Thursday, March 7, 2013

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மான நாடகம் - இந்தியா தயக்கத்துடன் ஆதரித்தது



ஐ.நா.வில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் 24 ஆதரவு ஓட்டுக்களும், 15 எதிர் ஓட்டுக்களும் பெற்று வெற்றி பெற்றது (உடனே சந்தோஷப்பட்டுக்காதீங்க). 8 நாடுகள் எங்களுக்கு ஓட்டுப் போட இஷ்டமில்லைன்னுட்டு கழன்று கொண்டன. தீர்மானத்துக்கு ஆதரவாக(இலங்கைக்கு எதிராக) ஓட்டுப் போட்ட
அமெரிக்கா, இத்தாலி, மெக்ஸிகோ, ஆஸ்திரியா, நார்வே, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, ரோமானியா, உள்ளிட்ட 24 நாடுகளுடன் கடைசிவரை இங்கிட்டா அங்கிட்டா என்று எந்தப் பக்கம் தாவுவது என்று பயங்கரமாக யோசித்து கடைசி வினாடியில் இந்தியாவும் சேர்ந்து கொண்டது. தீர்மானத்தை எதிர்த்த 15 நாடுகளில் சீனா, ரஷ்யா, கியூபா (இதுதான்டா கம்யூனிசம்), பங்களாதேஷ், தாய்லாந்து, சவூதி அரேபியா, க்வைத், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகள் அடக்கம்.

அப்பாடா இலங்கைக்கு எதிரான தீர்மானம் வந்தாச்சீ (சிங்கம் களமிறங்கிடுச்சீ..) இனி ராஜபக்சேல இருந்து கோத்தாபய(முன்னாடி 'ங்' சேக்கலைங்க) ராஜபக்சே வரை எல்லாருக்கும் தூக்குத் தண்டனை நிச்சயம்னு  நாம் நீதி கிடைச்ச சந்தோஷத்துல துள்ளிக் குதிக்க ஏதுமில்லை என்பது தான் உண்மை. இதைப் புரிஞ்சிக்கணும்னா கொஞ்சம் போனவருஷத்துக் கதையை ரீவைண்ட் பண்ணிப் பார்க்கனும்.

ஈழத்துல போர் நடந்தப்பவே அமெரிக்காவுல இருந்து சீனாவுல இருந்து இந்தியா வரைக்கும் எல்லோருக்கும் தெரிஞ்ச உண்மை என்னான்னா "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" என்ற சொல்லாடல்ல கதை கட்டி இந்த உலகமயமாக்கல் காலத்துலயும் தனித்து திறமையா போராட முடிஞ்ச உலகின் சக்தி வாய்ந்த புரட்சி இயக்கமாக (அதாவது தீவிரவாத இயக்கமா) மாறிட்டு இருந்த விடுதலைப் புலிகளை 'கதம் கதம்' பண்றது தான் எல்லா அரசுகளும் ஒன்று சேர்ந்த மையப் புள்ளி என்பது.  போராளிகளின் கதையை பூண்டோடு முடித்த  இலங்கை வெறும் அம்பு மட்டுமே. வில் சீனாவாக, அமெரிக்காவாக, இந்தியாவாகத் தானிருந்தது.

2009ல் மே மாதம் 17ம் தேதி போர் முடிஞ்சதும் ஐ.நா. பத்து நாட்கள் கழித்து 27ம் தேதியில் கொண்டு வந்த ஒரு தீர்மானம் விடுதலைப் புலிகளை ஒழித்ததற்காக இலங்கை அரசை பாராட்டியும், விடுதலைப் புலிகள் மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்தது போன்று மகாக் கொடிய பாபங்களைச்(?) செய்ததால் அவர்களை கண்டித்தும் ஓரு தீர்மானம் நிறைவேற்றியது.  மனித உரிமை மீறல்கள் பற்றி அந்த மனித உரிமைகள் கமிஷன் கண்டுக்கவேயில்லை. தீர்மானத்தை(இலங்கையை) 29 நாடுகள் ஆதரித்தன. 12 நாடுகள் எதிர்த்தன.

ஜூன் 2010ல் பான்-கி-மூன், இலங்கைல என்னதான் நடந்துச்சுன்னு ஆராய்ஞ்சு ஒரு ரிப்போர்ட் தாங்க பாக்கலாம்னு ஒரு மூன்று பேரை நியமிக்கிறார். அவங்களும் கிளம்பி இலங்கைக்கு வந்து நல்லா ராஜபக்சே வீட்ல விருந்தெல்லாம் சாப்டுட்டு திரும்பப் போய் நிறைய மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கிறது வாஸ்தவம் தான். ஆனால் அதுல விடுதலைப் புலிகளுக்கும் பங்குன்னுட்டு போய்ட்டாங்க. இப்படி இலங்கையை ரொம்ப காட்டிக்கொடுக்காத அந்த ரிப்போர்ட்டே கதிகலங்க வைக்கிற உண்மைகளோட இருந்துச்சா, உடனே பான்-பராக்-மூன் ... சாரி... பான்-கி-மூன் அந்த அறிக்கையை தூக்கி குப்பைத் தொட்டில போட்டுட்டார் செல்லாது செல்லாதுன்னுட்டு.

