Friday, December 4, 2009

குழந்தைப் போராளி (Child Soldier) : -சைனா கெய்டெட்சி (China Keitetsi) - நூல் மதிப்புரை

குழந்தைப் போராளி (Child Soldier) : எனது வாழ்க்கைக்கான போராட்டம்
-சைனா கெய்டெட்சி (China Keitetsi)

டச்சு மொழியிலிருந்து (2004) தமிழாக்கம் (2007) : தேவா.
286 பக்கங்கள்.
வெளியீடு : கருப்புப் பிரதிகள், சென்னை.

உகாண்டா:
தென்னாப்பிரிக்க கண்டத்தில் வடக்கில் எத்தியோப்பியாவும், சூடானும், கிழக்கே கென்யாவும், மேற்கே காங்கோவும், தெற்கே ருவாண்டாவும், டான்சானியாவும் சூழ இருக்கும் சிறிய நாடுதான் உகாண்டா. மக்கள் தொகை மூன்று கோடி (2009 கணக்கெடுப்பு). 1888ல் ஆங்கிலேயரின் வசமான உகாண்டா 1962ல் விடுதலை கொடுக்கப்பட்டது. அன்றிலிருந்து 1990கள் வரை நிலையற்ற அரசியல் தன்மையும் உள்நாட்டுக் குழப்பங்களும் உகாண்டாவில் மிகுந்து காணப்பட்டன. உகாண்டாவில் மக்கள் காங்கிரஸ் கட்சி (Uganda People’s Congress), உகாண்டா ஜனநாயகக் கட்சி(Democratic Party) என்ற இரு பெரும் கட்சிகள் அரசியலில் முக்கியப் பங்காற்றின. சுதந்திரத்திற்குப் பின் மன்னராக இருந்தவரை மில்டன் ஒபாட்டே பதவியிறக்கம் செய்து ஆட்சியைக் கைப்பற்றினார். ஒபாடேவை சோவியத் யூனியன் ஆதரித்தது. உகாண்டாவின் பக்கத்திலிருந்த டான்சானியாவை தனது கைக்குள் வைத்திருந்த சீனாவின் ஆதிக்கத்தை கட்டுக்குள் வைக்க சோவியத் யூனியன் உகாண்டாவைப் பயன்படுத்தியது.

1971ல் இடி அமீன் அதிகாரத்தைக் கைப்பற்றி உகாண்டாவின் அதிபரானார். அவரது கொடுங்கோலாட்சியில் 3 லட்சம் உகாண்டாவினர் கொல்லப்பட்டனர். சிறுபான்மை இந்தியர்களுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டி இந்தியர்களே அங்கு இல்லாதவாறு செய்தார். இவருக்கு லிபியாவின் கடாபியும், சோவியத் யூனியனும் ஆதரவளித்தன. 1979ல் நடந்த உகாண்டா-டான்சானியா போரில் இவர் பதவியிழந்தார். மில்டன் ஒபாடே மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 1985ல் அவரைப் பதவியிறக்கம் செய்தார் ஜெனரல் டிட்டோ ஒக்கல்லோ. யோவேரி முசவேனியின் தலைமையிலான NRA (National Resistance Army) அரச எதிர்ப்புப் படை புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றியது. முசவேனி புதிய அதிபரானார். அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து முசவேனி ஜனாதிபதியாக உள்ளார். இங்கு பல கட்சி முறை நசுக்கப்பட்டுள்ளது. முசவேனி புதிய தலைமுறை ஆப்பிரிக்கத் தலைவர்களில் ஒருவராக மேற்குலகால் பார்க்கப்படுகிறார். இவரை எதிர்த்த, எதிர்க்கிற படையான அரசரின் எதிர்ப்புப் படை (Lords Resistance Army) குழந்தைப் போராளிகளை ஈடுபடுத்துதல், மக்கள்திரள் படுகொலைகள் என போர்க்குற்றங்களை செய்த இயக்கம் என குற்றம் சாட்டப்படுகிறது.

மேற்குலகு இங்கு கவனம் செலுத்தக் காரணம் இங்கிருக்கும் கனிம வளங்களான தாமிரமும், கோபால்ட்டும் மற்றும் இயற்கைச் செல்வங்கள் ஆகும். மேலும் இயற்கை வாயுவும், பெட்ரோலியமும் ஏராளமான அளவில் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை உறிஞ்சிக் கொண்டு கட்டுமானத்தை உருவாக்கித் தரும் ‘பணியை’ மேற்கத்திய உலகம் செய்கிறது. இங்குள்ள மக்கள் வறுமையின் கோரப்பிடியில் தான் இன்னும் வாழ்கிறார்கள். உகாண்டாவில் இருக்கும் உள்நாட்டுக் குழப்பங்களும், அரசியல் பிரச்சனைகளும் மேற்கத்திய நாடுகள் உகாண்டாவைக் கைக்குள் வைத்திருக்க உதவுகின்றன. உகாண்டாவில் 80 சதவீதம் பேர் கிறித்துவர்களாவர். அரசு மொழியாக ஆங்கிலமும், சுவாஹிலி என்னும் உள்நாட்டு மொழியும் உள்ளன.


