Showing posts with label பசி. Show all posts
Showing posts with label பசி. Show all posts

Friday, April 29, 2011

தெருநாய்களும் கோடீஸ்வரர்களும் - பி.சாய்நாத் - பாகம் 2


தெருநாய்களும் கோடீஸ்வரர்களும் பி.சாய்நாத் - பாகம் 2.

பின் வருவது பத்திரிக்கையாளரும், இடது சாரி பொருளியலாளரும், பேராசிரியருமான பி.சாய்நாத் அவர்கள் கடந்த நவம்பர் 2010ல், சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசிய ஆங்கில உரையின் தமிழாக்கம். (இரண்டு பாகங்களாக பதிவிடப்பட்டுள்ளது.)

பாகம் 1 ஐ படிக்க : http://ambedhan.blogspot.com/2011/03/1.html 

பாகம் 2:
நான் கிராமங்களின் வறுமை பற்றி ஆராய்ந்த பிபிஎல் நிபுணர் குழுவில் இருந்தேன் என்று முன்பே சொன்னேனில்லையா. அப்போது அரசின் திட்டக்குழு (Planning Commission) எங்களுக்கு ஒரு குறியீடு நிர்ணயித்தது. அவர்கள் சொன்னார்கள் நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள். உங்களுடைய ஆய்வை நீங்கள் செய்யுங்கள். ஆனால் வறுமை பற்றிய உங்கள் ஆய்வின் முடிவுகள் எங்கள் முடிவிலிருந்து 20%த்துக்கு மேல் போகாமால் பார்த்துக் கொள்ளுங்கள். பசியை அளவிடும் வழிமுறை இந்தியாவில் எப்படி இருக்கிறது ? இந்திய அரசு எங்களிடம் சொல்கிறது, நாட்டில் பட்டினி கிடக்கும் எல்லா மக்களுக்கும் நம்மால் உணவு வழங்க முடியாது. எனவே நாம் எவ்வளவு பேருக்கு உணவு வழங்குவோமோ அவ்வளவு பேர் தான் பசித்தவர்கள் எண்ணிக்கை. அதாவது பசி என்பது பசித்திருக்கும் மக்களின் எண்ணிக்கை அல்ல. பசி என்பது எவ்வளவு பேருக்கு நாம் உணவு வழங்கத் தயாராயிருக்கிறோமோ அவ்வளவு மட்டுமே. ஏனென்றால் 9% வீதத்தில் வளர்ந்து வரும் நம் பொருளாதாரத்தில் பசித்தவருக்கு உணவிட மட்டும் பணமில்லை. ஆனால் 500 ஆயிரம் கோடிகள் தனியார் நிறுவனங்களுக்கு வரித் தள்ளுபடிகள் செய்ய, போர்ப்ஸ் பத்திரிக்கையின்(Forbes magazine) கோடீசுவரர்கள் பட்டியலில் உள்ள 4 12 பேருக்கு வரித் தள்ளுபடி(tax write off) என்று அரசுக்கு வரவேண்டிய வரியை வேண்டாம் என்று சொல்ல மனமிருக்கிறது இந்த அரசுக்கு. இந்த 4 பேர் யார் ? இவர்கள் போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பெரிய மனிதர்கள். தவிரவும் பொழுதுபோக்கு வரித் தள்ளுபடியும் இந்த 4 பேர் பெறுகிறார்கள் : முகேஷ் அம்பானி, விஜய் மல்லையா, ஜி.எம். ராவ் மற்றும் டி.என்.எப் ஐச் சார்ந்த டி.கே. சிங். என்ன பொழுதுபோக்கிற்காக் இவர்கள் வரித் தள்ளுபடி பெறுகிறார்கள்? ஐபிஎல். இந்திய முதன்மை கழகம்(IPL). ஐபிஎல் மகாராஷ்டிர அரசிடமிருந்து உதவித் தொகைகள் பெறுகிறது. மேற்கு வங்கத்தைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் அவர்கள் கேளிக்கை வரித் தள்ளுபடி பெற்றிருக்கிறார்கள். மஹாரஷ்டிராவில் இத்தள்ளுபடி பணம் 12 கோடி ரூபாய். சலுகை விலையில் மின்சாரம் பெற்றார்கள். பொது அரங்க மைதானங்களை கிள்ளுக்கீரை வாடகைகளில் பெற்றார்கள். காவல்துறை பாதுகாப்பை சலுகையாகப் பெற்றார்கள். மஹாராஷ்ட்டிராவின் முன்னாள் டி.ஜி.பி யைக் கேளுங்கள். பாதுகாப்பிற்குச் சென்ற ஒவ்வொரு போலீசுக்காரரின் தினப்படி(பேட்டா) அவரது ஒரு நாள் சம்பளத்தை விடக் குறைவு. இந்தச் சலுகைகள் எல்லாமே போர்ப்ஸ் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ள நான்கு பேருக்காக. ஆனால் நமக்கு பசித்தவர்களுக்குச் செலவிட பணமில்லை; விவசாயத்திற்குக் கடன்பட்டுச் சீரழிந்து மணிக்கு 2பேர் வீதம் செத்துப்போய்க்கொண்டிருக்கும் (இவ்வருடத்தில் இதுவரை 16500 பேர்) விவசாயிகளுக்கு கடன் தரப் பணமில்லை.

பசியை அளவிட இன்னொரு வழிமுறையும் இருக்கிறது. முத்தாய்ப்பாக அதைப் பற்றிச் சொல்லி பசிப் பிரச்சனை விவாதத்தை முடிக்கிறேன். புதிய திறந்த பொருளாதாரக் கொள்கைப் படி, பழைய பொருளாதாரக் கொள்கைப்படி பசி என்பது என்ன? உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சர் மாண்டேகு அலுவாலியாவின் இடத்தில் என்னை வைத்துப் பார்க்கிறபோது, இது ரொம்ப குரூரமானது என்றாலும், பசியும் தாகமும் உலகெங்கும் தினமும் உற்பத்தியாகும் இரண்டு மிகப்பெரிய பணப்பயிர்கள் எனலாம். இவற்றில் ஈடுபட்டிருப்பவை உலகின் மிகப் பணக்காரக் கம்பெனிகள்; ஆறு கம்பெனிகள் உலகின் உணவு வினியோகத்தையும், 4 கம்பெனிகள் உலகின் தனியார் தண்ணீர் வினியோகத்தையும் கையில் வைத்துள்ளன. பசியிலிருந்து எவ்வளவு அறுவடைகள் செய்யப்பட்டிருக்கின்றன தெரியுமா? நாம் ஆபத்தை விதைத்து பசியை அறுவடை செய்திருக்கிறோம். பசி என்பது ஏற்கனவே கவர்ச்சிகரமான இன்னும் லாபம் தரும் பயிராக உலகெங்கும் ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. நாம் எப்போதும் உணவு வினியோகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் உணவு உற்பத்தியை யார் கைக்குள் வைத்திருக்கிறார்கள் என்று பார்ப்பதில்லை. அரை டஜன் பன்னாட்டு நிறுவனங்களே அவை; அதில் 4 கம்பெனிகள் உலகின் விதை உற்பத்தியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளன (அதாவது விவசாயத்திற்குத் தேவையான விதையை இவர்களிடமிருந்து தான் விவசாயிகள் வாங்க வேண்டும்). இது தான் பசி. பசியும் தாகமும் தான் இந்தக் கிரகத்தில் இன்று வருமானம் கொழிக்கும் மிகப்பெரிய தொழில்கள்.

இப்போது வேறு என்ன இருக்கிறது பேச? பேசப்பட்டது உணவு நெருக்கடி. விவசாய நெருக்கடி என்னவானது 1997க்கும் 2008க்கும் இடையே 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். சரியாகச் சொன்னால் 1,99,132. இந்தப் புள்ளி விவரங்கள் முழுமையாக இல்லாததால் நான் குறைந்த பட்சம் 2 லட்சம் பேர் என்று தான் கூறுவேன். மிக நம்பகமான புள்ளிவிவரம் தரும் அமைப்பு தேசிய குற்றவியல் ஆவண மையம் (National Crime Records Bureau –NCRB) தான். ஆனால் அரசு இவ்வமைப்பிடமிருந்து தகவல்கள் பெறுவதை நிறுத்திவிட்டது. ஏனென்றால் இந்தப் புள்ளிவிவரங்கள் நம்மை வெட்கப்பட வைக்கும் அளவு மோசமானது எனவே அரசு தானே சில எண்களை நாடாளுமன்றத்தில் தரகிறது. 2007 வரை நாடாளுமன்றத்தில் ஏதாவது கேள்விகள் எழுப்பப்பட்டால் ஷரத் பவார் ஐயா அவர்கள் தே.கு.ஆ.மை (NCRB) யின் ஆவணங்களிலிருந்து தான் விவரங்கள் குறிப்பிடுவார். 2008லிருந்து அவர் NCRBயிலிருந்து புள்ளிவிவரங்கள் குறிப்பிடுவதை தவிர்க்க ஆரம்பித்து விட்டார். தனது சொந்த அரசில் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு பிரிவாயிருந்தாலும் கூட. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை விட நீங்கள் சரியாக புள்ளி விவரங்களைச் சொல்லமுடியாது. ஆனால் சிதம்பரத்தின் கீழ் வரும் இந்த அமைப்பு சொல்கிறது இவ்வளவுதான் சாவு எண்ணிக்கை என்று. ஆனால் நான் சொல்கிறேன் அது இதை விட மோசமான அளவிற்கு அதிகம். ஆனால் அத்தற்கொலைகளை கணக்கிட நமக்கு வழி இல்லை.
ஏன் என்று பார்ப்போம். தற்கொலைகளில் மூன்றில் இரண்டு பங்கு நல்ல நிலைமையிலிருக்கும் என்று சொல்லப்படும் 5 மாநிலங்களில் உள்ள ஏழ்மையான பகுதிகளில் நிகழ்ந்திருக்கிறது. ஏனெனில் நெருக்கடி நிலையானது எப்போதும் ஏழைகளை நோக்கியே நகர்கிறது. எது மிகப் பணக்கார மாநிலம் ? எங்கே பங்குச் சந்தை இருக்கிறது ? எங்கே முதலீட்டாளர்களின் சொத்து குவிந்திருக்கிறது ? மும்பை, மகாராஷ்ட்ரா மாநிலம். இந்த 2 லட்சம் தற்கொலைகளில் 41,044 மஹாரஷ்ட்ராவில், திரு முகேஷ் அம்பானியின் வீடு இருக்கும் மாநிலத்தில் நடந்துள்ளது. இங்கு தான் இந்தியாவின் 49 கோடிசுவரர்களில் 21 பேரின் விலாசம் உள்ளது. அவர்கள் உண்மையில் ஜெனிவாவில் கூட இருக்கலாம் ஆனால் அவர்களது விலாசம் மற்றும் குடியிருப்புகள் மும்பையில் இருக்கின்றன. மும்பை மாநகர் இருக்கும் அதே மஹாராஷ்ட்டிரா மாநிலம். 41,4040 தற்கொலைகள்..

ஒவ்வொரு மாநிலத்திலும் சில நூறு தற்கொலைகள் வருடந்தோறும் நடக்கின்றன. நீங்கள் மாநிலங்களை மஹாராஷ்ட்டிராவுடன் ஒப்பிட விரும்பினால் அடுத்து எண்ணிக்கையில் நிற்பது மே.வங்க மாநிலம் தான்.
மக்கள் தொகை மஹாராஷ்ட்டிரா 10 கோடி, மே.வங்கம் 9 கோடி. ஆனாலும் மே.வங்கத்தின் விவசாயிகளின் எண்ணிக்கை மஹாராஷ்ட்டிராவை விட மிக அதிகம். மே.வங்கம் அதிகப்படியான கிராமிய மாநிலம். நிலச் சீர்திருத்தங்கள் செய்து விவசாயிகளுக்கு நிலங்கள் பங்கிட்டுக் கொடுத்திருப்பதால் விவசாய மக்கள் தொகை அங்கு அதிகம். மஹாராஷ்ட்டிராவில் 43% ஏற்கனவே நகர்ப்புறமாகிவிட்டது. ஆனால் விவசாய தற்கொலைகள் மே.வங்கத்தை விட 3.5 மடங்கு அதிகம். எனவே எதுவோ மஹாரஷ்ட்டிரா விவசாயிகளை முழுதாக அழித்துக்கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது. என்ன அது ? மஹாராஷ்ட்டிராவின் விவசாயிகள் மே.வங்க விவசாயிகளை விட வசதியானவர்களாக இருந்தும் ஏன் நிறையச் சாகிறார்கள் ? மஹாராஷ்ட்டிராவினுள் விதர்பா, மாரத்வாடா மற்றும் அவினாள் பகுதிகள். ஆந்திராவில் ராயலசீமா, தெலங்கானாவின் சில பகுதிகள் மற்றும் கோசலம் போன்ற பகுதிகளிலும் இத் தற்கொலைகள் இருக்கின்றன. தற்கொலை நடைபெறும் இந்த எல்லாப் பகுதிகளிலும் பொதுவாக இருப்பது எது இவ்வெல்லாப் பகுதிகளிலும் வர்த்தகமயமான விவசாயம் இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாப் பகுதிகளிலும் பணப்பயிர்களே(cash crops - (எள், ஆமணக்கு, சூரியகாந்தி போன்றவை) விளைவிக்கப்படுகின்றன. உணவுப் பயிர் விளைவிக்கும் சில விவசாயிகளே தற்கொலை செய்து கொள்கின்றனர். விதர்பாவை எடுத்துக்கொண்டால் 7 வருடங்களில் நான் பார்த்தது ஒரே ஒரு நெல் விவசாயியின் தற்கொலை. ஒன்றே ஒன்று.

5 மாநிலங்களில் உள்ள 750 விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்றுள்ளேன். உணவுப் பயிர் விளைவிக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை மிக மிகச் சொற்பமே. எனது கணக்கீட்டின் படி இது 1% கூட வராது. ஏன் பணப்பயிர் விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொள்கின்றனர் ?  விவசாயம் சுமாராய் இருக்கும் போது நீங்கள் ஒரு பிழைப்பு விவசாயி, சிறு விவசாயி, நடுத்தர விவசாயி. சுமாராய் இருந்த விவசாயம் மோசமாகி படுத்துவிட்டால் குறைந்த பட்சம் நீங்கள் உங்கள் வயலில் விளைந்த உணவுப் பொருளையாவது சாப்பிட்டு தப்பித்துக் கொள்ளலாமில்லையா ? தமிழ்நாடு கூட கவலைக்கிடமான இடத்தில் இருக்கிறது. உங்களின்(தமிழ்நாட்டின்) விளைச்சல் முறைகளில், பயிர்களில் மற்றும் விவசாய முறைகளில் தமிழ்நாடு மிகக் கவலைக்கிடமாக இருக்கிறது. மஹாராஷ்ட்டிராவைக் காட்டிலும் நல்ல மக்கள் நல அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது. எனவே அதனால் கொஞ்சம் பாதிப்பு குறையலாம். ஆனால் உங்களது விவசாயத்தின் தற்போதைய போக்கு மகிழ்ச்சிக்குரியதோ அல்லது ஆரோக்கியமானதோ அல்ல. உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் பார்த்தால் இன்னும் தெளிவாகும்.

எது இதை நிகழ்த்தியது ? ஏன் பணப்பயிர் விவசாயிகள் தற்கொலை செய்ய ஆரம்பித்தார்கள்?  10-15 வருடங்களுக்கு முன் இவர்கள் எல்லோரும் உணவுப் பயிர் விவசாயிகளாக இருந்தார்கள். திறந்த சந்தைப் பொருளாதாரமும், பொருளாதார சீர்திருத்தங்களும் அவர்களை நயந்து பேசி, வற்புறுத்தி, துன்புறுத்தி படிப்படியாக பணப்பயிர்களை விளைவிக்கச் செய்யும் வரை. ஏனெனில் ஐ.எம்.எப் (IMF)ன் தாரக மந்திரம்விவசாயப் பயிர் ஏற்றுமதிக்கே. அதில் தான் பெரும் பணம் இருக்கிறது என்பதே. இந்தப் பயிர் மாற்றத்தில் நாம் வாழ்க்கைப் பாதுகாப்பில்லாத எளிதில் அழிந்து போகும் ஆபத்தில் உள்ள விவசாயிகளை ஈடுபடுத்தி அவர்களை அரை டஜன் பல்தேசிய கம்பெனிகள் (Multinationals) கட்டுப்படுத்தும் உலகளாவிய சந்தை விலையின் சட் சட்டென்று மாறும் நிலையில்லா தன்மையை நோக்கி தள்ளிவிட்டு விட்டோம்..

