Thursday, July 26, 2012

‘ஸ்த்ரிய்னா காமசூத்ரா’ - கே.ஆர். இந்திராவின் பெண் காமசூத்ரா புத்தகம்


எழுத்தாளர் கே.ஆர். இந்திரா

வாத்சயாயனா ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதியுள்ள காம சூத்ரா என்றழைக்கப்படும் காம சாஸ்த்திரம் என்கிற நூலைப் பற்றி தெரியாத ஆளில்லை.

வாத்சயாயனா ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதியுள்ள காம சூத்ரா என்றழைக்கப்படும் காம சாஸ்த்திரம் என்கிற நூலைப் பற்றி தெரியாத ஆளில்லை.

அதன் 64 உடலுறவு நிலைகள் (positions) இந்தியாவின் பன்மையான காமம் பற்றிய அறிவு என்கிற வகையில் உலகப் பிரசித்தி பெற்றது. காமசூத்ரா என்கிற பெயரிலேயே தீபா மேத்தா என்கிற பெண் இயக்குநர் செக்ஸ் படம் எடுத்து பெயரும், துட்டும் சம்பாதித்துடன் சரித்திரமும் படைத்தார்.
 இப்போது பெண்ணியம்பொங்கிப் பெருகும் உலகளாவிய காலகட்டம். எங்கும், எதிலும் பெண்ணியம்.. அதாங்க Feminism.
ஆட்டோ ஓட்டுவதிலிருந்து, ராக்கெட்டில் விண்வெளிக்குப் போவதுவரை பெண்ணியம் பெண்களுக்கு உலகில் அவர்கள் இதுவரை காலடி வைத்திராத இடங்களில் தடம் பதிக்க உதவியிருக்கிறது. கூடவே பார்களிலும் காலடித் தடம் பதிக்கிறார்கள் பெண்கள் இன்று.
அப்படி அஸ்ஸாமில் கடந்த வாரம் பாரில் தனது தோழியுடன் சென்று பிறந்த நாள் பார்ட்டியில் சரக்கடித்துவிட்டு, க்ரெடிட் கார்டு தொலைந்து போனதால் பில் கட்ட வழியில்லாமல் பார் ஊழியர்களால் பாருக்கு வெளியே தள்ளப்பட்ட பேஷன் டிசைன் படிக்கும் மாணவி, கூட வந்த தன் ஆண் நண்பர்களைக் குற்றம் சொல்லி சண்டையிட, போதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி சண்டையாக மாற, அப்போது சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த வேறு ஆண்கள் கும்பலொன்று இதைப் பயன்படுத்தி சண்டையின் உள்ளே நுழைந்து அந்தப் பெண்ணை தொடுவது, கட்டிப் பிடிப்பது, உடையைக் கழற்றுவது என்று அத்து மீற ஆரம்பிக்க, இந்தப் பெண்ணுடன் வந்த தோழர்கள் எஸ்கேப் ஆகிவிட, இரவு 10 மணிக்கு மேல் நடுரோட்டில் நடைபெறும் இந்த அத்து மீறலை யாரும் கண்டிக்கவில்லை. கடைசியில் வழியில் சென்ற ஒரு போலீஸ்காரர்தான் அந்தப் பெண்ணை அந்த ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றினார். மறுநாள் முதல் வழக்கம் போல பத்திரிக்கைகள், மாதர் சங்கங்கள், என்ஜிஓக்கள், சுதந்திர விரும்பிகள்(குடிப்பது என் உரிமை?!) எல்லோரும் கண்டனம் தெரிவிக்க போலீஸ் அந்த ரவுடி ஆண்களை வேட்டையாடியது. அஸ்ஸாம் முதல்வர் நடவடிக்கை எடுக்க ஆணை பிறத்திருக்கிறார்.
