Friday, June 7, 2013

ஸ்ரீசாந்த் அப்படி என்ன பெரிய தவறு செய்துவிட்டார்?

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சமீபத்தில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா என்கிற மூன்று ராஜஸ்தான் ராயல் அணியின் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் செய்த ஸ்பாட் பிக்சிங் என்பது என்ன? இவ்வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட சில ஓவர்களில் வேண்டுமென்றே லூஸ் பால்கள் போட்டு ரன்களை எதிரணியினருக்கு அதிகப்படுத்திக் கொடுப்பார்கள். இதில் இவர்களுக்கு என்ன லாபம்?

இவர்கள் அணியினருக்கு லாபம் இல்லை. ஆனால் சூதாட்டம் நடத்தும் புக்கிகளுக்கும் அதனால் இவர்களுக்கும் லாபம். உதாரணமாக ஸ்ரீசாந்த்தின் நெருங்கிய நண்பனான ஜிஜூ ஜனார்தனன் என்பவர் 'புக்கி'(bookie) எனப்படும் சூதாட்டத் தரகராக இருந்துள்ளார். 

இவர் போட்டி நடக்கும் போது நிமிடங்களில் பல கோடிகள் பெட் வைக்கப்படும் சூதாட்டத்தை போன் மூலமே நடத்துவார். பெரும் பெரும் தலைகள் கம்பெனி முதலாளிகள் கலந்துகொள்வார்கள். உதாரணமாக ஜனார்தனன் அடுத்த ஓவரில் எதிரணியின் ஆட்டக்காரர் 14 ரன்களுக்கு மேல் எடுக்கப்போகிறார் என்று நிறைய பணம் பந்தயம் கட்டுவார். அதற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல கோடிகள் பெட் வைக்கப்படும்.  ஆனால் ஜிஜூவுக்கும், ஸ்ரீசாந்துக்கும் மட்டுமே தெரியும் ஸ்ரீசாந்த் வீசப்போகும் அடுத்த ஓவரில் வேண்டுமென்றே எளிதான பந்துகளைப் போட்டு எதிரணிக்கு 14 ரன்களுக்கு மேல் கொடுக்கப்போகிறார் என்று.

ஸ்ரீசாந்த் அடுத்த ஓவரில் வேண்டுமென்றே சொதப்பலான பால்கள் போட்டு 14 ரன்னுக்கு மேல் கொடுக்கப்போகிறார் என்பது ஜிஜூவுக்கு எப்படித் தெரியும் ? ஓன்றுமில்லை. அது ஒரு கோட் வேர்ட். ஸ்ரீசாந்த் தனது இடுப்பில் வெள்ளை நிற டவலை சொருகியிருந்தால் அந்த ஓவரில் 14 ரன்களுக்கு மேல் கொடுப்பார் என்பது ஜிஜூவுக்குத் தெரியும். எனவே அதை வைத்து அவர் உறுதியாக பெட் கட்டுவார். பல கோடிகள் லாபம் சம்பாதிப்பார்.

அந்த லாபத்தில் ஒரு பங்கு ஸ்ரீசாந்துக்கு அதாவது சுமார் 40 லட்சங்கள் ஒரு ஓவருக்கு கிடைக்கும்.

இவ்வளவு அருமையான ஒரு டெக்னிக்கை கையாண்டு பல்லாயிரம் கோடிகள் லாபம் சம்பாதிக்கும் ஐ.பி.எல் என்னும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்களான ஸ்ரீசாந்த்தும், அங்கீத் சவானும் சில கோடிகள் சம்பாதிப்பதில் என்ன பெரிதாய் தவறு நேர்ந்திருக்கிறது ? ஒன்றுமில்லை ராஜஸ்தான் ராயல்ஸூக்குப் பதில் கொல்கத்தா டேர்டெவில்ஸ் ஜெயிப்பார்கள். ரசிகர்களுக்கு அதிலென்ன பிரச்சனை? அவர்களுக்குத் தேவையான த்ரில்லான அந்த நான்கு மணி நேரம் அவர்களுக்குப் பொழுது நன்றாகப் போய்விடுகிறது. யார் தோற்றால் என்ன ? ஜெயித்தால் என்ன ?