அதுக்கப்புறமா போனாப் போவுதுன்னு இலங்கைக்கு எதிரான விஷயங்களை இன்னும் குறைச்சிட்டு 2011ல் அந்த அறிக்கையை வெளியிட்டாங்க. அதுல ஐ.நா.க்காரங்க சொன்ன தீர்வு தான் ரொம்ப வினோதமானது. "கொன்னது நீங்களே(இலங்கை).. எனவே நீங்களே ஒரு கமிஷன் 'கத்துக்கிட்ட பாடங்களும்' மறுசீரமைப்பும்ன்ற பேர்ல (LLRC - பேர்ல இருந்தே தெரியுது ஐ.நா. விடுதலைப்புலிகளைக் கொன்னது சரிதான்னு நினைக்கிறது..) ஆரம்பிச்சி விசாரிச்சி நீங்களே தீர்ப்பும் குடுத்துக்கோங்க.."ன்னுட்டாங்க, அதாவது கையும் களவுமா பிடிபட்ட திருடன் கிட்ட போலீஸ்காரன் திருட்டுப் பயலே உன்னைப் பிடிச்சிட்டேன், அதனாலே இப்போ உன்னை நீயே தண்டிச்சுக்கோன்னு சொல்லிட்டு போனா மாதிரி... ஏன்னா ஐ.நா.க்காரவுக ரொம்ப ஸ்ட்ரிக்டாம் அடுத்த நாட்டோட 'இறையாண்மை'ல நுழைய மாட்டாங்களாம். அமெரிக்கா ஈராக்கிலும், இந்தியா காஷ்மீரிலும், சீனா பர்மாவிலும் என்னா பண்றாங்களாம் ?

இதுக்கே ஏதோ பதிவிரதையோட விரல் நகத்தை அன்னிய ஆடவன் தொட்டுட்ட மாதிரி குய்யோ முறையோன்னு ராஜபக்சேக்கள் கத்தி எங்களைத் தொடாதே.. தொட்டா என்ன ஆகும் தெரியுமான்னு சவால்லாம் விட்டு, அதை இந்தியா போய் தாஜா பண்ணின்னு காமெடியா நடந்திருக்கு. அத்தோட இன்னொரு காமெடியா இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றதும். இந்தத் தீர்மான வெற்றியானதால் என்ன நடக்கும் ?

ஒன்னும் நடக்காது. இலங்கை தான் நியமிச்ச LLRCயின் செயல்பாடுகளையும், பரிந்துரைகளையும் உடனே  செயல்படுத்த வேண்டும். இது தான் இந்தத் தீர்மானத்தின் வெற்றி வலியுறுத்துவது. (எனக்குத் தெரிஞ்சு LLRCயோட பரிந்துரையெல்லாம், மொத்தமா கொன்னா ஒழுங்கா புதைக்கனும்.. பெரிய தலைங்கலைக் கொன்னா, ரேப் பண்ணி கொன்னா உடனே தடயமில்லாம எரிக்கனும்... அப்படின்ற ரேஞ்சுக்கு தான் இருந்தது).

இதுக்கு ஒரு ஓட்டுப் போடச் சொன்னா ஒருத்தர் "இலங்கை நமக்கு எதிரி நாடில்லை மாறாக நட்பு நாடு"ன்னு பார்லிமண்ட்ல இழுக்கிறார். இன்னொருத்தர் பறந்து போய் ராஜபக்சாவைப் பார்க்கிறார் "பதறாதீங்க ராஜபக்ஷே நாங்க இருக்கோம் சப்போர்ட்டுன்னு காதில ஓதிட்டு வர்றார்". இன்னொருத்தார் 'அவங்க நாட்டு உள்விவகாரத்துல நாம தலையிட முடியாது(திருட்டுத் தனமா எட்டி மட்டும் பார்ப்பாங்க போல)' ன்னு மக்களுக்கு புத்திமதி சொல்ல ஆரம்பிக்க, கடைசியில் பாலச்சந்திரனின் கொலையான வீடியோவைப் பார்த்து தமிழகம் கொதிக்க, இன்று கடலூரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி என்கிற 50 வயதானவர் 'ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளி என அறிவிக்க வலியுறுத்தி'தீக்குளித்துவிட்டார். இந்தியா-சோனியா அந்த அளவுக்கு ராஜபக்சேவுக்கு ஸ்ட்ராங் சப்போர்ட்டு.