நீங்கள் பெண்ணியம் பேசலாம்; உலகில் பெண்தான் மேலாக இருந்தாள்.. ஆதிக் குடும்பத்தில் தாயாதிக்கம்.. இங்கே ஆணாதிக்கம்.. என்று பேசலாம்.. ஆனால் மதுவின் உட்சபட்சத்தில் உங்கள் மூளையில் (அடிப்படையில்)மிருகத்தனமான  ஆறாம் அறிவுக்கு கட்டுப்படாத வன்முறையும், வெறியும் மட்டுமே மிஞ்சும். அதை எந்தப் படிப்பும், நாகரிகமும் கட்டுப்படுத்தி விட இயலாது என்பதை மதுவின் பிடியிலிருந்து விடுபட்ட அடுத்த நாள் உணர்வீர்கள். அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கக் கூடும்.
மதுவும் ஆணென்றும் பெண்ணென்றும் பாராது சரி நிகர் சமமாக மனிதர்களை மிருகங்களாக்கும். அப்போது செய்யும் பாவங்களில் ஆண் பெண் வித்தியாசமே இருப்பதில்லை.
ஜூனியர் விகடனில் சஞ்சீவ் குமார் என்பவர் தற்போது எழுதி வரும் மயக்கம் என்னமயக்கம் என்ன.. தொடர். படியுங்கள்; நிதானத்தில் இருக்கும் போது படியுங்கள். குடியை நீங்கள் நிறுத்த நிறைய வாய்ப்பு உள்ளது. குடித்தால் பெர்பார்மன்ஸ்கூடும் என்பது மூட நம்பிக்கையே மாறாக காமசூத்ராவுக்கு பிற்காலத்தில் வரையப்பட்ட படங்கள்உணர்ச்சி மரத்துப் போகும் என்பதே உண்மை.
சரி. காமசூத்ராவுக்கும் இதுக்கும் என்னைய்யா சம்பந்தம் என்று நீங்கள் நினைப்பது கேட்கிறது. ஸாரி..சம உரிமை பற்றி பேச நேரும் போது இப்படி திசை திரும்பிவிட்டது.
வாத்சயாயனர் எழுதிய காமசூத்ரா ஆண்களுக்கானது மட்டுமே. அது ஆண்களின் நோக்கிலே எழுதப்பட்டது. பெண்களுக்கு அதில் தகவல்கள் இல்லை. அது ஆணாதிக்கம் இருந்த உலகில் ஆணால் ஆண்களுக்காக பெண்களை வெல்வது எப்படி என்று எழுதப்பட்ட புத்தகம். இப்போது பெண்களின் பார்வையில் காமசூத்ராவை நான் எழுதியிருக்கிறேன்.” – இப்படிச் சொல்பவர் கேரளாவைச் சேர்ந்த ஐம்பது வயது பெண் எழுத்தாளர் கே.ஆர். இந்திரா என்னும் அம்மணி.
கேரளாவின் திரிச்சூரைச் சேர்ந்த இந்த எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகம் தான் ஸ்த்ரீய்னா காமசூத்ரா’ – பெண்களுக்கான காமசூத்திர அறிவுரைகள்.
இதில் இவர் வாத்சயாயனரின் 64 பொசிசன்களில் நான்கு மட்டுமே பெண்களுக்கு நன்மையானது என்கிறார். ஆண் மேலே, பெண் மேலே, பெண் ஆணின் மடிமேலே மற்றும் ஆணும் பெண்ணும் நேராக ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்பது என்பவையே அவை.