சைனா கெய்டெட்சி:
சைனா கெய்டெட்சி 1976ல் உகாண்டாவில் டூட்சி (Tutsi) இனக்குழுவில் பிறந்தார். தனது ஒன்பதாவது வயதில் அரசை எதிர்த்துப் போராடிய யோவேரி முசவேனி(Yoweri Museveni) ன் தலைமையிலான NRA (National Resistance Army) அரச எதிர்ப்புப் படையில் குழந்தைப் போராளியாக சேர்க்கப்பட்டார். அப்போது முதல் 1995 வரை அப்படையில் பணியாற்றிய அவர் பின்னர் உகாண்டாவிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்குத் தப்பியோடினார். அங்கும் உகாண்டாவின் உளவுப் படையினரால் வேட்டையாடப்பட்ட அவர் 1999ல் டென்மார்க் நாட்டில் அகதியாகத் தஞ்சம் புகுந்தார். தற்போது உகாண்டாவில் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் குழந்தைப் போராளிகளுக்கான மறுவாழ்வு இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இப்புத்தகம் இவரது இளம் குழந்தைப் போராளி வாழ்க்கையை அவரே சொல்லும் சுயசரிதை வடிவத்தில் உள்ளது. மிகுந்த மனநெருக்கடிக்குள்ளாகி இளம் வயதிலேயே ஒரு 60 வருட போராட்ட வாழ்வின் மிக உக்கிரமான தருணங்களை கண்ட ஒரு வீரப் பெண்ணாக இவர் இருக்கிறார்.
இவரது வலைத்தளம் : http://www.chinakeitetsi.info

குழந்தைப் போராளி – நூல் மதிப்புரை
சைனா கெய்டெட்சி 2001ல் தனது 24வது வயதில் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் மூன்று பாகங்கள் உள்ளன. சைனாவின் 9 வயது வரையிலான பிஞ்சு வயதுப் பருவம் முதல் பாகத்திலும், குழந்தைப் போராளியாக 19 வயது வரை NRA படையில் இருந்த அவரது அனுபவங்கள் இரண்டாம் பாகத்திலும், அரசியல் கைதியாக தென்னாப்பிரிக்காவிற்கு தப்பித்து ஓடி டென்மார்க்கில் அகதியாக புகுந்த கணம் வரையிலான பகுதி மூன்றாம் பாகத்திலும் விவரிக்கப் பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தைப் படித்ததும் எனது மனதில் மிக அழுந்தியது முதல் பாகமாகும். இம் முதல் பாகத்தில் தனது கலாச்சார வேர்களை தொலைத்துவிட்டு, மேற்கத்திய காலாச்சார வாழ்க்கைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும், வறுமைக்குட்பட்ட ஒரு சமூகத்தில், குடும்பம் கூட வன்முறை தலைவிரித்தாடும், வன்மங்கள் மிகுந்த போர்க்களமாக மாறிவிடும் தன்மை தென்பட்டது. கனவில் கூட நாம் எண்ணியிராத பாட்டியும், தந்தையும், சித்தியும் கொடும் சூனியக்காரர்களாய் சைனாவின் பிஞ்சு மனதை கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு எடுக்கிறார்கள். 7 வயதில் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு கிழவனால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். ஒரு நாள் இரவில் தந்தை இவள் செய்யாத ஒரு தவறுக்காக கண்மண் தெரியாமல் தாக்குகிறான். இவளது சுண்டு விரல் முறிந்து போகிறது. அதை அடுத்த நாள் காலையில் பார்க்கும் போது தான் தந்தைக்குத் தெரிகிறது. சைனாவின் ஆடுகளுக்கு இதுபோல எத்தனையோ குழந்தைகள் நண்பர்களாயிருக்கக் கூடும். ஒன்பதாவது வயதில் தனது உண்மையான தாயைச் சென்று அடையும் சைனா தாயின் மிதமிஞ்சிய அன்பை முதன் முறையாகக் கண்டபோது பயந்து வெளியேறி ஓடிப் போய் மாட்டிக்கொள்ளும் இடம் தான் NRA போராளிக் கூட்டம்.

