Wednesday, May 16, 2012

'நடந்த கதை' - குறும்படம். விமர்சனம்.

நடிப்பு - கருணாகர், அருள் சங்கர், தர்மா, துரை சத்தீஷ், ஏழுமலை, பழனி,மணிவண்ணன்,சுபாகரன், லில்லி ஆசிரியர், கோவிந்தன், வீரராகவன், ஓவியன், நிறைமதி, கோகுல், தமிழ்ப் பிரியன், சுந்தரேசன்.
ஒலிப்பதிவு - R. சரவணன்           ஒலிக்கலவை - T.P. தர்மபிரகாஷ்
இணை ஒளிப்பதிவு - மணி   ஒளிப்பதிவு - இராசா மதி.
வரைகலை - செந்தில் 
கதை - அழகிய பெரியவன் (குறடு சிறுகதை)
படத்தொகுப்பு - A. L. ரமேஷ்  
இசை - மரியா மனோகர்
தயாரிப்பு - அருள் சங்கர்
திரைக்கதை, வசனம், இயக்கம் - பொன் சுதா.
வெளியீடு - நண்பர்கள் குழுமம்.
ஓடும் நேரம் - 21 நிமிடங்கள்.
வெளிவந்த ஆண்டு - 2010.

படம் முன்பே வெளியிடப்பட்டிருந்தாலும் நவம்பர் 2011ல் தான் யூ ட்யூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பு சி.டி.க்களாக கிடைத்திருந்திருக்கக் கூடும்.தமிழ்நாடு முற்போக்கு கலைஞர் மற்றும் எழுத்தாளர் சங்கத்(தமுகஎச) தின் சிறந்த சமூக குறும்படத்திற்கான 2010 ஆம் ஆண்டு விருதைப் பெற்ற படம் இது. இது மட்டுமல்ல, இது போன்று மொத்தம் 16 விருதுகளைப் பெற்றிருக்கிறது இப்படம்.

இக்குறும் படத்தின் முக்கியமான விருதுத் தகுதி இது சமூகப் பிரச்சனையான ஜாதியை களமாகக் கொண்ட படம் என்பது தான். அழகிய பெரியவனின குறடு என்கிற சிறுகதையை குறும்படமாக எடுத்திருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம். தமிழ் சினிமாவில் கதைகளையும், நாவல்களையும் படமாக்குவது என்பது அத்திப் பூத்தாற் போல நடக்கும் விஷயம் தான். தீண்டாமை என்கிற சமூகப் பிரச்சனையை மட்டுமே கதைக் களமாகக் கொண்டிருப்பதில் (ஒரு சைடு ட்ராக் காதல் கூடக் கிடையாது !) திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய இயக்குனர் பொன்.சுதா நேரமையாக இருந்திருக்கிறார். அவரை இதற்காகப் பாராட்ட வேண்டும்.

கதை. எளிமையான கதை. தாழ்த்தப்பட்ட சக்கிலிய சமூகத்தில் 'கீழத் தெருவில்' பிறந்த வீரபத்ரன் சிறுவயது முதலே தன் வாழ்வில் செருப்புப் போட்டு நடக்க ஏங்கி ஆசைப்படுவதையும் முடிவில் ராணுவத்தில் சேர்ந்ததன் மூலம் அந்த ஆசையை எப்படி நிறைவேற்றிக் கொண்டான் என்பதையும் காட்டும் படம். செருப்புப் போட்டு நடக்க ஆசைப்படுவது என்பது கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடியாமல் இருந்த காலங்கள் உண்டு. இன்று செருப்புப் போட்டுக் கொள்ள அவர்களுக்குத் தடையில்லை என்றாலும் தற்காலத்தில் தீண்டாமையும் 'நவீனமாகி' செருப்பு போட்டுட்டு போலாம் ஆனா மேலத் தெரு வழியா போகும் போது செருப்பை கால்ல மாட்டாம கையில தூக்கிக்கிட்டு போகனும் அப்படின்னு வேற வடிவம் எடுத்திருக்கு. செருப்புத் தைக்கிறவங்களா இன்னும் இருக்கிறவங்க சக்கிலிய சாதிக்காரங்கதான். இல்லையா ?