உலக நாடுகளில் ஏற்கனவே கிளப் விளையாட்டுக்கள் என்கிற பெயரில் பெரும்பணம் சம்பாதிக்கும் விளையாட்டு நிறுவனங்களின் செயலை கமர்ஷியலாக லலித் மோடி கிரிக்கெட்டில் 50 ஓவர்களை20 ஓவர்களாக சுருக்கி ஐ.பி.எல் 20-20 என்று அறிமுகப்படுத்தினார்.

9 அணிகள் ஒரு வருடத்திற்கு 90 கிரிக்கெட் மேட்ச்சுகள். இவற்றால் விளையும் வருமானம் சில ஆயிரம் கோடிகள். இந்த லாபம், வருமானம் யாருக்குப் போகிறது ? ஐ.பி.எல் என்னும் தனியார் நிறுவனத்துக்கு. அதன் ஓனர்கள் அல்லது உறுப்பினர்கள் யார் ? அம்பானி, மல்லையா என்கிற வெளிப்படையான முதலாளிகள் முதல் ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா போன்ற பினாமி முதலாளிகள் தான் ஐ.பி.எல்லின் உரிமையாளர்கள்.

இவர்களுடைய நோக்கம் நீதி, நேர்மை வழுவாது கிரிக்கெட் என்னும் விளையாட்டின் உன்னத தருணங்களை மக்களுக்கும், ரசிகர்களுக்கும் கொண்டு சேர்ப்பதல்ல. மாறாக எல்லோருக்கும் ஒரு நான்கு மணி நேர முடிவு தெரிய டென்ஷனாகும் ஒரு பரபரப்பான த்ரில் சினிமாவைக் காட்டுவது. அதை சினிமாவாக இல்லாமல் லைவ்வாக கிரிக்கெட்டாக காட்டுகிறார்கள்.

நீங்களே சொல்லுங்கள். ஐ.பி.எல் கிரிக்கெட் பார்க்க ஒரு சாதாரண ரசிகருக்கு இருக்கத் தேவையான தகுதி என்ன? போர், சிக்ஸ், சிங்கிள்ஸ், அவுட், ரன் அவுட், டக் அவுட் அவ்வளவுதான். அதைத் தாண்டி கிரிக்கெட் என்கிற விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றி எந்த அறிவும் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஐ.பி.எல்லில் கடைசி ஐந்து அல்லது ஆறு ஓவர்களின் முன்னேயே விளையாட்டின் முடிவு தெரிந்துவிடும்படியான போட்டிகள் எத்தனை? குறைவு. மாறாக கடைசி ஓவரில், கடைசி பாலில், கடைசி ரன்னில் பார்வையாளரின் பி.பி.யை எகிறவைக்கும் க்ளைமாக்ஸ் கொண்ட ஆட்டங்களே அதிகம். ஏன்? இது வேண்டுமென்றே செய்யப்பட்டு வருகிறது என்று ஏன் ஒருத்தரும் சி.பி.ஐயிடம் போய்க் கேட்கவில்லை?

அதனால் தான் இன்று இல்லத்தரசிகள் முதல், இரும்புப் பட்டறை வைத்திருப்பவர் வரை எல்லோரும் ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்ஸின் ஸ்கோர் கேட்கிறார்கள். 'பட்டைய கிளப்பிட்டான்' என்று சந்தோஷப்படுகிறார்கள். அல்லது 'சே..சொதப்பிட்டான் ' என்று சலித்துக் கொள்கிறார்கள். இதன் ஒரே காரணம் அந்த அணியின் பெயரில் சென்னை என்று ஒரு வார்த்தை வருவதால். அதைத் தவிர அவர்களுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தமில்லை.

