Monday, August 9, 2010

கொசு விரட்டிகளும்.. மனித விரட்டிகளும்..


கொசு விரட்டிகளும்..  மனித விரட்டிகளும்..

மதிய நேரம். வீட்டில் உட்கார்ந்து தொலைக்காட்சியில் ஏதோ பழைய படத்தை பழக்க தோஷத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். நண்பர் அவரது கம்ப்யூட்டரில் வேலை செய்துகொண்டிருந்தார். எக்ஸ்கியூஸ் மி சார் என்று வாசலில் குரல்.
எட்டிப் பார்த்தால் இரண்டு கல்லூரி படிக்கும் வயது பையன்கள். அவர்களில் ஒரு பையன் கையில் இருந்த ஒரு பாக்ஸைத் திறந்து நீட்டியபடியே பேச ஆரம்பித்தான். ஏதோ மார்க்கெட்டிங் என்று உடனே இல்லை என விரட்டி விடாமல் எழுந்து சென்று என்னவென்று கையில் வாங்கிப் பார்த்தேன். சார்..நாங்க ரெண்டு பேரும் மெட்ராஸ் யுனிவர்சிடில படிக்கிறோம் சார். ஒரு ப்ராஜக்ட் விஷயமா இதைப் பண்றோம் சார் என்றான். தடியாக காதில் கடுக்கன் போல் மாட்டியிருந்தான். அவன் படிக்கிற பையன் என்று நம்ப முடியாமல் இருந்தது. அவன் கொடுத்த பாக்ஸைப் பிரித்தேன்.

உள்ளே நம் வீட்டில் வைத்திருக்கும் மின்சார கொசுவர்த்தி மாதிரி யான, அதே அளவிலான சாதனம் இருந்தது. ப்ளக்கில் மாட்டும் பின்கள்  நீட்டிக்கொண்டிருந்தன. அதில் டி.வி. ஸ்க்ரீன் மாதிரி
இருந்த இடத்தில் ஒரு லேபிள் மாதிரியான படம் ஒன்று இருந்தது. அதன் விஞ்ஞானத்தைப் பற்றி அப்பையன் விளக்க ஆரம்பித்தான். அவனைக் கையமர்த்தி விட்டு நான் மடமடவென அந்த அட்டையில் இருந்த கருவி பற்றிய குறிப்பை படித்தேன்.
அந்த அட்டையிலிருந்த விவரம் இது: இது அல்ட்ராசோனிக் கொசுவிரட்டியாகும். இதிலிருந்து வெளியாகும் அல்ட்ராசோனிக் ஒலியதிர்வுகள் கொசுக்கள், ஈக்கள், பல்லிகள், கரப்பான் போன்ற  வீட்டுப் பூச்சிகள் அனைத்தையும் வீட்டை விட்டே விரட்டிவிடும்.
இதை ப்ளக்கில் மாட்டிவிட்டு ஆன் செய்தால் விர்ரென்ற சத்தம் எழுப்புகிறது. கொசுக்களும் ஈக்களும் இந்த ஒலியைத் தாங்க முடியாமல் வெளியேறி விடுகின்றன. உடனே நான் இதுபற்றிக் கேள்விபட்ட விஷயத்தைப் பற்றி நண்பரிடம் சொன்னேன். கொசுக்கள் அல்ட்ராசானிக் ஒலியதிர்வுக்கு பயந்து ஓடியதாக இதுவரை கேள்விப் பட்டதில்லை. கொசுக்கள் நீல நிற ஒளியைக் கண்டால் நெருங்கும். அதை பயன்படுத்தித் தான் ஓட்டல்களில் ஈக்களைக் கொல்லும் கருவி வைத்திருக்கிறார்கள் என்றேன். உடனே அந்தப் பையன் சார் நீங்க வாங்கினா எங்களுக்கு ஒரு மார்க் வரும் சார் என்று தனது வியாபார உத்தியை செலுத்தினான். நான் இல்லைப்பா.. இதை வாங்குற மாதிரி இல்லை என்று உறுதியாக மறுக்க, வந்ததே கோபம் அவனுக்கு அதான் தெரியுமேஎன்றுவிட்டு என் கையில் இருந்த சாதனத்தை வாங்கிவிட்டு விடுவிடுவென படியில் உடன் வந்த நண்பனுடன் இறங்கினான். எனக்கு கொஞ்சம் பயமாகவும், பாவமாகவும் இருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் இவர்கள் போன்ற இளைஞர்கள் பலரை இதுபோன்ற ஏமாற்றுக் கருவிகள் விற்க இன்று நிர்ப்பந்தித்திருக்கிறது. நாளை இன்னும் நயவஞ்சகமாக ஏமாற்றி வாழ இப்போதே இவனை தயார் செய்கிறது. அந்தப் பையன்களை எதிர்த்த வீட்டு மேல் மாடியில் போய்க் கேட்டுவிட்டு சலித்த முகத்துடன் கீழே இறங்கும் போது பார்த்தேன். அவன் என்னை முறைத்துப் பார்த்தபடியே படியிறங்கினான்.

