Showing posts with label Authors. Show all posts
Showing posts with label Authors. Show all posts

Saturday, October 31, 2015

சித்த மருந்துகளில் உலோகங்கள் சேர்ப்பதால் கிட்னி பாதிக்கும் என்று சொல்வது உண்மையா? - மருத்துவர் கு.சிவராமன்

புதிதாக யாரிடமாவது சித்த மருத்துவம் பற்றியோ, குறிப்பிட்ட ஒரு பிரச்சினைக்குச் சித்தத்தில் நல்ல மருந்து இருக்கிறது என்றோ சொன்னால், உடனடியாக அவர்களுடைய எதிர்வினை என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்? படித்தவர் முதல் பாமரர்வரை உடனடியாக வேதியியல் பேராசிரியர்போல மாறி ‘அதில் மெட்டல் கலக்கிறார்களே. அதெல்லாம் சரிதானா என யோசிப்பார்கள். மக்களிடையே நீண்ட நாட்களாக நிலவிவரும் இந்த மூடநம்பிக்கை தற்போது வேறொரு தளத்துக்குச் சென்றுவிட்டது.

மருத்துவர் யார்?
‘சித்த மருந்துகளில் மெர்குரி கலந்திருக்கிறது' என்றொரு சர்ச்சைக்குரிய செய்தி ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் சமீபகாலமாக வலம் வந்துகொண்டிருக்கிறது. நாளிதழ் ஒன்றிலும் அந்தச் செய்தி வெளியாகியுள்ளது. இதற்குப் பின்னூட்டமாக ‘சித்த மருந்துகள் எதுவும் தரநிர்ணயம் செய்யப்படாதவை' என்பது போன்ற அவதூறுகளும் வேகமாகப் பரவி வருகின்றன.
மருத்துவ முறை வழிகாட்டுதலின்படி ஒரு நோயாளியின் சிகிச்சை அறிக்கையின் அடிப்படையில், மருந்துகளால் ஏற்படும் எந்த ஒரு பின்விளைவும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை (Pharmacovigilance) எடுக்கப்பட வேண்டும். இது சித்த மருத்துவத்துக்கும் பொருந்தும். அந்த வகையில் சர்ச்சைக்குரிய சம்பவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பட்டத்தைப் பெற்ற சித்த மருத்துவராகவோ, பாரம்பரியச் சித்த மருத்துவராகவோ தெரியவில்லை. அந்த மருத்துவரின் தகுதி குறித்து முறைப்படி விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரியவில்லை. அப்படியிருக்கும்போது, மருந்துகளைப் பரிந்துரைக்கத் தகுதி இல்லாத போலி மருத்துவர் ஒருவர் செய்த தவறுக்கு, ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறையையே நம்பிக்கையற்ற ஒன்றாக ஊடகங்களில் சித்தரிக்கும் போக்கு வருத்தம் தரும் அதேநேரம், கண்டிக்கத்தக்கதும்கூட..

வேர், மூலிகை
அந்தச் சர்ச்சையில் குறிப்பிட்டுள்ள மிகவும் தவறான பொய்ச் செய்தி, ‘எல்லாச் சித்த மருந்துகளும் செய்து முடித்த பின்னர் மெர்குரியை (பாதரசத்தை) கலந்து தருகிறார்கள்' என்பதுதான். அப்படி ஒரு வழக்கம் எந்தச் சித்த மருத்துவச் செய்முறையிலும் கிடையாது. பொதுவாகவே சித்த மருந்துகளில் கனிமங்களின் பயன்பாடு மிகவும் சொற்பம். அப்படியே இருந்தாலும் முக்கிய, நாட்பட்ட, பிற மூலிகைகளால் குணப்படுத்த இயலாத நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படும் உயர் சித்த மருந்துகளில் மட்டும்தான் உள்ளது.
"வேர்பாரு தழைபாரு, மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரே"- என்பதுதான் சித்த மருத்துவத்தின் அடிப்படை இலக்கணம். அதன்படி வேர், மூலிகைகள் ஆகியவற்றைக்கொண்டு ஒரு நோயைத் தீர்க்க இயலாதபட்சத்தில் கடைசிப் பெருமருந்தாக மட்டுமே உப்புகளை, கனிமங்களைக் கொண்டு செய்யப்பட்ட மருந்துகளைச் சித்த மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள். மேற்கண்ட சம்பவத்தில் கூறப்பட்டுள்ளதுபோல், மருந்துகளைச் செய்துமுடித்துவிட்டு ஒருபோதும் கனிமங்கள் கலக்கப்படுவதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. மாறாக, ஒரு சில உயர் மருந்துகளில் மருத்துவ மூலப்பொருளாக மட்டுமே சில கனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கனிம உருமாற்றம்
சித்த மருத்துவம் மட்டுமில்லாமல் ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, ஏன் பெரும்பாலோர் நம்பும் நவீன மருத்துவத்திலும்கூட நேரடி கனிம - ரசாயன மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டே சில மருந்துகளின் செய்முறைகள் தொடங்கப்படுகின்றன. அந்தந்த மருத்துவத் தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி (National Pharmacopoeia / Formulary Guidance) கடைசியில் அம்மருந்துகள் முறைப்படியான மருந்து வடிவத்தை வந்தடைகின்றன. கடைசியாகப் பயனுக்குரிய மருந்தாக அது மாறும்போது, கனிம மூலக்கூறு வடிவில் இல்லாமல் உப்புகளாக, உடலுக்குத் தீங்கு செய்யாத வடிவத்துக்கு மாறியும் இருக்கும்.
பல்வேறு மூலிகைச் சாறுகளில் பல மணி நேரம் ஊற வைத்தும், பல நாட்கள் அரைத்தும், சாண வறட்டியில் புடமிட்டும்தான் இம்மாற்றம் நிகழ்த்தப்படுகிறது. நவீனத் தொழில்நுட்பத்தில் பல்லாயிரம் டிகிரி மிகை வெப்பத்திலும், பெரும் அழுத்தத்திலுமே நானோதுகள்களைப் பெற முடியும் என்றுள்ள நிலையில், 100 வறட்டிகளை வைத்துப் புடமிட்டு ஒரு உயர் கனிமத்தை நானோதுகள்களாகப் பெற்ற சித்த மருத்துவ நுட்பத்தை நவீன விஞ்ஞானம் இன்றைக்கும் மெய்சிலிர்த்துத்தான் பார்க்கிறது. இப்படிப்பட்ட நவீன நானோதுகள்களின் மருத்துவப் பயன்கள் ஏராளம்.

உறுதிப்படுத்தும் ஆராய்ச்சி
கனிமங்களை மூலப்பொருளாகக் கொண்டு தொடங்கப்பட்ட மருந்துகள், நானோ துகள்களாக நுண்மையடைந்து மருந்தாக மாறுவதைப் பல மருத்துவ நூல்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தியத் தொழில்நுட்பக் கழக (ஐ.ஐ.டி.) ஆராய்ச்சியாளர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் (Standardization of Metal-Based Herbal Medicines, American Journal of Infectious Diseases 5 (3): 200-206, 2009 ISSN 1553-6203 © 2009 Science Publications Corresponding Author: Arun Sudha, Indian Institute of Technology Madras, Chennai- 600 036), பெரும்பாலான மூலிகைகளில் உள்ள கனிமங்கள் உடலைப் பாதிக்காத ஆக்சைடு மற்றும் சல்பைடு வடிவத்தில் மாறுவதாகவும், நேரடியாகக் கனிமங்களை வைத்தே செய்யப்படும் மருந்துகளும்கூட நானோதுகள்களைப் போன்ற நுண்ணிய அளவில் இருப்பதையும் உறுதிசெய்துள்ளது.

அது மட்டுமல்லாமல் மெர்குரி (பாதரசம்), கந்தகத்தை வைத்துச் செய்யப்படும் மிக முக்கியமான சித்த மருந்தான ரசகந்தி மெழுகு குறித்து இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. குஜராத் ஜாம்நகரில் உள்ள இந்தியாவின் உயரிய ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆய்வு நிறுவனமும், நவீன ஆய்வு வழிகாட்டுதலின்படி ஒரு நீண்ட ஆய்வை நடத்தி, ரசகந்தியின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. சென்னையில் இயங்கிவரும் மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான மறைந்த பேராசிரியர் சரஸ்வதி நடத்திய ஓர் ஆய்வில், பாதரசத்தை முதன்மையாகக் கொண்டு செய்யப்படும் மருந்து மிகப் பாதுகாப்பானது என நிறுவப்பட்டுள்ளது (அந்த முடிவுகள் இன்னும் நூலாக வெளியிடப்படாமல், அரசு ஆவணமாகவே உள்ளன).

வியந்த உலகம்
மறைந்த நவீன மருத்துவப் பேராசிரியர் செ.நெ. தெய்வநாயகம், இதே ரசகந்தி மெழுகைக் கொண்டுதான் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் கிருமிகள் கட்டுப்படுத்தப்படுவதையும், நோய் எதிர்ப்பாற்றல் பெருகுவதையும் பற்றி நீண்ட ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வு JAPI எனும் மருத்துவ இதழில் வெளியாகி, உலக மருத்துவத்தின் கண்கள் சித்த மருத்துவத்தின் பக்கம் திருப்பப்பட்டன.
இதைத் தாண்டி கனிம மூலப்பொருளைக் கொண்டு செய்யப்படும் பல மருந்துகள்தாம் புற்றுநோய் முதலான சவாலான நோய்களுக்கான மிக முக்கிய சித்த மருந்துகள். Acute promyelocytic leukemia எனும் புற்றுநோய்க்கு இன்றளவும் பெரும் நச்சாகக் கருதப்படும் பாடாணங்களை (Arsenic trioxide) கொண்டு செய்யப்படும் சீன மருந்துகளின் பயன், உலகளவில் இன்றைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உலகத் தரம்வாய்ந்த British Journal of Haematology எனும் மருத்துவ இதழில், இதன் பயன் குறித்துக் கட்டுரை வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்கள் (Mathews V, Chandy M, Srivastava A. Arsenic trioxide in the management of acute promyelocytic leukaemia. Natl Med J India. 2001;14(4):215-22) கட்டுரையில் கிடைக்கின்றன.

தேவையற்ற குழப்பம்
இன்று சந்தையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் அரசு பதிவுபெற்ற சித்த மருந்துகளில், மத்திய அரசின் வழிகாட்டுதலில் (AYUSH- Good Manufacturing Practice guidelines) சுட்டிக்காட்டப்பட்டுள்ள தரநிர்ணயத்தின் அடிப்படையிலேயே கனிமங்களின் அளவு, வடிவம், செய்கை, நச்சற்ற பாதுகாப்பு நிலை போன்றவை இருந்தாக வேண்டும். ஒவ்வொரு மருந்து தயாரிப்பு நிறுவனமும் அதை உறுதிப்படுத்தும் ஆய்வுகளை (Quality assurance) மேற்கொண்டு ஆவணப்படுத்த வேண்டும். இதில் ஏற்படும் தவறுகளைக் கண்டறிய Pharmacovigilance முறை மத்திய, மாநில அரசுகளால் நிறுவப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகள் எதைப் பற்றியும் அறியாமல், சர்ச்சைக்குரிய சம்பவத்தை விவரிக்கும் செய்தி போலியாய் எச்சரிப்பது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறையைக் களங்கப்படுத்தும் தொனியிலும், சித்த மருத்துவப் பயனாளர்களைக் குழப்பத்தில் தள்ளும் வகையிலும் உள்ளது.

எத்தகைய மாற்றம் தேவை?
அறம் சார்ந்து சித்த மருத்துவத்தை மேற்கொண்டுவரும் சித்த மருத்துவர்களால் மக்களுக்கு, மருத்துவப் பயனாளிகளுக்கு எவ்விதத் தீங்கும் நிகழக் கூடாது என்பதில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. அதற்குச் சித்த மருத்துவம் தொடர்பாக உலகத் தரத்துடன் Reverse pharmacology முறையில் ஆய்வு நடத்தப்படவேண்டும் என்பதுதான் சித்த மருத்துவத்தை மேம்படுத்த நினைக்கும் பெரும்பாலோரின் நிலைப்பாடும் முயற்சிகளும்.

ஒரு மருந்து பழமையானது என்பதாலோ, நம்முடைய மரபு என்பதாலோ கொண்டாடாமல், Reverse pharmacology முறையில் நடத்தப்படும் ஆய்வுகளில் தவறென்று தெரியவரும் எந்த மருந்தையும் விலக்கி வைக்கவும் நவீன காலச் சித்த மருத்துவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
ஆனால், அதேநேரம் நம் நாட்டு மருத்துவ முறைகளை முழுவதுமாகப் புரிந்துகொள்ளாமல் அவசரமாக இன்றைக்கு வலிந்து வலியுறுத்தப்படும் தரநிர்ணயத்தின் பின்னணியில் பெரும் அரசியல் உள்ளதையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தரநிர்ணயங்கள் மக்கள் நலனை மையப்படுத்தியவை அல்ல. பெரும் வணிகச் சந்தையை மையப்படுத்தியவை என்ற உண்மையையும் சேர்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களிடையே மரபு மருத்துவ முறைகள் முக்கியத்துவம் பெற்றுவரும் பின்னணியிலேயே இது வலியுறுத்தப்படுகிறது.

நமது மரபு மருத்துவ முறைகள் சார்ந்து Reverse pharmacology முறையில் ஆய்வு நடத்த அரசிடம் வலியுறுத்துவது அவசியம். அப்படியல்லாமல், ஒரு சில போலி சித்த மருத்துவர்கள் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறை மீது பழிசுமத்துவதும் அந்தத் துறையையே பலியிடச் சொல்வதும் எந்த வகையில் நியாயம்? காலம்காலமாகப் புடம் போடப்பட்டுவரும் சித்த மருத்துவத் தத்துவங்களையும், நெடுங்காலமாகப் பயனில் உள்ள ஆவணங்களையும், அவசரஅவசரமாகப் புறந்தள்ளி, நவீன மருத்துவம் காட்டும் மாற்றத்துக்குரிய ஆய்வுகளை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவது கோடிக்கணக்கான சாமானியர்களுக்கு பயன்பட்டுவரும் சித்த மருத்துவத்தை வீணாகத் தூற்றுவதற்கான முயற்சியாகவே தெரிகிறது.

- கட்டுரையாளர், சித்த மருத்துவர் மற்றும் எழுத்தாளர் 
தொடர்புக்கு: herbsiddha@gmail.com

Thursday, September 3, 2015

தேசத்தின் சக்கரங்கள் - க. சுவாமிநாதன்.


‘‘வேலைநிறுத்தங்களின் மூலம் இந்திய நாட்டின் பொருளாதார நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தி விடாதீர்கள்! ’’ – இது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் வார்த்தைகள். ஜூலை 20, 21 (2015) தேதிகளில் நடைபெற்ற இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் (மி.லி.சி) ஆற்றிய உரை இது. செப்டம்பர் 2 அன்று இந்தியாவிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் நடத்தப் போகிற நாடு தழுவிய வேலைநிறுத்தம் பற்றியே அவர் இப்படிக் கூறினார். இதுபோன்ற “பன்ச்” டயலாக்குகளை அமைச்சர்களும், கார்ப்பரேட் ஊடகங்களும் பேசுவார்ககள். தேச நலன், பொருளாதார வளர்ச்சி, தொழிலின் எதிர்காலம்,மக்களுக்குப் பாதிப்பு … என நிறைய ஸ்டாக் வைத்திருக்கிறார்கள்.  

“ஆமாப்பா! எதற்கெடுத்தாலும் ஸ்ட்ரைக் … போராட்டம்னா நாடு எப்படிப்பா உருப்படும்?” என பஸ் ஸ்டாப்புகளில், பார்க்குகளில், ரயில் பயணங்களில் பலரையும் பேசவைப்பதே இப்பிரச்சாரத்தின் நோக்கம். உண்மையில் இவ் வேலைநிறுத்தம் யாருக்காக? இது முன்வைக்கிற கோரிக்கைககள் தேச நலனுக்கு உதவுமா? இக் கேகள்விகளை விவாதிப்போம் வாருங்ககள்.

யாரையா அந்தப் பொதுஜனம் ? பொதுவாக வேலைநிறுத்தம் என்றாலே, பொதுமக்களுக்கு என்ன பயன் ? என்று கேட்கிறார்ககள். அரசாங்கமும் இக்கேள்வியை தொழிற்சங்கங்களுக்கு எதிராக முன்வைக்கிறது. தொழிற்சங்கங்ககள் முன்வைத்திருக்கிற கோரிக்கைகளை வாசித்துப் பாருங்ககள். முதல் கோரிக்கையே, விலைவாசியைக் கட்டுப்படுத்து; அனைவருக்குமான பொது விநியோகத்தை அமலாக்கு என்பதுதான். இரண்டாவது கோரிக்கை வேலைவாய்ப்புகளை உருவாக்கு என்பது. இக்கோரிக்கைககள் பொதுமக்களுக்கு சம்பந்தமில்லாதது என்றால் யாரையா நீங்க சொல்கிற பொதுஜனம் என்றுதான் கேட்கவேண்டும்.