மே.வங்கத்தைப் பார்த்தீர்களென்றால் உச்சபட்ச விவசாய தற்கொலைகளின் காரணம் தேயிலைத் தோட்டங்கள் தான். டாடா குழுமத்தினர் திடீரென்று ஒரு நாள் உள்ளே வந்து நுழைந்தனர். தேயிலைத் தோட்டங்கள் முழுதும் அவர்கள் வசம் இப்போது. கேரளாவிலும் அவர்கள் தேயிலைத் தோட்டங்களுக்குள் நுழைந்தனர். கேரளாவில், குறைந்த பட்சம் தொழிற்சங்கங்கள், அதாங்க நீங்கள் அசூயையாகப் பார்க்கும் யூனியன்கள், சிஐடியூ தேயிலைத் தோட்டங்களைக் கையில் எடுத்துக் கொண்டது. ஆனால் அவர்களிடம் விநியோக அமைப்பும், சந்தை விற்பனை அமைப்பும் இல்லை. அதனால் மாலிக்குகள் போன்றவர்களுக்குக் கிடைக்கும் தேயிலை விலையில் 4இல் அல்லது 3இல் ஒரு பங்கு தான் கிடைக்கிறது. உலகளாவிய தேயிலை விலை மோசமடைந்த போது கார்ப்பரேட்டுகள் தங்கள் தொழிலாளிகளை நட்டாற்றில் விட்டுவிட்டு போய்விட்டன. தொழிலாளிகளும் மக்களும் சாகிறார்கள் எனவே நீங்கள் திரும்பவேண்டும் என்று இடது சாரி அரசுகள் இந்த முதலாளிகளிடம் போய்க் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டதை நாம் பார்த்தோம்.
எங்கு பார்த்தாலும் பணப்பயிர்கள். புதிய திறந்த பொருளாதாரத்தின் அடிச்சுவட்டில் பணப்பயிர் ஏற்றுமதி - நிறைய பணம் மேலும் பணம். நீங்கள் ஒரு உணவுப் பயிர் விவசாயி எனில் எல்லாம் மோசமாகிப் போகும் போது குறைந்த பட்சம் நீங்கள் உங்கள் உணவுப் பயிரையாவது தின்று வாழ்ந்து விடலாம். என்ன நடந்தாலும் உங்கள் நெல்லை நீங்கள் சாப்பிட்டுக் கொள்ள முடியும். ஆனால் உங்களது பருத்தி பயிரை நீங்கள் சாப்பிட முடியாது. அது செரிமானத்திற்கு மிகக் கடினம். எனவே மக்கள் பூச்சிக் கொல்லி மருந்தை சாப்பிடுகிறார்கள்.

இத்தற்கொலைகள் பற்றிய இந்திய அரசின் ஏன் அரசு புள்ளிவிவர நிறுவனமான NCRBன் புள்ளி விவரங்கள் எல்லாம் போலியானவை என்று நான் காட்ட முடியும். நான் NCRBயை மதிக்கிறேன். அவர்கள் போலி மதிப்பீடுகளைத் தருவதில்லை தான். ஆனால் போலி மதிப்பீடுகள் மாநில அரசிடம் நுழைந்திருப்பதைக் காட்டுகிறேன். அதன் புள்ளிவிவரப்படி விவசாயிகள் தற்கொலைகளின் எண்ணிக்கை 1,99,132. பூச்சிக் கொல்லி மருந்து உண்டு இறந்த தற்கொலைகள் எண்ணிக்கை 2,60,000. பூச்சிக் கொல்லி மருந்து சாப்பிட்டுச் சாவது எப்போதுமே ஒரு விவசாயிதான். ஏனென்றால் அவனிடமிருக்கும் மிக எளிதான ஆயுதம் அதுதான். சரி கூடுதலாக உள்ள 70 ஆயிரம் பேர் யார்? அவர்களில் பெரும்பான்மையோர் பெண் விவசாயிகள். அவர்கள் விவசாயத் தற்கொலைக் கணக்கீட்டின் கீழ் சேர்க்கப்படுவதில்லை. ஏனென்றால் பெண்கள் விவசாயிகளாகக் கணக்கிடப்படுவதில்லை. ஏனென்றால் இச்சமூகம் பெண்களுக்கு நில உடமையாளர், விவசாயி என்ற அந்தஸ்தை அளிப்பதில்லை. அவர்களுக்கு நில உரிமைகள் கிடையாது. அவர்கள் விவசாயிகளாக எண்ணப்படுவதில்லை ஆகையால் அவர்களின் தற்கொலைகள் 70 ஆயிரம் தனியாக கணக்கிடப்பட்டிருக்கிறது. உண்மையில் விவசாயத் தற்கொலைகளுக்கும், பூச்சிக் கொல்லி தற்கொலைகளுக்குமிடைப்பட்ட வித்தியாசம் மிக மிகக் குறைவு. மாணவர்கள் எங்காவது தங்களது அறைகளில் பூச்சிக் கொல்லி மருந்து வைத்திருப்பார்களா ?  ஒரு ஆட்டோ மொபைல் எஞ்சினியர் பூச்சிக் கொல்லி மருந்தை அறையில் வைத்திருப்பாரா? ஒரு தொழிலதிபர் தனது அறையில் பூச்சிக் கொல்லி மருந்து வைத்திருப்பாரா? தயவு செய்து கவனியுங்கள். அதிக எண்ணிக்கையிலான விவசாயத் தற்கொலைகள் நடக்கும் காலம் பூச்சி மருந்து அடிக்கும் காலம் ஏனெனில் பூச்சிமருந்து பாட்டில் விவசாயியின் கையில் இருக்கும். ஒரு கணத்தில் தோன்றும் மன அழுத்தம், அவன் செத்துப் போவான். பூச்சிமருந்து அடிக்கும் காலமே நிறைய தற்கொலைகளை சந்திக்கிறது.

அதற்கடுத்தாற் போல் அதிக அளவு தற்கொலைகள் நடப்பது விளைச்சலை சந்தையில் விற்கும் போது வியாபாரிகளும், தரகர்களும் பேசி வைத்துக் கொண்டு சதி செய்து விலையைக் குறைக்கும் சமயங்களில். அது இந்தியாவோ, அமெரிக்காவோ, அல்லது ஆப்பிரிக்காவோ எங்கென்றாலும் விவசாய உற்பத்திப் பொருட்கள் விவசாயியிடம் இருக்கும் வரை விலைகள் எல்லாம் மிகக் குறைவு. அதே பொருட்கள் பணியா எனப்படும் தரகு வியாபாரிகளிடமும், இடைத் தரகர்களிடமும் போகும் போது விலை அதிகமாகிவிடும். அமெரிக்காவின்(United States) மேற்குப் பகுதிக்குப் போனால் நீங்கள் அதிக அளவு விவசாயத் தற்கொலைகளைப் பார்க்க முடியும். அதே நிலை தான் இங்கும். இன்று இங்கு பணியாக்களும் தற்கொலை செய்து கொள்ள ஆரம்பித்து விட்டனர் ஏனெனில் அவரகளின் வேலையையும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பறித்துக் கொண்டுவிட்டன. ரிலையன்ஸ் ப்ரெஷ், கோத்ரஜ் நியூட்ரல். இப்போது பணத்தரகர் சூட், கோட், டை அணிந்து நிற்கிறார். இவர்கள் நவீன பணத் தரகர்கள். க்ரிஷி கேந்த்ராவை நடத்தி வருபவர் ஒரு புதிய பணத் தரகர். அவர் தான் விவசாயிக்கு விதைகளை விற்பவர். இவர்கள் எல்லாம் சேர்ந்து விலையை பன்மடங்கு உயர்த்தி விட, விவசாயி பட்ட கடனுக்கான வட்டி நாளுக்கு நாள் ஏறுகிறது.

இந்த விவசாயத் தற்கொலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. தற்கொலை என்பது எந்த சமூகத்திலும் எப்போதாவது நடந்து கொண்டே இருக்கும். அது மாணவர்களோ அல்லது வேறு இனமோ. ஆனால் விவசாயிகளின் தற்கொலை விகிதமானது விவசாயி அல்லாதாரின் தற்கொலை விகிதத்தைப் போல் இருமடங்கு அதிகம். இது முக்கியமாக நோக்கப்பட வேண்டிய விஷயம். குறிப்பாக அந்த 5 மாநிலங்களில். இதைப் பற்றி நான் எவ்வாறு ஆணித்தரமாகப் பேசுகிறேன் ? இது பற்றிய நம்பகமான ஆய்வு செய்தவர் உங்களில் (தமிழர்) ஒருவர் என்பதை பெருமையாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர் பெயர் டாக்டர். கே.நாகராஜ். முன்பு MIDS உடன் இருந்தார்; தற்போது ஆசியன் இதழியல் கல்லூரியில்(Asian College of Journalism) இருக்கிறார். மஹாராஷ்ட்டிர மாநிலம் 13 ஆய்வுகள் செய்துள்ளது. அவர்கள்(அரசு) ஆய்வுகள் செய்து கொண்டேயிருக்கிறார்கள் ஏனென்றால் நீதிமன்றங்கள் அவர்களை சதா திட்டிக்கொண்டே இருக்கின்றன. இதில் 13வது ஆய்வுக்கு தலைமை தாங்கியவர் திரு விலாஸ்ராவ் தேஷ்முக். இந்த ஆய்வு முற்றிலும் என்னை புறக்கணிப்பதற்காகவே செய்யப்பட்டது. மும்பை மிர்ரர் பத்திரிக்கை முதல் பக்கத்தில்  இவ்வாறு எழுதியிருந்தது சாய்நாத் மஹாரஷ்ட்டிராவை இழிவு படுத்துகிறார். புரபசர் நரேந்திர ஜாதவ் அவருடைய செயல்களுக்காக பாராட்டப்பட்டு திட்டக்குழுவின் (Planning Commission) உறுப்பினராக்கப்படுகிறார்.  NACயில் அருணா ராய் மற்றும் ஜான் ட்ரேஸை சமர்ப்பித்த பகுதியளவாவது ஒருங்கிணைக்கப்பட்ட பொதுவிநியோக முறையைக் கூட எதிர்ப்பது யார் என்று நினைக்கிறீர்கள் ? இவர் தான். ஒரு விவசாய வீட்டைக்கூட சென்று பாராமல் அறிக்கைகள் எழுதக் கூடியவர்.  நாகராஜனினிடமிருந்து கடன் வாங்கிக் கொண்டு நம்மைத் தாக்குகிறார், நமது புள்ளிவிவரங்களைக் கொண்டே. இதன் மூலம் நமது தகவல்கள் நமக்கு உரியவைதான் என்பதை அங்கீகரித்துவிடுகிறார்.

இருந்தும் அரசு ஏன் வறுமை, பசி, தற்கொலைகள் பற்றிய இந்த அறிக்கைகளை தயாரிக்கச் செய்கிறது? 12 அறிக்கைகள் முன்பு. TIS (Tata Institute of Socical Sciences) சமூக அறிவியலுக்கான டாடா கழகம் அங்கே(கிராமங்களுக்கு) சென்றுவிட்டு சூழ்நிலை மிக மோசமாக இருக்கிறது என்றது. அவர்களை அங்கே போகவைத்தது மும்பை உயர்நீதி மன்றம். டி.ஐ.எஸ் இன் அறிக்கையைப் பார்த்த மஹாராஷ்ட்டிர அரசு அது முழுக்க முழுக்க தாராளவாதிகளைக் கொண்டது என்று நினைத்தது. சரி இன்னும் வலது சாரி சார்புடைய நிறுவனத்தை அனுப்பலாமே என்று நினைத்தது. எனவே அடுத்ததாக இந்திரா காந்தி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் அனுப்பப்பட்டது. இதன் தலைவராக இருந்த கிரித் பாரிக் என்பவர், ஒரு அறிவு ஜீவி, என்ரான் ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தவர் திடீரென ஒருநாள் காலை ஆதரவாளராக மாறினார். என்ன காரணம் என்பது நீங்கள் ஊகிப்பது தான். அப்படிப்பட்ட இந்திரா காந்தி ஆராய்ச்சிக் கழகம் சிரீஜித் மிஸ்ரா என்ற இளைஞரை அனுப்பியது. சிரீஜித் மிஸ்ராவோ டி.ஐ.எஸ் இன் ஆய்வுக் காலத்தை விட நிலைமை இன்னும் மோசமாக உள்ளது என்று அறிக்கை தந்துவிட்டார். அவர்கள் வேறு ஒரு கழகத்தை அனுப்ப அவர்களும் நிலைமை இன்னும் மோசம் என்றே அறிக்கை தந்தார்கள். இப்போது என்ன செய்ய ? மஹாராஷ்ட்டிர அரசு வேறுவழியின்றி நடந்த தற்கொலைகளை, பட்டினிச் சாவுகளை 'ஆம் இருக்கிறது' ஒப்புக் கொண்ட செய்தியை சென்னையிலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிக்கைக்கு அளித்தது. இதில் வேடிக்கை என்னவெனில் இந்தப் பத்திரிக்கை மராத்தியில் வெளிவருவதில்லை எனவே மஹாராஷ்ட்டிராவில் இந்தக் கணம் வரை எந்த மராத்தி ஊடகத்திற்கும் இது பற்றித் தெரியவே தெரியாது அல்லது தெரிந்தும் இதைப் பற்றி எழுதவே இல்லை.

எப்போது தற்கொலைகளை ஊடகங்கள் கண்டுகொண்டன?  டாக்டர் எம்.எஸ். சாமிநாதன் விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக வரும்போது. அவர் அங்கே வருகை தந்தார். அவர் வந்து இருப்பதால் அவருக்கு காபினெட் அமைச்சருக்கான அந்தஸ்து அளிக்கப்பட்டது. டாக்டரை அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைய அமைச்சர் வரவேற்க வருகிறார். உடனே ஊடகம் அதைக் காட்டுகிறது. இந்த கேபினட் அமைச்சர் கூட நாம் அழைத்ததால் தான் இங்கு வந்தார். மராத்தி ஊடகங்கள் இதைக் காட்ட ஆரம்பித்தன. பின்னர் மராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டன. பின்னர் பிரதமரே வந்தார். இது அவர்களை மிகவும் கோபத்துக்குள்ளாக்கியது. 2008ல் என்ன காரணத்தாலோ ராகுல் காந்தியும் வருகை தந்தார். அதன் பின்னர் யாதவ் கமிட்டியை நீங்கள் ஆராய்ந்தவரை போதும் என்று போகச்சொல்லிவிட்டார். பின்னர் வந்த அசோக் சவான் பதவியேற்ற போது என்னைப் பற்றிச் சொன்னது இது யார் இந்த ஆள் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வந்துகொண்டு ?”. நான் ஆந்திராவிலிருந்து வந்தவனல்ல. நான் சென்னை மாநகரில் வசிக்கும் ஒரு தெலுங்குக் காரன்.
அவர் யார் இந்த ஆள் ஆந்திராவிலிருந்து வந்து கொண்டு நம்முடைய மராத்தி விவசாயிகள் பற்றி ஆராய்வது..?” என்று கூறிய போது நான் சந்தோஷமடைந்தேன். ஏனெனில் மார்ச் 2003இல் ஆந்திர சட்டசபையில் சந்திரபாபு நாயுடு யார் இந்த ஆள் பம்பாயிலிருந்து வந்து கொண்டு ஆந்திர விவசாயிகளைப் பற்றி நமக்கே பாடம் எடுப்பவர் ?” என்றார். இனிமேல்  நான் சத்தீஷகருக்குத் தான் செல்ல வேண்டும்.

இது தான் இந்தத் தற்கொலைகள் நிகழ்வதன் தீவிரம். நூற்றுக் கணக்கான அறிக்கைகள். விதர்பாவிற்கு குறும்பட(documentary) இயக்குநர்கள் வர ஆரம்பித்ததும் பின்னர் பிரதமர் வந்ததும் அவர் பின்னாலேயே டி.வி சேனல்கள் வந்ததும் இப்போது விதர்பா விவசாயிகள் சங்கத் தலைவர் கிஷோர் திவாரி சொல்கிறார் நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று. விதர்பாவில் இப்போது விவசாயிகளை விட அதிகமாக சினிமா எடுப்பவர்கள் தான் நிரம்பியிருக்கிறார்கள். விளைநிலத்தில் வேலை செய்பவர்களை விட அதிகமான எண்ணிக்கையில் கமிஷன்கள் போடப்பட்டிருக்கின்றன. இது இத்துடன் நின்றுவிடாது. இது நமக்கு தேவைப்படுகிறது ஏனெனில் இந்த அறிக்கைகளை அடிப்படையாக வைத்து தான் நீதிமன்றங்கள் அரசை விமர்சிக்கின்றன. நான் வலியுறுத்த விரும்புவதெல்லாம் இந்த துர்நிகழ்வுகள் அனைத்திற்கும் காரணம் மத்திய மாநிலஅரசுகளின் விவசாயக் கொள்கையே என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது என்பதை.

உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன். 50% விவசாயக் கடன்கள் நகரங்களிலேயே கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லியிருக்கிறேன். மாநகர் வங்கிக் கிளைகளிலும், நகர வங்கிக் கிளைகளிலும் மட்டும். இப்போது வேறு ஒரு விஷயமும் சொல்கிறேன். TISS ஐச் சார்ந்த டாக்டர் டி.ராமக்குமார் மற்றும் பல்லவி சவான் ஆகியோரின் EPW பற்றிய அருமையான ஆய்வு அது. அதில் தரவுகள்(Data) 2006-07 வரை உள்ளன. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது தினமும் சொல்வார் நாங்கள் விவசாயக் கடனை இருமடங்காக உயர்த்தியுள்ளோம்; மும்மடங்காக உயர்த்தியுள்ளோம் என்று. பிறகு சொல்வார் 300 ரூபாயாக இருந்ததை 900 ரூபாயாக உயர்த்தியுள்ளோம் என்று. அவர் ஏன் சதவீதங்களாகத் தராமல் எண்களாகத் தருகிறார்? அவர்கள் ஒரு போதும் சதவீதங்களாகச் சொல்லமாட்டார்கள் ஏனென்றால் சதவீதங்களில் பார்த்தால் விவசாயக் கடன்கள் குறைந்து கொண்டே வருகின்றன. 600 ரூபாய் அதிகப்படுத்தியது என்பது 9% வீதத்தில் வளரும் பொருளாதாரத்தில் பார்த்தால் ஒரு தொகையேயில்லை. நீங்கள் அந்த கடன் அதிகரிப்பு வீதத்தை சதவீதத்தில் பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் ஒப்புமைப்படுத்தி அதிகரித்திருக்க வேண்டும். இல்லையா ? இல்லை. ஆனால் பிரணாப் சொல்கிறார் நான் 2003ல் அவர்களுக்கு 1000 ரூபாய் கொடுத்தேன். இப்போது 3500 ரூபாய் கொடுக்கிறேன் என்று. நீங்கள் யார் மக்கள் பணத்தை மக்களுக்குக் கொடுப்பதற்கு இவ்வளவு சலித்துக் கொள்ள?