மனதின் ஒரு ஓரத்தில் ஒருவேளை அப்பொருள் உண்மையாக இருந்தால்என்று தோன்ற உடனே இணையதளத்தில் தேடினேன். வரிசையாக வந்து விழுந்த கட்டுரைகளைப் படிக்க படிக்க உண்மை விவரங்கள் தெரிந்தன. அத்தோடு மனித விரட்டிபற்றியும் அப்போதுதான் தெரிந்தது.

கொசுவிரட்டிகள் பல்வேறு தொழில் நுட்பங்களில் வந்திருக்கின்றன. வீட்டின் தோட்டங்களில் வவ்வால்கள் வளர்க்கும் இயற்கை முறை(தோல்வியுற்ற வழிமுறை) முதல், அல்ட்ராசானிக் விரட்டி, கொசுப்பிடிப்பான்கள் (நீல ஒளி கொண்டு கவரும் முறை) வரை பட்டியல் நீளுகிறது. கொசுவிரட்டி மருந்துகள், காயில்களில் DEET, இகாரிடின், பெர்மத்ரின் போன்ற செயற்கை வேதிப்பொருட்கள் உள்ளன. கொசுக்கள் இவ்வேதிப்பொருட்களின் வாசனைக்கு ஓடி விடுகின்றன.  இயற்கைப் பொருட்களான வேப்பெண்ணெய், எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய், விளக்கெண்ணெய், சூடம் போன்ற பல பொருட்களுக்கும் கொசுவை விரட்டும் சக்தி உண்டு. நம் நாட்டு மற்றும் கைவைத்திய முறைகளில் இது போன்ற நிறைய இயற்கைப் பொருட்கள் கொசு விரட்டிகளாக உபயோகப்பட்டு வருகின்றன. செயற்கை வேதிப்பொருள்களிலான கொசுவிரட்டிகள் குழந்தைகளுக்கு சுவாசம் சம்பந்தப்பட்ட ஆஸ்த்துமா போன்ற நோய்களை உருவாக்க வாய்ப்பு உள்ளது.

கொசுக்கள் அல்ட்ராசானிக் மீயொலி ஒலியதிர்வுக்கு பயந்து ஓடுகின்றன என்பதை ஆய்வுகள் மறுக்கின்றன. நாய்கள் மட்டும் கேட்கக்கூடிய மீயொலி (அல்ட்ராசானிக் ?) விசில் சத்தங்களைக் கொண்டுதான் காவல்துறை நாய்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
ஆனால் கொசு உட்பட வேறு எந்த வீட்டுப் பூச்சிகளும் இதுபோல எந்த ஒலிக்கும் பயந்ததாகவோ, இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. ஆனாலும் இந்தக் மீயொலி கொசுவிரட்டிகள் விற்பனை இன்னும் இருக்கிறது. சில கொசு விரட்டிகள் வவ்வாலின் சிறகடிப்புச் சத்தம் கொடுத்து அதைக் கேட்டு கொசுக்கள் ஓடுவதாக விளம்பரம் செய்தாலும் அது உண்மையல்ல. இணையதளத்தில் கூட இம்மீயொலிச் சாதனங்கள் விற்கப்படுகின்றன. உதாரணத்திற்கு சில இணைப்புகள் கீழே:

