Wednesday, June 9, 2010

மத்திய அரசின் பழங்குடி மக்களுக்கு எதிரான ‘Green Hunt’ஐ கண்டித்து நடந்த கூட்டத்தில் அருந்ததிராய் பேச்சு.

மத்திய அரசின் பழங்குடி மக்களுக்கு எதிரான ‘Green Hunt’ஐ கண்டித்து நடந்த கூட்டத்தில் அருந்ததிராய் பேச்சு.

04-06-2010, வெள்ளிக்கிழமை.
இடம்:சென்னை, தி.நகர், தேவநாயகம் பள்ளி மைதானம் - திருப்பதி தேவஸ்தானத்திற்கு எதிரில்.


அருந்ததி ராய் பேச வருகிறார் என்று கேள்விப்பட்டதும் ஆர்வத்துடன் கிளம்பினோம். மாலை 5.30 மணியளவில் ஆரம்பித்திருந்தது கூட்டம். நாங்கள் சற்று தாமதமாகச் சென்றிருந்தோம். உள்நாட்டு அடக்குமுறைக்கு எதிரான இயக்கம் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ம.க.இ.க தோழர்களின் தலைகள் நிறைய தெரிந்தன. தியாகு வரவேற்று பேசிக்கொண்டிருந்தார். சுமார் ஒரு 1500 பேருக்கு மேல் திறந்தவெளி மைதானத்தில் அமர்ந்திருந்தனர். மேடையில் அருந்ததிராயுடன், விடுதலை ராஜேந்திரன், தியாகு மற்றும் சாய்பாபா, கிலானி (டெல்லி பல்கலைக் கழக பேராசிரியர்கள்) போன்றோருடன் இன்னும் பலர் அமர்ந்திருந்தனர். பெரிய மின்விசிறியொன்று மேடை மொத்தத்திற்கும் காற்றை திருப்பிவிட்டுக் கொண்டிருந்தது. வெயில் காலமானாலும் மாலை நேரமாகிவிட்டதால் மைதானத்தில் இதமான சூழல் நிலவியது. தியாகுவிற்குப் பின் சாய்பாபா ஆங்கிலத்தில் பேசினார். தியாகு பின்னர் இப்பேச்சையும் அருந்ததிராய் மற்றும் கிலானியின் பேச்சுக்களையும் தமிழில் (அப்படியே அழகாக) மொழிபெயர்த்தார்.

தியாகு பேசுகையில் “இந்தக் காலத்தில் மாவோயி்ஸ்ட் என்பவனின் வரையறை அரசால் விரிவுபடுத்தப்படுகிறது. மாவோயி்ஸ்ட் என்பவன் காடுகளில் ஆயுதம் ஏந்தி பழங்குடியினரோடு கலந்து நின்று போராடுபவன் மட்டுமல்ல அவன் இங்கு நகரத்தில் கூட இருக்கலாம் என்று விரிவுபடுத்துகிறது. ‘யாராவது மாவோயிஸ்ட்டுகளை ஆதரித்துப் பேசினால் அவர்கள் சிறைத் தண்டனைக்குள்ளாவார்கள்’ என்கிற அரசின் எச்சரிக்கை இதற்கு எடுத்துக்காட்டு. நேற்று இலங்கையில் நடந்தது. இன்று லால்கரில் நடக்கிறது. நாளை உங்களுக்கு இது நடக்காது என்று என்ன நிச்சயம்.” என்று பேசினார்.

பேராசிரியர் சாய்பாபாவின் பேச்சிலிருந்து சில:
அமெரிக்காவில் தியோடர் ரூஸ்வெல்ட் ஜனாதிபதியாக இருந்தபோது அங்கிருந்த அந்நாட்டின் உண்மையான பழங்குடிகளான (தற்போதைய வெள்ளையர்கள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவிலிருந்து சென்றவர்களே) செவ்விந்தியர்களை விரட்ட அமெரிக்காவை மீட்க(?) ‘சிவப்பு வேட்டை’(Red Hunt) என்கிற அழித்தொழிப்பு நடவடிக்கையை தொடங்கினார். அந்த சமயத்தில் செவ்விந்தியர்களை அவர் ‘நல்ல இந்தியன் என்பவன் செத்த இந்தியன்’(The good Indian is a Dead Indian) என்று கேலியாகக் கூறினார். அதேபோலத் தான் தற்போது லால்கார் பகுதியில் இந்திய அரசு நடத்தும் ‘பச்சை வேட்டை’யும்(Green Hunt) அப்பகுதியில் உள்ள 3.5 கோடி பழங்குடியினரை விரட்ட(கொல்ல) முயற்சிக்கிறது. உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஒரு பேட்டியில் இலங்கையில் விடுதலைப் புலிகளை அழிக்க சிங்கள அரசு செய்ததை மாவோயிஸ்ட்டுகளை அழிப்பதற்கு முன்-மாதிரியாக(Model) கொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். சிவப்பு வேட்டையில் சொல்லப்பட்ட கைப்பற்று-கட்டுப்படுத்து-முன்னேற்று (Hold-Control-Develop) என்ற மந்திரமே பச்சை வேட்டையிலும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உலகளாவிய அடக்குமுறை இன்னும் தொடர்கிறது. சாய்பாபா பேசிய பின் அடுத்ததாக கலைக்குழுவினர் அரசின் அடக்குமுறையை எதிர்த்து ஒரு பாடல் பாட அதைத் தொடர்ந்து கிலானி பேசினார்.