இப்படி சென்னைக்கு சம்பந்தமேயில்லாதவர்கள் நடத்தும் சென்னை சூப்பர் கிங்ஸூக்காக பேஸ்புக் முதல், ட்விட்டர் வரை வாய் கிழிய மார்தட்டிப் பேசுபவர்கள் பல்லாயிரம் பேர். இதே போல் தான் மற்ற அணியினருக்கும் அந்தந்த மாநிலத்தின் ரசிகர்கள் தான் ஓனர்கள் போல் நினைப்பு. ஸ்ரீசாந்த் முதல் யாரோ பெயர் தெரியாத புக்கிகளை ஏதோ கொலைக் கேஸில் பிடித்தவர்களைப் போல முக்காடு போட்டு கூட்டிச் சென்ற இதே சிபிஐ மெய்யப்பன் மற்றும் அவருடைய மாமனார் சீனிவாசனின் வீட்டு வாசலில் பவ்யத்தோடு நிற்கிறது வாலாட்டியபடியே. இதைப் பற்றியெல்லாம் நம் மக்களுக்கு என்ன கவலை?

அவர்களுக்குத் தேவை நான்கு மணி நேர பரபரப்புச் சினிமா. அடுத்த நாளில் அதைப் பற்றி ரசித்துப் பேச கிடைக்க ஓரு டாபிக். இதில் ஹஸ்ஸி, சேவாக் என்று விளாசும் ஸ்டார்களின் மீதான ரசனைகள் தனி. இன்று ஊழல் வந்த போதும் அதை ஒரு டாபிக்காக மட்டும் பேச ஒரு ஆள் வேண்டும். அது ஸ்ரீசாந்த் மற்றும் அவரது உடந்தையாளர்கள். ஸ்ரீசாந்த் பெண்கள் கூட சல்லாபம் செய்யும் பேர்வழி என்று கோரமான வில்லனாக ஸ்ரீசாந்த் ஆக்க்படுகிறார். ஏனென்றால் ஏமாற்றப்பட்டதாக உணரும் ரசிகர்களின் கோபத்துக்கு ஒரு வடிகால் வேண்டுமே அதற்காகத்தான். மாறாக நீதி கிடைக்கவேண்டுமென்று அல்ல.

2008ல் ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எல்லில் ஐந்நூறு கோடி முதல் ஆயிரம் கோடிவரை ஊழல் புரிந்தார், மேட்ச் பிக்சிங்குகள் செய்தார் லலித் மோடி என்று 2010ல் புகார் கிளம்பியது. சிபிஐ கிளம்பியது. லலித் மோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் வெளிநாட்டுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. அவ்வளவு தான் கேஸ் போட்டு அது...நடந்..து கொண்டே இருக்கிறுது. இருக்கும் ஜெ அம்மையாரின் வழக்குகள் போல. சி.பி.ஐக்காரர்கள் அப்போது கிளம்பியவர்கள் இன்னும் வந்து சேரவில்லை போல அதற்குள் அடுத்த ஊழல் பிரச்சனை ஸ்பாட் பிக்சிங். இந்த முறை சீனிவாசன் தைரியமாக அறிவிக்கிறார் தான் பதவி விலக முடியாதென்று. யாருக்கு வரும் இந்த தில்லு? உங்களுக்கோ எனக்கோ வருமா ?

இன்று 2013. இன்று வரை அந்த ஊழல் புகார்கள் என்ன ஆனது ? இந்தப் போட்டிகளை எப்படி நிஜமான விளையாட்டுக்கள் என்று நம்புவது என்பது பற்றி எந்த முட்டாள் ரசிகனுக்கும் கவலை இல்லை. அவனது சொந்தப் பணமான 500 ரூபாயை செலவழித்து டிக்கெட் வாங்கி இந்த மோசடி மேட்ச்களை பார்க்கிறோமே என்று யாருக்கும் வருத்தமும் இல்லை. இந்த ஸ்பாட் பிக்சிங்கில் இதுவரை 17 புக்கிகளை கைது செய்துள்ளதாம் போலீஸ். புக்கிகள் என்பவர்கள் தரகர்கள் மட்டுமே. பச்சையாகச் சொன்னால் புரோக்கர். கமிஷனுக்காக வேலைகள் செய்பவர். ஆனால் உண்மையில் சூதாட்டம் ஆடுபவர்கள் பலநூறு கோடிகளை சில்லறையாக எறிபவர்களே. அவர்களில் ஒருவர் கூட சி.பி.ஐயின் காமாலைக் கண்ணில் இதுவரை பிடிபடவில்லை. இனியும் பிடிபட மாட்டார்கள் என்பதுவே நிஜம்.