இந்திய அரசாங்கத்தின் கணக்கை எடுத்துப் பாருங்ககள். 31 கோடி பேர் முழு நேர உழைப்பாளிககள். 9 கோடி பேர் அரைகுறை உழைப்பாளிகள். (அதாவது வருடத்திற்கு 183 நாட்களுக்கு மேல் வேலை கிடைக்காதவர்ககள்). இவ்வேலைநிறுத்தம் முன்வைக்கிற இன்னொரு முக்கியமான கோரிக்கை இந்த 40 கோடி பேருக்கும் சமூகப் பாதுகாப்பு வேண்டுமென்பதுதான். இவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ 15000 நிர்ணயிக்கப்படவேண்டும் என்பதுதான். 40 கோடி பேர் என்றால் அவர்களை நம்பியிருக்கிற குடும்பத்தினர் எத்தனை பேர். இவ்வளவு பேரும் நீங்ககள் சொல்கிற பொது ஜனத்திற்குகள் வரமாட்டார்ககள் என்றால் யாரையா பொதுஜனம்! அவர்கள் என்ன வேறு கிரக வாசிகளா? ஏதாவது பாதாள லோகத்தில் பதுங்கியிருப்பவர்களா !? எனவே பொது ஜனம் என்று சொல்வது ஏதோ அவர்கள் விரலை வைத்து அவர்கள் கண்களையே குத்துகிற உத்தியோ என்றே தோன்றுகிறது.

அதற்கு ஒரு உதாரணம் மத்திய பி.ஜே.பி அரசின் “விட்டுக் கொடுங்கள்’’ (give up subsidy) பிரச்சாரம். குடிசைகளிலும், கிராமங்களிலும் மரச் சுகள்ளிகளை வைத்து அடுப்பெரிக்கிற தாய்மார்ககள் புகை மண்ட, கண்ககள் கரிக்க படுகிற துயரத்தை மனமுருக பிரதமர் பேசுகிறார். நீங்கள் ஏன் கேஸ் மானியத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என நடுத்தர வர்க்கத்தைப் பார்த்துக் கேட்கிறார். அம்பானி கூட மனம் கசிந்து கேஸ் மானியத்தை விட்டுக் கொடுத்துவிட்டார் என்பது செய்தி. மாதச் சம்பளத்தில் மூச்சுத் திணற குடும்பம் நடத்துகிற ஒருவர் வருடத்திற்கு 1200 ரூபாயை விட்டுக் கொடுப்பதும், மும்பை கடற்கரையில் 27 மாடி மாளிகையைக் கட்டியிருக்கிற முகேஷ் அம்பானி 1200 ரூபாய் கேஸ் மானியத்தை விட்டுக் கொடுப்பதும் ஒன்றா? பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தவுடன் போட்ட முதல் பட்ஜெட்டிலேயே கார்ப்பரேட் வரிகளை 33 சதவீதத்தில் இருந்து 25 சதவீதத்திற்கு படிப்படியாக குறைப்பது என்று அருண் ஜெட்லி அறிவித்தாரே! அதில் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் அம்பானிக்கு வருடத்திற்கு கிடைக்குமே. அதை ‘‘கிவ் இட் அப்’’ என்று அம்பானி விட்டுக் கொடுப்பாரா? ஒரே ஆண்டில் பிரதமரின் ஆத்ம நண்பர் அதானியின் சொத்து மதிப்பு ஒன்றரை மடங்கு அதிகமாகி நாட்டின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவராக மாறியிருக்கிறாரே! அவ்வளவு லாபத்தில் அரை வருச, கால் வருச வருமானத்தையாவது ‘‘கிவ் இட் அப்’’ என அதானி கொடுப்பாரா!

இப்படியெல்லாம் விட்டுக் கொடுத்தால் சுள்ளி அடுப்பை மாற்றுவது என்ன, அறுசுவை உணவே கொடுக்கலாமே! காற்றே இல்லாமல் வீட்டுக்கு வெளியே வெட்டவெளியில் தூங்குபவர்களுக்கு ஃபேன் கொடுக்கலாமே! அழுகிப்போன காய்கறியையும், கெட்டுப்போன பாலையும் சாப்பிடாமல் இருக்க ஃபிரிட்ஜ் தரலாமே! இதற்கெல்லாம் ‘‘கிவ் இட் அப்’’ என மனமுருக பிரதமர் அம்பானியிடமும், அதானியிடமும் கேட்கலாமே! ரூம் போட்டு யோசிக்காமலேயே பளிச்சுன்னு ஒரு உண்மையை சொல்லலாம். ரூ.15000 குறைந்த பட்ச வருமானத்தை தராமல் இருப்பதும், கேஸ் மானியத்தை “கிவ் இட் அப்” என நடுத்தர வர்க்கத்திடம் கேட்பதும் எதை நிரப்புவதற்கு? யாருடைய பைகளுக்காக? சொல்லுங்கள் பார்ப்போம்! இதையெல்லாம் செப்டம்பர் 2 வேலைநிறுத்தம் பேச இருக்கிறது.

பெட்ரோல் விலை சர்வதேச சந்தையில் ஏறினால் இங்கே எப்படி ஏறாமல் இருக்கும் என்று முந்தைய காங்கிரஸ் ஆட்சி கேட்டது வினயம். இன்றோ சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இங்கே எக்ஸ்சைஸ் வரிகளைப் போட்டு விலையை குறையாமல் பார்த்துக் கொகள்வது விசமம். யாரிடமிருந்து பறிக்கப்படுகிறது, யார் பைககள் நிரம்புகின்றன என்பதை விவாதிக்கிற கோரிக்கைககள் வேலை நிறுத்தத்தில் முன்வைக்கப்பட்டுகள்ளன.

அண்ணாத்த ஆடுறான் ஒத்திக்கோ… ‘‘வேலை நிறுத்தங்கள் தொழில் வளர்ச்சியை பாதித்து விடக் கூடாது’’ என்பது அருண் ஜேட்லியின் கவலை. இவ் வேலைநிறுத்தமும் வளர்ச்சியைப் பற்றி விவாதிக்கிறது. எது வளர்ச்சி? யாருடைய வளர்ச்சி ? நமது பிரதமர் ஜப்பானுக்கு போனபோது ‘‘ட்ரம்’’ வாசித்தார். அவரின் இசை ஈடுபாடு பற்றி எழுதி மகிழ்ந்தன ஊடகங்கள். உள்நாட்டிலோ மாஜிக் மன்னன் சர்க்காருக்கு நம் பிரதமர் சவால் விடுகிறார். ஆமாம். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கடைசி ஆண்டில் 4.6 சதவீத ஜி.டி.பி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சியை தனது மந்திரக் கோல் அசைவால் 6.7 சதவீதமாக மாற்றிவிட்டார். தொழில், விவசாயம், சேவை என்கிற ஜி.டி.பி_யின் மூன்று துறைகளும் கடந்த ஆண்டில் வளரவில்லை. ஆனால், மோடி அளவு கோல்களை தந்திரமாக மாற்றி வளர்ச்சியை அதிகமாக காண்பித்துவிட்டார். இப்போது அடுத்த ஆண்டிற்கு 7.4 சதவீதம் வளர்ச்சி என அறிவித்துள்ளார். கமல் காலை மடக்கி ‘‘உன்னை நெனைச்சு பாட்டுப் படிச்சேன்’’ என்று சோகமாக பாடினால் அப்பு. அதே கமல் கால்கட்டை அவிழ்த்து ஆடினால் அண்ணாத்தே ஆடுறான் ஒத்திக்கோ.. ஒத்திக்கோ… ஜி.டி.பியும் மோடியின் டைரக்சனில் காலை மடக்கி ஆடு என்றாலும் ஆடுகிறது. விரித்து ஆடு என்றாலும் ஆடுகிறது. அதுமாதிரிதான் 4.6 என்பதும், 6.7 என்பதும்… இன்னொரு விசித்திரம். வேலை நிறுத்தம் அறிவித்தவுடன் ‘‘வளர்ச்சி.. பாதிப்பு’’ என்பார்கள். வேலைநிறுத்தம் அன்று ‘‘பிசுபிசுத்தது’’ ‘‘மாமூல் வாழ்க்கை பாதிக்கவில்லை’’ என்பார்ககள். முடிந்தவுடன் ‘‘ஒருநாள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இழப்பு’’ என்று தொழிலதிபர்கள் அமைப்புககள் அறிக்கை விடும். காட்சிக்கு காட்சி மாறுகிற டயலாக்குககள் ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கம் உள்ளது. வளர்ச்சி என்ற வார்த்தையில் அதிகம் மயங்குபவர்ககள் படித்த, உயர் நடுத்தர, நுனி நாக்கு ஆங்கிலக் காரர்கள்தான். வளர்ச்சி என்றால் என்ன? நிறைய பேருக்கு வாழ்வு கிடைக்கவேண்டும். பெரும்பான்மை மக்களின் வருமானம் அதிகரிக்க வேண்டும். இதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் யார் வருமானம் அதிகரிக்க இந்த மோடி, காங்கிரஸ் அரசுகள் வேலை செய்திருக்கின்றன?

ஐ.டி.வேலைப் பறிப்புகள் ஜனவரி 17, 2015_ல் டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் ‘‘டெக் வளாகங்களில் 25000 இளஞ்சிவப்பு சீட்டுகள்… இன்னமும் எண்ணுவது நிற்கவில்லை’’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை. சாப்ட் வேர் நிறுவனங்களில் பல்லாயிரக் கணக்கான ஊழியர்களின் வேலை பறிபோவது பற்றி அதில் எழுதப்பட்டிருந்தது. ஐ.பி.எம், டெல், சிஸ்கோ, எச்.பி, டி.சி.எஸ் நிறுவனங்களில் இருந்து பணிப்பாதுகாப்பு இல்லாமல் துப்பிச் சிதறும் கரும்புச்சக்கை போல ஊழியர்கள் தூக்கி எறியப்படுகிறார்கள். 2014 ல் யாகூ நிறுவனம் தனது பெங்களுரு அலுவலகத்தில் பெரும்பான்மை ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது. வாழ்க்கை பற்றிய கனவுகளோடு வரும் இளைஞர்களை 30 வயதுக்குகள் சீட்டுக் கிழிப்பது எவ்வளவு குரூரம்! பணிச்சுமையின் அழுத்தம் மனப் பிறழ்வுகளை உருவாக்குகிறது என்பதற்கு எவ்வளவு உதாரணங்ககள்! மனக்குமுறல்ககள் முக பாவனையில், முணுமுணுப்புகளில் வெளிப்பட்டால் கூட அடுத்த நிமிடம் கம்ப்யூட்டர் ஆக்சஸ் துண்டிக்கப்பட்டு, இமெயிலில் பணிநீக்க ஆணையை அனுப்பப்படுகிற அராஜகங்ககள் எத்தனை. கிங் பிஷர் ஏர்லைன்ஸ் வீழ்ச்சிக்கு யார் காரணம்? சத்யம் நெருக்கடிக்கு காரணம் யார்? விஜய் மல்லையாக்களும், ராமலிங்க ராஜுக்களும்தானே! இங்கேயெல்லாம் தொழிற்சங்கங்கள் இல்லை. ஜிந்தாபாத் கோசங்கள் இல்லை. வேலை நிறுத்தங்கள் இல்லை. ஆனால் நிறுவனங்ககள் வீழ்ந்தன. அப்படி எனில் யார் வளர்ச்சியின் எதிரிகள்? கடிவாளம் இல்லாத குதிரை கண்மூடித்தனமாக ஓடுகிறது. முட்டித் தகள்ளுகிறது. காலில் மிதிக்கிறது.
வேலை நிறுத்தம்தான் வளர்ச்சியை பாதிக்கிறது என்று சொல்பவர்கள் கொஞ்சம் அரசின் புள்ளி விவரங்களைப் பாருங்கள். 1981-_90 காலத்தில் மனித உழைப்பு நாட்கள் இழப்பில் வேலைநிறுத்தமே 53 சதவீதக் காரணமாக இருந்தது. 1990_-2000_ல் மனித நாட்கள் இழப்பிற்கு நிர்வாகங்களின் லாக் அவுட் தான் 60 சதவீத காரணமாக மாறிவிட்டது. 2002-_2005 காலத்தில் கம்பெனிகள் செய்த ‘லாக் அவுட்’ 74 சதவீத மனித உழைப்பு நாட்கள் இழப்பிற்கு காரணமாக உயர்ந்துள்ளது.

செயற்கை கண் இரக்கம் ஒரு தொழிலதிபர் இடதுபக்கம் செயற்கை கண்ணை பொருத்தினார். அவருக்கு சந்தேகம். பார்ப்பவர்களுக்கு வித்தியாசம் தெரியுமா என்று. ஒரு தொழிலாளியை அழைத்து நான் ஒரு கண்ணில் செயற்கை கண்ணை பொருத்தியிருக்கிறேன், எது என்று தெரிகிறதா? என்று கேட்டார். அவன் சற்றும் தயங்காமல் இடது கண்தான் என்றான். எப்படி சரியாகக் கண்டுபிடித்தாய்? கேட்டார். முதலாளி! அக்கண்ணில்தான் கொஞ்சம் இரக்கம் தெரிகிறது என்றானாம். தனியார் மூலதனத்திடம் லாப நோக்கம்தான் இருக்குமே தவிர இரக்கம் இருக்காது என்று விளக்குகிற கதை. தற்போது ரூ.15000ஐ குறைந்தபட்ச ஊதியமாக தருவதில் அரசுக்கு என்ன பிரச்சினை? அதைக் கொடுக்க வேண்டுமானால் எங்கேயிருந்து எடுப்பது? தொழிலகங்களின் லாபத்தில் இருந்துதான். அமெரிக்காவில் ஊதிய வேறுபாடு விகிதம்- அதாவது, கீழ்நிலைச் சராசரி ஊழியர் ஊதியத்திற்கும், உச்சபட்ச நிலை எக்சிகியூடிவ் ஊதியத்திற்கும் இடையேயான வித்தியாசம் 373 மடங்குககள். இந்தியாவில் சில நிறுவனங்களில் 2920 மடங்குககள் கூட உள்ளது. (உ.ம்: -டெக் மகேந்திரா). மேட்டில் இருந்து எடுத்துதான் பள்ளத்தில் போட முடியும். இவர்கள் தோண்டுவதிலேயே குறியாக இருக்கும்போது எப்படி நிரப்புவார்கள். மத்திய அரசு அண்மையில் குறைந்தபட்சக் கூலியாக ரூ 160 அறிவித்துள்ளது. 30 நாட்களும் வேலை பார்த்தாலும் ரூ.4800 தான் மாதத்திற்கு கிடைக்கும்.

உலகமய போதை.. கிராமங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான ஒதுக்கீடு வெட்டப்பட்டதால் மொத்தமுள்ள 6576 ஒன்றியங்களில் 2500ல் மட்டுமே அமலாகிறது. அண்மையில் வெளியான அரசின் சமுக, பொருளாதார மற்றும் சாதி ஆய்வு தருகிற தகவல் என்ன! இந்தியக் கிராமங்களில் 90 சதவீதமான குடும்பத் தலைவர்களின் ஊதியம் ரூ.10000 க்கு கீழே உள்ளது. 74 சதவீத குடும்பத் தலைவர்களின் ஊதியம் ரூ.5000 க்கும் கீழே. கிராமங்களின் தற்கொலைககள் 26 சதவீதம் அதிகரித்துள்ளன. அரசாங்கம் என்ன சொல்கிறது? அது தற்கொலைகளை ஆய்வு (?) செய்துள்ளது. விவசாய நெருக்கடியால் எத்தனை பேர்? குடும்பப் பிரச்சினைகளால் எவ்வளவு பேர்? குடிப் பழக்கத்தால் எவ்வளவு பேர்? இப்படிப் பட்டியல் போட்டு விவசாய நெருக்கடியால் தற்கொலைகள் செய்வது குறைந்துவிட்டது என்று கண்டுபிடித்துள்ளது. விவசாய நெருக்கடி வேறு.. குடும்ப பிரச்சினை வேறு… என்று பிரிக்கிற இவர்களின் ஞானத்தை என்ன சொல்வது! குடிப் பழக்கத்திற்கும், வாழ்க்கை சோகத்திற்கும் சம்பந்தமில்லை என்பது என்ன தெளிவோ! உலகமய போதை போலிருக்கிறது. எல்லாம் ரெண்டு ரெண்டாய்த் தெரிகிறது.

தேசம், மக்கள், வளர்ச்சி ..கடுகு, மிளகு, வத்தல். பி.ஜே.பி யின் தேர்தல் அறிக்கையில் “விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவினத்தை விட 50 சதவீதம் அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்போம்” என வாக்குறுதி தரப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் 50 சதவீதம் என்பதற்குப் பதிலாக குவிண்டால் அரிசிக்கு ரூ 50 ருபாய் கூடுதலாக தந்தார்கள். உச்ச நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக ஒரு பொது நல வழக்கு வந்தது. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், “உற்பத்திச் செலவினம் + 50 சதவீதம் என்பதெல்லாம் சந்தையை தகர்த்து விடும்” என்று கதவை மூடிவிட்டார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகிற குவிண்டால் கோதுமைக்கு 225 டாலர் அதாவது ரூ 1625 தருகிற அரசாங்கம் இங்கே உள்ள விவசாயிக்கு 200 ருபாய் குறைவாகத் தருகிறது. அது சந்தையின் ஜீவன். விவசாயிகளின் ஜீவன்களைப் பற்றி என்ன கவலை! தேசம், மக்கள், வளர்ச்சி என்பதெல்லாமே இவர்களுக்கு சந்தையில் உள்ள கடுகு, மிளகு, வத்தல் மாதிரிதான். இப்படிக் கிராமங்களில் இருந்து வாழ்வு தேடி நகரத்திற்கு அத்தக் கூலிகளாக வருபவர்களை ரூ 100க்கும், 200க்கும் சக்கையாய் பிழிய முடிகிறது. வறுமை, வேலை இல்லாமை எல்லாம் இருந்தால்தான் இப்படி ஆட்ககள் கிடைப்பார்ககள். லாபப் பெருக்கத்திற்கான இந்த ஏற்பாட்டையே செப்டம்பர் 2 வேலை நிறுத்தம் கேள்வி கேட்கிறது.