ராமக்குமாரும் பல்லவி சவானும் தங்கள் ஆய்வில் இதை நிரூபிக்கிறார்கள். 2001க்கும் 2006க்கும் இடையே தொகை 25000 ரூபாய்க்கும் குறைவான கடன்கள் வழங்கியது சரிபாதியாகக் குறைந்துள்ளது. யார் 25000க்கும் கீழே கடன் வாங்குவார் ? ஏழை விவசாயி; விளிம்பு நிலை விவசாயி; சிறு விவசாயி. எனவே அதிகரிக்கப்பட்ட கடன் தொகை இவர்களைச் சென்று சேரவில்லை என்றாகிறது. 25000க்கும் கீழே கடன் தொகையாக பெறப்பட்ட கடன்கள் 50% க்கு மேல் குறைந்திருக்கிறது. தலித்துகள், ஆதிவாசிகள், விளிம்புநிலை விவசாயிகள், நில உடமையல்லாத விவசாயிகள் (தலித்துகளுக்கும் ஆதிவாசிகளுக்கும் எப்போதும் நிலப்பட்டாக்கள் வழங்கப்பட்டதில்லை); இவர்கள் எல்லாரும் பெறும் கடன்கள் மிகக் குறைவு. எந்தக் கடன்கள் அதிகரித்திருக்கின்றன ?  உங்களால் ஊகிக்கமுடியுமா ? 25000 மேற்பட்ட கடன்களோ, 50000க்கு மேற்பட்ட கடன்களோ அல்ல. 10 கோடி மற்றும் 25 கோடி ரூபாயைத் தாண்டிய கடன்களே உயர்ந்திருக்கின்றன. 25 கோடி ரூபாய் கடன் வாங்கும் எந்த விவசாயியை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள் ?  நீங்கள் சொல்லலாம் அமிதாப் பச்சன் என்று. ஏனென்றால் அவர் தான் தாம் ஒரு விவசாயி என்று நிரூபித்து மேலும் இடங்கள் வாங்க இருக்கிறார். மஹாராஷ்ட்டிராவிலும் அவர் நிலங்கள் வாங்கி வைத்திருக்க நீதிமன்றத்தில் உத்திரப் பிரதேசத்திலிருந்து தான் விவசாயி என்று ஆவணங்கள் சமர்ப்பித்து போராடிக் கொண்டிருக்கிறார். முகேஷ் அம்பானியும், அமிதாப் பச்சனும் விவசாயிகள் என்றால் 25 கோடிக்கு மேல் வாங்கும் கடன்களின் எண்ணிக்கை கூடுவது நியாயமே. எந்த விளிம்பு நிலை விவசாயி 10 கோடியும், 25 கோடியும் கடன் வாங்குகிறார். இப்போது உங்களுக்குப் புரியும் பணம் எங்கே போகிறது என்று. அது திரும்பவும் கார்ப்பரேட் உலகிற்கே செல்கிறது.

இந்த அத்தியாயத்தை நிறைவு செய்யுமுன் விவசாய நெருக்கடி என்றால் என்ன விவசாய நெருக்கடி என்றால் என்ன ?’ என்பதை ஐந்தே வார்த்தைகளில் விளக்குகிறேன். இந்தத் தற்கொலைகள் விவசாய நெருக்கடி அல்ல. தற்கொலைகள் விவசாய நெருக்கடியின் விளைவுகள் மட்டுமே;  ‘காரணங்கள் அல்ல. விவசாய நெருக்கடியின் பின் விளைவுகளே தற்கொலைகள். ஐந்து வார்த்தைகளில் விவசாய நெருக்கடி பற்றிச் சொன்னால் கார்ப்பரேட்டுகளால் நயவஞ்சகமாக கடத்தப்பட்ட விவசாயம். கார்ப்பரேட்டுகள் விவசாயத்தை கடத்தி தங்கள் மயமாக்கியதன் விளைவே விவசாய நெருக்கடி.

உங்களுக்கு சில கேள்விகள். விவசாயி என்றதும் உங்கள் நினைவில் தோன்றும் உருவம் எது?  உங்களுக்குத் தெரிந்து எந்த விவசாயி விவசாயத்தின் எல்லா விஷயங்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார் ? விதைகளை தன் கட்டுக்குள் இன்னும் வைத்திருக்கிறாரா? யார் விதைகளை கட்டுப்படுத்துகிறார்கள் ? மாண்சான்டோ விதைகளை கட்டுப்படுத்துகிறது. நுயி வகிமோ கட்டுப்படுத்துகிறது. இந்தியன் விதை நிறுவனம் விதைகளை கட்டுப்படுத்துகிறது. பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் விதைகளை கட்டுப்படுத்துகின்றன. பூச்சிக் கொல்லி மருந்துகளை விவசாயியா உற்பத்தி செய்கிறார் ? முன்னொரு காலத்தில் விவசாயியே வேப்ப மரத்திலிருந்தும் பிற இயற்கை வளங்களிலிருந்தும் பூச்சிக் கொல்லிகளை தயாரித்து பயன்படுத்தினார். இன்று பூச்சிக் கொல்லி உற்பத்தியில் நான்கு பெரிய கார்ப்பரேட்டுகள் தான் இந்தியச் சந்தையை ஆளுகின்றன. சரி. தான் விளைவிக்கும் பொருளையாவது விவசாயி தேர்ந்தெடுக்கிறாரா? இல்லை. குத்தகை விவசாயத்தின் கீழ் கார்ப்பரேட்டுகள் அரிதான பிரேஸிலியன் தக்காளிகளை வளர்க்க விரும்பினால் அதை அவர் வளர்த்தாக வேண்டும். விவசாயி தான் என்ன உரம் பயன்படுத்தவேண்டும் என்று முடிவு செய்கிறாரா?  அல்லது தயாரிக்கிறாரா ? இல்லை. டாடா, பிர்லா, அம்பானி போன்றவர்களே உரங்கள் தயாரிக்கிறார்கள். விவசாயி தண்ணீர் மற்றும் மின்சாரத்தின் பயன்பாட்டு விலையையாவது கட்டுப்படுத்துகிறாராசந்திரபாபு நாயுடு ஒரே நாளில் விவசாயத் தண்ணீர் உபயோகத்தின் விலையை 70% உயர்த்தியவுடன் ஆந்திர கிஸான் சபா’ (விவசாயிகள் சங்கம்) சென்று எல்லா தண்ணீர் மீட்டர்களையும் உடைத்து நொறுக்கி விலை உயர்வை தடுத்தனர். ஆனால் விலை 70% வரை உயர்ந்தது. மின்சாரமும் அதே நிலை தான். 1991 உடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் அது 100% சதவீதம் உயர்ந்திருக்கிறது. தயவு செய்து சொல்லுங்கள் விவசாயத்தில் எதைத் தான் விவசாயி கட்டுப்படுத்துகிறார் ?

நிலம்? அதையும் அவர்கள் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கோ(SEZ – Special Economic Zones) அல்லது ஒரு திட்டத்திற்கோ விவசாயியிடமிருந்து பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விவசாயி தான் விவசாயி என்று சொல்லிக் கொள்ளும்படி எதையாவது தன் கட்டுக்குள் வைத்திருக்கிறாரா ? இது தான் விவசாய நெருக்கடி. இந்த விவசாய நெருக்கடியின் பின் விளைவுகள் என்ன? வரலாற்றின் மிகப் பெரிய மனித இடம் பெயர்வுகள். SEZ- ஐ விட மிகப் பெரியது. இதைப் புரிந்து கொள்ளுங்கள். SEZ கள் நம்பமுடியாத மனித அவலங்களுக்கு காரணமாயுள்ளன. அவைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஏனென்றால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்விடங்களுக்கு அவை அச்சுறுத்தல்களாக மாறுகின்றன. உணவு உற்பத்தியின் படி பார்த்தால், SEZ-களின் நில ஆர்ஜித முறையானது, இது ஒரு கார்ப்பரேட் ஆக்கிரமிப்பு, பலவிதங்களில் உணவுப் பாதுகாப்பை, பாரிய அளவில் பணப் பயிருக்கு மாறியதன் மூலம், உணவு உற்பத்தியைக் காட்டிலும் மோசமாக சேதப்படுத்தியுள்ளது. விவசாயி தனது கையில் என்ன வைத்திருக்கிறார் அவரை விவசாயி என்று நாம் சொல்ல ?

1991லிருந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது ? எல்லா புள்ளிவிவர எண்களும் மோசமான நிலைக்குச் செல்லப் போகின்றன பின் அவையே நல்ல நிலைக்கு மாறப் போகின்றன. அடுத்த எண்கள் சுற்றில் நிகழப்போகும் ஒரு விஷயத்துக்கான பழியை நான் ஏற்றுக் கொள்கிறேன். 2011 ஜனவரியில் விவசாயத் தற்கொலைகளின் எண்கள் வெளிவரும். நிறைய மாநிலங்கள், நான் மேலே குறிப்பிட்ட மாநிலங்கள் அனைத்திலும் விவசாயிகளின் தற்கொலைக் கணக்கீட்டு எண்கள் பெரிய அளவில் குறைந்திருக்கும். ஏனென்றால் அரசு எண்களை மசக்கி விட்டுக்கொண்டிருக்கிறது. அப்போதும் கூட அந்த எண்கள் மிக மோசமான நிலையையே காட்டும் ஏனென்றால் நாகராஜின் கணக்கீடுகள் 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் விவசாயிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. 2011ல் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் லட்சக்கணக்கான விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கும். அதாவது விவசாய தற்கொலை விகிதமானது, அதாவது ஒரு லட்சம் பேரில் தற்கொலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை என்பது நாகராஜின் ஆய்வறிக்கையை விட இன்னும் மோசமாக இருக்கும். எனக்கு இது எப்படித் தெரியும் ? 91 மக்கள் தொகை கணக்கீட்டிற்கும் 2001 கணக்கீட்டிற்குமிடையே 80 (எண்பது) லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறியிருக்கின்றனர். 80 லட்சம் விவசாயிகள். உண்மையான பிரச்சனை 2000 வருடத்துக்குப் பின் தான் ஆரம்பம். அதாவது பிரச்சனை இன்னும் பூதாகாரமானது 2000த்துக்குப் பின் தான். 2001 க்கும் 2011க்குமிடையே எவ்வளவு பேர் விவசாயத்தை விட்டு வெளியேறினார்கள் என்று நாம் பார்க்கப் போகிறோம்.

மஹாரஷ்ட்டிராவில் 100 விவசாயப் பண்ணைகளுக்கு 41000 விவசாயத் தற்கொலைகள் முந்தைய பத்து வருடத்தில் என்றால் இப்போது அதே 41000 தற்கொலைகள் 60 விவசாயப் பண்ணைகளிலேயே நடந்திருக்கும். எனவே புள்ளிவிவர எண்கள் படு மோசமாய் இருக்கும். நாம் இதற்கு என்ன செய்யப் போகிறோம் ? நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா அரசு, மாநில அரசு, ஊடகங்கள் மட்டுமல்ல மாறியது. நம் எல்லோருள்ளும் மிக அடிப்படையான ஏதோ ஒன்று மாறியிருக்கிறது. நான் நினைக்கிறேன் நமது ஒழுக்க உலகமும் மாறியிருக்கிறது. நான் மிக விரும்பும் கேரள மாநிலம் சென்றிருந்தேன். அங்கு எல்லா தொழிற்சங்க தலைவர்களும் சொன்னார்கள்; கூடியிருந்த பார்வையாளர்களிடமும் பார்த்தேன். அவர்கள் எல்லோருடைய பேச்சுக்களும் செல் போன்கள் பற்றி, புதிய வாகனங்கள் பற்றி இருந்தது. எங்கோ இந்திய அறிவுலகம் மக்களுடனான அதன் உயிர்த்துடிப்புள்ள, வரலாற்றுத் தொடர்பை தொலைத்து விட்டிருக்கிறது.

கவுதம புத்தர் காலத்திலிருந்து வந்திருக்கிற இந்திய அறிவுலகின் ஒரு பெரிய பண்பு என்னவென்றால் பெரும்பான்மையான இந்திய அறிவுலகம் மத்தியிலிருந்து இடது புறமாக உள்ளது (இடது சாரிச் சார்புள்ளது). ஒவ்வொரு மனிதனைப் போல அவர்களின் இதயம் இடப்புறமாக உள்ளது. இந்திய கலாச்சாரம் மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து எவ்வளவு மாறுபட்டது என்பதைப் பாருங்கள். மேற்குலகில் கையில் பணமேயில்லாமல் பின்னால் பெரிய கதாநாயகர்களாக ஆனவர்கள் தான் வெற்றியாளர்கள். இந்தியாவில், புத்தர், அசோகர், காந்தி போன்ற பெரும் செல்வந்தர்களாயிருந்துவிட்டு அனைத்தையும் விட்டு விட்டவர்கள் தான் கதாநாயகர்கள். 1913ல் 15000 பவுண்டுகள் சம்பளம் பெற்ற காந்தி ஒரு பாரிஸ்டர் பட்டம் பெற்ற வழக்கறிஞர். அக்காலத்தில் அது ஒரு மிகப் பெரிய தொகை. புத்தர் அரண்மனையை விட்டு வெளியேறி மக்களிடம் போனார்; தலாய் லாமா போல மக்களை விட்டு விலகி ஒரு அரண்மனைக்குள் செல்லவில்லை. இந்திய அறிவுலகிற்கு இப்படிப்பட்ட பெருமையான வரலாறு உள்ளது. இந்த வரலாறு 90களிலும் 2000களிலும் காலவதியாகிப் போனது. நமக்கு முன் மிகப் பெரிய சவால் உள்ளது. எப்படி நாம் 60களையும் 70களையும் திரும்பப் பெறுவது ? எப்படி ஜனநாயக அரசை தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்குமான ஜனநாயக அரசாக மாற்றுவது. அது ஜனநாயக அரசாய் இருக்க வேண்டும். தன்னச்சையான, ஜனநாயகமற்ற எதுவும் இந்த வர்க்கங்களை துன்புறுத்தும்.

வருமானச் சமமின்மை (income inequality)ஐப் பாருங்கள். ADR என்கிற தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கூற்றுப்படி 2004 தேர்தல்களுக்கும், 2009 தேர்தல்களுக்கும் இடையே ஒரு எம்.பி. அவரே பட்டியலிடும் சொத்துக் கணக்கின் அளவு 349% அதிகரித்திருக்கிறது. மஹாராஷ்ட்டிராவில் மூன்றாவது முறையாக எம்.எல்.ஏவான ஒரு மனிதரின் சொத்து மதிப்பு 52 கோடி ரூபாய் அதிகமாயிருக்கிறது. இதில் சாதிய, வர்க்க படிநிலையும் உண்டு. 2004ல், சராசரியாக ஒரு எம்.எல்.ஏவின் மதிப்பு 1.5 2 கோடி. 2009ல் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட 3 3.5 கோடி மதிப்புள்ளவராக அவர் இருக்க வேண்டும். இன்று மஹாராஷ்ட்டிராவில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு எம்.பி.யின் சராசரி மதிப்பு 5 கோடி. உங்கள் மாநிலத்தில்(தமிழ்நாடு) எம்.பி.யின் மதிப்பு 5.1 கோடி.
மத்திய மந்திரியின் சராசரி சொத்து மதிப்பு 7.6 கோடி. பதவி ஏணியில் மேலே வளர வளர என்ன விதைக்கிறீர்களோ அதையே நீங்கள் அனுபவிப்பீர்கள். இப்படித் தான் இது நடக்கிறது.

இப்போது தேர்தல்களினால் நாம் முற்றிலும் விலை பேசப்படுகிறோம். இடது சாரிகள் தான் இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள். ஊடகங்களின் விற்கப்பட்ட செய்தி என்பது ஊடகங்களை பெரிதும் மாசுபடுத்தி நிற்கிறது. இந்த விஷயத்திற்குள் போவதற்கு நமக்கு நேரமில்லை. நான் இது பற்றி பேசலாம் என்றிருந்தேன் ஆனால் நாம் கூட்டத்தை தாமதமாகத் தொடங்கி விட்டோம். எனவே இது பற்றி நான் பேசப் போவதில்லை. ஆனால் ஊடகங்கள், அரசியல் வர்க்கம், நாம் எல்லாம், அறிவு ஜீவிகள் மற்றும் மக்கள் இவை எல்லாவற்றுக்குமிடையேயான தொடர்பறுந்த நிலையை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டங்களை மீட்டு எடுப்பது எப்போது? அரசு மாறுவதென்பது அரசின் ஆட்சிமுறை மாறுவதல்ல. அரசின் அடிப்படை அடுக்குகள் நகர்வதாகும். அரசானது(State) வர்க்கங்களுக்கிடைப்பட்ட தரகர் என்ற நிலையிலிருந்து நான் கார்ப்பரேட் வர்க்கத்துடன் தான் நிற்கிறேன் நீங்கள் போய் கிணற்றில் குதியுங்கள் என்று சொல்லும் நிலைக்கு வந்திருக்கிறது. இதை எப்படி மாற்றுவது ? இவை தான் சவால்கள்.