இதில் பல லட்சம் பேர் நம்ம வீட்டு டி.வியில் சாயங்காலம் வீட்டுக்குப் போனால் நைட் தூங்கறவரைக்கும் விறுவிறுப்பான என்டர்டெய்ன்மன்ட். அது எப்படி இருந்தா எனக்கென்ன? என்று நினைக்கும் மனப்பாங்குள்ள எளிமையான ரசிகர்கள். அவர்களுக்கும் டாஸ்மாக்கின் வாசலில் காலை ஏழு மணிக்கே வந்து நின்று கை நடுங்க சரக்கடிக்கும் குடிகாரனுக்கும் பெரிய வித்தியாசமில்லை. டாஸ்மாக்கோ, கடாமார்க்கோ, கள்ளச் சாராயமோ எனக்கு அந்த நேரத்துக்கு கிடைச்சாப் போதும். அவ்வளவுதான்.

இப்படி தவறுகள் ஐ.பி.எல்லை ஆரம்பித்த லலித் மோடியிலிருந்து அதன் தற்போதைய உரிமையாளர்கள், கறுப்புப் பணமுதலைகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வரை எல்லோரிடமும் கொட்டிக் கிடக்கும் போது, சில பல லட்சங்களுக்காக ஸ்ரீசாந்த் மற்றும் ஒரு மூவரை மட்டும் கட்டம் கட்டி இவர்கள் தான் கிரிக்கெட்டுக்கு களங்கம் கற்பிப்பவர்கள், இவர்களை ஒழித்தால் போதும் ஐ.பி.எல் தூய்மையான கங்கை நதியாக மாறிவிடும் என்று படம் காட்டும் ஊடகங்களும் ஒன்றை மறந்துவிட்டார்கள்.

அது ஸ்ரீசாந்த் வெறும் ஒரு பலியாடு மட்டுமே என்பதை.
ஆனால் ஓநாய்களோ...

Saturday, May 11, 2013

விமர்சனம் : அயர்ன் மேன் 3. அமெரிக்காவின் இரும்பு மனிதன்.


சமீபத்தில் உலகெங்கும் வெளியிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது மார்வல் ஸ்டூடியோஸின் அயர்ன் மேன் 3. சூப்பர் ஹீரோ அயர்ன் மேனாக ராபர்ட் டௌனி ஜூனியர் (Robert Downey Jr) கலக்கியிருக்கும் 3ஆவது படம் இது. அயர்ன் மேன் என்பது மார்வல் காமிக்ஸ் புத்தகத்தின் ஒரு கற்பனை சூப்பர் ஹீரோ கதாபாத்திரம். கதைப்படி ஸ்டார்க் இண்டஸ்ட்ரீஸ் என்கிற அமெரிக்க ஆயுதம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் முதலாளி மற்றும் ஆராய்ச்சியாளர் டோனி ஸ்டார்க்.

அயர்ன் மேனின் முதலாவது மற்றும் இரண்டாவது பாகங்களில் ஸ்டார்க் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று அங்கிருக்கும் அமெரிக்கப் படைகளில் தனது நண்பரான கமாண்டெர் ஒருவருக்கு ஜைக்கோ ஏவுகணைகளைப் பற்றி விளக்கம் தரச் சென்றிருக்கும் போது ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு அவர்களின் பிடியில் அவர்களுக்கு ஏவுகணை செய்து தரும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறான். ஆனால் அவன் ரகசியமாக ஒரு தப்பிக்கும் இரும்புக் கவசத்தை செய்ய முற்படுகிறான் ஸ்டார்க். அதுதான் அயர்ன் மேன். அதீத சக்திகளடங்கிய அந்தக் கவசத்தை அணிந்து விண்ணில் பறந்து பல சாகசங்கள் புரிந்து எதிரிகளை வீழ்த்துவான் ஸ்டார்க். யார் இந்த அயர்ன் மேன் என்று உலகமே வியக்கும் போது அது தானே என்று வெளிப்படுத்துவான் ஸ்டார்க்.