 
மனித விரட்டி
இந்தத் தேடலின் போது தற்செயலாகக் கண்ணில் பட்டது தான் மனித விரட்டி சாதனம். இங்கிலாந்தில் கடந்த 2005ல் கண்டு பிடிக்கப்பட்ட இச்சாதனம், இளைஞர்கள் கூட்டம் கூடி சந்துகளில், கடை வாசல்களில் நின்று அரட்டையடிப்பது, ரவுடித்தனங்கள் செய்வது போன்ற குழுக் கிறுக்குத் தனங்களை தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இச்சாதனத்திலிருந்து வரும் ஒலியானது இளைஞர்கள், குறிப்பாக டீன் ஏஜ் வயதினருக்கு மட்டுமே கேட்கக் கூடிய (17 KHz அதிர்வெண் உள்ள) மீயொலி இரைச்சலை வெளியிடுகிறது. கிங்...கென்று காதில் வலி ஏற்படுத்துமளவு 108 டெசிபல் அழுத்த அளவில் ஒலிக்கும் இந்த இரைச்சலைத் தாங்க இயலாமல் இளைஞர்கள் அவ்விடத்தை விட்டு அகலுகின்றனர். வயதானவர்களால் இந்த அதிர்வெண் ஒலிகளைக் கேட்க இயலாது. எனவே வயதானவர்கள் இவ்வொலிகளால் பாதிக்கப் படுவதில்லை.

மேற்கத்தியவர்களுக்கு பொறுமையும், சகிப்புத் தன்மையும் நம்ம ஊரில் இருக்கும் மனிதர்களை விட கொஞ்சம் குறைவுதான். அதனாலே பெரிய கடைகள், கடைகளின் பின்புற வாயில்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், வீடுகள் போன்ற இடங்களில் வெளிவாயில்களில் இது போன்ற கருவிகள் பொருத்தப்பட்டு இளைஞர்கள் கூடுவதையும், அரட்டை அடிப்பதையும், சுவர்க் கிறுக்கல்களையும் தடுக்கின்றனர். மீயொலியால் கொசுவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லாத அதே நேரத்தில் மனிதர்களை விரட்ட இந்த மீயொலி மனித விரட்டி மிகவும் நேர்த்தியாக செயல்படுகிறது. மேலும் இக்கருவியில் இளைஞர் மட்டுமின்றி கூடியிருக்கும் எல்லா வயதினரையும் விரட்டுவதற்கும் பட்டன் வசதி உள்ளது. இப்பட்டனை அழுத்தினால் வெளிவரும் 8 KHz அதிர்வெண் மீயொலி அளவு கேட்கும் எல்லோரையும் விரட்டும் கடுமை கொண்டது.

விடுவார்களா மனித உரிமை ஆர்வலர்கள்... ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற, இங்கிலாந்தில் சில இடங்களில் போராடி, இக்கருவிகளையும் அகற்ற வைத்தார்கள். கடைசியில் இங்கிலாந்து அரசு தலையிட்டு இக்கருவியை தடை செய்ய இயலாது என அறிவித்துவிட்டது. பிரான்சு போன்ற மற்ற சில ஐரோப்பிய நாடுகளில் இது மனித உரிமை மீறும் கருவியாக குறிக்கப்பட்டுள்ளது. நம்ம ஊர் தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பட்டாசு தூள் பறக்கும் பண்டிகைகளையும், ஆடி, கார்த்திகை, பொங்கல் திருவிழாக்களையும் கணக்கில் கொண்டால் இந்தக் கருவிகள் எல்லாம் நம்மவர்களிடம் பைசாவுக்கு செல்லுபடியாகாது என்று தான் தோன்றுகிறது.

சகிப்புத்தன்மை. சக மனிதனின் சிறு சிறு தொல்லைகளை குழு நோக்கில் சகித்துக் கொள்ளும் தன்மை நம் மக்களுக்கு சற்று அதிகமாக இருக்கிறது என்பது நம் கலாச்சாரத்திலிருந்து வந்த விஷயம் என்று கருதுகிறேன். நல்ல விஷயம் இது. இது இல்லாததால் தான் குடும்பங்கள் முதல் நாடுகள் வரை சிண்டைப் பிடித்துக்கொண்டு சண்டையிடுகின்றன. இல்லையா ?

http://www.themosquitodevice.com/

Wednesday, July 14, 2010

உத்தப்புரம் தரும் பாடம்.