பொன்மகள் வந்தாள் – வெளிநாட்டிலிருந்தா வந்தாள் ?! ‘மேக் இன் இந்தியா’ என்பது பி.ஜே.பி அரசின் கவர்ச்சிகரமான முழக்கம். இந்தியாவுக்கு வாருங்கள்… என்று அழைப்பு விடுத்தவுடன் “பொன்மகள் வந்தாள்” என முதலீடுககள் வானத்தில் இருந்து கொட்டுமென்று கனவுகளை உலவவிட்டார்கள். மேக் இன் இந்தியா நடந்தேற என்னென்ன தேவை? ஆதாரத் தொழில் வளர்ச்சி தேவை. அதற்கான நிதியாதாரங்கள் தேவை. இந்திய ரயில்வேக்கு அடுத்த ஆண்டுகளில் 1,50,000 கோடிகள் தேவை என்றால் யார் கதவைத் தட்டுவது? பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் வாசலில்தான் நின்றார்கள். வட்டி எவ்வளவு என்று கூட இறுதி செய்யாமல் இவ்வளவு பெரிய தொகைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடமுடியுமா! போட்டார்ககள். அந்நிய முதலீட்டை நம்பி ஆதாரத் தொழில் வளர்ச்சியை எட்ட முடியாது; உள்நாட்டுச் சேமிப்பே உறுதியான வழி என்பது மீண்டும் நிரூபணமானது. அடுத்த தேவை சந்தை விரிவாக்கம். ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் ‘‘மேக் ஃபார் இந்தியா’’ என்றார். என்ன அர்த்தம்? மோடி சொல்வது ‘‘இந்தியாவில் உருவாக்கு’’, ரகுராம் ராஜன் சொல்வது ‘‘இந்தியாவுக்காக உருவாக்கு’’. உள்ளூர் மாடு வெளியூரில் விலை போகாது என்கிற பழமொழி உலகமயத்திற்கும் பொருந்தும். உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்தாமல் உலக சந்தையைப் பிடிக்க முடியாது.

இப்போது இந்தியாவின் ஜி.டி.பி 2 ட்ரில்லியன் டாலர்கள். சீனாவின் ஜி.டி.பியோ 11 ட்ரில்லியன் டாலர்ககள். இந்தியாவின் ஜி.டி.பி யில் தொழில் துறையின் பங்கு 16 சதவீதம்தான். சேவைத்துறையே 57 சதவீதம். ஆனால் சீனாவிலோ தொழில்துறை 34 சதவீதம். தொழில்துறை சார்ந்த வருமானம் வளர்ச்சி அடைந்தால் அது உள்நாட்டு உற்பத்திக்கான சந்தையை உருவாக்கும். சேவைத்துறை சார்ந்த வருமானம் அதிகரித்தால் வெளிநாட்டு பொருட்களின் நுகர்வையே பெருக்கும். சென்னை ஒ.எம்.ஆர் ரோடு, இ .சி .ஆர் ரோடுகளைச் சுற்றிப் பார்த்தால் இதை பளிச்சென்று பார்க்க முடியும். எனவே வளர்ச்சியின் சதவீதத்தை விட வளர்ச்சியின் தன்மை முக்கியம். இதுவே சீனாவின் பலம். இந்தியாவுக்கு பாடம். ஒருமுறை அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் “நாங்ககள் சீனாவைப் பார்த்து பொறாமைப் படவில்லை. அதனை பின்பற்றவே விழைகிறோம் என்றார். ஆனால் அதைச் செய்யவில்லை.

செத்தும் கொடுத்த மாடு!! ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி என்பதே மத்திய அரசின் இலக்கு. ஆனால் உலகளாவிய மந்தம் இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்புகளையும் பாதித்துள்ளது. ஒரு விசித்திரமான உண்மை. பசுவின் புனிதம் பேசி மாட்டுக் கறியை தடை செய்கிற சட்டத்தை தாங்கள் ஆளுகிற மாநிலங்களில் கொண்டு வருகிறது பி.ஜே.பி. ஆனால் மாட்டுக் கறி ஏற்றுமதி 2014-15 ல் ரூ.28,000 கோடிகள். முந்தைய 2013-14 ஆண்டைக் காட்டிலும் ரூ 3000 கோடி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மேக் இன் இந்தியா “சிங்கம்” இலட்சினையை “மாடு” என மாற்றிவிடலாம் போலிருக்கிறது.
இன்னொரு வேதனையான உண்மை. இவர்கள் முதலீடுகளை இந்தியாவுக்குள் கொண்டு வருவதைப் பற்றிப் பேசுகையில், இந்திய முதலீடுகள் இங்கேயிருந்து வெளியேறுவதும் நடைபெறுகிறது. ஒரு உதாரணம் பாருங்கள். ‘‘மேக் இன் இந்தியா’’ அறிவிப்பை அகம் மகிழ்ந்து வரவேற்றவர்களில் ஜெயவிலாஸ் குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராம்குமாரும் ஒருவர். கோவிந்தராஜன் டெக்ஸ்டைல்ஸ் என்கிற கோயம்புத்தூரை தலைமையகமாகக் கொண்ட நிறுவனத்தின் சி.இ .ஓ இவர். ரூ.230 கோடி முதலீட்டை முதலில் குஜராத்திலோ, ஆந்திராவிலோ போடுவதாக இருந்தவர் அதை அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்திற்கு கொண்டு போய் விட்டார். காரணம் என்ன? இங்கு யூனிட் மின்சாரம் ரூ 6.90. வட கரோலினாவில் ரூ.3 மட்டுமே. இங்கேயிருந்து இவர்களின் ஏற்றுமதி கப்பலில் சீனாவுக்குப் போக தூத்துக்குடி துறைமுகம்- சிங்கப்பூர் வழியாக 31 நாட்கள் எடுக்கிறது. வட கரோலினாவில் இருந்து 20 நாட்களே ஆகிறது. சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு நிறையக் கப்பல்களில் ஏற்றுமதி நடப்பதால் அங்கிருந்து திரும்பும் போது கப்பல்கள் பாதியாகவோ, காலியாகவோ இருக்கின்றன. இதனால் அதில் பேரம் பேசி போக்குவரத்துக் கட்டணத்தைக் குறைக்க முடிகிறது. இதனால் கோவிந்தராஜன் 230 கோடி முதலீட்டை அமெரிக்காவில் போய் போட்டுவிட்டார். ஒரே உதாரணத்தில் எவ்வளவு படிப்பினைககள் பாருங்ககள். மின்சாரப் பற்றாக்குறைக்கு அரசின் முதலீடுககள் அத்துறையில் குறைந்தது முக்கியக் காரணம். சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் கப்பல் போக்குவரத்திற்கான காலம் குறைந்திருக்கும். ஆனால் அது குறித்தெல்லாம் முயற்சியேதும் இல்லை.

இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்க இருக்கிற ஒரே அம்சம் மலிவான உழைப்பே. அது கூட மேற்கூறிய பலவீனங்களால் ஒர்க் அவுட் ஆவதில்லை. என்ன செய்வது? உழைப்பை இன்னும் மலிவாக்கு! அதற்கு எதிரான குரல்களை மௌனமாக்கு! அதற்கான உரிமைகளை முடமாக்கு! என்பதே மேக் இன் இந்தியா.

இருப்பதையும் பறிப்பதா? தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்த முனைந்துள்ளார்கள். ‘‘சிறு தொழில்ககள் மற்றும் இதர நிறுவனங்ககள்’’ (பணி வரையறை மற்றும் விதிமுறைககள்) 2014 சட்ட வரைவு 40 தொழிலாளர்களுக்கு கீழ் பணியாற்றுகிற எந்தவொரு நிறுவனமும், மின்சாரப் பயன்பாடு இருப்பினும், இல்லாவிடினும் – தொழிலகச் சட்டம் மற்றும் 14 தொழிலாளர் சட்டங்களில் இருந்து விதிவிலக்கு பெற்றுவிடும் என்ற அம்சத்தைக் கொண்டுள்ளது. இச்சட்டங்களில் குறைந்த பட்ச ஊதியச் சட்டம், போனஸ் சட்டம், காண்ட்ராக்ட் ஊழியர் வரைமுறை மற்றும் ஒழிப்புச் சட்டம், ஊழியர் வைப்பு நிதிச் சட்டம், தொழிலாளர் அரசு காப்புறுதி சட்டம் ஆகியனவெல்லாம் உண்டு. 80 சதவீதமான தொழிலாளர்ககள் இப்பாதுகாப்புகளில் இருந்து கழற்றி விடப்படுவார்ககள். இருப்பதைப் பறித்தால் கோபம் வராதா! போராடுவார்கள் அல்லவா! அதற்காகத்தான் இன்னொரு அஸ்திரத்தை ஏவுகிறார்கள். அதுதான் தொழிற்சங்கச் சட்டம் 1926, தொழில் பணியமர்த்தல் (நிலையாணை) சட்டம் 1946, தொழில் தகராறு சட்டம் 1947 மூன்றையும் ஒன்றாகப் பிசைந்து உருவாக்கப்பட்டுள்ள தொழிலுறவு மசோதா.

தொழிலாளர்களில் 10 சதவீதம் அல்லது 100 பேர், எது குறைவோ, அவ்வளவு பேர் ஒன்று சேர்ந்தால் மட்டுமே புதிய தொழிற்சங்கத்தை ஆரம்பிக்க முடியும். அணிதிரட்டப்பட்ட தொழில்களில் வெளியாட்ககள் சங்கப் பொறுப்புகளில் இருக்க முடியாது. (தற்போது மூன்றில் ஒரு பங்கு இருக்கலாம்). அணிசாராத் தொழிலாளர் அமைப்புகளில் இரண்டு பேருக்கு மிகாமல் வெளியாட்கள் தலைவர்களாக இருக்கலாம். (தற்போது 50 சதவீதம் வரை இருக்கலாம்). பதிவு பெற்ற சங்கங்களில் பொறுப்பிலுள்ள ஒருவர் 10 சங்கங்களுக்கும் மேலாக பொறுப்பில் இருந்தால் தகுதி நீக்கம் அடைவார். 300 பேருக்கு குறைவாகத் தொழிலாளர்ககள் உள்ள நிறுவனங்களில் அரசின் அனுமதியின்றி அவர்களைப் பணிநீக்கம் செய்யலாம். (90 சதவீதமான தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்பு காலி). சட்ட பூர்வமற்ற வேலைநிறுத்தம் எனில் பங்கேற்பவர்களுக்கு ரூ 20000 லிருந்து ரூ.50000 வரை தண்டத்தொகை அல்லது ஒருமாதச் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். ‘‘தூண்டுவோருக்கு / உதவுபவர்களுக்கு’’ ரூ.25000 லிருந்து ரூ.50000 வரை தண்டத்தொகை அல்லது ஒரு மாதச் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும். தொழிலாளர்களின் கோபங்களையும், குமுறல்களையும் அடக்குவதற்கு ஆயுதங்களையும் தயார் செய்கிறார்கள்.

குருவிகளுக்கு சாணம் கூட இல்லை ‘‘நிறுவனங்ககள் வளர்ந்தால் தொழிலாளர்களின் ஊதியம் அதிகரிக்கும்; வளமான தேசம் உருவாகும்; அது உழைப்பாளிகளின் தேவைகளை கவனித்துக் கொள்ளும்” இது இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ் கூட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியது. நிறுவனங்கள் வளர்ந்திருந்தாலும் ஊதிய உயர்வுப் பிரச்சினைகளில் அரசாங்கம் குறுக்கே நிற்பதை இன்சூரன்ஸ் துறையில் பார்க்கிறோம். நெருக்கடி காலங்களில் தொழிலதிபர்களின் செல்வம் பன்மடங்கு பெருகுவதையும், தொழிலாளர்களின் பங்கோ பறிக்கப்படுவதையும் எத்தனையோ தொழில்களில் பார்க்கிறோம். ‘‘குதிரைகளுக்கு ஓட்ஸ் கொடுத்தால் அது கொழுத்து சாணம் போடும்; அதைக் குருவிகள் கொத்தித் தின்னலாம் என்பதே உலகமயத்தின் சாகசவாதம். அதையே அருண் ஜெட்லி ‘நிறுவனம் வளர்ந்தால் தேசம் வளரும், தொழிலாளர் வருமானம் உயரும்’ என்கிறார். குதிரை கொழுத்தது உண்மை. ஆனால் குருவிக்கு சாணம் கூடக் கிடைக்கவில்லை.

பிரதமர் காப்பீடு திட்டம், பிரதமர் வங்கிக் கணக்கு என்றெல்லாம் அறிவிக்கிறார்ககள். விபத்துக் காப்பீட்டிற்கு வருடத்திற்கு ரூ.12, இயற்கை மரணங்களுக்கு ரூ.330 என்று வசூலிக்கிறார்ககள். இதில் அரசாங்கம் ஒரு பைசா கூட போடவில்லை. இன்சூரன்ஸ் நிறுவனங்களே பணத்தைத் தரப்போகின்றன. ஆனால் பிரதமர் என்கிற லேபில்லை இத்திட்டங்களில் ஒட்டிவிட்டார்கள். வங்கிக் கணக்கு என அறிவிக்கப்பட்டதில் 95 சதவீதமான கணக்குகளை அரசு வங்கிகளே திறந்தன. இவர்ககள் தாலாட்டிச் சீராடுகிற தனியார் வங்கிககள் குடிசைகளுக்கு, கிராமங்களுக்கு போகத் தயாராக இல்லை. தனிப்பெரும்பான்மையோடு பி.ஜே.பி அரசு அமைந்திருப்பதால் இந்த ஐந்தாண்டை தங்களுக்கு கிடைத்த ‘‘பொற்காலமாக’’ பன்னாட்டு மூலதனம் மற்றும் இந்தியத் தொழிலதிபர்கள் பார்க்கிறார்கள். 2015 பட்ஜெட்டில் தரப்பட்ட வரிச்சலுகைககள் ரூ 5,89,000 கோடிகள். வரி பாக்கிகள் ரூ 8,27,000 கோடிகள். வங்கி வராக்கடன்கள் மார்ச் 2016ல் 5,70,000 கோடிகளைத் தொடும் என்கிறார்கள். எத்தனை லட்சம் லட்சம் கோடிகள். இவற்றில் பெரும் பெரும் பகுதி கார்ப்பரேட்டுகளால் விழுங்கப்பட்டதே. ஒரு உதாரணம். 17 தனிநபர்கள் வைத்துகள்ள வரிபாக்கி மட்டுமே 2,14,000 கோடிகள் என நாடாளுமன்றத்தில் மத்திய நிதி இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்தார். (பி.டி.ஐ – ஆகஸ்ட் 1, 2015).

இவ்வளவு லட்சம் லட்சம் கோடிகளை சுவைத்து, சவைத்து, செரிக்கிற கார்ப்பரேட்டுகளை பார்த்து ‘‘கிவ் இட் அப்’’ என்று சொல்ல முடியாத பிரதமர்தான் சமுக நலத் திட்டங்களில், பென்சனில், மானியங்களில் கைவைக்கிறார். கார்ப்பரேட்டுகளுக்கு நிலத்தை தங்கத் தாம்பாளத்தில் வைத்து தருவதே நிலம் கையகப்படுத்துகிற சட்டவரைவு. விவசாயிகளின் ஒப்புதலுக்கு கூட இடமில்லை. நிலத்தை நம்பி இருக்கிற, நிலமே இல்லாதவர்கள் 52 சதவீதமானவர்கள். அவர்களுக்கு திருவோடுதான். இப்பாதையில் சமுகநீதிக்கு இடம் கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான துணைத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் கைவைக்கிறார்கள். பல்லாயிரம் கோடிகள் பறிக்கப்படுகின்றன.

கிரீஸ் நெருக்கடி. ‘‘சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே’’. இன்று நாம் அனுபவிக்கிற பேச்சுரிமை, எழுத்துரிமை. வாழ்வதற்கான உரிமைகள் அனைத்துமே நீண்ட நெடிய போராட்டங்கள் வாயிலாக ஈட்டப்பட்டவை. இவற்றையெல்லாம் பறிக்கிற “இருண்ட காலத்தை, 1975 ல் சந்தித்திருக்கிறோம். ஆளுங்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி, “அவசர நிலை வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன’’ என்று அண்மையில் கூறினார். இது உண்மையான அக்கறையா! உட்கட்சிப் பூசலா! உலவ விட்டு ஆழம் பார்க்கிற உத்தியா! என ஆராய்ச்சி செய்யலாம். எனினும் ஜனநாயக மறுப்பிற்கான சூழலை வெளிப்படுத்துகிற வார்த்தைகள். பன்னாட்டு நிதி மூலதனம் தேசங்களின் இறையாண்மையை, நாடாளுமன்ற ஜனநாயகத்தை, உட்கட்சி விவாதங்களைக் கூட மௌனிக்கச் செய்கிறது.