நம்மால் நிறைய விஷயங்கள் செய்ய முடியும். முதலில் உங்களது அறிவுப் பூர்வமான பாதுகாப்பு. அர்த்தமேயில்லாத, வெற்று பொய்யுரைகளையும், நுகர்வுக் கலாச்சார சித்தாந்தங்களையும் கண்டு பிசகிவிடாத மனநிலை. உங்களது சக மனிதர்களின் சூழ்நிலைக்கு இளகாத மனநிலை கொள்ளாமை. இந்த நாட்டில் காணப்படும் சமமின்மையை இது தான் யதார்த்தம் என்று ஏற்றுக் கொள்ளாத மனநிலை. நமது நாடு உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 5வதாக இருக்கும் அதே நேரத்தில் தான் ஐ.நா.வின் வளர்ச்சி அறிக்கையில் 134வது இடத்தில், லாவோஸூக்கு 1 படி கீழே, பூடானுக்கு 2 படி கீழே, மனித வளர்ச்சிக் குறீயீட்டு எண்ணில் எல்லா லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் கீழே இருக்கிறது. நமக்கு மேலே இருக்கும் இந்த நாடுகள் எதுவும் மென்பொருள் அசுரசக்தி‘(Software Superpower) இல்லை. எதுவும் அணு சக்தி மிக்க நாடு இல்லை. எதுவும் இந்தியாவைப் போல விஞ்ஞான அறிவு ஜீவிகள் நிரம்பிய நாடு இல்லை. எந்த நாடும் இந்தியாவைப் போல் 9% வளர்ச்சி வீதம் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவர்கள் பசியை நம்மை விட நன்றாக போக்கியிருக்கிறார்கள். எதுவோ அடிப்படையில் மாறியிருக்கிறது. எப்படி ஒரு காபோன், ஒரு போட்ஸ்வானா நம் இந்தியாவை விட மனித வளர்ச்சியில் முன்னேறி இருக்கிறது என்று.

இதைச் சொல்லி இந்தக் கதையை முடிக்கிறேன். ஏனெனில் இது மெட்ராசும் மைசூரும் சம்பந்தப்பட்டது. ராணி விக்டோரியா தன்னை ராணி என்று அழைத்து களைத்துப் போனதால் தன்னை (இந்தியாவின்-உலகின்)மகாராணி’(The Imperial Majesty Queen-Empress) என்று அழைத்துக் கொள்ள விரும்பினார். அதன் காரணம் சமீபத்தில் அவர் வாங்கிய மிகப் பெரிய ரியல் எஸ்டேட் சொத்தான இந்தியா என்று இப்போது அழைக்கப்படுகிற பகுதியாகவும் இருக்கலாம். எனவே அவர் நினைத்தார் இது தான் மகாராணியாக மகுடம் சூடும் தருணமென்று. டெல்லியில் ஒரு தர்பார்’(Dharbar)ஐ கூட்டச் செய்தார். இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் ராஜாக்களும், நவாப்புகளும் விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர்.  நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். விக்டோரியாவின் மாபெரும் தர்பார் பற்றியும் அதில் அவர் மகாராணியாக மகுடம் சூட்டப்பட்டது பற்றியும். மகாராணியின் பிரதிநிதியாக இருந்து இதை நடத்திய லார்டு லிட்டன் இதில் விக்டோரியா மகாராணி பட்டம் பெறுவதை அறிவித்தார். இது நடந்த வருடம் 1876. மெட்ராசிலும் மைசூரிலும் கடும் பஞ்சம் தலைவிரித்தாடிய காலம். இந்தியா முழுதும் பஞ்சம் தலைவிரித்தாடிய இக்காலத்தில் தான் இந்த மாபெரும் தர்பார் நடத்தப்பட்டது. லட்சக் கணக்கானோர் இறந்தனர். அந்த காலகட்டத்தில், அந்த வாரத்தில், அந்த மாதத்தில்., மெட்ராசிலும் மைசூரிலும் மட்டும் 1 லட்சம் இன்னும் குறிப்பாக 1லட்சத்து 40 ஆயிரம் பேர் பசியால் இறந்து போனார்கள். இது பற்றிய அப்போதைய செய்திக் குறிப்புகளை படித்தால் போலீசின் வேலை பெரிதும் மாறிவிடவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். காவல் துறையினரின் (Police) வேலை நகரின் எல்லைப் புறங்களில் நின்று கொண்டு பசியாலும், பஞ்சத்தாலும் வாடிக் கொண்டிருக்கும் மக்கள் கொண்டாட்டம் நடக்கும் நகரினுள் நுழைய விடாமல் தடுப்பது தான். சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமாவென்று நகரினுள் நுழையப் பார்த்த விவசாயிகள் தடியால் அடித்துக் கொல்லப்பட்டார்கள். நீங்கள் தேடிப் பாருங்கள். பத்திரிக்கைகள் இதை செய்தியாக வெளியிட்டிருக்கின்றன அப்போது.
http://en.wikipedia.org/wiki/Delhi_Durbar - டெல்லி தர்பார்

அதே கணத்தில் தான் வரலாற்றிலேயே மிக அதிகம் செலவு செய்யப்பட்ட விருந்தை தனது தர்பாருக்கு வழங்கினார் ராணி. 68,000 விருந்தினர்கள். அதில் பெரும்பாலோர் பெரும் ராஜ பரம்பரையினர் எனவே அவர்களுடன் அவர்கள் பரிவாரங்களும் விருந்தில் கலந்து கொண்டனர். ஜெய்ப்பூர் ராஜா மட்டும் சும்மா வரவில்லை கூடவே அவருடைய பரிவாரங்கள் 500 பேர் வந்தனர். ஏனென்றால் அவருக்கு பாதுகாவலர்கள் உண்டு; குதிரைகள் உண்டு; குதிரையைக் கழுவ வேலைக்காரர்; குதிரைக்கு புல் வைக்கும் வேலையாள் ; என்று இப்படி எல்லோரும் சேர்ந்து அறுபத்தியெட்டாயிரம் பேர். இவர்களுக்கு சமைக்க எவ்வளவு சமையல்காரர்கள் தேவைப்பட்டார்கள் என்று தெரியவில்லை. விருந்தினரைக் கவனிக்கும் சமையல்காரர்களை கவனிக்க தனி சமையல்காரர்கள் இருந்திருக்க வேண்டும். இந்தக் கோலாகலம் நடைபெற்ற இதே நேரத்தில் இந்த இரண்டு பகுதிகளிலும் மெட்ராஸ் மற்றும் மைசூரில் மட்டும் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் பசியால் செத்துப் போனார்கள். பொட்டில் அடிக்கும் விஷயம் எது தெரியுமா ? பத்திரிக்கைகள் இதை அப்படியே (இன்று போலவே.. இன்று ஒரே விஷயத்திற்கு தான் பத்திரிக்கைகள் வளர்க்கப்படுகின்றன) வெளியிட்டன பத்திரிக்கைகள். அன்று கொஞ்சம் பரவாயில்லை. அவர்கள் அந்த இறப்புகளை தெரிவித்தார்கள். பஞ்சத்தைப் பற்றி எழுதினார்கள். போலீஸ் விவசாயிகளை லத்தியால் அடித்ததை எழுதினார்கள். இவை எல்லாவற்றையும் எழுதினார்கள் ஆனால் தர்பாருக்கும் இந்த எல்லா நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பையும் அவர்கள் காணவேயில்லை. அவர்கள் தர்பாரை உலகிலேயே மிகச் சிறந்தது என்று கொண்டாடி எழுதினார்கள். மாட்சிமை பொருந்திய, மேதகு, உயர்திரு, என்று. தர்பார் ஒரு கலையின் வெளிப்பாடாகக் காட்டப்பட்டது. மிகச் சிலர், தேசியவாதிகள் இதை கண்டித்தாலும் அவர்களின் குரல்கள் கேட்கப்படவே இல்லை. தேசியவாதிகள் இதைக் கண்டித்தாலும் அவர்களின் குரல் கேட்கப்படவே இல்லை. ஏனெனில் பத்திரிக்கைகள் அவர்களுக்குச் சொந்தமானது அல்ல.

விதர்பாவில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் குற்றங்களில் ஒன்று பத்திரிக்கைகளை சொந்தமாக நடத்தாமலிருப்பது. அல்லது பத்திரிக்கை செய்தி வருவதில் சரியாக போட்டி போடத் தெரியாமை. ராணியின் காலத்துப் பத்திரிக்கைகள் பஞ்சத்தை பற்றியும் செய்தி வெளியிட்டன். தர்பாரைப் பற்றியும் செய்தி வெளியிட்டன. ஆனால் இரண்டிற்கும் உள்ள தொடர்பை பேசவே இல்லை. என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதிலிருந்து நம்மை துண்டித்துக் கொள்வது எவ்வளவு எளிதாக இருக்கிறது பாருங்கள். கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களில் சாலையோரங்களிலும், பிளாட்பாரங்களிலும் கூட. தேசிய உடல் நல கணக்கீடு 3வது சுற்று அறிக்கையைப் பார்த்தால் அதில் ஊட்டச் சத்தில்லாத குழந்தைகளின் எண்ணிக்கை மும்பாயில் மட்டும் மொத்த மஹாராஷ்டிர சராசரியை விட ஒரு சதவீதம் அதிகம். இதற்கு முக்கிய காரணம் வாழ்விழந்து பிழைப்பு நாடி நகரத்தை நோக்கி சாரை சாரையாகச் செல்லும் கிராம மக்களே. ஆனால் இதை சீர்தூக்கிப் பார்க்கும் நாம் இந்த சமமின்மையை கண்டு கொள்ளாமல் இருப்பதா அல்லது இதற்கு காரணம் ஒரு கொள்கையோ, ஒரு எண்ணமோ அல்ல; மாறாக நாம் போரிட வேண்டியது, தகர்க்கவேண்டியது மற்றும் மாற்றவேண்டியது அரசின் ஒட்டு மொத்த கொள்கைகளும் அரசின் கட்டுமானங்களுமே என்பதை ஏற்றுக் கொள்வதா ? சிந்தியுங்கள். நன்றி.

ஆங்கில உரையைப் படிக்க - http://ambedhan.blogspot.com/2010/11/slumdogs-vs-billionaires-p-sainath.html

Tuesday, March 15, 2011

தெருநாய்களும் கோடீஸ்வரர்களும் - பி. சாய்நாத் - பாகம் 1


தெருநாய்களும் கோடீஸ்வரர்களும் பி.சாய்நாத் - பாகம் 1.
பின் வருவது பத்திரிக்கையாளரும், இடது சாரி பொருளியலாளரும், பேராசிரியருமான பி.சாய்நாத் அவர்கள் கடந்த நவம்பர் 2010ல், சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசிய ஆங்கில உரையின் தமிழாக்கம்.

நன்றி. இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மூன்று மணி நேரத்திற்கு இந்த அரங்கை வாடகைக்கு எடுத்திருப்பதாகச் சொன்னார்கள். இந்த மூன்று மணி நேரத்தில், 51 இந்தியக் குழந்தைகள் பட்டினியாலும், உணவுப் பற்றாக்குறையாலும் இறந்து போய்விடுவார்கள். அதுபோல் 4 அல்லது 5 மடங்கு பேர் வகை-4(Grade 4) ஊட்டக்குறைவை அடைவார்கள். இந்த மூன்று மணி நேரத்தில் 6 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வார்கள், 36 48 விவசாயிகள் தற்கொலை முயற்சி செய்வார்கள். இதே மூன்று மணி நேரத்திற்குள் இந்திய அரசு 171 கோடி ரூபாய்களை வருமானவரி விலக்காக நாட்டின் பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்திருக்கும். அது தான் இந்த மூன்று மணி நேரத்தில் நடக்கப் போவது. மூன்று மணி நேரத்திற்கு 171 கோடிகள் வீதம் கொடுத்தால் வருடத்திற்கு 500 ஆயிரம் கோடிகள் ஆகும். இந்த அரசு நாட்டின் மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் தேசிய பொது விநியோக அமைப்பை (Public Distribution System PDS– பொ.வி.அ ரேஷன் கடை) உருவாக்கப் பணமில்லை என்று மிகத் தெளிவாகக் கூறிவிட்டது. இந்த அரசு அனைவருக்குமான பகிர்வு முறையை பகுதியளவாவது(partially) முறைப்படுத்துவதைக் கூட மறுக்கிறது (வேறு காரணங்களால் எனக்கு இதில் உடன்பாடில்லை எனினும்). பொது விநியோக முறை(ரேஷன் கடைகள்) என்றழைக்கப்படும் உணவுப் பொருட்கள் வழங்கும் முறையை 150 மாவட்டங்களுக்கு கொண்டுவர பணமில்லை என்கிறார்கள்.

தமிழ்நாடு, கேரளா மாநிலங்கள் போல பொது விநியோக முறையான ரேஷன் கடைகளை நாடு முழுதும் கொண்டு வர எவ்வளவு செலவாகும்?  45,000 முதல் 50,000 கோடிகள். இதில் அதிகபட்சத் தொகையை நாம் எடுத்துக் கொள்வோம். நாடு முழுதும் அனைத்து வார்டுகளிலும் ரேஷன் கடைகள் வைத்து மலிவு விலையில் அரிசியும், கோதுமையும் மட்டும்(இவை மட்டும் போதாது எனினும்) அனைத்து மக்களுக்கும் தருவதற்கு 80 முதல் 90 ஆயிரம் கோடிகள் வருடந்தோறும் செலவாகும். அதே 80 முதல் 90 ஆயிரம் கோடிகள் தான் வருடந்தோறும் தனியார் நிறுவனங்களுக்கு அரசு அளிக்கும் வருமானவரி விலக்கும்(income tax exemption). இந்த வருட(2010) பட்ஜெட்டில் கார்ப்பரேட் தனியார் நிறுவன வருமான வரி விலக்கு 80 ஆயிரம் கோடிகள். போன வருட பட்ஜெட்டில் இது 69 ஆயிரம் கோடிகள். 1991 லிருந்து வருடா வருடம் இந்த விலக்குப் பணத்தின் அளவு கூடிக்கொண்டே இருந்திருக்கிறது..

நிதிநிலை அறிக்கையை(பட்ஜெட்) இணையத்திலேயே(Internet) நீங்கள் வாசிக்கலாம். என் நண்பர் அதில் ஒரு பகுதி பற்றிக் குறிப்பிட்டார் என்று நினைக்கிறேன்; கைவிடப்பட்ட(?) வருமான அறிக்கை’. அது மிகவும் எளிமையான அறிக்கை. அது சொல்கிறது இவை இவைதான் நாங்கள் ரத்து செய்த வருமானங்கள். இது மானியமல்ல(subsidy). மானியம் என்பது வேறு; மானியம் என்பது கார்ப்பரேட் தனியார் நிறுவனங்களுக்கு அவர்கள்(அரசு) அளிப்பது; சிறப்புப் பொருளாதார மண்டலங்களில்; மின்சாரத்தில்: தண்ணீரில்; வங்கிக் கடன்களில்; வட்டியில்லாக் கடன்களில்; இவை எல்லாவற்றிலும் தரப்படுவது; அதுதான் மானியம் என்று அழைக்கப்படுவது. அது எவ்வளவு என்றால் நூறு முதல் ஆயிரங்கோடிகள். ஆனால் இது மானியமல்ல; சும்மா தள்ளுபடிக் கணக்கு; வாராக் கடன்; மூன்று விஷயங்களில் இது தனியார் நிறுவனங்களுக்குத் தரப்படுகிறது. 80 ஆயிரம் கோடிகள் கார்ப்பரேட் தனியார் நிறுவனங்களின் வருமானவரியில், சரக்கு வரியில் 170 ஆயிரம் கோடி, சுங்க வரிவிதிப்பில் 249 ஆயிரம் கோடியாக,  ஆக மொத்தம் 4 லட்சத்து 99 ஆயிரம் கோடிகள் (வருடத்துக்கு) வாராக் கடனாக அரசால் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்பதை எனது நண்பர் முன்பே தமிழில் விளக்கியுள்ளார்.

அதாவது மணிக்கு 57 கோடிகள் அல்லது நிமிடத்துக்கு 1 கோடி. ஆனால் ஏழைகளுக்குத் தர பணமில்லை; நம் பிரதமர் சுப்ரீம் கோர்ட்டிடம் பட்டினி பற்றிக் கவலைப்பட்டால் போய் கிணற்றில் குதியுங்கள் என்கிற ரீதியில் ஆணித்தரமாகக் கூறிவிட்டார்; இது அவர்களின் பிரச்சனையில்லையாம்.  எனக்கு ரொம்ப சுவாரசியமாகப் படுவது என்னவெனில் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் பற்றி கவலைப்படும் நம் பிரதமர், உணர்ச்சி பொங்க இந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில்(பார்லிமண்ட்) நிறைவேறாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று மிரட்டினார். அந்த உணர்ச்சி வேகம் பசியால் வாடும் மக்களைப் பற்றிப் பேசும் போது மட்டும் காணாமல் போய்விடுகிறது. அணுசக்தி ஒப்பந்தத்திற்காகப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராயிருக்கும் அவர் பசி, பட்டினிப் பிரச்சனையில் ஒரு பிரதமராகச் செயல்படக்கூடத் தயாராயில்லை.

