Saturday, July 6, 2013

ஓநாய்களும் இரு ஆட்டுக்குட்டிகளும்...சாதிகள் ஒழிவதில்லை.

பா.ம.க கட்சியின் நிறுவனரான ராமதாஸ் 80களில் செய்த சாதி அரசியல் அப்போது மிகப் பிரபலமானது. தனது வன்னியசாதி இனமக்களுக்கு அதிக இடஒதுக்கீடு தரவேண்டும் என்று அவர் நடத்திய போராட்டத்தில் வன்னிய இன மக்கள் பெரும்வாரியாக சேர்ந்து குதித்து நடுரோட்டில் பெரிய மரங்களை வெட்டிப் போட்டு தமிழ்நாட்டையே சில வாரங்கள் ஸ்தம்பிக்கச் செய்தனர். அப்படி தமிழகத்தையே உலுக்கியதில் அந்தச் சாதியினருக்கு கர்வம் கூட இருந்தது (நாங்க யாரு தெரயும்ல..).

அப்போது சாதியவெறி பற்றிய விழிப்புணர்வும் அது தவறு என்கிற மனப்பான்மையும் பெரிதும் மக்களிடம் வளர்ந்துவிடவில்லைதான். ஏனெனில் அது ஊடகங்கள் வளர்ந்திராத காலம். அன்று மக்களின் உணர்வுகளை மாற்றும் வலிய ஊடகம், அதுவும் ஒன்றே ஒன்றுதான். அது தூர்தர்ஷன் மட்டுமே.

ஆனால் 30 வருடங்களுக்குப் பின் இன்றைய நவீன செல்போன்கள் மற்றும் தொலைதொடர்பு யுகத்தில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 200 டி.வி. சேனல்கள் இருக்கின்றன. குடும்பத் தொலைக்காட்சிகள், கட்சி தொலைக்காட்சிகள், மதத் தொலைக்காட்சிகள் என்று விஷயங்கள் 200 மடங்கு அதிகமாக மக்களைச் சென்று அடைகின்றன.

மக்கள் மாறியிருக்கிறார்களா? ஆம் மாறியிருக்கிறார்கள். சாதியின் மீதான நம்பிக்கையின்மை அதிகரித்திருக்கிறது. பொருளாதார ஏற்றம் சாதியை மழுங்கடிக்கச் செய்யும் சக்தியை பெற்றிருப்பதால் சாதியை பொருட்படுத்தாமலிருக்க பழகியிருக்கிறார்கள். ஆனால் இந்த மாற்றங்களோடு சேர்ந்து சாதிய வெறித்தனமும் அதன் வடிவத்தைக் கூர்மையாக்கியிருக்கிறது.

தர்மபுரியில் அது அடையாளமாக வெடித்துக் கிளம்பி இன்று பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது. கடைசியாக காவு வாங்கப்பட்டது இளவரசன். நத்தம் காலனிப் பகுதியில் வன்னியசாதியைச் சேர்ந்த திவ்யாவும் தலித்சாதியைச் சேர்ந்த இளவரசனும் காதலித்து ஊரைவிட்டு ஓடிவிடுகின்றனர். திவ்யாவின் தந்தை போலீசில் பெண்ணை மீட்டுத் தரும்படி புகார் செய்கிறார்.

இந்நிகழ்ச்சிக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்து பா.ம.க கட்சி அரசியல் நிலையில் பலமிழந்து போனதாலும், கட்சி வன்னியருக்கு என்ன செய்து கிழித்துவிட்டது என்று பெரும்பாலான வன்னியர்கள் எண்ணிப் பார்த்து 'போங்கடா போய் புள்ளக் குட்டிகள படிக்க வைங்கடா.. வெட்டியா இவனுங்க பின்னாடி சுத்திக்கிட்டு அலையாம' என்று போய்விட்டதாலும் கட்சிக்கு வரும்படி குறைந்து விட்டது. தனது பலத்தை மீண்டும் நிலைநிறுத்த தனது பிரம்மாஸ்திரத்தை எடுத்தார் பா.ம.க ராமதாஸ்.

'ஜீன்ஸ் பேன்ட், கூலிங் க்ளாஸ் போட்டுக் கொண்டு எங்கள் பெண்களை மயக்கி காதல் திருமணம் செய்யும் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பாடம் புகட்டுவோம்' என்பது போன்ற புரட்சி வசனங்களை ராமதாஸூம் அவரது அடிபொடி 'குரு'க்களும் சேர்த்துப் பேச ஆரம்பித்தனர். கீழே உள்ளது மருத்துவர் ஐயாவின் பொழிப்புரையிலிருந்து ஒரு சேம்பிள்..