பேராசிரியர் கிலானியின் பேச்சிலிருந்து சில:
லால்கார் பழங்குடியினர் ஒருவரிடம் நீதிமன்ற விசாரணையில் கேட்கப்பட்ட கேள்வி “மாவோயிஸ்ட்டுகள் ஏன் பள்ளிகளை வெடிவைத்து தகர்க்கிறார்கள் ?”
அதற்கு அவர் சொன்ன பதில் “அதைச் செய்வது மாவோயிஸ்ட்டுகள் அல்ல. நாங்களே தான். ஏனென்றால் இப்பள்ளிகளில் தான் அரசின் பாதுகாப்புப் படையினர் வந்து தங்குகின்றனர். எங்கள் வீடுகளையும், உடைமைகளையும் நாசமாக்குகின்றனர். எங்கள் வீட்டுப் பெண்களை இவ்விடத்தில் வன்புணர்ச்சி செய்து சீரழிக்கின்றனர். எனவேதான் நாங்களே இப்பள்ளிகளை சிதைத்துவிடுகிறோம்”. நீங்கள் அன்றாடம் செய்திகளில் படிக்கும் செய்திகளை இத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். சிலர் கணிப்பது போல் ஒரு புறம் மாவோயிஸ்ட்டுகளாலும் மறுபுறம் இந்திய அரசின் படைகளினாலும் சூழப்பட்டு சண்டையின் நடுவில் மாட்டிக் கொண்டவர்கள் பழங்குடியினர் என்கிற ‘சாண்ட்விச் கோட்பாடு’ம்(Sandwich Theory) உண்மையல்ல.

உண்மையில் டாடாக்களும், பிர்லாக்களுக்கும் ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர், அஸ்ஸாம் மாநில அரசுகளுக்குமிடையே நூற்றுக்கணக்கில் கையெழுத்திடப்பட்ட MOUக்களின் பின்னே ஆரம்பித்தது தான் விளைவுகள்(மேற்கு வங்க சி.பி.எம். அரசு கார்பரேட் கம்பெனிகளுடன் தண்டகாரண்யா பகுதி வளங்களைச் சுரண்ட அனுமதிக்கும் எந்த ஒப்பந்தமும் போட அனுமதிக்கவில்லை என்பது இங்கே குறிக்கவேண்டிய ஒரு முக்கிய விஷயமாகும். தவறுதலாக மேற்குவங்க மாநிலத்தையும் குறிப்பிட்டுவிட்டேன். தவறு திருத்தப்பட்டுள்ளது. - மொ.ர்). இந்தக் கம்பெனிகளின் பணத்தால் ஒவ்வொரு கிராமத்திலும் ‘கிராம பாதுகாப்புக் குழு’(Village Defense Committee) ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பாதுகாப்புக் குழுக்கள் பயங்கர ஆயுதங்களுடன் கிராம மக்களை காட்டுமிராண்டித்தனமாக அடக்கி ஆள முற்பட்டனர். காஷ்மீரிலும் இதே போல் ஆரம்பிக்கப்பட்ட கிராம பாதுகாப்புக் குழுக்களில் முன்னாள் ராணுவ வீரர்களும், பெரும்பான்மை இந்துக்களும் இருந்தனர். இவர்களுக்கும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும் நடக்கும் சண்டைகளில் இவர்கள் கொல்லப்பட்டால் செய்திகளிலும், தொலைக்காட்சிகளிலும் ‘முஸ்லீம் தீவிரவாதிகள்’ ஒரு ‘இந்துவை’க் கொலை செய்ததாகச் செய்திகள் வெளிவரும். நாட்டின் 77% பேர் ஒரு நாளைக்கு வெறும் 20 ரூபாயில் உயிர்வாழும் இந்நாட்டில் தான் ஏழைகளிலும் ஏழைகளாய் இயற்கையோடு வாழும் பழங்குடியினரை குறிவைத்துக் கொல்கிறது இந்திய அரசு. காஷ்மீரில் மட்டும் 2005 ஆண்டுவரை 350 என்கெளண்டர் கொலைகள் மத்திய அரசின் ராணுவப் படைகளால் நடத்தப்பட்டுள்ளதாகவும், இது பற்றி விசாரிக்க மாநில அரசுக்கு அனுமதி வேண்டும் என்று கோரி காஷ்மீர் மாநில அரசு இந்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. அந்த அளவிற்கு மனித உரிமை மீறல்களை ‘தீவிரவாதிகளை அழிப்பது’ என்கிற போர்வையில் இந்திய ராணுவம் புரிந்துள்ளது. இந்த UPA அரசு POTA சட்டத்தை வாபஸ் பெற்ற அதே நாளன்று பாரளுமன்றத்தில் ஏற்கனவே இருந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மேலும் ஷரத்துகள் சேர்த்து கடுமையானதாக மாற்றப்பட்டது.

பின்னர் அருந்ததி ராய் பேசினார். இவ்வளவு பேர் கூடியிருக்கும் கூட்டத்தின் முன்பு தான் பேசியதில்லை என்றும், தான் ஒரு மேடைப் பேச்சாளரல்ல என்றும் தெரிவித்த ராய் தொடர்ந்து பேசினார். அமைதியாக, மெலிதான வார்த்தைகளுடன் அழுத்தமான, தெளிவான, ஆரவாரமற்ற உரை நிகழ்த்தினார்.