தமிழகம் நன்றாக தூக்கத்திலும், தொலைக்காட்சி மயக்கத்திலும் இன்னும் வாழ்ந்து வருகிறது.  பாலச்சந்திரன் மரணத்தில் திடீரென்று அது கொதித்து எழுந்ததைக் கண்டு பதறி தமிழர்களை கூல் பண்ணுவதற்காக போடப்பட்ட சந்தர்ப்பவாத ஓட்டே  இந்த இந்தியாவின் ஆதரவு ஓட்டு.

இப்போது சொல்லுங்கள் தீர்மானம் ஐ.நாவில் வெற்றி பெற்றதால் யாருடைய வாழ்வாவது திரும்பக் கிடைக்குமா என்று, இல்லை. ஒருபோதும் இல்லை.

Sunday, March 3, 2013

2.57 லட்சம் கடன் வாங்கினால் திரும்பக் கட்டவேண்டியதில்லை

இப்படியொரு புதிய திட்டம் இந்திய அரசில் சைலன்ட்டாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. நிறைய பேருக்கு தெரியாத இந்தத் திட்டத்தின்படி அரசு சாரா வங்கிகளில் ரேஷன் கார்டை மட்டும் காட்டி நீங்கள் வருடா வருடம் 2.57 லட்ச ரூபாய் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அதை திருப்பித் தரவேண்டியதில்லை. அந்த வருட இறுதியில் ‘வசூலிக்காத தொகை’(Revenue Forgone) என்று பேங்க்கில் கணக்கெழுதி அதை அவர்களே

தள்ளுபடி செய்துவிடுவார்கள். அடுத்த வருடம் திரும்பவும் புதிதாக இதே போல நாம் கடன் வாங்கிக் கொள்ளலாம். நம் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் பதவியேற்றதிலிருந்தே புரட்சிகரமான இத்திட்டம் செயல்பாட்டில் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. சும்மா சும்மா மக்குமோ.. என்று அவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இத்திட்டத்தால் ஏழைகள், விவசாயிகள், சிறுதொழில் செய்பவர்கள், பெண்கள் என்று பல கோடிப்பேர் பயனடைவார்கள்.

ஓ.. சாரிங்க. தவறுதலா மாத்தி எழுதிவிட்டேன். இந்தத் திட்டம் மேலே சொன்ன மாதிரி நமக்கு இல்லீங்க. அம்பானி, டாடா, மிட்டல், எஸ்ஸார், விப்ரோ போன்ற பணக்கார ஏழைங்களுக்காக, உலகப் பணக்காரங்க லிஸ்ட்ல முன்னுக்கு வரத்துடிக்கும் புரட்சி மிகு கார்ப்பரேட் முதலாளிகளுக்காக, போடப்பட்ட ஸ்பெஷல் திட்டமாம். சர்க்குலேஷனை மாத்தி என்கிட்ட சொல்லிட்டாங்க. இந்த கார்ப்பரேட் அரசு திட்டத்தின்படி வருடா வருடம் கார்ப்பரேட்களிடமிருந்து வசூலிக்கவேண்டிய வரி மற்றும் கடன்களை வசூலிக்காத தொகை (Revenue Forgone - கவனிங்க வசூலாகாத தொகையில்லை... அரசு வேண்டுமென்றே வசூலிக்காமல் விட்ட தொகை) என்று பெயரிட்டு தள்ளுபடி செய்துவிடுவார்கள். பட்ஜெட்டில் வரவு செலவில் இந்தத் தொகை செலவுக் கணக்காக சேர்ந்து விடுவதால் பட்ஜெட் வரவு செலவு கணக்கு க்ளீனா டேலியாகிவிடும். எந்த ஆடிட்டரும் குத்தம் சொல்லமுடியாது. ஆமா.