இந்நிலையில்தான் இளவரசனும்-திவ்யாவும் ஊரைவிட்டு ஓடிவிடுகின்றனர். இதில் இளவரசன் 17 வயதேயான மைனர். திவ்யா இளவரசனை விட மூத்த பெண். அவரது குடும்பம் நடுத்தர சராசரிக் குடும்பம். இளவரசனின் குடும்பமோ கொஞ்சம் வசதியானது. அதற்காக பெரும்பணக்காரர்கள் இல்லை. அவனது அப்பா அரசு பிணமருத்துவக் கிடங்கில் அறைக் காப்பாளராக வேலை செய்கிறார். அரசு வேலை.

இப்போது தர்மபுரியில் இருக்கும் சாதீயப் பெருந்தலைகளுக்கு நம் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஒரு தலித் பையன் ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டானே என்கிற வெறி. நேரே திவ்யாவின் அப்பாவைக் கூப்பிட்டு நாலு காய்ச்சு காய்ச்சி நீயெல்லாம் சாதிகெட்டவன் என்கிற ரீதியில் அவரை மிரட்டி, திட்டித் தீர்க்க அவர் வீட்டில் வந்து தூக்கில் தொங்கிவிட்டார்.

இதைச் சொல்லி வன்னிய சமூக மக்களிடையே வெறுப்பை ஊதியதில் தர்மபுரியில் நத்தம் காலனியில் 200 தலீத்துகளின் வீடுகள் தீக்கிரையாயின. இதையெல்லாம் தாண்டி திவ்யாவும் இளவரசனும் தங்களது திருமணத்தில் உறுதியாக நின்றார்கள்.

இந்தக் கலவரங்களுக்குக் காரணமாய் நம் மருத்துவர் ஐயா சொன்ன முத்துக்களில் சில கீழே..

"நம் வீட்டுப் பெண் பிள்ளைகளை 14 வயது பெண் குழந்தைகளை காதல் நாடகமாடி கடத்திச் சென்று கர்ப்பமாக்கி கை விட்டு விடுகிறார்கள். தருமபுரியில் நடந்தது அது தான். தருமபுரி கலவரத்தில் ஒரு உயிருக்கு சேதம் ஏற்பட்டதா? ஒரு பன்றிக் குட்டியைக் கூட கொல்லவில்லை. ஆனால் அந்தப் பெண்ணோட அப்பன் செத்துப் போனான். இழப்பு எங்களுக்குத்தான். காதல்-கலப்புத் திருமணம் இதையெல்லாம் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிராமணர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முசுலீம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காதல் பிரச்சனையில் பெற்றோர்கள் தலையிடக் கூடாது. உரிமை இல்லை என்று சொல்றான். பெற்றோர் தலையிடாமல் பின் யார் தலையிடுவது? காதலுக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. எங்கள் சாதி பெண்களிடம் அதை வைத்துக் கொள்ளக் கூடாது"  - மருத்துவர் ஐயா மேதகு ராமதாசு அவர்கள்.

திவ்யாவின் அம்மாவின் மூலம் போலீசுக்குப் போன பாமக தரப்பு திவ்யாவை அம்மாவிடம் திரும்பித் தர கோரியது. கோர்ட்டிற்கு அழைத்துவரப்பட்ட திவ்யா தான் விருப்பத்துடனேயே இளவரசனுடன் திருமணம் செய்து வாழ வந்ததாகக் கூறிவிட்டார். சாதிவெறியினர் முகத்தில் கரியைப் பூசிய அவரை விட்டுவிட்டு திவ்யாவின் அம்மாவை குறிவைத்தனர். திவ்யாவின் அம்மாவை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்ததில் கதறிக் கொண்டு திவ்யா ஓடிவந்தார்.

அம்மா செத்துப் போவாரோ என்று பயந்து போன திவ்யா இளவரசனை விட்டுவிட்டு அம்மாவிடம் திரும்பினார். இப்போது திவ்யாவுக்கு இளவரசனுடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தால் என்ன விளைவுகள் வரும் என்று விளக்கிச் சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னதில் அவர் இளவரசனுடன் இனிச் சேர்ந்து வாழமாட்டேன். அவரைப் பார்த்தால் இறந்துபோன என் தந்தை ஞாபகம் வருகிறது. என்று இருநாட்கள் முன்பு பத்திரிக்கைகளைக் கூட்டி விரிவான அறிக்கை கொடுத்துவிட்டார்.

