை’ ஒத்திபோட்டமை என்பது இனவாத சிங்கள அரசுக்கு கிடைத்த வெற்றியும் அதன்பொருட்டு தற்போதைய சிறிசேன அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றியும் இறுதியில் இராஜபக்ஷவுக்கு கிடைத்த வெற்றியும் ஒட்டுமொத்தத்தில் சிங்கள இனப் படுகொலையாளர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றியுமாகும்.

இனப்படுகொலை ஒரு தனிநபருடையதல்ல. அது சகல சிங்கள இனத்தவருடையதுமான ஆதரவுடனும் விருப்பத்துடனும் வரவேற்புடனும் அரங்கேறிய ஒரு கூட்டுமன இனப்படுகொலையாகும். அதற்கான விசாரணையை இல்லாமல் செய்வதில் சிங்கள அரசும் சிங்கள இனவாதமும்
வெற்றி பெற்றுவிட்டன என்பதே உண்மையாகும்.

இங்கு சந்திரிகா-சிறிசேன-ரணில் அரசாங்கம் பதவியில் இருக்கின்றதோ அல்லது இல்லையோ என்பதல்ல பிரச்சனைமீண்டும் ராஜபக்ஷ பதவிக்கு வருவாரா இல்லையா என்பதல்ல பிரச்சனை. யார் பதவியில் இருந்தாலும் ‘போர்க்குற்ற விசாரணையை’ பின்போடுவதில் வெற்றி பெற்றுவிட்டனர் என்பதே தந்திரம். இது ஒட்டுமொத்த சிங்கள இனப்படுகொலை கலாச்சாரத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.

அரசற்ற படுகொலைக்கு உள்ளான அப்பாவி தமிழ் மக்களை உலக அரங்கில் உள்ள அனைத்து அரசுகளும் சிங்கள அரசு சார்ந்த தத்தம் அரச நலன் கருதி கைவிட்டுவிட்டன. இந்தவகையில் நீதி நியாயங்களுக்கு அப்பாலான அரச நலன் சார்ந்த சர்வதேச உறவு நிலையைப் புரிந்து கொண்டு ஈழத்தமிழரின் உரிமைகளை நிலைநாட்டவல்ல அரசியல் ராஜதந்திர வியூகங்களுக்கு ஊடாக ஈழத்தமிழர்களின் உரிமைகளையும் நியாயங்களையும் நிலைநாட்டுவதற்குரிய வழிவகைகளை கண்டறிய வேண்டும். இதில் அதிக பொறுப்புணர்வுடனும் புதிய சிந்தனையுடனும் புத்திக்கூர்மையுடனும் ஆழ்ந்த அரசியல் ஞானத்துடனும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு ஈழத்தமிழர் செயற்பட வேண்டும். கரையான் புற்றெடுத்ததுபோல சிங்கள மேலாத்திக்க அரசியல் தமிழ்மக்கள் மீது புற்றெடுத்து தமிழ்மக்களின் தேசிய தன்மையையும் வாழ்வையும் சல்லறையாக்கிவிட்டது. உரிமை, பண்பாடு , அடிமைநிலை என்பனவற்றை புரிந்து கொள்ளவதற்கென ஒரு மனமும் அதற்கான பார்வையும் வேண்டும். ‘ஒருவன் தான் அடிமையாய் இருக்கின்றேன் என்பதை புரிந்துகொண்டாலே அவர் அரைவாசி விடுதலையடைந்துவிடுகிறான்’.

இந்தவகையில் தமிழ்மக்கள் காலதாமதப்படுத்தும் அரசியல் மூலம் மேலும் மேலும் அடிமையாக்கப்படுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் சிந்தனை தேவைப்படுகிறது. இந்த ‘போர்க்குற்ற விசாரணையை’ தாமதப்படுத்துவதன்மூலம் மட்டுமன்றி கடந்த 75 ஆண்டுகாலப் பகுதியில் இதேபோல எல்லா வகைகளிலும் அனைத்து துறைகளிலும் காலதாமதப் படுத்தும் தந்திரத்தை பிரயோகித்து தமிழ் மக்களை கருவறுப்பதை சிங்கள இனவாதம் தொடர் வெற்றிகளை ஈட்டிவருகிறது. அதிக தாமதம் அதிக ஆபத்தானதும் அதிக தீங்கானதுமாகும். இனி அடுத்தது என்ன என்ற கேள்வியை தமிழ்த்தரப்பு தன் நெஞ்சில் நிறுத்தி புதிய வழியில்; சிந்திக்க வேண்டும்.
 - ஜெயந்தரன்

Monday, March 2, 2015

இராஜபக்ஷவின் இராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக்கும் சிறிசேன! -- ஜெயந்தரன்

அரசியல் அழிப்புக்கு வழிகோலும் இராணுவ அழிப்பு; இராணுவ அழிப்பை பின்தொடரும் அரசியல் அழிப்பு; இராணுவ அழிப்பின் மறுபக்கம் அரசியல்
அழிப்பு; இராணுவ வெற்றித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்படும் அரசியல் மாளிகை. இதுதான் இன்றைய ஈழத்தமிழர் அரசியல் நிலைகுறித்து
சொல்லப்படக்கூடிய கருத்தோட்டமாகும்.

அரசியலை சம்பவங்களுக்கு ஊடாக அன்றி அதன் தர்க்கபூர்வ வளர்ச்சிப்போக்குக்கு ஊடாக அடையாளம் காணவேண்டும்.
சிங்கள உயர்குழாத்தின் அரசியல் அகராதியில் மிகத்தெளிவான ஒற்றை இலக்கு மட்டுமே உள்ளது. அதாவது தமிழினத்தை எவ்வாறேனும்
அழித்தொழித்துவிடுவது என்பதாகும். இதில் காலகட்ட சூழலுக்கு ஏற்ப சிங்களத் தலைமைகள் ஐக்கிய தேசிய கட்சியோ அல்லது சுதந்திர கட்சியோ
ஜனதா விமுக்தி பெரமுனவோ இடதுசாரிகளோ வலதுசாரிகளோ எக்கட்சியினராயினும் தமிழினத்தை அழித்தொழிப்பதில் ஒரே இலக்கை
கொண்டுள்ளனர். பயங்கரவாத ஒழிப்பு என்பதன் பேரில் மேற்படி அனைத்துத்தரப்பினரும் ஒருமுகமாக நின்று ஒத்த கருத்துடன் கைகோர்த்து நின்று இராணுவ ரீதியாக தமிழினத்தை அழித்ததில் முழுப்பங்கு வகித்தனர். இங்கு அரசியலை அதன் செயல்பூர்வ வளர்ச்சி நிலையில் வைத்து நாம்
புரிந்துகொள்ள வேண்டும்.

சிங்களத் தரப்பில் ஈ எறும்பு கூட மிச்சமின்றி அனைவரும் கட்சிவேறுபாடுகளைக் கடந்து சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு செயல்பூர்வமாக ஆதரவளித்தனர். சிங்கள பௌத்த மத நிறுவனங்கள் சமூக நிறுவனங்கள் அரசாங்க நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் பல்கலைக்கழங்கள் பாடசாலைகள் பத்திரிகைகள் வானொலிகள் தொலைக்காட்சிகள் என அனைத்தும் ஒன்றுகூட மிச்சமின்றி
ஏகோபித்த குரலில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு ஆதரவளித்தன.

தமிழனத்தை ஒடுக்குவது என்பது சிங்கள மக்களின் ஒரு கூட்டுமன முடிவாகும். இது அரசியல், வரலாற்று மற்றும் அறிவியல் அர்த்தத்தில் அதிகம் ஸ்தாபிதம் அடைந்துள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் மூலம் தான் அடைய விரும்பிய இலக்கை இராணுவ அர்த்ததில் சிங்கள அரசு
அடைந்துள்ளது. ஆனால் அது அரசியல் அர்த்ததில் முன்னெடுக்கப்பட்டு முழுமைப்படுத்தப்பட வேண்டியுள்ளது.தமிழினத்தை அழிப்பது பற்றிய சிங்கள இனவாத்தின் இலக்கை 100 புள்ளிகள் என எடுத்துக்கொண்டால் இராஜபக்ஷ தான் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் மூலம் அதில் 49 புள்ளிகளை அடைந்துவிட்டார். அதாவது 49ஆவது படியில் ஏறிவிட்டார். அந்த இடத்தில் இருந்து 50ஆவது புள்ளியை அல்லது 50ஆவது படியில் ஏறவேண்டிய தேவை அரசியல் அர்த்தம் கொண்டதாக இருந்தது. ஆனால் இராஜபக்ஷவின் கரங்கள் இனப்படுகொலையால் இரத்தம் தோய்ந்திருந்த நிலையில் அதன் அடுத்தகட்ட தேவையான அரசியல் வெற்றியை அதாவது சிங்கள இனவாத தேரோட்டத்தை நடத்த முடியாதவாறு இருந்தது. இந்நிலையில் சிங்கள இனவாதம் அரசியல் தளத்தில் முன்னேறவேண்டிய தேவையை பூர்த்தி செய்வதற்கு பார்வைக்கு முள்ளிவாய்க்கால் படுகொலையில் இரத்தம் தோயாத ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா, சிறிசேன போன்றவர்களின் அரசியல் வருகை அவசியப்பட்டது. அது இப்போது அவர்களுக்கு கைகூடியிருக்கிறது என்பதை அரசியல் ரீதியாக புரிந்துகொள்வதே சரியானதாகும்.

அதாவது இனப்படுகொலைக்கான இராணுவ நடவடிக்கை இனவாதம் வீறுநடைபோடுவதற்கு எதிராக இருந்த அனைத்து தடைகளையும்
நீக்கிவிட்டது. இதனை விரிவாக கூறுவது என்றால் தமிழ் மக்களின் மொழி, பண்பாடு, பிரதேசம், மக்கள் செறிவு, குடியடர்த்தி மற்றும் சமூக
நிறுவனங்கள், அரசியல் கட்டுமானங்கள் என்பனவற்றை அழிப்பதற்கு அவர்கள் மத்தியில் எழுந்த பல்வகைப் போராட்டங்கள் மற்றும்
ஆயுதப்போராட்டம் என்பன தடையாக இருந்தன. இத்தகைய தடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைக்குப் பெயரே இராணுவ நடவடிக்கையாகும். இத்தகைய இராணுவ ரீதியான இனப்படுகொலையின் மூலம் சிங்கள இனவாதம் தமிழ்மக்கள் மத்தியில் இருந்த அனைத்துவகையான சமூக அரசியல் போராட்ட கட்டுமானங்களையும் கூடவே மக்களையும் அழித்தொழித்து உளவியல் ரீதியான ஒரு யுத்தப் பீதியையும் தோல்வி மனப்பாங்கையும் ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் இவ்வாறு இராணுவ ரீதியாக திறக்கப்பட்ட இவ்வினவாத தளத்தின் மீது அரசியல் ரீதியாக மேற்கொண்டு இனவாதத்தை முன்னெடுக்கவேண்டிய அவசியம் சிங்கள இனவாதத்திற்கு உண்டு.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையால் சிங்கள இனவாதம் களங்கப்பட்டுள்ளது. உலக அரங்கில் அது அவமானப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தகைய களங்கம் ஒரு சிலரின் செயல்தான் என்று காட்டி அக்களங்கத்தை சிங்கள இனத்தி;ற்கு உரியதல்லாததாக்க வேண்டிய தேவை சிங்கள இனவாத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜபக்ஷ, கோத்தபாய போன்ற ஒருசிலரின் மீதுமட்டும் விரலைச் சுட்டிக்காட்டி இவ்வின அழிப்புக்
குற்றத்தில் ஈடுபட்ட சிங்கள அரச இயந்திரத்தையும் அதன் பின்னால் இருந்த அனைத்துவகை மூளைகளையும்ää ஊடகங்களையும், அமைப்புக்களையும் இனவாத சிங்கள வெகுஜன மனப்பாங்கையும் மற்றும் இனவாத தலைவர்களையும் விடுவித்து காப்பாற்றும் செயலில் சந்திரிகா,
ரணில், சிறிசேன, ஜேவிபி, ஹெலஉறுமய போன்றவர்கள் தேர்தல் களத்தில் ஈடுபட்டனர்.

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை படுகொலையை ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கனகச்சிதமாய்
நிறைவேற்றியது. அதில் அமைச்சராக இருந்த ஒருவர் ரணில் விக்கரமசிங்க. அந்த கறுப்பு ஜுலை படுகொலைக்காக ஐக்கிய தேசிய கட்சியினர்
கவலைப்பட்டதோ அல்லது மன்னிப்புக்கேட்டதோ அல்லது அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியோ அன்றி நிவாரணமோ வழங்கியது இதுவரையிலும் கிடையாது.அதன்பின்பு சந்திரிகா தலைமையில் பதவிக்கு வந்த சுதந்திர கட்சி அரசாங்கம் மேற்படி கறுப்பு ஜுலை படுகொலைக்காக மனிப்புக்கோரியதோ, நீதி வழங்கியதோ அன்றி நிவாரணம் வழங்கியதோ கிடையாது. ஆனால் அதற்கு மேலாக சந்திரிகா அரசாங்கம் இராணுவ ரீதியாக செம்மணி படுகொலையை அரங்கேற்றியது. 600 அப்பாவி தமிழ்மக்கள் செம்மணியில் ஆண், பெண் வேறுபாடின்றி இராணுவத்தால் படுகொலை செய்து புதைக்கப்பட்டனர்.
இதில் ஒன்று கிருசாந்தி எனும் பள்ளி மாணவி பாடசாலை சென்று திரும்பும் வழியில் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு குழு பாலியியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதுடன் கூடவே அவரது தாயும் சகோதரனும் அயலவரும் படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டனர். இப்படி கிழக்கு மாகாணத்திலும் கோணேஸ்வரி என்னும் அப்பாவி இளம்பெண் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு பாலியியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின் அவரது பெண்ணுறுப்பில் கைக்குண்டு வெடிக்க வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பதும் சந்திரிகாவின் ஆட்சியில் நிகழ்ந்தது.