இந்த மகிழ்ச்சியற்ற விஷயத்திலிருந்து வேறு விஷயத்திற்கு விலகிச் செல்வோம். நான் மும்பையைச் சேர்ந்தவன் என்று சொல்லியிருக்கிறேன். அடுத்த முறை மும்பைக்கு வரும் திட்டமிருந்தால் உங்களை வரவேற்கிறேன். வந்தால் எங்களது புதிய, புதுமையான சுற்றுலா தலத்திற்குப் போகாமல் இருந்து விடாதீர்கள். சொல்லப் போனால் வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களும், புகைப்படக்காரர்களும் அதிக அளவில் மொய்த்த சுற்றுலாத் தலம் இது. இது மியூசியம்(அருங்காட்சியகம்) இல்லை. இதை ஒரு நினைவுச் சின்னம் போல் கருதலாம். இது வேல்ஸ் நாட்டு இளவரசரின் அருங்காட்சியகம் போன்ற எதுவும் இல்லை. உண்மையில் இந்தியாவில் அருங்காட்சியகங்கள் வளருவது சிரமம் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் இந்தியாவில் இருப்பது உயிரோட்டமுள்ள கலாச்சாரம். மற்ற சமூகங்களில் இறந்து போன விஷயங்களே அருங்காட்சியகத்தில் இருக்கின்றன. இந்தியாவில் அருங்காட்சியகத்தில் என்ன இருக்கிறதோ அது தெருக்களில் உருவாக்கப் பட்டுக்கொண்டும் இருக்கிறது.
ஆனால் நாம் பேசிக் கொண்டிருப்பது மிக மிகச் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு நினைவுச் சின்னம். முகவரி ஆல்ட்மான்ட் ரோடு. தயவு செய்து அங்கு செல்லுங்கள். ஒரு தனி மனிதர் உலகிலேயே மிக விலையுயர்ந்த வீட்டை, 2 பில்லியன் டாலர்கள் செலவில் கட்டியிருக்கிறார். அவர் தான் இந்தக் கிரகத்திலேயே 4வது பெரிய பணக்காரர்; உங்களுக்கு நன்கு தெரிந்தவர். இரண்டு நாட்களுக்கு முன்பு போர்ப்ஸ் பத்திரிக்கை(Forbes magazine) 2014 ல் திரு. முகேஷ் அம்பானி கிரகத்திலேயே பெரிய பணக்காரராக இருப்பார் என்று முன்னறிவித்திருக்கிறது. இந்த வீட்டைப் பற்றி உங்களுக்கு விளக்க வார்த்தைகள் என்னிடம் இல்லை. ஒரு எழுத்தாளராக என்னுடைய திறமையையும் விஞ்சி நிற்கிறது இந்த வீடு. நீங்களே அதை நேரில் பார்த்தால் தான் அது புரியும். அது 27 மாடிகளே கொண்டது. ஒரு குடும்பத்திற்கான வீடு. அந்த 27 மாடிகளும் 60 மாடிகள் உயரத்திற்கு சமம்; அதாவது ஒவ்வொரு தளத்தின் கூரையும் சாதாரண அடுக்குமாடி வீடுகளின்(அபார்ட்மெண்டஸ்) கூரை உயரத்தைப் போல இரு மடங்கு உயரம். 27 மாடிகள். ஒவ்வொரு மாடித் தளமும் ஒவ்வொரு விதமான அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு தளம் பிரெஞ்சுக் கலையழகுடன்;  இன்னொரு தளம் ராஜஸ்தான் ஹவேலி(அரண்மனை) போன்று. இந்த வீடு சொல்லப் போனால் மோசமான ரசனையுடைய நினைவுச் சின்னம். இதுவரை இவ்வீட்டில் மூன்றே மூன்று ஹெலிபேட்கள் (Helipads) தான் இருக்கின்றன. அவர் இன்னுமொரு ஹெலிபேட் வைக்க அனுமதி கோரியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அப்போது தான் அந்த வீடு முழுமையடையும். வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனியாக ஒரு ஹெலிபேட். இந்த வீட்டின் மதிப்பு தோராயமாக 2 பில்லியன் டாலர்கள். உண்மையான மதிப்பு யாருக்கும் தெரியாது. மும்பையில் இது கட்டப்பட்டிருக்கும் பகுதியில் சதுர அடியின் விலை அமெரிக்காவில் மன்ஹட்டன் வணிக மாவட்டப் பகுதியின் சதுர அடி விலையை விட அதிகம். நினைவிருக்கட்டும். இது ஒரு குடும்பத்திற்கான வீடு. அல்டாமெளன்ட் ரோடு பகுதியில் நிலத்தின் விலையானது நியூயார்க்கின் பல பகுதிகளில் உள்ள விலையை விட அதிகம்.

27 மாடிகள், மூன்று ஹெலிபேட்கள், கொண்ட வீடு உள்ள அதே மும்பை நகரத்தின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் சேரிகளிலும், தெருக்களிலும் வசிக்கிறார்கள். இதைத் தவிர கட்டிடங்களில் வசிப்பவர்களில் 76 சதவீதம் பேர் ஒரே ஒரு அறை(room) மட்டுமே கொண்ட வசிப்பிடத்தில் 15 மனிதர்களாக வசிக்கின்றனர். பெரும்பாலும் ஆந்திரா, உத்திரப் பிரதேசத்திலிருந்து வந்தவர்கள். டாக்சி ஓட்டுனர்கள், டெய்லர்கள்(தையற்காரர்கள்), தினக் கூலிகள்; 10-15 பேர் 10 அடிக்கு 12 அடியுள்ள ஒரு அறையைப் பகிர்ந்து கொள்கின்றனர். அந்த அறை வெறும் தூங்குமிடம் மட்டுமே. இப்படிப்பட்ட ஒரு மாநகரத்தில், 2030ல் உலகின் அதிகபட்ச மக்கள் தொகை கொண்ட நகரமாகப் போகும், ஏற்கனவே இந்தியாவில் மக்கள் தொகையில் முதலிடத்தைப் பிடித்துவிட்ட இந்த மும்பை நகரத்தில் தான், இந்தியாவின் 49 பில்லியனர்களில் 21 பேர் வசிக்கும் இந்த நகரில் தான், திரு.அம்பானி தனது அடக்கமான வீட்டைக் கட்டியிருக்கிறார்.

நீங்கள் நினைக்கலாம் நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் விஷயம் பொருளாதார ஏற்றத் தாழ்வு பற்றித் தானே என்று. ஆம் சரியே. ஆனால் இது விவசாய நெருக்கடியுடன், உணவு நெருக்கடியுடன் தொடர்புடையதா? உண்மையில் தொடர்பு இருக்கிறது. ஆகஸ்ட் 13, 2010ல் வந்த இந்து நாளிதழைப் பார்த்தீர்களென்றால் அதில் ஒரு வங்கி அதிகாரியின் கட்டுரை இருக்கும்; அதில் விவசாயக் கடன்கள்’(Agricultural Credits) மொத்தமும் விவசாயம் நடக்கும் கிராமங்களில் தரப்படாமல் நகரங்களில் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது புள்ளி விவரங்களுடன் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இது விவசாயக் கடன் என்று அழைக்கப்படுகிறது. மஹாராஷ்டிராவில், 2008 ல், 50 சதவீதத்திற்கும் மேல் விவசாயக் கடன்கள் நகர்க் கிளைகளிலும்(Urban branches), பெருநகர்க் கிளைகளிலும்(Metro Branches)  பட்டுவாடா செய்யப்பட்டுள்ளன. 50 சதவீதத்திற்கும் குறைவான விவசாயக் கடன்களே விவசாயப் பிரதேசங்களிலும், கிராமப் பகுதிகளிலும் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளன. சரியா?

யார் இந்தக் கடன்களைப் பெறுகிறார்கள்? பம்பாய் நகரம் மிக வித்தியாசமான ஒரு விவசாயத்தைக் கொண்டுள்ளது. அரிசி, கோதுமை, பயிர்களுக்குப் பதிலாக அது ஒப்பந்தப் பணிகளை’(Contracts) வளர்க்கிறது. கட்டிட ஒப்பந்தங்கள்(building contracts), சுபாரி ஒப்பந்தங்கள். மேலும் பல.. எல்லாவற்றிற்கும் ஒப்பந்த முறை இருக்கிறது. இவை எல்லாம் தனியார் ஒப்பந்தங்கள் எப்போதுமே. அரசு ஒப்பந்தங்கள் ஒருபோதும் இல்லை. ஆனால் 50 சதவீத விவசாயக் கடன் நகர்ப்புற மும்பாயில், நகர்ப்புற வங்கிக் கிளைகளால் வழங்கப்பட்டுள்ளது. சரி இந்த விவசாயக்கடனை நகர்ப்புறத்தில் பெற்றது யார்? இன்னும் நன்றாக நெருங்கிப் பார்த்தீர்களென்றால் இரண்டு தனியார் நிறுவனங்களே 50 சதவீதத்தின் பெரும் பங்கைக் கடனாகப் பெறுவதும் தெரியும். அந்த நிறுவனங்கள் எவை என்பதை உங்கள் ஊகத்திற்கே விடுகிறேன். ஏனென்றால் இன்னும் சில தினங்களில் அதை நாங்கள் வெளியிடப் போகிறோம். ஒரு குறிப்பு தருகிறேன். அந்த இரண்டில் ஒன்றை நடத்துபவர் ஒரு பண்புள்ள மனிதர்; அவருடைய வீடு பம்பாயிலேயே மிகப் பெரிய வீடு. இது தான் அந்தத் தொடர்பு.

எது விவசாயத்திற்குச் செல்ல வேண்டுமோ அது நகரத்திற்குச் செல்கிறது; இது ஒரு விஷயம். இதன் முக்கிய விடயம் என்னவெனில் இந்திய அரசின் மிக அடிப்படையான ஒரு விஷயம் மாறியிருக்கிறது; அதன் செயல்பாடுகளில் ; தத்துவங்களில்; உயிர்த் துடிப்பில். அதை உங்கள் சார்பாக நான் அளக்க முற்படுகிறேன். 1960 1970களில் இந்தியாவில் பெரும் மக்கள் திரண்ட விவசாயிகளின் எழுச்சிகளும் புரட்சிகளும் நிரம்பிய காலம். அதன் விளைவால் 2 பில்லியன் (1பில்லியன்=பத்து கோடி) ஏக்கர்கள் நிலம் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் பகிர்ந்தளிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களிலும் கொஞ்சம் குறைந்த அளவில் நிலங்கள் பகிரந்தளிக்கப்பட்டன. நாம் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறோம் என்று பாருங்கள் பின்னே.

1960-70 களில் பெரும் மக்கள் கிளர்ச்சிகள் நடந்ததென்றால், 1990-2000 களில் பெரும் மக்கள் தற்கொலைகள் நடந்திருக்கின்றன. என்ன மாறியிருக்கிறது ? அடிப்படையில் என்ன மாறியிருக்கிறது? 60-70களை ஞாபகப்படுத்திக் கொள்ளுமளவு நீங்கள் வயதானவராயிருந்தால் உங்களால் அந்த வித்தியாசத்தை உணரமுடியும். அன்றைய விவசாயிகளின் கிளர்ச்சிகளுக்கும்; கடந்த 12 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொள்ளும் 2 லட்சம் விவசாயிகளுக்கும் உள்ள வித்தியாசம். உண்மையில் இத்தொகை 2 லட்சத்தை விட அதிகம். 2009ன் தற்கொலைக் கணக்கீடு இதில் சேர்க்கப்பட வில்லை. அந்தக் கணக்கீடு வருகின்ற ஜனவரியில் தான் வெளிவரும். அத்துடன் விவசாயிகளின் தற்கொலை வீதம் வருடத்துக்கு 12000 13000 பேரிலிருந்து (பத்து வருடங்களுக்கு முன்னால்), 16,500 பேராக அதிகரித்து விட்டது இப்போது. எனவே மிக அடிப்படையான ஒன்று மாறி நகர்ந்திருக்கிறது. அரசு செயல்படும் விதம் மட்டுமல்ல; எதிர்ப்புக் குரல்களின் வகைகளிலும்; எதிர்ப்பு வெற்றியடைகிறதா அல்லது தோல்வியடைகிறதா என்பதிலும்; மக்கள் ஒன்று சேர்கிறார்களா இல்லையா என்பதிலும்; அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்களா அல்லது லஞ்சத்தால் மாசுபடுத்தப்படுகிறார்களா அல்லது நசுக்கப்படுகிறார்களா என்பதிலும்; இவை எல்லாவற்றிலும் மிக அடிப்படையான ஒன்று மாறியிருக்கிறது. என்ன அது?   

முதலாவதான அடிப்படை மாற்றம்: 1990 களுக்கு முன் இந்திய அரசு இயந்திரம், அதனுடைய சாதியப் பண்புகளுடனும் கூட, வெவ்வேறு வர்க்கங்களுக்கிடைப்பட்ட(மேல்தட்டு - கீழ்தட்டு) முரண்பாட்டை மத்தியஸ்தம் செய்யும் வேலையையும் செய்து வந்தது. அதனாலேயே 1950 1980 களில் ஏற்றத் தாழ்வு, முக்கியமாக வருமான ஏற்றத்தாழ்வு பெரிதும் குறைந்தது. 50கள், 60கள், 70கள் மற்றும் 80களில் வருமான ஏற்றத் தாழ்வு குறைந்தது. ஆவடி காங்கிரஸ் என்றழைக்கப்படும், காங்கிரஸ் கட்சியின் சோசியலிசப் பாதை என்று சொல்லப்பட்ட காலத்திலிருந்து 1980களின் நடுப்பகுதி வரை வருமான ஏற்றத்தாழ்வு தொடர்ந்து குறைந்தது. ஆனால் 90களிலிருந்து அது அதிகரிக்கிறது. ஏதோ அடிப்படையான ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அது என்னவெனில், அரசு(The State)  மோதும் பல்வேறு வர்க்கங்களுக்கிடையே மத்தியஸ்தம் செய்வதை இனி தன் கடமையல்ல என்று பார்க்க ஆரம்பித்ததுவே. அது வெளிப்படையாக, அம்மணமாக, ஒரு வர்க்கத்தின் சார்பாளராக, அதாவது கார்ப்பரேட் தனியார் நிறுவனங்களின் சார்பாளராக தன்னை காட்ட ஆரம்பித்துவிட்டது. மக்களின் நலன், மத்தியஸ்தர் என்கிற நடிப்புகளையும்,முகமூடிகளையும், வேஷங்களையும் கலைத்து விட்டது.
உதாரணமாக இதைக் கவனியுங்கள்; அமெரிக்காவுடனான அணு சக்தி உடன்பாட்டிற்காக பதவியை ராஜினாமா செய்யத் தயாராயிருந்த அதே பிரதமர் நாட்டின் பட்டினிப் பிரச்சனைக்காக வாயே திறக்கவில்லை, மாறாக சுப்ரீம் கோர்ட்டை கம்முன்னு கிட என்கிறார். அதே பிரதமர் பல லட்சக்கணக்கான பேர் வேலையை விட்டு விரட்டப் பட்டதை உங்களிடம் சொல்கிறாரில்லை. செப்டம்பர் 2008 லிருந்து பல லட்சக்கணக்கானோர் வேலை இழந்து வருகின்றனர். உங்களுக்கு அந்தப் புள்ளி விவரத்தைத் தருகிறேன்.

இதற்கு பொருளாதாரச் சரிவைத்(Economic Recession) தான் பார்க்கவேண்டும் என்பதில்லை. உலகப் பொருளாதார நெருக்கடிக்கு முன்பே நாம் போவோம். அதிகத் தொழில்வளர்ச்சியடைந்த மஹாரஷ்ட்டிரா மாநிலத்துக்குப் போவோம். அத்வானியின் மாநிலம்; அம்பானி தத்தெடுத்த மாநிலம்; 'யார்ட்ஸ்லி' தத்தெடுத்த மாநிலம். மஹாராஷ்ட்டிராவின் பொருளாதார அறிக்கை என்ன சொல்கிறது என்றால், இந்தியாவின் பணக்கார மாநிலத்தில், இந்தியாவின் தொழில்வளர்ச்சி உச்சமடைந்த மாநிலத்தில், மஹாராஷ்ட்டிராவில், 20 லட்சம் பேர் 2008 பொருளாதாரச் சரிவுக்கு முந்தைய 36 மாதங்களில் வேலை இழந்துள்ளனர். பொருளாதார நெருக்கடிக்கு மூன்று வருடங்களுக்கு முன்பே ஒரு நாளைக்கு 1800 பேர் வேலை இழந்தனர் என்றால் பொருளாதாரச் சரிவுக்குப் பின் எவ்வளவு பேர் வேலை இழந்திருப்பார்கள்? அதையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறது மஹாராஷ்ட்டிர அரசின் அந்த அறிக்கை. தெளிவாக ? அவ்வளவு தெளிவாக இல்லை. பதினோறாம் பக்கத்தின் அடியில் 'ஒரே ஒரு வரியில்' தெளிவாகச் சொல்லியிருக்கிறது. மொத்த வேலைவாய்ப்பு 4.3 கோடியிலிருந்து 4.1 கோடியாக குறைந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறது. அதாவது 20 லட்சம் பேர். அதாவது ஒரு நாளைக்கு 1800 வேலைகள் பறிபோயிருக்கின்றன. இதுதான் இந்தியாவிலேயே தொழில்மயத்தில் முதலிடம் வகிக்கும் மஹாராஷ்ட்டிராவின் கதி. மற்ற மாநிலங்களின் கதி என்ன?  அதற்குள்ளும் போவோம். எதுவோ மிக அடிப்படையான ஒன்று மாறியிருக்கிறது.