இந்த மூன்றாவது பாகத்தில் அமெரிக்காவினுள் புதியதொரு வெப்ப உயிரியல் ஆயுதம் கொண்டு வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடுக்கும் மண்டாரின் எனப்படும் இஸ்லாமியத் தீவிரவாதியின் தொல்லைக்கு பதிலடி கொடுக்க விளைகிறான் ஸ்டார்க். ஆனால் அவனுடைய மொத்த ஆராய்ச்சிக் கூடத்தையும் அவனது அயர்ன் மேனையும் அழிக்கும் எதிரிகள் அவனையும் துரத்துகின்றனர்.  ஜனாதிபதியையே கடத்திவிடுகின்றனர். கடைசியில் அவனுக்கும் இன்னொரு உயிரியல் தொழில்நுட்ப கம்பெனியின் முதலாளிக்குமிடையே நடக்கும் போட்டியில் ஸ்டார் புதிய எதிரிகளை அயர்ன் மேனின் துணை கொண்டு வீழ்த்தினானா என்பது தான் கதை.

படம் முழுவதும் நகைச்சுவை இழையோடுகிறது. ராபர்ட் டௌனி ஜூனியர் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போடுகிறார். அவரது காதலியாக வருகிறார் ஜின்னத் பால்ட்ரோ(Gwyneth Paltrow). காமெடி வில்லனாக பென் கிங்ஸ்லீயும், சீரியஸ் வில்லனாக கய் பியர்ஸூம் நடித்துள்ளனர். திரைக்கதை மூவருடன் சேர்ந்து எழுதி இயக்கியிருக்கிறார் ஷேன் ப்ளாக்(Shane Black).. படம் முழுவதும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.

தியேட்டரில் இதைப் பார்த்தபோது அயர்ன் மேன் உடையின் பாகங்கள் பறந்து வந்து ஸ்டார்க்கின் உடலில் ஒட்டிக்கொள்ளும் காட்சிகளில் ஆடியன்ஸின் கைதட்டல் காதைப் பிளக்கிறது. ஸ்பெஷல் எபக்ட்கள் படத்தின் மிகப் பெரும் பலம். அயர்ன் மேன் நிஜமாகவே இருப்பதைப் போலவே நம்மை நம்பவைத்து விடுகிறார்கள். ஸ்பைடர் மேன் போலல்லாது மக்களுடன் சர்வ சாதாரணமாக நெருங்கிப் பழகுகிறான். ஆட்டோகிராப் போடுகிறான் இந்த அயர்ன் மேன். நடுவில் அயர்ன் மேனா ? அதற்குள்ளிருக்கும் ஸ்டார்க்கா ? யார் முக்கியம் என்கிற கேள்வி எழுப்பப்பட்டு அயர்ன் மேனாய் இல்லாமல் போக நேரிடும் நாட்களில் அதன் விடையை கண்டடைகிறான் ஸ்டார்க். ஸ்டார்க்குக்கு உதவி செய்யும் சிறுவனுக்கும் அவனுக்குமான உரையாடல்கள் சுவராசியமானவை. மொத்தத்தில் இந்த 3-டி அயர்ன் மேன் 3 நிச்சயமான வெற்றிப் படம். கண்டிப்பாகப் பாருங்கள்.

இனி சாதாரண ஒரு ஆக்ஷன் படமாகக் களமிறங்கியிருக்கும் அயர்ன் மேனின் உள்ளே பொதித்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் விதைகளைப் பார்க்கலாம்.

