Wednesday, April 9, 2014

பாராளுமன்றத் தேர்தலில் தமிழீழம்

தமிழினத்திற்கு விரோதியாக தமிழனையே நிறுத்துவதுதான் 60 ஆண்டுகளாக சிங்களர்களின் ராஜதந்திரமாக இருந்து வருகிறது. அதில் இன்னும் ஒருபடி மேலே போய் ஷோபாசக்தி, லீனா மணிமேகலை, சந்தோஷ் சிவன் என்று தமிழ்நாட்டு சினிமாத் துறையினரையும் உசுப்பேற்றியுளளார்கள். சந்தோஷ் சிவனின் டெரரிஸ்ட், தற்போது வெளிவந்த இனம், லீனாமணிமேகலை - ஷோபா சக்தி இணைந்து எடுத்த செங்கடல் போன்ற படங்கள் இதற்குச் சான்று.

ஈழத்திலும் அப்படி சிங்களவர்களை அடிதாங்கி நிற்கும் தமிழர்கள் பலரைப் பார்க்கலாம். கொழும்பு, மலையகம், தெற்குப் பகுதி போன்ற சிங்களர்கள் பகுதியில் வாழும் தமிழர்கள் பெரும்பாலும் இந்த மனப்போக்கை கொண்டிருப்பார்கள். இப்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அந்தப் போக்கு உருவாகி வருகிறது. சோத்துக்கும், இடத்துக்கும் சிங்களன் தான் கருணைகாட்ட வேண்டும் என்கிற நிலை வரும்போது இந்தக் கேவலங்கள் நிகழுவதை என்னவென்று சொல்ல?உதாரணமாக சமீபத்தில் நடந்த தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழப் பிரதிநிதிகள் ராஜபக்சேவின் கையால் பதவிப் பிரமாணம் ஏற்றதில் உச்சிகுளிர்ந்து நின்றதைச் சொல்லலாம்.

முத்தையா முரளிதரன் போன்ற விஐபிக்கள் இலங்கை அரசுக்கும் அதன் ராணுவத்துக்கும் ஆதரவாக பெரும் பிரச்சாரமே செய்து வருகிறார்கள். இவர் தமிழன் தான். ஆனால் தமிழர்கள் யாராவது ஆட்டோகிராப் கேட்டால் கூட அலட்சியமாக இருப்பாராம். தன் வாழ்நாளில் இதுவரை ஒருமுறை கூட தமிழர்கள் பட்ட துயரத்துக்காக ஒரு வார்த்தை உதிர்த்தில்லை. ஜாலியாக கிரிக்கெட் விளையாடி சம்பாதித்துக்கொண்டே இருந்தார். இலங்கையின் தமிழினப் படுகொலையை மூடி மறைப்பதில் முரளிதரன்களின் பங்கு அபாரமானது! வடக்கு இலங்கையில் உண்மையில் என்ன நிலை நிலவுகிறது.. அங்குள்ள மக்கள் உண்மையாகவே சுதந்திரமாக இருக்கிறார்களா என்று அறிய தன்னிச்சையாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் யாழ்ப்பாணம் பகுதிக்குச் சென்று வந்த பின், இந்த முத்தையா முரளிதரனையும் ஒரு தமிழர் என்ற முறையில் சந்தித்தார்.

அப்போது தமிழர் நிலை பற்றி முரளிதரன் "என்னைப் பொருத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக பிரச்சினைகள் இருந்து வந்தன. அதிலிருந்து அகல முடியவில்லை யாராலும். போர்க்காலத்தில் ஐநா பிரதிநிதிகளுடன் நானும் அந்தப் பகுதியைப் பார்த்திருக்கிறேன். மக்களுக்கிடையிலான உணர்வுகளை நேர்ப்படுத்தும் பாலமாக கிரிக்கெட் இருக்கிறது. ஆனாலும் வசதிகள் வேண்டும். இப்போது சாலைகள் போடப்பட்டுள்ளன, பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. வர்த்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. வடக்கு முன்னேறி வருகிறது. இலங்கை ராணுவத்துக்கு நன்றி. இவையெல்லாம் நடக்க பெரும் முயற்சிகள் எடுத்தவர்கள் ராணுவத்தினர்தான். இந்த நாட்டில் 20 மில்லியன் மக்கள் உள்ளனர். வடக்கில் ஒரு மில்லியன் மக்கள்தான். ஆனால் இப்போது மற்றவர்களை விட அவர்கள் மட்டும்தான் கூடுதல் கவனம் பெற்றுவருகின்றனர்!" என்று மிகுந்த அப்பாவி போல் பேசியிருக்கிறார்.