உங்களது பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிச் சேனல்களிலும் 45 லட்சம் முதல் 70 லட்சம் வரையிலான வேலை வாய்ப்புகள் 2008லிருந்து பறிபோயுள்ளன என்கிற ரீதியிலான தலைப்புச் செய்திகளை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? ஒரு மாநிலத்தில் மட்டும் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் பொருளாதாரச் சரிவு நிகழ்ந்த 2008க்கு முன் இழக்கப்பட்டன என்று நான் சொன்னேன். தொழிலாளர் அமைச்சகம் 2009ல் ஒரு ஆய்வு நடத்தியது. அதில் 2008ன் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் அதாவது அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் 5 லட்சம் வேலைகள் இந்தியாவில் பறிபோயிருக்கின்றன. அப்போதைய துணி மற்றும் ஏற்றுமதித் துறை அமைச்சகத்தின் அப்போதைய செயலாளர் திரு. மேனனோ அல்லது திரு. பிள்ளையோ சொன்னார்கள் மே 2009க்குள் 15 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு என்ன நிகழும் எனப் புரிந்துகொள்ள முயலுங்கள். பாரிய அளவிலான வேலை இழப்புக்கள் புதிதாகப் பசிக் கொடுமையில் தள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஏற்கனவே பட்டினியால் வாடிக்கொண்டிருப்பவர்களுடன் சேர்த்து அதிகரிக்கிறது. சரியா !

எவ்வாறு ஊடகங்கள் இந்த விஷயத்தில் நடந்துகொண்டன? இந்த அரசு இயந்திரத்தின் இந்த மாற்றம், அதன் செயல்பாடு, ஒரு புறம் மிக விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் இன்னொரு புறத்தில் மிகக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. அரசு தனது லட்சியத்திலிருந்தும், சட்டங்களிலிருந்தும் விலகிப் போய்விட்டது. இந்திய மேல்தட்டு வர்க்கம் அரசை அதன் விடுதலைப் போராட்ட மதிப்புகளிலிருந்தும், அரசியலமைப்பின் சத்தியங்களிலிருந்தும் விலகிப் போக வைத்துவிட்டது. ஊடகமும் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் சொல்வது போல் ஊடகம்(media) தனது மாதிரி உலகில்’(Model Universe) மாறியிருக்கிறது. அதனுடைய மாதிரி உலகம் யாருக்கோ சார்பாக மாறியிருக்கிறது. ஏதாவது மாதத்தின் ஏதாவது நாளில் தொலைக்காட்சியைப் போட்டால், ஏதாவது ஊடகம் தொழிலதிபர்களுக்கு பரிசுகள்வழங்கிக் கொண்டிருக்கிறது. தொழிலதிபர்களுக்கு சான்றிதழ் வழங்கும் இந்த வேலை ஊடகங்களுக்கு ஏன் ?

ஊடகங்கள் சிறந்த பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசளிக்கின்றனவா? சிறந்த செவிலியர்களுக்கு அவர்கள் சேவையைப் பாராட்டி தொடர்ந்து பரிசளிக்கின்றனவா ? அல்லது சிறந்த ஊழியர்களுக்கு ? அல்லது சிறந்த தொழிலாளிகளுக்கு ? இல்லை. ஆனால் ஒவ்வொரு மாதமும் ஏதாவது சேனல் (தொலை ஊடகம்), ஒவ்வொரு சேனலும் ஏதாவது மாதங்களில் யாராவது தொழிலதிபர்களுக்கு பரிசுகள் வழங்கிக் கொண்டே இருக்கிறது. சரி. பரிசளிப்பில் யார் முதலாவதாக வருகிறார்கள் ? ஊடகங்கள் அவர்களுடைய முக்கிய இலக்கை நோக்கி தாழ்மையுடன் வேண்டி இந்தப் பரிசுகளை  ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும். அவ்வளவு பெரியவர்கள் அவர்கள். கடைசியாகப் போன சுற்றில் பரிசை வென்றவர் யார் என்று ஊகிக்க முடிகிறதா ? முகேஷ் அம்பானி. அவர் ஏன் அங்கே போனார் ஏனென்றால் பரிசுகளை வழங்குபவர் நாட்டின் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. முகேஷ் அம்பானி எப்போது வேண்டுமானாலும் நிதியமைச்சரை சந்திக்க முடியும். ஆனால் இங்கே ஒரே மேடையில் 2 மணிநேரம் அவருடன் கழிக்கக் கிடைக்கிறது. எனக்குப் புரியவில்லை. தொழிலுக்கும், தொழிலதிபர்களுக்கும் மகுடங்கள் சூட்டுவதில் நமக்கு என்ன வேலை ?

ஊடகத்தின் அபத்தத்தை விளக்க பின்வரும் எடுத்துக்காட்டு உதவும். நான் இதழியல்(journalism) ஆசிரியர். நான் SEJ (எஸ்.இ.ஜெ) மற்றும் சாபையர்(Sapphires)ல் இதழியல் பாடம் நடத்துகிறேன். ஒருவேளை என்னிடம் இப்பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்கள், (இவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பொறுப்பு என்னுடையது) வருடம் முழுதும் எனக்கு பரிசுகள் அளிக்கிறார்கள் என்று வையுங்கள்; என்றால் அதில் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தமல்லவா. நீங்கள் என்ன சூழ்நிலை இது ? மாதா மாதம் இந்த மாணவர்கள் தங்களது விடைத்தாளை திருத்தும் ஆசிரியருக்கு பரிசுகள் வழங்குகிறார்களே என்று நினைப்பீர்களா இல்லையா. இது அதைப் போன்ற ஒன்றுதான். கொஞ்சம் வேறுபட்டது. என்ன வேறுபாடென்றால் ஊடகங்கள் நிறுவனங்களுக்கு ஆதரவானவை என்பது அல்ல. ஊடகங்கள் தனியார் கார்ப்பரேட்டுக்கு ஆதரவானவை என்பது அல்ல. ஊடகங்களே நிறுவனங்கள்; ஊடகங்களே தனியார் கார்ப்பரேட்டுகள்; என்பது தான். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் நாம் இந்த கார்ப்பரேட் உலகின் ஒரு அங்கம். இந்த அமைப்பில் முன் வரிசையில் நிற்கும் போர் வீரர்கள் நாம். தனி மனிதன் போக இயலாத இடங்களுக்கு நாம் துணிவுடன் செல்வோம் (முதலில் சாகுபவர்களும் முன்வரிசைக் காரர்களான நாம் தான்).

நான் ஏற்கனவே சொன்னது போன்று அடிப்படையான விஷயங்கள் இடம் பெயர்ந்திருக்கின்றன. பெருவாரியான மக்கள் பங்குபெற்ற நிலப் புரட்சியிலிருந்து பெருவாரியான மக்களின் தற்கொலைகளுக்கு இடம் பெயர்ந்திருக்கிறோம். பட்டினித் தற்கொலைகளினால் அப்போதைய ஆட்சியிலிருந்த அமைச்சர்கள் கூட்டம் போட்டு பட்டினி பற்றியும் உணவுப் பாதுகாப்பு சட்ட முன்வரைவு (Food Security Bill) பற்றியும்  பேச உட்கார்ந்த போது கூட்டத்தில் கூறப்பட்ட முதல் வரி என்ன தெரியுமா ? கூட்டக் குறிப்புகளில் அது பதியப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் விவாதங்கள் மிக்க பாதுகாப்பு ரகசியங்கள் கொண்டது. வெளியிடப் படக்கூடாதது என சிவப்பு நாடா போடப்பட்டது. ஆனால் இந்த நாட்டின் சிறந்த மற்றும் விரும்பத்தக்க விஷயங்களிலொன்று என்னவென்றால் ரகசியம் என்று குறியிடப்பட்ட ஒரு ஆவணம் 5 நிமிடங்கள் கழித்து எல்லோருக்கும் கிடைக்கும். இது இந்தியாவின் ஜனநாயகத்தின் பலங்களில் ஒன்று என்று நான் கருதுகிறேன். கசிவுகளுக்கே என் ஓட்டு.

சரி. இந்தக் கூட்டக் குறிப்பின் முதல் வரி என்ன? அந்த முதல் வரி சொல்கிறது முன்மொழியப்பட்டிருக்கும் சட்ட வரைவு உணவுப் பாதுகாப்பிற்கான சட்ட வரைவாகும். இது இன்னும் பெரிய பிரச்சனையான ஊட்ட உணவுப் பாதுகாப்புடன் தொடர்புடையது அல்ல. நான் விளையாட்டிற்காகச் சொல்லவில்லை. இந்த ஆவணம் இணையதளத்தில் கிடைக்கிறது; நீங்கள் விரும்பினால் சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஊட்ட உணவுப் பாதுகாப்பு பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. அதாவது உங்களுக்கு 2100 கலோரிகள் கல்லோ, மண்ணோ கிடைத்தால் போதும். அதில் ஊட்டச் சத்து இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. அதிகாரம் நிரம்பிய நிபுணர்கள் கொண்ட அமைச்சர்கள் குழு உங்களிடம் எழுத்துபூர்வமாகச் சொல்வது என்னவென்றால், அவர்களுடைய விவாதத்தில் முதலில் அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டது என்னவென்றால் இது வெறும் உணவுப் பாதுகாப்பு தான் ஊட்டஉணவுப் பாதுகாப்பு அல்ல என்பதை. உணவுப் பாதுகாப்பு பற்றிய சட்ட வரைவின் விவாதம் இந்த லட்சணத்தில் தான் ஆரம்பித்திருக்கிறது.

அந்த அமைச்சர்களில் ஒரு கணவானை நான் பத்திரிக்கையாளராக எனது 30 வருட அனுபவத்தில் பல முறை பேட்டி கண்டிருக்கிறேன். நானோ அல்லது அவரோ அவரைப் பேட்டி காணும் அந்த துரதிருஷ்டமான நிகழ்வை 26 வருடங்களாக அனுபவித்திருக்கிறோம். அக்கூட்டத்தில் குறிப்பில் இடம் பெறாத (off the record) கருத்துக்களாக அவர் சொன்னது இது: என்ன இது பசி, பட்டினி என்று பேசிக்கொண்டு ? இந்தியா எங்கேயோ முன்னேறிப் போய்விட்டது. என்னுடைய தொகுதிக்கு வாருங்கள்; வந்து யாராவது பசியாயிருக்கிறார்களா என்று எனக்கு காட்டுங்கள். மஹாராஷ்ட்ராவில் உள்ள 'புனே' தான் அவருடைய தொகுதி. அங்கு இருக்கும் மூன்று தாலுக்காக்களில் தான் அதிகபட்ச BPM அட்டைகள் (மொழி பெயர்ப்பில் தவறு இருக்கலாம் மொ.ர்) உள்ளன. ஏனென்றால் அவர் மிகச் சக்தி வாய்ந்த அரசியல்வாதி அவரால் தொகுதிக்கு அதிகபட்ச BPM அட்டைகளைக் கொண்டு வர முடியும். நாம் இப்போது பசி என்றால் என்ன?’ என்கிற அவரது கேள்விக்குப் பதிலளிக்க முயல்வோம்.

பசி என்பது உணவு நெருக்கடியா? பசி என்பது வெறும் ஏட்டு விவாதமா? சரி. அப்படியே பசியை நடைமுறையில் இல்லாத ஏட்டு விவாதமாகக் கொண்டால் கூட அதன் முடிவுகள் ஏமாற்றமளிப்பவையே. இதை அளவு ரீதியாக, புள்ளி விவரக் கணக்குகள் கொண்டு பார்த்தாலும் முடிவுகள் ஏமாற்றமளிப்பவையே. நண்பர்களே UPA(United Progressive Alliance) கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த 4 வருடங்களுக்கு நமக்கு பசி பற்றிய புள்ளி விவரத் தகவல்கள் உள்ளது. அதாவது 2005, 2006, 2007 மற்றும் 2008 வருடங்களை நான் எடுத்துக் கொள்கிறேன். 2004 ஐ ஏன் எடுக்கவில்லை ? ஏனென்றால் அது தேர்தல் நடந்த வருடம்; பாதி NDA(National Democratic Alliance) பாதி UPA ஆண்டது. எனவே கடந்த நான்கு வருட UPA அரசின் கணக்கீடுகளை மட்டும் கொள்வோம். சராசரியாக ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு கிடைக்கக் கூடிய உணவு தானியங்களின் அளவு என்ன ? 436 கிராம்கள் உணவு தானியங்கள், பருப்பு வகைகள் எல்லாம் சேர்த்து. ஒரு நபருக்கு. ஒரு நாளைக்கு. வெறும் 436 கிராம்கள். இவை தான் தனி நபருக்கு ஒரு நாளைக்கு இந்தியாவில் கிடைக்கும் உணவு அளவின் சராசரி. இதுவே ஒரு அவமானத்தை உண்டாக்கும் புள்ளி விவரம்.

1991 ல், பொருளாதாரச் சீர்திருத்தம் ஆரம்பித்த போது, ஒவ்வொரு இந்தியரின் தனி நபர் உணவு கிடைக்கும் அளவு 510 கிராம்கள். 2005 முதல் 2008 வரையிலான நான்கு வருட சராசரி அளவு 436 கிராம்கள். இது 50 வருடங்களுக்கு முந்தைய உணவு கிடைக்கும் அளவை விட மோசமானது. 50 வருடங்களுக்கு முந்தைய நிலை என்ன ? 1955, 1956, 1957 மற்றும் 1958. அந்த நான்கு வருடங்களுக்கான தனி நபரின் ஒரு நாளைய உணவு சராசரி 440 கிராம்கள். இந்த 4 கிராம்கள் வித்தியாசமானது உண்மையில் பல லட்சம் டன்கள் உணவு தானியங்கள் வித்தியாசத்தைக் குறிக்கிறது. இதை நன்கு புரிந்து கொள்ளுங்கள். இது குழப்பமாக இருக்கிறதா ? தனிநபர் ஒரு நாளைய உணவு தானியத்தில் ஒரு நபருக்கு 4 கிராம்  X    365 நாட்கள்   X    110 கோடி இந்தியர்கள். இம்மூன்றையும் பெருக்கினால் எத்தனை டன்கள் வருமோ அவ்வளவு வித்தியாசம். 1955 ல் 2008 ஐ விட இத்தனை லட்சம் டன்கள் அதிகம் விளைவிக்கப்பட்டிருக்கிறது. 2008 ல்  அமெரிக்காவுடன் போட்ட அணு ஒப்பந்தத்தால் சூப்பர் பவர் (Super Power) ஆகி இந்தியா ஒளிர்கிற நேரத்தில் தான், அதன் குடிமகன்கள் 1955 1958 களைக் காட்டிலும் குறைந்த உணவு தானியங்களே தினமும் கிடைக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. 1950 களில் இந்தியா காலனியாதிக்கத்திலிருந்து மீண்டு 10 15 ஆண்டுகள் முன் செல்லும் அதே வேளையில் தான் பிரித்தானியர்கள் காலத்தில் உருவாக்கிய பஞ்சங்களின் விளைவுகளையும், 1942 44 ல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சம் உட்பட சந்தித்தது.

அப்படியிருந்தும் 1955 58 ல் இந்தியாவின் செயல் திறன் நன்றாக இருந்தது. இந்திய அரசின் வருடாந்திர வரவு-செலவு திட்ட அறிக்கைகளிலிருந்தும் (Annual Budget Report), பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வுகளிலிருந்தும் மேற்கூறிய புள்ளி விவரங்களை நீங்கள் எடுக்கலாம். A – 17 என்ற பெயருடைய ஒரு அட்டவணை இருக்கிறது. அதைப் பாருங்கள். அதில் எல்லாம் இருக்கிறது. எனவே பசியை புள்ளி விவர, அளவுகளில் அளந்தாலும் எண்கள் ஏமாற்றமளிக்கின்றன. 510 கிராம்கள் ஒரு நாளைக்கு 1991ல். 422 கிராம்கள் ஒரு நாளைக்கு 2006ல். இப்போது 432 கிராம்கள் ஒரு நாளைக்கு 2008ல்.

