Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Sunday, November 2, 2014

கத்தி. விமர்சனம் 2 - மக்களுக்குத் தரும் புத்தி.


கல்கத்தா ஜெயிலில் இருந்து சிறைவாசம் அனுபவித்துவரும் திருடர் கதிரேசன் என்கிற விஜய். அவர் அங்கிருந்து தப்பித்து சென்னை வந்து தனது நண்பர் ரூமில் செட்டிலாகிறார். அப்போது நடுஇரவில் யாரோ சிலர் ஒருவனை சுட்டுத்தள்ளிவிட்டுச் செல்ல காப்பாற்றப் போகும் விஜய் அதிரச்சியாகிறார். அங்கே உயிர்போகக் கிடப்பது ஜீவா எனப்படும் இன்னொரு விஜய்.

ஜீவாவை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து பின்பு ஆள்மாறாட்டம் செய்துவிட்டு ஜீவா இருந்த முதியோர் இல்லத்தில் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்து கதிரேசன் ஜீவாவாய் முதியோர் இல்லம் செல்ல ஒவ்வொன்றாய் பிரச்சனைகள் கிளம்புகிறது. எந்நேரமும் விஜய்யை கொல்ல ஆட்கள் சுற்றி வர மெதுமெதுவே தெரிகிறது ஜீவா பற்றி.
ஜீவா தன்னூத்து எனும் தன் கிராம மக்களுக்காக போராடி வரும் ஒரு 'தீவிரவாதி'. தனது கிராமத்திலும், சுற்றுப்புற கிராமங்களிலும் விவசாயம் செழிக்க அந்தப் பகுதியிலேயே நிலத்தினடியில் இருக்கும் வற்றாத நீரூற்று இருப்பதை அறிகிறான் ஜீவா. அதை ஏற்கனவே அறிந்திருக்கும் கார்ப்பரேட் கோலா கம்பெனி அங்கிருக்கும் நிலங்களையெல்லாம் விவசாயிகளிடமிருந்து பலமடங்கு விலை கொடுத்து வாங்கிவிடுகிறது.
ஊர்மக்களை ஒன்று திரட்டி போராடுகிறான் ஜீவா. பதிலுக்கு அவனைக் கொல்ல ஏற்பாடு செய்கிறான் கோலா கம்பெனியின் அதிபர். கார்ப்பரேட் கோலா கம்பெனியின் ஆட்கள் ஜீவாவைக் கொல்ல முயன்றது போல் கதிரேசனை ஜீவா என்று நினைத்துக் கொல்ல முயல ஏற்கனவே பக்கா ரௌடியான கதிரேசன் அவர்களைப் பின்னிப் பெடலெடுக்கிறார். நடுவில் சமந்தாவுடன் மானே, தேனே பொன்மானே போல கொஞ்சம் ஜாலியாகக் காதலித்துக் கொள்கிறார்.
கார்ப்பரேட் முதலாளிகள் அனைவரும் கோலா கம்பெனிக்காரனுக்கு உறுதுணையாயிருக்க நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவினையும் விலைக்கும் வாங்கும் முதலாளியை எதிர்க்க சென்னை மாநகரத்துக்கு குடிநீர் வரும் ஏரிகளை அடைப்பதன் மூலம் சென்னை நகரமே கிராமத்தைத் திரும்பிப் பார்க்கும்படி செய்து தனது கிராமத்தை எப்படி காப்பாற்றுகிறார்கள் ஜீவாவும், கதிரேசனும் என்பதுதான் மீதிக்கதை.

படம் ஒரு பக்கா கமர்ஷியல் படமாக இருந்தாலும் பொதுமக்களுக்கு தண்ணீரின் முக்கியத்துவத்தை நாலே வரிகளில் விளக்கிவிடுகிறது. நாலாவது உலகப்போர் தண்ணீரால்தான் வரும் என்று யாரோ சொன்னார்கள். படத்தில் கம்யூனிசம் பற்றி கூட ஒரு எளிய விளக்கம் வருகிறது. சமீபத்தில் வேலை தருகிறேன் என்று பட்டை நாமம் சாத்திவிட்டுப் போன 'நோக்கியா'விலிருந்து மக்கள் கார்ப்பரேட்டுகளின் ஓநாய்க் குணத்தை மெல்ல மெல்ல புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

படத்தில் இதுபற்றி மட்டுமல்ல பாலாற்றில் கோக் கம்பெனி துளை போட்டு நாளொன்றுக்கு பல லட்சம் லிட்டர்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவது, காவிரி டெல்டாவில் மீத்தேன் வாயுவை (அதாங்க சமையல் கேஸ்) எடுக்கும் ரிலையன்ஸ் கம்பெனிபற்றி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி, இவற்றிலெல்லாம் கார்ப்பரேட்டுக்கள் மக்களுக்கு மொட்டையடிப்பது பற்றி சர்வசாதாரணமாக வசனங்கள் பளிச்சிடுகின்றன. முருகதாஸூக்கு ஒரு சபாஷ். முருகதாஸ் இனி கார்ப்பரேட்டுக்குப் படமெடுப்பாரா? இல்லையா? என்பது நமது நாளைய கேள்வி.

படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் கொலைவெறித்தாக்குதலிலிருந்தும் படம் தப்பிப் பிழைத்திருப்பது நம் அதிர்ஷ்டமே. ஜார்ஜ் சி.வில்லியமஸின் ஒளிப்பதிவுக்கு ஒரு சியர்ஸ். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் (கதையைச் சுட்ட)முருகதாஸின் கதைக்கு பலம் சேர்க்கிறது. ஹீரோ படம் என்பதால் விஜய் மற்றும் விஜய்யின் நண்பன் சதீஷ் போன்றோரே படம் முழுவதும் தெரிகிறார்கள். கிராமத்துத் தாத்தாக்களின் சென்ட்டிமென்ட் வசனங்கள் சில நெஞ்சைத் தொடுகின்றன.

'கத்தி' படத்தின் தயாரிப்பாளராக இனப்படுகொலைகளுக்கு துணை போன ராஜபக்சேவின் பினாமி லைகா மொபைல்ஸ் இருந்ததும் அந்தப் பிரச்சனை பெரிதாகியதும் தெரிந்ததே. விஜய் கோக் போன்ற குளிர்பான கம்பெனிகளின் விளம்பர ஹீரோ. ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் திரைக்கதையை அப்படியே ஒருவரிடம் இருந்து கறந்துவிட்டு அவரை கழற்றிவிட்டார் என்று ஏகப்பட்ட குளறுபடிகள் இந்தப் பட விவகாரத்தில் உண்டு. 'கார்ப்பரேட்டுகள் தங்களுக்கான சவப்பெட்டிகளுக்கு தாங்களே ஆர்டர் கொடுக்கும்' என்று யாரோ சொன்னது ஞாபகம் வருகிறது.

திரையரங்கினுள் படம் பார்க்க அமரும் ஆடியன்ஸ் இதுபோன்ற முரண் அரசியல்களை உணர்ந்திருக்கவேண்டிய அவசியம் இல்லைதான். படம் கார்ப்பரேட்டுகள் எவ்வாறு ஒவ்வொரு கிராமம், டவுன், நகரங்கள், ஆறு, குளம் என்று எல்லா வளங்களையும் தங்கள் லாபமாக உறிஞ்சுகிறார்கள் என்பதை மிகத் துணிவாகப் பேசுகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு அரசு, காவல்துறை மற்றும் நீதித்துறை எவ்வாறு கைகட்டி சேவகம் செய்கிறது என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது திரைக்கதை. இப்படி துணிவாகப் பேசியதற்காக ஏ.ஆர்.முருகதாஸுக்கும், விஜய்க்கும் நாம் சல்யூட் வைக்கலாம்.

இந்த நுகர்வுக் கலாச்சார உலகில் வெறும் ஆடலும், பாடலும் காமெடியுமே  பிரதானமாய்க் கொண்டு படம் எடுக்க முடியாமல் போகும் நிலைக்கு சினிமா உலகம் வந்திருக்கிறது. ரத்தமும் சதையுமாக சமூக அவலங்களும், வேலைவாய்ப்பின்மையும், அமைதியான வாழ்க்கை வாழமுடியாத நிலையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் மேலும் மக்களை சக்கைகளாக கரும்பு எந்திரத்தில் பிழியும் சூழலில் நிஜ உலகை விட்டு நிறையவே விலகிப் போய்விட்ட கமர்ஷியல் சினிமா மக்களின் பிரச்சனைகளை

இப்படியாகவாவது மக்கள் விழிப்புணர்வு அடைகிறார்களே என்று நாம் லேசாக திருப்திப் பட்டுக்கொள்ளலாம் தான். அந்த வகையில் கத்தி ராஜபக்சேக்களும், லைக்காக்களும் தாங்களே தங்களுக்கு வைத்துக்கொண்ட ஆப்பு என்பதை உறுதியாகக் கூறமுடியும்.
வசூலுக்காகவாவது பேசியே ஆகவேண்டிய சூழல் இன்று வந்திருக்கிறது. விஜய்யின் குத்துப் பாட்டுக்கும், காற்றில் பறந்து அடிக்கும் ஹீரோயிசத்துக்கும் மட்டுமே விசிலடித்து வந்த ரசிகன் இப்போது தனது ஆதர்சன ஹீரோ விஜய் ஒரு போராட்டக்காரனாக ஆவதைக் காணும்போது தானும் மக்கள் போராட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டவனாக ஆகும் வாய்ப்பு ஒரு பத்து சதவீதம் இருந்தால் கூட அது ஒரு சமூக நன்மையே.