அதைப் பத்திரிக்கையில் படித்த இளவரசன் தனது மாமாவிடம் இப்படி பத்திரிக்கையில் சொல்லியிருக்கிறாளே அவள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்பட்டுவிட்டு, தான் போலீஸ் வேலையில் சேர்வதற்கான பயிற்சிகளை எடுக்கப்போவதாயும், போலீஸ் வேலை வாங்கிய பின் திவ்யா மனம் மாறி மீண்டும் வந்துவிடுவாள், தான் அவளை வைத்துக் காப்பாற்றுவேன் என்றும் கூறிவிட்டுச் சென்றிருக்கிறான். பின்பு தனது தந்தையிடம் அவரது பைக்கை வாங்கிக் கொண்டு சற்றுத் தள்ளியுள்ள ஊரிலிருக்கும் தனது நண்பன் ஒருவனைப் பார்க்கச் செல்கிறேன் என்று கிளம்பியிருக்கிறான் இளவரசன். காலையில் தருமபுரி ரயில் நிலையத்தருகே நின்று கொண்டிருந்த அவனது பைக்கைத் தொடர்ந்து சென்று பார்த்ததில் ரயில்வே பாதையோரம் மூளை சிதைந்து இறந்து கிடந்திருக்கிறான் இளவரசன்.

ரயிலில் அடிபட்டு இறந்தானா அல்லது ரயிலில் தள்ளப்பட்டு இறந்தானா அல்லது கொல்லப்பட்டு தள்ளப்ப்ட்டானா ? இளவரசன் இறந்து கிடந்ததை காலை அத்தனை நேரம் வரை அப்பகுதியைக் கடந்து சென்ற எந்த ரயில்களின் டிரைவர்களும் பார்த்து ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுக்கவில்லை. இது ஏன் என்பது ஒரு கேள்வி.

இளவரசன் இறந்ததைக் கேள்விப்பட்ட தர்மபுரி பாமக கட்சியினர் பலர் ஊர்ஊராகச் சென்று அந்தச் செய்தியை வேட்டுக்கள் வெடித்து மகிழ்ச்சி பொங்க அறிவித்தபடியே சென்றார்களாம்.

இளவரசனும் அவரது அப்பாவும் கடைசியாக இன்று மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள். இம்முறை அப்பா வேலை செய்யும் பிணக்கிடங்கிலேயே பிணமாக வந்து கிடக்கிறான் மகன் இளவரசன்.

இந்தச் சாதீயப் பிரச்சனையில் தலித்துக்களுக்காக நின்று போராடும் சக்தி திருமாவளவனுக்கு இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே. 15 வருடங்களுக்கு முன்பிருந்த திருமாவளவனாயிருந்தால் இந்நேரம் இளவரசனுடன் துணையாக நின்று அவனுக்குத் தோள் கொடுத்திருப்பார் திருமா. இப்போதோ கலைஞர் தாத்தாவின் செல்லப் பேரனாக அவர் தரும் பணத்தின் நிழலில் வாழ்ந்து பழகிவிட்டதால் வெறும் அறிக்கைகளோடே நின்றுவிட்டார். மற்ற கட்சிகள் இடதுசாரிகள் உட்பட இப்பிரச்சனையின் ஆழம் புரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் கோட்டை விட்டுவிட்டனர். ஜெ. அம்மாவிடம் கேட்டால் இவன் யார் மேல்சாதிப் பெண்ணை திருமணம் செய்ய ? இவனுக்கு இது வேண்டியதுதான் என்று சொன்னாலும் சொல்வார். அவருடைய எல்லைகள் பாமகவை இந்தப் பிரச்சனையை வைத்து ரவுண்ட் கட்டிவிடுவதோடு நின்றுவிடுகிறது.  இப்படி எல்லாரும் கைவிரித்து விட்ட நிலையில் அவன் கொல்லப்படுவதை தடுக்க ஆளேயில்லாமல் போய்விட்டது. இப்போது அது தற்கொலை என்று பிரச்சனையை மூடிவிடப் பார்க்கிறதாம் போலீசு.

சாதிகள் இல்லையடி பாப்பா - பாரதியார். குழந்தைகள் முதலே இந்த எண்ணம் வரவேண்டும் என்று நினைத்த அவர் ஒரு தீர்க்கதரிசி தான்.

Friday, June 7, 2013

ஸ்ரீசாந்த் அப்படி என்ன பெரிய தவறு செய்துவிட்டார்?

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சமீபத்தில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா என்கிற மூன்று ராஜஸ்தான் ராயல் அணியின் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் செய்த ஸ்பாட் பிக்சிங் என்பது என்ன? இவ்வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட சில ஓவர்களில் வேண்டுமென்றே லூஸ் பால்கள் போட்டு ரன்களை எதிரணியினருக்கு அதிகப்படுத்திக் கொடுப்பார்கள். இதில் இவர்களுக்கு என்ன லாபம்?