இங்கு குழந்தைப் போராளியாக மாற்றப்பட்ட சைனா, குழந்தைகள் போர்ச் சூழ்நிலையில் அடையும் மனப் பிறழ்வை உணர்கின்ற அளவிற்கு முதிர்ச்சியுள்ளவராக இருக்கிறார். இவருடைய சைனா என்கின்ற பெயர், தளபதி ஒருவர் ‘சைனாக்காரி மாதிரி இருக்கிறாள்’ என்று பட்டப் பெயராக அழைத்ததால் ஒட்டிக்கொண்ட செல்லப் பெயரே. புரட்சி செய்யும் ராணுவமான NRA மிக ஆழ்ந்த கோட்பாடுகள் எதுவும் இல்லாத வெறும் ஆட்சிக் கவிழ்க்கும் ராணுவமாக மட்டுமே வளர்ந்திருக்கிறது. அது அதன் நிறுவனர் முசவேனியை பெரும் வீரராக புகழ் பாடி போலியாக மக்களை கவர்ந்திழுத்துள்ளது. வீரர்களும், அதிகாரிகளும் போர் என்றால் மிருகத்தனமான வெறியுடனும், குடி, கூத்து என்று ஒழுங்கற்ற, லட்சியமற்ற வெறும் நாடு பிடிக்கிற ஆட்களாகவே இருக்கின்றனர். அதன் அதிகார அமைப்புகள் ஒரு சர்வாதிகார ராணுவ அரசின் அதிகார அமைப்பையே ஒத்திருக்கிறது. பெண்கள் பாலியல் பொருட்களாகவும், குழந்தை பெறும் ஆட்களாகவும் உபயோகப்படுத்தப் படுகிறார்கள். சைனாவும் பாலியல் வன்முறைகளுக்கும், அதிகாரத்தின் கொடூரங்களுக்கும் ஆட்படுகிறார். அவற்றிலிருந்து உறுதியுடன் போரிட்டு விடுபடுகிறார்.

இந்நிலையில் இலங்கையில் விடுதலைப் புலிகள் குழந்தைப் போராளிகளை பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டையும் அதன் தாக்கத்தையும் இத்துடன் வைத்து எண்ணிப் பார்க்க வேண்டும். விடுதலைப் புலிகளையும், NRA இயக்கத்தையும் அவற்றின் நோக்கங்கள், அவை வளர்ந்த விதங்கள், கலாச்சாரப் பின்புலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது இவ்வியக்கங்களுக்கிடையேயான கூர்மையான வேறுபாடுகள் தெரிய வரும். விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் தேசியக் கட்டுமானத்தில் வளர்க்கப்பட்டிருந்தாலும், அதன் கலாச்சாரப் பின்புலம் அக்கட்டமைப்பை உறுதியாகவும், தூய்மையானதாகவும் உருவாக்கிக் கொள்ள உதவியிருக்கிறது எனலாம். NRA வைப் போல ‘குழந்தைகள் பலமில்லாத அப்பாவிகள்’ என்ற போர்க்கருத்தை நயவஞ்சகமாகக் கையாளும் தன்மை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரதான கொள்கையாகவோ, நோக்கமாகவோ வைக்கப்படவில்லை. புலிகள் இயக்கத்தில் குழந்தைகள் பாடம் பயிற்றுவிக்கப் பட்டதோடு, ராணுவக் கல்வியும் அளிக்கப்பட்டனர். தகுந்த வயதையடைந்ததும் அவர்கள் விரும்பினால் மட்டுமே ராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். நடைமுறையில் குழந்தைப் போராளிகளாக வளர்க்கப்பட்ட யாரும் ராணுவத்தில் இணையாமலிருந்திருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. விடுதலைப் புலிகள் குழந்தைகளை கடத்தியதில்லை. போரில் அனாதவராய் விடப்பட்ட குழந்தைகளை அரவணைத்து புகலிடம் தந்து கல்வி பயிற்றுவித்தனர். விடுதலை இயக்கம் மிசனரிகள் போல் நடந்துகொள்ளும் என்று நாம் எதிர்பார்த்தல் தவறானது இல்லையா.

சைனா கெய்டெட்சியின் இப் புத்தகம் எவ்வளவு அப்பட்டமாக அரச எதிர்ப்புப் படையின் உண்மையை வெளியிட்டிருந்தாலும் அரச அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை பலவீனமானவாக, கேவலமானவையாகச் சித்தரிக்கும் ஒரு ஆளும் வர்க்க வேலையையும் சேர்த்து செய்வதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழில் இன்னும் சற்று காலங்களில் இது போல தலைப்பில் ஒரு விடுதலைப் போராளி புத்தகம் வெளியிடும் வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது எனக்கு. அப்புத்தகம் இந்தியா, இலங்கை மற்றும் சீன அரசுகளுக்கு சாதகமாக விடுதலைப் புலிகளை குழந்தைகள் கையில் துப்பாக்கியைக் கொடுத்த கொடூர இயக்கமாகச் சித்தரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எல்லோரும் வசதியாக மறந்துவிடும் ஒரு உண்மை இது தான். ‘குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கை முறைக்கு பாதுகாப்பில்லாத ஒரு சூழலை அரச பயங்கரவாதங்கள் உருவாக்கியதும், குழந்தைகள் போராளிகளாக உருமாறின சமூகச் சூழலுக்கு ஒரு அடிப்படைக் காரணம்’ என்பதே அது.