படம் துவக்கத்தில் கதாபாத்திரம் பேசுவதாய் சாதி பற்றிய ஆழமான சில வரிகளோடு பிரமாதமாய் ஆரம்பிக்கிறது. படத்தின் ஹீரோவாக (பல்வேறு வயதுகளில்)வரும் எல்லோருடைய நடிப்பும் பரவாயில்லை. ராணுவத்தில் சேரும் இளவயது வீரபத்திரனும் நடிப்பில் தேறிவிடுகிறார். சில இடங்களி்ல் சொதப்புகிறார். முதன் முதலாக ஷூ வை கையில் வாங்கியவுடன் அவர் காட்டும் உணர்வுகள் பொருந்தவில்லை. படத்தி்ன் மற்ற எல்லாப் பாத்திரங்களும் துணைப் பாத்திரங்களாகவே ஒற்றைத் தன்மையுடன் இருக்கின்றன. தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஹீரோ சிறு வயதிலிருந்து வளரும் போது ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு வில்லன் உயர் ஜாதியில் வளர்ந்திருக்கலாம். இது கதையைச் சொல்வதில் சுவராசியத்தை கூட்டியிருக்க வாய்ப்பிருக்கிறது.

படத்தின் ஜாதி சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகள் சீரியலை ஞாபகப்படுத்தும் அளவு சிறிது நாடகத்தன்மை கொண்டிருக்கின்றன. மேல் ஜாதிக்காரர்களாக வரும் எல்லோரும், அவர்கள் நடிப்பும் நாடகத்தையே ஞாபகப்படுத்துகின்றன. இராசா மதியின் ஒளிப்பதிவு கச்சிதமாக இருக்கிறது. வீரபத்ரனை குழந்தையாக அறிமுகப்படுத்தும் காட்சியில் உட்கார்ந்திருக்கும் சிறு குழந்தையும் அவன் அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள் அனைவரும் 'செருப்பில்லாத கால்களாக' மாற்றி மாற்றி வந்து போகும் அந்தக் காட்சி பிரமாதமான காட்சியமைப்பு. அதை மனதில் உருவகித்த இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். மற்றொரு இடம் மேலைத் தெருவில் அப்பாவுடன் நடந்து போகும் வீரபத்ரன் முதன் முதலாக பார்க்கும் காலணிகள்; அவனுடைய மன ஓட்டங்கள்; அதைப் பிரதிபலிக்கும் ஷாட்கள்; ரமேஷின் எடிட்டிங் இங்கு கச்சிதம். மரியா மனோகரின் இசை படத்திற்கு புதிதாக எதுவும் சேர்த்துவிடவில்லை என்றாலும் படத்தைக் காலி செய்யவில்லை. ஓ.கே. ரகம். ஒலிப்பதிவும் படத்திற்கு தேவையான அளவு அமைந்து உள்ளது.

அழகிய பெரியவனின் கதையில் யதார்த்தம் எவ்வளவு அழகியலுடன் வெளிப்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் படத்தில் அந்த அழகியல் இல்லை. படத்தின் பெரும்பாலான காட்சிகளில் கதாபாத்திரங்களைத் தவிர வேறு யாரும் மாந்தர்கள் நடமாடுவதே இல்லை. இது ஒரு வகையான புனைவுத் தன்மையை கொடுக்கிறது. இயக்குனரும் நிறைய காட்சிகளில் பாரதிராஜாவின் பன்ச் போன்ற புனைவுகளை கொடுத்திருக்கிறார் (உ.ம். மரத்தில் தொங்கும் செருப்புகள், கடைசியில் வீட்டுக்கு வீடு வாசலில் ராணுவ வீரர் ஓட ஓடத் தோன்றும் செருப்புகள்). சமூகப் பிரச்சனையை தனி மனிதனின் கோணத்தில் அலசிய விதத்தில் இப்படம் ஒரு வித்தியாசமான படம் தான்.

