Monday, November 18, 2013

ஆதலால் காதல் செய்யாதீர்.

இன்றைய சமூகத்து இளைஞர்கள் இன்பம் திளைப்பதில் மட்டுமே நாட்டம் உள்ளவர்களாகவும், சுயநல விரும்பிகளாகவும் இருப்பதை நெற்றியில் அறைந்து சொல்லியிருக்கும் படம். பார்வையாளர்களுக்கு அவர்களது குறைகளை அவர்களுக்கே சுட்டிக் காட்டும்படியாக ஒரு திரைப்படம் அமையும்போது பார்வையாளர்கள் படத்துக்கு எதிரான ஒரு மனோநிலைக்கு வருகிறார்கள். இப்படி எதிர் மனநிலை
கொள்ளவைத்தாலும் அவர்களின் தவறான மனோபாவத்தை இடித்துக் காட்டியதால் அத்திரைப்படம் அவர்களது ஆழ்மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக ஆகிவிடுகிறது.
தமிழில் யதார்த்தத்தை மிகவும் நெருங்கிவிடக்கூடிய அதே சமயம் ரசிக்கக்கூடிய விதத்திலும் எடுக்கப்படும் படங்கள் குறைவு. இயக்குநர்களும் குறைவு. அவை தியேட்டரில் ஓடுவதும் குறைவு. ராஜபாட்டையில் சறுக்கி விழுந்த சுசீந்திரன் மீண்டும் ஆதலால் காதல் செய்வீரில் நிமிர்ந்து நின்றிருக்கிறார்.
அது ஒரு இருபாலர் படிக்கும் பொறியியற் கல்லூரி. கல்லூரி என்றால் காதல் தானே. அங்கே படிக்கும் சந்தோஷூம், மனீஷாவும் முதலில் நண்பர்களாக இருக்கிறார்கள். பின்பு காதலர்களாகிறார்கள். காதலர்களானால் அவுட்டிங் போகவேண்டுமே. காதலியே எப்போ போகலாம் என்கிறாள். சந்தோஷ் மஹாபலிபுரம் என்கிறான். அங்கே போகிறார்கள். மோகமும் காதலில் அடக்கம் இல்லையா ? காதல் கலவியாகிறது. இப்படியே ஆறுமாதங்கள் போனபின் கவனப் பிசகால் மனீஷா கர்ப்பமாகிறாள். அதைக் கலைக்க அவர்கள் அலைவதும் அதன் பிரச்சனைகளுக்கும் முன் காலம் கடந்துவிட, வீட்டிலும் தெரிந்துவிட, வெடிக்கும் பிரச்சனைகள், சுயநலம் மிக்க மனிதர்கள்.. அதன் முடிவுகள்.
படத்தில் நடித்த அனைவருமே நன்கு நடித்திருக்கிறார்கள். படம் இரு குடும்பங்களுக்குள் நடைபெறும் விஷயங்களை ஒரு மூன்றாவது பார்வையாளன் கோணத்தில் சொல்லிச் செல்கிறது. சந்தோஷூம், மனீஷா, மனீஷாவின் தோழி, அம்மா, அப்பாக்கள் என்று யாருமே நடிப்பில் சளைக்கவில்லை. இயக்குனருக்கே இவர்களை நடிக்க வைத்ததன் பாராட்டுக்கள் சேரும். பூர்ணிமா ஜெயராம் நீண்ட நாட்களுக்குப் பின் நடித்திருக்கிறார். ஆனால் அழுத்தமான பாத்திரம் அவருக்கு இல்லை.
படத்தின் காட்சிகள் சுருக்கம் மற்றும் கச்சிதம். வளவளவென்று இழுவை இல்லை. இளைஞர்கள் பெற்றோரை எவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியும், ஏமாற்றுகிறார்கள் என்பதைக் காட்டுமிடத்தில் சுசீந்திரன் ஜெயிக்கிறார். படம் ஒரு விதத்தில் எதிர்மறையானது தான் என்றாலும் இதுதான் இன்றைய மேற்கத்திய கலாச்சாரம் ஊடுருவிய இந்தியா, தமிழ்நாடு. இதை மறுக்கச் சொல்லுங்கள். டாஸ்மாக் வைத்துக் குடிக்கவைத்து மக்களை அழித்து காசு சம்பாதிக்கும் அரசு இருக்கும் ஊரில் வாழும் பிள்ளைகள் மட்டும் சுயநலமில்லாமல் இருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.
படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங் பளிச்.பளிச். யுவன் படத்திற்கு மிகப் பெரிய பலம். அவருடைய ஹிட்டான பாடலை டைட்டில் சாங்காக வைத்து வீணடித்திருக்கிறார் இயக்குநர். (பட்ஜெட் பிரச்சனையோ ?). இன்னும் கவனமாக ஷாட்கள் வைக்கப்பட்டு, கதாபாத்திரங்கள் பிரபல முகங்களாக இருந்திருந்தால் படத்தின் தாக்கம் பெரிதாய் இருந்திருக்கும்.