திரும்பவும் ஏட்டு விவாதத்திற்கே வருவோம். பசியென்பது என்ன ? அதே நான்கு வருடங்களில் 2005 முதல் 2008 முடிய வறுமையை ஆய்வு செய்ய அரசு நியமித்த மூன்று குழுக்கள் ஆய்வு செய்து அறிக்கைகள் தந்துள்ளன. அக்குழுக்கள் டாக்டர்.டெண்டுல்கர் குழு, N.C.  சக்சேனா தலைமையிலான பி.பி.எல் நிபுணர் குழு(BPL Committee) மற்றும் முறைசாரா தொழில்களுக்கான தேசிய ஆணைக் குழு(National Commission for Enterprises in unorganized sector). மூன்று வேறுபட்ட குழுக்கள்; மூன்று வேறுபட்ட சித்தாந்தப் பார்வைகள்; ஆனால் மூன்று குழுக்களும் ஒரே முடிவிற்கு வந்தனர். ஒவ்வொரு ஆணையமும் கிராமப்புற வறுமை’(Rural Poverty) அளவீட்டை இந்திய அரசின் தற்போதைய அளவீடுகளிலிருந்து மிக அதிகமாக உயர்த்தியே குறித்தன.
இருப்பதிலேயே குறைந்த பட்ச அளவாக வலதுசாரி சிந்தனை கொண்ட, பழமைவாத டெண்டுல்கரின் அறிக்கையில் கிராமப்புற வறுமையை 42% என்று குறித்தார். நான் உறுப்பினராக அங்கம் வகித்த பி.பி.எல் நிபுணர் குழு 50% க்கு மேல் குறித்தது. நான் 50% என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. எனது விலக்க அறிக்கை குறிப்பில் இதை நீங்கள் பார்க்கலாம். அது பின்னிணைப்பு I ல் குறிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக தேசிய தொழில் நிறுவனங்களுக்கான ஆணையத்தின் அறிக்கயை நீங்களே இணையதளத்தில் பார்க்கலாம்.

இந்த அறிக்கையின் முதல் பக்கத்தில் சொல்லப்படுவது; 8.36 கோடிப் பேர் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் கீழே தான் செலவு செய்து உயிர்வாழ்கிறார்கள். ஆனால் அது அவர்களை ஏழை என்றாக்கிவிடாது. இந்திய அதிகார வர்க்கத்தின், இந்திய கல்வியாளர் குழுமம் மற்றும் அரசியல்வாதிகளின் புத்திசாலித்தனம் என்னவெனில், நீங்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய் செலவழிக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏழை இல்லை. வறுமைக் கோட்டிற்கு(Poverty Line) கீழே வாழும் ஏழையாகத் தகுதி பெற நீங்கள் வாழும் இடத்தைப் பொறுத்து, நீங்கள் ஒரு நாளைக்கு 11 ரூபாய்க்கும் கீழே அல்லது 8 ரூபாய்தான் செலவழிக்க வேண்டும்.  நீங்கள் சென்னை வாசியாக இருந்தால் நீங்கள் ஒரு நாளைக்கு 17 ரூபாய் செலவழிக்க முடிந்தால், இத்தொகைக்கு ஒரு தண்ணீர் பாட்டிலும், ஒரு டீயும் வாங்கலாம், ஒரு நாளைக்கு ஒரு பாட்டில் தண்ணீரும் ஒரு டீயும் குடிக்க முடிந்தாலே நீங்கள் ஏழைகள். இந்திய அரசின் கூற்றுப்படி, சென்னையில், நீங்கள் ஒரு நாளைக்கு 17 ரூபாய் செலவழிக்க முடிந்தாலே நீங்கள் ஏழைகள் இல்லை. 17 ரூபாய் தான் வெட்டுப்புள்ளி.

ஆனால் இந்த மூன்று குழுக்களும் வறுமை மிக அதிகமாக, அதிலும் கிராமப்புற வறுமை தோராய அளவீட்டைக் காட்டிலும் மிக அதிகம்  என்பதில் உடன்படுகின்றன. அர்ஜூன் சென் குப்தாவின் அறிக்கை 8.36 கோடி இந்தியர்கள் அதிகபட்சம் 20ரூபாய் ஒரு நாளைக்கு செலவு செய்ய இயலுபவர்களாக இருக்கின்றனர் என்கிறது. யார் இந்த மக்கள்? தலித்துகளிலும், ஆதிவாசிகளிலும்  88%  பேர் ஒரு நாளைக்கு 20 ரூபாய் செலவழிக்கும் மக்கட் பிரிவில் வருகிறார்கள். முஸ்லீம்களில் 85% பேர் இந்த 8.36 கோடியில் உள்ளனர். நாட்டின் சாதி, வர்க்க மற்றும் மத முகங்களை வறுமையிலும் நீங்கள் பார்க்கலாம்.

எவ்வளவு நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசியதை பார்த்திருக்கிறீர்கள்? இந்த அறிக்கை வெளிவந்த போது இதைப் பற்றிக் குறிப்பிட்ட, அப்போதிருந்து பதவியை இழந்த, ஒரே மனிதர் நமது ஐக்கிய மந்திரி சபையின் அமைச்சர் (union cabinet minister), மணிசங்கர் ஐயர். அவர்தான் இதைப் பற்றி முதன் முதலாக 15 ஆகஸ்ட் 2007ல் எழுதினார். எனக்கு அப்போது இநத் அறிக்கை வந்தது பற்றி தெரிந்திருக்கவில்லை. பிரதமர் ஆகஸ்ட் 7 ஆம் தேதி கையெழுத்திட்டிருக்கிறார். மணிசங்கர் ஐயர் மந்திரி சபை அமைச்சர் என்பதால் அந்த அறிக்கையைப் பார்த்து அதைப் பற்றி ஆகஸ்ட் 15ல் தி இந்து பத்திரிக்கையில் எழுதினார். அடுத்த வாரம் நான் எழுதினேன். எவ்வளவு பத்திரிக்கைகளில் இதைப் பற்றி ஏதாவது விவாதங்கள் நடந்ததை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் ?

 எனவே, மறுபடியும், நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்தப் பசி என்பது என்ன? இதை இப்போது ஏட்டு விவாதமாகவே பார்க்க முயற்சி செய்கிறேன். மக்களின் அனுபவங்களிலிருந்து இதைப் பார்க்க முயற்சிக்கிறேன். பசி என்பது நான் 49 டிகிரி வெயிலில் தெலுங்கானாவில் நிற்கும் போது, தெலுங்கானாவின் கிராமங்களில் செய்தி தவறாகப் பரவுகிறது. நான் ரொம்ப செல்வாக்கு நிறைந்த ஆசாமி என்றும் நான் அரசிடம் சொன்னால் அது நடக்கும் என்று. இது மிகப் பெரிய மாயை. ஆனால் மக்களின் நிராதரவான நிலையில் அக்கிராமத்தின் தாய்மார்கள் எல்லாம் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். இது நடந்தது மே 28 அல்லது மே 29. நலகொண்டா மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளிலும் உள்ள வெப்பத்தை நீங்கள் நினைத்துப் பாருங்கள். பசி என்பது என்னவென்றால் அங்கிருந்த குழந்தைகளின் தாய்மார்கள் அனைவரும் வெயிலின் வெப்ப அலை’(heat wave) உச்சத்திலிருக்கும் வேளையில் சார், தயவு செய்து உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி அரசை கோடை விடுமுறையிலும் பள்ளியைத் திறக்கச் செய்யுங்கள் என்று என்னிடம் கேட்டுக் கொண்டனர். அரசு பள்ளிகளை கோடையில் சீக்கிரமாகவே மூடிவிடுகிறது ஏனெனில் குழந்தைகள் வெயில் தாக்கு’(heat stroke) காரணமாக இறந்து விடுகின்றன. ஆனால் அந்தக் குழந்தைகளின் அன்னையரோ பள்ளிகளைத் திறக்க விரும்புகின்றனர் ஏனென்றால் குழந்தைக்கு ஒரு வேளை உணவு உத்திரவாதமாகக் கிடைக்குமில்லையா ! குழந்தைக்கு நல்ல சாப்பாடு ஒருவேளைக்கு உத்திரவாதம். அவர்கள் குழந்தை வெயில் தாக்கு காரணமாக இறக்கும் ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராகின்றனர். ஆனால் அது பசியினால் மெல்ல மெல்லச் சாவதை பார்ப்பதற்கு அவர்கள் தயாராயில்லை. இது தான் பசி. பட்டினி.

பசி என்பது பள்ளி ஆசிரியர்கள் என்னிடம் சொன்னது;  இதை என்னிடம் சொன்ன முதல் ஆசிரியர் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். அன்றிலிருந்து பல பள்ளி ஆசிரியர்கள் என்னிடம் இதையே சொல்லியிருக்கிறார்கள்; இதில் மும்பாயின் நகர விளிம்புகளில் உள்ள பள்ளிக்கூடங்களின் ஆசிரியர்களும் உண்டு. பசி என்பது என்ன ? பசி என்பது பள்ளி ஆசிரியர்கள் என்னிடம் சார்.. நீ்ங்க கொஞ்சம் பார்த்துக்கோங்க சார்.. கலெக்டர் கிட்டே சொல்லுங்க சார்... திங்கட்கிழமை மதிய உணவு அளவை இரு மடங்காக்கச் சொல்லுங்கள் சார்.. என்று கேட்பது. ஏன் திங்கட்கிழமை மதிய உணவு மட்டும் இரு மடங்காக்கபட வேண்டும் ? மும்பாயில், முகேஷ் அம்பானியின் நகரத்தில், ஆசிரியர்கள் சொல்கிறார்கள் சார்... திங்கட்கிழமை மதிய உணவு அளவை இரு மடங்காக்கச் சொல்லுங்கள். தெலுங்கானா, ராம்நாதபுரம், மும்பாய் என்று எல்லா இடங்களிலும் ஆசிரியர்கள் சொல்கிறார்கள் திங்கட்கிழமை மதிய உணவு அளவை இரு மடங்காக்க வேண்டும் என்று. ஏன் ? ஏனெனில் எந்தப் பள்ளி ஆசிரியரும் மத்தியானம் 1 மணிக்கு முன் வகுப்பு நடத்த முடிவதில்லை. ஏனெனில் குழந்தையால் பாடத்தைக் கவனிக்க இயலாது ஏனென்றால் குழந்தை மூன்று நாட்களாகப் பட்டினியாய் இருந்திருக்கும். கடைசியாய் குழந்தைக்குக் கிடைத்த நல்ல உணவு வெள்ளிக் கிழமை மதியம் 12 மணியாய் இருந்திருக்கும். வீட்டில் குழந்தை சாப்பிட கிட்டத்தட்ட ஒன்றும் கிடைப்பதில்லை. வயிறு எரியும். இதனால் திங்கட்கிழமை காலை வேளைகளில் குழந்தைகள் பாடத்தை கவனிப்பது சிரமமாயுள்ளது. எந்த ஆசிரியரும் திங்கட்கிழமை மதியம் 1 மணி வரை பாடம் எடுக்க விரும்புவதில்லை. ஏனென்றால். அதன் பின் குழந்தை மதிய உணவு சாப்பிட்டுவிடும். எனவே அவர்கள் திங்கட்கிழமை மதிய உணவு வயிறு முட்ட ஆகும் படி, இருமடங்காக்கப்பட வேண்டும் என்கின்றனர் ஏனெனில் குழந்தைகள் சனி, ஞாயிறுகளில் வீட்டில் கிட்டத்தட்ட எதுவுமே சாப்பிடாத நிலை தான். இதைக் கேட்டபோது நான் திடுக்கிட்டு உறைந்துதான் போயிருந்தேன், சில மாதங்களுக்கு முந்தைய எனது வெளிநாட்டுப் பயணம் வரை. சில மாதங்களுக்கு முன்பு உலகின் செழிப்பான நாடுகளில் ஒன்றான பின்லாந்துக்குச் (Finland) சென்றிருந்தேன்.  மனிதர்களின் வளர்ச்சிக் குறியீட்டு எண்ணில் முதலிடத்தில் உள்ள நாடு இது. பின்லாந்தின் பல மாவட்டங்களில் திங்கட்கிழமை மதிய உணவுதான் பலமானது. ஏனெனில் அங்கு கூட தங்கள் குழந்தைகள் வார இறுதியில் குறைவாய்ச் சாப்பிடும் ஏழை மக்கள் வாழ்கின்றனர் என்பதால். தெலுங்கானாவில் உள்ள குழந்தைகளைக் கேளுங்கள்; அவர்களின் மதிய உணவு வீட்டில் சாப்பிடும் உணவை விட நன்றாகவும், சத்து மிகுந்ததாகவும் இருக்கிறது என்று சொல்வார்கள்    

நாம் எங்கே போயிருக்கிறோம் ?  என்ன செய்திருக்கிறோம்? சுய உதவிக் குழு’(SHG – Self Help Groups) உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட அந்த மதிய உணவை ரத்து செய்து விட்டு அதை கார்ப்பரேட் உலகினர் பாக்கெட்டாகத் தயார் செய்ய கொடுத்துவிட்டோம்.   முன்பே தயார் செய்யப்பட்ட பாக்கெட்டுகளாக மதிய உணவை மாற்றியதன் மூலம் ஏழை தொழிலாளர்களான சுய உதவிக் குழுவினருக்கு சென்ற பணத்தைக் கூட அம்பானிக்கும், பிரிட்டானியாவிற்கும் அல்லது யாரோ ஒரு கம்பெனிக்கு திருப்பி விட்டுள்ளோம். இது தான் பசி. நீங்கள் அங்கு போய் அந்த உணவின் சாம்பார் தண்ணீராய் இருப்பதைப் பாருங்கள். அப்போது புரியும் பசி என்றால் என்னவென்று. பசி என்பது எதிர்பார்க்காத விலை உயர்வும் அதனால் துவரம் பருப்பின் விலை கிலோ 100 ரூபாய் என்று ஆனதும். அது தான் பசி. 2005 லிருந்து 2008 வரையிலான இந்த எதிர்பாராத விலை உயர்வு தான் 1973-74 க்குப் பின் நிகழ்ந்த மிக மோசமான விலைவாசி உயர்வாகும்.

சில மாதங்களுக்கு ஒரு முறை எங்கள் கட்டிடத்தை சுத்தம் செய்ய வரும் பெண்ணுடன் இந்த விலை ஒப்பிடுதலை செய்து கொள்வேன். அப்பெண்மணியின் செலவுகள் என்ன?  என்னுடைய செலவுகள் என்ன ? அப்போது உங்களால் வர்க்கப் பிரிவினையை உண்மையாகவே புரிந்து கொள்ள முடியும். எனது செலவுக் கணக்குகளையும், அவரது செலவுக் கணக்குகளையும் நான் பார்த்ததில், எனக்கு முக்கியமான பொருட்கள், எனக்கு வசதி தரும் விஷயங்களும், விலை குறைந்து போயுள்ளன. ராய்காட் என்கிற கிராமத்திலிருந்து வரும் ஏழை விவசாயப் பெண்ணான அவருக்கு வேண்டிய விஷயங்கள் அனைத்தின் விலையும் அப்படியாக வில்லை. அறுவடைக் காலங்களில் அவரது நிலத்திலிருந்து எங்களுக்கு அரிசி கொண்டுவருவார். அவரது நிலம் மட்டுமே அவரது குடும்பத்தை நடத்த உதவ முடியாது என்பதால் அவர் மும்பையில் வீட்டு வேலைகளையும் செய்கிறார். அவர் வேலை செய்யும் எல்லா வீடுகளுக்கும் அவருடைய வயலிலிருந்து சிறிய அரிசிப் பைகளில் அரிசி கொண்டு வந்து தருவார். அவருடைய வாழ்க்கையில் இப்போது 300 முதல் 500 சதவீதம் செலவீனம் உயர்ந்திருக்கிறது.

எனக்கு, கம்ப்யூட்டர்கள்(கணிணிகள்); கை பேசிகள்(செல்போன்கள்); இன்றைக்கு எனது செல்போன் நான் முதன் முதலில் வாங்கிய கம்ப்யூட்டரை விட 300-400 மடங்கு ஏன் 400-500 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது. 1991 ல், நான் வாங்கிய
52000 ரூபாய் விலையுள்ள PC AT கம்ப்யூட்டர், 20 MB ஹார்ட் டிஸ்க்(வன் வட்டு) மட்டுமே கொண்டது. இன்றைக்கு 52000 ரூபாய்க்கு நீங்கள் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரே வாங்கலாம், 1 TB(=1000000 MB) சேமிக்கும் வன் வட்டும், 8 GB RAM, மற்றும் ஒரு 21 இன்ச் மானிட்டர் திரையுடன். சரியா ?  இது எனது தேவையை விட பல மடங்கு அதிகம். எனது இன்றைய கை பேசி சில வருடங்களுக்கு முன்பு நான் வைத்திருந்த கம்ப்யூட்டரை விட பல மடங்குகள் சக்தியுள்ளது. அப்புறம் கார்கள்; 1980களில் எங்களது பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் 200 ரூபாய் பயணச் சலுகை பெறுவதற்காக வேலை நிறுத்தம் செய்திருக்கிறோம். அன்று வேலை நிறத்தம் செய்த எங்களுக்கு இன்று அலுவலகக் கார் கொடுக்கபட்டிருக்கிறது. சில வேளைகளில் கார் ஓட்டுனர்களும் கூடக் கிடைப்பார்கள். எங்களுக்கு கார் தருவார்கள்; எங்கள் கார் ஓட்டுனருக்கு 4000 ரூபாய் சம்பளமும் தருவார்கள். நாங்கள் 250 ரூபாய்க்கு பயணப் படிக்கு வேலை நிறுத்தம் செய்த ஒரு காலமும் இருந்திருக்கிறது.