சந்திரிகாவின் பின் பதவிக்கு வந்த அவரது அதே சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த ராஜபக்ஷ சிங்கள மக்களினதும் அனைத்து சிங்கள கட்சிகளினதும்
ஒட்டுமொத்த மனஅபிலாசையான இனப்படுகொலையை முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றினார். இதில் சுமாராக ஒன்றரைலட்சம் தமிழ் மக்களை கொன்றொழிப்பதன் மூலம் இவ்வினப்படுகொலை நிறைவேற்றப்பட்டது. ஆனால் இவ்வினப்படுகொலையை ராஜபக்ஷதான் தொடக்கி நிறைவேற்றினார் என்றில்லை. இதற்கு முன் மேற்படி பலகட்சிகளினாலும், ஆட்சியாளர்களாலும் தொடக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்ததை ராஜபக்ஷ நிறைவேற்றி வைத்தார் என்பது மட்டுமே உண்மை.இதனை சற்று தெளிவாக நோக்குவோம்.

1945ஆம் ஆண்டு இராண்டாம் உலக மகாயுத்தம் முடிந்ததைத் தொடர்ந்து மலேசியாவில் கம்யூனிஸ்டுக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமாராக 20 வீதத்தினர் சீன இனத்தவராவர். இந்த சீன இனத்தவர் மத்தியில்தான் கம்யூனிஸ்டுக்களின்
ஆயுதப்போராட்டம் பெரிதும் வளர்ந்திருந்தது. அப்போது அங்கு ஆட்சியிலிருந்த பிரித்தானியர் இதற்கு எதிராக கடுமையான இராணுவ
நடவடிக்கையில் ஈடுபட்டனர். பிரித்தானிய தளபதிகளான டெம்பளர், பிரிஜ் என்பவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் மூலம் கம்யூனிஸ்டுக்கள் முற்றாக தோற்கடிக்கப்பட்டதுடன் கூடவே சீன இனமும் ஒடுக்கப்பட்டுவிட்டது. இந்த இராணுவ நடவடிக்கையை பிரிஜ் என்ற தளபதியின் பெயரால் பிரிஜ் திட்டம்  என அழைப்பர். பிரிஜ், டெம்பளர் போன்ற தளபதிகளின் இராணுவ நடவடிக்கையை பிரதிபண்ணி தமிழினத்தை அழித்தொழிப்பதற்கான ஒரு இராணுவ திட்டத்தை அப்போது இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அதுலத்முதலி 1987ஆம் ஆண்டு ஆப்பரேஷன் லிபரேஷன் என்றதன் பேரில் முன்னெடுத்தார். இதனை மூன்று கட்டங்களாகப் பிரித்து முதலாவது கட்டமாக ஆப்பரேஷன் வடமராச்சி என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என அப்போது இந்திய அரசு எதிர்த்தது.இப்பின்னணியில் முதலாம் கட்டத்திற்கு அப்பால் இவ் இராணுவ நடவடிக்கையை சிங்கள அரசால் தொடரமுடியாமல் போனது. வடமராட்சியில் தமிழ்மக்களின் இரத்தம் ஆறாக ஓடியது. இலட்சக்கணக்கில் மக்கள் அகதிகளாயினர். ஒருவகையில் வடமராட்சி சுடுகாடானது. ஆனால் இந்த இராணுவ நடவடிக்கையை வடமராட்சியோடு நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அப்போது ஜே.ஆர் அரசாங்கத்திற்கு ஏற்பட்டதால் அதனை அவர்களால் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு தொடரமுடியாது போனது. இது இனவாதம் தன் இறுதி இலக்கை அடையமுடியாது போன ஒரு காலகட்ட நிலை. ஆனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச சூழல் தனக்கு சாதமாக இருந்த நிலையில் ஜே.ஆர்.அரசாங்கத்தால் வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்ட
மலேசிய பாணி பிரிஜ் இராணுவ திட்டத்தை ராஜபக்ஷ முள்ளிவாய்க்காலில் நிறைவேற்றி வைத்தார் என்பதே உண்மை. அப்போது 1987ஆம் ஆண்டு

ஜே.ஆர். அரசாங்கத்தில் லலித் அதுலத்முதலியால் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்பு 2009ஆம் ஆண்டு ராஜபக்ஷ
அரசாங்கத்தில் கோட்பயாவால் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைக்கான இராணு நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
ஐக்கிய தேசிய கட்சியும், சுதந்திரகட்சியும் இதில் ஒரேமாதியாக செயல்பட்டுள்ளதுடன் கூடவே இடதுசாரி என தம்மை கூறிக்கொள்ளும் தீவிர
இனவாதிகளான ஜே.வி.பி.யினர் ராஜபக்ஷவுடன் மேற்படி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் தம்மையும் இத்தகைய இனப்படுகொலை
வரலாற்றில் ஒரு பங்குதாராக தவறவில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் ரணில், சுதந்திர கட்சியின் சந்திரிகா, சிறிசேன, ஜே.வி.பி. என ஆகிய அனைவருமே ராஜபக்ஷவிடம் இருந்து பிரித்து
வேறுபடுத்தி பார்க்கக்கூடியவர்கள் அல்லர். மேற்படி அனைவரும், அனைத்துக் கட்சியினரும் ஒரு தமிழருக்கு எதிரான ஒரு முழுநீள இனவாதத்தின் தொண்டர்களாய் அவ்வப்போதைக்கு உரிய காலகட்ட பங்குகளை ஆற்றியுள்னர். தற்போது முள்ளிவாய்க்கால் படுகொலையின் மூலம் சிங்களப் பேரினவாதம் தெளிவாக களங்கபபட்டு அம்பலப்பட்டிருக்கும் போது அதற்கான பொறுப்பு ராஜபக்ஷவை மட்டுமே சாரும் என்பதுபோல ராஜபக்ஷவை கறுப்பு பூனையாக சுட்டிக்காட்டி தாம் அனைவரும் வெள்ளைப்பூனைகள் என மேற்படி நபர்களும் கட்சிகளும் காட்சியளிக்கும் ஒரு நாடகம் இப்போது அரங்கேறியிருக்கிறது. உண்மையான அர்த்தத்தில் இனவாதமானது முள்ளிவாய்க்கால் படுகொலை சாதித்த ஏற்படுத்திய வெற்றித்தளத்தை அடுத்த கட்டத்திற்கு அரசியல் ரீதியில் நகர்த்துவதற்கான இன்னொரு பரிணாம வளர்ச்சியாக தன்னை இனி மேலும் முன்னெடுக்கப்போகிறது என்ற ஆபாயத்தை தமிழ் மக்களும் சர்வதேச சமூகத்தினரும் புரிந்தாகவேண்டும்.

அரசியலை மேலெழுந்தவாரியாக் பார்க்காது அரசியலின் அரசியலையம் (Politics of Politics) அரசியலின் மறுபக்கத்தையும் (Other side of Politics) நாம்
பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். அரசியலானது ஒரு சிறப்பு தேர்ச்சி மிக்க வித்தை; அது ஒரு கலை; அது ஒரு முறைமை. இயந்திரமானது தனக்கென
ஒரு இயங்கும் முறைமையை கொண்டிருக்கிறது. ஒரு வண்டி தனக்குரிய இயங்கும் முறையை கொண்டிருக்கிறது. அந்த வண்டியின் முறைமைக்கு
உட்பட்டுத்தான் அந்த வண்டியை ஓட்ட முடியும். எழுமாத்திரத்தில் அந்த வண்டியை ஓட்ட முற்படுவது அல்லது மனம்போன போக்கில் ஓட்ட
முற்படுவது என்பது தற்கொலைக்கு ஒப்பான செயல்.
அரசியல் ஒரு முறைமைப்படி இயங்குவதால் அதனை எழுமாத்திரத்திலோ அல்லது மனம்போன போக்கில் இயக்கினால் அந்த இயந்திரத்தின்
முறைமைக்குள் சிக்குண்டு அதற்கு நாம் இரையாக நேரும் அல்லது பலியாக நேரும். ஈழத்தமிழர் அரசியலில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக
இத்தகைய எழுமாத்திர அரசியல் போக்கே மேலோங்கியிருக்கிறது. பொதுவாக ஈழத்தமிழர் தரப்பில் அரசியலை வாழ்வாக கொண்ட முழுநேர
அரசியல் தலைமைகள் இருந்ததில்லை. பகுதிநேர தலைவர்களின் தலைமையில் அரசியல் முன்னெடுக்கப்பட்ட வரலாறே பெரிதும் இருந்ததால்
அத்தகைய தலைவர்களால் ஆழ்ந்த அறிந்த அரசியலில் ஈடுபடுவதற்கான நேரமோ வாய்ப்போ அவர்களுக்கு இருக்கவில்லை. குறிப்பாக 1977ஆம்
ஆண்டுவரை இதனைக் காணலாம். அறிவுசார் அரசியலும் அர்ப்பணிப்பான செயல்பாடுகளும் இன்றி ஒரு மக்கள் கூட்டத்தின் தலைவிதியை
வெற்றியில் இட்டுச்செல்ல யாராலும் முடியாது.

தமிழ்த்தலைவர்கள் கல்விமான்களாகவும், சட்ட வல்லுநர்களாகவும் இருந்த போதிலும் அவர்கள் முழுநேர தொழிலாக வழக்காடலைச் சார்ந்ததுடன்
பகுதிநேர தலைவர்களாக இருந்த நிலையில் அரசியலை அறிவுசார்ந்து அணுகக்கூடிய நெளிவுசுளிவான பாதையில் வழிநடத்தக்கூடிய இராஜதந்திர
நகர்வுகளுக்கான ஈடுபாட்டை காட்டக்கூடியதற்கான நேரமும் அதற்கான அர்ப்பணிப்பும் அற்ற தலைவர்களாக இருந்த நிலையில் தமிழ்மக்களின்
தோல்வி எழுதப்பட்ட தலைவிதியென பெருமூச்சுடன் நீண்டுசெல்லும் துர்ப்பாக்கியத்திற்கு உள்ளானது. கூடவே தமிழ் அறிஞர்கள் அரச உத்தியோகம் சார்ந்த நலனைக் கொண்டிருந்ததால் அவர்களின் மூளை தமிழ்மக்களின் நலன்கருதி சிந்திக்க மறுத்தது. உத்தியோக வாய்ப்பு, பதவி உயர்வு, இடமாற்றம் என்பன சிங்கள அரசின் கையில் இருந்ததால் அந்த அரசு இயந்திரத்தின் நலனுக்கு வெளியே தமிழ் அறிஞர்களால் சிந்திக்க முடியாது
போனது மட்டுமல்ல அந்த அரசு இயந்திரத்திற்கு உரிய உத்தியோகத்தர்கள் என்ற வகையில் தமிழ் அறிஞர்களும் தமிழருக்கு எதிரான சிங்கள அரசு
இயந்திரத்தின் சேவகர்களாய் நடைமுறையில் செயற்படும் துர்ப்பாக்கியமே காணப்பட்டது. அதாவது தமிழ்த்தலைவர்களும் சரி, தமிழ் அறிஞர்களும்
சரி ஈழத்தமிழர்களின் அரசியலை அறிவுசார் அரசியலாக முன்னெடுக்க முடியாத ஒரு அரசியல் கலாச்சாரத்தையே தமிழ்ச்சமூகம் கொண்டிருக்க
நேர்ந்தது. இத்தகைய அறிவுசாரா அரசியல் கலாச்சாரத்தினதும், அறிவுசாரா அரசியல் பழக்கதோஷத்தினதும் களத்தில்தான் ஆயுதப்போராட்டம்
1970களின் பிற்பகுதயில் எழுச்சிபெறத் தொடங்கியது. ஆதலால் ஆயுதப்போராட்ட இளைஞர்கள் முழுநேர அரசியலில் ஈடுபடத்தொடங்கிய போதிலும் சமூகத்தில் காணப்பட்ட அறிவுசாரா அரசியல் கலாச்சார விளைநிலத்தில்தான் இவர்களும் முளைவிட நேர்ந்தது. இதனால் தமிழ்மக்களின் அரசியலில் அறிவுசார் அரசியல் வறண்ட நிலத்து பயிராக நீடிக்க நேர்ந்தது என்ற உண்மை நாம் தெளிவாக புரிந்தாக வேண்டும். அதனை புரிந்து கொள்ள தவறினால் இனிமேலும் நாம் அதை நிவர்;த்தி செய்து முன்னேற வழியிருக்காது. விருப்பு வெறுப்புக்களை கடந்து நோயை நோயாக
அடையாளம் கண்டு அதற்காக மருத்துவத்தை மேற்கொண்டு நாம் முன்னேற தயாராக வேண்டும்.இந்தவகையில் நாம் நடந்து முடிந்த தேர்தலையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் நாம் பரிசீலித்து அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தமிழர்கள் தயாராகவேண்டும்.

