Monday, October 12, 2015

காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ஒரு வழியாக கைவிட்டது அரசு!

காவிரி டெல்டா மாவட்டங்களி்ல் பூமிக்கடியில் பல கி.மீ ஆழத்தில் பெரிய நிலக்கரிப் படுகை உள்ளது. அந்தப் படுகையின் மேலே மீத்தேன் வாயு பெருமளவில் நிரவி நிற்கிறது. இதை எடுத்துத்தான் நமக்கு கேஸ் சிலிண்டர்களில் அடைத்து சமையல் எரிவாயுவாக விற்கிறார்கள்.
சரி. நல்லது தானே. அதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா?  இருக்கிறது. அந்த வாயுவை எப்படி எடுக்கிறார்கள். அந்த வாயுவை அப்படி எடுப்பதால் பாதிக்கப்படுவது என்னென்ன போன்ற விஷயங்கள் இதை ஒரு ஆபத்தான விஷயமாக்கி இருக்கின்றன.
மீத்தேன் வாயுவை மேலே கொண்டு வர பெரிய ஆழ்துளைக் கிணறுகள் போடுவார்கள். பின்பு அதில் மிகுந்த அழுத்தத்துடன் டன் கணக்கில் தண்ணீர், மண் கலந்த கலவையைக் கொண்டு அடிப்பார்கள். அதில் பாறைகளிடையே துளைகள் ஏற்பட்டு வாயுக்கள் வெளியே வரும். இந்தக் கலவையை தொடர்ந்து சுவாசித்தால் கேன்ஸர் கன்பர்ம். சுற்றுப் புறச் சூழலுக்கும் பெரும் கேடு. இந்த வாயு வெளியேற்றத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். இன்னும் மோசமாக நிலத்தடியில் உள்ள பாறைகளைத் துளையிட்டு பொருட்களை வெளியேற்றி வெற்றிடமாக்குவதால் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும். இவ்வளவு பிரச்சனைகள் உள்ள இந்தத் தொழில்நுட்பத்தை வெளிநாடுகள் ஏற்கனவெ 1957லிருந்து உலகெங்கும் பிரயோகித்து பல நாடுகளில் பாதிப்புகள் ஏற்ப்பட்டிருக்கின்றன. இப்போதுதான் இதற்கென உலக அளவில் ஒரு கண்காணிப்புக் குழுவை போட்டிருக்கிறார்கள்.
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஹரியானாவைச் சேர்ந்த கிரீன் ஈஸ்டர் எனர்ஜி கார்ப்பரேஷன் என்கிற பன்னாட்டுதனியார நிறுவனத்திற்கு லைசென்சு வழங்கியிருந்தது. ஆனால் காவிரி டெல்டா விவசாயிகள் தங்கள் எதிர்காலம் பாழாகப் போவதை உணர்ந்து தொடர்ந்து போராட, அவர்களுக்கு சமூகவியல் ஆர்வலர்களும், இடதுசாரிகளும் விழிப்புணர்வு ஊட்ட கடைசியில் வேறு வழியின்றி அரசு இதை விசாரிக்க ஒரு குழுவை அமைத்தது.
இந்தக் குழுவின் முடிவுகள் இந்தத் திட்டத்தின் தீய விளைவுகள் கிடைக்கும் எரிவாயு நன்மையை விடப் பல நூறு மடங்கு தீயது என்று அறிக்கை கொடுத்ததைத் தொடர்ந்து அரசு மீத்தேன் எடுக்க இன்று தடை விதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் இந்த திட்டத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என அந்த தொழில்நுட்ப வல்லுனர் குழு அளித்த அறிக்கையின் படி அரசு முடிவெடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, October 8, 2015

சிகரெட்டை ஒழி.. மக்களுக்கு 'தண்ணி' காட்டு !- அரசின் புதிய கொள்(ளை)கை.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சிகரெட்டின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தற்போது சிகரெட் குடிப்பவர்களின் எண்ணிக்கை குடிப்பவர்களின் எண்ணிக்கையை விடக் குறைய  ஆரம்பித்துள்ளது. காரணம் அரசுகள் சிகரெட்டுக்கு எதிராக முடுக்கி விடும் கடுமையான பிரச்சாரங்கள் ஆகும்.

குடிப்பழக்கம் சிகரெட்டை விட பன்மடங்கு தீமையானது. சிகரெட் குடிப்பதால் மட்டுமல்லை, குடித்தாலும் கூட கேன்சர் வரும். ஆனாலும் குடிப்பழக்கம் எல்லா நாடுகளிலும் சகஜமாக கருதவைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசே இதை நடத்துகிறது. தமிழக அரசு சிகரெட் கம்பெனி நடத்தி இத்தனை ஆயிரம் கோடிகள் வருடத்துக்கு சம்பாதிக்க முடியுமா ?   குடிப்பவர்களால் கிடைக்கும் வருமானம் சிகரெட் குடிப்பவர்களை விட பலமடங்கு அதிகம் என்கிற வியாபராக் கணக்கே குடியை விடுத்து சிகெரட்டை மட்டும் அரசுகள் குறிவைப்பதன் காரணம்.  குடிக்கு அடிமையானவர்கள் மூளையும் வேலை செய்வதில்லை. அவர்கள் பாதி அடிமைகள் என்பதால் இந்தப் பழக்கத்திலிருந்து மீளவே முடியாது. 

அதன் வெளிப்பாடாக  உத்தரப் பிரதேசத்தில், சில்லறையில் சிகரெட் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தப்பட்டுள்ளது.

இம்மாநில முதன்மை செயலர் (சுகாதாரம்) அர்விந்த் குமார் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

"உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் சில்லறையில் சிகரெட் விற்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்.

சில்லறையில் சிகரெட் விற்க தடை விதிக்கும் அவசர சட்டம் கொண்டுவர அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. அந்தச் சட்டத்துக்கு ஆளுநர் ராம் நாயக்கும் அனுமதி வழங்கி விட்டார்.

புதிய சட்டத்தின்படி சில்லறையில் சிகரெட் விற்பது கண்டறியப்பட்டால், முதல் முறையாக ரூ.1000 அபராதம் ஓராண்டு சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மறுபடியும் குற்றம் செய்தால் ரூ.3000 அபராதம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். சில்லறையில் சிகரெட் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.5000 அபராதம், 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்." இவ்வாறு அர்விந்த் குமார் கூறியுள்ளார்.

இது சில்லறை வர்த்தகம் எனப்படும் பெட்டிக் கடைக்காரர்களின் வயிற்றில் அடித்து அந்தத் தொழிலை இல்லாமல் செய்வதற்கே. அமெரிக்கா போன்ற நாடுகளில் தெருமுனைப் பெட்டிக் கடைகள் எல்லாம் சுத்தமாக ஒழிக்கப்பட்டுவிட்டன. காரணம் சிகரெட்டை கூட வால்மார்ட்டில் தான் வாங்கவேண்டும் என்று கார்ப்பரேட் கம்பெனிகள் நினைப்பதால்.

இதே போன்றதொரு கடுமையான தடையை மதுபாட்டில் விற்பவர்களுக்கும், குடிப்பவர்களுக்கும் ஏன் ஐயா கொண்டு வரவில்லை ? வருமானம் போயிடுமே ஐயா. அதுதான் அவங்க கவலை. மக்கள் மேல் அக்கறையும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல்லை. புரிஞ்சுக்கோங்க.