இப்படியாகவாவது மக்கள் விழிப்புணர்வு அடைகிறார்களே என்று நாம் லேசாக திருப்திப் பட்டுக்கொள்ளலாம் தான். அந்த வகையில் கத்தி ராஜபக்சேக்களும், லைக்காக்களும் தாங்களே தங்களுக்கு வைத்துக்கொண்ட ஆப்பு என்பதை உறுதியாகக் கூறமுடியும்.

Tuesday, February 25, 2014

ஒரு ஊரில் ஒரு கார் இருந்தது..

 
தமிழில் குறும்படங்களினால் மிளிர்ந்த புது இயக்குனர்கள் சினிமாவிலும் நுழைந்து சிக்ஸர் அடித்திருப்பதை நிரூபிக்க வந்திருக்கும் இன்னொரு படம் இது. பண்ணையாரும் பத்மினியும் என்கிற பெயரில் வெளிவந்து பாராட்டுக்களையும், பரிசுகளையும் பெற்ற குறும்படமே அதே பெயரில் படமாக அழகாக விரிந்திருக்கிறது. படம் வசூலில் சிக்ஸர் அடித்ததா ? தெரியவில்லை. ஆனால் நுட்பமான உணர்வுகளைத் தொடுவதில் ஒரு ஹாட்ரிக் சிக்ஸர் அடித்திருக்கிறது இந்த ப.ம்.ப.ம்.

கார் என்பது ஆடம்பரத்துக்கான ஒரு அடையாளம். அதுபோக போக்குவரத்து தேவையை தீர்க்கவும் பயன்படும் வாகனம். அந்தக்கால பியட் பத்மினி காரொன்று ஒரு கிராமத்தில் ஈரமனதுள்ள பண்ணையார் ஒருவரின் வீட்டில் வந்து சேரும்போது அதன் ஆடம்பர அடையாளத்தைத் தாண்டி அந்தக் காரின் மீது கிராம மக்கள் முதல் பண்ணையாரின் வீட்டு மனிதர்கள் வரை கொள்ளும் ஈடுபாடு தான் படத்தின் கதையின் அடிப்படை. ஜெயப் பிரகாஷ் தான் கிராமத்துப் பண்ணையார். அவர்தான் கிராமத்துக்கு வந்த முதல் ரேடியோ, முதல் டெலிபோன், முதல் டி.வி., முதல் டாய்லெட் என்று எல்லா அறிவியல் கண்டுபிடிப்புக்களையும் அவர்களுக்கு அறிமுகம் செய்பவர். அத்தோடு அவற்றை கிராம மக்கள் தங்களிஷ்டம் போல உபயோகிக்கவும் அனுமதிக்கும் பரந்த மனதுள்ளவர்.

அவரிடம் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த அவரது நண்பரொருவர் ஒரு பியட் காரை கொஞ்சநாள் இருக்கட்டும் என்று விட்டுச் செல்கிறார். திடீரென்று கிராமத்தில் ஒரு பையனை பாம்பு கடித்துவிட அதே கிராமத்தில் டிராக்டர் ஓட்டும் முருகேசன் (விஜய்சேதுபதி) டிரைவராக மாறி காரில் பையனை ஓட்டிச் செல்கிறார். அதன்பின் கார் அந்தப் பண்ணையார் மற்றும் ஊர் மக்கள் வாழ்வில் தவிர்க்கமுடியாததாக எப்படி ஆனது என்பது மீதிக் கதை.

படத்தின் இயக்குனர் ஒரு மெல்லிய சிறுகதையை சொல்வதுபோல பல சின்னச் சின்ன விஷயங்களை நகைச்சுவையோடும், உணர்வுபூர்வமாகவும் சொல்லியபடியே செல்கிறார். இழவு வீட்டில் விஜய்சேதுபதிக்கு வரும் காதல், பண்ணையாருக்கும் அவர் மனைவிக்குமிடையே முதிர்வயதிலும் நிற்கும் காதல், பண்ணையாரின் மகளின் சுரண்டல், பண்ணையாருக்கும் மனைவிக்குமிடையே நடக்கும் இரவு உரையாடல், காரைத் தள்ளிவிட விஜய்சேதுபதி செய்யும் ட்ரிக், காரின் முன்சீட்டில் ஏறிவிட ஏங்கும் சிறுவன் என்று படம் நெடுக ரசிக்கும் காட்சிகள் ஏராளம், காரானது பண்ணையார், அவர் மனைவி மற்றும் விஜய் சேதுபதியின் மனங்களில் மெது மெதுவாக நிறைவதை அழகாகச் சொல்லிச் செல்கிறார்.

பண்ணையாரின் பாத்திரப்படைப்பு, இப்படி ஊர்மக்களுடன் ஒன்றி வாழம் ஒரு பண்ணையாரை நாம் பார்க்கமுடியாதா என்கிற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. பண்ணையாராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஜெயப் பிரகாஷ், அவர் மனைவியாக வரும் துளசி, விஜய் சேதுபதி, அவர் காதலி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் (பால சரவணன்)'பீடை'ஆகியோர் நடிப்பில் நம்மை நெகிழ்த்திவிடுகிறார்கள், பண்ணையாரின் மகளிடம் காரைக் கேட்டுவிட்டு அவர் மறுத்து அவமானப்படுத்த கோபம் கொப்பளிக்க திரும்பிச் செல்லும் நடையில் சேதுபதியின் முகம் தெரியாவிட்டாலும் அந்த அவமானத்தையும் கோபத்தையும் உடலசைவுகளிலும், நடையிலும் அழகாக வெளிப்படுத்துகிறார் மனிதர்.

படத்தின் ஒளிப்பதிவு கோகுல் பினாய். ஆர்ப்பாட்டமில்லாத அலுங்காத படத்தின் கதைக்கேற்ற ஒளிப்பதிவு. இசை ஜஸ்டின் பிரபாகர் என்கிற மதுரையைச் சேர்ந்த புதுமுக இசையமைப்பாளர். உனக்காகப் பிறந்தேனே, காதல் வந்தாச்சோ, பேசுறேன் பேசுறேன் என்ற மூன்று பாடல்கள் இதம். பிண்ணணி இசையிலும் அசத்தியிருக்கிறார். படத்தின் பிற்பாதியில் சில இடங்களில் பிண்ணணி இசை கொஞ்சம் டிராமாவாக நீண்டாலும் முதல்படம் என்கிற வகையில் பிண்ணணி இசையில் ஆச்சரியப்படுத்துகிறார். ரவுண்ட் வருவார் என நம்பலாம்.

ஒருவருக்கு சாதாரணமாகத் தோற்றமளிக்கும் அற்ப விஷயங்கள் சமயங்களில் வேறு ஒருவருக்கு மிக முக்கியமான விஷயங்களாக மாறிவிடுகின்றன. ஒரு காரின் மீது ஒரு குடும்பத்து நபர்களுக்கு ஏற்படும் வினோதமான பாசத்தையும், அதில் ஊடாடும் மனித மனங்களின் மெல்லிய உணர்வுகளையும் அழகியலோடும் கலையுணர்வோடும் திரையில் வெளிக்கொணர்ந்திருக்கும் இயக்குனர் அருண் குமார் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர். தமிழில் இதுபோன்ற மெல்லிய உணர்வுகளை பதியவைத்த படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் மலையாளப்படம் போல நல்ல கதையம்சத்துடனும் மலையாளப்படங்களில் இல்லாத நேர்த்தியுடனும் நிற்கிறது ப.ம்.ப.ம்

ப.ம்.ப.ம் பத்து நிமிட குறும்படமாக இருந்தபோது அதில் இருந்த செறிவும் விறுவிறுப்பும் அதே கதை கொஞ்சம் நீட்டப்பட்டு இரண்டுமணி நேரம் சொல்லும்போது இல்லாமல் போனது ஆச்சர்யமல்ல. விசித்திரம் என்ற குறும்படம் வில்லா எனும் சினிமாவாக விரிந்தபோதுகூட இதே பிரச்சனை ஏற்பட்டது. அதுபோக படத்தின் தலைப்பு படத்தின் முக்கிய எதிரியாக மாறியிருக்கிறது. ஏதோ மலையாள கவர்ச்சிப் படம்போல ஒரு ஈர்க்கும் தலைப்பாக வைக்கப்பட்டு அதற்கும் படத்துக்குமுள்ள தொடர்புகூட காட்டப்படவில்லை. படத்தில் எநதவொரு இடத்திலும் பியட் காரை பத்மினி கார் என்றுகூட யாரும் சொல்லவில்லை. பண்ணையார் காரைப் பார்த்ததும், கண்டதும் காதல் போல அதன்மேல் இனம்புரியாத ஈடுபாடு கொள்கிறார். ஆனால் அது தொடர்ந்து வளர்வதற்கான ஒரு வலுவான காரணம் படத்தில் காட்டப்படவில்லை. அது தெளிவாக காட்டப்பட்டிருந்தால் அதைத் தொடர்ந்து பண்ணையாரின் மனைவியின் ஈடுபாட்டையும், விஜய் சேதுபதியின் ஈடுபாட்டையும் ரசிகர்கள் எளிதாக ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கும். அதேபோல படத்தின் மொத்தத்தையும் விவரிப்பதாக வரும் இளைஞனின் ஆரம்ப வர்ணணைகளில் அவன் கார் வாங்கும்போது காரினால் அவனுக்கு சிறுவயதில் ஏற்பட்ட வெற்றிடம் லேசாக குறிப்பிடப்படாததால் படம் முடிவடையும்போது வரும் காட்சிகள் பலமாக பதிய மறுக்கின்றன. ஆனாலும் படம் இவற்றால் சோடை போகவில்லை.