சைனா கெய்டெட்சியின் புத்தகத்தின் மூன்றாவது பாகத்தில் குவேனி அதிபராக பதவியேற்ற பின்னர் அரசு பயங்கரவாதம் தலைதூக்கி அதில் சைனா அகப்படாமல் நைரோபிக்குத் தப்பிச் சென்று, அங்கிருந்து தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க்கில் நான்கு வருடம் அமெரிக்காவிற்குச் செல்லும் கனவோடு உயிர் வாழ்கிறார். இறுதியில் UNHC (United Nations High Commission) அவரைக் காப்பாற்றும் ஆபாத்பாந்தவனாக வருகிறது. அவர் டென்மார்க்கில் அகதியாகக் குடியேறுகிறார். இப்புத்தகத்தின் இறுதியில் உகாண்டாவின் அதிபர் முசவேனிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளார்.

இப்புத்தகம் வாசிக்கப் படவேண்டிய ஒரு புத்தகம். இது முற்றுப் பெறாத ஒரு கைப்பிரதி போல ஆங்காங்கே தென்பட்டாலும், சைனா கெய்டெட்சி இன்னும் பல புத்தகங்கள் எழுதி அதில் ஆழமான குழந்தைப் போராளிகள் பிரச்சனையைப் பற்றி விடுபட்டவற்றை மேலும் விரிவாகப் பேசுவார் என நம்பலாம். இப்புத்தகம் மூன்றாம் பாகத்தைப் பொறுத்தவரை UNHC ஐ ஒரு கைவிடப்பட்டோரின் ஆதரவாளராகக் காட்டி நிற்கிறது. சைனா கெய்டெட்சியின் வாழ்வில் அது உண்மையிலேயே பெரிய உயிர்காப்பு நிகழ்வு, எனினும் UNHC இப்புத்தகத்தின் வாயிலாக அணிந்துகொள்ளும் முகமூடியாக அது மாறிவிடுகிறது. சைனா கெய்டெட்சி இதை ஒரு காலத்தில் உணர்வார் என நம்புகிறேன். அந்த வீர மங்கைக்கு எனது வணக்கங்கள்.

Monday, October 26, 2009

சீனாவின் இந்திய பொதுஜனத் தொடர்பாளர்.

by - டென்சிங் சோனம்(Tenzing Sonam). புதன் 26 டிசம்பர் 2007.

ரஷ்யப் புரட்சியின் ஆரம்பநாட்களில் புரட்சியை கண்கள் விரியப் பார்த்த மேற்கத்திய புரட்சி அனுதாபிகள் மாஸ்கோவிற்குத் தேனீக்களைப் போல் பறந்து சென்று ‘சோவியத் சொர்க்கம்’ பற்றி அறிக்கைகள் வெளியிட்டனர். லெனின் அவர்களை ‘பயனுள்ள முட்டாள்கள்’ என்று வருணித்ததுடன், அவர்களின் அப்பாவித்தனத்தை மேற்கத்திய நாடுகளுக்கு கம்யூனிஸக் கருத்துருவாக்கத்தைப் பரப்பவும் உபயோகப்படுத்திக்கொண்டார். அப்படிச் சென்ற ஒரு ‘முட்டாள்’ப் பத்திரிக்கையாளர் லிங்கன் ஸ்டீவன்ஸ்(Lincoln Steffans). ரஷ்யாவின் விருந்தினராக 1919ல் டூர் அடித்த ஸ்டீவன்ஸ்
“நான் எதிர்காலத்திற்குள் சென்றிருந்தேன்.. அது வேலை செய்கிறது” என்று கண்மூடித்தனமாகப் புகழ்ந்து எழுதியிருந்தார். அந்த ‘எதிர்காலத்திற்கு’ என்னவானது என்று நமக்குத் தெரியும்.