அருந்ததி ராயின் உரைச் சுருக்கம்:
இந்தப் போர் மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க, மக்களை காக்க அரசால் நடத்தப்படும் போர் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் இது அரசு நடத்த விரும்பிய போர். இந்த அரசு மக்களின் அரசு (Welfare State) என்று சொல்லிக் கொண்டாலும் உண்மையில் இது பெரும்முதலாளிகளின் அரசாகும்(Corporate State). நூற்றுக்கும் மேற்பட்ட MOUக்கள் (Memorandum Of Understanding – புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்) பஸ்தார், லால்கார், தண்டகாரண்யா பகுதிகளில் டாடா ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல் போன்ற கம்பெனிகளால் அந்தந்த மாநில அரசுகளுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள். அக்காடுகளில், பழங்குடியினரின் இயற்கையான இருப்பிடமான அம்மலைகளில் பல ஆயிரம் கோடிகள் மதிப்புள்ள பாக்சைட், இரும்புத் தாது மற்றும் வைரங்கள் போன்றவை இருப்பதை சாட்டிலைட் மூலம் அறிந்து இவர்கள் அந்த இயற்கை வளங்களைச் சுரண்டி தங்கள் லாபத்திற்கு விற்க போடப்பட்டவை தான் இந்த ‘புரிந்துணர்வு’ ஒப்பந்தங்கள்.

இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானவுடன் ‘சால்வார் ஜூடும்’ அதாவது Peace Hunt என்று பெயரிடப்பட்ட குழுக்கள் டாடாவின் பொருட் செலவால் உருவாக்கப்பட்டன. இக்குழுக்களின் வேலை, மலேசியாவில் 1950 களில் வெள்ளை இனத் தளபதியான பிரிக்ஸ் என்ற பிரித்தானிய தளபதி கம்யூனிஸப் புரட்சியாளர்களை ஒடுக்க கையாண்ட ‘தரைச் சுத்திகரிப்புச் செயல்பாடு’(Ground Clearing Operation) என்கிற அழிப்பு உத்தியை தண்டகாரண்யா பகுதிகளில் செயற்படுத்தலாகும். இந்த உத்தியின்படி பயங்கர ஆயுதங்களுடன் கிராமம் கிராமமாகச் சென்ற சால்வார் ஜூடும் குழுவினர் அந்தக் கிராமவாழ் பழங்குடி மக்களை அடித்து, துன்புறுத்தி, பாலியல் கொடுமை செய்து, உடைமைகளை அழித்து, கிராமங்களை எரித்து அம்மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து அரசின் முகாம்களுக்கு துரத்தி விட்டனர். இவ்வாறு 650 கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அதாவது சுத்தமாக்கப்பட்டன. 50000 மக்கள் கொல்லப் பட்டனர். 3.5 லட்சம் மக்கள் காணாமல் போயுள்ளனர். ஜிந்தால்களும், மித்தால்களும் பாக்சைட்டையும் அலுமினியத்தையும் தோண்டி லாபம் பெறுவதற்காக இம்மக்கள் இந்த அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பம்பாயில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நான் பழங்குடியினருடன் இணைந்த மாவோயிஸ்டுகளின் போராட்டத்தின் நியாயங்களைப் பேசினேன். அடுத்த நாள் அனைத்து செய்தி மற்றும் தொலைக் காட்சி ஊடகங்கள் அதை வெளியிட்டன. அதற்கு மறுநாள் இந்திய அரசு செய்தி நிறுவனமான பி.டி.ஐ (PTI) ‘அருந்ததிராய் தான் ஒரு மாவோயிஸ்ட் என்றும் முடிந்தால் இந்திய அரசு தன்னை கைது செய்யட்டும்’ என்று நான் சவால் விட்டுப் பேசியதாக ஒரு பொய்ச் செய்தி வெளியிட்டது. முந்தைய நாள் என்னுடைய உண்மையான பேச்சை வெளியிட்ட அதே ஊடகங்கள் அடுத்த நாள் இந்தச் செய்தியையும் பெரிதாக வெளியிட்டன. ஏனென்றால் இவ்வூடகங்கள் பெரும் நிறுவனங்களால்(Corporate) தான் நடத்தப்படுகின்றன. நான் கைது செய்யப்படுவதற்கு அஞ்சவில்லை. நான் ஒரு எழுத்தாளர். தனிப்பட்ட ஆளான எனக்கு என் மனத்தில் தோன்றும் சமுதாயக் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட உரிமை இருக்கிறது. நான் எப்போதும் அரசு அடக்குமுறைக்கு எதிர்ப்பக்கம் நின்று போராடும் மக்களின் பக்கம் தான். அதே சமயம் இம்மாதிரிப் பொய்யான விஷயங்களை வெளியிடும் ஊடகங்களை நான் கண்டிக்கிறேன். மாவோயிஸ்ட்டுகளின் விஷயத்தில் ‘இயற்கையான முறையில் இயற்கை வளங்களை தோண்டி எடுத்தல்’ என்னும் மாவோயிஸ்ட்டுகளின் கோட்பாட்டில் எனக்கு கேள்வி இருக்கிறது. பாக்சைட் தாதுவிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுப்பது மிகுந்த நஞ்சை வெளியேற்றும் ஒரு வேதியல் செயல்முறையாக உள்ளது. இது எப்படி இயற்கையானதாக இருக்கமுடியும் ?

இப்போராட்டம் இந்தியாவில், ராய்ப்பூர், பாஸ்கோ, கலிங்க நகர் போன்ற பகுதிகளில் இயற்கையுடன் இன்னும் இணைந்து வாழும் 3.5 கோடி பழங்குடி மக்களின் மாபெரும் போராட்டமாகும். முதலாளித்துவத்தை 5-6 ஆண்டுகளாக பழங்குடியினரால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய அரசியலில் இரு பூட்டுக்கள் திறக்கப்பட்டன. ஒன்று பாபர் மசூதி; இரண்டாவது சுதந்திரச் சந்தை. இவற்றைத் திறக்க இரண்டு அடிப்படை வாதங்கள் தேவைப்பட்டன. ஒன்று இந்துத்துவ அடிப்படைவாதம்: மற்றொன்று பொருளாதார அடிப்படைவாதம். இந்த வாதங்களை நிறைவேற்ற தீவிரவாதம் என்கிற போலி எதிரி தேவைப்பட்டது. ராணுவம் என்பது ஜனநாயக சக்தியல்ல. எல்லா நாட்டு ராணுவங்களும் மோசமானவை தான். இலங்கையில் சிங்களர்களால் நடத்தப்பட்ட போர்; ஒரு லட்சம் பேரைக் கொன்ற போர் ஒரு பெருமுதலாளியப் போரே (Corporate War).