கிரிசில் 61 சதவீதமான மக்ககள் ‘சிக்கன நடவடிக்கைகளுக்கு’ எதிராக கருத்தெடுப்பில் வாக்களித்தார்கள். ஆனால் வாக்கெடுப்பு முடிந்த ஓரிரு நாட்களுக்குள்ளாக கடுமையான சிக்கன நடவடிக்கைகளை ஏற்றுக் கொண்டு ஐ.எம். எப் – ஐரோப்பிய இணைய வங்கி – ஐரோப்பிய இணையம் என்கிற திரிசூலத்திற்கு கிரீஸ் இரையாக வேண்டியிருந்தது-. சர்வதேச மூலதனத்தின் சுருக்குக்கயிறு தேச இறையாண்மையின் கழுத்தில் விழுந்துள்ளது. ஐரோப்பிய இணையத்தைவிட்டு வெளியேறலாம்; கிரிசின் நாணயத்தை உயிர்ப்பிக்கலாம் என்பது போன்ற வலிகள் நிறைந்த ஆனால் தேச நலன் சார்ந்த மாற்றுப்பாதைக்கு அங்குள்ள ஆட்சியாளர்கள் முனையவில்லை. இந்தியாவில் இருப்பவர்களும் ‘திரிசூல’ பக்தர்ககள் அல்லவா! இதனால்தான் இவர்களே ஆறு ஆண்டுகளாக எதிர்த்த இன்சூரன்ஸ் அந்நிய முதலீட்டு மசோதாவை ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் கொண்டு வந்தார்கள். அதை ஆதரிக்கத் தயங்கிய காங்கிரசும் நாடாளுமன்றத்தில் கடைசியில் கைதூக்கியது. ஆளுங்கட்சி_எதிர்க்கட்சி விளையாட்டெல்லாம் வீதிகளில் நடத்தப்படும் கீரி, பாம்பு சண்டை மாதிரிதான். சர்வதேச நிதி மூலதனம் – இந்தியப் பெரும் தொழிலகங்கள் மகுடி ஊதுகின்றன. நிலம் கையகப்படுத்துகிற அவசரச்சட்டம் நான்காவது முறையாக பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது. சுரங்க தனியார் மயம், அந்நிய முதலீடுகளுக்கு “ஃபாஸ்ட் ட்ராக் என்பதெல்லாம் அடுத்தடுத்து விரைவுபடுத்தப்படுகின்றன.

“உள்ளடக்கிய உலகமயம்” என்ற பெயரில் பொருளாதாரப் பாதைக்கு மனிதமுகம் இருப்பதாகச் சித்தரிக்க முந்தைய ஆட்சியாளர்கள் முயற்சித்தார்கள் “உள்ளடக்கிய இந்துயிசம்” என்ற பெயரில் மதவெறியைத் தூண்டவும், ஒடுக்கப்பட்ட மக்களை காலாட்படைகளாக சிறுபான்மையினர்க்கு எதிராக முன்னிறுத்தவும் முயற்சிக்கிறார்கள். நவீன தாராளமயப் பாதையோடு மதவெறியும் கை கோர்த்துக் கொள்கிறது. மக்களின் பிரச்சனையின் பால் எழுகிற ஒற்றுமையை சீர்குலைக்கிறது. உட்கட்சி விவாதங்களுக்குரிய ஜனநாயகம் கூட மறுதலிக்கப்படுகிறது. அந்நிய முதலீடுககள் குறித்து பி.ஜே.பி.யின் முன்னாகள் இராஜ குருக்களில் ஒருவரான கோவிந்தாச்சார்யாவின் குரல்ககள், அவ்வப்போது சுதேசி ஆட்டம் போடுகிற ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்துக்கள் போன்றவை குப்பைக் கூடையில் வீசியெறியப்படுகின்றன. இம் மாற்றுக் கருத்துக்களெல்லாம் கூட அதிருப்தியை அவர்களே அறுவடை செய்கிற உத்தியாகக்கூட இருக்கலாம். ஆளுங்கட்சியின் தொழிற்சங்கமான பி.எம்.எஸ் கூட அரசின் கொள்கைகளுக்கு எதிராக வீதிகளுக்கு வருகிறது. ஒருமுறை மூத்த பி.எம்.எஸ். தலைவர் கூடச் சொன்னார். “தொழிலகங்களின் வாசல்களில் கூட மனித உழைப்பை இவர்கள் மறுத்து விடுவார்ககள். காவலாளர்களுக்குப் பதிலாக நாய்களைப் போட்டுவிடுவார்கள்’’ என்று ஆட்குறைப்பை, உரிமை பறிப்புகளைச் சாடினார். ஒருவேளை இதற்கு கூட இன்றைய அரசு அந்நிய நாய்களை வரவழைத்தாலும் ஆச்சரியமில்லை. இத்தகைய ஜனநாயகமற்ற சூழலை நோக்கி தேசம் நகர்வதை யார் தடுப்பது? “மக்களைத் தாக்குவதற்கு மக்களிடமிருந்தே இசைவைப் பெறுவது’’ உலகமயப் பாதையின் தந்திரம். கார்ப்பரேட் கைகளிலுள்ள ஊடகங்ககள் தங்களது “எஜமானர்களின் குரலை’’ எதிரொலிக்கின்றன. இவற்றுக்கெல்லாம் எதிராகப் பெருமுயற்சி தேவைப்படுகிறது.

பாவேந்தர் பாரதிதாசன் வார்த்தைகளில் “அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை உன்னைச் சங்கமமாக்கு மானுட சமுத்திரம் நானென்று கூவு’
-க.சுவாமிநாதன் (தமிழ்நாடு ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர்.)

Monday, March 23, 2015

காலம் தாழ்த்தும் தந்திரம் வாளேந்திய சிங்கள சிங்கத்தின் அரசியல் போர்வாள்! - ஜெயந்தரன்

காலம் தாழ்த்தும் தந்திரம்
அரசியலில் காலம் தாழ்த்தும் தந்திரம் (Delaying Tactics) என்பது ஒருவகை யுத்தமுறையாக பின்பற்றப்படுகிறது. கால தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகும். (Justice delayed is justice denied) என்பதற்கு அப்பால் அது நீதி நியாயம் உரிமை என்பனவற்றிற்கான கட்டமைப்பையே சல்லடையாக்கி விடுகிறது. பின்போடுதல் என்பதன் பொருள் இல்லை என்பதாகும். அதிக தாமதம் அதிக தீங்கானதாகும். சிங்களத் தலைவர்கள் தமிழரின் உரிமைகள் தொடர்பான விடயங்களை பின்போடுவதன் மூலம் அதனை தனித்து பின்பு பையவே இல்லாது அழித்துவிடுகிறார்கள். ஒன்றை அதிகம் தாமதப்படுத்துவதன் மூலம் அதனை அதற்குரியவர்களுக்கு தீங்கானதாக்கிவிடுகிறார்கள்.

காலதாமதப்படுத்தல் என்பது எப்போதும் அளவால் பெரிய இனத்திற்கு சாதகமானதாகவும் அளவால் சிறிய இனத்திற்கு பாதகமானதாகவும்
அமைந்துவிடுகிறது. ஆதலால் ஈழத்தமிழர் விவகாரத்தில் சிங்களத் தலைவர்கள் எப்போதும் காலதாமதப்படுத்தல் தந்திரத்தை ஈழத்தமிழருக்கு
எதிரான ஒரு முக்கிய ஆயுதமாக எப்போதும் வெற்றிகரமாக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் சிங்கள தலைவர்களிடமும் ஆட்சியாளர்களிடமும்
அரச இயந்திரம் அவர்களது கையில் இருப்பதினால் அதனை அவர்கள் ஒரு முக்கிய கருவியாக்கொண்டு அரச இயந்திரமற்ற தமிழ்மக்களை
காலதாமத்தால் இலகுவாக தோற்கடித்திட முடியும். அதாவது அரச இயந்திரத்தின் கூரிய வாளுக்கு தமிழர்கள் கொடுக்கும் காலதாமத வாய்ப்பு
இலக்காகி வெட்டுண்டு அந்த அரச இயந்திரத்தின் பாரத்துக்குள் அது நசிந்து அழிந்துபோய்விடும். ஆதலால் அரச இயந்திரம் உள்ளவர்களுக்கு
காலதாமதம் செய்யும் வாய்ப்பு ஏற்படும்போது அது இயல்பாகவே தமிழரின் இலக்கை அழித்துவிடும்.

இனவெறுப்பை தூண்ட  பௌத்தமதத்தை உபயோகப்படுத்துதல்
சிங்கள அரச இயந்திரம் தெளிவான சித்தாந்தங்களாலும் கோட்பாடுகளாலும் அதற்கு பொருத்தமான நடைமுறைகளினாலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 1972ஆம் ஆண்டு இலங்கை குடியரசின் அரசியல் யாப்பானது பின்வரும் மூன்று விடயங்களை அப்படியே உள்வாங்கி அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. 1956ஆம் ஆண்டு வெளியான பௌத்த ஆணைக்குழுவின் அறிக்கையை அப்படியே நிறைவேற்றிய யாப்பாக
இந்த யாப்பு காணப்படுகின்றது. அதாவது பௌத்தத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது (Betrayal of Buddhism) என்ற தலைப்புடைய இந்த
அறிக்கையானது எதிர்காலத்தில் இலங்கை அரசியலில் பௌத்தத்திற்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை
வற்புறுத்தியிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பௌத்தத்தை அரச மதமாக்கவேண்டும் என்றும் பௌத்த சாசன அமைச்சை உருவாக்க
வேண்டும் என்றும் பௌத்த நிறுவனங்களும் அமைப்புக்களும் ஓங்கி குரல் ஒலித்தன. இந்த அறிக்கை 1956ஆம் ஆண்டு தேர்தலை நிர்ணயிப்பதில்
பெரும் பங்கு வகித்தது. இவ்வறிக்கையின் அபிலாசையை அரசியல் யாப்பு ரீதியாக 1972ஆம் ஆண்டு யாப்பு உட்கொண்டிருந்தது. இதனை 1978ஆம்
ஆண்டு அரசியல் யாப்பு மேலும் வலுவுடன் முன்னெடுத்தது.

பௌத்தம் இலங்கையின் முதன்மையான மதம் என்றும் அதனை பேணிப்பாதுகாப்பதும் கட்டிவளர்ப்பதும் அரசின் பொறுப்பும் கடமையும் என்று
இந்த யாப்பு கூறுகிறது. இதன் மூலம் ஏறக்குறைய பௌத்தம் அரச மதம் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டது என்பதே உண்மை.1953ஆம் ஆண்டு டி.சி.விஜயவர்த்தன எழுதிய விகாரையில் புரட்சி (Revolt in the Temple) என்ற நூலும் அதே ஆண்டு வெளியான ஆதர் விஜயவர்த்தன தலைமையில் அமைக்கப்பட்ட அரசாங்க பாஷை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையும் 1956ஆம் வெளியான மேற்படி பௌத்த ஆணைக்குழுவின் அறிக்கையும் இணைந்து சிங்கள மக்களினதும் சிங்கள தலைவர்களினதும் அரசியல் மனப்பாங்கை தீவிர வலுவுடன் வடிவமைத்தனர். இம்மூன்று நூல்களும் இன மத விரோதங்களையும் சகிப்புத்தன்மையின்மையையும் பரந்து பட்ட சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்குவதில் பெரும் பங்குவகித்தன.

மஹாவம்சத்தின் பங்கு
ஏற்கனவே நீண்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றுப் பகை உணர்வை சுமந்த ஒரு நூலாக மகாவம்சம் காணப்படுகிறது. அந்த நூலில்
இருந்து இன மத பகைமையும் விரோதமும் கருவாக பெறப்பட்டு நவீன இனவிரோத வரலாற்றுக்கு ஏற்ப வடிவமைப்பட்டன. சிங்கள அறிஞர்களினதும் ஆராய்ச்சியாளர்களினதும் எழுத்தாளர்களினதும் தீவிர பங்களிப்புடன் இனவாத அரச இயந்திரம் கட்டமைக்கப்பட்டது.
ஆதலால் இந்த அரச இயந்திரமானது தமிழின வெறுப்பையும் அழிப்பையும் தமது இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது என்ற வகையில் தமிழின பகைமையும் தமிழினத்தை அழிக்கும் மனப்போக்கும் சிங்கள மக்களின் மனங்களில் ஒரு தர்மமாக நியாயமாக கடமையாக வளர்ந்துள்ளது. இதனை பிரதிப்பலிப்பதும் நிறைவேற்றுவதும்தான் எந்த ஒரு சிங்களத் தலைவர்களினதும் எந்த ஒரு சிங்கள அரசாங்கத்தினதும் பணியாகிறது. அதலால் சிங்கள அரச இயந்திரம் அந்த அரச இயந்திரத்திற்கு பின்னால் உள்ள மூளைகள் அதற்கு இசைவான நிர்வாக கட்டமைப்புக்கள் இவற்றை முன்னெடுக்கவல்ல தலைவர்கள் அதன் வழி அரசாங்கங்கள் என்ற அனைத்தையும் ஒன்றில் இருந்து இன்னொன்றை பிரித்துப்பார்க்காது அனைத்தையும் ஒரு திசை வழி இலக்கென பார்க்க வேண்டும்.

அரசியலை மேடையில் காட்சியளிக்கும் தலைவர்களின் சந்தர்ப்பவாத வார்த்தைகளுக்கு உள்ளால் அரசியலை பார்க்காது அதனை அரச இயந்திர
கட்டமைப்புக்கு உள்ளாலும் அந்தக் கட்டமைபுக்குரிய மூலச் சித்தாந்தம் கோட்பாடு என்பனவற்றிற்கு ஊடாகவும் அது வரலாற்று நடைமுறையில்
ஈட்டியிருக்கும் வெற்றி அடைந்திருக்கும் ஸ்தானம் என்பவற்றிற்கு ஊடாகவும் எடைபோடவேண்டும். அப்படி எடை போட்டால் நுனிப்புல் மேயும்
அரசியல் கண்ணோட்டத்திற்கு உட்படாமல் வெறும் சலசலப்பு தளம்பல் அரசியலுக்கு பலியாகாமல் ஏமாற்று வித்தைகளுக்குள்ளும் காலம் தாழ்த்தல்களுக்கு உள்ளும் சிக்குண்டு அழியாமல் ஈழத்தமிழரை பாதுகாப்பதற்கான வழிகளைத் தேட முடியும்.

ராஜபஷ எனும் சுனாமி
ராஜபக்ஷ அரசாங்கம் ஓர் அகால தோல்வி அடைந்துவிட்டது. இந்த தோல்வி ஒரு பெரும் அதிசயம் போல் தோன்றுகிறது. ஆனால் சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் இந்த தோல்வியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதேவேளை சிங்களமக்கள் மத்தியில் இருந்து ராஜபக்ஷவுக்கு 60 வீத வாக்குகள் கிடைத்துள்ளன. ராஜபக்ஷ தோல்வியடைந்தது அதிசயம் போல் தோன்றுவதை விடவும் உண்மையான அதிசயம் இனிமேல்தான் நடக்க இருக்கிறது.

இதுபற்றி முதுபெரும் ஆங்கில பத்திரிகையாளரான டி.மஹிந்தபாலா The Birth and Rise of the Nugegoda Man என்ற ஆங்கில கட்டுரையில் மகிந்த ராஜபக்ஷ ஓரு சுனாமியாய் அதாவது ஆழிப்பேரலையாய் இப்பொழுது இருக்கும் அரசாங்கத்தை நடைபெறவுள்ளதாக கூறப்படும் எதிர்வரும் சூலை நாடாளுமன்றத் தேர்தலில் அடித்துச் சென்றுவிடுவார் என்று கூறுவதன் மூலம் நிகழவிருக்கும் அதிசயத்தை இப்போதே ஆருடம் கூறுகிறார்.

சிங்கள மக்களின் மனப்பாங்கை புரிந்துகொண்ட அனுபவம் வாய்ந்த ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் இவர் கூறும் ஆருடத்தை நாம் புறந்தள்ள முடியாது. அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி நுகேகோடவில் நடந்த மாபெரும் பேரணியில் லட்சக்கணக்கில் சிங்கள மக்கள் பெரு வெள்ளமென திரண்டதாகவும் இது ஆழிப்பேரலையாய் இப்போது இருக்கும் அரசாங்கத்தை சூலை மாதத்தில் அடித்துச் சென்றுவிடும் என சிங்கள பேரினவாத மனப்பாங்கிற்கு ஊடாக அவர் அதனை விளக்குகிறார்.