கதையின் கரு பற்றி கொஞ்சம் பேசவேண்டும். தான் பிறந்த ஊரில் செருப்பணிந்து நடக்கக்கூடாது என்கிற ஆதிக்க ஜாதியின் கொடுமையை எதிர்க்க சமூக ரீதியாக வழியில்லாத ஹீரோ ராணுவம் என்கிற மற்றொரு ஆதிக்க கருவியின் பால் தஞ்சமடைகிறான். ராணுவ வீரனான தான் 'யார் எதிர்த்தாலும் சுட்டுக் கொல்வேன்' என்கிறான். அவனை தெருவுக்குள் பூட்ஸ் காலுடன் நுழைய விட மறுக்கும் ஆதிக்க சாதி அவன் 'சுடுவேன்' என்றதும் தான் பயப்படுகிறது. இது 'பேய்க்குப் பயந்து பிசாசை கட்டிக் கொண்ட கதை' எனலாமா? ஆதிக்க சாதி, ஜாதி ஏற்றத் தாழ்வுகள் சமூகப் பிரச்சனையாக பல்லாயிரம் வருடங்களாக இருக்கின்றன. ஆனால் அவற்றிற்கு தீர்வு என்பது மந்திரத்தில் வைத்தது போல் சடக்கென்று நிகழ்ந்துவிடாது என்பது தான் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை கதையாளர் ராணுவத்தின் மூலம் மாற்றி விட ஆசைப்படுவதை கதை காட்டுகிறது.
ராணுவம் என்பது என்ன? எல்லையை பத்து, 20 வருடங்களுக்கு ஒரு முறை எப்போதாவது 'நடத்தப்படும்'(நடப்பது அல்ல நடத்தப்படுவது) சண்டையில் பாதுகாப்பது தவிர ராணுவம் மொத்தமும் மக்களை, அது சொந்த மக்களோ, அன்னிய மக்களோ, அவர்களை அடக்கி ஒடுக்கவே பயன்படுகிறது. காஷ்மீரில் ராணுவம், கூடங்குளத்தில் ராணுவம், ஒரிஸ்ஸா காடுகளில் ராணுவம் என்று ராணுவம் சொந்த மக்களை கொல்லப் பயன்படுவதே அதிகம். இப்படிப்பட்ட ராணுவம் தான் சாதிய பிரச்சனைக்கு தீர்வு கொடுப்பதாக கதை முடிகிறது. ராணுவம் பற்றிய (பாக்யராஜ் படங்களில் வருவது போல) ஜனரஞ்சகமான பார்வை இருப்பதால் தான் இந்த மாதிரி தீர்வுகளுக்கு எழுத்தாளர் போக நேரிடுகிறது. இந்திய ராணுவத்திலும் சாதியம் இருக்கிறது என்பது ஓர் உண்மை.

நமது இந்திய ராணுவம் ஆரம்பத்தில் வெள்ளையர் ஆட்சியில், இந்திய மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு இந்திய அடிமைகளை வைத்தே வீரர் படை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது. அதே அமைப்புடன் தான் இன்னும் இருந்து வருகிறது. வெள்ளையர்கள் தான் படைப்பிரிவுகளை சாதிய அடிப்படையில் பிரித்தனர். போராடும் 'வீரமான' சாதியைச் சேர்ந்தவர்கள் என்றழைக்கப்படும் சாதிக்காரர்களின் சாதிகளின் பெயர்களில் படைப்பிரிவுகள் (உ.ம். ஜாட், கூர்க்கா, ராஜ்புத், சீக்கியர்கள் ) அமைந்திருந்தன. இந்தியா சுதந்திரமடைந்ததும் சாதீய, இன முறைப்படி படைப்பிரிவுகளை அமைக்க வேண்டாம் என விதிமுறைகள் மாற்றப்பட்டன. ஆனாலும் பொற்கோயிலில் ராணுவம் நுழைந்த போது பயன்படுத்தப்பட்டது 'தமிழ்நாடு(தமிழர்) படைப் பிரிவு'. சீக்கியர்களின் அரசு மீதான கோபம் தமிழர்களின் மீதான கோபமாக அங்கே மாற்றப்பட்டது. அது இந்திய அமைதிப்படை 1987ல் இலங்கைக்குக் சென்ற போது வெடித்தது. இலங்கையில் தமிழர்களை கொன்று, வன்புணர்ந்து வெறியாட்டம் ஆடியது சீக்கியப் படைப் பிரிவு. இந்திரா காந்தி கொலைக்குப் பின் ராணுவத்தில் சாதீய, இன ரீதியான பிரிவுப் பெயர்கள் திரும்பவும் வைத்துக் கொள்ளப்பட்டன.