அப்பெண்மணி, அவர் வீட்டு வேலைக்கு வந்த காலத்தில் பம்பாயில் குறைந்த பட்சம் பேருந்துக் கட்டணம் 5 பைசா அல்லது 10 பைசா. இன்று அவர் பேருந்தில் ஏறினாலே 5 முதல் 10 ரூபாய் செலவழித்தாக வேண்டும். அவருடைய செலவு எத்தனை மடங்காயிருக்கிறது என்று பாருங்கள். ஏ.சி.(குளிர் சாதன வசதி), கம்ப்யூட்டர்கள், கைபேசிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், இணையம் (Internet) இவை எல்லாவற்றிலும் விலை ஒன்றுமேயில்லை என்கிற அளவுக்கு வீழ்ந்துள்ளது; அது இங்கிருக்கும் பார்வையாளர்கள் எல்லோருக்கும் ரொம்ப வசதியானது. அந்தப் பெண்மணிக்கோ, அவருடைய முக்கியமான தேவைகள் அனைத்தும்; மின்சாரம், தண்ணீர், உணவு எல்லாம் 300 முதல் 500 சதவீதம் உயர்ந்திருக்கின்றன. அந்தப் பெண்மணிக்கு ரிலையன்ஸிடமிருந்து 700 ரூபாய் மின் கட்டணத் தொகை என்று மின் உபயோகச்சீட்டு(Electricity Bill) வருகிறது.  
அவர் வீட்டில் இரண்டு பல்புகள்(மற்ற சில அத்தியாவசிய உபகரணங்களுடன்) இருக்கின்றன. எவ்வளவு மாறியிருக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள். நடுத்தர வர்க்கத்தினரை எதிர்கொள்ளும் சவால் இது தான்; நடுத்தரவர்க்கத்தினரான நாம்  நமது வசதிகளினால் நம்மை உணர்வேயில்லாமல் செய்து கொள்வதையும் மற்ற பிரச்சனைகளிலிருந்து நம்மைச் சுயநலமாகத் துண்டித்துக் கொள்வதையும் கடந்து நிற்பது. இது மிகப் பெரிய சவால். தொழிற் சங்கங்களில் அங்கம் வகிக்கும் உங்களைப் போன்ற பெரும்பான்மையானோருக்கு நான் சொல்வதெல்லாம் உங்களுக்கும் எனக்கும் இருக்கும் தார்மீக உணர்வின் பெரிய சவால் இது என்பதே.

பசி என்பது தான் என்ன? 74 வயது ஆண்களும் 65 வயது விதவைப் பெண்களும் NREGS(National Rural Employment Guarantee Scheme- தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் - தே.ஊ.வே.தி) திட்ட வேலைக் களத்தில்(Site), 47 டிகிர சென்டிகிரேட் வெயிலில் வந்து, கல் உடைக்கும் வேலை கேட்டு  கெஞ்சி நிற்பது. அவர்களில் சில பேரால் நேராக நிமிர்ந்து நிற்பதே கடினம். நிற்பதற்கே இயலாத அவர்கள் தே.ஊ.வே.தி அதிகாரியிடம் வந்து சார், எங்களுக்கு ஏதாவது வேலை கொடுங்கள்”( தெலுங்கில் - ஆ நூறு ரூவாக்கு பணி யேந்தி சார் - அர்த்தம்: நூறு ரூவாய்க்கு வேலை கொடுங்கள் சார்) என்றபடி கெஞ்சிக் கொண்டு நிற்கிறார்கள். ஏன் ? விலைவாசி உயர்வு அவர்களை அழித்துவிட்டது.

ஆந்திர மாநிலத்தில், நலகொண்டா மாவட்டத்தில், நாங்கள் ஒருவரை பேட்டி கண்டோம்;  சரியோ தவறோ பேட்டி கண்டதால் அவரை பிரபலமாக்கி விட்டேன் நான்; அதன் மூலம் அவருக்கு பெரும் சித்ரவதைகளே பரிசாகக் கிடைத்தன. அவர் பெயர் கடசு ராமுலு. 74 வயது. 47 டிகிரி சுடும் வெயிலில் ஒரு தே.ஊ.வே.தி வேலைக் களத்தில் அவரைக் கண்டோம். அவர் வேலை முடித்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை நீங்கள் ஏன் வேலைக்குப் போகிறீர்கள் என்று கேட்டோம். அவர் சொன்னார் எனது ஓய்வூதியம்(pension) 200 ரூபாய்.  துவரம் பருப்பு கிலோ 100 ரூபாய். 200 ரூபாய் ஓய்வூதியத்தில் நான் என்ன சாப்பிடுவது ஐயா?”. டாக்டர் மன்மோகன் சிங் அவர்களே! அது தான் பசி. அதாவது 74 வயது மனிதன் கல்லுடைக்கப் போவது.

இத்துடன் நீண்ட வரிசையில் நிற்கும் வயதான பெண்மணிகளையும், விதவைகளையும் நீங்கள் பார்க்கலாம். தே.ஊ.வே.தி தனித்த, விதவையான பெண்களுக்கு வேலை தர விரும்புவதில்லை. நீங்கள் குழுவாகத் தான் வரவேண்டும். ஒரு விதவைப் பெண் அவள் வாழும் கிராமத்திலேயே அன்னிய மனுஷி தான். அவளுடைய அம்மாவின் கிராமம் தான் அவளது கிராமம். இது அவளது கிராமம் கிடையாது. விதவையான அவளுக்கு என்று ஒரு கூட்டம்(குப்பா) கிடையாது. அதனால் தே.ஊ.வே.தில் வேலையும் கிடைக்காது. எந்த தே.ஊ.வே.தி வேலைக் களத்திற்குச் சென்றாலும் மிக வயதான பெண்கள் 10-12பேர் வரிசையில் நின்று கொண்டிருப்பதைப் பார்க்கலாம். சில பேர் அதிகாரியின் பின்னாலே சென்றபடி வேலை தாருங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.ஐயா.. எங்களால் வேலை செய்ய முடியும் ஐயா.. எங்களால் வேலை செய்ய முடியும் என்று கெஞ்சுவார்கள். கொஞ்சம் இரக்க சுபாவம் கொண்ட அதிகாரிகள் அவர்களுக்கு மண்ணில் தண்ணீர் ஊற்றும் வேலையைக் கொடுப்பார்கள்; தண்ணீர் மண் மேல் விட்டால் குழி தோண்டும் போது இலகுவாக இருக்கும். இது தான் பசி.

பசி என்பது என்ன? ராயலசீமாவில் அனந்தப்பூர் மாவட்டத்தில் தே.ஊ.வே.தில் வேலை பார்ப்பவர்களை ஆய்வு செய்தபோது் அவர்களில்  5ல் ஒரு பங்குப் பேர் 60 வயதுக்கு மேற்ப்பட்டவர்களாக இருந்தனர். குடும்பத்தில் பசிக் கொடுமை வளரும் போது, உணவுச்சட்டியில் உணவு குறையும் போது வாழ்வின் விளிம்பிற்கு முதலில் தள்ளப்படுவது யார் என்று நினைக்கிறீர்கள்? பெண்கள்; வயதானவர்கள்; குறிப்பாக விதவையான மூதாட்டிகள்; அவர்கள் ஒதுக்கப்படுவதன் காரணம் அவர்கள் வேலை, உற்பத்தி செய்ய லாயக்கற்றவர்களாக கருதப்படுவதால். அவர்கள் ஆண் செய்யும் வேலையைப் போல் இருமடங்கு வேலை செய்பவர்களாக இருந்தாலும் கருத்தளவிலும், சமூகப் பார்வையிலும் பெண்கள் கீழாகவே மதிப்பிடப் படுகிறார்கள். நாட்டின் 67% விவசாய வேலையைப் பெண்களே முடித்துக் கொடுக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் வேலை செய்யும் திறனற்றவர்கள். எனவே, விலைகள் உயரும் போது, உணவுத் தட்டுப்பாடு வரும் போது, வீட்டின் உணவுச் சட்டி சுருங்குகிறது. இதில் முதலில் வெளியேற்றப்படுபவர்கள் விதவை மூதாட்டிகளும், வயதானவர்களும். வீட்டின் பெண்கள் குறைவாக, மேலும் குறைவாக, மேலும் மேலும் குறைவாக உணவை சாப்பிட நேரும் துயரம் நடக்கிறது. மாண்புமிகு பிரதமர் அவர்களே... அது தான்... அது தான் பசி.

பசி என்பது பால் உற்பத்தி செய்யும் பால் பண்ணைகளில் வேலை செய்யும் குழந்தைகள் ஒரு சொட்டு பால் கூட குடிப்பதில்லை என்பது. விதர்பா மாவட்டம் முழுதும், மத்திய பிரதேசம் முழுதும் நான் பண்ணை வீடுகளைச் சென்று பார்த்திருக்கிறேன். 90களில் ஒரு பண்ணை வீட்டுக்கு நீங்கள் சென்றால் உங்களுக்கு விருந்தோம்பலாக பரிமாறப்படுவது என்ன தெரியுமா? இந்த பத்தாண்டுத் தொடக்கம் வரை(2001) மக்கள் உங்களுக்கு ஒரு குவளை நிறைய பால் தந்து உபசரிப்பார்கள். பிறகு 2003-2004 களில் அவர்கள் சாய்’(டீ / தேனீர்) கொடுக்க ஆரம்பித்தனர். ஏனெனில் தேனீருக்கு பால் குறைவாகத் தான் தேவைப்படும். இப்போது அவர்கள் விருந்தினருக்கு வெறும் கருப்புத் தேனீர்’(black chai - tea)தான் கொடுக்கிறார்கள். இதற்கு பாலே தேவையில்லை. ஏனென்றால் அந்த வீட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு துளி பாலும் சந்தையில் விற்கப்பட வேண்டும்; அப்போது தான் வீட்டிற்குத் தேவையான மற்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியும். இந்தக் கோமாளிகள், பொருளாதார வல்லுநர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் கோமாளிகள் சொல்கிறார்கள் உற்பத்திப் பொருட்களின் விலை கூடுவதால் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று. அவர்களுக்குத் தெரியாது 77% இந்திய விவசாயிகள் உணவுத் தானியங்களை சந்தையில் வாங்குபவர்களாக இருக்க வேண்டி இருப்பதால் விலை உயர்வு விவசாயிகளையும் மிகப் பாதிக்கும் என்பது.

பெரும்பாலும் தே.ஊ.வே.தியில் பயன் பெறுவது விவசாயக் கூலிகள் இல்லை. சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளே. ஏனென்றால் பருவக் காலத்தில் அவர்களுக்கு வயலிலே வேலை இருக்கும். வயலில் வேலை இல்லாத காலத்தில் அவர்கள் தே.ஊ.வே.தி  வேலைக்குச் செல்கிறார்கள். விவசாயக் கூலிகளால் நூறு நாள் வேலையைக் கொண்டு உயிர்பிழைப்பது கடினம் என்பதால் அவர்கள் கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்து விடுகிறார்கள். நூறு நாள் போக மீதி 265 நாட்களில் அவர்கள் சாப்பாட்டுக்கு என்னதான் செய்ய முடியும்? நான் வேலை செய்த நாட்களில் பண்ணைகள் என்றாலே பசுக்களும், பாலும் தான் நினைவுக்கு வரும். ஆனால் இப்போது தின வேளையில் பால் குடித்தே அறியாத பண்ணை வீட்டுச் சிறுவர்களைக் கொண்ட சந்ததி வளர்ந்து கொண்டிருக்கிறது. அது தான் நண்பர்களே... பசி.

பசி என்பது பிரதமர் அவர்களே, உணவை உற்பத்தி செய்பவர்களுக்கே, விவசாயிகளுக்கே உணவுப் பாதுகாப்பு இல்லாதது. அது தான் பசி. உணவு இறையாண்மை(??) பற்றிய விவாதங்களை நாம் மறந்து விடுவோம்; அது சத்துணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பை விடச் சிக்கலானது. உணவு உற்பத்தியாளர்கள் பட்டினி கிடக்கிறார்களே அது தான் பசி. பசி என்பது லட்சக்கணக்கான விவசாயிகள் உணவுப் பயிரிலிரு்து பணப்பயிருக்கு மாறியது; இந்தப் பயிர் மாற்றத்தின் விளைவாக அவர்கள் செய்யும் தற்கொலைகள்.

பசி என்பது வீழும் விவசாயியின் வருமானங்கள். இன்றைக்கு ஒரு இந்திய விவசாயப் பண்ணை வீட்டின் மாத வருமானம் என்பது 503 ரூபாய்கள். இதில் 60% சாப்பாட்டிற்கே செலவிடப்படுகிறது. சராசரி இந்திய விவசாயப் பண்ணை வீட்டின் மாத வருமானத்தில் சாப்பாட்டிற்கே 60 சதவீதம் செலவழிந்து விடுகிறது. 18%  எரிபொருள், உடை மற்றும் காலணிகளுக்கு. இந்த அளவீடுகள் யாருடையவை?  இந்திய அரசின் தேசிய மாதிரி கணக்கெடுப்பின் 59வது சுற்று -  விவசாய வீடுகளின் சூழ்நிலை அளவீட்டு அறிக்கை(situational assessment report) தரும் தகவல்கள் தான் இவை. பசி என்பது 1991 2002களில் இரட்டிப்பாகி விட்ட விவசாயிகளின் கடன் சுமை. 26% லிருந்து 48.6% வரை எல்லா விவசாயக் குடும்பங்களும் கடன்களில் உழலுகின்றன. அது தான் பசி.     

பசி என்பது ராஜஸ்தானில், மத்தியப் பிரதேஷில், சத்தீஸ்கரில் வசிக்கும் ஆதிவாசிக் குடும்பங்களில், மலைவாழ்க் குடும்பங்களில் வருடா வருடம் நான் காண்பது. ஆதிவாசிக் குடும்பங்கள் பசியை எப்படிச் சமாளிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? குடும்பத்திற்குப் பகிர்ந்தளிக்கப் போதுமான உணவு அவர்களிடம் இல்லை. எனவே அவர்கள் பசியைப் பகிர்ந்தளிக்கின்றனர். அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களுக்கு தே.ஊ.வே.திக்குச் சென்று வேலை செய்ய தேவையான பலம் உடலில் இல்லை. தே.ஊ.வே.தியின் முரண்பாட்டைப் பாருங்கள். நீங்கள் 9 மணி நேரம் வேலை கேட்கும் நபர்கள் 9 மணி நேரம் கூட உயிர்வாழத் தெம்பில்லாத நோஞ்சான்கள் ஆக வாழ்கின்றனர். பின்னர் நீங்கள் அவர்கள் சரியாக வேலை செய்யாததாகக் கூறி அவர்களுக்குக் குறைவாகக் கூலி கொடுக்கிறீர்கள். தே.ஊ.வே.தியில் வேலை செய்யும் எந்தப் பெண்ணும் 65 ரூபாய்க்கு அதிகமாக வாங்கவே முடியாது. யாருமே நூறு ரூபாயும் வாங்கிவிட முடியாது. 85 ரூபாய் தான் சராசரி அல்லது வாடிக்கை. நீங்கள் இந்த மாதிரி அளவீடுகளை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். பின்னர் பசியில் வாடுபவர்களையும், நோயுற்றவர்களையும், ஊட்ட உணவின்றி நோஞ்சான்களாய் போனவர்களையும் மிகக் கடினமான வேலைகளைச் செய்யச் சொல்கிறீர்கள். பின்னர் அவர்கள் சரியாக வேலை செய்யாததற்காக அவர்களைத் தண்டிக்கிறீர்கள்.

இந்த ஆதிவாசிகள் என்ன செய்கிறார்கள்? அவர்களுக்கு முழு 100 ரூபாயும் வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா ? ஒரு நாள் இரண்டு சகோதர்கள் வயிறு முட்டச் சாப்பிடுவார்கள். நன்றாகச் சாப்பிடுவார்கள். சாப்பிட்டுவிட்டு வேலைக்குச் செல்வார்கள். அடுத்த நாள் இவர்கள் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடாமல் பட்டினியாய் இருப்பார்கள்; குடும்பத்தில் வேறு இருவர் அன்றைக்கு நன்றாகச் சாப்பிட்டு விட்டு வேலைக்குச் செல்வார்கள். இது பசி இல்லையா ? எனது தொகுதிக்குச் சென்று பாருங்கள். பசியை காட்டுங்கள் என்று கூறும் உணவு மற்றம் விவசாயத்துறை அமைச்சர் என்றாவது சென்று இவர்களைப் பார்த்திருக்கிறாரா? சுப்ரீம் கோர்ட்டை வாயைப் பொத்தச் சொல்லும் உங்கள் பிரதமர் இந்த மாதிரியான பசியை அனுபவித்திருக்கிறாரா? இவர்கள் எல்லாம் கேட்கிறார்கள் நாம் பேசிக் கொண்டிருக்கும் பசி என்பது என்ன என்று. பசி என்பது பசித்திருக்கும் ஒரு சமூகம்; அங்கே நமது இந்திய அரசின் பசி பற்றிய கணக்கீடோ மிக எளிமைப்படுத்தப்பட்ட ஒரு கணக்கீட்டாக இருக்கிறது. இது தான் பசி.
------------------------
பாகம் 2ல் அவரது உரையின் தமிழாக்கத்தின் மீதிப் பகுதி வரும்...  
ஆங்கிலத்தில் இவ்வுரையைப் படிக்க - http://ambedhan.blogspot.com/2010/11/slumdogs-vs-billionaires-p-sainath.html

பாகம் 2 ஐ படிக்க - http://ambedhan.blogspot.com/2011/04/2.html