தனி ஈழம் குறித்தும் அதன் விடுதலை குறித்தும் பாஜக கட்சியின் போடும் இரட்டை வேடம் மிக வெளிப்படையானது. தமிழ்நாட்டில் தெற்கே போகப் போக இவர்களுக்கு ஈழ ஜூரம் அடிக்கும். வடக்கே போகப் போக 'யாரது ஈழத்தமிழர்கள்?' என்பார்கள். அக்கட்சியின் சிவகங்கை வேட்பாளர் எச்.ராஜா சமீபத்தில் பேட்டியொன்றில் ராஜபக்சேவை இந்தியாவுக்கு வரவேற்றதில் என்ன தவறு என்று கேட்டிருக்கிறார். இனவெறி மிக்க ராஜபக்சே மத்தியப் பிரதேசத்தில் உள்ள புத்தர் கோயிலுக்கு சென்ற ஆண்டு வந்தபோது சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை வழங்கியவர் பாஜகவின் முதலமைச்சர். அப்போது அதை எதிர்த்து மத்தியப் பிரதேசம் வரை போய் முழங்கிய வைகோ அண்ணன் தான் இப்போது அதே பாஜக கூட்டணியில் அவர்களுக்கு ஆதரவாக முழங்குகிறார்.

உங்கள் கூட்டணியிலுள்ள வைகோவின் தேர்தல் அறிக்கையில் தனி ஈழம் பற்றி இருக்கிறதே அது பற்றி சொல்லுங்கள் என்று எச்.ராஜாவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது.."பா.ஜ.க வைப் பொருத்தவரை ஒரு நாட்டை பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பேச்சு வார்த்தையின் மூலம் தான் தீர்வு காண முடியும். என்பது எங்கள் நிலை. சம தர்மம், சம உரிமை என்பது தான் எங்கள் கொள்கை. ஆனால் 2004 வரை பேச்சுவார்ததைகள் தான் நடந்து வந்தது. அதன் பிறகு சோனியா காந்தி தலைமையில் வந்த ஆட்சி தான் ராணுவத்தை அனுப்பியது. இலங்கை ராணுவத்துடன் இந்திய ராணுவமும் அனுப்பப்பட்டது. அதனால் தான் கோத்தபய ராஜபக்சே இது இந்திய போர் என்று சொன்னார்."

கலைஞரோ முள்ளிவாயக்கால் படுகொலையின் போது இங்கிருந்து உண்ணாவிரத நாடகமாடி தன் முகத்திரையை கிழித்துக் கொண்டார். ஜெயலலிதாவோ தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கும் மறைமுக எண்ணத்தில் பாஜகவை எதிர்த்தே பேசுவதில்லை. வைகோ, ராமதாஸ், திருமாவின் வீர உரைகள் என்னவானதென்று நமக்குத் தெரியும். கம்யூனிஸ்ட்டுகளோ தீவிரவாதம் என்ற ஒரு சொல்லில் சிங்களர்களின் அனைத்து அரசு பயங்கரவாதங்களையும், இனப்படுகொலையையும், மறைக்கும் அறிவு ஜீவிகள்!!. அவர்களுக்கு அது அமெரிக்கா சொல்வதுபோல் ஒரு போர்க்குற்றம் மட்டுமே. மொத்தத்தில் தேர்தலில் தமிழர்கள் ஈழத்தை ஆதரிப்போருக்கு என்று வைத்துப் பார்த்தால் நிற்கும் எல்லோரும் அயோக்கியர்களே என்பது தெளிவாகும்.

முரளிதரன், டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற தமிழர்கள் இருக்கிறவரை தமிழினம் கேவலமாய்ச் சாகும் நிலை மாறப்போவதில்லை. இந்தியாவை மாற்றி மாற்றி ஆளும், தமிழர்களை தன்னுடைய நாட்டு இனமாகக் கருதாத காங்கிரஸூம், பாஜகவும் தமிழர்களை ஈழத்தில் அழிக்க வகையாக துணைபோகும் என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தேர்தலுக்குப் பின்தான் தமிழர் நிலைக்கு ஏதாவது வழியிருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

Tuesday, February 25, 2014

ஒரு ஊரில் ஒரு கார் இருந்தது..

 
தமிழில் குறும்படங்களினால் மிளிர்ந்த புது இயக்குனர்கள் சினிமாவிலும் நுழைந்து சிக்ஸர் அடித்திருப்பதை நிரூபிக்க வந்திருக்கும் இன்னொரு படம் இது. பண்ணையாரும் பத்மினியும் என்கிற பெயரில் வெளிவந்து பாராட்டுக்களையும், பரிசுகளையும் பெற்ற குறும்படமே அதே பெயரில் படமாக அழகாக விரிந்திருக்கிறது. படம் வசூலில் சிக்ஸர் அடித்ததா ? தெரியவில்லை. ஆனால் நுட்பமான உணர்வுகளைத் தொடுவதில் ஒரு ஹாட்ரிக் சிக்ஸர் அடித்திருக்கிறது இந்த ப.ம்.ப.ம்.