ஒரு பத்து நாட்களுக்கு முன்பு ப்ரணாப் முகர்ஜி ராணுவத்தில் இருக்கும் முஸ்லீம்களின் எண்ணிக்கை பற்றி கருத்துக் கூறி மாட்டிக் கொண்டார். ராணுவத்தில் ஜாதி இருக்கிறது. ஜாதிக் கொடுமைகள் நேரடியாக இனம் கடந்து இல்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள பறையன் என்பவன் தாழ்த்தப்பட்டவனா இல்லையா என்று வடக்கத்திய உயர் சாதியினனுக்குத் தெரியாது. ஆனால் ஒரு இனத்துக்குள்ளே இருக்கும் ஜாதி ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் அப்படியே இருக்க வாய்ப்பிருக்கின்றன. உதாரணமாக தமிழ்நாடு ரெஜிமண்டுக்குள் இருக்கும் எல்லா தமிழர்களுக்கும் ஒருவருடைய சாதி மற்றவருக்குத் தெரியும் ஆதலால் சாதி வேற்றுமை கண்டிப்பாக ஏற்படுகிறது.

இவவளவும் இருக்கட்டும். சரி,  படம் 'மிக'ச் சிறந்த படமா என்றால்  இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் நல்ல படம். மோசமான படமில்லை. அந்தப் பதினாறு விருதுகளும் இது சாதிய பிரச்சனையை கையாண்ட காரணத்திற்காகவே இந்தப் படத்திற்கு கிடைத்திருக்க நிறைய வாய்ப்புள்ளது. ஏனென்றால் இதைச் செய்யக் கூட  விரும்பாதவர்களே தமிழ் சினிமாவில் அதிகம்.

Friday, April 6, 2012

‘எங்கேயும் எப்போதும்’ – சினிமாவின் வழியே தெரியும் தமிழ்ச் சமூகம்

எங்கேயும் எப்போதும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் தயாரிப்பில் வெளிவந்து பெரும் வெற்றியையும்,   மீடியாக்களின் பலத்த பாராட்டுதல்களையும், மக்களிடையே பெரும் வரவேற்பையும் ஒரு சேர பெற்ற படம். படத்தை இயக்குனர் முதல் படத்தின் ஒரு ஜோடிகள் வரை அனைத்தும் புதுமுகங்கள்.

படத்தின் மீதான தனிமனித மதிப்பீடுகள்  ‘நல்லாருக்கு’, ‘கருத்தும் இருக்கு’ போன்றவற்றை தாண்டி சமீபத்தில் மனித உரிமைகள் அமைப்புகள் சேர்ந்து இப்படத்தின் இயக்குனருக்கு, பரமக்குடியில்‘சிறந்த சமூகக் கருத்தைக் கொண்ட படத்தை இயக்கியவர்’ என்கிற விருதைக் கொடுத்திருக்கின்றன. படத்தின் கதாநாயகிகளுள் ஒருவரான அஞ்சலி சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவை எல்லாம் சமூகத் தளத்தில் மேம்போக்காக பார்க்கும் போது மக்கள் மனத்தில் எழும் ஒப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட தேர்வுகள் என்ற அளவில் அவற்றை நாம் மதிக்கிறோம். படத்தை வேறு சில கோணங்களில் அலசும் போது சினிமாவின் தேர்வுகள், அது காட்டும் சமூகம் தொடர்பாக நமக்கு எழுந்த சில கேள்விகளை கீழே விவாதித்திருக்கிறோம்.