ப.ம்.ப.ம் வசூலைக் குவிக்கிறதோ இல்லையோ தமிழில் குறிப்பிடத்தகுந்த படங்களில் ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம். கவிதைபோன்ற இந்தப் படத்திற்கு வேறு என்ன தலைப்பு இருந்தால் பொருத்தமாய் அழகாய் இருந்திருக்கும் என்று யோசித்தபோது எனக்குத் தோன்றிய பெயர் - 'ஒரு ஊரில் ஒரு கார் இருந்தது'

Monday, November 18, 2013

'பாண்டிய நாடு' கிரானைட்ஸ் உடைத்து

ஆதலினால் காதல் செய்வீரில் உங்கள் சுயநலத்துக்காக மட்டும் காதல் செய்யாதீர்கள் என்று சொன்ன கையோடு இந்த ரத்தம் உறையும் பாண்டிய நாட்டுக் கதையையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.  வழக்கமான பழிவாங்கும் கதை என்று லேசாகச் சொல்லிவிட்டு செல்லமுடியாதபடி திரைக்கதை அமைந்துவிட்டது தான் படத்தின் சிறப்பம்சம்.
விஷால் மதுரையில் ஒரு செல்போன் சர்வீஸ் செய்யும் கடையில் வேலை செய்யும் சர்வீஸ் இன்ஜினியர். அவருடைய அண்ணன் அரசின் கனிமவளத்துறையில் அதிகாரி. அண்ணனது குடும்பம் மற்றும் அப்பா, அம்மாவுடன் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள். அவர்களது மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் கும்கி லட்சுமி மேனன். ஸ்கூல் டீச்சரான அவரை காதலிக்கிறார் விஷால். இதுவரை கதை எளிமையான அழகான ஒரு காதல் கதையாகச் செல்கிறது. இணையாக இன்னொரு கதையும் செல்கிறது. அதுதான் 2012ல் பிரசித்தி பெற்ற பி.ஆர்.பியின் முப்பதாயிரம் கோடிரூபாய் கிரானைட் ஊழல் கதை.  
மதுரையில் ஒரு பிரபல ரவுடி இறந்து போகவே அவரது சிஷ்யர்கள் இருவருக்கும் இடையே அடுத்த தாதா யார் என்பதில் போட்டி வருகிறது. ஒருவரையொருவர் கொல்வதற்கு அலைகிறார்கள். அதில் மத்தியஸ்தம் பேச வருபவர் இருவருக்குமிடையே ரியல் எஸ்டேட், சாராயக்கடை, வசூல், கிரானைட்ஸ், ஹோட்டல் என்று அவர்களின் தொழில்களை பங்கு பிரித்துக் கொள்ளுங்கள் என்று வழக்கமான முறையில் அட்வைஸ் பண்ண வருவார். அப்போது ரவி என்கிற அந்த தாதா சொல்வான் சாராயக்கடை, வசூல், ஹோட்டல் என்று எல்லா பிஸினெஸ்ஸையும் தூக்கிச் சாப்பிடும் கிரானைட்ஸ் தொழிலில் வரும் கொள்ளை லாபம் வருஷத்துக்கு முன்னூறு கோடி ரூபாய் என்பான். எனவே தொழில் போட்டி என்பது கிரானைட்ஸ் தொழிலை யார் அபகரிப்பது என்பதாக ஆகிறது. அரசு அதிகாரிகளை லஞ்சம் கொடுத்து சரிக்கட்டுவது இல்லாவிட்டால் ஆக்ஸிடெண்ட் போல திட்டமிட்டு காரில் மோதிக் கொல்வது, சட்டவிரோதமாக குறிப்பிட்ட ஆழத்துக்கும் மேல் தோண்டுவது போன்ற பி.ஆர்.பி விஷயங்கள் அப்படியே படத்தில் இருக்கின்றன.
பி.ஆர்.பி ஊழலில் துவங்கி, ஸ்பெக்டரம், கோல்கேட், தற்போதைய தாதுமணல் வரை எல்லா ஊழல்களிலும் அதை கண்டிக்கும், எதிர்க்கும் சாதாரண மக்களும், அரசு அதிகாரிகளும் கொல்லப்படுவதும் அதை தடுத்துக் கேட்க ஆளின்றிப் போனதும், சட்டங்கள் மற்றும் காவல்துறை போன்றவை முப்பதாயிரம் கோடிகளுக்கு சலாம் போடுவதும், பிரதமர் கூட மென்று முழுங்கி பதில் சொல்வதுமான யதார்த்தத்தில் பாண்டிய நாடு நம் மனதில் பாண்டி ஆடிவிடுகிறது. படத்தில் அப்படிக் கொல்லப்படும் அரசு அதிகாரியான விஷாலின் அண்ணனின் மரணத்துக்காக அந்த சாதாரண நடுத்தர குடும்பம் எப்படி பழிக்குப் பழிவாங்க முயல்கிறது என்பதாகச் செல்கிறது இரண்டாம் பகுதிப் படம்.
சுசீந்திரனின் எழுத்தும் இயக்கமும் கூர்மையாகிக் கொண்டேதான் வருகின்றன. இப்படத்தில் கிரானைட்ஸை மையமாக வைத்ததில் அவரது தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும். 1992ல் ஜெயலலிதா அரசு அரசின் வசமிருந்த கிரானைட் தோண்டும் உரிமையை உலகமயமாக்கலின் விளைவாக தனியாருக்கு லைசன்ஸ்களாக வழங்கியது. 2000ஆம் ஆண்டு துவங்கி கார்ப்பரேட்டுகளுக்கு இணையாக வளர்ந்துவிட்டிருக்கும் ஒரு இயற்கைவளச் சுரண்டல் தான் கிரானைட்ஸ் தொழிலில் செய்யப்பட்ட முப்பதாயிரம் கோடி ரூபாய் கொள்ளை. இதில் மதுரையருகே மேலூரில் புகழ்பெற்ற யானைமலை என்கிற மலையையே இவர்கள் கிரானைட்ஸ் மலை என்பதையறிந்து அதையும் லவட்ட முயன்றபோதுதான் இத்தகைய கார்ப்பரேட் சைஸ் கொள்ளை கலெக்டர் தேவசகாயம் அரசுக்கு எழுதிய கடிதம் மூலம் பொது வெளிச்சத்துக்கு வந்தது. கருணாநிதியின் மகன் மத்திய அமைச்சர் அழகிரிக்கு நேரடித் தொடர்பு இருந்திருக்கிறதென்று அதில் ஆதாரங்கள் காட்டப்பட்டிருந்தன. இப்போது அ.தி.மு.கவுக்கு இந்தக் கொள்ளையில் தன் பங்கைப் பெற நல்ல வாய்ப்பு. கோர்ட் மூலமாக இழுத்து மூடப்பட்டது கிரானைட் குவாரிகள். தற்போது பேரங்கள் படிந்திருக்கக்கூடும் எனவே பி.ஆர்.பி(P.R.P)க்கும் அவரது குடும்பத்திற்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இனி கிரானைட்ஸ் கதை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் கதை போலவே ஆகும். சரி நம்ம பாண்டிய நாட்டுக்கு வருவோம்.
Director Suseendran
படத்தில் பாத்திரங்கள் அனைத்தும் கச்சிதம். பாரதிராஜா ஒரு நடுத்தர அப்பாவாக அசத்தியிருக்கிறார். தமிழ்ப் படங்களுக்கு அசத்தலான ஒரு புதிய அப்பா வரவு. வெல்கம் சார். ஸ்கூல் டீச்சராக வரும் லட்சுமி மேனன் கும்கியில் வந்த ஆதிவாசிப் பெண்ணா இவர் என்று கேட்கவைக்கிறார். விஷாலின் அண்ணன் மகளாக வரும் அந்தச் சுட்டிப் பெண். தயாரித்து நடித்திருக்கும் விஷாலும் ஜமாய்த்திருக்கிறார். இமானின் இசையில் பாடல்கள் இதம் பிண்ணனி இசை் பலம். மதியின் ஒளிப்பதிவு படத்தின் யதார்த்தத்தை அதிகமாக்கியிருக்கிறது. சண்டைகள், டூயட்கள் என்று கொஞ்சம் கொஞ்சம் யதார்த்தத்தை விட்டு விலகினாலும் அது படுசீரியசான இந்தக் கதையை நோக்கி பார்வையாளர்களை கட்டிப் போடவே பயன்பட்டிருக்கிறது. அதற்காக அதை மறந்துவிடலாம்.
படத்தின் பிற்பகுதியில் கிரானைட்ஸ் பெயரே வராததால் படம் கிரானைட்ஸ் கொள்ளை என்பதாக இல்லாமல் வெறும் தாதா பிரச்சனை போன்று மாறிவிடுகிறது. அதே போல இவ்வளவு பெரிய கொள்ளைகள் நடைபெறும் போது அதன் பின்புலத்தில் செய்லபடும் அரசியல் புளளிகளின் பங்கு பெரிதாக வெளிக்காட்டப்படவில்லை. மற்றபடி ஒவ்வொரு முறையும் தாதாக்கள் பாரதிராஜாவையும், விஷாலையும் நெருங்கும் போது நாம் பதறுகிறோம். அதில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்.
தாதாக்களையும், ரவுடிகளையும் அரசியல்வாதிகளையும் பொதுமக்களும் பழிவாங்கலாம் 'யாரு செஞ்சான்னு கண்டுபிடிக்கமுடியாம செஞ்சா தாதாக்களை சாதாரண மக்களும் பழிவாங்கலாம்' என்கிற ஐடியாவை மக்களுக்கு கொடுப்பதன் மூலம் அநியாயங்களை எப்படியாவது தண்டிக்கவேண்டும் என்று பொதுமக்களுக்கு எழும் தார்மீகக் கோபத்துக்கு ஒரு ஜனரஞ்சகமான வடிகாலை காட்டியிருக்கிறார் இயக்குனர். தீபாவளிப் படங்களிலேயே உருப்படியான படம் இதுதான் போலிருக்கிறது. பாண்டிய நாட்டை தியேட்டரில் சென்று பாருங்கள்.