விதி என்று சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு படம் வந்தது. அதில் மோகனும், பூர்ணிமா ஜெயராமும் இதே மாதிரி காதலிப்பார்கள். அதில் மோகன் ஒரு ரோமியோ டைப். அவர் பூர்ணிமாவை நைச்சியமாகப் பேசி மஹாபலிபுரம் கூட்டிச் சென்று கடலில் விளையாட வைத்து, ஹோட்டலில் ரூம் போட்டு திட்டமிட்டு அவரை வளைத்துவிடுவார். பின்பு பூர்ணிமா கர்ப்பமாகிவிட வில்லத்தனமாகச் சிரிப்பார் மோகன். பூர்ணிமா பின்பு கோர்ட்டுக்குச் சென்று வக்கீல் சுஜாதாவின் உதவியோடு பரபரக்கும் கோர்ட் காட்சிகளோடு மோகனை கோர்ட்டில் ஜெயிப்பார்.
இந்த இரு படங்களுக்கும் நடுவில் இவ்வளவொரு கலாச்சார மாற்றம் ஏற்பட்டிருப்பது சுவராசியமான விஷயமாகும். பழைய படம் கொஞ்சம் நாடகத்தனமானது. புதிய படம் யதார்த்தத்தை நெருங்கி நிற்பது. பழைய படத்தில் காதல் என்பது கல்யாணத்தை நோக்கி என்று வரையறுக்கப்பட்டிருக்கும். புதுப் படத்தில் காதல் காதலுக்காக மட்டுமே. ஜாலியாக இருப்பது காதலின் முக்கிய தொழில். அதில் காமம், உடலுறவு எல்லாம் சகஜம் என்கிற சமூக மனோபாவம் வெளிப்பட்டிருக்கிறது.
மேற்கத்திய பாணிச் சுதந்திரம் சமூக அளவில் மட்டுமின்றி உடலளவிலும் சுதந்திரத்தை தேட விட்டிருக்கிறது நம்மை. உடல் ரீதியான சுதந்திரம் தேவையா இல்லையா? இளைஞர்களால் உடல் ரீதியான சுதந்திரத்தை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த முடியுமா ? எதிரில் நடந்துவரும் ஆணை நிமிர்ந்து பார்ப்பதே குற்றம் என்கிற அளவுக்கு சமூகக் கண்காணிப்பு இருந்த காலத்திலும் இது போன்ற எல்லை மீறல்கள் உண்டு தான். இப்போது கண்காணிக்கவே யாரும் தயாராயில்லாத போது எல்லை மீறல்கள் என்பது யதார்த்தமாகின்றன. சகஜமாகின்றன. வளரும் மகனை, மகளை கண்காணிக்க வேண்டிய அப்பாவும், அம்மாவுமே தங்கள் உடல் தேடல்களை முடித்தபாடில்லாமல் அலைகிறார்கள் இங்கே. உடல் ரீதியான மீறலுக்கும், உள்ள ரீதியான மீறலுக்கும் உள்ள வேறுபாடு பருண்மையானது. சுதந்திரம் பற்றிப் பேசும் எல்லோருமே அதைக் கவனத்தில் கொள்ளத் தவறுகிறார்கள். மனரீதியாக கனவில் தியேட்டரில் பார்த்த நடிகையுடன் சரசமாடலாம். ஆனால் அதுவே நிஜத்தில் நடந்தால் அதன் விளைவுகளே வேறு. இது ஒரு யதார்த்தம்.
சுசீந்திரன் நான் மகான் அல்லவில் இதைப் போன்றேயான ஒரு பிரச்சனையை கையாண்டிருப்பார். இதிலும் அசத்தியிருக்கிறார் மனிதர் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் அந்த க்ளைமாக்ஸ். இந்தப் படம் மட்டும் ஹன்ஸிகா மோத்வானி, சித்தார்த் போன்ற பிரபல முகங்கள் நடித்திருந்தால் பெரிதும் பேசப்படும் படமாக ஆகியிருக்கக் கூடும். பார்வையாளர்களை பெரிய அளவு சலனப்படுத்தியிருக்கவும் கூடும். தாண்டவம் ஆடிய கோரதாண்டவத்தில் பரதேசியாய் சுசீந்திரன் ஆனதால் இப்படி ரசிகர்களை பெரிதும் வசீகரிக்காத புதுமுகங்களை காதல் செய்வீர் என்றிருக்கிறார் சுசீந்திரன். இந்தப் படத்தை பிள்ளைகள்
ஓடவைக்க வாய்ப்பில்லை. பெற்றவர்களே! நீங்கள் ஓடவையுங்களேன்.
இளசுகளே! ஆதலால் இது போன்ற காதல் செய்யாதீர்.