கார் என்பது ஆடம்பரத்துக்கான ஒரு அடையாளம். அதுபோக போக்குவரத்து தேவையை தீர்க்கவும் பயன்படும் வாகனம். அந்தக்கால பியட் பத்மினி காரொன்று ஒரு கிராமத்தில் ஈரமனதுள்ள பண்ணையார் ஒருவரின் வீட்டில் வந்து சேரும்போது அதன் ஆடம்பர அடையாளத்தைத் தாண்டி அந்தக் காரின் மீது கிராம மக்கள் முதல் பண்ணையாரின் வீட்டு மனிதர்கள் வரை கொள்ளும் ஈடுபாடு தான் படத்தின் கதையின் அடிப்படை. ஜெயப் பிரகாஷ் தான் கிராமத்துப் பண்ணையார். அவர்தான் கிராமத்துக்கு வந்த முதல் ரேடியோ, முதல் டெலிபோன், முதல் டி.வி., முதல் டாய்லெட் என்று எல்லா அறிவியல் கண்டுபிடிப்புக்களையும் அவர்களுக்கு அறிமுகம் செய்பவர். அத்தோடு அவற்றை கிராம மக்கள் தங்களிஷ்டம் போல உபயோகிக்கவும் அனுமதிக்கும் பரந்த மனதுள்ளவர்.

அவரிடம் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த அவரது நண்பரொருவர் ஒரு பியட் காரை கொஞ்சநாள் இருக்கட்டும் என்று விட்டுச் செல்கிறார். திடீரென்று கிராமத்தில் ஒரு பையனை பாம்பு கடித்துவிட அதே கிராமத்தில் டிராக்டர் ஓட்டும் முருகேசன் (விஜய்சேதுபதி) டிரைவராக மாறி காரில் பையனை ஓட்டிச் செல்கிறார். அதன்பின் கார் அந்தப் பண்ணையார் மற்றும் ஊர் மக்கள் வாழ்வில் தவிர்க்கமுடியாததாக எப்படி ஆனது என்பது மீதிக் கதை.

படத்தின் இயக்குனர் ஒரு மெல்லிய சிறுகதையை சொல்வதுபோல பல சின்னச் சின்ன விஷயங்களை நகைச்சுவையோடும், உணர்வுபூர்வமாகவும் சொல்லியபடியே செல்கிறார். இழவு வீட்டில் விஜய்சேதுபதிக்கு வரும் காதல், பண்ணையாருக்கும் அவர் மனைவிக்குமிடையே முதிர்வயதிலும் நிற்கும் காதல், பண்ணையாரின் மகளின் சுரண்டல், பண்ணையாருக்கும் மனைவிக்குமிடையே நடக்கும் இரவு உரையாடல், காரைத் தள்ளிவிட விஜய்சேதுபதி செய்யும் ட்ரிக், காரின் முன்சீட்டில் ஏறிவிட ஏங்கும் சிறுவன் என்று படம் நெடுக ரசிக்கும் காட்சிகள் ஏராளம், காரானது பண்ணையார், அவர் மனைவி மற்றும் விஜய் சேதுபதியின் மனங்களில் மெது மெதுவாக நிறைவதை அழகாகச் சொல்லிச் செல்கிறார்.

பண்ணையாரின் பாத்திரப்படைப்பு, இப்படி ஊர்மக்களுடன் ஒன்றி வாழம் ஒரு பண்ணையாரை நாம் பார்க்கமுடியாதா என்கிற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. பண்ணையாராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஜெயப் பிரகாஷ், அவர் மனைவியாக வரும் துளசி, விஜய் சேதுபதி, அவர் காதலி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் (பால சரவணன்)'பீடை'ஆகியோர் நடிப்பில் நம்மை நெகிழ்த்திவிடுகிறார்கள், பண்ணையாரின் மகளிடம் காரைக் கேட்டுவிட்டு அவர் மறுத்து அவமானப்படுத்த கோபம் கொப்பளிக்க திரும்பிச் செல்லும் நடையில் சேதுபதியின் முகம் தெரியாவிட்டாலும் அந்த அவமானத்தையும் கோபத்தையும் உடலசைவுகளிலும், நடையிலும் அழகாக வெளிப்படுத்துகிறார் மனிதர்.