இந்த மேற்கத்திய புத்திஜீவிகள் ஸ்டாலினுடைய அதீதமான செயல்பாடுகளில் மனமுடைந்ததற்குப் பின் தோன்றிய, ஒரு புதிய தலைமுறை இடது சாரிக் கருத்தியலாளர்கள் மாவோ மற்றும் சீனப் புரட்சியை ரஷ்யாவில் உடைந்துபோன தங்கள் இடதுசாரிக் கருத்தியலின் ஊன்றுகோலாகக் கொண்டனர். லெனினைப் போலவே மாவோவும் இந்த அப்பாவிகளின் குருட்டுத்தனமான போக்கை தனக்குச் சாதகமாக உபயோகப் படுத்திக் கொண்டார். உண்மையுடன் சம்பந்தமில்லாத சீனப் பெருமை கட்டுக்கதைகளும் பரப்பப்பட்டன. மாவோவுடைய புகழ் செறிந்த ‘நீண்ட பயணம்’ பற்றிய எட்கர் ஸ்னோ (Edgar Snow) வின் குறிப்புகள் எல்லாம் புனைவுக்கதைகள் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. இப்போது திபெத்தும் சீனாவால் பொருக்கியெடுக்கப்பட்ட மேற்கத்திய கைக்கூலிகளின் மூலம் சிதைக்கப்பட்ட உண்மைகளால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. 1960களில் தவறான கம்யூனிசக் கொள்கைகளின் விளைவாக திபெத் முதன்முறையாக பஞ்சத்தில் சுருண்டு விழுந்த காலத்தில்தான், ரோமா(Roma) மற்றும் ஸ்டூவர்ட் ஜெல்டர் (Stuart Gelder)ன் ‘சரியான நேரத்து மழை’(Timely Rain) என்கிற சீனப் பயண புத்தகம் வெளிவந்தது. 1975ல் வெளிவந்த ஹான் சுயின்(Han Suyin)ன் நம்பிக்கையூட்டும் தலைப்புகொண்ட புத்தகம் ‘லஹாசா : ஒரு திறந்த நகரம்’ (Lhasa: The open City) வெளிவந்த காலத்தில்தான் திபெத் தற்போதைய வடகொரியாவைப் போல் வெளி உலகத்தின் பார்வை பட அனுமதிக்காத மூடப்பட்ட நாடாக இருந்தது. இம்மாதிரி விருந்தினர்களின் எழுத்துக்களெல்லாம் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே காலாவதியாகிப்போனதோடு, மாவோவின் ‘பொதுவுடைமைப்’ பரிசோதனைகளில் நிகழ்ந்த பயங்கரமான மனித இழப்புகளும் தற்போது வெளிப்படுத்தப்பட்ட நிலையில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரைத் தவிர மற்ற எல்லா அம்சங்களிலும் முதலாளித்துவம் நிரம்பியிருக்கிறது.

இவற்றின் பின் தற்போது நாம் காண்பது என். ராமின் (N. Ram) சமீபத்திய எழுத்துக்களை. இந்தியாவின் பெருமளவில் தாக்கம் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தேசிய நாளிதழ் ‘இந்து’(The Hindu)ப் பத்திரிக்கையின் பதிப்பாசிரியரான ராமின் வெட்கமில்லாத ஒரு பக்கச் சாய்வுடைய எழுத்துக்கள் சீனாவின் ஆட்சி பற்றிய அதே உணர்வுபூர்வமான வியப்புடனும் நம்பகத்தன்மையின்றியும் உள்ளன. திபெத்தின் மீது செயற்படும் சீனாவின் கொள்கைகளின் நேர்மை பற்றி முகஸ்துதி செய்யும் ஆர்வத்தில் அவர் அச்சமூட்டும் வகையில் ஸ்டீவன்ஸை அப்படியே எதிரொலிக்கிறார். இந்தக் கோடையில் திபெத்திற்கு சீனாவின் அதிகாரபூர்வ விருந்தினராக ஒரு வாரம் வழிகாட்டப்பட்ட சுற்றுலா சுற்றி வந்ததும் அவர் நம்பிக்கையோடு அறிவித்தது இது :
“இன்னும் ஒரு கால் நூற்றாண்டுகளிலோ அல்லது அதற்கு முன்போ திபெத் ஒரு முழுவளர்ச்சியடைந்த சமூகம் என்ற நிலையை அடைந்திருக்கும்”.
தன்னுடைய முன்னறிவிப்பை உறுதிப்படுத்த ‘இந்து’வில் இரு நீள கருத்துக் கட்டுரைகளும்(opinion piece) அதன் குழுமப் பத்திரிக்கையான ப்ரன்ட்லைனில் (Frontline) ஒரு நீண்ட கட்டுரையும் ஜூலையில் ராம் வெளியிட்டார். இந்தக் கட்டுரைகளுக்கு அவர் திரட்டிக் கொண்ட ஆதாரங்கள், அந்த ஒரு வாரச் சுற்றுலா போக ராம் மந்திரங்கள் போன்று கருதிய சீன அரசின் புள்ளிவிவரங்கள் மட்டுமே. இப்புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மைகள் குறைவு என்பதற்காக சில உதாரணங்கள்:
“[திபெத்தின்] பொருளாதாரம்...13.2% க்கும் அதிகமாக வளர்ந்தது”; “மொத்த தேசிய உற்பத்தி(GDP) 29 பில்லியன் யென்கள்(Yuan) அளவு உயர்ந்தது” ; “உணவுதானிய உற்பத்தி 9,20,000 டன்கள்” ; “96.5% குழந்தைகள் பள்ளியில் பயிலுகின்றனர்” ; “இதுவரை காணாத அளவிற்கு, 1.5 பில்லியன் யென்கள் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளால் வந்துள்ளது”…
இப்படிப் பல. இவ்வளவிற்கும் ராம் பேட்டிகண்ட திபெத்தியர் ஒரே ஒருவர்தான் எனத் தெரிகிறது. அவர் திபெத்திய அரசின் அவைத் தலைவர்(Vice-Chairman) மட்டுமே.