வெளிப்படையாக பார்க்கும் போது ராஜபக்ஷ இனப்படுகொலை செய்தமை எம் கண்முன் நிற்பதினால் ஒருவகை பழிவாங்கும் உணர்வோடு அவருக்கு
எதிராக மக்கள் விரலை நீட்டுவது இயல்பு. அது தவிர்க்க முடியாததும் கூட. ஆனால் இங்கு நாம் இலாப நட்ட கணக்கை சரிவர போட்டாகவேண்டும்.
ராஜபக்ஷவுக்கு எதிராக நிற்கும் சந்திரிகாவுக்கு இப்போதுதான் ஞானம் திறபட்டுவிட்டது என்றில்லை. பண்டாரநாயக்க குடும்பத்திற்கு எதிராக
ராஜபக்ஷ குடும்பம் தலையெடுத்தபோது அதை தாங்கமுடியாத பண்டாரநாயக்க குடும்பத் தலைவி முதலைக் கண்ணீர்விட்டு தமிழ் மக்களின்
வாக்குகளை பெற முற்பட்டதை நாம் மறக்கக்கூடாது. ரணிலும் சேனநாயக்க குடும்பத்தின் இறுதி வாரிசு ஆவார். அவரும் தனது குடும்ப ஆதிக்கத்திற்கும் தமது கட்சி நலனுக்குமாக ராஜபக்ஷவை எதிர்க்க வேண்டிய தேவை இருந்தது. தமிழரை ஒடுக்கிய சந்திரிகாவும், ரணிலும் தமிழரின் வாக்குகளால் ராஜபக்ஷவை வீழ்த்தும் தந்திரத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இவர்கள் இனவாதிகளாகவும், இனப்படுகொலையாளர்களாகவும் கடந்தகால வரலாற்றில் தம்மை தம்செயற்பாடுகளால் நிருபித்துள்ளனர்.
ஆனாலும் இப்போது அவர்கள் தமிழ்மக்களின் வாக்குக்களினால் தமது எதிரியான ராஜபக்ஷவை வீழ்த்த முடிந்தது என்ற வகையில் தம்
முதலைக்கண்ணீருக்கு பதிலாக குறைந்தபட்சம் செயற்படக்கூடிய உடனடியான அரசியல் வெளி அரசியல் அரங்கில் உள்ளது. அதாவது
வடக்கு-கிழக்கு மாகாணசபையை இரண்டாக பிரித்து ஒரு அரசியல் பிரச்சனை மூலம் அல்ல வெறும் சட்டநுணுக்கப் பிரச்சனையின் மூலமே.

அதாவது வடக்கு-கிழக்கு மாகாணங்களை நாடாளுமன்றத்திற்கூடாக இணைக்கவேண்டும் என்பதற்கு பதிலாக அன்றைய ஜனாதிபதி ஜெயவர்த்தன
அதனை அரச இதழ் வாயிலான அறிவித்தல் மூலம் இணைத்ததுதான் தவறே தவிர இணைப்பு தவறு என்று தீர்ப்பில் கூறப்படவில்லை. ஆனால்
தீர்ப்பை வைத்துக்கொண்டு ராஜபக்ஷ வடக்கு-கிழக்கு இணைப்பை துண்டாடினார். ஆனால் தற்போது ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கூடான
அறிவித்தல் மூலம் இவ்விணைப்பை சில நிமிடங்களில் செய்திடமுடியும். ராஜபக்ஷவின் அநீதிகளுக்கு எதிராக நீதிக்கொடி தூக்கும் சந்திரிகா, ரணில்,
சிறிசேன, ஜே.வி.பி.யினர் வடக்கு-கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட அநீதியை இப்போது தமக்கிருக்கும் அரசியல் சட்ட வாய்ப்பைக்கொண்டு
சிலநிமிடங்களிலேயே வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்துவிடக்கூடிய இந்த நடவடிக்கையை முதலில் மேற்கொள்வார்களா!?

இந்த கேள்வியை மனதில் நிறுத்திக்கொண்டு தற்போது தற்காலிகமாக கிடைத்திருக்கக்கூடிய ஒரு போலி ஜனநாயக அரங்கில் குறைந்தபட்சம்
தமிழ்த்தலைவர்களும், தமிழ் அறிஞர்களும் செயற்படக்கூடிய ஒரு வெளி இருக்கவே செய்கிறது. இலங்கையில் செயற்படும் பெரும்பான்மையின
சர்வாதிகாரத்தைத்தான் ஜனநாயகம் என்று சொல்கின்றனர். இதனை ஆங்கிலத்தில் (யதழசவையசயைnளைஅ) என அழைப்பர். அதாவது இதனை
தெளிவாக சொல்வதென்றால் பெரும்பான்மையின ஜனநாயக சர்வாதிகாரமாகும். சிங்கள இனத்திடம் காணப்படுகின்ற இத்தகைய கூட்டுமன கட்டமைப்பான கருத்தமைவு எத்தகைய சிதைவும் இன்றி அப்படியே இருக்கின்றது. சிங்கள இனத்தவர்களிடம் காணப்படுகின்ற தமக்கிடையேயான குடும்ப ஆதிக்கப் போட்டியில் தமிழரை தமக்கு சாதகமான துருப்புச்சீட்டாக கையாண்ட அளவுக்கு தமிழரின் உரிமைக்கு எதிராகவும் சிங்கள அரச இராணுவத்தால் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் சிங்கள கூட்டுமனத்தை மனமாற்றத்திற்கு உள்ளாக்குவார்கள் என்றில்லை. ஆனாலும் தமிழ்மக்களின் வாக்குக்களால் பதவிக்கு வந்தவர்கள் தற்காலிகமாவேனும் நேரடி அர்த்தத்தில் தமிழருக்கு எதிராக செயல்படமுடியாத ஒரு சூழல் உண்டு. அதேவேளை தமிழருக்கு எதிராக வடிவமைக்கப்பட்டிருக்கும் அரச இயந்திரம் மொழி, பண்பாடு, அரசியல், பொருளாதாரம், குடியமைவு என அனைத்துத்துறைகளிலும் தன் திசைநோக்கிய செயற்பாட்டிலிருந்து பின்வாங்கமாட்டாது. இதனை ஸ்தாபிதம் அடைந்திருக்கும் அரச இயந்திர அமைப்பு முறைக்கூடாக சிந்திக்க வேண்டுமே தவிர நபர்களுக்கு ஊடாக அல்ல. சர்வதேச அரசியிலிலும் உள்நாட்டு அரசியலிலும் காணப்படும் வாய்ப்புக்களை கண்டறிந்து அறிவுசார் அரிசியல் அணுமுறையில் நின்று அர்ப்பணிப்புடனான முழுநேர அரசியல் தலைவர்களாகவும் அரசியல் அறிஞர்களாகவும் செயற்படவேண்டிய பொறுப்பு தமிழ்ச்சமூகத்தின் முன்னோடிகள் முன் உண்டு.

அநீதி என்பது இராணுவ நடவடிக்கையிலான இனப்படுகொலை மட்டுமல்ல. தமிழரின் சுயநிர்ண உரிமையை மற்றும் உரிமைகளை மறுக்கும்
அனைத்து செயல்களும் அநீதிதான். ஆதலால் ராஜபக்ஷவின் இராணுவ நடவடிக்கையின் மூலமான படுகொலையை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு
ஏனைய அநீதிகளை அப்படியே செயற்பட விடமுடியாது. கொல்லப்பட்டவர்களை உயிர்ப்பிக்க முடியாது என்று சொல்லி கொல்லப்பட்டதோடு கதை முடிந்துவிட்டது என்பதல்ல. கொல்லப்பட்டதற்கு நீதியின் பெயரால் தண்டனையும் வேண்டும் நிவராணமும் வேண்டும். அதேவேளை பிரிக்கப்பட்ட வடக்கு-கிழக்கை இணைப்பது என்பது கொல்லப்பட்டவனை உயிர்ப்பிக்க முடியாது என்பது போன்றதல்ல. ஆதலால் பிரிக்கப்பட்ட வடக்கு-கிழக்கை மீண்டும் இணைத்துக்காட்டுவதுதான் நீதி. அத்துடன் தமிழ்மக்கள் இந்த வடக்கு-கிழக்கு இணைப்பைக் கொண்ட மாகாணத்தீர்வை கூட அவர்கள் தமது உரிமைக்கான தேவையை பூர்த்தி செய்ததாக சொல்லவில்லை. அவர்களின் தேவை அதற்கும் மேலானது. எனவே அவர்கள் நீதி என கருதும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அதற்கான தீர்வை கண்டாகவேண்டும். குறைந்தபட்சம் இன்றைய சிங்களத்தலைவர்கள் உடனடியாக இணைப்பை அறிவிப்பார்களா என்று கேட்டால் அவர்களது ‘ஆம்’இ அல்லது ‘இல்லை’ என்ற பதிலில் இருந்து அடுத்த கட்டத்தைப்பற்றி சிந்திக்க முடியும்.

இந்தியாவில் இந்துக்களை நோக்கி முஸ்லிம்களின் உரிமைக்காகவும் உயிர்களை காப்பதற்காகவும் 1947ஆம் ஆண்டு மகாத்மா காந்தி
உண்ணாவிரதத்தை மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றார். இந்துக்கள் காந்தியின் போராட்டத்திற்கு பணிந்தனர். இப்போது சிங்களத் தலைவர்கள்
சிங்கள இனவாதத்திற்கு எதிராக குறைந்தபட்சம் இப்படி காந்தி இருந்ததுபோன்ற உண்ணாவிரதங்களை மேற்கொண்டு சிங்கள மனப்பாங்கை
மாற்றவும் தமிழர்களின் உரிமை நிலைநாட்டவும் பாடுபடுபட்டால் குறைந்தபட்சம் அவர்கள் மீது நாம் நம்பிக்கை வைக்க வாய்ப்பு இருக்கும். இதற்கு முன்னோடியாக தமிழ்மக்களின் வாக்குக்களால் பதவிக்கு வந்த இன்றைய ஜனாதிபதியும், பிரதமரும், இன்றைய புதிய அரசாங்கத்தின்
சூத்திரதாரியான சந்திரிகாவும் இணைந்து இன்றைய அரசாங்கத்தின் பெயரால் சிங்கள இராணுவத்தாலும் அரச இயந்திரத்தாலும் படுகொலைக்கு
உள்ளான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முதலில் மன்னிப்பு கோருவார்களா? இவ்வாறு கோரவைக்கவேண்டிய பொறுப்பும், கடமையும்
தமிழ்த்தலைவர்களும் தமிழ்அறிஞர்களுக்கும் தமிழ் ஊடகங்களுக்கும் முதற்கண் உண்டு.
---------------------------------------------------------------------------

Wednesday, April 9, 2014

பாராளுமன்றத் தேர்தலில் தமிழீழம்

தமிழினத்திற்கு விரோதியாக தமிழனையே நிறுத்துவதுதான் 60 ஆண்டுகளாக சிங்களர்களின் ராஜதந்திரமாக இருந்து வருகிறது. அதில் இன்னும் ஒருபடி மேலே போய் ஷோபாசக்தி, லீனா மணிமேகலை, சந்தோஷ் சிவன் என்று தமிழ்நாட்டு சினிமாத் துறையினரையும் உசுப்பேற்றியுளளார்கள். சந்தோஷ் சிவனின் டெரரிஸ்ட், தற்போது வெளிவந்த இனம், லீனாமணிமேகலை - ஷோபா சக்தி இணைந்து எடுத்த செங்கடல் போன்ற படங்கள் இதற்குச் சான்று.

ஈழத்திலும் அப்படி சிங்களவர்களை அடிதாங்கி நிற்கும் தமிழர்கள் பலரைப் பார்க்கலாம். கொழும்பு, மலையகம், தெற்குப் பகுதி போன்ற சிங்களர்கள் பகுதியில் வாழும் தமிழர்கள் பெரும்பாலும் இந்த மனப்போக்கை கொண்டிருப்பார்கள். இப்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அந்தப் போக்கு உருவாகி வருகிறது. சோத்துக்கும், இடத்துக்கும் சிங்களன் தான் கருணைகாட்ட வேண்டும் என்கிற நிலை வரும்போது இந்தக் கேவலங்கள் நிகழுவதை என்னவென்று சொல்ல?உதாரணமாக சமீபத்தில் நடந்த தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழப் பிரதிநிதிகள் ராஜபக்சேவின் கையால் பதவிப் பிரமாணம் ஏற்றதில் உச்சிகுளிர்ந்து நின்றதைச் சொல்லலாம்.

முத்தையா முரளிதரன் போன்ற விஐபிக்கள் இலங்கை அரசுக்கும் அதன் ராணுவத்துக்கும் ஆதரவாக பெரும் பிரச்சாரமே செய்து வருகிறார்கள். இவர் தமிழன் தான். ஆனால் தமிழர்கள் யாராவது ஆட்டோகிராப் கேட்டால் கூட அலட்சியமாக இருப்பாராம். தன் வாழ்நாளில் இதுவரை ஒருமுறை கூட தமிழர்கள் பட்ட துயரத்துக்காக ஒரு வார்த்தை உதிர்த்தில்லை. ஜாலியாக கிரிக்கெட் விளையாடி சம்பாதித்துக்கொண்டே இருந்தார். இலங்கையின் தமிழினப் படுகொலையை மூடி மறைப்பதில் முரளிதரன்களின் பங்கு அபாரமானது! வடக்கு இலங்கையில் உண்மையில் என்ன நிலை நிலவுகிறது.. அங்குள்ள மக்கள் உண்மையாகவே சுதந்திரமாக இருக்கிறார்களா என்று அறிய தன்னிச்சையாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் யாழ்ப்பாணம் பகுதிக்குச் சென்று வந்த பின், இந்த முத்தையா முரளிதரனையும் ஒரு தமிழர் என்ற முறையில் சந்தித்தார்.