உத்தப்புரத்தில் இடிக்கப்பட்ட சுவரின் பாதை வழியே நடமாட்டத்தை தடை செய்வதை கண்டித்தும், அரச மரத்தில் வழிபாடு நடத்த அனுமதி கோரியும், வேண்டுமென்றே குற்றம் சுமத்தப்ப்ட்டு சிறையில் அடைக்கப்பட்ட 16 தலித்துகளை விடுவிக்க கோரியும் மதுரையில் சுமார் 500-1000 பேர் கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் சிபிஎம் தோழர்கள். டி.கே.ரங்கராஜன் எம்.பி, நன்மாறன் எம்.எல்.ஏ போன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தான் போலிஸ் தடியடி நடத்தி, தலைவர்களை தரதரவென்று இழுத்துச் சென்று தான் யார் என்று நிறுவியது.

இடதுசாரி நண்பர்கள் இந்நிகழ்வில் நிறைய விஷயங்களை கவனிக்கவேண்டும். முதலாவது, இடதுசாரிகள் தாக்கப்பட்டதற்கு எந்தக் கட்சியும் பெரிதாக கண்டனம் செய்யவில்லை. இரண்டாவது, எம்.எல்.ஏ. எம்.பி என்றும் பாராது இருவரும் அடித்து நொறுக்கப்பட்டிருப்பது. மூன்றாவது, அடித்ததை 'தள்ளு முள்ளு' என்று எளிய வார்த்தைகளில் மீடியாக்கள் முடித்துக் கொண்டது. வைகோ, த.பாண்டியன் போன்றோர் இன்று கண்டன அறிக்கைகள் விட்டுள்ளனர்.


உத்தப்புரம் விஷயத்தில் ஜனநாயக முறையில் சிபிஎம் தோழர்கள் வழக்கம்போல் இரண்டுமணி நேரம் ஆர்ப்பாட்டம் என்று, பிள்ளைப்பூச்சியாக உட்கார்ந்துவிட்டுப் போயிருந்தால் இந்தத் தாக்குதல் நடந்திருக்காது. ஆனால் பேச்சுவார்த்தைக்குப் பின் நீங்கள் முடிவெடுத்து முடியுங்கள் 'அதுவரை' நாங்கள் இங்கேயே உட்கார்ந்திருப்போம் என்று போராட்டத்தை தொடர்ந்ததை கண்டிக்கவே இந்தத் தாக்குதல். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் போலீஸ் மாலை 6 மணிக்கே விட்டுவிட்டதை வைத்துப் பார்த்தால் தோழர்களின் 'தொடர்ந்த போராட்டம்' என்ற எண்ணத்திற்கு லேசாக கலைஞர் வைத்த குட்டுதான் இந்தத் தடியடி என்று தோன்றுகிறது.


தாக்கப்படுவதற்கு சற்று முன், டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டியை டி.வி.யில் காட்டினார்கள். அதில் அவர் "உத்தப்புரத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்கவேண்டும் என்று கலைஞர் உத்தரவிட்டதன் பின்னும் காவல்துறை உத்தபுரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தி பலரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.." என்று சொன்னார். அவர் பேசியதன் தொனி 'கலைஞர் சரியாகத்தான் நடந்துள்ளார் ஆனால் அவரது கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை தான் இவ்வாறு நடந்துகொள்கிறது' என்பது போன்று இருந்தது. கலைஞரை குற்றமே சொல்லாமல் காவல்துறையை மட்டும் குற்றம் சொல்லவேண்டிய அவசியம் என்ன ? கலைஞர் சொல்லாமலா அவர்களைப் போட்டு அடித்தார்கள் ? ஏன் கலைஞரை நயந்து பேசவேண்டும்? பின்னால் தேர்தல் கூட்டு சேரமாட்டார்கள் என்று பயமா ? டி.கே.ரங்கராஜன் அப்படிப் பேசியது தவறு.