முதலில் கதை. கதை: ஒரு விபத்திலிருந்து பின்னோக்கிச் செல்லும் ஞாபகச் சூழலில் இரு காதல்களை விவரிக்கிறது. இயக்குனருக்கு இது முதற்படம்; அதுவும் நிச்சயமாய் வெற்றிப்படமாய்க் கொடுத்தே ஆகவேண்டிய சூழலில், முதற்பட இயக்குனர்கள் தமிழில் தவறாமல் எடுக்கும் கருக்களான ‘காதல்’ அல்லது  ‘த்ரில்லர்’ வகைகளில் இதை காதல் கதையாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் சரவணன். காதல் கதை என்று வந்து விட்டதால் விவரிக்கப்படும் காதல்கள் இதுவரை வந்த எந்தப் படங்களிலும் பார்த்திராத ‘வித்தியாசக்’ காதல்களாய் காட்டப்படவேண்டியது முக்கியமான தேவையாகிறது. அப்படி இரு வித்தியாசக் காதல்களை விவரிக்கிறது படம்.

இந்த வித்தியாசத்தை காதலர்களின் குணாதிசயத்தில் புகுத்தியுள்ளார் சரவணன். முதல் காதலில் அனன்யா திருச்சியிலிருந்து மெட்ரோ சென்னைக்கு வரும் கிராமியத் தனமான பெண். கிராமங்களே அடையாளம் சிதைந்து போன இந்தக் கால உலகமயமாதல் சூழலில் சென்னைக்கும், திருச்சிக்கும் பெரிய வித்தியாசமில்லை என்றாலும் ‘பரந்து’ விரிந்த சென்னையில் தான் கடத்தப் பட்டுவிடுவோம் என்கிற பீதியுடன் வரும் அனன்யா சென்னையைப் பற்றி கொண்டிருக்கும் கிராமியத்தனமான எண்ணங்களை லேசான நகைச்சுவை கலந்து சுவராசியமாகச் சொல்லியபடி செல்கிறது முதல் காதல். இரண்டாவது காதலில் திருச்சியில் வசிக்கும் ஜெய் என்கிற ‘கூச்ச சுபாவம் அதிகமுள்ள’ வாலிபனை மிகுந்த தைரியம் கொண்ட பெண் அஞ்சலி காதலிக்கிறார். காதலிக்கும் ஆண் பெண்ணின் வீடு தேடி சைட் அடிக்கும் வழக்கத்திற்கு மாறாக ‘நான் உன்னை நாலு தடவை உன் வீட்டுப் பக்கம் வந்து பார்த்தேன்’ என்று தைரியமாக அவனுடைய அறையில் திடீரென்று நுழைந்து சொல்லும் மணிரத்னம் பட கதாநாயகிகள் வகைப் பெண்ணாக இருக்கிறார் அஞ்சலி.

அனன்யா பஸ்ஸில் பக்கத்து சீட்டில் நெருக்கியபடி உட்காரும் ஆணிடம் இருந்து பதறியபடி இறங்குகிறார்; ஹோட்டலில் சாப்பிடும் தட்டில் முகம் பார்த்து பொட்டை அட்ஜெஸ்ட் செய்கிறார். அஞ்சலியோ காபி டேவில் 70 ரூபாய்க் காப்பியைக் குடிக்க ஜெய் கோல்ட் காபி என்றால் குளிர்ந்த காபி என்று தெரியாமல் பேரருடன் சண்டை போடுகிறார். இப்படி அனென்யாவை ‘கட்டுப் பெட்டித் தனம்’, கிராமிய அறியாமை மற்றும் ஜெய்யின் குணாதிசயத்தை ‘பெண்ணின் ஆதிக்கத்துக்கு அடங்கும் ஆண்’ என்று உருவாக்கியதன் மூலம் இந்த ‘வித்தியாசக் காதல்கள்’ சொல்லப்படுகின்றன. முதல் காதல் பழம் பெரும் பெண்ணை நவீன வடிவத்தில் காட்டியது என்றால் இரண்டாம் காதல் நவீன மாடர்ன் பெண்ணைக் காட்டியது.