47 வேறுபட்ட கட்சிகளும் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.யும் இந்திய உளவு அமைப்பான றோவும் சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்களும் இணைந்து மக்கள் எதிர்பாராத விதமாக இரகசிய சதிகாரத்தனமாக ராஜபக்ஷாவை வீழ்த்தி விட்டதாகவும் ஆனால் ராஜபக்ஷாவோ வெளிப்படையான மக்கள் வெள்ளத்தொடர் எழுச்சிபெற தொடங்கிவிட்டதாகவும் அக்கட்டுரையில் அவர் விவரிக்கிறார். மேலும் ஜனவரி மாதம் நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தல் 1960ஆம் அண்டு மார்ச் மாதம் நிகழ்ந்த நாடாளுமன்ற தேர்தல் மூலம் டட்லி செனநாயக அரசாங்கம் அமைத்ததுடன் ஒப்பிட்டு பின் அதே ஆண்டு சூலை மாதம் நிகழ்ந்த நாடாளுமன்றத் தேர்தலில் டட்லி தோற்கடிக்கப்பட்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக வெற்றிபெற்று அரசு அமைத்தது போல ராஜபக்ஷவின் ஜனவரி தோல்வியையும் சூலையில் வெற்றி பெறக்கூடும் என்பதையும் அக்கட்டுரை விவரித்தது. இங்கு கருத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் சிங்கள இனவாத அரசியல் மனப்பாங்கை பற்றி மேற்படி மஹிந்தபால கொண்டிருக்கும் கண்ணோட்டமும் அது மேலும் வீரியத்துடன் எழுச்சிபெறும் என்ற அவரது கருத்தான அடிப்படைகள் புறந்தள்ளப்பட முடியாதவை என்பதுதான்.

இன அழிப்புத் தன்மையோடு வடிவமைக்கப்பட்டு வலுப்பெற்று ஸ்தாபிதம் அடைந்திருக்கும் சிங்கள அரச இயந்திரம் பற்றிய அரசியல் உடற்கூற்றினை (Poitical Anatomy) புரிந்துகொள்ளாமல் அதுபற்றிய அரசியல் பார்வை இல்லாமல் எழுமாத்திரத்தில் அரசியல் அணுகுமுறைகளை மேற்கொண்டால் அது தமிழ்மக்களுக்கு புதைகுழி தோண்டுவதாகவே அமையமுடியும்.

போர்க்குற்ற விசாரணையை நீர்த்துப் போகச்செய்ததில் சிங்களம் அடைந்த வெற்றி
‘போர்குற்ற விசாரணையை’ ஒத்திபோட்டமை என்பது இனவாத சிங்கள அரசுக்கு கிடைத்த வெற்றியும் அதன்பொருட்டு தற்போதைய சிறிசேன அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றியும் இறுதியில் இராஜபக்ஷவுக்கு கிடைத்த வெற்றியும் ஒட்டுமொத்தத்தில் சிங்கள இனப் படுகொலையாளர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றியுமாகும்.

இனப்படுகொலை ஒரு தனிநபருடையதல்ல. அது சகல சிங்கள இனத்தவருடையதுமான ஆதரவுடனும் விருப்பத்துடனும் வரவேற்புடனும் அரங்கேறிய ஒரு கூட்டுமன இனப்படுகொலையாகும். அதற்கான விசாரணையை இல்லாமல் செய்வதில் சிங்கள அரசும் சிங்கள இனவாதமும்
வெற்றி பெற்றுவிட்டன என்பதே உண்மையாகும்.

இங்கு சந்திரிகா-சிறிசேன-ரணில் அரசாங்கம் பதவியில் இருக்கின்றதோ அல்லது இல்லையோ என்பதல்ல பிரச்சனைமீண்டும் ராஜபக்ஷ பதவிக்கு வருவாரா இல்லையா என்பதல்ல பிரச்சனை. யார் பதவியில் இருந்தாலும் ‘போர்க்குற்ற விசாரணையை’ பின்போடுவதில் வெற்றி பெற்றுவிட்டனர் என்பதே தந்திரம். இது ஒட்டுமொத்த சிங்கள இனப்படுகொலை கலாச்சாரத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.

அரசற்ற படுகொலைக்கு உள்ளான அப்பாவி தமிழ் மக்களை உலக அரங்கில் உள்ள அனைத்து அரசுகளும் சிங்கள அரசு சார்ந்த தத்தம் அரச நலன் கருதி கைவிட்டுவிட்டன. இந்தவகையில் நீதி நியாயங்களுக்கு அப்பாலான அரச நலன் சார்ந்த சர்வதேச உறவு நிலையைப் புரிந்து கொண்டு ஈழத்தமிழரின் உரிமைகளை நிலைநாட்டவல்ல அரசியல் ராஜதந்திர வியூகங்களுக்கு ஊடாக ஈழத்தமிழர்களின் உரிமைகளையும் நியாயங்களையும் நிலைநாட்டுவதற்குரிய வழிவகைகளை கண்டறிய வேண்டும். இதில் அதிக பொறுப்புணர்வுடனும் புதிய சிந்தனையுடனும் புத்திக்கூர்மையுடனும் ஆழ்ந்த அரசியல் ஞானத்துடனும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு ஈழத்தமிழர் செயற்பட வேண்டும். கரையான் புற்றெடுத்ததுபோல சிங்கள மேலாத்திக்க அரசியல் தமிழ்மக்கள் மீது புற்றெடுத்து தமிழ்மக்களின் தேசிய தன்மையையும் வாழ்வையும் சல்லறையாக்கிவிட்டது. உரிமை, பண்பாடு , அடிமைநிலை என்பனவற்றை புரிந்து கொள்ளவதற்கென ஒரு மனமும் அதற்கான பார்வையும் வேண்டும். ‘ஒருவன் தான் அடிமையாய் இருக்கின்றேன் என்பதை புரிந்துகொண்டாலே அவர் அரைவாசி விடுதலையடைந்துவிடுகிறான்’.

இந்தவகையில் தமிழ்மக்கள் காலதாமதப்படுத்தும் அரசியல் மூலம் மேலும் மேலும் அடிமையாக்கப்படுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் சிந்தனை தேவைப்படுகிறது. இந்த ‘போர்க்குற்ற விசாரணையை’ தாமதப்படுத்துவதன்மூலம் மட்டுமன்றி கடந்த 75 ஆண்டுகாலப் பகுதியில் இதேபோல எல்லா வகைகளிலும் அனைத்து துறைகளிலும் காலதாமதப் படுத்தும் தந்திரத்தை பிரயோகித்து தமிழ் மக்களை கருவறுப்பதை சிங்கள இனவாதம் தொடர் வெற்றிகளை ஈட்டிவருகிறது. அதிக தாமதம் அதிக ஆபத்தானதும் அதிக தீங்கானதுமாகும். இனி அடுத்தது என்ன என்ற கேள்வியை தமிழ்த்தரப்பு தன் நெஞ்சில் நிறுத்தி புதிய வழியில்; சிந்திக்க வேண்டும்.
 - ஜெயந்தரன்

Monday, March 2, 2015

இராஜபக்ஷவின் இராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக்கும் சிறிசேன! -- ஜெயந்தரன்

அரசியல் அழிப்புக்கு வழிகோலும் இராணுவ அழிப்பு; இராணுவ அழிப்பை பின்தொடரும் அரசியல் அழிப்பு; இராணுவ அழிப்பின் மறுபக்கம் அரசியல்
அழிப்பு; இராணுவ வெற்றித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்படும் அரசியல் மாளிகை. இதுதான் இன்றைய ஈழத்தமிழர் அரசியல் நிலைகுறித்து
சொல்லப்படக்கூடிய கருத்தோட்டமாகும்.

அரசியலை சம்பவங்களுக்கு ஊடாக அன்றி அதன் தர்க்கபூர்வ வளர்ச்சிப்போக்குக்கு ஊடாக அடையாளம் காணவேண்டும்.
சிங்கள உயர்குழாத்தின் அரசியல் அகராதியில் மிகத்தெளிவான ஒற்றை இலக்கு மட்டுமே உள்ளது. அதாவது தமிழினத்தை எவ்வாறேனும்
அழித்தொழித்துவிடுவது என்பதாகும். இதில் காலகட்ட சூழலுக்கு ஏற்ப சிங்களத் தலைமைகள் ஐக்கிய தேசிய கட்சியோ அல்லது சுதந்திர கட்சியோ
ஜனதா விமுக்தி பெரமுனவோ இடதுசாரிகளோ வலதுசாரிகளோ எக்கட்சியினராயினும் தமிழினத்தை அழித்தொழிப்பதில் ஒரே இலக்கை
கொண்டுள்ளனர். பயங்கரவாத ஒழிப்பு என்பதன் பேரில் மேற்படி அனைத்துத்தரப்பினரும் ஒருமுகமாக நின்று ஒத்த கருத்துடன் கைகோர்த்து நின்று இராணுவ ரீதியாக தமிழினத்தை அழித்ததில் முழுப்பங்கு வகித்தனர். இங்கு அரசியலை அதன் செயல்பூர்வ வளர்ச்சி நிலையில் வைத்து நாம்
புரிந்துகொள்ள வேண்டும்.

சிங்களத் தரப்பில் ஈ எறும்பு கூட மிச்சமின்றி அனைவரும் கட்சிவேறுபாடுகளைக் கடந்து சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு செயல்பூர்வமாக ஆதரவளித்தனர். சிங்கள பௌத்த மத நிறுவனங்கள் சமூக நிறுவனங்கள் அரசாங்க நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் பல்கலைக்கழங்கள் பாடசாலைகள் பத்திரிகைகள் வானொலிகள் தொலைக்காட்சிகள் என அனைத்தும் ஒன்றுகூட மிச்சமின்றி
ஏகோபித்த குரலில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு ஆதரவளித்தன.

தமிழனத்தை ஒடுக்குவது என்பது சிங்கள மக்களின் ஒரு கூட்டுமன முடிவாகும். இது அரசியல், வரலாற்று மற்றும் அறிவியல் அர்த்தத்தில் அதிகம் ஸ்தாபிதம் அடைந்துள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் மூலம் தான் அடைய விரும்பிய இலக்கை இராணுவ அர்த்ததில் சிங்கள அரசு
அடைந்துள்ளது. ஆனால் அது அரசியல் அர்த்ததில் முன்னெடுக்கப்பட்டு முழுமைப்படுத்தப்பட வேண்டியுள்ளது.தமிழினத்தை அழிப்பது பற்றிய சிங்கள இனவாத்தின் இலக்கை 100 புள்ளிகள் என எடுத்துக்கொண்டால் இராஜபக்ஷ தான் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் மூலம் அதில் 49 புள்ளிகளை அடைந்துவிட்டார். அதாவது 49ஆவது படியில் ஏறிவிட்டார். அந்த இடத்தில் இருந்து 50ஆவது புள்ளியை அல்லது 50ஆவது படியில் ஏறவேண்டிய தேவை அரசியல் அர்த்தம் கொண்டதாக இருந்தது. ஆனால் இராஜபக்ஷவின் கரங்கள் இனப்படுகொலையால் இரத்தம் தோய்ந்திருந்த நிலையில் அதன் அடுத்தகட்ட தேவையான அரசியல் வெற்றியை அதாவது சிங்கள இனவாத தேரோட்டத்தை நடத்த முடியாதவாறு இருந்தது. இந்நிலையில் சிங்கள இனவாதம் அரசியல் தளத்தில் முன்னேறவேண்டிய தேவையை பூர்த்தி செய்வதற்கு பார்வைக்கு முள்ளிவாய்க்கால் படுகொலையில் இரத்தம் தோயாத ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா, சிறிசேன போன்றவர்களின் அரசியல் வருகை அவசியப்பட்டது. அது இப்போது அவர்களுக்கு கைகூடியிருக்கிறது என்பதை அரசியல் ரீதியாக புரிந்துகொள்வதே சரியானதாகும்.

அதாவது இனப்படுகொலைக்கான இராணுவ நடவடிக்கை இனவாதம் வீறுநடைபோடுவதற்கு எதிராக இருந்த அனைத்து தடைகளையும்
நீக்கிவிட்டது. இதனை விரிவாக கூறுவது என்றால் தமிழ் மக்களின் மொழி, பண்பாடு, பிரதேசம், மக்கள் செறிவு, குடியடர்த்தி மற்றும் சமூக
நிறுவனங்கள், அரசியல் கட்டுமானங்கள் என்பனவற்றை அழிப்பதற்கு அவர்கள் மத்தியில் எழுந்த பல்வகைப் போராட்டங்கள் மற்றும்
ஆயுதப்போராட்டம் என்பன தடையாக இருந்தன. இத்தகைய தடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைக்குப் பெயரே இராணுவ நடவடிக்கையாகும். இத்தகைய இராணுவ ரீதியான இனப்படுகொலையின் மூலம் சிங்கள இனவாதம் தமிழ்மக்கள் மத்தியில் இருந்த அனைத்துவகையான சமூக அரசியல் போராட்ட கட்டுமானங்களையும் கூடவே மக்களையும் அழித்தொழித்து உளவியல் ரீதியான ஒரு யுத்தப் பீதியையும் தோல்வி மனப்பாங்கையும் ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் இவ்வாறு இராணுவ ரீதியாக திறக்கப்பட்ட இவ்வினவாத தளத்தின் மீது அரசியல் ரீதியாக மேற்கொண்டு இனவாதத்தை முன்னெடுக்கவேண்டிய அவசியம் சிங்கள இனவாதத்திற்கு உண்டு.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையால் சிங்கள இனவாதம் களங்கப்பட்டுள்ளது. உலக அரங்கில் அது அவமானப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தகைய களங்கம் ஒரு சிலரின் செயல்தான் என்று காட்டி அக்களங்கத்தை சிங்கள இனத்தி;ற்கு உரியதல்லாததாக்க வேண்டிய தேவை சிங்கள இனவாத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜபக்ஷ, கோத்தபாய போன்ற ஒருசிலரின் மீதுமட்டும் விரலைச் சுட்டிக்காட்டி இவ்வின அழிப்புக்
குற்றத்தில் ஈடுபட்ட சிங்கள அரச இயந்திரத்தையும் அதன் பின்னால் இருந்த அனைத்துவகை மூளைகளையும்ää ஊடகங்களையும், அமைப்புக்களையும் இனவாத சிங்கள வெகுஜன மனப்பாங்கையும் மற்றும் இனவாத தலைவர்களையும் விடுவித்து காப்பாற்றும் செயலில் சந்திரிகா,
ரணில், சிறிசேன, ஜேவிபி, ஹெலஉறுமய போன்றவர்கள் தேர்தல் களத்தில் ஈடுபட்டனர்.

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை படுகொலையை ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கனகச்சிதமாய்
நிறைவேற்றியது. அதில் அமைச்சராக இருந்த ஒருவர் ரணில் விக்கரமசிங்க. அந்த கறுப்பு ஜுலை படுகொலைக்காக ஐக்கிய தேசிய கட்சியினர்
கவலைப்பட்டதோ அல்லது மன்னிப்புக்கேட்டதோ அல்லது அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியோ அன்றி நிவாரணமோ வழங்கியது இதுவரையிலும் கிடையாது.அதன்பின்பு சந்திரிகா தலைமையில் பதவிக்கு வந்த சுதந்திர கட்சி அரசாங்கம் மேற்படி கறுப்பு ஜுலை படுகொலைக்காக மனிப்புக்கோரியதோ, நீதி வழங்கியதோ அன்றி நிவாரணம் வழங்கியதோ கிடையாது. ஆனால் அதற்கு மேலாக சந்திரிகா அரசாங்கம் இராணுவ ரீதியாக செம்மணி படுகொலையை அரங்கேற்றியது. 600 அப்பாவி தமிழ்மக்கள் செம்மணியில் ஆண், பெண் வேறுபாடின்றி இராணுவத்தால் படுகொலை செய்து புதைக்கப்பட்டனர்.
இதில் ஒன்று கிருசாந்தி எனும் பள்ளி மாணவி பாடசாலை சென்று திரும்பும் வழியில் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு குழு பாலியியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதுடன் கூடவே அவரது தாயும் சகோதரனும் அயலவரும் படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டனர். இப்படி கிழக்கு மாகாணத்திலும் கோணேஸ்வரி என்னும் அப்பாவி இளம்பெண் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு பாலியியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின் அவரது பெண்ணுறுப்பில் கைக்குண்டு வெடிக்க வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பதும் சந்திரிகாவின் ஆட்சியில் நிகழ்ந்தது.

சந்திரிகாவின் பின் பதவிக்கு வந்த அவரது அதே சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த ராஜபக்ஷ சிங்கள மக்களினதும் அனைத்து சிங்கள கட்சிகளினதும்
ஒட்டுமொத்த மனஅபிலாசையான இனப்படுகொலையை முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றினார். இதில் சுமாராக ஒன்றரைலட்சம் தமிழ் மக்களை கொன்றொழிப்பதன் மூலம் இவ்வினப்படுகொலை நிறைவேற்றப்பட்டது. ஆனால் இவ்வினப்படுகொலையை ராஜபக்ஷதான் தொடக்கி நிறைவேற்றினார் என்றில்லை. இதற்கு முன் மேற்படி பலகட்சிகளினாலும், ஆட்சியாளர்களாலும் தொடக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்ததை ராஜபக்ஷ நிறைவேற்றி வைத்தார் என்பது மட்டுமே உண்மை.இதனை சற்று தெளிவாக நோக்குவோம்.