இத்தாக்குதலிலிருந்து இடதுசாரித் தோழர்கள் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், கலகம் இன்றி நன்மை பிறக்காது. அஹிம்சை வழியில் உண்ணாவிரதம், போராட்டம் என்று 'யாருக்கும் வலிக்காமல்' போராடினாலோ, 'வலியுறுத்தினாலோ' ஆளும் வர்க்கங்கள் 'கண்டுக்காமல்' சரி சரி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு, மரியாதையா கலைஞ்சு போங்க என்று இருப்பார்கள். மீறி நீங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தீர்களாயின் அதன் விளைவு இதுதான். மீறும் போது தான் கலகம் உருவாகும். எனவே நீங்கள் அரசை எவ்வளவு மீறுகிறீர்களோ அவ்வளவு நல்லது.


மாறாக நீங்கள் அரசிடமும், கலைஞரிடமும் பம்முகிறீர்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்குப் போராடாமல் பம்மும் திருமா, கிருஷ்ணசாமி போன்ற தலைவர்களின் மத்தியில் சி.பிஎம் தலித் மக்களை தம்மிடம் ஈர்ப்பதற்காக இந்தப் போராட்டத்தை நடத்தினாலும் அதில் உண்மை இருப்பதால் நாம் அதை ஆதரிக்கவேண்டும். ஆனால் இதைப் போல மற்ற விஷயங்களிலும் இலங்கைப் பிரச்சனை உட்பட தீவிரமாகப் போராடாத வரை, அத்து மீறாதவரை, அது பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ இருக்கட்டும், சாதாரண கீழ்த்தட்டு, கீழ்நடுத்தர மக்களை சிபிஎம் மின் பால் ஈர்ப்பது கடினம்.


இதே போல் அங்கே ‘ஈழப் பிரச்சனை ஐநாவுக்கு அனுமதியில்லை’ என்ற விஷயம் பெரிதாகிய போது நம் தோழர்கள் கருத்து சொல்லவேயில்லை. செந்தமிழ் மாநாட்டின் “அரசியலைப்’ புரிந்துகொள்ளவே தெரியாதவர்கள் போல அங்கு நடந்த கருத்தரங்கில் காரத் பங்கேற்று கலைஞரை வாழ்த்துகிறார். இவையனைத்தும் சிபிஎம் மின் கூட்டணி அரசியல் எண்ணங்களின் அடிப்படையில் செய்யப்பட்டவையன்றி வேறு என்ன ? இது போலத்தான் பெட்ரோலிய விலை உயர்வுக்கு எதிரான போராட்டமும். ‘அமைதியாக’ பந்த் நடத்திவிட்டால் அது ஆளுங்கட்சிக்கு வெற்றி. ஏனென்றால் அமைதியான பந்த்தில் அரசு இயந்திரம் பாதிக்கப்படுவதில்லை. அதன் ‘இமேஜ்’ம் பாதிக்கப்படுவதில்லை. பந்த் நடத்தியதால் அரசு பணிந்திருந்தால் பந்த் வெற்றியடைந்தது என்று பொருள். ஆனால் அரசு பணியவில்லை. இந்நிலையில் இப்போது சிபிஎம்மின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?


இதற்கு சிபிஎம்மிடம் சரியான பதில் இல்லை. பந்த் போன்றதொரு மக்கள் இணைந்த போராட்டத்திற்கே அரசு செவிசாய்க்கவில்லை என்றால் அடுத்த தீவிரமான போராட்டம் என்ன ? போராட்ட வடிவம் என்ன ? அப்படியொரு வடிவம் சிபிஎம் வசம் இல்லாத போது மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற விஷயங்களை நடத்தினால் அரசு வழக்கம் போல் இதையும் கண்டுகொள்ளாது விட்டுவிடும். மக்களும் சிறு சிறு சலுகைகளில் மனத்திருப்தி அடைபவர்களாகிவிட்டதால் இந்தவிதப் போராட்டங்களின் மேல் சலிப்பு அடைவர். இந்தக் குறைகளை சிபிஎம் எப்போது களைந்து போராட்டங்களை பல கட்டங்களாக உறுதியாகவும், தொடர்ச்சியாகவும் கொண்டு செல்ல முற்படுமோ, நடத்தும் போராட்டத்தின் வடிவத்தின் மூலம் அரசை கோபப்படுத்த, நெருக்கடிக்கு உள்ளாக்க முடியுமோ, அன்று மக்களும் சிபிஎம்ன் பின் திரள்வார்கள். அன்று தீவிர, அதிதீவிர இடதுசாரிகளும், வலதுசாரிகளும் கூட ஆதரவளிக்கக் கூடும். இடதுசாரிகள் தீவிர கம்யூனிஸ்டுகள் போல் குண்டுகள் வைக்க வேண்டாம். ஆனால் அது போன்ற அதிர்ச்சியை, செயலிழந்த நிலையை அரசு அடையுமாறு செய்ய வேண்டும். ஒரு சிறு அதிர்ச்சி கூட ஏற்படுத்த இயலாத ‘போராட்டம்’ ஒரு கண்துடைப்பு நாடகமாகும்.