அயர்ன் மேனின் கதாநாயகன் வைத்திருக்கும் தனியார் நிறுவனம், அமெரிக்காவுக்கு ஆயுதம் செய்து தரும் நிறுவனம். எனவே அதன் முதலாளியான ஸ்டார்க்; நல்லவர், வல்லவர், நாட்டின் மேல் பற்று கொண்டவர் மற்றும் அறிவாளி. ஒரு நாட்டின் ஆயுதங்கள் தேசிய பாதுகாப்பு ரகசியமானவை. அந்நாட்டின் தன்மானத்தை எதிரி நாட்டுக்கு உணர்த்த பயன்படுபவை. அதைத் தயாரிப்பது ஒரு தனியார் நிறுவனம்(?). தனியார் நிறுவனம் நாட்டின் ரகசியத்தைப் பாதுகாக்கிறது. எப்புடீ?

இது ஏற்கனவே அமெரிக்கா நடைமுறைப் படுத்தியிருக்கும் விஷயம். அமெரிக்காவின் ஆயுதத் தயாரிப்புக்களில் பெரும்பாலானவை லாக்ஹீட் மார்ட்டின் போன்ற தனியார் கம்பெனிகளின் வசமே விடப்படுகின்றன. அதாவது தனியார் கம்பெனி சொல்லும் விலையில் மக்கள் வரிப்பணத்தில் ஆயுதங்கள் அரசால் கொள்முதல் செய்யப்படும். அது நாட்டின் பாதுகாப்புச் செலவில் சேர்க்கப்படும். பல பில்லியன் டாலர்கள் வருமானம் ஆயுதக் கம்பெனிக்கு; செலவுக் கணக்கோ நாட்டுக்கு. அமெரிக்காவில் மட்டுமல்ல நம்ம இந்தியாவிலும் இந்த தனியார் ராணுவ பிஸ்னெஸ் கொடிகட்டிப் பறக்கிறது.

ஈராக்கின் மீது என்ன எளவுக்கென்று தெரியாமலேயே தொடுக்கப்பட்ட போரில் அமெரிக்காவின் படைகள் உபயோகப்படுத்திய ஆயுதங்கள், போட்ட குண்டுகள், எறிந்த ஏவுகணைகளின் வழிச் செலவுக் கணக்கு 100 பில்லியன் டாலர்கள். அது அமெரிக்க மக்களின் வரிப் பணம்(பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா என்கிற கூட்டாளிகள் வேறு). ஆயுதங்கள் தயார் செய்தது ஜனாதிபதி மற்றும் பெரும் முதலாளிகளின் சார்பான தனியார் ஆயுதக் கம்பெனிகள். ஆயுதங்களை விற்ற வகையில் அவர்களுக்கு சுமார் 100 பில்லியன் டாலர்கள் லாபம். ஈராக்கில் 3 லட்சம் குடும்பங்கள் நாசமாய்ப் போக அங்கிருந்த எண்ணெய் வயல்களை அமெரிக்க தனியார் எண்ணெய் கம்பெனிகள் வளைத்துப் போட்டதில் இன்னும் பல நூறு பில்லியன் டாலர்கள் அவர்களுக்கு லாபம்.

இப்படி லாபங்களை தனியார் கம்பெனிகள் அடித்துக் கொள்ளவும் நஷ்டங்களையும், குண்டுகளையும் மக்கள் தலையில் போடவும் செய்யப்படும் ஏற்பாடு தான் இந்தத் தனியார் ஆயுதக் கம்பெனிகள். இதை நியாயப்படுத்தவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறார் நம் டோனி ஸ்டார்க்.  இவர் ஆயுதம் தயாரிப்பதோ அமெரிக்காவில் அதைப் போய் போடுவதோ ஆப்கானிஸ்தானில். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் என்னய்யா முடிச்சென்று தியேட்டரில் கைதட்டிய யாருக்கும் உறைக்கவேயில்லை.