ஆதலால் காதல் செய்யாதீர்.

இன்றைய சமூகத்து இளைஞர்கள் இன்பம் திளைப்பதில் மட்டுமே நாட்டம் உள்ளவர்களாகவும், சுயநல விரும்பிகளாகவும் இருப்பதை நெற்றியில் அறைந்து சொல்லியிருக்கும் படம். பார்வையாளர்களுக்கு அவர்களது குறைகளை அவர்களுக்கே சுட்டிக் காட்டும்படியாக ஒரு திரைப்படம் அமையும்போது பார்வையாளர்கள் படத்துக்கு எதிரான ஒரு மனோநிலைக்கு வருகிறார்கள். இப்படி எதிர் மனநிலை
கொள்ளவைத்தாலும் அவர்களின் தவறான மனோபாவத்தை இடித்துக் காட்டியதால் அத்திரைப்படம் அவர்களது ஆழ்மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக ஆகிவிடுகிறது.
தமிழில் யதார்த்தத்தை மிகவும் நெருங்கிவிடக்கூடிய அதே சமயம் ரசிக்கக்கூடிய விதத்திலும் எடுக்கப்படும் படங்கள் குறைவு. இயக்குநர்களும் குறைவு. அவை தியேட்டரில் ஓடுவதும் குறைவு. ராஜபாட்டையில் சறுக்கி விழுந்த சுசீந்திரன் மீண்டும் ஆதலால் காதல் செய்வீரில் நிமிர்ந்து நின்றிருக்கிறார்.
அது ஒரு இருபாலர் படிக்கும் பொறியியற் கல்லூரி. கல்லூரி என்றால் காதல் தானே. அங்கே படிக்கும் சந்தோஷூம், மனீஷாவும் முதலில் நண்பர்களாக இருக்கிறார்கள். பின்பு காதலர்களாகிறார்கள். காதலர்களானால் அவுட்டிங் போகவேண்டுமே. காதலியே எப்போ போகலாம் என்கிறாள். சந்தோஷ் மஹாபலிபுரம் என்கிறான். அங்கே போகிறார்கள். மோகமும் காதலில் அடக்கம் இல்லையா ? காதல் கலவியாகிறது. இப்படியே ஆறுமாதங்கள் போனபின் கவனப் பிசகால் மனீஷா கர்ப்பமாகிறாள். அதைக் கலைக்க அவர்கள் அலைவதும் அதன் பிரச்சனைகளுக்கும் முன் காலம் கடந்துவிட, வீட்டிலும் தெரிந்துவிட, வெடிக்கும் பிரச்சனைகள், சுயநலம் மிக்க மனிதர்கள்.. அதன் முடிவுகள்.
படத்தில் நடித்த அனைவருமே நன்கு நடித்திருக்கிறார்கள். படம் இரு குடும்பங்களுக்குள் நடைபெறும் விஷயங்களை ஒரு மூன்றாவது பார்வையாளன் கோணத்தில் சொல்லிச் செல்கிறது. சந்தோஷூம், மனீஷா, மனீஷாவின் தோழி, அம்மா, அப்பாக்கள் என்று யாருமே நடிப்பில் சளைக்கவில்லை. இயக்குனருக்கே இவர்களை நடிக்க வைத்ததன் பாராட்டுக்கள் சேரும். பூர்ணிமா ஜெயராம் நீண்ட நாட்களுக்குப் பின் நடித்திருக்கிறார். ஆனால் அழுத்தமான பாத்திரம் அவருக்கு இல்லை.
படத்தின் காட்சிகள் சுருக்கம் மற்றும் கச்சிதம். வளவளவென்று இழுவை இல்லை. இளைஞர்கள் பெற்றோரை எவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியும், ஏமாற்றுகிறார்கள் என்பதைக் காட்டுமிடத்தில் சுசீந்திரன் ஜெயிக்கிறார். படம் ஒரு விதத்தில் எதிர்மறையானது தான் என்றாலும் இதுதான் இன்றைய மேற்கத்திய கலாச்சாரம் ஊடுருவிய இந்தியா, தமிழ்நாடு. இதை மறுக்கச் சொல்லுங்கள். டாஸ்மாக் வைத்துக் குடிக்கவைத்து மக்களை அழித்து காசு சம்பாதிக்கும் அரசு இருக்கும் ஊரில் வாழும் பிள்ளைகள் மட்டும் சுயநலமில்லாமல் இருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.
படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங் பளிச்.பளிச். யுவன் படத்திற்கு மிகப் பெரிய பலம். அவருடைய ஹிட்டான பாடலை டைட்டில் சாங்காக வைத்து வீணடித்திருக்கிறார் இயக்குநர். (பட்ஜெட் பிரச்சனையோ ?). இன்னும் கவனமாக ஷாட்கள் வைக்கப்பட்டு, கதாபாத்திரங்கள் பிரபல முகங்களாக இருந்திருந்தால் படத்தின் தாக்கம் பெரிதாய் இருந்திருக்கும்.
விதி என்று சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு படம் வந்தது. அதில் மோகனும், பூர்ணிமா ஜெயராமும் இதே மாதிரி காதலிப்பார்கள். அதில் மோகன் ஒரு ரோமியோ டைப். அவர் பூர்ணிமாவை நைச்சியமாகப் பேசி மஹாபலிபுரம் கூட்டிச் சென்று கடலில் விளையாட வைத்து, ஹோட்டலில் ரூம் போட்டு திட்டமிட்டு அவரை வளைத்துவிடுவார். பின்பு பூர்ணிமா கர்ப்பமாகிவிட வில்லத்தனமாகச் சிரிப்பார் மோகன். பூர்ணிமா பின்பு கோர்ட்டுக்குச் சென்று வக்கீல் சுஜாதாவின் உதவியோடு பரபரக்கும் கோர்ட் காட்சிகளோடு மோகனை கோர்ட்டில் ஜெயிப்பார்.
இந்த இரு படங்களுக்கும் நடுவில் இவ்வளவொரு கலாச்சார மாற்றம் ஏற்பட்டிருப்பது சுவராசியமான விஷயமாகும். பழைய படம் கொஞ்சம் நாடகத்தனமானது. புதிய படம் யதார்த்தத்தை நெருங்கி நிற்பது. பழைய படத்தில் காதல் என்பது கல்யாணத்தை நோக்கி என்று வரையறுக்கப்பட்டிருக்கும். புதுப் படத்தில் காதல் காதலுக்காக மட்டுமே. ஜாலியாக இருப்பது காதலின் முக்கிய தொழில். அதில் காமம், உடலுறவு எல்லாம் சகஜம் என்கிற சமூக மனோபாவம் வெளிப்பட்டிருக்கிறது.
மேற்கத்திய பாணிச் சுதந்திரம் சமூக அளவில் மட்டுமின்றி உடலளவிலும் சுதந்திரத்தை தேட விட்டிருக்கிறது நம்மை. உடல் ரீதியான சுதந்திரம் தேவையா இல்லையா? இளைஞர்களால் உடல் ரீதியான சுதந்திரத்தை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த முடியுமா ? எதிரில் நடந்துவரும் ஆணை நிமிர்ந்து பார்ப்பதே குற்றம் என்கிற அளவுக்கு சமூகக் கண்காணிப்பு இருந்த காலத்திலும் இது போன்ற எல்லை மீறல்கள் உண்டு தான். இப்போது கண்காணிக்கவே யாரும் தயாராயில்லாத போது எல்லை மீறல்கள் என்பது யதார்த்தமாகின்றன. சகஜமாகின்றன. வளரும் மகனை, மகளை கண்காணிக்க வேண்டிய அப்பாவும், அம்மாவுமே தங்கள் உடல் தேடல்களை முடித்தபாடில்லாமல் அலைகிறார்கள் இங்கே. உடல் ரீதியான மீறலுக்கும், உள்ள ரீதியான மீறலுக்கும் உள்ள வேறுபாடு பருண்மையானது. சுதந்திரம் பற்றிப் பேசும் எல்லோருமே அதைக் கவனத்தில் கொள்ளத் தவறுகிறார்கள். மனரீதியாக கனவில் தியேட்டரில் பார்த்த நடிகையுடன் சரசமாடலாம். ஆனால் அதுவே நிஜத்தில் நடந்தால் அதன் விளைவுகளே வேறு. இது ஒரு யதார்த்தம்.
சுசீந்திரன் நான் மகான் அல்லவில் இதைப் போன்றேயான ஒரு பிரச்சனையை கையாண்டிருப்பார். இதிலும் அசத்தியிருக்கிறார் மனிதர் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் அந்த க்ளைமாக்ஸ். இந்தப் படம் மட்டும் ஹன்ஸிகா மோத்வானி, சித்தார்த் போன்ற பிரபல முகங்கள் நடித்திருந்தால் பெரிதும் பேசப்படும் படமாக ஆகியிருக்கக் கூடும். பார்வையாளர்களை பெரிய அளவு சலனப்படுத்தியிருக்கவும் கூடும். தாண்டவம் ஆடிய கோரதாண்டவத்தில் பரதேசியாய் சுசீந்திரன் ஆனதால் இப்படி ரசிகர்களை பெரிதும் வசீகரிக்காத புதுமுகங்களை காதல் செய்வீர் என்றிருக்கிறார் சுசீந்திரன். இந்தப் படத்தை பிள்ளைகள்
ஓடவைக்க வாய்ப்பில்லை. பெற்றவர்களே! நீங்கள் ஓடவையுங்களேன்.
இளசுகளே! ஆதலால் இது போன்ற காதல் செய்யாதீர்.