ராம் தோற்றமளிப்பது போல் அவ்வளவு அப்பாவியா? தனது திபெத்தினூடான கார்ப் பயணத்தைப் பற்றிஅவர் இதமாக இவ்வாறு எழுதுகிறார் :
“நீங்கள் வெளியுலகுடன் எவ்வளவு எளிதில் தொடர்புகொள்ளமுடியும் என்பது ஒரு ஆச்சரியம். உங்கள் கைபேசியில்(mobile) அல்லது பி.டி.ஏ (PDA)யில் உள்ள GPRS லகாசா-சிகாஸ்(Lhasa-Xigaze) நெடுஞ்சாலை முழுதும் வேலை செய்கிறது. இணையதளத்தில் உலாவி செய்திகள் படித்தபடியும் உங்கள் மின்னஞ்சலில் பதில் அனுப்பியபடியும் பயணிக்கும் நீங்கள் திபெத்தியர்களின் வாழ்க்கை முறையை சிறுகுறிப்பாக உணரலாம்”.
ஆனால் ‘டியனான்மென்’, ‘தலாய் லாமா’ என்பது போன்ற, சீன அதிகாரிகளால் அரசுக்கு விரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இன்னும் பல வார்த்தைகளை அவர் இணையதளத்தில் தேடிப்பார்த்திருக்க வேண்டும் அங்கே. அப்போது உலகின் மிகச் சிறந்த, வலிமையான ‘சீனப் பெரும் இணையதளச் சுவர்’(Great Firewall of China) என்கிற இணையதள தணிக்கை மென்பொருள் பற்றி அறிந்திருக்கமுடியும். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது ராம் தனது வாசகர்களை வேண்டுமென்றே ஏமாற்றுகிறாரா என்ற கேள்வி எழுகிறது.

சமரசத்துக்குள்ளான புறநிலைநோக்கு(Objectivity)
திபெத்தைப் பொறுத்தவரை ராம் தனது ஒருபக்கச் சார்பில் வெளிப்படையாகவே உள்ளார். தலாய் லாமாவை தாக்கும் அவர் தலாய் லாமாவை அயதுல்லா கொமைனியுடன் (Ayatollah Khomeini) ஒப்பிடுகிறார். பனிப்போர்காலத்திய வார்த்தைப் பிரயோகங்களுடன், ‘தலாய் லாமா காலனியாதிக்க நோக்கங்களுடன் மற்றும் மேற்கத்திய சக்திகளுடன் கைகோர்த்திருப்பதற்கு’ எதிராக தலாய் லாமாவைத் தாக்குகிறார் ; “தலைசிறந்த திபெத்தை ஒரு இயக்கத்தின் மூலம் தாய்நாட்டிலிருந்து பிரித்து எடுத்துச் செல்ல விரும்புகிற தகுதியில்லாத ஒரு அரசியல்வாதி” என விமர்சிக்கிறார். இந்த விமர்சனத்தை நாம் சீனாவின் கைகளில் மிகப்பெரிய எண்ணிக்கையில் உள்ள, சீனாவின் பொருளாதாராத்தையே உயர்த்தி நிற்கும், அமெரிக்க அரசின் பங்குப் பத்திரங்களையும் சேர்த்துப் பார்க்கும்போது, இந்த மேற்கத்திய சக்திகளுடன் கைகோர்த்திருப்பது சீன அரசா அல்லது தலாய் லாமாவா என்ற கேள்வி எழாமலில்லை. சீனா, திபெத்தை வன்முறையாகக் கைப்பற்றியதானது வல்லரசுகளின் காலனியாக்கத்தின் அம்சமாக இருப்பதை நாம் சுட்டிக் காட்ட முடியும்.