பெண்களுக்கு இவர் சொல்லும் அறிவுரைகளில் சில..
-    பெண் தன்னை விட இளமையான ஆணை உறவுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும்.
-    பெண்ணுக்கு சில சந்தர்ப்பங்களில் திருமணமான ஆணுடன் உறவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அவை எதிரிகளை வீழ்த்த, சொத்துக்களைப் பெற, ரகசியங்களைப் பெற அல்லது மறைக்க, காரியம் சாதிக்க மற்றும் துரோகம் செய்யும் கணவனை பழிக்குப் பழி வாங்க.(இவை எல்லாமே நாம் சமூகத்தில் கண்கூடாக பார்த்து வரும் காரணங்கள்).
-    பெண் ஆசைப் படத் தகுதியான ஆண் தகுதியானவனாக, அறிவு சார்நதவனாகவும், அசிங்கமாயில்லாமல், ஏழையாகவோ நோயாளியாகவோ இல்லாமல் இருக்க வேண்டும்.
வாத்சயாயனரின் தவறுகளாக இவர் கூறுவது என்னவெனில்..
-    ஆண்களின் உடலுறவு வயது 16 முதல் 70 வரை என்று கூறும் வாத்சயாயனர் பெண்களின் வயது பற்றி ஏன் கூறவில்லை ?
-    வாத்சயாயனர் பெண்கள் உச்சகட்டத்தை அடையும் தன்மையற்றவர்கள் என்று தவறாக நம்பினார்.
தன்னுடையை ஆராய்ச்சிப் படிப்புக்காக பெண்கள் பற்றிய சர்வே எடுத்த இவர் அதிலிருந்து கேரளப் பெண்களைப் பற்றி பின்வரும் முடிவுகளை கூறுகிறார்.
-    சர்வேயில் பெரும்பாலான பெண்கள் 'ஆண் மேலே' என்கிற உடலுறவு நிலையையே விரும்புவதாகக் கூறியுள்ளனர். ஆணாதிக்கத்திற்கு இதற்கு மேல் என்ன உதாரணம் வேண்டும்? என்று கேட்கிறார்.
-    மிகவும் நல்ல நிலையில் வசதியாகவும், வாய்ப்பும் உள்ள மலையாளப் பெண்கள் கூட தங்களது காம ஆசைகளை விரும்பியபடி நிறைவேற்றிக் கொள்ள தயக்கம் காட்டுபவர்களாகவே உள்ளனர் (??!!).
ஒருவயது கைக் குழந்தையாக இருந்த மகனோடு கணவனை விட்டு விலகி வந்து கணவனை வேண்டாம் என்று விவாகரத்து செய்த இந்திராவின் மகன் இப்போது கல்லூரியில் படிக்கிறான். இவர் பின்னர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஒரு பெண் எப்போது ஆணுடன் உடலுறுவு கொள்ள சம்மதிக்க வேண்டும் ? அதற்கு இவர் கூறுவது..
ஒன்று. அந்த ஆணின் மீது காதலுற்றிருக்கும் போது. ஆனால் கண்மூடித்தனமான காதலால் ஏமாந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு. பணம், பொருள் போன்ற லாபங்களுக்காக. ஆனால் முக்கியமாக அவனிடமிருந்து பெண் வேண்டிய பொருளை பெற்ற பின்னரே அவனுடன் உடலுறுவு கொள்ள வேண்டும்.