1945ஆம் ஆண்டு இராண்டாம் உலக மகாயுத்தம் முடிந்ததைத் தொடர்ந்து மலேசியாவில் கம்யூனிஸ்டுக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமாராக 20 வீதத்தினர் சீன இனத்தவராவர். இந்த சீன இனத்தவர் மத்தியில்தான் கம்யூனிஸ்டுக்களின்
ஆயுதப்போராட்டம் பெரிதும் வளர்ந்திருந்தது. அப்போது அங்கு ஆட்சியிலிருந்த பிரித்தானியர் இதற்கு எதிராக கடுமையான இராணுவ
நடவடிக்கையில் ஈடுபட்டனர். பிரித்தானிய தளபதிகளான டெம்பளர், பிரிஜ் என்பவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் மூலம் கம்யூனிஸ்டுக்கள் முற்றாக தோற்கடிக்கப்பட்டதுடன் கூடவே சீன இனமும் ஒடுக்கப்பட்டுவிட்டது. இந்த இராணுவ நடவடிக்கையை பிரிஜ் என்ற தளபதியின் பெயரால் பிரிஜ் திட்டம்  என அழைப்பர். பிரிஜ், டெம்பளர் போன்ற தளபதிகளின் இராணுவ நடவடிக்கையை பிரதிபண்ணி தமிழினத்தை அழித்தொழிப்பதற்கான ஒரு இராணுவ திட்டத்தை அப்போது இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அதுலத்முதலி 1987ஆம் ஆண்டு ஆப்பரேஷன் லிபரேஷன் என்றதன் பேரில் முன்னெடுத்தார். இதனை மூன்று கட்டங்களாகப் பிரித்து முதலாவது கட்டமாக ஆப்பரேஷன் வடமராச்சி என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என அப்போது இந்திய அரசு எதிர்த்தது.இப்பின்னணியில் முதலாம் கட்டத்திற்கு அப்பால் இவ் இராணுவ நடவடிக்கையை சிங்கள அரசால் தொடரமுடியாமல் போனது. வடமராட்சியில் தமிழ்மக்களின் இரத்தம் ஆறாக ஓடியது. இலட்சக்கணக்கில் மக்கள் அகதிகளாயினர். ஒருவகையில் வடமராட்சி சுடுகாடானது. ஆனால் இந்த இராணுவ நடவடிக்கையை வடமராட்சியோடு நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அப்போது ஜே.ஆர் அரசாங்கத்திற்கு ஏற்பட்டதால் அதனை அவர்களால் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு தொடரமுடியாது போனது. இது இனவாதம் தன் இறுதி இலக்கை அடையமுடியாது போன ஒரு காலகட்ட நிலை. ஆனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச சூழல் தனக்கு சாதமாக இருந்த நிலையில் ஜே.ஆர்.அரசாங்கத்தால் வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்ட
மலேசிய பாணி பிரிஜ் இராணுவ திட்டத்தை ராஜபக்ஷ முள்ளிவாய்க்காலில் நிறைவேற்றி வைத்தார் என்பதே உண்மை. அப்போது 1987ஆம் ஆண்டு

ஜே.ஆர். அரசாங்கத்தில் லலித் அதுலத்முதலியால் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்பு 2009ஆம் ஆண்டு ராஜபக்ஷ
அரசாங்கத்தில் கோட்பயாவால் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைக்கான இராணு நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
ஐக்கிய தேசிய கட்சியும், சுதந்திரகட்சியும் இதில் ஒரேமாதியாக செயல்பட்டுள்ளதுடன் கூடவே இடதுசாரி என தம்மை கூறிக்கொள்ளும் தீவிர
இனவாதிகளான ஜே.வி.பி.யினர் ராஜபக்ஷவுடன் மேற்படி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் தம்மையும் இத்தகைய இனப்படுகொலை
வரலாற்றில் ஒரு பங்குதாராக தவறவில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் ரணில், சுதந்திர கட்சியின் சந்திரிகா, சிறிசேன, ஜே.வி.பி. என ஆகிய அனைவருமே ராஜபக்ஷவிடம் இருந்து பிரித்து
வேறுபடுத்தி பார்க்கக்கூடியவர்கள் அல்லர். மேற்படி அனைவரும், அனைத்துக் கட்சியினரும் ஒரு தமிழருக்கு எதிரான ஒரு முழுநீள இனவாதத்தின் தொண்டர்களாய் அவ்வப்போதைக்கு உரிய காலகட்ட பங்குகளை ஆற்றியுள்னர். தற்போது முள்ளிவாய்க்கால் படுகொலையின் மூலம் சிங்களப் பேரினவாதம் தெளிவாக களங்கபபட்டு அம்பலப்பட்டிருக்கும் போது அதற்கான பொறுப்பு ராஜபக்ஷவை மட்டுமே சாரும் என்பதுபோல ராஜபக்ஷவை கறுப்பு பூனையாக சுட்டிக்காட்டி தாம் அனைவரும் வெள்ளைப்பூனைகள் என மேற்படி நபர்களும் கட்சிகளும் காட்சியளிக்கும் ஒரு நாடகம் இப்போது அரங்கேறியிருக்கிறது. உண்மையான அர்த்தத்தில் இனவாதமானது முள்ளிவாய்க்கால் படுகொலை சாதித்த ஏற்படுத்திய வெற்றித்தளத்தை அடுத்த கட்டத்திற்கு அரசியல் ரீதியில் நகர்த்துவதற்கான இன்னொரு பரிணாம வளர்ச்சியாக தன்னை இனி மேலும் முன்னெடுக்கப்போகிறது என்ற ஆபாயத்தை தமிழ் மக்களும் சர்வதேச சமூகத்தினரும் புரிந்தாகவேண்டும்.

அரசியலை மேலெழுந்தவாரியாக் பார்க்காது அரசியலின் அரசியலையம் (Politics of Politics) அரசியலின் மறுபக்கத்தையும் (Other side of Politics) நாம்
பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். அரசியலானது ஒரு சிறப்பு தேர்ச்சி மிக்க வித்தை; அது ஒரு கலை; அது ஒரு முறைமை. இயந்திரமானது தனக்கென
ஒரு இயங்கும் முறைமையை கொண்டிருக்கிறது. ஒரு வண்டி தனக்குரிய இயங்கும் முறையை கொண்டிருக்கிறது. அந்த வண்டியின் முறைமைக்கு
உட்பட்டுத்தான் அந்த வண்டியை ஓட்ட முடியும். எழுமாத்திரத்தில் அந்த வண்டியை ஓட்ட முற்படுவது அல்லது மனம்போன போக்கில் ஓட்ட
முற்படுவது என்பது தற்கொலைக்கு ஒப்பான செயல்.
அரசியல் ஒரு முறைமைப்படி இயங்குவதால் அதனை எழுமாத்திரத்திலோ அல்லது மனம்போன போக்கில் இயக்கினால் அந்த இயந்திரத்தின்
முறைமைக்குள் சிக்குண்டு அதற்கு நாம் இரையாக நேரும் அல்லது பலியாக நேரும். ஈழத்தமிழர் அரசியலில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக
இத்தகைய எழுமாத்திர அரசியல் போக்கே மேலோங்கியிருக்கிறது. பொதுவாக ஈழத்தமிழர் தரப்பில் அரசியலை வாழ்வாக கொண்ட முழுநேர
அரசியல் தலைமைகள் இருந்ததில்லை. பகுதிநேர தலைவர்களின் தலைமையில் அரசியல் முன்னெடுக்கப்பட்ட வரலாறே பெரிதும் இருந்ததால்
அத்தகைய தலைவர்களால் ஆழ்ந்த அறிந்த அரசியலில் ஈடுபடுவதற்கான நேரமோ வாய்ப்போ அவர்களுக்கு இருக்கவில்லை. குறிப்பாக 1977ஆம்
ஆண்டுவரை இதனைக் காணலாம். அறிவுசார் அரசியலும் அர்ப்பணிப்பான செயல்பாடுகளும் இன்றி ஒரு மக்கள் கூட்டத்தின் தலைவிதியை
வெற்றியில் இட்டுச்செல்ல யாராலும் முடியாது.

தமிழ்த்தலைவர்கள் கல்விமான்களாகவும், சட்ட வல்லுநர்களாகவும் இருந்த போதிலும் அவர்கள் முழுநேர தொழிலாக வழக்காடலைச் சார்ந்ததுடன்
பகுதிநேர தலைவர்களாக இருந்த நிலையில் அரசியலை அறிவுசார்ந்து அணுகக்கூடிய நெளிவுசுளிவான பாதையில் வழிநடத்தக்கூடிய இராஜதந்திர
நகர்வுகளுக்கான ஈடுபாட்டை காட்டக்கூடியதற்கான நேரமும் அதற்கான அர்ப்பணிப்பும் அற்ற தலைவர்களாக இருந்த நிலையில் தமிழ்மக்களின்
தோல்வி எழுதப்பட்ட தலைவிதியென பெருமூச்சுடன் நீண்டுசெல்லும் துர்ப்பாக்கியத்திற்கு உள்ளானது. கூடவே தமிழ் அறிஞர்கள் அரச உத்தியோகம் சார்ந்த நலனைக் கொண்டிருந்ததால் அவர்களின் மூளை தமிழ்மக்களின் நலன்கருதி சிந்திக்க மறுத்தது. உத்தியோக வாய்ப்பு, பதவி உயர்வு, இடமாற்றம் என்பன சிங்கள அரசின் கையில் இருந்ததால் அந்த அரசு இயந்திரத்தின் நலனுக்கு வெளியே தமிழ் அறிஞர்களால் சிந்திக்க முடியாது
போனது மட்டுமல்ல அந்த அரசு இயந்திரத்திற்கு உரிய உத்தியோகத்தர்கள் என்ற வகையில் தமிழ் அறிஞர்களும் தமிழருக்கு எதிரான சிங்கள அரசு
இயந்திரத்தின் சேவகர்களாய் நடைமுறையில் செயற்படும் துர்ப்பாக்கியமே காணப்பட்டது. அதாவது தமிழ்த்தலைவர்களும் சரி, தமிழ் அறிஞர்களும்
சரி ஈழத்தமிழர்களின் அரசியலை அறிவுசார் அரசியலாக முன்னெடுக்க முடியாத ஒரு அரசியல் கலாச்சாரத்தையே தமிழ்ச்சமூகம் கொண்டிருக்க
நேர்ந்தது. இத்தகைய அறிவுசாரா அரசியல் கலாச்சாரத்தினதும், அறிவுசாரா அரசியல் பழக்கதோஷத்தினதும் களத்தில்தான் ஆயுதப்போராட்டம்
1970களின் பிற்பகுதயில் எழுச்சிபெறத் தொடங்கியது. ஆதலால் ஆயுதப்போராட்ட இளைஞர்கள் முழுநேர அரசியலில் ஈடுபடத்தொடங்கிய போதிலும் சமூகத்தில் காணப்பட்ட அறிவுசாரா அரசியல் கலாச்சார விளைநிலத்தில்தான் இவர்களும் முளைவிட நேர்ந்தது. இதனால் தமிழ்மக்களின் அரசியலில் அறிவுசார் அரசியல் வறண்ட நிலத்து பயிராக நீடிக்க நேர்ந்தது என்ற உண்மை நாம் தெளிவாக புரிந்தாக வேண்டும். அதனை புரிந்து கொள்ள தவறினால் இனிமேலும் நாம் அதை நிவர்;த்தி செய்து முன்னேற வழியிருக்காது. விருப்பு வெறுப்புக்களை கடந்து நோயை நோயாக
அடையாளம் கண்டு அதற்காக மருத்துவத்தை மேற்கொண்டு நாம் முன்னேற தயாராக வேண்டும்.இந்தவகையில் நாம் நடந்து முடிந்த தேர்தலையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் நாம் பரிசீலித்து அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தமிழர்கள் தயாராகவேண்டும்.

வெளிப்படையாக பார்க்கும் போது ராஜபக்ஷ இனப்படுகொலை செய்தமை எம் கண்முன் நிற்பதினால் ஒருவகை பழிவாங்கும் உணர்வோடு அவருக்கு
எதிராக மக்கள் விரலை நீட்டுவது இயல்பு. அது தவிர்க்க முடியாததும் கூட. ஆனால் இங்கு நாம் இலாப நட்ட கணக்கை சரிவர போட்டாகவேண்டும்.
ராஜபக்ஷவுக்கு எதிராக நிற்கும் சந்திரிகாவுக்கு இப்போதுதான் ஞானம் திறபட்டுவிட்டது என்றில்லை. பண்டாரநாயக்க குடும்பத்திற்கு எதிராக
ராஜபக்ஷ குடும்பம் தலையெடுத்தபோது அதை தாங்கமுடியாத பண்டாரநாயக்க குடும்பத் தலைவி முதலைக் கண்ணீர்விட்டு தமிழ் மக்களின்
வாக்குகளை பெற முற்பட்டதை நாம் மறக்கக்கூடாது. ரணிலும் சேனநாயக்க குடும்பத்தின் இறுதி வாரிசு ஆவார். அவரும் தனது குடும்ப ஆதிக்கத்திற்கும் தமது கட்சி நலனுக்குமாக ராஜபக்ஷவை எதிர்க்க வேண்டிய தேவை இருந்தது. தமிழரை ஒடுக்கிய சந்திரிகாவும், ரணிலும் தமிழரின் வாக்குகளால் ராஜபக்ஷவை வீழ்த்தும் தந்திரத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இவர்கள் இனவாதிகளாகவும், இனப்படுகொலையாளர்களாகவும் கடந்தகால வரலாற்றில் தம்மை தம்செயற்பாடுகளால் நிருபித்துள்ளனர்.
ஆனாலும் இப்போது அவர்கள் தமிழ்மக்களின் வாக்குக்களினால் தமது எதிரியான ராஜபக்ஷவை வீழ்த்த முடிந்தது என்ற வகையில் தம்
முதலைக்கண்ணீருக்கு பதிலாக குறைந்தபட்சம் செயற்படக்கூடிய உடனடியான அரசியல் வெளி அரசியல் அரங்கில் உள்ளது. அதாவது
வடக்கு-கிழக்கு மாகாணசபையை இரண்டாக பிரித்து ஒரு அரசியல் பிரச்சனை மூலம் அல்ல வெறும் சட்டநுணுக்கப் பிரச்சனையின் மூலமே.

அதாவது வடக்கு-கிழக்கு மாகாணங்களை நாடாளுமன்றத்திற்கூடாக இணைக்கவேண்டும் என்பதற்கு பதிலாக அன்றைய ஜனாதிபதி ஜெயவர்த்தன
அதனை அரச இதழ் வாயிலான அறிவித்தல் மூலம் இணைத்ததுதான் தவறே தவிர இணைப்பு தவறு என்று தீர்ப்பில் கூறப்படவில்லை. ஆனால்
தீர்ப்பை வைத்துக்கொண்டு ராஜபக்ஷ வடக்கு-கிழக்கு இணைப்பை துண்டாடினார். ஆனால் தற்போது ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கூடான
அறிவித்தல் மூலம் இவ்விணைப்பை சில நிமிடங்களில் செய்திடமுடியும். ராஜபக்ஷவின் அநீதிகளுக்கு எதிராக நீதிக்கொடி தூக்கும் சந்திரிகா, ரணில்,
சிறிசேன, ஜே.வி.பி.யினர் வடக்கு-கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட அநீதியை இப்போது தமக்கிருக்கும் அரசியல் சட்ட வாய்ப்பைக்கொண்டு
சிலநிமிடங்களிலேயே வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்துவிடக்கூடிய இந்த நடவடிக்கையை முதலில் மேற்கொள்வார்களா!?

இந்த கேள்வியை மனதில் நிறுத்திக்கொண்டு தற்போது தற்காலிகமாக கிடைத்திருக்கக்கூடிய ஒரு போலி ஜனநாயக அரங்கில் குறைந்தபட்சம்
தமிழ்த்தலைவர்களும், தமிழ் அறிஞர்களும் செயற்படக்கூடிய ஒரு வெளி இருக்கவே செய்கிறது. இலங்கையில் செயற்படும் பெரும்பான்மையின
சர்வாதிகாரத்தைத்தான் ஜனநாயகம் என்று சொல்கின்றனர். இதனை ஆங்கிலத்தில் (யதழசவையசயைnளைஅ) என அழைப்பர். அதாவது இதனை
தெளிவாக சொல்வதென்றால் பெரும்பான்மையின ஜனநாயக சர்வாதிகாரமாகும். சிங்கள இனத்திடம் காணப்படுகின்ற இத்தகைய கூட்டுமன கட்டமைப்பான கருத்தமைவு எத்தகைய சிதைவும் இன்றி அப்படியே இருக்கின்றது. சிங்கள இனத்தவர்களிடம் காணப்படுகின்ற தமக்கிடையேயான குடும்ப ஆதிக்கப் போட்டியில் தமிழரை தமக்கு சாதகமான துருப்புச்சீட்டாக கையாண்ட அளவுக்கு தமிழரின் உரிமைக்கு எதிராகவும் சிங்கள அரச இராணுவத்தால் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் சிங்கள கூட்டுமனத்தை மனமாற்றத்திற்கு உள்ளாக்குவார்கள் என்றில்லை. ஆனாலும் தமிழ்மக்களின் வாக்குக்களால் பதவிக்கு வந்தவர்கள் தற்காலிகமாவேனும் நேரடி அர்த்தத்தில் தமிழருக்கு எதிராக செயல்படமுடியாத ஒரு சூழல் உண்டு. அதேவேளை தமிழருக்கு எதிராக வடிவமைக்கப்பட்டிருக்கும் அரச இயந்திரம் மொழி, பண்பாடு, அரசியல், பொருளாதாரம், குடியமைவு என அனைத்துத்துறைகளிலும் தன் திசைநோக்கிய செயற்பாட்டிலிருந்து பின்வாங்கமாட்டாது. இதனை ஸ்தாபிதம் அடைந்திருக்கும் அரச இயந்திர அமைப்பு முறைக்கூடாக சிந்திக்க வேண்டுமே தவிர நபர்களுக்கு ஊடாக அல்ல. சர்வதேச அரசியிலிலும் உள்நாட்டு அரசியலிலும் காணப்படும் வாய்ப்புக்களை கண்டறிந்து அறிவுசார் அரிசியல் அணுமுறையில் நின்று அர்ப்பணிப்புடனான முழுநேர அரசியல் தலைவர்களாகவும் அரசியல் அறிஞர்களாகவும் செயற்படவேண்டிய பொறுப்பு தமிழ்ச்சமூகத்தின் முன்னோடிகள் முன் உண்டு.