அப்போது தமிழர் நிலை பற்றி முரளிதரன் "என்னைப் பொருத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக பிரச்சினைகள் இருந்து வந்தன. அதிலிருந்து அகல முடியவில்லை யாராலும். போர்க்காலத்தில் ஐநா பிரதிநிதிகளுடன் நானும் அந்தப் பகுதியைப் பார்த்திருக்கிறேன். மக்களுக்கிடையிலான உணர்வுகளை நேர்ப்படுத்தும் பாலமாக கிரிக்கெட் இருக்கிறது. ஆனாலும் வசதிகள் வேண்டும். இப்போது சாலைகள் போடப்பட்டுள்ளன, பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. வர்த்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. வடக்கு முன்னேறி வருகிறது. இலங்கை ராணுவத்துக்கு நன்றி. இவையெல்லாம் நடக்க பெரும் முயற்சிகள் எடுத்தவர்கள் ராணுவத்தினர்தான். இந்த நாட்டில் 20 மில்லியன் மக்கள் உள்ளனர். வடக்கில் ஒரு மில்லியன் மக்கள்தான். ஆனால் இப்போது மற்றவர்களை விட அவர்கள் மட்டும்தான் கூடுதல் கவனம் பெற்றுவருகின்றனர்!" என்று மிகுந்த அப்பாவி போல் பேசியிருக்கிறார்.

தனி ஈழம் குறித்தும் அதன் விடுதலை குறித்தும் பாஜக கட்சியின் போடும் இரட்டை வேடம் மிக வெளிப்படையானது. தமிழ்நாட்டில் தெற்கே போகப் போக இவர்களுக்கு ஈழ ஜூரம் அடிக்கும். வடக்கே போகப் போக 'யாரது ஈழத்தமிழர்கள்?' என்பார்கள். அக்கட்சியின் சிவகங்கை வேட்பாளர் எச்.ராஜா சமீபத்தில் பேட்டியொன்றில் ராஜபக்சேவை இந்தியாவுக்கு வரவேற்றதில் என்ன தவறு என்று கேட்டிருக்கிறார். இனவெறி மிக்க ராஜபக்சே மத்தியப் பிரதேசத்தில் உள்ள புத்தர் கோயிலுக்கு சென்ற ஆண்டு வந்தபோது சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை வழங்கியவர் பாஜகவின் முதலமைச்சர். அப்போது அதை எதிர்த்து மத்தியப் பிரதேசம் வரை போய் முழங்கிய வைகோ அண்ணன் தான் இப்போது அதே பாஜக கூட்டணியில் அவர்களுக்கு ஆதரவாக முழங்குகிறார்.

உங்கள் கூட்டணியிலுள்ள வைகோவின் தேர்தல் அறிக்கையில் தனி ஈழம் பற்றி இருக்கிறதே அது பற்றி சொல்லுங்கள் என்று எச்.ராஜாவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது.."பா.ஜ.க வைப் பொருத்தவரை ஒரு நாட்டை பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பேச்சு வார்த்தையின் மூலம் தான் தீர்வு காண முடியும். என்பது எங்கள் நிலை. சம தர்மம், சம உரிமை என்பது தான் எங்கள் கொள்கை. ஆனால் 2004 வரை பேச்சுவார்ததைகள் தான் நடந்து வந்தது. அதன் பிறகு சோனியா காந்தி தலைமையில் வந்த ஆட்சி தான் ராணுவத்தை அனுப்பியது. இலங்கை ராணுவத்துடன் இந்திய ராணுவமும் அனுப்பப்பட்டது. அதனால் தான் கோத்தபய ராஜபக்சே இது இந்திய போர் என்று சொன்னார்."

கலைஞரோ முள்ளிவாயக்கால் படுகொலையின் போது இங்கிருந்து உண்ணாவிரத நாடகமாடி தன் முகத்திரையை கிழித்துக் கொண்டார். ஜெயலலிதாவோ தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கும் மறைமுக எண்ணத்தில் பாஜகவை எதிர்த்தே பேசுவதில்லை. வைகோ, ராமதாஸ், திருமாவின் வீர உரைகள் என்னவானதென்று நமக்குத் தெரியும். கம்யூனிஸ்ட்டுகளோ தீவிரவாதம் என்ற ஒரு சொல்லில் சிங்களர்களின் அனைத்து அரசு பயங்கரவாதங்களையும், இனப்படுகொலையையும், மறைக்கும் அறிவு ஜீவிகள்!!. அவர்களுக்கு அது அமெரிக்கா சொல்வதுபோல் ஒரு போர்க்குற்றம் மட்டுமே. மொத்தத்தில் தேர்தலில் தமிழர்கள் ஈழத்தை ஆதரிப்போருக்கு என்று வைத்துப் பார்த்தால் நிற்கும் எல்லோரும் அயோக்கியர்களே என்பது தெளிவாகும்.

முரளிதரன், டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற தமிழர்கள் இருக்கிறவரை தமிழினம் கேவலமாய்ச் சாகும் நிலை மாறப்போவதில்லை. இந்தியாவை மாற்றி மாற்றி ஆளும், தமிழர்களை தன்னுடைய நாட்டு இனமாகக் கருதாத காங்கிரஸூம், பாஜகவும் தமிழர்களை ஈழத்தில் அழிக்க வகையாக துணைபோகும் என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தேர்தலுக்குப் பின்தான் தமிழர் நிலைக்கு ஏதாவது வழியிருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

Monday, July 29, 2013

கோத்ராவில் அடிபட்டு இறந்த நாய்க்குட்டிகள்


ஏற்கனவே சுமார் பத்தாண்டுகள் போன்மோகன் சிங்கை வைத்து இந்தியாவை நன்றாக வெளிநாடுகளுக்குத் திறந்து விட்டு விட்டாயிற்று.. இங்கிருக்கும் மிடில் கிளாஸ் மக்கள் முதல் கீழ்த்தட்டு மக்களை இன்னும் நடுரோட்டிற்குத் தள்ளிவிட்டாயிற்று.. இப்போது போங்கிரஸ் மேல் மக்களுக்கு நம்பிக்கையே சுத்தமாகப் போய்விட்டிருக்கிறது.. போனியா, ராகுகால பூந்தி,  த்ரியங்கா போன்ற முகங்கள் ஸ்டார் கதா பாத்திரங்களாகவே இருந்தாலும் போங்கிரஸின் கதை போணியாகாது என்று ஒரு சம்சயம் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது அம்பானி, பிர்லா முதலான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மாற்றுக் கடவுளாகத் தெரிந்துகொண்டிருப்பவர் நம்ம பரேந்திர மூடி. போன் மோகன் சிங்குக்கு மவுசு போய்விட்டதால் அடுத்து புதிதாக ஹீரோவாக அறிமுகமாகிறார் இவர். எல்லாம் எதுக்கு ?அடுத்து இவரை பிரதமராக்கவும் செய்யலாம் ஒருவேளை வாய்ப்பிருந்தால்.. அடுத்த பத்து வருஷத்துக்கு மிச்சமிருக்கும் இந்தியாவின் கோவணத்தையும் அவுத்து அவுங்க கையில் கொடுக்க அடுத்த ஆள் ரெடி. இவரை சுமார் ஒரு இரண்டு வருடங்களாகவே குஜராத்தை சொர்க்கபுரியாக மாற்றிவிட்டார். அங்கு இருக்கும் விவசாயிகளெல்லாம் தங்கத் தட்டில் தான் சாப்பிடுகிறார்கள். வெள்ளித் தம்ளரில் தான் பால் குடிக்கிறார்கள் என்று சொல்லாத குறையாக விளம்பரங்கள் செய்துவருகிறார்கள்.

சாம்பிளுக்கு சில. உத்தராகண்ட் வெள்ளப்பெருக்கின் போது அதில் சிக்கிக் கொண்ட தனது குஜராத் மாநிலத்தவர்கள் 7500 பேரை நரேந்திர மோடி எப்படி காப்பாற்றினார் என்று நம்ம அம்மா அங்கு சிக்கிய நூறு தமிழர்களை எப்படி 'வீரசாகசம் புரிந்து' காப்பாற்றினார் என்று செயா டி.வி. விளம்பரப்படுத்துகிறதோ அதே போல பல மடங்கு திறமையாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். ஒரு கார்ட்டூன் படம் அதில் மோடி ஒரு சோட்டா பீம் போல நிற்கிறார். அவரது ஒரு கையில் 7500 பேர் இன்னொரு கையில் இன்னொரு 7500 பேர். அவர்களை அப்படியே அனுமார் போலப் பறந்து அவர்களைத் தூக்கி வந்து குஜராத்தில் இறக்கி விடுகிறார்.

இது மட்டுமல்ல. சீனாவின் பேருந்து நிலையம் ஒன்றின் புகைப்படத்தை எடுத்துப் போட்டுவிட்டு பேஸ்புக்கிலும், ஈமெயிலிலும் 'இங்கே பாருங்கள் அகமதாபாத் பேருந்து நிலையத்தை. மோடி எப்படி  மாற்றிவிட்டார்  பாருங்கள்' என்று ஃபார்வர்டுகள் செய்துவிட்டார்கள். இது போல மோடி குஜராத்தின் எல்லா கடன்களையும் அடைத்துவிட்டதோடு மேலும் வேர்ல்டு பேங்க்கில் கொஞ்சம் ஃபிக்ஸ்ட் டெபாஸிட்டும் போட்டுவைத்திருக்கிறார் என்று ஒரு கதை.  எல்லா கிராமத்துக்கும் கரண்ட் குடுத்தார். குழந்தைகள் மரணத்தை குறைத்தார். பெண்குழந்தைக் கொலையைத் தடுத்தார். மதிய உணவு கொடுத்தார்..  இப்படி எல்லாம் சொல்வார்கள். இவை எல்லாவற்றிற்கும் யோஜனா என்கிற பெயரில் எல்லா முதலமைச்சர்கள் போலவே அவரும் மக்கள் நலத் திட்டங்களை ஆரம்பித்திருக்கிறார் என்பதுதான் உண்மை. ஆனால் அதுக்குள்ளேயே எல்லாம் செய்து முடித்துவிட்டதாக பில்ட் அப். (நம்ம அம்மா ஆரம்பிக்கும் அதிரடி திட்டங்கள் முன்னால் இதெல்லாம் ஜூஜூபி). இவரை இப்படி விளம்பரப்படுத்தி 'மோடி பிராண்ட்'ஐ விற்கவென்றே 'ஆப்கோ வேர்ல்ட்வைட்' என்கிற அமெரிக்க விளம்பரக் கம்பெனியை வேறு மாதம் 12லட்ச ரூபாய் பணம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கிறார் நம்ம மோடி.

இத்தகைய விளம்பரங்கள் அவருக்கு ஏன் தேவைப்படுகின்றன? 2002ல் நடந்த குஜராத் கலவரங்கள், சோராபுதீன் என்கவுண்டர் வழக்கு போன்ற விஷயங்களில் அவரின் இந்துத்துவ நச்சுப் பல்லின் விஷத்தால் இறந்து போன முஸ்லீம்கள் பல்லாயிரம், வீடிழந்தவர்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேல். அவர் குஜராத்தில் பண்ணிய ரத்தக் களரிக்கு தமிழ்நாட்டில் கூட அவர் வந்தால் பயந்து மிரள்கிறார்கள். அவரை எப்படி அடுத்த பிரதமராக்குவது ? அவரைப் பற்றி தெரிந்த எல்லோருக்கும் அவருடைய இந்துத்துவ வெறியும், ரத்தம் குடித்த கோரப்பற்களும் தான் தெரிகிறது இல்லையா ? அதை மறக்கடிக்கத் தான் இந்த விளம்பரங்கள்.


இவர் பிரதமராவதில் யாருக்கு என்ன லாபம் ?  இதற்குப் பதில் தெரிய மீண்டும் முதல் பாராவைப் படியுங்கள்.

குஜராத் கலவரத்தின் போது குல்பர்கா சொஸைட்டி என்கிற முஸ்லீம்கள் பகுதியில் வசித்து வந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யான ஈஷான் ஜாப்ரியின் வீட்டில் அண்டை வீடுகளைச் சேர்ந்த சுமார் 150 முஸ்லீம்கள் அடைக்கலம் புகுந்து கொண்டனர். அவர் வீட்டைச் சூழ்ந்து கொண்ட இந்துத்துவா பயங்கரவாதிகள் அவரை வீட்டை விட்டு வெளியே வரச்சொல்லி மிரட்டியுள்ளனர். இல்லாவிட்டால் வீட்டுக்குள் கொளுத்தப்பட்ட சமையல் சிலிண்டர் வந்து விழும் என்று எச்சரித்தனர். முன்னாள் காங்கிரஸ் எம்பியாதலால் ஜாப்ரி தனது வீட்டு போனில் இருந்து நகரின் போலீஸ் கமிஷனர், பிஜேபி அமைச்சர்கள் என்று பலரையும் தொடர்பு கொண்டு உடனே வந்து கலவரக்காரர்களை விரட்டி விட்டு தங்களைக் காப்பாற்றும் படி கேட்டிருக்கிறார்.  மோடியின் ஆபீஸூக்கும் போன் செய்திருக்கிறார். ஆனால் யாரும் எடுக்கவில்லை (நான் இல்லன்னு சொல்லிடு - மணிரத்னத்தின் தளபதி பட டயலாக் ).  வேறு வழியின்றி தான் வெளியே வந்தால் வீட்டில் இருக்கும் யாரையும் எதுவும் செய்து விடவேண்டாம் என்று கேட்டபடி வீட்டிற்கு வெளியே சென்றார் ஜாப்ரி. அவருடைய உடல் இன்று வரை கிடைக்கவேயில்லை.