அதே போல ஆண்களுக்குச் சாதகமாக வாத்சயாயனர் சொல்லும் வயது குறைவான பெண்ணை மணமுடித்தல், ஒரே சாதியில் மணம், வரதட்சிணை வாங்குதல், திருமணத்திற்குப் பெண் பெண்ணை ஆண் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லுதல் இவை எல்லாம் தலை கீழாக, அதாவது பெண்ணுக்குச் சார்பாக நடக்க வேண்டும் என்கிறார் இவர் (சபாஷ்! சரியான போட்டி!!). உதாரணமாக திருமணத்திற்குப் பின் பெண்ணுடைய வீட்டில் வந்து ஆண் வந்து தங்கவேண்டும்.
இவை எல்லாவற்றையும் நவயுக புரட்சிப் பெண்ணாகக் கூறிய இந்திரா அவர்கள் கட்டுக்கடங்கா செக்ஸ்(free sex – ப்ரீ செக்ஸ்) மற்றும் சேர்ந்து வாழ்தல் போன்ற விஷயங்களை எதிர்க்கிறார்.
ஆணுக்குத் தேவை பெண்ணுடன் எப்படியாவது உடலுறுவு கொள்வது. அதற்கு வசதியாக இப்படிப்பட்ட கருத்துக்களை ஆண்கள் ஆதரிக்கிறார்கள் என்கிறார்.
மாறாக ப்ரீ செக்ஸ் நடவடிக்கைகளில் குழந்தை பிறப்பு போன்றவை தவறுதலாக நடந்து விட்டால் அது பெண்ணுக்கு பெருமளவு பாதகமாக அமைகிறது என்கிறார் இவர் (பேசாம பெண்கள் இனிமேல் எப்பவுமே குழந்தையே பெறாமல் இருக்க ஒரு வழி கண்டு புடுச்சீங்கன்னா ஒரு நூறு வருசத்துல பூமி பூரா வெறும் புல் பூண்டு மட்டுமே மொளைச்சி நிக்கிறமாதிரி பண்ணிப் புட்டு எல்லாம் மேல போயிடலாம்.. இல்லாட்டி குழந்தை பெத்துக்கறதுக்கும் மிஷின் கண்டுபிடிச்சிட்டா என்ன..? செம ஐடியா!!)
சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள வாத்சயாயனரின் காமசூத்ரா அக்காலத்திய சமூகத்தின் ஜாதிய, வருணாசிரமப் படிநிலைகளை தக்கவைத்துக் கொள்ள என்ன சொல்லியிருக்கிறது என்பது பற்றி இவர் ஆராய்ந்தாரா என்று தெரியவில்லை. அது அதன் வருணாசிரம மேலாதிக்க அரசியல்.
வாத்சயாயனர் 'பெண்கள் ஆண்களைப் போல் உச்சநிலை அடையும் தன்மையுடையவர்களல்லர்' என்று கூறியுள்ளார்.  'ஆண்கள் உச்சம் அடையும் விதம் உச்சகட்டத்தை அடைந்து உடனே முடிந்து விடும். பெண்களின் உச்சம் அடையும் விதம் தொடர்ச்சியானது. ஆணுக்கு உச்சம் அடையும் கட்டத்தில் விந்து வெளிவரும். பெண்களுக்கோ உடலுறவில் இன்பம் வர ஆரம்பித்த கணத்திலிருந்தே நீர் சுரக்க ஆரம்பித்துவிடும். ஒரு கட்டத்தில் அது தீர்ந்து போய் நிற்க ஆரம்பித்த பின் பெண் உடலுறவு போதும் என்ற முடிவுக்கு வருவாள். இது ஆண்கள் அடையும் இன்பத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது' - இது வாத்சயாயனரின் கூற்று. இதற்கு இந்திரா கூறும் விளக்கம் வெறும் பெண்ணியப் பார்வை சார்ந்ததா? தெரியவில்லை.