இங்கு மாற்றம் என்பதும் புதுமை என்பதும் பால்களின் தற்போதைய குணத்தை, பழைய நடவடிக்கையை மாற்றிக் காட்டுவதில் நிறுவப்படுவது கவனிக்க வேண்டியது. ஆண்கள் மட்டுமே செய்து கொண்டிருந்த வேலைகளை பெண்களும் செய்வார்கள் என்பது தான் உலகளாவியம் இன்றைய சமூகங்களுக்குக் காட்டும் கவர்ச்சிகரமான புரட்சி மாற்றம். இந்தியாவின் முதல் விமானப் படைப் பெண், முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர், முதல் பெண் கமாண்டோ என்பது முதல், பெட்ரோல் பல்க்கில் முதன் முதலில் பெட்ரோல் போட்ட பெண், முதல் பெண் சபாநாயகர், முதல் பெண் ஜனாதிபதி வரை எல்லோரும் இதில் அடக்கம். இவர்கள் எல்லாம் பத்திரிக்கைகளின் அட்டைப் படம் முதல், டி.வி.க்களின் சிறப்புப் பார்வை வரை வந்து போனார்கள். உண்மையில் ஜெய்யின் இந்த பணிவு போலியானது, அனன்யாவின் மிரட்சி யதார்த்தம் குறைவானது. இந்தக் கவர்ச்சிகரமான வித்தியாசங்கள் படத்தை ரசிக்கும் எந்த வர்க்கத்து குடும்பத்தினருக்கும் போதுமானதாக இருக்கிறது.

அடுத்ததாக விபத்துக்குள்ளாகும் பஸ்ஸில் பயணப்படும் மாந்தர்கள். ஒரு கல்லூரி மாணவன், கல்லூரி மாணவி (மாணவியைப் பார்த்தவுடனே காதல் அரும்பு விட ஆரம்பித்த பையன்), எங்கோ போட்டிக்குப் போய்விட்டு வெற்றிக் கோப்பையுடன் வரும் பள்ளி மாணவிகள்(?!) குழு, மனைவியை ஊருக்கு பஸ் ஏற்றி விட வந்துவிட்டு கடைசி விநாடியில் அவளைப் பிரிய மனமின்றி அவளுடனேயே தானும் பஸ் கிளம்பும் கணத்தில் ஏறிவிடும் கணவன், துபாயில் சுமார் 5 வருடம் வேலை செய்துவிட்டு, பிறந்து 5 வயதான பெண் குழந்தை(?!) அப்பாவிடம் ‘நெஜமா வர்றீங்களாப்பா’ என்று அரைமணிக்கு ஒரு தடவை கேட்டுக் கொண்டிருக்க ‘ஆமாண்டா செல்லம்’ என்று சொல்லிக்கொண்டு அவளை முதன் முறையாக பார்க்கச் செல்லும் அப்பா, யு.கே.ஜி படிக்கும் சுட்டி(டி.வி. வகை)ப் பெண் குழந்தையுடன்(?!) (ஏம்மா என் மானத்தை வாங்கறே என்று நெற்றியிலடிக்கும் குழந்தை) பயணம் செய்யும் அம்மா, பொறுமையின்றி போன் செய்யும் கணவருக்கு ‘வெய்ட் பண்ணுங்க நான் வந்து தோசை வார்த்துத் தர்றேன்’ என்று சொல்லும் வயதான மாமி, உடல் ஊனமுற்ற வயதான பெண்மணி என்று பலருடன் கதாநாயகன்களும், நாயகிகளும்.
இவர்களின் குடும்ப உரையாடல்களை பார்வையாளனுக்கு காட்டுவதன் மூலம் இவர்களில் கடைசியில் இறந்து போகும் நபர்களின் மீதான பார்வையாளனின் அனுதாபம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது. பொழுது போக்கு சினிமாவில் இவை போன்ற விஷயங்கள் இல்லாமலிருந்தால் தான் நாம் அதிசயப்படவேண்டும். இது இயக்குனரின் நேர்த்தியான திரைக்கதை உத்திகளுள் ஒன்று.

படத்தின் முதற்பாதியில் நர்ஸாக பணிபுரியும் அஞ்சலி ஜெய்யை உடல் உறுப்புக்களை தானம் செய்ய வலியுறுத்தும் இடம் அழுத்தமாக இல்லை. உடல் உறுப்புக்களைத் தானம் செய்தல் என்கிற மனிதாபிமான விஷயத்தை வலியுறுத்துகிறார்கள் என்பது நல்ல விஷயமே. இது போன்ற நல்ல ஆனால் மொன்னையான மனிதாபிமான. சமூக விஷயங்களே தமிழ்ப் படங்களில் பெரிதும் முன்வைக்கப்படும் சமூக விஷயமாக இருக்கிறது.