Tuesday, August 27, 2013

தலைவா.. தலைவலியே வா!

இந்தா வர்றேன். அந்தா வர்றேன் என்று 15 நாட்களாய் இழுத்தடித்த தலைவா தியேட்டருக்கு ஒரு வழியாய் வந்தே விட்டது. இதே கேப்பில் இது தியேட்டரை விட்டு ஓடவும் கூடும் என்கிற சந்தேகம் வரத்தான் செய்கிறது. பாரிவேந்தர் கல்லூரி மாணவர்கள் இயக்கம் விடுத்த வெடிகுண்டு மிரட்டல்(? அதெப்படிங்க எந்த தீவிரவாதிகள் குண்டு வைக்கிறோம்னு சொன்னாலும் அவங்களையே போய் விரட்டிப் பிடிச்சுடுற காவல்துறைக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவங்களை மட்டும் கண்டுபிடிக்கவே முடியலையாம்..). உடனே தியேட்டர் அதிபர்கள் கதிகலங்கி படத்தை போடமாட்டோம்னு மிரட்டல். உடனே அம்மாவிடம் விரட்டல். அம்மா கொடநாட்டில் அலட்டல். விஜய் அன் கோ உண்ணாவிரத அரட்டல்.  என்று பத்திரிக்கைகள் பூராவும் சந்தி சிரித்துப் போனது விஜய்யின் தலைவா பட விவகாரம். அது உங்களுக்கு நன்றாகத் தெரியுமென்பதால் விமர்சனத்துக்குப் போவோம்.