இதை மறக்கடிக்கத் தான் இந்த விளம்பரங்கள்.
  அப்போது வீராவேசமாகப் பேசிய மோடி இப்போதுபிரதம வேட்பாளராகப் போவதால் பம்மி பம்மி பேசுகிறார். இப்படிப் பம்மலாக அமுக்கிப் பேசியும் இப்போது நரேந்திர மோடிக்கு வந்திருப்பது புதுப் பிரச்சனை.  ஒரு பேட்டியின் போது 'கோத்ரா கலவரம் குறித்து வருத்தப்படுகிறீர்களா?' என்று கேட்கப்பட்டது. "அது மிக மோசமானதொரு நிகழ்வு. என் ஆட்சியில் இது நடந்தது என்பதற்காக நான் மிகவும் வெட்கித் தலைகுனிகிறேன். அதில் வாழ்விழந்த மக்களின் வாழ்வை மீட்டுத்தருவதையே என் லட்சியமாகக் கொண்டிருக்கிறேன்." இப்படியெல்லாம் அவர் பேசியிருப்பார் என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு. அவர் என்ன சொன்னார் தெரியுமா ? "நாம் காரில் பயணம் செய்யும் போது அந்தக் காரில் ஒரு நாய்க்குட்டி அடிபட்டால் வருத்தப்படமாட்டோமா" என்று பேசியிருக்கிறார்.

இப்படி இறந்து போன மக்களை ஒரு நாய்க்குட்டியோடு ஒப்பிட்டுப் பேசியதற்காக அவர் மீது பாட்னா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மோடி மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளாராம். இவர் உண்மையிலேயே மோடியின் இந்து மத வெறி முகத்தை வெளிக்கொண்டு வர இதைச் செய்தாரா இல்லை இதுவும் 'ஆப்கோ வேர்ல்ட்வைட்'ன் மோடி பிராண்ட்  விளம்பர யுத்திகளில் ஒன்றா ? அந்த குஜராத்தியம்மனுக்கே வெளிச்சம்.

Saturday, July 6, 2013

ஓநாய்களும் இரு ஆட்டுக்குட்டிகளும்...சாதிகள் ஒழிவதில்லை.

பா.ம.க கட்சியின் நிறுவனரான ராமதாஸ் 80களில் செய்த சாதி அரசியல் அப்போது மிகப் பிரபலமானது. தனது வன்னியசாதி இனமக்களுக்கு அதிக இடஒதுக்கீடு தரவேண்டும் என்று அவர் நடத்திய போராட்டத்தில் வன்னிய இன மக்கள் பெரும்வாரியாக சேர்ந்து குதித்து நடுரோட்டில் பெரிய மரங்களை வெட்டிப் போட்டு தமிழ்நாட்டையே சில வாரங்கள் ஸ்தம்பிக்கச் செய்தனர். அப்படி தமிழகத்தையே உலுக்கியதில் அந்தச் சாதியினருக்கு கர்வம் கூட இருந்தது (நாங்க யாரு தெரயும்ல..).

அப்போது சாதியவெறி பற்றிய விழிப்புணர்வும் அது தவறு என்கிற மனப்பான்மையும் பெரிதும் மக்களிடம் வளர்ந்துவிடவில்லைதான். ஏனெனில் அது ஊடகங்கள் வளர்ந்திராத காலம். அன்று மக்களின் உணர்வுகளை மாற்றும் வலிய ஊடகம், அதுவும் ஒன்றே ஒன்றுதான். அது தூர்தர்ஷன் மட்டுமே.

ஆனால் 30 வருடங்களுக்குப் பின் இன்றைய நவீன செல்போன்கள் மற்றும் தொலைதொடர்பு யுகத்தில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 200 டி.வி. சேனல்கள் இருக்கின்றன. குடும்பத் தொலைக்காட்சிகள், கட்சி தொலைக்காட்சிகள், மதத் தொலைக்காட்சிகள் என்று விஷயங்கள் 200 மடங்கு அதிகமாக மக்களைச் சென்று அடைகின்றன.

மக்கள் மாறியிருக்கிறார்களா? ஆம் மாறியிருக்கிறார்கள். சாதியின் மீதான நம்பிக்கையின்மை அதிகரித்திருக்கிறது. பொருளாதார ஏற்றம் சாதியை மழுங்கடிக்கச் செய்யும் சக்தியை பெற்றிருப்பதால் சாதியை பொருட்படுத்தாமலிருக்க பழகியிருக்கிறார்கள். ஆனால் இந்த மாற்றங்களோடு சேர்ந்து சாதிய வெறித்தனமும் அதன் வடிவத்தைக் கூர்மையாக்கியிருக்கிறது.

தர்மபுரியில் அது அடையாளமாக வெடித்துக் கிளம்பி இன்று பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது. கடைசியாக காவு வாங்கப்பட்டது இளவரசன். நத்தம் காலனிப் பகுதியில் வன்னியசாதியைச் சேர்ந்த திவ்யாவும் தலித்சாதியைச் சேர்ந்த இளவரசனும் காதலித்து ஊரைவிட்டு ஓடிவிடுகின்றனர். திவ்யாவின் தந்தை போலீசில் பெண்ணை மீட்டுத் தரும்படி புகார் செய்கிறார்.

இந்நிகழ்ச்சிக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்து பா.ம.க கட்சி அரசியல் நிலையில் பலமிழந்து போனதாலும், கட்சி வன்னியருக்கு என்ன செய்து கிழித்துவிட்டது என்று பெரும்பாலான வன்னியர்கள் எண்ணிப் பார்த்து 'போங்கடா போய் புள்ளக் குட்டிகள படிக்க வைங்கடா.. வெட்டியா இவனுங்க பின்னாடி சுத்திக்கிட்டு அலையாம' என்று போய்விட்டதாலும் கட்சிக்கு வரும்படி குறைந்து விட்டது. தனது பலத்தை மீண்டும் நிலைநிறுத்த தனது பிரம்மாஸ்திரத்தை எடுத்தார் பா.ம.க ராமதாஸ்.

'ஜீன்ஸ் பேன்ட், கூலிங் க்ளாஸ் போட்டுக் கொண்டு எங்கள் பெண்களை மயக்கி காதல் திருமணம் செய்யும் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பாடம் புகட்டுவோம்' என்பது போன்ற புரட்சி வசனங்களை ராமதாஸூம் அவரது அடிபொடி 'குரு'க்களும் சேர்த்துப் பேச ஆரம்பித்தனர். கீழே உள்ளது மருத்துவர் ஐயாவின் பொழிப்புரையிலிருந்து ஒரு சேம்பிள்..

இந்நிலையில்தான் இளவரசனும்-திவ்யாவும் ஊரைவிட்டு ஓடிவிடுகின்றனர். இதில் இளவரசன் 17 வயதேயான மைனர். திவ்யா இளவரசனை விட மூத்த பெண். அவரது குடும்பம் நடுத்தர சராசரிக் குடும்பம். இளவரசனின் குடும்பமோ கொஞ்சம் வசதியானது. அதற்காக பெரும்பணக்காரர்கள் இல்லை. அவனது அப்பா அரசு பிணமருத்துவக் கிடங்கில் அறைக் காப்பாளராக வேலை செய்கிறார். அரசு வேலை.

இப்போது தர்மபுரியில் இருக்கும் சாதீயப் பெருந்தலைகளுக்கு நம் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஒரு தலித் பையன் ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டானே என்கிற வெறி. நேரே திவ்யாவின் அப்பாவைக் கூப்பிட்டு நாலு காய்ச்சு காய்ச்சி நீயெல்லாம் சாதிகெட்டவன் என்கிற ரீதியில் அவரை மிரட்டி, திட்டித் தீர்க்க அவர் வீட்டில் வந்து தூக்கில் தொங்கிவிட்டார்.

இதைச் சொல்லி வன்னிய சமூக மக்களிடையே வெறுப்பை ஊதியதில் தர்மபுரியில் நத்தம் காலனியில் 200 தலீத்துகளின் வீடுகள் தீக்கிரையாயின. இதையெல்லாம் தாண்டி திவ்யாவும் இளவரசனும் தங்களது திருமணத்தில் உறுதியாக நின்றார்கள்.

இந்தக் கலவரங்களுக்குக் காரணமாய் நம் மருத்துவர் ஐயா சொன்ன முத்துக்களில் சில கீழே..

"நம் வீட்டுப் பெண் பிள்ளைகளை 14 வயது பெண் குழந்தைகளை காதல் நாடகமாடி கடத்திச் சென்று கர்ப்பமாக்கி கை விட்டு விடுகிறார்கள். தருமபுரியில் நடந்தது அது தான். தருமபுரி கலவரத்தில் ஒரு உயிருக்கு சேதம் ஏற்பட்டதா? ஒரு பன்றிக் குட்டியைக் கூட கொல்லவில்லை. ஆனால் அந்தப் பெண்ணோட அப்பன் செத்துப் போனான். இழப்பு எங்களுக்குத்தான். காதல்-கலப்புத் திருமணம் இதையெல்லாம் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிராமணர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முசுலீம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காதல் பிரச்சனையில் பெற்றோர்கள் தலையிடக் கூடாது. உரிமை இல்லை என்று சொல்றான். பெற்றோர் தலையிடாமல் பின் யார் தலையிடுவது? காதலுக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. எங்கள் சாதி பெண்களிடம் அதை வைத்துக் கொள்ளக் கூடாது"  - மருத்துவர் ஐயா மேதகு ராமதாசு அவர்கள்.

திவ்யாவின் அம்மாவின் மூலம் போலீசுக்குப் போன பாமக தரப்பு திவ்யாவை அம்மாவிடம் திரும்பித் தர கோரியது. கோர்ட்டிற்கு அழைத்துவரப்பட்ட திவ்யா தான் விருப்பத்துடனேயே இளவரசனுடன் திருமணம் செய்து வாழ வந்ததாகக் கூறிவிட்டார். சாதிவெறியினர் முகத்தில் கரியைப் பூசிய அவரை விட்டுவிட்டு திவ்யாவின் அம்மாவை குறிவைத்தனர். திவ்யாவின் அம்மாவை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்ததில் கதறிக் கொண்டு திவ்யா ஓடிவந்தார்.

அம்மா செத்துப் போவாரோ என்று பயந்து போன திவ்யா இளவரசனை விட்டுவிட்டு அம்மாவிடம் திரும்பினார். இப்போது திவ்யாவுக்கு இளவரசனுடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தால் என்ன விளைவுகள் வரும் என்று விளக்கிச் சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னதில் அவர் இளவரசனுடன் இனிச் சேர்ந்து வாழமாட்டேன். அவரைப் பார்த்தால் இறந்துபோன என் தந்தை ஞாபகம் வருகிறது. என்று இருநாட்கள் முன்பு பத்திரிக்கைகளைக் கூட்டி விரிவான அறிக்கை கொடுத்துவிட்டார்.

அதைப் பத்திரிக்கையில் படித்த இளவரசன் தனது மாமாவிடம் இப்படி பத்திரிக்கையில் சொல்லியிருக்கிறாளே அவள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்பட்டுவிட்டு, தான் போலீஸ் வேலையில் சேர்வதற்கான பயிற்சிகளை எடுக்கப்போவதாயும், போலீஸ் வேலை வாங்கிய பின் திவ்யா மனம் மாறி மீண்டும் வந்துவிடுவாள், தான் அவளை வைத்துக் காப்பாற்றுவேன் என்றும் கூறிவிட்டுச் சென்றிருக்கிறான். பின்பு தனது தந்தையிடம் அவரது பைக்கை வாங்கிக் கொண்டு சற்றுத் தள்ளியுள்ள ஊரிலிருக்கும் தனது நண்பன் ஒருவனைப் பார்க்கச் செல்கிறேன் என்று கிளம்பியிருக்கிறான் இளவரசன். காலையில் தருமபுரி ரயில் நிலையத்தருகே நின்று கொண்டிருந்த அவனது பைக்கைத் தொடர்ந்து சென்று பார்த்ததில் ரயில்வே பாதையோரம் மூளை சிதைந்து இறந்து கிடந்திருக்கிறான் இளவரசன்.

ரயிலில் அடிபட்டு இறந்தானா அல்லது ரயிலில் தள்ளப்பட்டு இறந்தானா அல்லது கொல்லப்பட்டு தள்ளப்ப்ட்டானா ? இளவரசன் இறந்து கிடந்ததை காலை அத்தனை நேரம் வரை அப்பகுதியைக் கடந்து சென்ற எந்த ரயில்களின் டிரைவர்களும் பார்த்து ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுக்கவில்லை. இது ஏன் என்பது ஒரு கேள்வி.

இளவரசன் இறந்ததைக் கேள்விப்பட்ட தர்மபுரி பாமக கட்சியினர் பலர் ஊர்ஊராகச் சென்று அந்தச் செய்தியை வேட்டுக்கள் வெடித்து மகிழ்ச்சி பொங்க அறிவித்தபடியே சென்றார்களாம்.