Tuesday, August 27, 2013

தலைவா.. தலைவலியே வா!

இந்தா வர்றேன். அந்தா வர்றேன் என்று 15 நாட்களாய் இழுத்தடித்த தலைவா தியேட்டருக்கு ஒரு வழியாய் வந்தே விட்டது. இதே கேப்பில் இது தியேட்டரை விட்டு ஓடவும் கூடும் என்கிற சந்தேகம் வரத்தான் செய்கிறது. பாரிவேந்தர் கல்லூரி மாணவர்கள் இயக்கம் விடுத்த வெடிகுண்டு மிரட்டல்(? அதெப்படிங்க எந்த தீவிரவாதிகள் குண்டு வைக்கிறோம்னு சொன்னாலும் அவங்களையே போய் விரட்டிப் பிடிச்சுடுற காவல்துறைக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவங்களை மட்டும் கண்டுபிடிக்கவே முடியலையாம்..). உடனே தியேட்டர் அதிபர்கள் கதிகலங்கி படத்தை போடமாட்டோம்னு மிரட்டல். உடனே அம்மாவிடம் விரட்டல். அம்மா கொடநாட்டில் அலட்டல். விஜய் அன் கோ உண்ணாவிரத அரட்டல்.  என்று பத்திரிக்கைகள் பூராவும் சந்தி சிரித்துப் போனது விஜய்யின் தலைவா பட விவகாரம். அது உங்களுக்கு நன்றாகத் தெரியுமென்பதால் விமர்சனத்துக்குப் போவோம்.

தலைவா விஜய் ப்ளாஷ்பேக்கில் சிறு குழந்தையாய் பம்பாய் தாராவி பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஓட்டப்பட்டவர். கமல் ப்ளாஷ்பேக் இல்லாமல் தூத்துக்குடியிலிருந்து பம்பாய்க்கு ஓடிவந்தவர். விஜய்யின் அப்பா சத்யராஜ் வெள்ளைச் சால்வையை போர்த்தியபடி தாராவி மக்களுக்கு நல்லதெல்லாம் செய்து தீய ரவுடிகளிடமிருந்து அம்மக்களைக் காப்பாற்றுகிறார். விஜய்யோ நாசரின் பாதுகாப்பில் வாட்டர் கேன் சப்ளை செய்யும் கம்பெனி நடத்தியபடி சைடில் நடனமாடிக் களிக்கிறார். அமலாபாலுடன் ஆஸ்திரேலியாவில் வந்து குடியேறும் சுரேஷ் ஹோட்டல் ஆரம்பிக்க அங்கே விஜய் வாட்டர் சப்ளை செய்யப் போக காதல் சப்ளையாகி விட அமலா பால் விஜய்யுடன் காதல் நடனமாட ஆரம்பிக்கிறார்.

இந்தியாவுக்கே வந்திராத விஜய் காதல் விஷயமாக அப்பாவை திடீரென்று பார்க்க கிளம்பி பம்பாய் வந்திறங்க அப்பா நாயகன் வேலுநாயக்கனின் பார்ட் 2வாக நிற்பதைப் பார்த்து ஆடிப்போகிறார். வேலுநாயக்கனுக்கு ஒரு செல்வா போல 'அண்ணா' (திராவிட இயக்கங்களின் தலைவர் பெயரை ஒரு ரவுடி தாதாவுக்கு வைக்க ரொம்பத்தான் தில் வேணுங்கோ டைரக்டர் விஜய் சார்)வுக்கு ஒரு ரங்கா நம் பொன்வண்ணன். அண்ணாவுக்கு ஒரு எதிரி. பழைய பகையின் மகன். அண்ணாவை அவன் போட்டுத் தள்ள. அவ்விடத்திற்கு தேவர் மகனாக வந்து விடுகிறார் விஜய். தாராவி மக்களெல்லாம் இனி அடுத்த பெரிய தேவர் இனி நீ தான் நம் தலைவா என்று உடனே கொண்டாடி விடுகிறார்கள். 'அந்தி மழை மேகம்' டைப் பாட்டு.. டான்ஸ்..நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா எதுவுமே தப்பில்லை டயலாக் மாதிரி.. 'கத்தியெடுத்தா அது உன்னை காக்கும் மற்றும் கொல்லும் ஆனா கீழ போடமுடியாது' என்று டயலாக்  கூட உண்டு. அப்புறம் தளபதி விஜய் தலைவா விஜய்யாக மாறி ஸ்டைலாக நாலு பேர் பின்புறம் கூட நடக்க நடந்து வந்து வில்லனை எப்படிச் சாய்க்கிறார் என்பது மீதிக் கழுதை.. சாரி கதை.
 
இயக்குனர் விஜய் பல படங்களைக் காப்பியடிப்பதில் வித்தகர் என்பது அவரது மதராஸப் பட்டினம், தெய்வத் திருமகள் போன்ற படங்களிலிருந்து குவார்ட்டரடித்தால் ஏறும் மப்புபோல தெளிவானது. அதே வித்தையை இங்கேயும் செய்திருக்கிறார் அவர். ஆனால் 50 கோடி செலவு செய்து நாயகனையும், தேவர் மகனையும் சேர்த்து சாண்ட்விச் செய்து காட்டினால் யாருக்குங்கோ பிடிக்கும்னு அவர் கொஞ்சமாச்சும் யோசிச்சிருக்கலாம். ஒரு வேளை அந்தப் படமெல்லாம் வந்து ரொம்ப வருஷமாச்சேன்னு நெனச்சிட்டாரோ என்னமோ. போகட்டும் அப்படியே செய்திருந்தாலும் அதை இப்படி ஓவராக பில்டப் கொடுத்து 'தலைவா' என்று பெயர் வைத்திருக்கலாமா? போக்கிரி - பார்ட் 2 என்று பெயர் வைத்திருந்தால் கூட  விஜய்யின் வாங்கன்னா வணக்கம்னா பாட்டு, முற்பாதியில் ஒரு ஆட்டம், ஒரு டூயட், நாலு பைட் சீக்வன்ஸ் என்று படம் ஏதோ ஒரு வழக்கமான விஜய் பட வரம்புக்குள் நின்றிருக்கும்.

படத்தின் டயலாக்குகளும், காட்சிகளும் அபத்தமோ அபத்தம். பத்துப் பேரை வெட்டிச் சாய்க்கும் ஒரு நாளில் விஜய் தலைவாவாகிறார். தலைவனாக வேண்டுமென்றால் பத்துப் பேரை வெட்டிச் சாய் என்று அர்த்தம் போலும்? அவர் சட்டத்தை மதிப்பதில்லை, அறவழியில் போராடுவதில்லை. பழிக்குப் பழி தீர்க்கிறார். கட்சி ஆரம்பிக்கவில்லை. கொள்கைகள் என்று எதுவுமில்லை. சமூகத்தை என்ன செய்து திருத்துவது என்று ஒரு இழவு கூட யோசித்ததில்லை. இப்போதிருக்கும் நாட்டுப் பிரச்சனைகள் எதைப் பற்றியும் மறந்து கூட கருத்துச் சொல்வதில்லை. ஆனால் 'தலைவா'வாக ஆகவேண்டும் என்று ஆசை மட்டும் இருக்கிறது விஜய்க்கு.

சந்தானம் பாவம் என்ன செய்வார். அவர் கடமையை செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் சிரிப்புத் தான் வரவில்லை தலைவா. ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என்று எதுவுமே எடுபட மறுக்கிறது. இசை ஜீ.வி.பிரகாஷ்குமார். இரண்டு பாட்டுக்களை தேற்றுகிறார். தளபதி தளபதி என்கிற பாடல் படத்தின் அபத்தத்தின் உச்சகட்ட வெளிப்பாடு.