ஆனால் சிங்கள அரசைப் போல் இந்திய அரசு அவ்வளவு நேரடியாகவும், கொடூரமாகவும் மக்களை உடனே கொல்லாது. ஏனென்றால் இவர்கள் கொல்வதில் நம்பிக்கையுள்ளவர்கள் அல்ல; மாமிசம் உண்ணாதவர்கள்; அந்தணர்கள். எனவே இவர்கள் மெதுவான இனப்படுகொலையில்(Slow Genocide) நம்பிக்கை வைத்துள்ளனர். லால்கார் பகுதியில் பணியாற்றும் சேவை அமைப்பின் மருத்துவர் ஒருவர் ‘இங்குள்ள பழங்குடி மக்களில் பலருக்கு உடலில் வாழத் தேவையான அடிப்படைச் சத்துக்கள் கூட இல்லாததால் ‘பற்றாக்குறை எய்ட்ஸ்’(Nutritional AIDS) என்ற வியாதியால் பலர் இறந்து போகிறார்கள் என்று கூறினார். ஆனால் நகரத்தில் வசிக்கும் நடுத்தர வர்க்கமாகிய நாமோ இது பற்றி எந்த அக்கறையுமில்லாதவர்களாக வாழ்கிறோம். ’என்னிடம் ஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டார் ‘இந்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர் யார்?’ என்று. அதற்கு நான் சொன்ன பதில் ‘இந்தியாவின் சுயநலமான நடுத்தர வர்க்கம்’(middle class). இந்நடுத்தர வர்க்கம் தான் தேசியம், நாட்டுப் பற்று என்று பேசி இயற்கை வளங்களை ‘தொழில் வளர்ச்சி’ என்கிற பெயரில் ஏகாதிபத்தியங்கள் சுரண்டுவதை ஆமோதித்து வரவேற்கிறது.

இந்தக் கம்பெனிகளுக்கு ஆதரவாக மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்க விமானப் படை தாக்குதல் நடத்தப் போவதாகப் பேசும் ப.சிதம்பரம் முன்பு என்ரான் மற்றும் வேதாந்தா சுரங்கக் கம்பெனிகளுக்கு வக்கீலாக இருந்தவர்; அக்கம்பெனிகளில் போர்டு டைரக்டராக இருந்தவர். காஷ்மீரில் இதுவரை கொல்லப்பட்ட மக்கள் 98000 பேர். நாடிழந்து, காணாமல் போனவர் எத்தனையோ. இதே போல ஈழத்தில் சென்ற வருடம் இந்தப் போரை நடக்க அனுமதித்து அமைதியாக படுகொலைகளை வேடிக்கை பார்த்த தவற்றை தமிழர்களாகிய நீங்கள் செய்திருக்கிறீர்கள். இந்திய அரசின் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான கொள்கை என்ன ? அழித்தொழிப்பு (Annihilation) தான். 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட பாக்சைட் மலைகளை நீங்கள் அப்படியே விட்டுவிட விரும்புவீர்களா ? அங்குள்ள அருவி நீர் வளத்தை நீங்கள் அப்படியே விட்டுவிடுவீர்களா ? அங்குள்ள காடுகளில் உள்ள மரங்களை நீங்கள் வெட்டாமல் விட்டுவிடுவீர்களா ? பழங்குடியினரையும் மாவோயிஸ்டுகளையும் அப்படியே விட்டுவிடுவீர்களா ? சொல்லுங்கள்.

இந்த மலைகளைக் குடைந்து சுரங்கம் தோண்டி பாக்ஸைட் தாது வளங்களை அள்ளி எடுக்க டாடா போன்ற இந்தப் பெருங்கம்பெனிகள் அரசுக்கு கொடுக்கும் ராயல்டி கட்டணம் எவ்வளவு தெரியுமா ? ஒரு டன்னுக்கு வெறும் 24 ரூபாய்.
அதிலிருந்து அவர்களின் லாபமோ 50000 ரூபாய். இதே போல இரும்புத் தாதுவும் எடுக்கப்படும். இதைத் தடுக்க தங்களின் இயற்கை வாழிடத்தை பாதுகாக்க எழுந்த பழங்குடியினரின் போராட்டத்துடன் இணைந்து வழிநடத்துவது தான் மாவோயிஸ்ட்டுகளின் போராட்டம். பெரும்பாலான நேரங்களில் மக்களின் போர்த்தந்திரம் ‘தத்துவங்களின்’ அடிப்படையில் தான் அமைந்திருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. சாலையில் காந்தியவாதியான ஒருவர் காடுகளில் மாவோயிஸ்ட்டாக இருக்கக்கூடும். காட்டில் இயற்கையோடு வாழும் ஒருவர் எப்படி ‘வேலைப் புறக்கணிப்பு’ என்று சத்தியாகிரகம் செய்ய முடியும் ? உண்ணாவிரதம் இருக்கமுடியும் ?