இதில் காமெடி வில்லனாக காட்டப்படும் பென்கிங்ஸ்லியின் தோற்றமும், அமைப்பும் நடவடிக்கைகளும் அப்படியே ஓசாமா பின்லேடனை ஞாபகப்படுத்துகின்றன. இது மறைமுகமாக அமெரிக்காவின் தயாரிப்புதான் ஒசாமா பின்லேடன் என்று ஒத்துக் கொள்ளும் ஒரு விஷயம். படம் அதை நகைச்சுவையாகச் செய்கிறது. அதாவது ஒசாமா சீரியஸ் அல்ல. காமெடி பீஸ்.

இதில் அமெரிக்காவின் கனவு ராணுவ வீரன் கதையும் இருக்கிறது. அமெரிக்கா இப்படி வேற்று நாடுகளில் போய் அடாவடித்தனம் பண்ண வேண்டுமென்றால் அதற்கு அமெரிக்காவில் வாழும் ஒரு சாதாரண மனிதனை எப்படி போர்வீரனாக அனுப்புவது? அவனுக்குள் எழும் கேள்விகள்?  குழப்பங்கள். நாட்டுக்காக போர்புரிந்தால் சரி. ஏதோ ஒரு நாட்டில் நின்று யாரையோ எதிரியாக்கி, யாரையோ பாதுகாப்பது ஏன் என்கிற கேள்விகள் அவர்களில் பலருக்கு எழுகிறது. “தாய்நாட்டைக் காக்க எழு ! !” என்கிற கனல் கக்கும் வசனங்கள் எடுபடுவதில்லை. ஈராக்கில் போர்புரிய போர்முடிந்து இத்தனை வருடங்களாகவும் இன்னும் உள்ளே சுற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்க ராணுவத்தினரில் பலர் மனநிலை பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது அமெரிக்க ராணுவம். இவர்களில் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அமெரிக்க ராணுவத்தில் 2012ல் மட்டும் 348 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஈராக் சென்று திரும்பும் போர்வீரர்கள் பலருக்கு பிடிஎஸ்டி(PTSD) எனப்படும் அதிர்ச்சிக்குப் பின்னான மன அழுத்த நோய் ஏற்பட்டுள்ளது.

இதற்குத் தீர்வு தான் அயர்ன் மேன். அயர்ன் மேன் ஒரு வெறும் இரும்புக் கவசம் அவன் அமெரிக்காவில் இருந்து வீடியோ கேம் மாதிரி ஒரு வீரனால் கண்ட்ரோல் செய்யப்படுவான். அவன் தீவிரவாதிகளை தேடிப் போவான். மெஷின் கன்னால் எதிரிகளைத் துளைப்பான். ஏவுகணைகளை கையாலேயே ஏவுவான். பயங்கரவாதிகளைப் பந்தாடுவான். அபலைகளை காப்பான். (என்ன ஒரு சிறு பிரச்சனை என்றால் அவனால் ஜாலியாக ‘ரேப்’ செய்யமுடியாது). அயர்ன் மேன் செய்யும் சாகசங்கள் நாளைய அமெரிக்காவின் தொழில்நுட்பம் நிரம்பிய சர்வதேசப் போர்வீரன் பற்றிய கனவுகளேயன்றி வேறில்லை. நம்மைப் போன்ற மூன்றாம் உலகநாட்டு அப்பாவி ரசிகர்களோ அதைப் பார்த்து கை தட்டுபவர்களேயன்றி வேறில்லை.

அமெரிக்காவின் பொழுதுபோக்கைக் கூட நாம் கூர்ந்து கவனிக்கவேண்டியிருப்பதை இப்படம் உறுதி செய்கிறது. மற்றபடி இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் படம் பார்க்க விரும்பினால் சத்யம் தியேட்டரில் சென்று பாருங்கள். ஏ.சி. நன்கு குளுகுளுவென இருக்கும். 40 ரூபாய்க்கு ஆறிப்போன பாப்கார்ன் இத்தினியூண்டு கிடைக்கும். என்ஜாய் பண்ணலாம்.