அநீதி என்பது இராணுவ நடவடிக்கையிலான இனப்படுகொலை மட்டுமல்ல. தமிழரின் சுயநிர்ண உரிமையை மற்றும் உரிமைகளை மறுக்கும்
அனைத்து செயல்களும் அநீதிதான். ஆதலால் ராஜபக்ஷவின் இராணுவ நடவடிக்கையின் மூலமான படுகொலையை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு
ஏனைய அநீதிகளை அப்படியே செயற்பட விடமுடியாது. கொல்லப்பட்டவர்களை உயிர்ப்பிக்க முடியாது என்று சொல்லி கொல்லப்பட்டதோடு கதை முடிந்துவிட்டது என்பதல்ல. கொல்லப்பட்டதற்கு நீதியின் பெயரால் தண்டனையும் வேண்டும் நிவராணமும் வேண்டும். அதேவேளை பிரிக்கப்பட்ட வடக்கு-கிழக்கை இணைப்பது என்பது கொல்லப்பட்டவனை உயிர்ப்பிக்க முடியாது என்பது போன்றதல்ல. ஆதலால் பிரிக்கப்பட்ட வடக்கு-கிழக்கை மீண்டும் இணைத்துக்காட்டுவதுதான் நீதி. அத்துடன் தமிழ்மக்கள் இந்த வடக்கு-கிழக்கு இணைப்பைக் கொண்ட மாகாணத்தீர்வை கூட அவர்கள் தமது உரிமைக்கான தேவையை பூர்த்தி செய்ததாக சொல்லவில்லை. அவர்களின் தேவை அதற்கும் மேலானது. எனவே அவர்கள் நீதி என கருதும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அதற்கான தீர்வை கண்டாகவேண்டும். குறைந்தபட்சம் இன்றைய சிங்களத்தலைவர்கள் உடனடியாக இணைப்பை அறிவிப்பார்களா என்று கேட்டால் அவர்களது ‘ஆம்’இ அல்லது ‘இல்லை’ என்ற பதிலில் இருந்து அடுத்த கட்டத்தைப்பற்றி சிந்திக்க முடியும்.

இந்தியாவில் இந்துக்களை நோக்கி முஸ்லிம்களின் உரிமைக்காகவும் உயிர்களை காப்பதற்காகவும் 1947ஆம் ஆண்டு மகாத்மா காந்தி
உண்ணாவிரதத்தை மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றார். இந்துக்கள் காந்தியின் போராட்டத்திற்கு பணிந்தனர். இப்போது சிங்களத் தலைவர்கள்
சிங்கள இனவாதத்திற்கு எதிராக குறைந்தபட்சம் இப்படி காந்தி இருந்ததுபோன்ற உண்ணாவிரதங்களை மேற்கொண்டு சிங்கள மனப்பாங்கை
மாற்றவும் தமிழர்களின் உரிமை நிலைநாட்டவும் பாடுபடுபட்டால் குறைந்தபட்சம் அவர்கள் மீது நாம் நம்பிக்கை வைக்க வாய்ப்பு இருக்கும். இதற்கு முன்னோடியாக தமிழ்மக்களின் வாக்குக்களால் பதவிக்கு வந்த இன்றைய ஜனாதிபதியும், பிரதமரும், இன்றைய புதிய அரசாங்கத்தின்
சூத்திரதாரியான சந்திரிகாவும் இணைந்து இன்றைய அரசாங்கத்தின் பெயரால் சிங்கள இராணுவத்தாலும் அரச இயந்திரத்தாலும் படுகொலைக்கு
உள்ளான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முதலில் மன்னிப்பு கோருவார்களா? இவ்வாறு கோரவைக்கவேண்டிய பொறுப்பும், கடமையும்
தமிழ்த்தலைவர்களும் தமிழ்அறிஞர்களுக்கும் தமிழ் ஊடகங்களுக்கும் முதற்கண் உண்டு.
---------------------------------------------------------------------------

Wednesday, December 31, 2014

தெற்காசிய அரசியலில் இந்தியாவின் பின்னடைவு - பேரா. மணிவண்ணன்

மே 2009 ஆம் அண்டு அரசியல் இராணுவ சூழலில் இருந்து ஈழ மக்களின் விடுதலைப் போராட்டம் குறித்து புவிசார் ரீதியான அரசியலாக முன்வைக்க வேண்டும் என்று நாங்கள் நீண்ட காலமாக கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.  பிறகு கடந்த 65 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஈழ விடுதலைப் போராட்டத்தில், குறிப்பாக மே ஆயுதமேந்திய போர் மெளனிக்கப்பட்ட பிறகான சூழலில், அரசியல் இராசதந்திர மற்றும் புவிசார் அரசியல் பார்வையில் இந்தியா முன்னெடுக்க வேண்டும் என்றும் பலர் அறிவுறுத்துகிறார்கள்..

தெற்காசியப் பிராந்திய அரசியலிலும், ஆசியா மற்றும் மேற்குலக நாடுகளிலும் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்களையும்  இந்த நேரத்தில் கருத்தில் கொள்ள வேண்டும்.. அரசியல் ரீதியிலான முன்னெடுப்புகள் பன்னாட்டு தளத்தில் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றம் உள்ளிட்ட இடங்களில் மனித உரிமைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் சூழலில் பன்னாட்டு விசாரனைக்கான முக்கியமான ஒரு காலகட்டத்தில் தற்பொழுது இயங்கிக் கொண்டிருக்கின்றோம். அதேவேளை தெற்காசியப் பிராந்தியத்தில் ஏற்படும் புவிசார் மாற்றங்களையும் பார்வைக்கு உட்படுத்த வேண்டும்.

இந்தியா 2005 – 2006 ஆண்டு காலகட்டத்தில் இருந்து இலங்கை அரசுடன் நெருக்கமான ஒரு உறவை மேற்கொண்டு வருகின்றது. இலங்கை அரசு இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு தேடியதில் இந்தியாவின் பங்காற்றல் மிகப் பெரியளவில் இருக்கின்றது. இதில் இந்தியாவின் பங்காற்றல் என்பதை விட இந்தியாவின் வீழ்ச்சியும் இருக்கின்றது. கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் இந்தியா வலியுறுத்தி வந்தது அரசியல் தீர்வுக்காகத்தான். ஆனால் 2009 ல் நடைபெற்றது அரசியல் தீர்வு அல்ல இராணுவ ரீதியான தீர்வு தான். அது இந்தியா வலியுறுத்தி வந்ததன் நேர்மாறான விளைவு. அதற்கு இந்தியாவே துணை போயுள்ளது. அதனால் தான் இப்பொழுது அடுத்த கட்டமான அரசியல் தீர்வை நோக்கி நாம் கொண்டிருக்கின்றோம். குறிப்பாக வரலாற்றில் நீதிக்கான எந்த ஒரு போராட்டத்தில் இராணுவ தீர்வில் முடிவு ஏற்பட்டதே கிடையாது. நீதிக்கான போராட்டத்தில் அரசியல் தீர்வுகள் தான் இறுதித் தீர்வாக இருக்க முடியும்.

தெற்காசியப் பிராந்தியத்தில் மிகப்பெரிய அளவில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இலங்கை அரசை மையப்பபடுத்தி இரண்டு விதமான மாற்றங்கள் நடந்துள்ளன. இலங்கை அரசு தமிழர் பிரச்சனைக்கு இராணுவ தீர்வு கொண்டுவந்த பின்னணியில் இலங்கையில் தமிழர் பிரச்சனையை தம்மால் ஒரு முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்றால் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தைக் கூட தம்மால் முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று சிங்களர்கள் நம்புகின்றனர். இந்த உளவியல் நம்பிக்கையில்தான் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற முனைப்புடன் சீனாவுடன் இராணுவ, புவிசார் அரசியல் உறவை மேம்படுத்தி வருகின்றனர். அந்த உறவின் தாக்கத்தில் தான் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இலங்கையில் சீனாவின் நீர் மூழ்கி கப்பல்கள் தொடர்ந்து மூன்று மாதங்களாக வந்து சென்று கொண்டிருக்கின்றன.

இது இந்திய அரசாங்கத்திற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் கூட இது குறித்து எதிர் வெளிப்பாடுகளை இந்தியா முழுமையாக தெரிவிக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்றால் இந்திய அரசாங்கம் இதுவரை தமது அண்டை நாடுகளுடன் ஏற்பட்ட பின்னடைவுகளை முழுமையாக விளங்கிக் கொள்ளவில்லை. குறிப்பாக 1954 ஆம் ஆண்டு சீனாவுடன் பஞ்சசீலக் கொள்கை கையொப்பமிட்ட இரண்டு மாதங்களில் திபத் என்றொரு நாடு இராணுவ ரீதியாக முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது அதன் அரசியல் விளைவை இந்திய அரசு உணரவில்லை. பின்னர் 1959 ஆம் ஆண்டு திபத் தலைவர் தலாய்லாமா தன் தாய் நாட்டை விட்டு இந்தியாவிற்கு புகலிடம் தேடி வந்த பொழுது திபத் என்ற அண்டை நாட்டை நாம் முழுமையாக இழந்து விட்டோம்.  திபத் என்ற ஒரு நாடு உலக வரைபடத்தில் இல்லாமல் போனதற்கான பொறுப்பை இந்தியா இதுவரை ஏற்கவில்லை. இந்த விடயம் இராசதந்திர அரசியலில் இந்தியாவிற்கு ஏற்பட்ட ஒரு பெரும் பின்னடைவு என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பின்னணியில் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்து செல்லும் சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல்கள் நாளை திருகோணமலைக்கு வந்து செல்லும் என்றால் இந்தியா புதிதாக ஒரு எதிர்ப்பை வெளிப்படுத்தக் கூடும். இந்தியாவிடமிருந்து அத்தகைய எதிர்ப்புகள் எழும் பட்சத்தில் சீனாவும் இலங்கையும் தங்களுக்குள் இருக்கும் நல்லுறவு மூலமாகத்தான் சீனாவின் இராணுவ கட்டமைப்புகளையும், நீர்மூழ்கி கப்பல்களின் வருகையை தாம் அனுமதிப்பதை பார்க்க வேண்டும் என்று பதில் கூறுவர் என்பதும் தெளிவு.

ஆனால் இலங்கையின் இந்தப் போக்குக்கு இரண்டு முதன்மைக் காரணங்கள் உண்டு. ஒன்று இந்தியாவின் புவிசார் அரசியல் சார்ந்த பார்வை எப்பொழுதுமே முனைப்புடன் இருந்தது கிடையாது 1959 ஆம் ஆண்டு திபத் விடயத்தில் இந்தியாவின் இராசதந்திர அரசியலுக்கு ஏறபட்ட பின்னடைவை இது வரை இந்தியா முழுமையாக மீளாய்வுக்கு உட்படுத்தவில்லை.  இரண்டாவது தமிழ் மக்கள் இலங்கையில் இவ்வளவு பெரிய இனப்படுகொலையை எதிர்கொண்ட பொழுது அதனை இந்தியா தடுக்கவில்லை என்பதை விட அந்த இனப்படுகொலை இந்தியாவின் மேற்பார்வையில் தான் நடந்தது என்பதை முழுமையாக நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இன்றைக்கு இலங்கை அரசாங்கம் இந்தியாவையே விலக்கி வைத்து ஒரு அரசியலை முன்னெடுக்கும் பொழுது இந்தியா இதனை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது ஒரு கேள்விக்குறியான நிலைமையாக மாறியுள்ளது.

இந்த சூழலில் அமெரிக்கா அரசு தரப்பில் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் மாற்றத்தையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்க அரசு 1970 காலகட்டத்தில் திருகோணமலையில் ஒரு வானொலி அமைக்க இலங்கையிடம் கேட்ட பொழுது அந்த வானொலி நிலையத்தை கொண்டுவர வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டிருந்த இலங்கை அரசு இந்தியா அதனை எதிர்க்கும் என்ற காரணத்தினால் அதனை அனுமதிக்கவில்லை. ஆனால் இன்று அமெரிக்காவும் திருகோணமலையில் ஒரு வானொலி நிலையம் அமைக்கும் கோரிக்கை வைக்கும் இடத்தில் இல்லை அவ்வாறு ஒரு கோரிக்கையை அமெரிக்கா வைத்தால் அதை எதிர்க்கும் இடத்தில் இந்தியாவும் இல்லை. இதைத்தான் இந்தியப் பெருங்கடலில் நடைபெற்றுள்ள புவிசார் அரசியலில் ஏற்ப்பட்டுள்ள மாற்றமாக நாம் பார்கக் வேண்டும்.

இந்த மாற்றத்திற்கு இரண்டு காரணங்கள், பனிப்போர் காலத்தில் இந்தியப் பெருங்கடலில் இருந்த அமெரிக்காவின் கொள்கை நிலைப்பாடு தற்பொழுது முழுமையாக மாறிவிட்டது. மேற்காசியா நாடுகளில் அமெரிகக அரசு இராணுவ அரசியல் செயல்பாடுளில் ஈடுபட்டிருப்பதில் அங்கு தீர்வில்லாத ஒரு இராணுவத் தாக்குதல் சூழலை அமெரிக்க எதிர் கொண்டிருப்பதால் இந்திய அரசு இந்தியப் பெருங்கடல் பகுதியில் புவிசார் அரசியலை முன்னெடுக்கும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால் இந்திய அரசால் கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பாக காங்கிரசு தலைமையிலான அரசாங்கம் இந்தியாவின் நலன் எனபதை விட, காங்கிரசின் நலனில் இருந்து, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் நலனில் இருந்து, அமெரிக்காவின் அரசியலில் ஏற்பட்டுள்ள பின்னடவை ஆய்வு செய்யும் பொழுது, இந்தியாவின் வடகிழக்கில் சீனா ஒரு ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் பொழுதும் அதனால் நமக்கு எதுவும் பின்னடைவு இல்லை என்று இந்தியா கூறி வருகின்றது. அதேபோல் இலங்கையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் தாயகப் பகுதிகளை இலங்கை அரசு ஆக்கிரமிப்பை மேற்கொண்டு ‘முத்துமாலை’ திட்டம் என்ற முற்றுகைக்குள் சீனா, இந்தியாவை கொண்டு பொழுதும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இந்தப் போக்கு இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்காது என்கின்றனர்.

சீனாவிற்கு, தொலைதூர இராணுவ கட்டமைப்புக்கான தேவைஇந்தியப் பெருங்கடலில் இல்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. இது ஒரு தவறான பார்வை. சீனா ஆப்ரிக்காவில் உள்ள இயற்கை வளங்களிலும் எண்ணெய் வளங்களிலும் பெரியளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. அந்த முதலீடுகளை பாதுகாக்கவும் அக்கடல் பாதையை பாதுகாக்கவும் சீனாவுக்கு  தளம் தேவைப்படுகின்றது. பசிபிக் கடற்பரப்பில் இருந்து தற்பொழுது இந்தியப் பெருங்கடலில் ஒரு இராணுவத் தளத்தை அமைக்கும் வேலைகளை மேற்கொண்டு வருகின்றது சீனா.  அந்தத் தளத்தை இலங்கையின் ஆதரவுடன் சீனா உருவாக்கியிருக்கின்றது.
இந்த மாற்றங்களில் இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்தை புவிசார் அரசியல் பின்னனியில் இருந்து ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட பன்னாட்டு களத்தில்  எத்தகைய முறையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கருதவேண்டிய ஒரு கட்டாயத்தில் ஈழத் தமிழர்கள் இருக்கிறார்கள். அவ்வாறான போராட்டத்தை பன்னாட்டுத் தளத்தில் எடுத்துச் சொல்லும் பொழுது, நடைபெற்று வரும் பன்னாட்டு விசாரனையின் வளர்ச்சிப் போக்கில் ஒரு அரசியல் தீர்வை தேடவேண்டிய தேவை உள்ளது. அத்தகைய சூழலில் ஈழத் தமிழருக்கான எந்தத் தீர்வையும் யாரும், இந்தியா உட்பட, பரிசாக அளிக்கப்போவதில்லை.