தாந்தேவாடாவின் இன்ஸ்பெக்டர் என்னிடம் கொல்லப்பட்ட 16 பேர் புகைப்படங்களைக் காட்டி இவர்கள் எல்லாம் மாவோயிஸ்ட்டுகள் என்று சொன்னார். அவர்களில் பெண்களும் இருந்தனர். நான் புகைப்படத்தை வைத்து இவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என்று நான் எப்படி நம்புவது என்றேன். அதற்கு அவர் இவர்கள் எல்லாம் டெட்டால், டிங்ச்சர் போன்ற முதலுதவி மருந்துகள் வைத்திருந்தார்கள் மேடம். இவை எல்லாம் இவர்களுக்கு எப்படிக் கிடைத்தன ? இவர்கள் மாவோயிஸ்ட்கள் தான் என்றார். மாவோயிஸ்ட்டுகளுக்கான வரையறை எப்படி மாறியிருக்கிறது பாருங்கள். அந்த இன்ஸ்பெக்டர் பேசும் போது சொன்னார். ‘இந்தப் போரில் எப்படி ஜெயிப்பது என்று நம் அரசுக்குத் தெரியவில்லை. இம்மக்கள் எல்லாரும் சுயநலமற்றவரகளாக இருக்கிறார்கள். இவர்களை சுயநலமுள்ளவர்களாக மாற்றினாலே போதும். அதற்கு வீட்டுக்கு ஒரு கலர் டி.வி. கொடுத்தாலே போதுமானது’. அவர் கூற்று எவ்வளவு உண்மை என்பது உங்களுக்குத் தெரியும். ஏனென்றால் இம்மாநிலத்தில் ஒரு பெரும் தலைவர் இதைத்தான் உங்களுக்கு செய்திருக்கிறார் என்று சொன்னார்கள். இச்சுயநலம் தான் நம்மை வெறியாளர்களாக மாற்றியிருக்கிறது. தேர்தல் போன்ற எல்லா ஜனநாயக முறைகளும் எவ்வளவு சீர்கேடாகிப் போய்விட்டன என்பது உங்களுக்குத் தெரிகிறது. பின் ஏன் ஓட்டுப் போடுகிறீர்கள் ? ஓட்டுப் போடாதீர்கள்.

தற்காலத்தில் முதலாளித்துவம் இல்லாத ஒரே சமூகம் பழங்குடியினரின் சமூகம் மட்டுமே. முதலாளித்துவத்தால் இதை சகித்துக்கொள்ள முடிவதில்லை. அதனால் அவற்றை அழித்து நம்மைப் போல் முதலாளித்துவ சிந்தனை கொண்ட நகரங்களாக்கப் பார்க்கிறது. இது தான் ஆப்கானிஸ்தானத்தின் பழங்குடியினருக்கும் நடக்கிறது. இதற்கு எதிராக பழங்குடியினரின் எழுச்சி வெவ்வேறு தத்துவங்களின் கீழ் நடக்கிறது. ஆப்கானிஸ்தானத்தில் தீவிரவாத இஸ்லாமியப் போராளிகளாலும், இந்தியாவில் தீவிரவாத கம்யூனிஸத்தாலும் என வெவ்வேறு விதங்களில் நடைபெற்றாலும் போராட்டம் என்பது ஒன்று தான். எதிரி ஒன்று தான்.

Sunday, May 30, 2010

ஈழத் தமிழருக்கு சி.பி.எம் தரும் ‘சாரிடான்’ மாத்திரை.

ஈழத் தமிழருக்கு சி.பி.எம் தரும் ‘சாரிடான்’ மாத்திரை.

மே 28, வெள்ளிக்கிழமை, மாலை 6 மணி.
இடம்– சென்னை, பூந்தமல்லி ஹை ரோடு, ஆர்யசமாஜம்.

‘இலங்கைத் தமிழர்ப் பிரச்சனைக்கு தீர்வு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் சி.பி.எம்.மின் இந்தியப் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் பேசப்போகிறார் என்ற விளம்பரம் தீக்கதிரில் படித்ததும் வந்து சரியாக 6 மணிக்கு ஆஜராகி நின்றோம்.

ஆர்யசமாஜம் இருந்த தெருவில் இருபுறமும் மார்கசிஸ்ட் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. தோழர்கள் ஆறுமணியிலிருந்தே வரத் தொடங்கிவிட்டனர். பத்திரிக்கையாளர் கூட்டமும் நின்றது. சுமார் ஆயிரம் பேர் கொள்ளளவு கொண்ட உள்ளரங்கில் இருக்கைகள் போடப்பட்டு பழங்காலத்து காதல் பாடல்கள் ஸ்பீக்கரில் மெலிதாக ஒலித்துக்கொண்டிருந்தன. தோழர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து வணக்கம் சொல்லுதலும், அளவளாவுதலும் ஆங்காங்கே நடந்துகொண்டேயிருந்தது. எங்களுடன் வந்த கல்லூரி நண்பர் ஒருவர் பிரபாகரன் படம் போட்ட டி.சர்ட் அணிந்திருந்தார். அவ்விடத்தில் அவரை கடந்து சென்ற எல்லாரும் லேசாக திரும்பிப் பார்த்தபடி சென்றனர். அப்போது ஒரு சி.பி.எம் தோழர் அவரிடம் வந்து சட்டையில் இருந்த பிரபாகரனின் போட்டோவைக் காட்டி “யார் இவர்?” என்று நக்கலாகக் கேட்டார்.

6.30 மணியளவில் பிரகாஷ் காரத் (சிறப்புரை), சத்தியமூர்த்தி(இலங்கை பத்திரிக்கையாளர்), டி.கே.ரங்கராஜன் (தலைமை) என்று அனைவரும் ஒன்றாக ஹாலுக்குள் நுழைந்தனர். கூட்டம் ஆரம்பமானது.