ராம் கூற்றின் படி,
“மறுபிறவி சம்பந்தமான திபெத்திய புத்தமத நம்பிக்கைகள் இறைத்தன்மை-மதம் சம்பந்தப்பட்டவையாகவும் 21ம் நூற்றாண்டு ஆத்திகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பனவாகவும் இருக்கும், அதேசமயம் தலாய்லாமாவின் மறுபிறவி சம்பந்தமான அனுகுமுறை கூட அரசியல்-கருத்தியலாகவும் இருக்கிறது”.
மேலும் அவர்,
“பீஜிங் அரசு நூறாண்டுகள் பழைய சம்பிரதாயங்கள் மற்றும் மரபுகளை ” தொடர்ந்து பின்பற்றி வருவதனால், “தலாய் லாமா மற்றும் பன்ச்சென் லாமா(Panchen Lama)க்களை அங்கீகரிக்கவும், நியமிக்கவும் அதிகாரம் பெற்ற அரசாகிறது”.
இக்கூற்றிலுள்ள வரலாற்றுத் துல்லியம் கேள்விக்குரியது என்பதுடன் பின்வரும் கேள்வியையும் எழுப்புகிறது. தம்மை நாத்திகராக வெளிப்படையாக இனங்காட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த 21ம் நூற்றாண்டில், இறைத்தன்மை-மதம் சார்ந்த அரசுக்குள் தலையிட வேண்டிய அவசியம் என்ன ?

“சைனாவின் அரசியலமைப்பு எல்லா குடிமக்களுக்கும் மதரீதியான சுதந்திரத்தையும், இனச்சிறுபான்மையிருக்கு பிரதேச சுயாட்சியையும் பரந்த சீனாவின் பெரும்பான்மையான பகுதிகளில் அளித்துள்ளது”
என்று ராம் உறுதியளிக்கிறார். ஒரு சட்டம் இருப்பதைச் சுட்டிக் காட்டுவது மட்டுமே அதன்படி எல்லாம் நன்றாக நடக்கிறது என்பதை நிரூபிக்குமா ? ராம் போன்ற மேன்மை தாங்கிய பத்திரிக்கையாளர்கள் திபெத்தில் மட்டுமின்றி சீனா முழுதும் பரவி இருக்கும் மதரீதியான ஒடுக்குமுறைகளைப் பற்றி அறியாதவர்களல்லர். திபெத்தில் தலாய் லாமாவின் படத்தை வைத்திருப்பது இன்றும் கூட குற்றம் தான். அம்னெஸ்டி இன்டர்நேஷனல்(Amnesty International)ன் 2006 அறிக்கையின் படி,
“திபெத்தில் மதம், கருத்து மற்றும் சங்கம் சம்பந்தமான சுதந்திரங்கள் தொடர்ந்து மறுக்கப்பட்டுக் கொண்டிருப்பதோடு, தன்னிச்சையான கைதுகளும் நேர்மையில்லாத வழக்குகளும் தொடர்கின்றன”.

தவிரவும், ராம் தனது பழைய கருத்துக்களான “சீனாவின் முன்னெப்போதுமில்லாத பொருளாதார வளர்ச்சி” மற்றும் “உள்ளடக்கும் மற்றும் நெகிழ்ந்து கொடுக்கும் சமூக-அரசியல் மற்றும் பண்பாட்டுக் கொள்கைகள்” என்பன திபெத்தின் விஷயத்தில் அது காட்டும் “அளவுகடந்த பொறுமை”யின் குறியீடுகளாகக் காட்டுகிறார். நாட்டில் ஏழை பணக்காரர் இடையேயான பிரிவு வளர்ந்திருப்பதை சீனாவே ஒப்புக்கொண்டிருக்க ராமின் கூற்று ஒரு மிகைப்படுத்தப்பட்ட புகழ்ச்சி. இதில் கவனம் ஈர்க்கும் விஷயம் ராம் இன்னும் சீனாவின் மார்க்சியப் பாதையில் நம்பிக்கையோடு இருப்பது தான்.
“நாட்டின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க மார்க்சிய-லெனினிய வழியில் சட்டம் தேசிய பிரதேச சுயாட்சியை அடிப்படை அரசியல் அமைப்பாகக் கொண்டிருக்கிறது” என்கிறார்.
சீனக் கட்சியானது தற்போது ஜனநாயகச் சுதந்திரம் அல்லது சங்க உரிமைகள் போன்றவற்றால் கட்டுப்படுத்த இயலாத “லெனினிய முதலாளித்துவ” த்தைத் தொடங்கியுள்ளது நாம் நன்கறிந்ததே. இந்தப் புள்ளியில் பீஜிங்கின் ஆட்சியாளர்களின் தற்போதைய ஒரே கோட்பாடு எவ்வளவு விலைகொடுத்தும் சர்வாதிகாரத்தைக் கையில் வைத்திருப்பது தான்.