அப்படியே சில படங்களில் முன் வைக்கப்படும் அரசியலும் மேம்போக்கான சாடலையே கொண்டுள்ளது. (லஞ்சம்-இந்தியன், ஊழல்-அன்னியன், கறுப்புப் பணம்-சிவாஜி – இவை மூன்றிலும் அரசியல்வாதிகளே குற்றவாளிகள் என்பதும் கவனிக்கத்தக்கது). 
‘எங்கேயும் எப்போது’மில் தொழிலாளர் நலனுக்காகப் போராடிவரும் இடது சாரி இயக்கங்களை மிக வெளிப்படையாகக் காமெடி செய்வது போல வரும் காட்சி படத்தின் கதையோடு முக்கிய தொடர்பில்லாதது எனினும் இப்படத்தை அரசியலுக்கு எதிராக எண்ணம் கொண்ட படமாக மாற்றி விடுகிறது. மன்மோகன் சிங் முதன் முதலில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவருக்கு கொடுக்கப்பட்ட முக்கியமான ஸர்ட்டிபிகேட் ’இவர் ஒரு அரசியல்வாதி இல்லை’; மாறாக ‘ஆக்ஸ்போர்டில் படித்து பல டாக்டர் பட்டங்கள் வாங்கிய மெத்தப் படித்தவர், மிஸ்டர் க்ளீன். உலக வங்கியில் (அதிகாரியாக)பணியாற்றியவர்’ என்கிற பிம்பம். (அப்பிம்பம் இப்போது எப்படி கிழிந்து தொங்குகிறது என்று நமக்குத் தெரியும்). ‘எனக்கு அரசியலே பிடிக்காது’... ‘அரசியல் சாக்கடை’ என்கிற சாமானிய மக்களின் பதங்கள் அரசியலிலிருந்து மக்கள் தங்களை தாங்களே விலக்கிக் கொள்ள உபயோகப்படுகின்றன. படத்தில் வரும் இக்காட்சியும் அதை ஆமோதிக்கிறது.

மக்கள் இப்படி அரசியலற்றுப் போவதன் பின் விளைவு என்ன? அரசு, கேள்வி கேட்க யாருமின்றி, மக்கள் கேள்வி கேட்க எழ மாட்டார்கள் என்கிற துணிச்சல் அதிகமாகி. எதேச்சதிகாரமாக, சர்வாதிகாரமாக மாறும் சூழல் உருவாகும். சர்வாதிகாரம் மக்களை கூட்டம் கூட்டமாகக் கொல்லவும் தயங்காது. சத்தீஸ்கரில், ஒரிஸ்ஸாவில் பழங்குடி மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பது இப்படித் தான். கூடங்குளத்தில் வெறுமனே திரு.உதயகுமாரும் மற்றும் ஒரு பத்து பேரும் மட்டும் இன்றைக்கு போராடியிருந்தால் இந்நேரம் உதயகுமாரைப் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும். அவருக்குப் பின் இடிந்த கரை மக்கள் திரண்டு உறுதியாக நிற்கின்றனர். அதுவே இவ்வளவு பெரும் ராணுவம் கொண்ட அரசையும் கொஞ்சம் தயங்க வைக்கிறது.

இன்னொரு விஷயத்தையும் பார்ப்போம். படத்தின் முக்கியமான திருப்பு முனை சாலை விபத்து. இரு பேருந்துகளும் தங்கள் ஊரிலிருந்து கிளம்பும் கணம் முதல் சாலை விபத்து நடக்கும் கணம் வரை அங்குலம் அங்குலமாக விவரிக்கிறது படம். விபத்திற்கு பெரும் காரணம் கடும் வேகத்தில் ஓட்டுதல், ஒருவரே நீண்ட தூரத்திற்கு ஓட்ட வேண்டிய நிலை, ஒருவரை ஒருவர் விரோதிகளாக பார்க்கும் ஓட்டுனர்களின் போட்டி மனப்பான்மை, ஓட்டுனர்களின் மன அழுத்தம் (எதிரே லைட் போட்டு அணைக்க மறந்து கடந்து செல்லும் ஒரு ஓட்டுனரை இந்த ஓட்டுனர் கடும் கெட்டவார்த்தைகளில் பேசுவது சாதாரணம் ), வேலைப் பளு, குறைவான சம்பளம் போன்ற எதையும் இயக்குனர் எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக  தார்ப்பாய் அவிழ்ந்தது என்கிற அரசியலற்ற ஒரு காரணம். போன வருடம் விபத்துக்குள்ளான கே.பி.என் தனியார் பஸ்ஸில் பயணம் செய்த 24 பேர் இறந்து போனார்கள். விபத்தின் காரணம் பஸ் 100 கி.மீ.க்கு மேல் வேகமாகச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று குறுக்கே வந்த ஏதோ ஒன்றிற்காக பிரேக் பிடிக்க முயன்று முடியாமல் போய் பஸ் பள்ளத்தில் பாய்ந்த்ததால் தான்.