இவர்கள் அணியினருக்கு லாபம் இல்லை. ஆனால் சூதாட்டம் நடத்தும் புக்கிகளுக்கும் அதனால் இவர்களுக்கும் லாபம். உதாரணமாக ஸ்ரீசாந்த்தின் நெருங்கிய நண்பனான ஜிஜூ ஜனார்தனன் என்பவர் 'புக்கி'(bookie) எனப்படும் சூதாட்டத் தரகராக இருந்துள்ளார். 

இவர் போட்டி நடக்கும் போது நிமிடங்களில் பல கோடிகள் பெட் வைக்கப்படும் சூதாட்டத்தை போன் மூலமே நடத்துவார். பெரும் பெரும் தலைகள் கம்பெனி முதலாளிகள் கலந்துகொள்வார்கள். உதாரணமாக ஜனார்தனன் அடுத்த ஓவரில் எதிரணியின் ஆட்டக்காரர் 14 ரன்களுக்கு மேல் எடுக்கப்போகிறார் என்று நிறைய பணம் பந்தயம் கட்டுவார். அதற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல கோடிகள் பெட் வைக்கப்படும்.  ஆனால் ஜிஜூவுக்கும், ஸ்ரீசாந்துக்கும் மட்டுமே தெரியும் ஸ்ரீசாந்த் வீசப்போகும் அடுத்த ஓவரில் வேண்டுமென்றே எளிதான பந்துகளைப் போட்டு எதிரணிக்கு 14 ரன்களுக்கு மேல் கொடுக்கப்போகிறார் என்று.

ஸ்ரீசாந்த் அடுத்த ஓவரில் வேண்டுமென்றே சொதப்பலான பால்கள் போட்டு 14 ரன்னுக்கு மேல் கொடுக்கப்போகிறார் என்பது ஜிஜூவுக்கு எப்படித் தெரியும் ? ஓன்றுமில்லை. அது ஒரு கோட் வேர்ட். ஸ்ரீசாந்த் தனது இடுப்பில் வெள்ளை நிற டவலை சொருகியிருந்தால் அந்த ஓவரில் 14 ரன்களுக்கு மேல் கொடுப்பார் என்பது ஜிஜூவுக்குத் தெரியும். எனவே அதை வைத்து அவர் உறுதியாக பெட் கட்டுவார். பல கோடிகள் லாபம் சம்பாதிப்பார்.

அந்த லாபத்தில் ஒரு பங்கு ஸ்ரீசாந்துக்கு அதாவது சுமார் 40 லட்சங்கள் ஒரு ஓவருக்கு கிடைக்கும்.

இவ்வளவு அருமையான ஒரு டெக்னிக்கை கையாண்டு பல்லாயிரம் கோடிகள் லாபம் சம்பாதிக்கும் ஐ.பி.எல் என்னும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்களான ஸ்ரீசாந்த்தும், அங்கீத் சவானும் சில கோடிகள் சம்பாதிப்பதில் என்ன பெரிதாய் தவறு நேர்ந்திருக்கிறது ? ஒன்றுமில்லை ராஜஸ்தான் ராயல்ஸூக்குப் பதில் கொல்கத்தா டேர்டெவில்ஸ் ஜெயிப்பார்கள். ரசிகர்களுக்கு அதிலென்ன பிரச்சனை? அவர்களுக்குத் தேவையான த்ரில்லான அந்த நான்கு மணி நேரம் அவர்களுக்குப் பொழுது நன்றாகப் போய்விடுகிறது. யார் தோற்றால் என்ன ? ஜெயித்தால் என்ன ?

உலக நாடுகளில் ஏற்கனவே கிளப் விளையாட்டுக்கள் என்கிற பெயரில் பெரும்பணம் சம்பாதிக்கும் விளையாட்டு நிறுவனங்களின் செயலை கமர்ஷியலாக லலித் மோடி கிரிக்கெட்டில் 50 ஓவர்களை20 ஓவர்களாக சுருக்கி ஐ.பி.எல் 20-20 என்று அறிமுகப்படுத்தினார்.

9 அணிகள் ஒரு வருடத்திற்கு 90 கிரிக்கெட் மேட்ச்சுகள். இவற்றால் விளையும் வருமானம் சில ஆயிரம் கோடிகள். இந்த லாபம், வருமானம் யாருக்குப் போகிறது ? ஐ.பி.எல் என்னும் தனியார் நிறுவனத்துக்கு. அதன் ஓனர்கள் அல்லது உறுப்பினர்கள் யார் ? அம்பானி, மல்லையா என்கிற வெளிப்படையான முதலாளிகள் முதல் ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா போன்ற பினாமி முதலாளிகள் தான் ஐ.பி.எல்லின் உரிமையாளர்கள்.