தலைவா விஜய் ப்ளாஷ்பேக்கில் சிறு குழந்தையாய் பம்பாய் தாராவி பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஓட்டப்பட்டவர். கமல் ப்ளாஷ்பேக் இல்லாமல் தூத்துக்குடியிலிருந்து பம்பாய்க்கு ஓடிவந்தவர். விஜய்யின் அப்பா சத்யராஜ் வெள்ளைச் சால்வையை போர்த்தியபடி தாராவி மக்களுக்கு நல்லதெல்லாம் செய்து தீய ரவுடிகளிடமிருந்து அம்மக்களைக் காப்பாற்றுகிறார். விஜய்யோ நாசரின் பாதுகாப்பில் வாட்டர் கேன் சப்ளை செய்யும் கம்பெனி நடத்தியபடி சைடில் நடனமாடிக் களிக்கிறார். அமலாபாலுடன் ஆஸ்திரேலியாவில் வந்து குடியேறும் சுரேஷ் ஹோட்டல் ஆரம்பிக்க அங்கே விஜய் வாட்டர் சப்ளை செய்யப் போக காதல் சப்ளையாகி விட அமலா பால் விஜய்யுடன் காதல் நடனமாட ஆரம்பிக்கிறார்.

இந்தியாவுக்கே வந்திராத விஜய் காதல் விஷயமாக அப்பாவை திடீரென்று பார்க்க கிளம்பி பம்பாய் வந்திறங்க அப்பா நாயகன் வேலுநாயக்கனின் பார்ட் 2வாக நிற்பதைப் பார்த்து ஆடிப்போகிறார். வேலுநாயக்கனுக்கு ஒரு செல்வா போல 'அண்ணா' (திராவிட இயக்கங்களின் தலைவர் பெயரை ஒரு ரவுடி தாதாவுக்கு வைக்க ரொம்பத்தான் தில் வேணுங்கோ டைரக்டர் விஜய் சார்)வுக்கு ஒரு ரங்கா நம் பொன்வண்ணன். அண்ணாவுக்கு ஒரு எதிரி. பழைய பகையின் மகன். அண்ணாவை அவன் போட்டுத் தள்ள. அவ்விடத்திற்கு தேவர் மகனாக வந்து விடுகிறார் விஜய். தாராவி மக்களெல்லாம் இனி அடுத்த பெரிய தேவர் இனி நீ தான் நம் தலைவா என்று உடனே கொண்டாடி விடுகிறார்கள். 'அந்தி மழை மேகம்' டைப் பாட்டு.. டான்ஸ்..நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா எதுவுமே தப்பில்லை டயலாக் மாதிரி.. 'கத்தியெடுத்தா அது உன்னை காக்கும் மற்றும் கொல்லும் ஆனா கீழ போடமுடியாது' என்று டயலாக்  கூட உண்டு. அப்புறம் தளபதி விஜய் தலைவா விஜய்யாக மாறி ஸ்டைலாக நாலு பேர் பின்புறம் கூட நடக்க நடந்து வந்து வில்லனை எப்படிச் சாய்க்கிறார் என்பது மீதிக் கழுதை.. சாரி கதை.
 
இயக்குனர் விஜய் பல படங்களைக் காப்பியடிப்பதில் வித்தகர் என்பது அவரது மதராஸப் பட்டினம், தெய்வத் திருமகள் போன்ற படங்களிலிருந்து குவார்ட்டரடித்தால் ஏறும் மப்புபோல தெளிவானது. அதே வித்தையை இங்கேயும் செய்திருக்கிறார் அவர். ஆனால் 50 கோடி செலவு செய்து நாயகனையும், தேவர் மகனையும் சேர்த்து சாண்ட்விச் செய்து காட்டினால் யாருக்குங்கோ பிடிக்கும்னு அவர் கொஞ்சமாச்சும் யோசிச்சிருக்கலாம். ஒரு வேளை அந்தப் படமெல்லாம் வந்து ரொம்ப வருஷமாச்சேன்னு நெனச்சிட்டாரோ என்னமோ. போகட்டும் அப்படியே செய்திருந்தாலும் அதை இப்படி ஓவராக பில்டப் கொடுத்து 'தலைவா' என்று பெயர் வைத்திருக்கலாமா? போக்கிரி - பார்ட் 2 என்று பெயர் வைத்திருந்தால் கூட  விஜய்யின் வாங்கன்னா வணக்கம்னா பாட்டு, முற்பாதியில் ஒரு ஆட்டம், ஒரு டூயட், நாலு பைட் சீக்வன்ஸ் என்று படம் ஏதோ ஒரு வழக்கமான விஜய் பட வரம்புக்குள் நின்றிருக்கும்.