விஜய்யை வளர்த்துவிட்டவர் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் என்பார்கள். விஜய்யின் எதிர்காலத்தை இருட்டாக்கப் போகிறவரும் அவராகவே இருக்கலாம். தேவையில்லாமல் கட்சி, காங்கிரஸ், திமுக என்று சுற்றி, ரசிகர்களை ஆதரவாளர்கள் என கற்பனை செய்யவைத்து, 'நாங்க சப்போர்ட் பண்ணி தான் போன தடவை எலெக்ஷன்ல இந்தம்மா ஜெயிச்சாங்கன்னு' ஏடாகூடமா உளறி என்று ஏகத்துக்கு பண்ணியிருக்கிறார். ஜாக்கிரதைங்கண்ணா. 
Actor Vijay Politics Jayalalitha Admk
தலைவலியே வா என்று வருந்தி அழைத்துக் கொண்டதுதான் தலைவா என இப்போது நன்கு புரிந்திருக்கும் விஜய்க்கு. தலைவாவா தலைவியா என்கிற இந்தப் போட்டியில் தலைவி அம்மா இப்படி ஒரு சுமாரான படத்தையே போட்டு இப்படி வறுத்தெடுத்து தன்னுடைய பவரை காட்டிக் கொள்ளவேண்டிய அளவுக்கு சிறுபிள்ளைத் தனமாகத் தான் இருக்கிறார் என்பது அவரால் ஆளப்படும் மக்களாகிய நாம் வருத்துத்துடன் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு விஷயம்.

சராசரி விஜய் ரசிகர்களாய்ச் செல்பவர்களுக்கும், இந்த தலைவா பாலிடிக்ஸ் எதுவும் தெரியாமலே அப்பாவியாய்ப் படம் பார்க்கச் செல்லும் குடும்பஸ்தர்களுக்கும், குடும்பஸ்த்ரீக்களுக்கும் இந்தப் படம் வழக்கமான ஒரு விஜய்யின் மாசாலாப் படம் தான். ஆனால் மற்ற யாருக்கும் தலைவாவைப் பிடிக்கக் காரணம் பெரிதாய் எதுவுமில்லை. எனவே தலைவாவின் கெத்து எடுபடுமா ?  சந்தேகம் தான்.

Sunday, May 27, 2012

எ செப்பரேஷன் (A Separation) - விமர்சனம் (ஈரானியத் திரைப்படம்)



2011ம் வருடத்தில் வந்த பிறமொழிப் படங்களுக்கான படங்கள் போட்டியில் சிறந்த பிறமொழிப் படத்துக்கான ஆஸ்கர் விருதை கடந்த பிப்ரவரி மாதம் பெற்றது இந்த பெர்சிய மொழித் திரைப்படம். இது தவிர சுமார் 53 விருதுகளை உலகெங்கும் சென்று இந்த ஈரானியப் படம் வென்றுள்ளது.

ஈரான். அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கும் வேளையில், இன்னும் 4 மாதங்களில் ஈரான் நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கப் போகும் அமெரிக்க நாட்டின் ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகளில் இப்போது தான் ஆஸ்கார் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ஈரானிய நாட்டுத் திரைப்படம் ஆஸ்கர் விருது பெறுகிறது.


இது மிகத் தற்செயல் போலத் தோன்றினாலும் அமெரிக்காவின் இத்தகைய அரசியல் பிண்ணணி காரணங்களுக்காக (அந்த நாட்டை நாங்கள் குண்டு வீசி அழித்தாலும் நாங்கள் அவர்களின் கலைகளை மதிக்கும் மாமனிதர்கள் என்கிற பிராண்ட் விளம்பரத்திற்கு) இப்படம் விருது பெற்றிருக்குமா என்பது நாம் தனியே யோசித்துப் பார்க்க வேண்டிய விடயம்.

இந்த அரசியல் காரணம் தவிர்த்து இப்படத்தை பார்த்தாலும் ஆஸ்கர் விருதுக்கு தகுதியுள்ள படமாகவே இதைக் கருதலாம் தான்.

பேமிலி ட்ராமா எனப்படும் குடும்பச் சித்திரம்வகை சார்ந்த படம் இது. இத்துடன் ஒரு த்ரில்லர் போன்ற பரபரப்பில் திரைக்கதையை அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அஸ்கர் பர்ஹாடி(Asghar Farhadi).

தன்னுடைய கணவனான ;’நாடேர்ரிடம் (பெய்மன் மோடி - Peyman Moadi) இருந்து விவாகரத்து கோரும்சிமின்’ (லைலா ஹடாமி - Laila Hatami) கோர்ட்டில் நீதிபதியிடம் பேசுவதாக ஆரம்பிக்கிறது படம். ஈரானில் இப்போது வாழும் சூழல் சரியில்லை என்றும் எனவே தன்னுடைய ஒரே மகளின் எதிர்காலம் சிறந்ததாக அமைய வெளிநாடு சென்று தன் 11 வயதுப் பெண் குழந்தை டெர்மேவை வளர்க்க விரும்பும் சிமின் தன்னுடன் வர மறுக்கும் தனது கணவன் நாடேரிடம் இருந்து விவாகரத்து கோருகிறார். நாடேரோ அல்ஜீமர் என்கிற மூளைச் செல்கள் இறப்பு நோயால் அவதிப்படும் அவனது தந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள் என்கிறான். நாடேரைத் தனது பிள்ளையென்று கூட அறிந்து கொள்ளாத நிலையில் இருக்கும் தந்தையை ஏதாவது மனநல காப்பகத்தில் விடவேண்டியது தானே என்கிறாள் சிமின்.

அவருக்கு நான் தான் அவர் பையனென்று அடையாளம் காணத்தெரியாது.. ஆனால் எனக்கு அவர் தான் அப்பா என்று தெரியுமில்லையா?’. அவரை எப்படி நான் விட்டுச் செல்லமுடியும் என்கிறான் நாடேர்.

நீதிபதியோ விவாகரத்து கோர கணவர் குடிகாரர், பெண்ணை அடிப்பவர் என்பது போன்ற தீவிர காரணங்கள் வேண்டும் என்கிறார். சிமின் அதை மறுத்து தன் கணவர் மிக நல்லவர் என்கிறாள். குழந்தையை தன்னுடன் அனுப்பி விடும்படி கோருகிறாள். இருவருமே தங்களது குழந்தை டெர்மேவின் மேல் மிகுந்த பாசம் கொண்டுள்ளனர். நீதிபதியோ அதற்கு குழந்தையிடமும் கருத்து கேட்கப்படவேண்டும் என்கிறார். எனினும் விவாகரத்து பெற கொஞ்ச நாட்கள் கழித்து வரும்படி நீதிபதி கூறுகிறார். சிமின் தற்காலிகமாக தனது தாய் வீட்டிற்குச் செல்கிறார்.

நாடேர்-சிமின்-டெர்மே குடும்பம் ஒரு உயர்-மத்திய-தர வர்க்க (Upper-middle class) ஈரானியக் குடும்பம். பாங்க் ஒன்றில் க்ளார்க்காக வேலை செய்யும் நாடேர் தனியே தன் குழந்தையையும், தந்தையையும் பார்த்துக் கொள்ள விழைகிறார். தனது கணவர் சிரமப்படக் கூடாதென்று சிமின் ஒரு கஷ்டப்படும் குடும்பத்தைச் சேரந்த பெண்ணான ரஸீயாவை (சாரா பயாட் - Sareh Bayat) வீட்டு வேலைக்காக சிபாரிசு செய்கிறாள். கர்ப்பிணியான ரஸீயா தனது கணவனுக்குத் தெரியாமல் (இஸ்லாமிய முறைப்படி இது சட்ட விரோதம்) நாடேர், அவனது தந்தை மற்றும் டெர்மே இம்மூவரும் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டிற்கு வந்து வீட்டு வேலை செய்கிறாள்.  வயதான, அல்ஜீமர் நோயால் யாரையும் அடையாளம் காணக்கூட இயலாத நாடேரின் தந்தையையும் கவனித்துக் கொள்கிறாள்.. ஒரு நாள் சுய நிதானமில்லாத நாடேரின் தந்தை திறந்திருந்த வாசல் வழியே வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார். அவரைத் தேடி ஓடுகிறாள் நஸீயா. அதைத் தொடர்ந்து நடக்கும் சங்கிலித் தொடர் நிகழ்வுகளே இத் திரைப்படம்.

ஒரு நல்ல திரைக்கதையின் நல்ல அம்சங்களில் ஒன்று அது கதையின் போக்கில் பார்வையாளனை சில கணங்களாவது படத்தின் பழைய காட்சிகளில் ஏதாவது ஒன்றை திரும்ப எண்ணிப் பார்க்க வைத்து விடுவது. இப்படத்தில் பிற்பாதியில் பல இடங்களில் முற்பாதியில் அவர் என்ன சொன்னார் ? என்ன நடந்தது ? என்று பார்வையாளர் தனக்குள் குழம்பி படத்துக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வைக்கிறது.

நடிகர்கள் எல்லோரும் கனகச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். மிக இயல்பான நடிப்பு. அவற்றை நடிப்பு என்றே நாம் உணர இயலாத அளவுக்கு மிகையில்லாத நடிப்பு. படத்தை இரண்டாவது முறையாக நீங்கள் பார்க்க நேர்ந்தால் ஆரம்பக் காட்சிகளில் படத்தின் பாத்திரங்கள் ஒவ்வொருவருடைய பார்வை, சிறு முகக் குறிப்புகள் போன்ற ஷாட்கள் கூட அப்பாத்திரத்தின் இயல்பை வெளிப்படுத்த இயக்குனர் செய்திருக்கும் நுணுக்கமான வேலை என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

படத்தின் ஒளிப்பதிவு மஹ்மூத் கலாரி (Mahmoud Kalari). படம் முழுவதும் க்ளோசப் ஷாட்கள் நிரம்பி வழிகின்றன. சில இடங்களில் பார்வையாளர் நடிகரை பின்தொடர்ந்து சென்று வேவு பார்ப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துவதன் மூலம் அக்காட்சி பிற்பாதியில் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறார். படம் பார்ப்பவர்களை நீதிபதியின் ஸ்தானத்தில் நாடேர் மற்றும் சிமினின் வழக்கை புலன் விசாரணை செய்யும் எண்ணத்தோடு பார்க்க வைப்பதில் இயக்குனர் வெற்றிபெற்று விடுகிறார். எனவே படத்தின் முடிவையும் கூட நம்மிடமே விட்டுவிடுகிறார்.