படத்தின் ஒளிப்பதிவு கோகுல் பினாய். ஆர்ப்பாட்டமில்லாத அலுங்காத படத்தின் கதைக்கேற்ற ஒளிப்பதிவு. இசை ஜஸ்டின் பிரபாகர் என்கிற மதுரையைச் சேர்ந்த புதுமுக இசையமைப்பாளர். உனக்காகப் பிறந்தேனே, காதல் வந்தாச்சோ, பேசுறேன் பேசுறேன் என்ற மூன்று பாடல்கள் இதம். பிண்ணணி இசையிலும் அசத்தியிருக்கிறார். படத்தின் பிற்பாதியில் சில இடங்களில் பிண்ணணி இசை கொஞ்சம் டிராமாவாக நீண்டாலும் முதல்படம் என்கிற வகையில் பிண்ணணி இசையில் ஆச்சரியப்படுத்துகிறார். ரவுண்ட் வருவார் என நம்பலாம்.

ஒருவருக்கு சாதாரணமாகத் தோற்றமளிக்கும் அற்ப விஷயங்கள் சமயங்களில் வேறு ஒருவருக்கு மிக முக்கியமான விஷயங்களாக மாறிவிடுகின்றன. ஒரு காரின் மீது ஒரு குடும்பத்து நபர்களுக்கு ஏற்படும் வினோதமான பாசத்தையும், அதில் ஊடாடும் மனித மனங்களின் மெல்லிய உணர்வுகளையும் அழகியலோடும் கலையுணர்வோடும் திரையில் வெளிக்கொணர்ந்திருக்கும் இயக்குனர் அருண் குமார் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர். தமிழில் இதுபோன்ற மெல்லிய உணர்வுகளை பதியவைத்த படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் மலையாளப்படம் போல நல்ல கதையம்சத்துடனும் மலையாளப்படங்களில் இல்லாத நேர்த்தியுடனும் நிற்கிறது ப.ம்.ப.ம்

ப.ம்.ப.ம் பத்து நிமிட குறும்படமாக இருந்தபோது அதில் இருந்த செறிவும் விறுவிறுப்பும் அதே கதை கொஞ்சம் நீட்டப்பட்டு இரண்டுமணி நேரம் சொல்லும்போது இல்லாமல் போனது ஆச்சர்யமல்ல. விசித்திரம் என்ற குறும்படம் வில்லா எனும் சினிமாவாக விரிந்தபோதுகூட இதே பிரச்சனை ஏற்பட்டது. அதுபோக படத்தின் தலைப்பு படத்தின் முக்கிய எதிரியாக மாறியிருக்கிறது. ஏதோ மலையாள கவர்ச்சிப் படம்போல ஒரு ஈர்க்கும் தலைப்பாக வைக்கப்பட்டு அதற்கும் படத்துக்குமுள்ள தொடர்புகூட காட்டப்படவில்லை. படத்தில் எநதவொரு இடத்திலும் பியட் காரை பத்மினி கார் என்றுகூட யாரும் சொல்லவில்லை. பண்ணையார் காரைப் பார்த்ததும், கண்டதும் காதல் போல அதன்மேல் இனம்புரியாத ஈடுபாடு கொள்கிறார். ஆனால் அது தொடர்ந்து வளர்வதற்கான ஒரு வலுவான காரணம் படத்தில் காட்டப்படவில்லை. அது தெளிவாக காட்டப்பட்டிருந்தால் அதைத் தொடர்ந்து பண்ணையாரின் மனைவியின் ஈடுபாட்டையும், விஜய் சேதுபதியின் ஈடுபாட்டையும் ரசிகர்கள் எளிதாக ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கும். அதேபோல படத்தின் மொத்தத்தையும் விவரிப்பதாக வரும் இளைஞனின் ஆரம்ப வர்ணணைகளில் அவன் கார் வாங்கும்போது காரினால் அவனுக்கு சிறுவயதில் ஏற்பட்ட வெற்றிடம் லேசாக குறிப்பிடப்படாததால் படம் முடிவடையும்போது வரும் காட்சிகள் பலமாக பதிய மறுக்கின்றன. ஆனாலும் படம் இவற்றால் சோடை போகவில்லை.

ப.ம்.ப.ம் வசூலைக் குவிக்கிறதோ இல்லையோ தமிழில் குறிப்பிடத்தகுந்த படங்களில் ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம். கவிதைபோன்ற இந்தப் படத்திற்கு வேறு என்ன தலைப்பு இருந்தால் பொருத்தமாய் அழகாய் இருந்திருக்கும் என்று யோசித்தபோது எனக்குத் தோன்றிய பெயர் - 'ஒரு ஊரில் ஒரு கார் இருந்தது'