இளவரசனும் அவரது அப்பாவும் கடைசியாக இன்று மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள். இம்முறை அப்பா வேலை செய்யும் பிணக்கிடங்கிலேயே பிணமாக வந்து கிடக்கிறான் மகன் இளவரசன்.

இந்தச் சாதீயப் பிரச்சனையில் தலித்துக்களுக்காக நின்று போராடும் சக்தி திருமாவளவனுக்கு இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே. 15 வருடங்களுக்கு முன்பிருந்த திருமாவளவனாயிருந்தால் இந்நேரம் இளவரசனுடன் துணையாக நின்று அவனுக்குத் தோள் கொடுத்திருப்பார் திருமா. இப்போதோ கலைஞர் தாத்தாவின் செல்லப் பேரனாக அவர் தரும் பணத்தின் நிழலில் வாழ்ந்து பழகிவிட்டதால் வெறும் அறிக்கைகளோடே நின்றுவிட்டார். மற்ற கட்சிகள் இடதுசாரிகள் உட்பட இப்பிரச்சனையின் ஆழம் புரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் கோட்டை விட்டுவிட்டனர். ஜெ. அம்மாவிடம் கேட்டால் இவன் யார் மேல்சாதிப் பெண்ணை திருமணம் செய்ய ? இவனுக்கு இது வேண்டியதுதான் என்று சொன்னாலும் சொல்வார். அவருடைய எல்லைகள் பாமகவை இந்தப் பிரச்சனையை வைத்து ரவுண்ட் கட்டிவிடுவதோடு நின்றுவிடுகிறது.  இப்படி எல்லாரும் கைவிரித்து விட்ட நிலையில் அவன் கொல்லப்படுவதை தடுக்க ஆளேயில்லாமல் போய்விட்டது. இப்போது அது தற்கொலை என்று பிரச்சனையை மூடிவிடப் பார்க்கிறதாம் போலீசு.

சாதிகள் இல்லையடி பாப்பா - பாரதியார். குழந்தைகள் முதலே இந்த எண்ணம் வரவேண்டும் என்று நினைத்த அவர் ஒரு தீர்க்கதரிசி தான்.

Friday, June 7, 2013

ஸ்ரீசாந்த் அப்படி என்ன பெரிய தவறு செய்துவிட்டார்?

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சமீபத்தில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா என்கிற மூன்று ராஜஸ்தான் ராயல் அணியின் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் செய்த ஸ்பாட் பிக்சிங் என்பது என்ன? இவ்வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட சில ஓவர்களில் வேண்டுமென்றே லூஸ் பால்கள் போட்டு ரன்களை எதிரணியினருக்கு அதிகப்படுத்திக் கொடுப்பார்கள். இதில் இவர்களுக்கு என்ன லாபம்?

இவர்கள் அணியினருக்கு லாபம் இல்லை. ஆனால் சூதாட்டம் நடத்தும் புக்கிகளுக்கும் அதனால் இவர்களுக்கும் லாபம். உதாரணமாக ஸ்ரீசாந்த்தின் நெருங்கிய நண்பனான ஜிஜூ ஜனார்தனன் என்பவர் 'புக்கி'(bookie) எனப்படும் சூதாட்டத் தரகராக இருந்துள்ளார். 

இவர் போட்டி நடக்கும் போது நிமிடங்களில் பல கோடிகள் பெட் வைக்கப்படும் சூதாட்டத்தை போன் மூலமே நடத்துவார். பெரும் பெரும் தலைகள் கம்பெனி முதலாளிகள் கலந்துகொள்வார்கள். உதாரணமாக ஜனார்தனன் அடுத்த ஓவரில் எதிரணியின் ஆட்டக்காரர் 14 ரன்களுக்கு மேல் எடுக்கப்போகிறார் என்று நிறைய பணம் பந்தயம் கட்டுவார். அதற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல கோடிகள் பெட் வைக்கப்படும்.  ஆனால் ஜிஜூவுக்கும், ஸ்ரீசாந்துக்கும் மட்டுமே தெரியும் ஸ்ரீசாந்த் வீசப்போகும் அடுத்த ஓவரில் வேண்டுமென்றே எளிதான பந்துகளைப் போட்டு எதிரணிக்கு 14 ரன்களுக்கு மேல் கொடுக்கப்போகிறார் என்று.

ஸ்ரீசாந்த் அடுத்த ஓவரில் வேண்டுமென்றே சொதப்பலான பால்கள் போட்டு 14 ரன்னுக்கு மேல் கொடுக்கப்போகிறார் என்பது ஜிஜூவுக்கு எப்படித் தெரியும் ? ஓன்றுமில்லை. அது ஒரு கோட் வேர்ட். ஸ்ரீசாந்த் தனது இடுப்பில் வெள்ளை நிற டவலை சொருகியிருந்தால் அந்த ஓவரில் 14 ரன்களுக்கு மேல் கொடுப்பார் என்பது ஜிஜூவுக்குத் தெரியும். எனவே அதை வைத்து அவர் உறுதியாக பெட் கட்டுவார். பல கோடிகள் லாபம் சம்பாதிப்பார்.

அந்த லாபத்தில் ஒரு பங்கு ஸ்ரீசாந்துக்கு அதாவது சுமார் 40 லட்சங்கள் ஒரு ஓவருக்கு கிடைக்கும்.

இவ்வளவு அருமையான ஒரு டெக்னிக்கை கையாண்டு பல்லாயிரம் கோடிகள் லாபம் சம்பாதிக்கும் ஐ.பி.எல் என்னும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்களான ஸ்ரீசாந்த்தும், அங்கீத் சவானும் சில கோடிகள் சம்பாதிப்பதில் என்ன பெரிதாய் தவறு நேர்ந்திருக்கிறது ? ஒன்றுமில்லை ராஜஸ்தான் ராயல்ஸூக்குப் பதில் கொல்கத்தா டேர்டெவில்ஸ் ஜெயிப்பார்கள். ரசிகர்களுக்கு அதிலென்ன பிரச்சனை? அவர்களுக்குத் தேவையான த்ரில்லான அந்த நான்கு மணி நேரம் அவர்களுக்குப் பொழுது நன்றாகப் போய்விடுகிறது. யார் தோற்றால் என்ன ? ஜெயித்தால் என்ன ?

உலக நாடுகளில் ஏற்கனவே கிளப் விளையாட்டுக்கள் என்கிற பெயரில் பெரும்பணம் சம்பாதிக்கும் விளையாட்டு நிறுவனங்களின் செயலை கமர்ஷியலாக லலித் மோடி கிரிக்கெட்டில் 50 ஓவர்களை20 ஓவர்களாக சுருக்கி ஐ.பி.எல் 20-20 என்று அறிமுகப்படுத்தினார்.

9 அணிகள் ஒரு வருடத்திற்கு 90 கிரிக்கெட் மேட்ச்சுகள். இவற்றால் விளையும் வருமானம் சில ஆயிரம் கோடிகள். இந்த லாபம், வருமானம் யாருக்குப் போகிறது ? ஐ.பி.எல் என்னும் தனியார் நிறுவனத்துக்கு. அதன் ஓனர்கள் அல்லது உறுப்பினர்கள் யார் ? அம்பானி, மல்லையா என்கிற வெளிப்படையான முதலாளிகள் முதல் ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா போன்ற பினாமி முதலாளிகள் தான் ஐ.பி.எல்லின் உரிமையாளர்கள்.

இவர்களுடைய நோக்கம் நீதி, நேர்மை வழுவாது கிரிக்கெட் என்னும் விளையாட்டின் உன்னத தருணங்களை மக்களுக்கும், ரசிகர்களுக்கும் கொண்டு சேர்ப்பதல்ல. மாறாக எல்லோருக்கும் ஒரு நான்கு மணி நேர முடிவு தெரிய டென்ஷனாகும் ஒரு பரபரப்பான த்ரில் சினிமாவைக் காட்டுவது. அதை சினிமாவாக இல்லாமல் லைவ்வாக கிரிக்கெட்டாக காட்டுகிறார்கள்.

நீங்களே சொல்லுங்கள். ஐ.பி.எல் கிரிக்கெட் பார்க்க ஒரு சாதாரண ரசிகருக்கு இருக்கத் தேவையான தகுதி என்ன? போர், சிக்ஸ், சிங்கிள்ஸ், அவுட், ரன் அவுட், டக் அவுட் அவ்வளவுதான். அதைத் தாண்டி கிரிக்கெட் என்கிற விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றி எந்த அறிவும் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஐ.பி.எல்லில் கடைசி ஐந்து அல்லது ஆறு ஓவர்களின் முன்னேயே விளையாட்டின் முடிவு தெரிந்துவிடும்படியான போட்டிகள் எத்தனை? குறைவு. மாறாக கடைசி ஓவரில், கடைசி பாலில், கடைசி ரன்னில் பார்வையாளரின் பி.பி.யை எகிறவைக்கும் க்ளைமாக்ஸ் கொண்ட ஆட்டங்களே அதிகம். ஏன்? இது வேண்டுமென்றே செய்யப்பட்டு வருகிறது என்று ஏன் ஒருத்தரும் சி.பி.ஐயிடம் போய்க் கேட்கவில்லை?

அதனால் தான் இன்று இல்லத்தரசிகள் முதல், இரும்புப் பட்டறை வைத்திருப்பவர் வரை எல்லோரும் ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்ஸின் ஸ்கோர் கேட்கிறார்கள். 'பட்டைய கிளப்பிட்டான்' என்று சந்தோஷப்படுகிறார்கள். அல்லது 'சே..சொதப்பிட்டான் ' என்று சலித்துக் கொள்கிறார்கள். இதன் ஒரே காரணம் அந்த அணியின் பெயரில் சென்னை என்று ஒரு வார்த்தை வருவதால். அதைத் தவிர அவர்களுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தமில்லை.

இப்படி சென்னைக்கு சம்பந்தமேயில்லாதவர்கள் நடத்தும் சென்னை சூப்பர் கிங்ஸூக்காக பேஸ்புக் முதல், ட்விட்டர் வரை வாய் கிழிய மார்தட்டிப் பேசுபவர்கள் பல்லாயிரம் பேர். இதே போல் தான் மற்ற அணியினருக்கும் அந்தந்த மாநிலத்தின் ரசிகர்கள் தான் ஓனர்கள் போல் நினைப்பு. ஸ்ரீசாந்த் முதல் யாரோ பெயர் தெரியாத புக்கிகளை ஏதோ கொலைக் கேஸில் பிடித்தவர்களைப் போல முக்காடு போட்டு கூட்டிச் சென்ற இதே சிபிஐ மெய்யப்பன் மற்றும் அவருடைய மாமனார் சீனிவாசனின் வீட்டு வாசலில் பவ்யத்தோடு நிற்கிறது வாலாட்டியபடியே. இதைப் பற்றியெல்லாம் நம் மக்களுக்கு என்ன கவலை?

அவர்களுக்குத் தேவை நான்கு மணி நேர பரபரப்புச் சினிமா. அடுத்த நாளில் அதைப் பற்றி ரசித்துப் பேச கிடைக்க ஓரு டாபிக். இதில் ஹஸ்ஸி, சேவாக் என்று விளாசும் ஸ்டார்களின் மீதான ரசனைகள் தனி. இன்று ஊழல் வந்த போதும் அதை ஒரு டாபிக்காக மட்டும் பேச ஒரு ஆள் வேண்டும். அது ஸ்ரீசாந்த் மற்றும் அவரது உடந்தையாளர்கள். ஸ்ரீசாந்த் பெண்கள் கூட சல்லாபம் செய்யும் பேர்வழி என்று கோரமான வில்லனாக ஸ்ரீசாந்த் ஆக்க்படுகிறார். ஏனென்றால் ஏமாற்றப்பட்டதாக உணரும் ரசிகர்களின் கோபத்துக்கு ஒரு வடிகால் வேண்டுமே அதற்காகத்தான். மாறாக நீதி கிடைக்கவேண்டுமென்று அல்ல.

2008ல் ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எல்லில் ஐந்நூறு கோடி முதல் ஆயிரம் கோடிவரை ஊழல் புரிந்தார், மேட்ச் பிக்சிங்குகள் செய்தார் லலித் மோடி என்று 2010ல் புகார் கிளம்பியது. சிபிஐ கிளம்பியது. லலித் மோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் வெளிநாட்டுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. அவ்வளவு தான் கேஸ் போட்டு அது...நடந்..து கொண்டே இருக்கிறுது. இருக்கும் ஜெ அம்மையாரின் வழக்குகள் போல. சி.பி.ஐக்காரர்கள் அப்போது கிளம்பியவர்கள் இன்னும் வந்து சேரவில்லை போல அதற்குள் அடுத்த ஊழல் பிரச்சனை ஸ்பாட் பிக்சிங். இந்த முறை சீனிவாசன் தைரியமாக அறிவிக்கிறார் தான் பதவி விலக முடியாதென்று. யாருக்கு வரும் இந்த தில்லு? உங்களுக்கோ எனக்கோ வருமா ?