படத்தின் டயலாக்குகளும், காட்சிகளும் அபத்தமோ அபத்தம். பத்துப் பேரை வெட்டிச் சாய்க்கும் ஒரு நாளில் விஜய் தலைவாவாகிறார். தலைவனாக வேண்டுமென்றால் பத்துப் பேரை வெட்டிச் சாய் என்று அர்த்தம் போலும்? அவர் சட்டத்தை மதிப்பதில்லை, அறவழியில் போராடுவதில்லை. பழிக்குப் பழி தீர்க்கிறார். கட்சி ஆரம்பிக்கவில்லை. கொள்கைகள் என்று எதுவுமில்லை. சமூகத்தை என்ன செய்து திருத்துவது என்று ஒரு இழவு கூட யோசித்ததில்லை. இப்போதிருக்கும் நாட்டுப் பிரச்சனைகள் எதைப் பற்றியும் மறந்து கூட கருத்துச் சொல்வதில்லை. ஆனால் 'தலைவா'வாக ஆகவேண்டும் என்று ஆசை மட்டும் இருக்கிறது விஜய்க்கு.

சந்தானம் பாவம் என்ன செய்வார். அவர் கடமையை செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் சிரிப்புத் தான் வரவில்லை தலைவா. ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என்று எதுவுமே எடுபட மறுக்கிறது. இசை ஜீ.வி.பிரகாஷ்குமார். இரண்டு பாட்டுக்களை தேற்றுகிறார். தளபதி தளபதி என்கிற பாடல் படத்தின் அபத்தத்தின் உச்சகட்ட வெளிப்பாடு.

விஜய்யை வளர்த்துவிட்டவர் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் என்பார்கள். விஜய்யின் எதிர்காலத்தை இருட்டாக்கப் போகிறவரும் அவராகவே இருக்கலாம். தேவையில்லாமல் கட்சி, காங்கிரஸ், திமுக என்று சுற்றி, ரசிகர்களை ஆதரவாளர்கள் என கற்பனை செய்யவைத்து, 'நாங்க சப்போர்ட் பண்ணி தான் போன தடவை எலெக்ஷன்ல இந்தம்மா ஜெயிச்சாங்கன்னு' ஏடாகூடமா உளறி என்று ஏகத்துக்கு பண்ணியிருக்கிறார். ஜாக்கிரதைங்கண்ணா. 
Actor Vijay Politics Jayalalitha Admk
தலைவலியே வா என்று வருந்தி அழைத்துக் கொண்டதுதான் தலைவா என இப்போது நன்கு புரிந்திருக்கும் விஜய்க்கு. தலைவாவா தலைவியா என்கிற இந்தப் போட்டியில் தலைவி அம்மா இப்படி ஒரு சுமாரான படத்தையே போட்டு இப்படி வறுத்தெடுத்து தன்னுடைய பவரை காட்டிக் கொள்ளவேண்டிய அளவுக்கு சிறுபிள்ளைத் தனமாகத் தான் இருக்கிறார் என்பது அவரால் ஆளப்படும் மக்களாகிய நாம் வருத்துத்துடன் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு விஷயம்.

சராசரி விஜய் ரசிகர்களாய்ச் செல்பவர்களுக்கும், இந்த தலைவா பாலிடிக்ஸ் எதுவும் தெரியாமலே அப்பாவியாய்ப் படம் பார்க்கச் செல்லும் குடும்பஸ்தர்களுக்கும், குடும்பஸ்த்ரீக்களுக்கும் இந்தப் படம் வழக்கமான ஒரு விஜய்யின் மாசாலாப் படம் தான். ஆனால் மற்ற யாருக்கும் தலைவாவைப் பிடிக்கக் காரணம் பெரிதாய் எதுவுமில்லை. எனவே தலைவாவின் கெத்து எடுபடுமா ?  சந்தேகம் தான்.