இந்தியப் பெருங்க்டலில் நடக்கும் அரசியல் மாற்றங்களையும், இங்கு சீனாவின் ஆதிக்கத்தையும் ஒரு முதன்மையான அச்சுறுத்தலாக முன்வைக்கும் பொழுது, இங்கு நடைபெறும் மாற்றங்கள் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தொடர்பில்லாதது என்று பார்பப்தைவிட, இலங்கையில் தமிழரின் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கில் தமிழர்கள் அரசியல் உரிமையுடன் வாழந்த காலகட்டத்தில் தான் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் பாதுகாப்பும் உறுதி செய்ப்பட்டிருக்கின்றது என்பதை இந்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.. திருகோணமலையை இலங்கை அரசு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருபப்தை விட ,தமிழர்கள் தங்கள் ஆட்சி அமைத்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பொழது இந்தியாவிற்கு கூடுதல் பாதுகாப்பு இருந்தது. எனவே புவிசார் அரசியல் ரீதியாக நடந்து வரும் மாற்றங்களை கவனமாக கண்க்கிட்டு. பன்னாட்டு தளத்தில் , புவிசார் அரசியல் பார்வையில் இருந்து இந்தியா ஈழப் பிரச்சனையை அனுகவேண்டும். 

நன்றி - பேரா. மணிவண்ணன்

Tuesday, December 23, 2014

சீவசுத்தமும் போஸ்ட் மார்டனிஸமும். :குளச்சல் மு. யூசுப்


பின்நவீனத்துவத் தை உயர்த்திப் பிடித்த, பொதுவுடைமை அமைப்பு சார்ந்த ஒரு இலக்கிய பிரிவின் கருத்தரங்கில் 12 ஆண்டுகளுக்கு முன் (குளச்சல் மு. யூசுப்)வாசித்த ஒரு கட்டுரை.
-------------------------------

பின்நவீனத்துவம் , பின்னைக் காலனியம், கீழைத்தேசியவாதம ் போன்ற பல் வேறு மாற்று சிந்தனை மரபுகள் இன்று, பின்தங்கிய நாடுகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள்சார்பு சிந்தனைகளாக - அதாவது நமக்காக - மேலைநாட்டு அரசியல் ஆலோசகர்களின் பல் கலைக்கழக வராந்தாக்களில் உருவாகி இன்று, கீழைத்தேசப் பல்கலைக் கழகங்களின் தேனீர் விடுதிகளில் அபூர்வமாக விவாதிக்கப்பட்ட ு வருகின்றன.

மாற்று சிந்தனைகள், வெகுஜன நன்மைகளைக் கவனத்தில் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்கள்சார்புடைய தாக, நெகிழ்வுத் தன்மையுடன் கூடியதாக, அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்வியல் முறைகளுடன் இணைத்துப் பார்த்து, விலக்கியும் சேர்த்தும் விவாதிக்கப்படு வதுதான் சரியான விவாத முறையிலாக இருக்க முடியும். ஆனால், இந்தியச் சூழலில் குறிப்பாக, தமிழ்ச்சூழலில் இவை முன்வைக்கப்படுக ிற முறையியல் அபத்தங்களின் மொத்தத் தொகுப்பாக இருக்கின்றன.

அதிலொன்று குடி கலாசாரம் பற்றிய பின்நவீனத்துவப் பார்வை. குடியைப்பற்றி பின் நவீனத்துவம் தனக்கான ஒரு பார்வையைக்கொண் டிருக்கிறது. மேற்கத்திய மரபு; தட்ப வெட்ப நிலைகள்; அவர்களது பொருளாதார சூழல்களில் இந்தப் பார்வையில் ஒருவேளை தவறெதுவும் இல்லாமலிருக்கலா ம். ஆனால், தமிழ்நாட்டில், ஒரு தொழிலாளி அவனது மிகக் குறைந்த வருமானத்தில் பேட்டரிபோன்ற பல்வேறு விஷப்பொருட்கள் கலந்த மதுவை மண்டையைப் பிளக்கும் இந்த வெப்பமண்டல வெயிலில் குடிப்பான் என்றால், அவனது குடும்பம் நிச்சயமாக பின் நவீனத்துவம் வலியுறுத்தும் ‘சிதைவு’க்குள்ள ாகிவிடும்.

பின்நவீனத்துவ அறிவுஜீவிகள்? தொடர்ந்து முன்வைக்கும் ஒரு கருத்து: உலகில் இன்று அனைத்து வகையான கோட்பாடுகளும் காலாவதியாகிவிட்டன. அவர்களது மொழியில் சொல்வதானால் ‘நீர்த்துப்போய விட்டன.’ ஆகவே, உலகோரே இனி மனிதனின் மோட்ச பிராப்திக்கென எஞ்சியிருப்பது பின்நவீனத்துவம் ஒன்றேதான்.

பின்நவீனத்துவம் , பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்டோர் நலன் சார்ந்து எந்த விதமான ஆலோசனைகளை முன்வைக்கிறது என்று ஒரு எளிமையான, அதேசமயம் மிக முக்கியமான கேள்வியொன்றை நீங்கள் கேட்டால், “ஆலோசனை சொல்வது மாற்று மரபுகளின் வேலை கிடையாது. மட்டுமல்ல, நீங்கள் குறிப்பிடும் எளிமை, முக்கியம் என்பதெல்லாம் வெகுசனச் சொல்லாடல்கள். எது எளிமை, எது முக்கியமென்பதை உங்களால் அறுதியிட்டுச் சொல்ல முடியாத பட்சத்தில் ஒற்றை எளிமை; ஒற்றை முக்கிய மெனும் சிதைவுகளை மறுக்கும் சொல்லாடல்களை பின் நவீனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. "எனும் பதிலில் உங்களுடைய கேள்வி, நீங்கள் கேட்க நினைத்த பல கேள்விகளுடன் முடங்கிப்போய் விடலாம்.

உண்மையிலேயே தெரிந்துகொள்ளு ம் ஆர்வம் மிகுந்து இவர்களிடம் பேசுவது கதைக்கு உதவாது என்று முடிவு செய்து தமிழில் இது தொடர்பாக வெளிவந்திருக்கும் தரவுகளைத் திரட்டிப் பார்த்தோம் என்றால் அதில் மாயாவாதத்திற்கு , புராணீக மரபு களுக்கு, குத்தகை முதலாளிகளுக்கு, சர்வதேசத் தரகர்களுக்கு, அரசு மற்றும் அதிகார இயந்திரங்களுக்கு ஆயில் போடுகிற வேலையை இந்த நவீனத்துவ தர்க்க சாஸ்திரிகள் செய்து கொண்டிருப்பதைக் காணலாம்.

அவ்வளவு சுலபமாகக் காணலாம் என்று சொல்லி விடவும் இயலாது. முதலில் பின்நவீன வாசிப்புக்குட்ப டுத்த வேண்டும். பிறகு, நிர் - நிர்மாணம் (ஞிமீ நீஷீஸீstக்ஷீuநீ tவீஷீஸீ) செய்து பார்க்க வேண்டும். இதுவொரு நீண்ட பிராசஸ்.

‘ஈராக்கில் அமெரிக்கா அத்துமீறியது என்பது ஊடகங்கள் கட்டமைத்த புனைவு. இதில் எதுவுமே உண்மையில்லை.’ - இது ஒரு மாற்று சிந்தனை - இதிலிருந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய நீதிபோதனை: ‘பாவம் அமெரிக்கா’ என்பதுதான்.

காரண காரியங்களை, யதார்த்த சிந்தனைகளை மாயாவாதம் மறுக்கிறது. பின் நவீனத்துவம் மறுக்கவொன்றுமில்லை. ஆனால், ஒப்புக்கொள்ளவில்லை. அவ்வளவுதான். மக்கள் ஒன்றிணைவாக இருப்பதை அரசுகளும் மதவாதமும் நிறுவன விருப்பங்களும் ஒரு போதுமே அனுமதித்ததில்லை . கூடவே, இப்போது தமிழக பின்நவீனத்துவமும் கை கோர்த்துள்ளது. ஒற்றுமை, ஒன்றிணைவுகள் எல்லாம் ஜனநாயமற்றவை; ஒவ்வொரு மனிதனும் முதலில் அவனுக்குள்ளாவது ஒற்றுமையை நிலைநாட்டிக் காட்டட்டும் என்று பின் நவீனத்துவம் மார்தட்டுகிறது. ‘அவனே அனைத்தும்; அகம்பிரம்மாஸ்மி ’ என்று சீவசுத்தி வாதம் அடக்கவொடுக்கமாகச் சொல்லிக்கொள்கிறது. மக்கள் தெளிவுடனிருப்பதை எந்தவொரு நிறுவனமும் அனுமதித்ததாக வரலாறே கிடையாது. ஆனால், சீவசுத்தமும் பின் நவீனத்துவமும் மனிதனின் இருப்பையே ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன.

தமிழ்ச் சூழலில், தொழில் அடிப்படையிலும், பொருளாதாரம் சார்ந்தும் பிரிந்து கிடக்கும் முஸ்லிம்களுக்கு வர்ணம்பூசி, பொருளாதாரப் பிரிவை வர்ணாஸ்ரமப் பிரிவு களாக்கும் முயற்சியை பின்நவீனத்துவம் மேற்கொள்ளுகிறது. முஸ்லிம்களினிடையிலும் மனு, புனர் - நிர்மாணம் ஆகிறான். பொருளாதார முரண் தகர்ந்து போனாலும் வர்ணம் தகர்ந்து விடாமலிருப்பதில பின்நவீனம் கரிசனம் கொண்டிருக்கிறது.

பஞ்சமர்கள் என்று ஐந்தாவது வர்ணம்பூசப்பட்ட தலித்துகளுக்குளளும் பின் நவீனத்துவம் புகுந்து அவர்களை மேலும் கூறுகூறுகளாகக் காட்டும் வேலையைத் தொடர்ந்து மேற்கொள்ளுகிறது. பின்நவீனத்துவம் புகுந்து கூறுகளாக்க முயற்சி செய்யாத ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்கவே முடியாதென்பதுதான் இப்போதைய நிலை.

பின்நவீனத்துவம் வெறுமொரு பண்பாடு சார்ந்த கருத்தியல் அணுகுமுறை. இது சிறு அளவில்கூட மக்களைச் சென்றடைய முடியாது என்றெல்லாம் நாம் ஆறுதல் பட்டுக் கொள்ள முடியாது. பார்த்தீனியம் செடியை வெறும் தாவரமாக மட்டுமே பார்த்த அனுபவங்களும் நமக்கு இருக்கின்றன. அறிவு ஜீவிகளின் சுயபோகம் வழியாகப் பரவுகிற இந்த பின்நவீனத்துவக் கோட்பாடு, தான் வலியுறுத்தும் கருத்துக்களை சமூகத்தின் அடி மட்டத்திலிருந்தே கொண்டு போக வேண்டுமென்று எச்சரித்திருக்கிறது. சோவியத் ரஷியாவில் இதை மேலேயிருந்து கொண்டு போக வேண்டிய தேவை மேலை நாடுகளுக்கிருந்தது. நிர் - நிர்மாணம் நடந்தது. மூன்றாம் உலகநாடுகளில் இதை கீழேயிருந்து கொண்டு வர வேண்டுமாம்.

அதாவது, அமெரிக்கா நிர்வாக இயக்குனராக இருக்கும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் மற்றும் இந்தியப் பெரு முதலாளிகளின் நிறுவனங்களில் செயல்படும் தொழிற்சங்கங்கள் முதலில் பன்முகப்படுத்தப்பட வேண்டும். (காலனிய ஆட்சியின் பிரித்தாளும் கொள்கை, இன்றைய நவீன காலனிய ஆட்சியில் பன்முகத் தன்மையாகப் பதப்படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது, ஒடுக்கப்பட்டோர்களது கூட்டுறவு உடைபட வேண்டும்.) தொழிற்சங்கவாதி களின் அதிகாரம் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும். சாதியம், புனருத் தாரணம் செய்யப்படவேண்டு ம். மூடநம்பிக்கைகளைத் தொன்மம் என்று அறிவிக்க வேண்டும். நரமாமிசம் தின்பவர்களை பண்பாட்டுப் போராளிகள் என்று பெருமைப்படுத்த வேண்டும். இப்படியாக, வர்த்தகக் காலனியத்திற்கு இந்திய சமூகம் முழுவசதியையும் செய்துகொடுக்க வேண்டும். இதுவரைக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இவற்றை பின் நவீனத்துவ கோட்பாடு சார்ந்த விஷயங்களாக நாம் புரிந்துகொள்வதில் தவறெதுவுமில்லை.

பின்நவீனத்துவத்தின் மிக முக்கியச் செயல்பாட்டுக்களமாக இருப்பது - அதா வது இவர்களால் விருப்பம்போல் குளறுபடி செய்ய இயல்கிற ஒரே துறை - இலக்கியம் தான். இதற்காக இவர்களை யாருமே கேள்வி கேட்க முடியாது. எழுதுபவனுக்கு இருக்கும் உரிமைகள் குறித்து இவர்களுக்கு அதீதமானப் புரிதல்களிருக்கின்றன. பாவம்! இது மட்டுமல்ல, ஒன்றரை மணிநேரம் கட்டுரை வாசித்தும் எதையுமே சொல்ல முடியாமல் விடும் இவர்களது திறமையும் தமிழ் பின்நவீனம் சார்ந்தது தான். இவர்கள் பெரும் தேடுதல் வேட்கையாளர்கள். இவர்களில் பெரும்பான்மையினரும் ஆன்மிகத்தில் களவொழுக்கம் பேணுபவர்களாக இருப்பதால் இதனை அகமன வேட்கை என்றும் சொல்லிவிட முடியாது. விதிக்கோட்பாடுகளை இவர்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ‘பிளே’ என்றுதான் சொல்லவேண்டும். தெரிதாவோ யாரோ அப்படித்தான் சொல்லியிருக் கிறார்களாம்.

குறிப்பாக, இலக்கியத்திற்கான நோபல் பரிசை எடுத்துக் கொண்டால் அண்மைக் காலங்களில் இப்பரிசுகள் பெரும்பாலும் பின் நவீனப் படைப்புகளுக்கு அல்லது இந்தக் கூறுகளை அதிகமாகக் கொண்ட படைப்புகளுக்கே கிடைத்து வருகின் றன. இதனுள்ளிருக்கும் பிரதான அரசியல் அம்சம், நோபல் விருதுக்கென தேர்ந்தெடுக்கப்படுகிற பின்நவீன மனிதர்கள் மேற்குலகம் சாராதவர்களாகவும் தமது நாடுகளின் மேற்கத்திய எதிர் மனோபாவங்களை பின் நவீனப் பகடிக்கு உட்படுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். இலக்கியவாதியும் மனிதர்கள்தானே? அமெரிக்காவின் பச்சை அடையாள அட்டையையும் நோபல் விருதும் என்றால் சும்மாவா?

சரி, ஒரு இலக்கியப் படைப்பில் பின் நவீனத்துவம் எப்படி செயல்படுகிறது என்று பார்த்தால் அறிவியல் முன்னேற்றம் மற்றும் புதிய பொருளாதாரப் பாய்ச்சலின் காரணமாக இளமையின் துவக்கத்திலேயே வெறுமையும் எரிச்சலும் தானுட்பட எல்லாவற்றின் மீதான வெறுப்பும் முளைவிடுகின்றன. காட்சிப் படிமங்கள் எதுவும் மூளைக்குத் தட்டுப்பட மறுக்கின்றன. இதன் ஒரு பகுதியாக மூளைக்குத் தொடர்பேற்படுத்தாத பின் நவீன மொழியமைப்பு இவர்களுக்கு ஆறுதல் தருகிறது. இதனை அனுபவித்த பின் நவீனத்துவ படைப்பாளிகள் அப்படியே வெளிப்படுத்தவும் செய்கின்றனர். மூளையை ஸ்பரிசிக்காத மொழியமைப்பு சாத்தியம்தானா என்றால் சாத்தியம்தான்! உதாரணமாக, கூட்டாஞ்சோறு என்பதை ‘சிதைவுகளின் ஒழுங்கமைவுச் சோறு’ என்று சொல்லிப் பாருங்கள். பெரிய அளவிலொன்றும் பொருள் வேறுபாடும் இருக்காது; ஆளைத் தொந்தரவும் செய்யாது.

பின்நவீனம்,பெண்ணியம் குறித்தும் திட்டவட்டமானப் பார்வைகளை வைத்திருக்கிறது. பாலினம் சார்ந்த பலவீனங்கள், மாதாந்திர சிரமங்கள், மறு உற்பத்திபோன்ற அனைத்துமே ஆணாதிக்க மனங்களின் வெளிப்பாடு. விலங்குகளிலும் பால் வேறுபாடு சார்ந்த உருவ வேற்றுமைகள் இருப்பது, உயிரினங்களின் ஆண்-பெண் கர்ப்பகால வேறுபாடு போன்ற அனைத்தையுமே பின்நவீனம் பாலின மனோபாவக் கோளாறாகவே பார்க்கிறது. பின் நவீனத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடான உண்மை என்பது ஒன்றல்ல என்பதை இங்கே பொருத்திப் பார்த்து சலித்துக்கொள்வது சரியாக இருக்கும்.
தலித்துகள், சிறுபான்மையினர் , ஒடுக்கப்பட்டோர மற்றும் அடித்தட்டு மக்களின் எளிய நியாயங்களுக்கும, மெக்காலேயின் உற்பத்திக் கூடங்களில் வளர்ந்தவர்கள், அரசு மற்றும் நிறுவனங்களின் புரியாத பதிலுக்குமான இடைவெளிகள் இந்த நிமிடம்வரை குறைவதாகத் தெரியவில்லை.

நன்றி - குளச்சல் மு. யூசுப்.