திபெத்தின் தலையெழுத்தை கேள்விக்கிடமின்றி சீன ஆட்சியாளர்களிடம் கையளித்த ராம் இதில் இந்தியாவின் பங்கை மறந்துவிடுகிறார்.
“திபெத்தானது பகை நாடுகளுக்கிடையேயான முரண்பாடுகளைத் தாங்கும் இடைநிலை அரசாக ஆசியாவில் பல நூற்றாண்டுகளாக கருதப்பட்டு வந்திருக்கிறது”
என்கிற தலாய் லாமாவின் கூற்றை மறுக்கிறார். ஆனால் உண்மையில் 1960ல் மக்கள் விடுதலைப் படை(People’s Liberation Army) திபெத்தைக் கைப்பற்றும் வரை இநதியாவிற்கும் சீனாவிற்குமிடையே பொதுவான எல்லைகள் இருந்ததில்லை. சென்ற ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் யக்சிய்(Sun Yuxi)ன்
“அருணாச்சலப் பிரதேச மாநிலம் முழுவதும் சீனாவுக்குச் சொந்தமானது”
என்று கூறியதற்கு ராமின் பதில் என்ன ? திபெத்தின் இறையாண்மை வன்முறையாக ஒடுக்கப்படாமல் இருந்திருந்தால் சீனா தற்போது இம்மாதிரி வாக்கியங்களை உதிர்த்திருக்கமுடியுமா என்பது இந்து நாளிதழின் பதிப்பாசிரியருக்கு உறுதியாகத் தெரியும். தற்போது இந்துவும், ப்ரன்ட்லைனும் சீனாவின் திபெத்திய ஆக்கிரமிப்பை முழு ஆதரவுகொடுத்து எழுதுவது போல, எந்த சீனப் பத்திரிக்கையாவது இந்தியாவின் இறையாண்மைக்காக அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் பகுதி என்று ஆதரித்து எழுதுமா ? அல்லது ராமின் வெவ்வேறு நாடுகளின் ஜனநாயகச் சுதந்திரத்திற்கான அளவுகோல் நாட்டுக்கு நாடு மாறுபடுமா ?

உலகின் தலைசிறந்த பத்து பத்திரிக்கைகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்ட இந்துப் பத்திரிக்கைக்கு ஜூன் 2003ல் பிரதம பதிப்பாசிரியராக ராம் பொறுப்பேற்றது முதலே, அவருடைய தீவிர சீனச் சார்பு நிலையானது பத்திரிக்கையின் புறநிலை நோக்கைச் சமரசம் செய்ய வைத்துள்ளது என்று பொதுவாகக் கருதப்படுகிறது.
உலகின் அனைத்துத் தரப்பு நிருபர்களாலும் “உலகின் மிகப்பெரிய பொய்ப் பிரச்சார நிறுவனம்” என்று அழைக்கப்படும் சீன அரசுச் செய்தி நிறுவனமான சின்ஹூவா(Xinhua)வின் செய்திகளை அப்படியே வரி பிசகாமல் வெளியிடும் ஒரே பிரபல இந்தியப் பத்திரிக்கை இந்து நாளிதழ் தான். இந்துப் பத்திரிக்கையின் செய்தியாளர்கள் தங்களுக்கு திபெத், தலாய் லாமா மற்றும் பாலுன் கோங்(Falun Gong) பற்றிய கதைகள் எழுதும் போது அவை சீன அரசுக்கு எதிராக இருந்தால் எழுதவேண்டாம் என உத்தரவுகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ராம் பதவியேற்றது முதல் இந்து நாளேட்டில் வெளிவந்த செய்திகளை மேம்போக்காகப் பார்த்தாலே இந்த உண்மை விளங்கும்.

நம் முன் எழும் முக்கியக் கேள்வி என்னவெனில், இவ்வளவு பிரபலமும், முக்கியத்துவமும் உடைய பத்திரிக்கையாளர் தனது சுய வளர்ச்சியையே பணயமாக ஏன் வைக்கவேண்டும் ? பத்திரிக்கையின் முழுமையையும் சேர்த்துப் பணயம் வைத்து சீனாவின் ‘பயனுள்ள முட்டாளாக’ ஏன் மாற வேண்டும் ? அவருடைய பயண நண்பர்களைப் போல கம்யூனிஸக் கருத்தியலையோ அல்லது தனது அறியாமையையோ பீஜீங்கின் சர்வாதிகார ஆளுகையையும் மற்றும் திபெத்தின் மீதான காலனிய ஆதிக்கத்தையும் தான் முன்னிலைப் படுத்துவதற்கு காரணமாக அவர் சொல்ல இயலாது.

(ஹிமல் தெற்காசியப் பத்திரிக்கை(Himal Southasian Magazine)யில் செப்டம்பர் 2007 இதழில் வெளியிடப்பட்ட டென்சிங் சோனம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்)