இன்று 2013. இன்று வரை அந்த ஊழல் புகார்கள் என்ன ஆனது ? இந்தப் போட்டிகளை எப்படி நிஜமான விளையாட்டுக்கள் என்று நம்புவது என்பது பற்றி எந்த முட்டாள் ரசிகனுக்கும் கவலை இல்லை. அவனது சொந்தப் பணமான 500 ரூபாயை செலவழித்து டிக்கெட் வாங்கி இந்த மோசடி மேட்ச்களை பார்க்கிறோமே என்று யாருக்கும் வருத்தமும் இல்லை. இந்த ஸ்பாட் பிக்சிங்கில் இதுவரை 17 புக்கிகளை கைது செய்துள்ளதாம் போலீஸ். புக்கிகள் என்பவர்கள் தரகர்கள் மட்டுமே. பச்சையாகச் சொன்னால் புரோக்கர். கமிஷனுக்காக வேலைகள் செய்பவர். ஆனால் உண்மையில் சூதாட்டம் ஆடுபவர்கள் பலநூறு கோடிகளை சில்லறையாக எறிபவர்களே. அவர்களில் ஒருவர் கூட சி.பி.ஐயின் காமாலைக் கண்ணில் இதுவரை பிடிபடவில்லை. இனியும் பிடிபட மாட்டார்கள் என்பதுவே நிஜம்.

இதில் பல லட்சம் பேர் நம்ம வீட்டு டி.வியில் சாயங்காலம் வீட்டுக்குப் போனால் நைட் தூங்கறவரைக்கும் விறுவிறுப்பான என்டர்டெய்ன்மன்ட். அது எப்படி இருந்தா எனக்கென்ன? என்று நினைக்கும் மனப்பாங்குள்ள எளிமையான ரசிகர்கள். அவர்களுக்கும் டாஸ்மாக்கின் வாசலில் காலை ஏழு மணிக்கே வந்து நின்று கை நடுங்க சரக்கடிக்கும் குடிகாரனுக்கும் பெரிய வித்தியாசமில்லை. டாஸ்மாக்கோ, கடாமார்க்கோ, கள்ளச் சாராயமோ எனக்கு அந்த நேரத்துக்கு கிடைச்சாப் போதும். அவ்வளவுதான்.

இப்படி தவறுகள் ஐ.பி.எல்லை ஆரம்பித்த லலித் மோடியிலிருந்து அதன் தற்போதைய உரிமையாளர்கள், கறுப்புப் பணமுதலைகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வரை எல்லோரிடமும் கொட்டிக் கிடக்கும் போது, சில பல லட்சங்களுக்காக ஸ்ரீசாந்த் மற்றும் ஒரு மூவரை மட்டும் கட்டம் கட்டி இவர்கள் தான் கிரிக்கெட்டுக்கு களங்கம் கற்பிப்பவர்கள், இவர்களை ஒழித்தால் போதும் ஐ.பி.எல் தூய்மையான கங்கை நதியாக மாறிவிடும் என்று படம் காட்டும் ஊடகங்களும் ஒன்றை மறந்துவிட்டார்கள்.

அது ஸ்ரீசாந்த் வெறும் ஒரு பலியாடு மட்டுமே என்பதை.
ஆனால் ஓநாய்களோ...

Sunday, March 3, 2013

2.57 லட்சம் கடன் வாங்கினால் திரும்பக் கட்டவேண்டியதில்லை

இப்படியொரு புதிய திட்டம் இந்திய அரசில் சைலன்ட்டாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. நிறைய பேருக்கு தெரியாத இந்தத் திட்டத்தின்படி அரசு சாரா வங்கிகளில் ரேஷன் கார்டை மட்டும் காட்டி நீங்கள் வருடா வருடம் 2.57 லட்ச ரூபாய் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அதை திருப்பித் தரவேண்டியதில்லை. அந்த வருட இறுதியில் ‘வசூலிக்காத தொகை’(Revenue Forgone) என்று பேங்க்கில் கணக்கெழுதி அதை அவர்களே

தள்ளுபடி செய்துவிடுவார்கள். அடுத்த வருடம் திரும்பவும் புதிதாக இதே போல நாம் கடன் வாங்கிக் கொள்ளலாம். நம் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் பதவியேற்றதிலிருந்தே புரட்சிகரமான இத்திட்டம் செயல்பாட்டில் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. சும்மா சும்மா மக்குமோ.. என்று அவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இத்திட்டத்தால் ஏழைகள், விவசாயிகள், சிறுதொழில் செய்பவர்கள், பெண்கள் என்று பல கோடிப்பேர் பயனடைவார்கள்.

ஓ.. சாரிங்க. தவறுதலா மாத்தி எழுதிவிட்டேன். இந்தத் திட்டம் மேலே சொன்ன மாதிரி நமக்கு இல்லீங்க. அம்பானி, டாடா, மிட்டல், எஸ்ஸார், விப்ரோ போன்ற பணக்கார ஏழைங்களுக்காக, உலகப் பணக்காரங்க லிஸ்ட்ல முன்னுக்கு வரத்துடிக்கும் புரட்சி மிகு கார்ப்பரேட் முதலாளிகளுக்காக, போடப்பட்ட ஸ்பெஷல் திட்டமாம். சர்க்குலேஷனை மாத்தி என்கிட்ட சொல்லிட்டாங்க. இந்த கார்ப்பரேட் அரசு திட்டத்தின்படி வருடா வருடம் கார்ப்பரேட்களிடமிருந்து வசூலிக்கவேண்டிய வரி மற்றும் கடன்களை வசூலிக்காத தொகை (Revenue Forgone - கவனிங்க வசூலாகாத தொகையில்லை... அரசு வேண்டுமென்றே வசூலிக்காமல் விட்ட தொகை) என்று பெயரிட்டு தள்ளுபடி செய்துவிடுவார்கள். பட்ஜெட்டில் வரவு செலவில் இந்தத் தொகை செலவுக் கணக்காக சேர்ந்து விடுவதால் பட்ஜெட் வரவு செலவு கணக்கு க்ளீனா டேலியாகிவிடும். எந்த ஆடிட்டரும் குத்தம் சொல்லமுடியாது. ஆமா.

போன வாரம் நம்ம ப.சி அய்யா உலகப் பொருளாதாரப் புளி..சாரி.. புலி... போட்ட பட்ஜெட் கணக்குல அப்படி இந்த 2013 ஆம் வருஷம் கார்ப்பரேட்டுக்கிட்ட இருந்து தள்ளுபடி செஞ்ச பணம் 2.57 லட்சம் தான். மறுபடியும்.. சாரிங்க (ராத்திரி சரக்கு ஓவராயிடுச்சு). அது 2.57 லட்சம் கோடி(2,57,00.00.00,000 ரூபாய்). எம்மாடியோவ் (புளிச்ச ஏப்பம்). இந்தத் திட்டம் 2006ல இருந்தே இருக்குதாம் சத்தமில்லாம. அவ்வளவு பெரிய பட்ஜெட் கணக்குல இத்துனூன்டு ரெண்டு வரியை எவன் கவனிக்கப்போறான்னு நெனச்சிருக்காங்க. அவங்க நினைச்ச மாதிரியே இன்னிக்கு வரைக்கும் இ.காங், சோ.காங், ரா.காங், பா.ஜா. அத்.ஜா, அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, சரிகமப, போன்ற எந்தக் கட்சிகளுக்கும் இது கண்ணுலேயே படலையாம் (காமாலைக் கண்ணுபோல). ஒருத்தரும் ஏன்யா இப்படி வரியையும், விலைவாசியையும் ஏத்தி மக்கள் உசிரெடுக்கிற, இந்த பணக்கார பிச்சைக்காரனுங்களுக்கு இப்படி சைலன்டா குடுக்கிறேன்னு கேக்கவே இல்லீங்க (கம்யூனிஸ்டுகள் மட்டுமே இதுல மனுஷங்க. இந்த மொள்ளமாரித்தனத்தை வெளிய கொண்டு வந்ததே அவங்க தான். பாவம் அவங்களுக்கு சப்போர்ட் பண்ண உங்க யாருக்கும் மனசு வரலை. மாத்தி மாத்தி அம்மாவையும், அய்யாவையும் தொங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் அவங்களுக்கு வந்தது யாரால? எல்லாம் உங்களால தான். ‘உண்டியலடிக்கிறவன்’ தானேன்னு கம்யூனிஸ்ட்டுகளை நக்கலா பேசமட்டும் தானே தெரியும் உங்களுக்கு. நீங்க என்னவோ பிர்லா, அம்பானி பார்ட்டிகள் போல லட்சம் கோடி கவர்ன்மெண்ட்டுகிட்ட இருந்து ப்ரீயா வாங்கறா மாதிரி).

வசூலிக்கப்படாத வருமானம் (Revenue Forgone) இதுவரை..
2005-2006 ல்  2,06,700 கோடிகள்
2006-2007 ல்  2,35,191 கோடிகள்
2007-2008  ல்  2,78,644 கோடிகள்
2008-2009 ல்  4,14,099 கோடிகள்
2009-2010  ல்  5,02,299 கோடிகள்
2010-2011 ல்  2,01,166 கோடிகள்
2011-2012 ல்  2,50,003 கோடிகள்
2012-2013 ல்  2,57,000 கோடிகள் (இது தான் இந்த வருஷத்து கணக்கு) எல்லாமே லட்சம் கோடிகளில். (அவ்வையே...லட்சம்ன்னா என்ன.? கோடின்னா என்ன? லட்சம்கோடின்னா என்ன?)

இந்தப் பணத்தை மட்டும் இந்த கார்ப்பரேட் ஏழைங்க கிட்ட இருந்து வசூல் பண்ணியிருந்தா பஸ் டிக்கெட்டை கி.மீ.க்கு 12 காசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1.59 காசு (அப்பா.. ‘புள்ளி 59’ என்னா கணக்கு சுத்தம்?), காஸ் விலையை சிலிண்டருக்கு 15 ரூபாய் அப்படின்னு கவர்மென்ட் பிச்சைக்காரத்தனமா விலைகளை உயர்த்தவேண்டிய அவசியம் வரவே வராது. ஏன்னா இப்படியெல்லாம் விலையை உயர்த்தினாலும் கூட இப்போ அரசுக்கு ஏதோ சில பத்தாயிரம் கோடிகள் தான் தேறுது. அது மாதிரி 20 மடங்கு பணத்தை இப்படி கார்ப்பரேட் ஏழைங்களுக்கு ‘தொழில் வளர்ச்சிக்கு’ன்னுட்டு கவர்ன்மெண்ட் அள்ளிக் குடுத்தாலும் பாருங்க பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்கும் 9க்கும் நடுவுலயே முக்கிக்கிட்டு இருக்கு. ஒருவேளை நாட்டில யாரும் சரியா உழைக்கிறதே இல்லை போல இருக்கு. வேலை பார்க்குற 60 கோடி தடிப்பசங்களும், தடிப்பசங்கிகளும் டெய்லி நல்லா தின்னுட்டு தின்னுட்டு தூங்குறானுங்க போல இருக்கு.

ஒளிர்கிறது இந்தியா. ஜெய் அம்பானி... சாரி.. ஜெய்ஹிந்த்

ஆதாரங்கள்:
http://exim.indiamart.com/budget-2007-08/statement-revenue-foregone.html
http://indiabudget.nic.in/ub2010-11/statrevfor/annex12.pdf
http://indiabudget.nic.in/ub2013-14/statrevfor/annex12.pdf
http://indiabudget.nic.in/ub2012-13/statrevfor/annex12.pdf

Saturday, February 23, 2013

ஹைதராபாத்தில் இரு இடங்களில் குண்டுவெடிப்பு - 11 பேர் பலி. ஹெலிகாப்டர் காணாமல் போனது.

நேற்று முன்தினம் மாலை சுமார் 7 மணியளவில் ஹைதராபாத் தில்ஷூக்நகரில் மக்கள் நெருக்கம் மிகுந்த இரு இடங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து இரு குண்டுகள் வெடித்ததில் 11 பேர் இறந்து போனார்கள். 50பேர் காயமைடந்துள்ளார்கள்.

ஆந்திராவில் குண்டுவெடித்ததை தொடர்ந்து நாடெங்கிலும் தீவிரவாத பதட்டம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தேசிய பாதுகாப்பு படையொன்றை ஹைதராபாத்துக்கு அனுப்பியுள்ளார். இது ஹைதராபாத்தில் நடக்கும் மூன்றாவது வெடிகுண்டுத் தாக்குதலாகும்.

அப்சல் குருவை பிப்ரவரி 9 ல் தூக்கிலிட்டதைத் தொடர்ந்து தீவிரவாதத் தாக்குதல்கள் வரும் என்று அரசு எதிர்பார்த்தேயிருந்ததாம். தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கைகள்  உளவுத்துறையிடம் இருந்து முன்கூட்டியே வேறு வந்துள்ளனவாம். ஆனாலும் வழக்கம் போல் எங்கே எப்படி எத்தனை மணிக்கு தீவிரவாதிகள் தாக்குவார்கள் என்று சொல்லாததால் மெத்தனமாக அரசு இருந்துவிட்டதாம். (குண்டு வெடித்ததன் மூலம் ஏற்கனவே அப்சல் குருவைத் தூக்கில் போட்டது சரிதான் என்று இந்திய கூட்டு மனசாட்சி இன்னும் உறுதியாக நம்பிக்கொள்ளலாம்).

குண்டு வெடிப்பு பற்றி கேள்விப்பட்டதும் பீதியடைந்த நகரத்து மக்கள் எல்லாம் பயந்தடித்து வீட்டிற்கு ஓட ஆரம்பித்துவிட்டார்களாம். ஆபிஸ்கள் எல்லாம் லீவ் விடப்பட்டு எல்லோரும் வீடு நோக்கி திரும்ப ஒரே ட்ராபிக் ஜாம் ஆகிவிட்டதாம். யாரும் வெளியே வரவே பயப்படுகிறார்களாம். சரி மக்கள் பயந்தாகிவிட்டதே ஊடகப் புலிகள் என்ன செய்கின்றார்கள் என்று பார்த்தால் எக்ஸ்பர்ட்டுகள் என்று நான்கு பேர் உட்கார்ந்து கொண்டு அரசு தீவிரவாதத்தை ஏன் சரியாக ஒடுக்கவில்லை ? கண்காணிப்பு பத்தவில்லையா ? என்று அக்குவேறு ஆணிவேறாக அலசி மாய்கிறார்கள்.