யதார்த்த வாழ்வின் நிகழ்வுகளை அப்படியே காட்சியமைப்பதிலும் இயக்குனர் மிளிர்கிறார். குழந்தை தாயின் வயிற்றில் காதை வைத்து கரு சிசு நகர்வதைக் கேட்பது, பெட்ரோல் பல்க்கில் டெர்மே டிப்ஸை திரும்பக் கேட்பது, மாடிப்படியில் தள்ளிவிட்ட காட்சியை மகளுக்கு விவரிக்கும் நாடேர் தான் குற்றமற்றவன் என்பதை விளக்குவது என்று பல இடங்கள்.

படத்தின் மிக நுணுக்கமான மற்றும் அழுத்தமான விஷயம் கதை, திரைக்கதை. இயக்குனரே கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.

கதையில் வரும் மாந்தர்கள் எல்லோரும் நல்லவர்களே. ஆனால் வெவ்வேறு தருணங்களில் தனது குறைபாடுகளை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். நேர்மையாக வாழ்வதை தனது மகளுக்கு சொல்லிக் கொண்டேயிருக்கும் நாடேர் வழக்கிலிருந்து தப்பிக்க பொய் சொல்வது, மாமனார், மகள் மற்றும் கணவன் மீது மிகுந்த மதிப்பு, பாசம் வைத்துள்ள சிமின் அவர்களை விட்டுவிட்டுச் செல்ல விரும்புவது, அம்மா தன்னை விட்டு எப்போதும் சென்று விடமாட்டாள் என்பதை நன்கு உணர்ந்த டெர்மேஅதனாலேயே இருவரையும் இணைக்க அப்பாவுடனேயே இருப்பது, தந்தைக்காகப் பொய் சொல்வது, ரஸீயா மத உணர்வு மிக்கவளாக இருப்பது அதே சமயத்தில் கணவனுக்குத் தெரியாமல் வேலைக்கு வருதல், மனிதாபிமான அடிப்படையில் நாடேரின் தந்தைக்குப் பணிவிடை செய்வது என்று இருந்தாலும் தவிர்க்க இயலாமல் குழந்தை விஷயத்தில் பொய் சொல்வது.. என்று கதையின் போக்கை பார்வையாளர்கள் ஊகிக்கவே முடியாதபடி படம் முழுவதும் நிகழ்வுகள் நகர்வதால் ஒரு த்ரில்லர் பார்த்த உணர்வு பார்வையாளனுக்கு ஏற்படுகிறது.

இதில் சரி எது, தவறு எது என்று தீர்மானித்து முடிவு தரவேண்டிய பொறுப்பும் பார்வையாளரிடம் வரும் போது படத்தின் தாக்கத்திலிருந்து விடுபட நெடுநேரமாகிறது.

படம் மேல் தட்டு மற்றும் கீழ்த்தட்டு குடும்பத்தினரிடையேயான சிக்கலான ஊடாடலை பதிவு செய்கிறது. படத்தின் முடிச்சு நாடேர்-சிமினின் விவாகரத்து விஷயம். ஏன் அது நிகழ்கிறது என்று நமக்குள் கேட்டுக் கொண்டால் அதற்கு விடை, பெரிய காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே. பெரிய காரணங்களில்லாத மேல்தட்டு சிக்கல்களில், கடைசியில் இழப்பு நேர்வது கீழ்த்தட்டு மாந்தர்களுக்கே என்கிற யதார்த்த உண்மையும் படத்தில் பதிவாகிறது.

இறுதிக் காட்சியில் மீண்டும் அவர்களது விவாகரத்து வழக்கு வருகிறது. அதில் மூவரும் கறுப்பு உடை அணிந்திருப்பதன் மூலம் குடும்பத்தில் யாரோ காலமானது குறிப்பாக உணர்த்தப்படுகிறது. டெர்மேயின் முடிவை கேட்கிறார் நீதிபதி.

டெர்மே என்ன பதில் சொல்லியிருப்பாள் ?

Wednesday, May 16, 2012

'நடந்த கதை' - குறும்படம். விமர்சனம்.

நடிப்பு - கருணாகர், அருள் சங்கர், தர்மா, துரை சத்தீஷ், ஏழுமலை, பழனி,மணிவண்ணன்,சுபாகரன், லில்லி ஆசிரியர், கோவிந்தன், வீரராகவன், ஓவியன், நிறைமதி, கோகுல், தமிழ்ப் பிரியன், சுந்தரேசன்.
ஒலிப்பதிவு - R. சரவணன்           ஒலிக்கலவை - T.P. தர்மபிரகாஷ்
இணை ஒளிப்பதிவு - மணி   ஒளிப்பதிவு - இராசா மதி.
வரைகலை - செந்தில் 
கதை - அழகிய பெரியவன் (குறடு சிறுகதை)
படத்தொகுப்பு - A. L. ரமேஷ்  
இசை - மரியா மனோகர்
தயாரிப்பு - அருள் சங்கர்
திரைக்கதை, வசனம், இயக்கம் - பொன் சுதா.
வெளியீடு - நண்பர்கள் குழுமம்.
ஓடும் நேரம் - 21 நிமிடங்கள்.
வெளிவந்த ஆண்டு - 2010.

படம் முன்பே வெளியிடப்பட்டிருந்தாலும் நவம்பர் 2011ல் தான் யூ ட்யூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பு சி.டி.க்களாக கிடைத்திருந்திருக்கக் கூடும்.தமிழ்நாடு முற்போக்கு கலைஞர் மற்றும் எழுத்தாளர் சங்கத்(தமுகஎச) தின் சிறந்த சமூக குறும்படத்திற்கான 2010 ஆம் ஆண்டு விருதைப் பெற்ற படம் இது. இது மட்டுமல்ல, இது போன்று மொத்தம் 16 விருதுகளைப் பெற்றிருக்கிறது இப்படம்.

இக்குறும் படத்தின் முக்கியமான விருதுத் தகுதி இது சமூகப் பிரச்சனையான ஜாதியை களமாகக் கொண்ட படம் என்பது தான். அழகிய பெரியவனின குறடு என்கிற சிறுகதையை குறும்படமாக எடுத்திருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம். தமிழ் சினிமாவில் கதைகளையும், நாவல்களையும் படமாக்குவது என்பது அத்திப் பூத்தாற் போல நடக்கும் விஷயம் தான். தீண்டாமை என்கிற சமூகப் பிரச்சனையை மட்டுமே கதைக் களமாகக் கொண்டிருப்பதில் (ஒரு சைடு ட்ராக் காதல் கூடக் கிடையாது !) திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய இயக்குனர் பொன்.சுதா நேரமையாக இருந்திருக்கிறார். அவரை இதற்காகப் பாராட்ட வேண்டும்.

கதை. எளிமையான கதை. தாழ்த்தப்பட்ட சக்கிலிய சமூகத்தில் 'கீழத் தெருவில்' பிறந்த வீரபத்ரன் சிறுவயது முதலே தன் வாழ்வில் செருப்புப் போட்டு நடக்க ஏங்கி ஆசைப்படுவதையும் முடிவில் ராணுவத்தில் சேர்ந்ததன் மூலம் அந்த ஆசையை எப்படி நிறைவேற்றிக் கொண்டான் என்பதையும் காட்டும் படம். செருப்புப் போட்டு நடக்க ஆசைப்படுவது என்பது கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடியாமல் இருந்த காலங்கள் உண்டு. இன்று செருப்புப் போட்டுக் கொள்ள அவர்களுக்குத் தடையில்லை என்றாலும் தற்காலத்தில் தீண்டாமையும் 'நவீனமாகி' செருப்பு போட்டுட்டு போலாம் ஆனா மேலத் தெரு வழியா போகும் போது செருப்பை கால்ல மாட்டாம கையில தூக்கிக்கிட்டு போகனும் அப்படின்னு வேற வடிவம் எடுத்திருக்கு. செருப்புத் தைக்கிறவங்களா இன்னும் இருக்கிறவங்க சக்கிலிய சாதிக்காரங்கதான். இல்லையா ?

படம் துவக்கத்தில் கதாபாத்திரம் பேசுவதாய் சாதி பற்றிய ஆழமான சில வரிகளோடு பிரமாதமாய் ஆரம்பிக்கிறது. படத்தின் ஹீரோவாக (பல்வேறு வயதுகளில்)வரும் எல்லோருடைய நடிப்பும் பரவாயில்லை. ராணுவத்தில் சேரும் இளவயது வீரபத்திரனும் நடிப்பில் தேறிவிடுகிறார். சில இடங்களி்ல் சொதப்புகிறார். முதன் முதலாக ஷூ வை கையில் வாங்கியவுடன் அவர் காட்டும் உணர்வுகள் பொருந்தவில்லை. படத்தி்ன் மற்ற எல்லாப் பாத்திரங்களும் துணைப் பாத்திரங்களாகவே ஒற்றைத் தன்மையுடன் இருக்கின்றன. தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஹீரோ சிறு வயதிலிருந்து வளரும் போது ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு வில்லன் உயர் ஜாதியில் வளர்ந்திருக்கலாம். இது கதையைச் சொல்வதில் சுவராசியத்தை கூட்டியிருக்க வாய்ப்பிருக்கிறது.