இதெல்லாம் சும்மா மேலாப்புல நூல் அறிமுகம் தான். இன்னும் விளக்கமாக படிக்கனும்னா டி.சி. புக்ஸ் வெளியிட்டிருக்கிற 'ஸ்த்ரீய்னா காமசூத்ரா' என்கிற இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்க.

Sunday, May 27, 2012

எ செப்பரேஷன் (A Separation) - விமர்சனம் (ஈரானியத் திரைப்படம்)



2011ம் வருடத்தில் வந்த பிறமொழிப் படங்களுக்கான படங்கள் போட்டியில் சிறந்த பிறமொழிப் படத்துக்கான ஆஸ்கர் விருதை கடந்த பிப்ரவரி மாதம் பெற்றது இந்த பெர்சிய மொழித் திரைப்படம். இது தவிர சுமார் 53 விருதுகளை உலகெங்கும் சென்று இந்த ஈரானியப் படம் வென்றுள்ளது.

ஈரான். அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கும் வேளையில், இன்னும் 4 மாதங்களில் ஈரான் நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கப் போகும் அமெரிக்க நாட்டின் ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகளில் இப்போது தான் ஆஸ்கார் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ஈரானிய நாட்டுத் திரைப்படம் ஆஸ்கர் விருது பெறுகிறது.


இது மிகத் தற்செயல் போலத் தோன்றினாலும் அமெரிக்காவின் இத்தகைய அரசியல் பிண்ணணி காரணங்களுக்காக (அந்த நாட்டை நாங்கள் குண்டு வீசி அழித்தாலும் நாங்கள் அவர்களின் கலைகளை மதிக்கும் மாமனிதர்கள் என்கிற பிராண்ட் விளம்பரத்திற்கு) இப்படம் விருது பெற்றிருக்குமா என்பது நாம் தனியே யோசித்துப் பார்க்க வேண்டிய விடயம்.

இந்த அரசியல் காரணம் தவிர்த்து இப்படத்தை பார்த்தாலும் ஆஸ்கர் விருதுக்கு தகுதியுள்ள படமாகவே இதைக் கருதலாம் தான்.

பேமிலி ட்ராமா எனப்படும் குடும்பச் சித்திரம்வகை சார்ந்த படம் இது. இத்துடன் ஒரு த்ரில்லர் போன்ற பரபரப்பில் திரைக்கதையை அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அஸ்கர் பர்ஹாடி(Asghar Farhadi).

தன்னுடைய கணவனான ;’நாடேர்ரிடம் (பெய்மன் மோடி - Peyman Moadi) இருந்து விவாகரத்து கோரும்சிமின்’ (லைலா ஹடாமி - Laila Hatami) கோர்ட்டில் நீதிபதியிடம் பேசுவதாக ஆரம்பிக்கிறது படம். ஈரானில் இப்போது வாழும் சூழல் சரியில்லை என்றும் எனவே தன்னுடைய ஒரே மகளின் எதிர்காலம் சிறந்ததாக அமைய வெளிநாடு சென்று தன் 11 வயதுப் பெண் குழந்தை டெர்மேவை வளர்க்க விரும்பும் சிமின் தன்னுடன் வர மறுக்கும் தனது கணவன் நாடேரிடம் இருந்து விவாகரத்து கோருகிறார். நாடேரோ அல்ஜீமர் என்கிற மூளைச் செல்கள் இறப்பு நோயால் அவதிப்படும் அவனது தந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள் என்கிறான். நாடேரைத் தனது பிள்ளையென்று கூட அறிந்து கொள்ளாத நிலையில் இருக்கும் தந்தையை ஏதாவது மனநல காப்பகத்தில் விடவேண்டியது தானே என்கிறாள் சிமின்.

அவருக்கு நான் தான் அவர் பையனென்று அடையாளம் காணத்தெரியாது.. ஆனால் எனக்கு அவர் தான் அப்பா என்று தெரியுமில்லையா?’. அவரை எப்படி நான் விட்டுச் செல்லமுடியும் என்கிறான் நாடேர்.

நீதிபதியோ விவாகரத்து கோர கணவர் குடிகாரர், பெண்ணை அடிப்பவர் என்பது போன்ற தீவிர காரணங்கள் வேண்டும் என்கிறார். சிமின் அதை மறுத்து தன் கணவர் மிக நல்லவர் என்கிறாள். குழந்தையை தன்னுடன் அனுப்பி விடும்படி கோருகிறாள். இருவருமே தங்களது குழந்தை டெர்மேவின் மேல் மிகுந்த பாசம் கொண்டுள்ளனர். நீதிபதியோ அதற்கு குழந்தையிடமும் கருத்து கேட்கப்படவேண்டும் என்கிறார். எனினும் விவாகரத்து பெற கொஞ்ச நாட்கள் கழித்து வரும்படி நீதிபதி கூறுகிறார். சிமின் தற்காலிகமாக தனது தாய் வீட்டிற்குச் செல்கிறார்.