அரிசி விலை ஏறுவதையும், பெட்ரோல் டீசல் விலை மாதம் தோறும் உயர்வதையும், அதைச் சாக்காக வைத்து வீட்டு வாடகையிலிருந்து ப்ளாட்பார கடை வரை எல்லோரும் பொருட்களின் விலையேற்றுவதையும், முக்கியமாக ராணுவத்திற்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் என்று வெளிவந்து சோனியா அம்மாவின் சொந்த ஊரான இத்தாலியிருந்து ஒரு புரோக்கர் வந்து ராணுவ தளபதியிடம் பேசினார் என்று காரசாரமாக விவாதம் ஊடகங்களில் நாறிய நேரத்தில் இப்படி மக்களின் எல்லா பிரச்சனைகளையும் அவர்கள் மனத்திலிருந்து மறக்கடிப்பதற்காகவே குண்டுகள் வெடித்தது போல் வெடித்திருக்கின்றன. நேற்றிலிருந்து ஊடகங்கள் முதல் மக்கள் வரை யாரும் ஹெலிகாப்டர் ஊழல் பற்றியோ அதற்கு முந்தைய ஊழல்கள் பற்றியோ  யோசிக்காமியோபர்கெட்டோமியோ வியாதி வந்து குண்டு பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சரி குண்டு வெடிப்புக்கள் பற்றி பார்ப்போம். குண்டு வெடிப்புக்கு நாங்கள் தான் காரணம். இன்னின்ன காரணத்துக்காக குண்டு வைத்தோம் என்று எந்தத் தீவிர வாத அமைப்பும் இது வரை பொறுப்பேற்றுக் கொள்ளவில்லையாம். ஹெலிகாப்டர் ஊழலை மறைக்க நாங்களே தான் குண்டு வைத்தோம் என்று அரசுத் தரப்பிலிருந்தும் யாரும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லையாம். எனவே அரசு இது சம்பந்தமாக குண்டு சைக்கிள்களில் வைக்கப்பட்டது, மற்றும் பொது இடமான வெங்கடாத்ரி தியேட்டர் அருகே வைக்கப்பட்டது (தியேட்டரில் விஸ்வரூபம் ஓடிச்சாங்க..?) போன்ற விஷயங்களை 'நுட்பமாக' ஆராய்ந்ததில் இந்தியன் மஜாகிதீன் என்ற (இளிச்சவாய) தீவிரவாத அமைப்பின் கைவரிசையாக இருக்குமோ என்று சிபிஐ அதிகாரிகள் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். இவுங்கள்ல கொஞ்சப் பேரு நம்ம அரசோட பிடியில பத்திரமா ஜெயில்ல கம்பியை ரொம்ப வருஷமா எண்ணிக்கிட்டே இருக்கிறாங்க இல்லியா அவனுங்கள்ல யாராவது ஜெயிலுக்குள்ளேயே இருந்துகிட்டு தியேட்டர்ல போய் குண்டு வெச்சிட்டு வந்தான்னு கதை, திரைக்கதை ரெடிபண்ணி அப்புறம் ஒண்ணு ரெண்டு போட்டோக்களை ரிலீஸ் பண்ணுவாங்க.

அப்சல் குரு முறைக்கிற மாதிரி இருக்கிற ஓரே படத்தை எல்லா ஊடகங்களும் போட்டு 'இவன கொன்னாத் தான் சரி' ன்ற ஃபீலிங்கை மக்களுக்கு உருவாக்குனாங்க இல்லியா அது மாதிரி ஒரு போட்டோ வரும். அதுல ஒரு கிப்ஸல் குரு கிடைப்பான்.
உடனே அவனைக் கொன்னே ஆகணும்னு அத்வானியிலிருந்து நம்ம ஊர் ராமகோபாலன் வரை ஒரே போராட்டம் போராடுவாங்க, பந்த் நடத்துவாங்க. சுப்ரீம் கோர்ட்ல கேஸ் எல்லாம் நடக்கும். நல்லா பொழுது போகும்.

இது வரைக்கும் குண்டு வெச்சது யாரு, எதுக்கு வெச்சாங்கன்னே கண்டு பிடிக்க முடியலையாம். சிபிஐ கண்ல விளக்கெண்ணெய் விட்டுட்டு இந்தக் கேஸை துப்பறியிறாங்களாம். அதனால் அடுத்த பலியாடு கிடைக்கிற வரை கொஞ்சம் பொறுமையா ஹெலிகாப்டர் ஊழல்ல சோனியாஜி, ராகுல்ஜிக்கெல்லாம் தொடர்பு இருக்குமோ இருக்காதோன்னு நீங்க கொஞ்ச காலம் யோசிக்காம இருப்பீங்கன்னா குண்டு வெச்ச ஆளு மேலும் குண்டு வைக்கமாட்டான்னு உறுதியா நம்பலாம். செத்துப் போனவங்களோட ஆவிகள் மட்டும் பார்லிமண்டையே சுத்தி சுத்தி வரும்.

Thursday, March 22, 2012

கூடங்குளம் மக்கள் நடத்தும் அநியாயமான(?!) போராட்டம்..

நமது பாரதப் பிரதமர் புரட்சி சிங், முப்பெரும் டாக்டர் பட்டம் பெற்ற அண்ணல் மன்மோகன் சிங் ஜி சொல்லியும் கேளாமல்...

நமது புரட்சித் தலைவி, அம்மா, சங்கரன் கோவிலில் அமோக வெற்றி பெற்ற புரட்சி நாயகி, போன மாதம் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாகவும் பின்பு ஒரே மாதத்தில் பெங்களூர் கோர்ட் வழக்கில் வாய்தா கெடு தீர்வதற்குள் கூடங்குளம் மக்களுக்கு ஆப்பு கொடுக்கவும் மாபெரும் தமிழ் நாடு சட்டசபையில் தீர்மானம் போட்டுச் சொல்லியும் கேளாமல்..

அண்ணல் சூப்பர் ஸ்டார்  அப்துல்கலாம் அவர்கள் சூறாவளிச் சுற்றுப்பயணம் அணு உலைக்குள் நடத்தி, வெளிவந்து வாசலில் நின்றபடியே தயாரித்து அளித்த நாற்பது பக்க 'பாதுகாப்பானது உலை' என்கிற இன்ஸ்டென்ட் காபி, இன்ஸ்டென்ட் டீ போன்ற சூடான மணமான இன்ஸ்டன்ட் அறிக்கையைப் படித்தும் திருந்தாமல்...

அதற்குப் பின் மத்திய அரசின் ஐயாவும், மாநில அரசின் அம்மாவும் அனுப்பிய அணு உலையை கடனுக்கு சுற்றிப் பார்க்கும் குழுவின் அறிக்கையையும் மதிக்காமல்..

இன்று அம்மா கருணை கூர்ந்து அனுப்பியுள்ள, 10 ஆயிரம் போலீசார் மற்றும் ராணுவம் ஆகியவை துப்பாக்கி சகிதம் கூடங்குளம் ரோடுகளில் எல்லையில் நடப்பது போல் 'பரேட்' நடந்து காட்டியும், அஞ்சாமல்...

இப்படி...











உண்ணாவிரதம் இருந்து போராடுவது எவ்வளவு அநியாயம்..?

மக்களே ! நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.. உங்களில் பத்து பேரையாவது கவர்மென்ட் சுட்டாகனுமா இல்லையா ? அப்போதானே  செத்தவனுக்கு நஷ்ட ஈடு, கோர்ட், கேசுன்னு பிரச்சனையை திசை திருப்பி சத்தமில்லாமல் அணு உலையை முதலாளிங்க திறந்து பிசுனஸ் ஸ்டார்ட் பண்ண முடியும்.

கரண்ட்.. கட்.. கரண்ட்.. கட்ன்னுட்டு எல்லாரையும் பழி வாங்கி... ஏதோ கூடங்குளம் வந்தவுடனே உங்களுக்கெல்லாம் 25 பைசாவுக்கு ப்ரீயா கரண்ட் தரப்போற மாதிரி பீலா உட்ற அம்மாவும், ஐயாவும்... இவ்வளவு கரண்ட் கட் நாடு பூரா வந்தப்ப.. 8 மணி நேரம்... 12 மணி நேரம்னுட்டு சிறு தொழில்களும், மக்களும் ராத்திரிப் பகல்ன்னு கரண்ட் இல்லாம கஷ்டப்பட்டப்போ.. ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோனுகளுக்கு மட்டும் ஒரு செகண்ட்ன்னா.. ஒரே செகண்ட் கூட கரண்ட் கட்டே பண்ணாம 24 மணி நேரமும் கரண்ட் விட்டுட்டு இருக்கிற ரகசியம் என்னாங்க ?  கூடங்குளம் மாதிரி அவியளுக்கு மட்டும் ரகசியமா ஒரு மாடங்குளம் திறந்திருக்கீகளோ ?

கூடங்குளம் மக்களுக்கு இரண்டு நாட்களாக மின்சாரம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. பால், குடிநீர், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. எதற்கு ? அவுங்க தான் உண்ணாவிரதம் இருக்காங்களே.. எதுக்கு இதெல்லாம் அவுங்களுக்குன்னுட்டு கவர்மென்ட் நினைச்சிட்டாங்க போல..

உதயகுமார் அமெரிக்காவோட ஆதரவுல போராட்டம் பண்றார்ன்னுட்டு கூசாம சொல்ற பிரதமர் ஐயா.. நீங்க போட்ட மிகப் பெரிய அணு உலை ஒப்பந்தம்  1..2.. 3 அது ஏதோ 50 லட்சம் கோடியாமே.. ரஷ்யா கூட போட்ட இந்த ஒப்பந்தமெல்லாம் அமெரிக்கா போட்ட ஒப்பந்தத்துக்கு கால் தூசி அளவு பணமாமே... அப்போ உதயகுமார் போராடினா... இந்த அணு உலை நின்னா...பின்னால எல்லா அணு உலையும் நின்னு போகுமில்லையா.. இதனால் எதிர்காலத்துல யாருக்கு பெரிய ஆப்பு...? அமெரிக்காவுக்கா..? ரஷ்யாவுக்கா..? கம்யூனிஸ்ட்டு தோழர்களே வழக்கம் போல 'அமைதி'க்கு வேண்டுகோள் வெச்சுட்டு அமைதியாயிட்டீங்க.. இனி உங்க பாஸ் மிச்சத்தை பாத்துக்குவாருன்னா..?

நம்ம தினமலம்.. போன்ற பத்திரிக்கைகளெல்லாம்.. வரிஞ்சுகட்டிட்டு அணு உலை வேணும்.. இடிந்த கரை மக்கள் ரவுடிகள்னு.. எழுதறத படிச்சா நமக்கு என்ன தோணும்?

இது அநியாயமான போராட்டம்னு தானே..
 கூடங்குளத்துக்கு வெளியே இருக்கும் மக்களே.. நீங்க யோசியுங்க.. யாரையாவது கவர்மெண்ட் சுட்டு  பலி எடுக்கிறதுக்குள்ள யோசியுங்க..

சற்று முன் உதயகுமாரிடன் பேசினோம்,,,, அங்கு மக்கள் கடல் மார்க்கமாக
குவிந்து கொண்டு இருக்கிறார்கள்... குழந்தைகளுக்கு தேவையான எதுவும்
சென்று சேரவில்லை... தண்ணீர் தடுக்கப்பட்டு இருக்கிறது.. கழிவறைகள்
மூலமாக சுகாதார கேடு வெகு சீக்கிரமாக பரவும் ஆபத்து அதிகமாக இருக்கிறது..
கிட்ட தட்ட 10000 மக்கள் 3 நாட்களாக ஒரு இடத்தில் குவிந்து
இருப்பதால்சுகாதார கேடுகள் மோசமடையும் என்று கவலை தெரிவித்தார்..
மருத்தவமனை இருக்கிறது, மருத்துவர்கள் இல்லை, மருந்துகள்
இல்லை...ஊடகங்கள் வட இந்திய ஊடகங்கள் மட்டுமே உள்ளே வந்து இருக்கின்றன...” என்றார்..... தமிழ் நாட்டு ஊடகங்கள் வாய் திறக்க மறுக்கின்றன. தோழர்களே அடுத்த முள்ளிவாய்க்கால் இது...

கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.!
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மொத்த மின் உற்பத்தி
மொத்த நிறுவுதிறன் - 1000 Mw
உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் - 450 Mw (only 45% output)
இதில் தமிழகத்தின் பங்கீடு / ஒதுக்கீடு - 157 Mw (only 35% for TN)
இந்த மின்சாரம் நம்மை வந்தடையும் போது நமக்கு கிடைக்கும் மின்சாரம் 25% இழப்பு போக - 117 Mw
இந்த 117 மெகாவாட் மின்சாரத்தைக் கொண்டு தமிழகத்தின் ஒட்டு மொத்த பற்றாக்குறையும் சரி செய்ய முடியும், என்று நீங்கள் நம்பினால்
நாங்கள் அல்ல முட்டாள்கள்!!
போராடுவது மனித இனத்தைக் காக்கவே அன்றி.! ஆதாயத்துக்காக அல்ல..! உனக்கும் எனக்குமான போராட்டம் தான் இது...