படத்தின் ஜாதி சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகள் சீரியலை ஞாபகப்படுத்தும் அளவு சிறிது நாடகத்தன்மை கொண்டிருக்கின்றன. மேல் ஜாதிக்காரர்களாக வரும் எல்லோரும், அவர்கள் நடிப்பும் நாடகத்தையே ஞாபகப்படுத்துகின்றன. இராசா மதியின் ஒளிப்பதிவு கச்சிதமாக இருக்கிறது. வீரபத்ரனை குழந்தையாக அறிமுகப்படுத்தும் காட்சியில் உட்கார்ந்திருக்கும் சிறு குழந்தையும் அவன் அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள் அனைவரும் 'செருப்பில்லாத கால்களாக' மாற்றி மாற்றி வந்து போகும் அந்தக் காட்சி பிரமாதமான காட்சியமைப்பு. அதை மனதில் உருவகித்த இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். மற்றொரு இடம் மேலைத் தெருவில் அப்பாவுடன் நடந்து போகும் வீரபத்ரன் முதன் முதலாக பார்க்கும் காலணிகள்; அவனுடைய மன ஓட்டங்கள்; அதைப் பிரதிபலிக்கும் ஷாட்கள்; ரமேஷின் எடிட்டிங் இங்கு கச்சிதம். மரியா மனோகரின் இசை படத்திற்கு புதிதாக எதுவும் சேர்த்துவிடவில்லை என்றாலும் படத்தைக் காலி செய்யவில்லை. ஓ.கே. ரகம். ஒலிப்பதிவும் படத்திற்கு தேவையான அளவு அமைந்து உள்ளது.

அழகிய பெரியவனின் கதையில் யதார்த்தம் எவ்வளவு அழகியலுடன் வெளிப்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் படத்தில் அந்த அழகியல் இல்லை. படத்தின் பெரும்பாலான காட்சிகளில் கதாபாத்திரங்களைத் தவிர வேறு யாரும் மாந்தர்கள் நடமாடுவதே இல்லை. இது ஒரு வகையான புனைவுத் தன்மையை கொடுக்கிறது. இயக்குனரும் நிறைய காட்சிகளில் பாரதிராஜாவின் பன்ச் போன்ற புனைவுகளை கொடுத்திருக்கிறார் (உ.ம். மரத்தில் தொங்கும் செருப்புகள், கடைசியில் வீட்டுக்கு வீடு வாசலில் ராணுவ வீரர் ஓட ஓடத் தோன்றும் செருப்புகள்). சமூகப் பிரச்சனையை தனி மனிதனின் கோணத்தில் அலசிய விதத்தில் இப்படம் ஒரு வித்தியாசமான படம் தான்.

கதையின் கரு பற்றி கொஞ்சம் பேசவேண்டும். தான் பிறந்த ஊரில் செருப்பணிந்து நடக்கக்கூடாது என்கிற ஆதிக்க ஜாதியின் கொடுமையை எதிர்க்க சமூக ரீதியாக வழியில்லாத ஹீரோ ராணுவம் என்கிற மற்றொரு ஆதிக்க கருவியின் பால் தஞ்சமடைகிறான். ராணுவ வீரனான தான் 'யார் எதிர்த்தாலும் சுட்டுக் கொல்வேன்' என்கிறான். அவனை தெருவுக்குள் பூட்ஸ் காலுடன் நுழைய விட மறுக்கும் ஆதிக்க சாதி அவன் 'சுடுவேன்' என்றதும் தான் பயப்படுகிறது. இது 'பேய்க்குப் பயந்து பிசாசை கட்டிக் கொண்ட கதை' எனலாமா? ஆதிக்க சாதி, ஜாதி ஏற்றத் தாழ்வுகள் சமூகப் பிரச்சனையாக பல்லாயிரம் வருடங்களாக இருக்கின்றன. ஆனால் அவற்றிற்கு தீர்வு என்பது மந்திரத்தில் வைத்தது போல் சடக்கென்று நிகழ்ந்துவிடாது என்பது தான் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை கதையாளர் ராணுவத்தின் மூலம் மாற்றி விட ஆசைப்படுவதை கதை காட்டுகிறது.
ராணுவம் என்பது என்ன? எல்லையை பத்து, 20 வருடங்களுக்கு ஒரு முறை எப்போதாவது 'நடத்தப்படும்'(நடப்பது அல்ல நடத்தப்படுவது) சண்டையில் பாதுகாப்பது தவிர ராணுவம் மொத்தமும் மக்களை, அது சொந்த மக்களோ, அன்னிய மக்களோ, அவர்களை அடக்கி ஒடுக்கவே பயன்படுகிறது. காஷ்மீரில் ராணுவம், கூடங்குளத்தில் ராணுவம், ஒரிஸ்ஸா காடுகளில் ராணுவம் என்று ராணுவம் சொந்த மக்களை கொல்லப் பயன்படுவதே அதிகம். இப்படிப்பட்ட ராணுவம் தான் சாதிய பிரச்சனைக்கு தீர்வு கொடுப்பதாக கதை முடிகிறது. ராணுவம் பற்றிய (பாக்யராஜ் படங்களில் வருவது போல) ஜனரஞ்சகமான பார்வை இருப்பதால் தான் இந்த மாதிரி தீர்வுகளுக்கு எழுத்தாளர் போக நேரிடுகிறது. இந்திய ராணுவத்திலும் சாதியம் இருக்கிறது என்பது ஓர் உண்மை.

நமது இந்திய ராணுவம் ஆரம்பத்தில் வெள்ளையர் ஆட்சியில், இந்திய மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு இந்திய அடிமைகளை வைத்தே வீரர் படை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது. அதே அமைப்புடன் தான் இன்னும் இருந்து வருகிறது. வெள்ளையர்கள் தான் படைப்பிரிவுகளை சாதிய அடிப்படையில் பிரித்தனர். போராடும் 'வீரமான' சாதியைச் சேர்ந்தவர்கள் என்றழைக்கப்படும் சாதிக்காரர்களின் சாதிகளின் பெயர்களில் படைப்பிரிவுகள் (உ.ம். ஜாட், கூர்க்கா, ராஜ்புத், சீக்கியர்கள் ) அமைந்திருந்தன. இந்தியா சுதந்திரமடைந்ததும் சாதீய, இன முறைப்படி படைப்பிரிவுகளை அமைக்க வேண்டாம் என விதிமுறைகள் மாற்றப்பட்டன. ஆனாலும் பொற்கோயிலில் ராணுவம் நுழைந்த போது பயன்படுத்தப்பட்டது 'தமிழ்நாடு(தமிழர்) படைப் பிரிவு'. சீக்கியர்களின் அரசு மீதான கோபம் தமிழர்களின் மீதான கோபமாக அங்கே மாற்றப்பட்டது. அது இந்திய அமைதிப்படை 1987ல் இலங்கைக்குக் சென்ற போது வெடித்தது. இலங்கையில் தமிழர்களை கொன்று, வன்புணர்ந்து வெறியாட்டம் ஆடியது சீக்கியப் படைப் பிரிவு. இந்திரா காந்தி கொலைக்குப் பின் ராணுவத்தில் சாதீய, இன ரீதியான பிரிவுப் பெயர்கள் திரும்பவும் வைத்துக் கொள்ளப்பட்டன.

ஒரு பத்து நாட்களுக்கு முன்பு ப்ரணாப் முகர்ஜி ராணுவத்தில் இருக்கும் முஸ்லீம்களின் எண்ணிக்கை பற்றி கருத்துக் கூறி மாட்டிக் கொண்டார். ராணுவத்தில் ஜாதி இருக்கிறது. ஜாதிக் கொடுமைகள் நேரடியாக இனம் கடந்து இல்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள பறையன் என்பவன் தாழ்த்தப்பட்டவனா இல்லையா என்று வடக்கத்திய உயர் சாதியினனுக்குத் தெரியாது. ஆனால் ஒரு இனத்துக்குள்ளே இருக்கும் ஜாதி ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் அப்படியே இருக்க வாய்ப்பிருக்கின்றன. உதாரணமாக தமிழ்நாடு ரெஜிமண்டுக்குள் இருக்கும் எல்லா தமிழர்களுக்கும் ஒருவருடைய சாதி மற்றவருக்குத் தெரியும் ஆதலால் சாதி வேற்றுமை கண்டிப்பாக ஏற்படுகிறது.

இவவளவும் இருக்கட்டும். சரி,  படம் 'மிக'ச் சிறந்த படமா என்றால்  இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் நல்ல படம். மோசமான படமில்லை. அந்தப் பதினாறு விருதுகளும் இது சாதிய பிரச்சனையை கையாண்ட காரணத்திற்காகவே இந்தப் படத்திற்கு கிடைத்திருக்க நிறைய வாய்ப்புள்ளது. ஏனென்றால் இதைச் செய்யக் கூட  விரும்பாதவர்களே தமிழ் சினிமாவில் அதிகம்.