முதலில் பேசியவர் டி.கே.ரங்கராஜன். ஆரம்பித்தவர் “ஈழப் பிரச்சனை முடிவடைந்து ஒரு வருடம் ஆகியும்” என்றவர் பின் கொஞ்சம் சுதாரித்து “போர் முடிவுக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் இன்னும் அங்கிருக்கும் தமிழ் மக்கள் முகாம்களில் சிறைப்பட்டிருக்கிறார்கள். இலங்கை அரசு உடனே ஆவண செய்து அவர்களை மீள்குடியமர்த்தி ‘ஒன்றுபட்ட இலங்கை’யில் அவர்களின் வாழ்வுரிமைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்” என்றார். இரண்டாவது முறையும் 'ஈழப் பிரச்சனை முடிவடைந்து' என்று கூறிவிட்டு பின் திருத்திக் கொண்டார். விடுதலைப்புலிகள் செத்தவுடன் ‘பிரச்சனை’யும் முடிந்துவிட்டதாகக் கருதுவது தான் இவர் போன்ற தலைவர்களின் கருத்து என்றால் மற்றவர்களின் கதி ? இனவாதப் போரில் ஈடுபட்ட கடைசி 3 மாதங்களில் மட்டும் 30 ஆயிரம் மக்களை கொன்று குவித்த இலங்கை அரசை ‘போர்க்குற்றவாளி’ எனத் தீர்ப்பளித்த மனித உரிமை தீர்ப்பாணயம் இவர்கள் கண்ணிலே எப்படிப் படாமலே போனது. மாலைக்கண் வியாதியோ ?

அடுத்ததாகப் பேசியவர் சத்தியமூர்த்தி என்கிற ஈழத்துப் பத்திரிக்கையாளர். இவர் ‘வடக்கு வசந்தம்’ என்கிற இலங்கை அரசின் புதிய திட்டத்தை ஆதரித்தவர் என்கிறார்கள். அவர் சொன்ன முதல் விஷயம் இலங்கையின் 235 எம்.பி.க்களில் 46 பேர் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்கள், ஒருவர் மட்டும் சிங்களர். இந்த 46 பேர்களிடையே ஒருமித்த கருத்து என்ற ஒன்று இல்லை. எல்லாம் 16 பிரிவுகளாக பிரிந்து ஒற்றுமையில்லாமல் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இருந்தால் தமிழருக்கு என்ன நீதி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது ? இரண்டாவது விஷயம் இங்கிருக்கும் அரசியல் சக்திகள் இடது சாரிகளும் சேர்த்து அங்கிருக்கும் முற்போக்கு சக்திகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்களா ? இருந்தார்களா ? இனிமேலாவது இருப்பார்களா?. அவர் வேறு எதுவும் விரிவாகப் பேசவில்லை. தமிழ்ச் சக்திகள் வேறு வேறாக நின்றால் கூட அனைவரும் ஒருவரை ஒருவர் ஆதரித்துக்கொள்ள வேண்டுமே தவிர உள்ளுக்குள் அடித்துக் கொண்டு எதிராளியை பலமானவனாக மாற்றக் கூடாது என்று வலியுறுத்தினார்.



முதலில் பேசிய டி.கே.ரங்கராஜனும், சத்தியமூர்த்தியும் ஆளுக்கு பதினைந்து, பதினைந்து நிமிடங்கள் பேசி அமர்ந்து விட இறுதியாக பேச வந்தார் பிரகாஷ் காரத். அவர் பேச்சை உடனுக்குடன் மொழிபெயர்ப்பு செய்ய ஒருவரும் உடன் நின்றார். சரிதான் அக்குவேறாக் ஆணிவேராக பிரச்சனையை அலசப் போகிறாரோ என்று நினைத்தபடி கேட்டால் பிரகாஷ் காரத் பேசியது மேலும் அபத்தமானதாக இருந்தது. முதலில் முன்னர் பேசிய சத்தியமூர்த்திக்கு பதில் கொடுக்கும் வகையில் நாங்கள் 1980களிலிருந்து இலங்கையில் உள்ள அனைத்து கட்சிகளுடன் JVP உட்பட பேசிக்கொண்டுதான் இருந்தோம். 2004ல் இலங்கையில் சிங்கள மக்களின் முன் நடத்தப்பட்ட ஒரு பொதுக்கூட்டத்தில் நான் பேசிய போது இந்தியாவில் இருந்த சமஷ்டி முறை (Federal Setup) இலங்கைக்கு நன்கு பொருந்தும் என்று எடுத்துரைத்தாகவும் தெரிவித்தார். JVP கட்சியுடன் தொடர்ந்து பேசினாலும் அவர்கள் தங்களது இனவாதப் பார்வையை விடாதிருந்ததால் அவர்களுடனான தொடர்பு அறுந்துவிட்டது என்றார். அதைத் தவிர மற்றைய தமிழ்க் கட்சித் தலைவர்களுடனும் பேசியதாகவும், ஜனநாயக ரீதியாக போராட அவர்களும் இசைந்ததாகவும், ஆனால் அவர்கள் எல்லாம் புலிகளால் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். சிங்கள அரசு பெரும்பான்மை இனவாதமும், புலிகள் சிறுபான்மை பிரிவினைவாதமும் பேசியதால் நடைபெற்ற இந்தப் போரில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்றார். அதாவது சுருக்கமாக சத்தியமூர்த்தி குற்றம் சாட்டியது போல் சி.பி.எம் நிலைப்பாட்டிலும், செயல்பாட்டிலும் பிறழ்வதே இல்லை: தவறே செய்யவில்லை என்று நிரூபித்தார். அதுதானே முக்கியம் முன்னால் உடகார்ந்திருக்கும் சி.பி.எம் பாமரத் தோழர்களுக்கு. 'கட்சி நிலைப்பாட்டில் தவறிழைத்ததில்லை..தவறிழைக்காது' என்று அவர்கள் பரிபூரணமாக நம்ப வேண்டும். அது மிக முக்கியம்.