இக்கட்டுரை எழுதிய அடுத்த நாள் காலை செய்தி ஊடகங்களில் மற்றொரு செய்தி. அது சிதம்பரம் கோவிலில் 'நந்தன் பாதை' யை திறக்க வலியுறுத்தி சிபிஎம் தீண்டாமை ஒழிப்பு முண்ணணியின் சார்பாக அதன் தலைவர் பி.சம்பத்  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நந்தன் பாதையை இடித்தே தீருவோம் என்ற முழக்கத்துடன் சென்ற தோழர்களை காவல் துறை கோயில் வாயிலில் தடுத்து நிறுத்தியது. மீற முயன்ற தோழர்கள் 'தள்ளு முள்ளு'க்கு ஆளாயினர். அதாவது அடித்து விரட்டப்பட்டனர். பின்னர் நடந்தது தான் கவனிக்கப்பட வேண்டியது. காவல்துறை சிபிஎம் தலைவர்களுடன் 'பேச்சுவார்த்தை' நடத்தியபின் தோழர்கள் வழக்கம் போல தெற்குவாயில் தெருவில் 'சாலை மறியல்' செய்து கைதாகி வழக்கம் போல் மாலையில் வீடு திரும்பினர். சாயங்காலமே கலைஞர் அறிக்கை விடுகிறார். "கோயிலை தீட்சிதர்களிடமிருந்து அரசு மீட்ட போது தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அரசை கோயிலை தொடர்ந்து பராமரிக்கும் பணியை மேற்கொள்ள அனுமதித்ததுடன், கோவிலில் வேறு எதுவும் புதிய கட்டுமானங்களோ அல்லது பழைய கட்டுமானங்களை இடித்தலோ செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது" என்று.


இதில் உண்மையில் நடந்தது என்னவென்று எனக்குப் புரியவில்லை. ஒன்று சிபிஎம் தோழர்கள் தடையை மீறி நந்தன் சுவரை உடைத்து, அதற்கு போலிஸ் அவர்களை உதைத்து கைது செய்து, அதற்கு தீட்சிதர்கள் ஒருபக்கமும் மறுபக்கம் தோழர்களுக்காக தமிழ்நாடேயும் கொந்தளித்து எழுந்திருந்தால் அது ஒரு சரியான போராட்டம். இல்லை 'கோர்ட் தீர்ப்பை நாங்கள் சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோம் எனவே கலைஞர் சுட்டிக்காட்டிய கோர்ட்டின் தீர்ப்பை மதித்து நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிடுகிறோம்' என்று சிபிஎம் போராட்டத்தை வாபஸ் வாங்கியிருந்தால் அது வேறு வகை. ஆனால் இரண்டும் இன்றி சுவரை உடைத்துவிட்டுதான் மறுவேலை என்று போனவர்கள் காவல்துறையின் ஆலோசனையின் பேரில் சுவரை விட்டுவிட்டு தெருவில் வந்து நின்று வழக்கம் போல் ஆர்ப்பாட்டம் செய்து, வழக்கம் போல் கைதாகி, டிவிக்கு போஸ் கொடுத்தபடி காவல்துறை வேனில் ஏறி, பின் வழக்கம் போல் மாலையில் விடுதலையானார்கள் என்றால் இதன் பொருள் என்ன ? முந்திய நாள் மதுரையில் 'அத்துமீறினால்' என்ன நடக்கும் என்று பாடம் கத்துக்கொண்டதன் விளைவா ? நாம் திருந்த முடியுமா ?