அதே போல் சராசரியாக பஸ்ஸில் பயணம் செய்யும் பயணிகள் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் தனியார் பஸ் கட்டணக் கொள்ளை, அத்துவானக் காட்டில் நிறுத்தி கொள்ளையடிப்பது போல அநியாய விலைக்கு உணவுப் பொருள் முதல் குடிநீர் வரை விற்கும் மோட்டல்களில் நிறுத்துவது; கூட்டம் சேராவிட்டால் பாதி தூரம் வரை வந்து விட்டு மீதிப் பணத்தை கொடுத்து வேறு பஸ் பிடிக்கச் சொல்வது; திருவிழா, வார விடுமுறைகளில் ஐநூறு ஆயிரம் என்று கட்டணம் வசூலிப்பது; ஆபத்தான வேகங்களில் செல்வது; அரசுப் பேருந்துகளில் மக்கள் ஏறக்கூடாது என்பதற்காகவே மோசமாக பராமரிப்பது; ஒழுகும் பஸ் கூரைகள்; கடிக்கும் மூட்டைப் பூச்சிகள்; உடைந்த, மக்கர் செய்யும் இருக்கைகள்; வேண்டுமென்றே மெதுவாக ஓட்டுதல்; நினைத்த இடங்களில் நிறுத்தி பயண நேரத்தை வேண்டுமென்றே அதிகமாக்குதல்; குறைவான அரசு பஸ்களையே விட்டு 12 மணிக்கு மேல் பஸ்கள் விடுவதை நிறுத்தி விடல்; டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், ஏ.சி கோச்கள் 5 மடங்கு அதிக கட்டணத்துடன் என்று சாதாரண மக்களிடம் பணம் பறிப்பது; டோல் கேட்கள் என்கிற பெயரில் தனியார்களுக்கு ரோட்டையும் குத்தகைக்கு விட்டு சாலையில் போகும் மக்களிடம் பணம் பறிப்பது; மோசமான பேருந்து நிலையங்கள், அவற்றின் மோசமான கழிப்பறை வசதிகள்.. என்று நீளும் இவ்வளவு பிரச்சனைகளில் ஒன்றையாவது பற்றி இந்தப் படம் பேசியதா?, அல்லது போகிற போக்கில் காண்பித்தாவது சென்றதா ?  என்றால் இல்லை என்று தான் பதில் கிடைக்கிறது.

இப்போது முதல் பாராவின் செய்தியைப் பாருங்கள். இப்படத்தின் இயக்குனருக்கு மனித உரிமை அமைப்புகள் சேர்ந்து ‘சிறந்த சமூகக் கருத்தை கொண்ட படத்தை இயக்கியவர்’ என்று கொடுத்து கௌரவித்திருக்கின்றன என்றால் விருதுகள் அப்படி சம்பிரதாயமாகி விட்டனவா? ... இல்லை மக்களாகிய உங்களின் மனம் எந்தப் பிரச்சனையையும், அரசியலையும் பேச விரும்பாமல் மொன்னையாகிவிட்டதா..?

‘எங்கேயும் எப்போதும்... சந்தோஷம் சங்கீதம்...’
இதுவே இன்றைய சமூகத்தின் குறிக்கோள். படத்தின் குறிக்கோளும் அதுவே.
இது தான் எங்கேயும் எப்போதும் காட்டும் நம் தமிழ்ச் சமூகம்.