நாடேர்-சிமின்-டெர்மே குடும்பம் ஒரு உயர்-மத்திய-தர வர்க்க (Upper-middle class) ஈரானியக் குடும்பம். பாங்க் ஒன்றில் க்ளார்க்காக வேலை செய்யும் நாடேர் தனியே தன் குழந்தையையும், தந்தையையும் பார்த்துக் கொள்ள விழைகிறார். தனது கணவர் சிரமப்படக் கூடாதென்று சிமின் ஒரு கஷ்டப்படும் குடும்பத்தைச் சேரந்த பெண்ணான ரஸீயாவை (சாரா பயாட் - Sareh Bayat) வீட்டு வேலைக்காக சிபாரிசு செய்கிறாள். கர்ப்பிணியான ரஸீயா தனது கணவனுக்குத் தெரியாமல் (இஸ்லாமிய முறைப்படி இது சட்ட விரோதம்) நாடேர், அவனது தந்தை மற்றும் டெர்மே இம்மூவரும் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டிற்கு வந்து வீட்டு வேலை செய்கிறாள்.  வயதான, அல்ஜீமர் நோயால் யாரையும் அடையாளம் காணக்கூட இயலாத நாடேரின் தந்தையையும் கவனித்துக் கொள்கிறாள்.. ஒரு நாள் சுய நிதானமில்லாத நாடேரின் தந்தை திறந்திருந்த வாசல் வழியே வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார். அவரைத் தேடி ஓடுகிறாள் நஸீயா. அதைத் தொடர்ந்து நடக்கும் சங்கிலித் தொடர் நிகழ்வுகளே இத் திரைப்படம்.

ஒரு நல்ல திரைக்கதையின் நல்ல அம்சங்களில் ஒன்று அது கதையின் போக்கில் பார்வையாளனை சில கணங்களாவது படத்தின் பழைய காட்சிகளில் ஏதாவது ஒன்றை திரும்ப எண்ணிப் பார்க்க வைத்து விடுவது. இப்படத்தில் பிற்பாதியில் பல இடங்களில் முற்பாதியில் அவர் என்ன சொன்னார் ? என்ன நடந்தது ? என்று பார்வையாளர் தனக்குள் குழம்பி படத்துக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வைக்கிறது.

நடிகர்கள் எல்லோரும் கனகச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். மிக இயல்பான நடிப்பு. அவற்றை நடிப்பு என்றே நாம் உணர இயலாத அளவுக்கு மிகையில்லாத நடிப்பு. படத்தை இரண்டாவது முறையாக நீங்கள் பார்க்க நேர்ந்தால் ஆரம்பக் காட்சிகளில் படத்தின் பாத்திரங்கள் ஒவ்வொருவருடைய பார்வை, சிறு முகக் குறிப்புகள் போன்ற ஷாட்கள் கூட அப்பாத்திரத்தின் இயல்பை வெளிப்படுத்த இயக்குனர் செய்திருக்கும் நுணுக்கமான வேலை என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

படத்தின் ஒளிப்பதிவு மஹ்மூத் கலாரி (Mahmoud Kalari). படம் முழுவதும் க்ளோசப் ஷாட்கள் நிரம்பி வழிகின்றன. சில இடங்களில் பார்வையாளர் நடிகரை பின்தொடர்ந்து சென்று வேவு பார்ப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துவதன் மூலம் அக்காட்சி பிற்பாதியில் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறார். படம் பார்ப்பவர்களை நீதிபதியின் ஸ்தானத்தில் நாடேர் மற்றும் சிமினின் வழக்கை புலன் விசாரணை செய்யும் எண்ணத்தோடு பார்க்க வைப்பதில் இயக்குனர் வெற்றிபெற்று விடுகிறார். எனவே படத்தின் முடிவையும் கூட நம்மிடமே விட்டுவிடுகிறார்.