அடுத்து காரத் இந்தப் போர் நடைபெற்று முடிந்தவுடன் போரில் இடம்பெயர்ந்த மக்களின் புனர் வாழ்விற்கு உடனடியாக இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்தோடு முடித்திருந்தால் பரவாயில்லை. “இந்தியா ஒரு இறையாண்மை மிக்க நாடு. இலங்கையும் இறையாண்மை மிக்க நாடு. இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க இந்தியா உதவியது. எனவே இந்நிலையில் வரும் ஜூன் 8ஆம் தேதி பிரதமரை சந்திக்க வரும் ராஜபக்சேவை மக்களின் புனரமைப்புப் பணிகளை உடனே செய்யும் படி வற்புறுத்தவேண்டியது இந்தியாவின் உரிமை கூட” என்றார். போரே மிகக் கொடூரமான இன அழிப்புப் போர் என்று எல்லோரும் கூக்குரலிட்டுக்கொண்டிருக்க நம்ம தோழர் காரத் அதற்கு உதவி செய்தது இந்தியாவின் சட்டபூர்வ உரிமை(Legal Right) என்கிறார். நாம் எங்கே போய் முட்டிக்கொள்வது ? செத்துப் போன பல்லாயிரக்கணக்கான மக்களுக்கான நியாயம் என்ன ? சி.பி.எம்முக்கு கவலையில்லை என்பது தான் உண்மை. அதன் மேல்மட்டத் தோழர்களிடம் பேசுங்கள். இந்த மனப்பான்மை அப்படியே மாறாமல் தெறிக்கும். பின்னர் வழக்கமான பொத்தாம் பொதுவான வார்த்தைகள். "இலங்கையில் இருக்கும் முற்போக்கு, ஜனநாயக சக்திகளை ஒன்று சேர்த்து தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராட முயற்சிகள் செய்யவேண்டும்".

அவ்வளவுதான் முடிந்தது காரத்தின் உரை. முப்பது நிமிடங்களில். அதில் சரிபாதி நேரம் அதை மொழிபெயர்ப்பவர் எடுத்துக் கொண்டார். என்றால் வெறும் பதினைந்து நிமிடங்களில் பிரகாஷ் காரத் இலங்கைத் தமிழருக்கான தீர்வை வழங்கிவிட்டார். தலைவலியோ, மூக்கடைப்போ, ஈழத் தமிழர் பிரச்சனையோ, ஒரு சாரிடான் போடுங்கள்; பதினைந்தே நிமிடங்களில் வலி பறந்துவிடும். காரத் பறக்கடித்துவிடுவார்.

பின் வரும் கேள்விகள் எனக்கு எழுகின்றன.

1. உத்தப்புரத்தில் சாதிக் சுவர் கட்டி, கொடுமைப் படுத்தி, அங்கு வாழ்ந்த இருநூறு தலித் மக்களை ஓடஓட விரட்டி அடித்தது காவல்துறை என்று சாடி ஆர்ப்பாட்டம் செய்யும், காரத்தை நேரடியாக அழைக்கும், கோர்ட்டில் போராடி வந்த தீர்ப்பு வரை ‘ஆவணப்படம்’ எடுக்கும் சி.பி.எம்மின் ‘மனித நேயம்’ தமிழ் மக்கள் அங்கே பல்லாயிரக் கணக்கில் இலங்கையில் கொத்துக் கொத்தாக செத்தபோது, கற்பழிக்கப்பட்ட போது,ரசாயனக் குண்டுகளால் கருகிய போது, அதைத் தடுத்து நிறுத்த என்ன என்னவெல்லாம் செய்தது ?

2. அமெரிக்காவே போ..போ.. கியூபாவை நசுக்காதே.. இந்தியாவுடன் ஒப்பந்தம் போடாதே என்று அமெரிக்காவை, புஷ்ஷை எதிர்த்து அமிஞ்சிக்கரையில் கூட்டம் போட்டு நேருக்கு நேர் ஒபாமாவையே மேடையில் 'தில்'லாகக் கேட்க முடிந்த உங்களுக்கு, பாலஸ்தீனத்திற்கு உதவிப் பொருட்கள் ஏற்றிச் சென்ற கப்பலை மறித்துப் பிடித்த இஸ்ரேலை அடுத்த நாளே அத்தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி கண்டிக்க முடிந்த உங்களுக்கு, இலங்கையையும், ராஜபக்சேவையும் வலியுறுத்த மட்டும் ‘இறையாண்மை’ வெட்கம் வந்து தடுப்பதன் ரகசியம் என்ன ? அதற்கு மட்டும் இந்திய அரசையும், மன்மோகனையும் நீங்கள் தூதனுப்பி கேட்டுக் கொள்வதன் அர்த்தம் என்ன ? இங்கிருந்து சற்று உரக்கக் கத்தினாலே கூட ராஜபக்சேவுக்கு நம் குரல் கேட்குமே ? ஏன் இதே போல ஈழத்தமிழர்களுக்கு தாய்மண் என்கிற பெயரில் கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட உணவுப்பொருட்கள் இலங்கையால் திருப்பி அனுப்பப்பட்டு சென்னை துறைமுகத்தில் அல்லாடியதே அப்போது எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தீர்களா ?

3. ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் ஊற்றுவது முதல் ஊழல் பல புரிந்த, திமுக ரவுடிகளை தட்டிக் கேட்டதற்கு, அரசியல் பகையால் வெட்டிக் கொல்லப்பட்ட கவுன்சிலர் லீலாவதியின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தி உருக முடிந்த உங்களுக்கு, பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும் மக்களையும், அதற்கு நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் போடும் சோனியாவையும், மேனன்களையும், நம்பியார்களையும் கருணாநிதியையும் அம்பலப்படுத்தி தமிழ் மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்ப தன் உயிரை எரித்துக்கொண்டானே முத்துக்குமரன், அவனது தியாகம் எந்த விதத்தில் குறைந்தது ? அவனுக்கு அஞ்சலி என்று ஒரு அறிக்கை விடமுடியாத அளவுக்கு இளம் DYFI தோழர்கள் கூட சொரணையற்றுப் போனார்களா ?

4. விடுதலைப் புலிகளுடன் சி.பி.எம் சார்பாக என்றாவது பேசினீர்களா ? அதன் பலன் என்ன என்று வெளியே அறிக்கை விட்டீர்களா ? அட்லீஸ்ட் மாவோயிஸ்ட்டுகளிடமாவது பேசுவீர்களா ? ப.சிதம்பரம் தான் பேசவேண்டும் என்று என்ன தலையெழுத்து ? இல்லையில்லை ஆயுதத்தை வைத்திருப்பவன் கூடவெல்லாம் பேசமாட்டோம் என்றால் CRPFம் இலங்கை-இந்திய ராணுவங்களும் கையில் பூச்செண்டுகளோடா லால்காரிலும், யாழ்ப்பாணத்திலும் நடந்து போனார்கள் ?

5. ஈழப்பிரச்சனையில் 'ஈழம்' என்கிற வார்த்தை கூட அவர்களுக்கு தனிநாடு கேட்பதாக அமையும் என்று அந்த வார்த்தையைக் கூட பயன்படுத்தாமல் 'இலங்கை' என்று கவனமாகக் கூறும் நீங்கள், கேட்டால், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றிப் பலவாறாக வியாக்கியானங்கள் கூறுகிறீர்கள். இஸ்ரேலை தனி நாடாக்கியது அமெரிக்காதான். அப்படி இல்லாவிட்டால் அது பாலஸ்தீனத்தின் ஒரு பகுதிதான். அமெரிக்கா இஸ்ரேலைப் பிரித்தால் அது உங்களுக்குப் பிரச்சனையில்லை. ஆனால் புலிகள் தனிநாடு அட அட்லீஸ்ட் சுயநிர்ணய உரிமையுள்ள பிரதேசம் அந்தஸ்து கேட்டால் உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை? பிரபாகரன் எத்தனையோ பேரை கொன்றவர் தான். ஸ்டாலின் கொல்லாமல் இருந்தாரா ? ஸ்டாலினை பயங்கரவாதி என்று நீங்கள் சொல்வீர்களா ?

இதற்கு சி.பி.எம் நண்பர்களின் பதில் 'சிறு நாடுகளாய் பிரிந்தால் ஏகாதிபத்தியம் எளிதில் வசப்படுத்தி அடிமையாக்கிவிடும். எனவே, நாடுகளைப் பிரிக்காமலிருப்பது முக்கியம்'. இலங்கை மொத்தமாகவே ஏற்கனவே அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் அடிமைதான். இதில் தமிழ் ஈழம் என்பது உயிர் போகும் பிரச்சனை அல்லவா ? என்றைக்கோ வந்து அடிமைப்படுத்தப் போகும் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதா ? இல்லை இந்தக் கணத்தில் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து வெடித்துக் கொல்லும் சிங்களவனை எதிர்ப்பதா ? எது சாத்தியம் ? எது முக்கியம் தோழர்களே ?

இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு நேரடியாக வந்து டயோட்டா கார் கம்பெனிக்காரன் கலைஞரிடம் MOU போட்டு ஏரியாவை வளைத்துப் பிடிக்கிறான். இதை எதிர்க்க தமிழ்நாட்டு சி.பி.எம் என்ன செய்தது ? (ஹுயூண்டாய் கம்பெனிக்காரன் தொழிலாளர்களை சுரண்டுவதைத் தடுக்க போராடி தொழிற்சங்கம் வைத்தது பெரிய முயற்சி .. எனினும்) தமிழ்நாடு தனிநாடாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் டயோட்டாக்காரனும், நோக்கியாக்காரனும் வராமலா இருப்பான் ? ஈழத்துப் பிரச்சனையில் மட்டும் 1983ன் பின் உங்கள் நிலைப்பாடு மாறவேயில்லையே ஏன் ? இந்த 30 ஆண்டுகள் நடைபெற்ற ஈழப்போராட்டத்தை வெறும் 'புலிகள் பயங்கரவாதிகள்' என இந்திய-சிங்கள அரசுகள் போல் சொல்லி நீங்களும் முகத்தைத் திருப்பிக் கொண்டால் நீங்கள் உண்மையில் யார் பக்கம் ?

சிந்தியுங்கள் தோழர்களே. உங்கள் போக்கில் மாற்றம் வேண்டுமா ? அல்லது உங்கள் தலைமைகள் உங்களை வேண்டுமென்றே திசை திருப்புகிறார்களா ? ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை (Genocide) என்று இந்தக் கூட்டத்தில் பிரகாஷ் காரத் உட்பட எல்லா சி.பி.எம் தோழர்களும் கவனமாக ஒரு இடத்தில் கூட வார்த்தை உபயோகிக்காதது ஏன் ? (நீங்கள் அழைத்த விருந்தினர் சத்தியமூர்த்தி கூட இனப்படுகொலை தான் என்று உறுதியாக பலமுறை சொன்னபோதும்..)