Tuesday, September 22, 2015

இந்தியாவுக்கு அமெரிக்கா 16ஆயிரம் கோடி ராணுவ தளவாடங்கள் விற்கிறதாம்!!

அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் இயற்ற இருக்கிறது. மோடியின் அரசு தமிழர்களைக் கொன்றழித்த இலங்கை ராணுவத்துடன் போர்ப்பயிற்சி செய்ய இருக்கிறது. ஐ.நாவில் அமெரிக்கா இலங்கை்கு ஆதரவாக போடப்படும் தீர்மானத்தை மோடி ஆதரிக்கவிருக்கிறார். இப்போது அமெரிக்காவிற்கு போகவிருக்கிறார் மோடி. அதையொட்டி அந்நாட்டின் போயிங் நிறுவனத்திடமிருந்து பல ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ ஹெலிகாப்டர் ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஓ.கே.செய்திருக்கிறது. பாதுகாப்பு விவகாரங்களுக்கான (சிசிஎஸ்) அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இம்முடிவின்படி அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து  22 அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் 15 சினூக் கனரக ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. 2013-ம் ஆண்டில் மன்மோகன் ஆட்சியிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. மாட்டுச் சந்தை போல விலை நிர்ணயம் தொடர்பாக துண்டு இழுபறி 2 வருடங்கள் நடைபெற்றதால் நடைபெறவில்லை.இப்போது இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ.16,500 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். இந்தப் பயணத்தின்போது போயிங் நிறுவனத்துடன் ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோக இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள், ராடார்கள் மற்றும் மின்னணு போர்த்தளவாடங்களை வாங்குவது தொடர்பாகவும் ஒரு ஒப்பந்தம் அமெரிக்க அரசுடன் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.
இந்தியாவின் ராணுவ தளவாட சந்தையைக் கைப்பற்றுவதற்காக, மத்திய அரசை அமெரிக்கா பல்வேறு வகைகளில் அழுத்தி வந்தது.


கடந்த 10 ஆண்டுகளில், பி-81 ரக கடற்பகுதி கண்காணிப்பு விமானங்கள், சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் மற்றும் சி-17 குளோப்மாஸ்டர்-3 ரக விமானங்கள் வாங்குவது உட்பட ரூ.66 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. இதை யாரைக் கேட்டு யாரிடம் டெண்டர் விட்டுச் செய்தார்கள் ? என்று மக்களாகிய நாம் கேட்க முடியாது. 600 ரூபாய் கேஸ் மானியத்தை விட்டுத் தா என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நடுத்தர மனிதனிடம் கேட்க முடிந்த அரசு, 16 ஆயிரம் கோடிக்கு ஹெலிகாப்டர் எல்லாம் வாங்கித் தானாகவேண்டுமா ? என்றும் கேட்க முடியாது. உடனே பாகிஸ்தான் தீவிரவாதம் என்று கைகாட்டுவார்கள். பாகிஸ்தானுக்கும் இதே அமெரிக்கா ஆயுதம் வழங்குகிறதே என்று யோசிக்கும் அளவுக்கு இங்கிருக்கும் தேசபக்திக் கொழுந்துகளுக்கு அறிவு இருப்பதில்லை.

இதை எதுக்கு இப்போ வாங்குறாங்கன்னு தெரியலை.  இரண்டு வருஷமா அமெரிக்கா இதை விக்க பேரம் பேசிட்டு இருந்தப்பவும் நமக்கு பாகிஸ்தான்ல இருந்து இலங்கை வரைக்கும் எல்லார் கூடவும் எல்லைத் தகராறு, தாக்குதல்கள் தான். இரண்டு வருஷமா இந்த ஹெலிகாப்டர் ஆயுதம் இல்லாம நாம் ஒன்னும் அழிஞ்சு போயிடலை. இனியும் இதை வாங்கி என்ன பண்றது ? ஒருவேளை தற்கொலை செஞ்சுக்கிற விவாசாயிகளை ஒருவேளை வயக்காட்டிலிருந்து தூக்கிட்டு வர்றதுக்காக வாங்குறாங்களோ என்னவோ

Thursday, September 17, 2015

போர்க்குற்றம் நடந்தது உண்மையே !- ஐ.நா. அறிக்கையின் நோக்கம் என்ன?

சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை 16ம் தேதி புதன்கிழமை ஐநா மனித உரிமைகள் ஆணையர் சையத் அல் உசைன் ஆல் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் முக்கிய அம்சம் உள்நாட்டு விசாரணையை மறுதலித்து, மாறாக பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம் மூலம் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதாகும். இது இலங்கைக்கு வைக்கப்படும் நெருக்கடியாகும். ஆனால் இதில் எவ்வளவு தூரம் விஷயங்கள் வெளிவரும் என்பது கேள்விக்குறியே.