போன வாரம் நம்ம ப.சி அய்யா உலகப் பொருளாதாரப் புளி..சாரி.. புலி... போட்ட பட்ஜெட் கணக்குல அப்படி இந்த 2013 ஆம் வருஷம் கார்ப்பரேட்டுக்கிட்ட இருந்து தள்ளுபடி செஞ்ச பணம் 2.57 லட்சம் தான். மறுபடியும்.. சாரிங்க (ராத்திரி சரக்கு ஓவராயிடுச்சு). அது 2.57 லட்சம் கோடி(2,57,00.00.00,000 ரூபாய்). எம்மாடியோவ் (புளிச்ச ஏப்பம்). இந்தத் திட்டம் 2006ல இருந்தே இருக்குதாம் சத்தமில்லாம. அவ்வளவு பெரிய பட்ஜெட் கணக்குல இத்துனூன்டு ரெண்டு வரியை எவன் கவனிக்கப்போறான்னு நெனச்சிருக்காங்க. அவங்க நினைச்ச மாதிரியே இன்னிக்கு வரைக்கும் இ.காங், சோ.காங், ரா.காங், பா.ஜா. அத்.ஜா, அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, சரிகமப, போன்ற எந்தக் கட்சிகளுக்கும் இது கண்ணுலேயே படலையாம் (காமாலைக் கண்ணுபோல). ஒருத்தரும் ஏன்யா இப்படி வரியையும், விலைவாசியையும் ஏத்தி மக்கள் உசிரெடுக்கிற, இந்த பணக்கார பிச்சைக்காரனுங்களுக்கு இப்படி சைலன்டா குடுக்கிறேன்னு கேக்கவே இல்லீங்க (கம்யூனிஸ்டுகள் மட்டுமே இதுல மனுஷங்க. இந்த மொள்ளமாரித்தனத்தை வெளிய கொண்டு வந்ததே அவங்க தான். பாவம் அவங்களுக்கு சப்போர்ட் பண்ண உங்க யாருக்கும் மனசு வரலை. மாத்தி மாத்தி அம்மாவையும், அய்யாவையும் தொங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் அவங்களுக்கு வந்தது யாரால? எல்லாம் உங்களால தான். ‘உண்டியலடிக்கிறவன்’ தானேன்னு கம்யூனிஸ்ட்டுகளை நக்கலா பேசமட்டும் தானே தெரியும் உங்களுக்கு. நீங்க என்னவோ பிர்லா, அம்பானி பார்ட்டிகள் போல லட்சம் கோடி கவர்ன்மெண்ட்டுகிட்ட இருந்து ப்ரீயா வாங்கறா மாதிரி).

வசூலிக்கப்படாத வருமானம் (Revenue Forgone) இதுவரை..
2005-2006 ல்  2,06,700 கோடிகள்
2006-2007 ல்  2,35,191 கோடிகள்
2007-2008  ல்  2,78,644 கோடிகள்
2008-2009 ல்  4,14,099 கோடிகள்
2009-2010  ல்  5,02,299 கோடிகள்
2010-2011 ல்  2,01,166 கோடிகள்
2011-2012 ல்  2,50,003 கோடிகள்
2012-2013 ல்  2,57,000 கோடிகள் (இது தான் இந்த வருஷத்து கணக்கு) எல்லாமே லட்சம் கோடிகளில். (அவ்வையே...லட்சம்ன்னா என்ன.? கோடின்னா என்ன? லட்சம்கோடின்னா என்ன?)

இந்தப் பணத்தை மட்டும் இந்த கார்ப்பரேட் ஏழைங்க கிட்ட இருந்து வசூல் பண்ணியிருந்தா பஸ் டிக்கெட்டை கி.மீ.க்கு 12 காசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1.59 காசு (அப்பா.. ‘புள்ளி 59’ என்னா கணக்கு சுத்தம்?), காஸ் விலையை சிலிண்டருக்கு 15 ரூபாய் அப்படின்னு கவர்மென்ட் பிச்சைக்காரத்தனமா விலைகளை உயர்த்தவேண்டிய அவசியம் வரவே வராது. ஏன்னா இப்படியெல்லாம் விலையை உயர்த்தினாலும் கூட இப்போ அரசுக்கு ஏதோ சில பத்தாயிரம் கோடிகள் தான் தேறுது. அது மாதிரி 20 மடங்கு பணத்தை இப்படி கார்ப்பரேட் ஏழைங்களுக்கு ‘தொழில் வளர்ச்சிக்கு’ன்னுட்டு கவர்ன்மெண்ட் அள்ளிக் குடுத்தாலும் பாருங்க பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்கும் 9க்கும் நடுவுலயே முக்கிக்கிட்டு இருக்கு. ஒருவேளை நாட்டில யாரும் சரியா உழைக்கிறதே இல்லை போல இருக்கு. வேலை பார்க்குற 60 கோடி தடிப்பசங்களும், தடிப்பசங்கிகளும் டெய்லி நல்லா தின்னுட்டு தின்னுட்டு தூங்குறானுங்க போல இருக்கு.

ஒளிர்கிறது இந்தியா. ஜெய் அம்பானி... சாரி.. ஜெய்ஹிந்த்

ஆதாரங்கள்:
http://exim.indiamart.com/budget-2007-08/statement-revenue-foregone.html
http://indiabudget.nic.in/ub2010-11/statrevfor/annex12.pdf
http://indiabudget.nic.in/ub2013-14/statrevfor/annex12.pdf
http://indiabudget.nic.in/ub2012-13/statrevfor/annex12.pdf