யதார்த்த வாழ்வின் நிகழ்வுகளை அப்படியே காட்சியமைப்பதிலும் இயக்குனர் மிளிர்கிறார். குழந்தை தாயின் வயிற்றில் காதை வைத்து கரு சிசு நகர்வதைக் கேட்பது, பெட்ரோல் பல்க்கில் டெர்மே டிப்ஸை திரும்பக் கேட்பது, மாடிப்படியில் தள்ளிவிட்ட காட்சியை மகளுக்கு விவரிக்கும் நாடேர் தான் குற்றமற்றவன் என்பதை விளக்குவது என்று பல இடங்கள்.

படத்தின் மிக நுணுக்கமான மற்றும் அழுத்தமான விஷயம் கதை, திரைக்கதை. இயக்குனரே கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.

கதையில் வரும் மாந்தர்கள் எல்லோரும் நல்லவர்களே. ஆனால் வெவ்வேறு தருணங்களில் தனது குறைபாடுகளை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். நேர்மையாக வாழ்வதை தனது மகளுக்கு சொல்லிக் கொண்டேயிருக்கும் நாடேர் வழக்கிலிருந்து தப்பிக்க பொய் சொல்வது, மாமனார், மகள் மற்றும் கணவன் மீது மிகுந்த மதிப்பு, பாசம் வைத்துள்ள சிமின் அவர்களை விட்டுவிட்டுச் செல்ல விரும்புவது, அம்மா தன்னை விட்டு எப்போதும் சென்று விடமாட்டாள் என்பதை நன்கு உணர்ந்த டெர்மேஅதனாலேயே இருவரையும் இணைக்க அப்பாவுடனேயே இருப்பது, தந்தைக்காகப் பொய் சொல்வது, ரஸீயா மத உணர்வு மிக்கவளாக இருப்பது அதே சமயத்தில் கணவனுக்குத் தெரியாமல் வேலைக்கு வருதல், மனிதாபிமான அடிப்படையில் நாடேரின் தந்தைக்குப் பணிவிடை செய்வது என்று இருந்தாலும் தவிர்க்க இயலாமல் குழந்தை விஷயத்தில் பொய் சொல்வது.. என்று கதையின் போக்கை பார்வையாளர்கள் ஊகிக்கவே முடியாதபடி படம் முழுவதும் நிகழ்வுகள் நகர்வதால் ஒரு த்ரில்லர் பார்த்த உணர்வு பார்வையாளனுக்கு ஏற்படுகிறது.

இதில் சரி எது, தவறு எது என்று தீர்மானித்து முடிவு தரவேண்டிய பொறுப்பும் பார்வையாளரிடம் வரும் போது படத்தின் தாக்கத்திலிருந்து விடுபட நெடுநேரமாகிறது.

படம் மேல் தட்டு மற்றும் கீழ்த்தட்டு குடும்பத்தினரிடையேயான சிக்கலான ஊடாடலை பதிவு செய்கிறது. படத்தின் முடிச்சு நாடேர்-சிமினின் விவாகரத்து விஷயம். ஏன் அது நிகழ்கிறது என்று நமக்குள் கேட்டுக் கொண்டால் அதற்கு விடை, பெரிய காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே. பெரிய காரணங்களில்லாத மேல்தட்டு சிக்கல்களில், கடைசியில் இழப்பு நேர்வது கீழ்த்தட்டு மாந்தர்களுக்கே என்கிற யதார்த்த உண்மையும் படத்தில் பதிவாகிறது.

இறுதிக் காட்சியில் மீண்டும் அவர்களது விவாகரத்து வழக்கு வருகிறது. அதில் மூவரும் கறுப்பு உடை அணிந்திருப்பதன் மூலம் குடும்பத்தில் யாரோ காலமானது குறிப்பாக உணர்த்தப்படுகிறது. டெர்மேயின் முடிவை கேட்கிறார் நீதிபதி.

டெர்மே என்ன பதில் சொல்லியிருப்பாள் ?