இதுதவிர அறிக்கையிலுள்ள மேலும் சில முக்கிய அம்சங்கள்:
இறுதிகட்ட போரின்போதும், போருக்கு முன்பாகவும், அப்பாவி மக்கள், இலங்கை ராணுவத்தாலும், விடுதலை புலிகளாலும் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்தவர்களையும் இலங்கை ராணுவம் கொன்றுள்ளது. தங்களுக்கு எதிராக செயல்பட்டோரை விடுதலை புலிகள் கொன்றுள்ளனர். இதில் தமிழ் அரசியல் தலைவர்களும் அடங்குவர். இரு தரப்பிலுமே மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. போர் முடிந்து இத்தனை வருடங்கள் ஆகியும், ஒருவர் கூட போர்க்குற்றத்திற்காக இலங்கையில் தண்டிக்கப்படவில்லை.

இலங்கை ராணுவ வீரர்கள், தங்களால் கைது செய்யப்படும், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதிராக பலாத்காரங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, இறுதி போர் முடிந்த பிறகு, இலங்கை ராணுவத்தினர் அதிக பாலியல் குற்றங்களில் ஈடுட்டுள்ளனர். இந்த பாலியல் பலாத்காரங்களை, ஒரு தண்டனை முறையாக செய்திருக்கின்றனர். விடுதலை புலிகளோடு தொடர்புள்ளவர்கள் என்று தெரிந்தால் அவர்களை இழிவுபடுத்தும் செயலாகவும் ராணுவம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அச்சம், வெட்கம் போன்ற காரணங்களால், பாதிக்கப்பட்டோர் தங்களது பாதிப்பு குறித்த முழு விவரத்தையும் தெரிவிக்காததால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை முழுமையாக கண்டறிய முடியவில்லை. ஆனால் பெருமளவில் இக்குற்றங்கள் நடந்துள்ளன. இசைப்பிரியா, பாலச்சந்திரன், நடேசன் போன்றோரை சிங்கள ராணுவம் படுகொலை செய்தது தெளிவாகியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறி, இலங்கை ராணுவத்தினர் பாலியல் பலாத்காரங்களில் ஈடுபட்டுள்ளனர். சில பலாத்காரங்களும், அதையொட்டிய டார்ச்சர்களும், மனித குலத்திற்கே எதிரான அளவுக்கு மோசமாக இருந்துள்ளன.

'வெள்ளை வேன்' கலாசாரம் என்று அந்த நாட்டில் அழைக்கப்படும், ஆள் கடத்தலும், அதைத்தொடர்ந்த சித்திரவதைகளும் நின்றபாடில்லை. உலக அளவில் அதிக பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ள நாடு இலங்கை. ஐ.நா. ஆய்வாளர்கள் நேரில் சென்று விசாரணை நடத்த இலங்கை அனுமதிப்பதில்லை. இவ்வாறு அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதையொட்டி தமிழக சட்டசபையில் ஈழப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை கோரி ஏகமனதாக அனைத்துக் கட்சிகளின் ஆதரவில் தீர்மானம் இயற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அமெரிக்காவின் இந்த அறிக்கை மிகுந்த நேர்மையோடு விஷயங்களைப் பட்டியலிடுவது போலத் தோன்றினாலும் இதன் உண்மையான போக்கை அனுமானிக்க வசதியாக உள்ளது.

இந்த அறிக்கையில் அமெரிக்கா தற்போதை சிரிசேனாவின் அரசை பாராட்டியிருக்கிறது. அதே சமயம் முந்தைய அரசு போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டது எனக்குறிப்பிடுகிறது. இது ஈழப்படுகொலைகள் அத்தனைக்கும் ராஜபக்சேவை மட்டும் கட்டம் கட்டி காட்டிவிட்டு பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் தமிழர் X சிங்களர் இனப்பிரச்சனையை வெறும் போர்க்குற்றமாகச் சுருக்கி முடிக்கிறது. விடுதலைப் புலிகள் விடுதலைப் போராளிகளாகக் கருதப்படாமல் போர்க்குற்றம் புரிந்த ஒரு தீவிரவாதக் குழுவாகவே காட்டப்படுகிறார்கள். ஜெயவர்த்தனேயிலிருந்து தற்போதைய ரணில் வரை அனைவரும் தமிழனத்திற்கு எதிராக அநீதியாகச் செயல்பட்டவர்களே !

இந்த விசாரணையில் தமிழர்களை அழித்ததில் இந்தியாவின், அமெரிக்காவின் மற்றும் சீனாவின் பங்கும் மறைக்கப்படும். இதில் நிலைநாட்டப்படுவது அமெரிக்காவின் நீதியாக மட்டுமே இருக்கும். தமிழர்கள் கிடைத்த நீதியை வைத்து சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். தமிழினம் இலங்கையில் அமைப்பு ரீதியாக அழிக்கப்படுவதை இந்த அறிக்கையும் அதன் விளைவுகளும் கண்டுகொள்ளவே போவதில்லை.