இவர்களுடைய நோக்கம் நீதி, நேர்மை வழுவாது கிரிக்கெட் என்னும் விளையாட்டின் உன்னத தருணங்களை மக்களுக்கும், ரசிகர்களுக்கும் கொண்டு சேர்ப்பதல்ல. மாறாக எல்லோருக்கும் ஒரு நான்கு மணி நேர முடிவு தெரிய டென்ஷனாகும் ஒரு பரபரப்பான த்ரில் சினிமாவைக் காட்டுவது. அதை சினிமாவாக இல்லாமல் லைவ்வாக கிரிக்கெட்டாக காட்டுகிறார்கள்.

நீங்களே சொல்லுங்கள். ஐ.பி.எல் கிரிக்கெட் பார்க்க ஒரு சாதாரண ரசிகருக்கு இருக்கத் தேவையான தகுதி என்ன? போர், சிக்ஸ், சிங்கிள்ஸ், அவுட், ரன் அவுட், டக் அவுட் அவ்வளவுதான். அதைத் தாண்டி கிரிக்கெட் என்கிற விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றி எந்த அறிவும் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஐ.பி.எல்லில் கடைசி ஐந்து அல்லது ஆறு ஓவர்களின் முன்னேயே விளையாட்டின் முடிவு தெரிந்துவிடும்படியான போட்டிகள் எத்தனை? குறைவு. மாறாக கடைசி ஓவரில், கடைசி பாலில், கடைசி ரன்னில் பார்வையாளரின் பி.பி.யை எகிறவைக்கும் க்ளைமாக்ஸ் கொண்ட ஆட்டங்களே அதிகம். ஏன்? இது வேண்டுமென்றே செய்யப்பட்டு வருகிறது என்று ஏன் ஒருத்தரும் சி.பி.ஐயிடம் போய்க் கேட்கவில்லை?

அதனால் தான் இன்று இல்லத்தரசிகள் முதல், இரும்புப் பட்டறை வைத்திருப்பவர் வரை எல்லோரும் ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்ஸின் ஸ்கோர் கேட்கிறார்கள். 'பட்டைய கிளப்பிட்டான்' என்று சந்தோஷப்படுகிறார்கள். அல்லது 'சே..சொதப்பிட்டான் ' என்று சலித்துக் கொள்கிறார்கள். இதன் ஒரே காரணம் அந்த அணியின் பெயரில் சென்னை என்று ஒரு வார்த்தை வருவதால். அதைத் தவிர அவர்களுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தமில்லை.

இப்படி சென்னைக்கு சம்பந்தமேயில்லாதவர்கள் நடத்தும் சென்னை சூப்பர் கிங்ஸூக்காக பேஸ்புக் முதல், ட்விட்டர் வரை வாய் கிழிய மார்தட்டிப் பேசுபவர்கள் பல்லாயிரம் பேர். இதே போல் தான் மற்ற அணியினருக்கும் அந்தந்த மாநிலத்தின் ரசிகர்கள் தான் ஓனர்கள் போல் நினைப்பு. ஸ்ரீசாந்த் முதல் யாரோ பெயர் தெரியாத புக்கிகளை ஏதோ கொலைக் கேஸில் பிடித்தவர்களைப் போல முக்காடு போட்டு கூட்டிச் சென்ற இதே சிபிஐ மெய்யப்பன் மற்றும் அவருடைய மாமனார் சீனிவாசனின் வீட்டு வாசலில் பவ்யத்தோடு நிற்கிறது வாலாட்டியபடியே. இதைப் பற்றியெல்லாம் நம் மக்களுக்கு என்ன கவலை?

அவர்களுக்குத் தேவை நான்கு மணி நேர பரபரப்புச் சினிமா. அடுத்த நாளில் அதைப் பற்றி ரசித்துப் பேச கிடைக்க ஓரு டாபிக். இதில் ஹஸ்ஸி, சேவாக் என்று விளாசும் ஸ்டார்களின் மீதான ரசனைகள் தனி. இன்று ஊழல் வந்த போதும் அதை ஒரு டாபிக்காக மட்டும் பேச ஒரு ஆள் வேண்டும். அது ஸ்ரீசாந்த் மற்றும் அவரது உடந்தையாளர்கள். ஸ்ரீசாந்த் பெண்கள் கூட சல்லாபம் செய்யும் பேர்வழி என்று கோரமான வில்லனாக ஸ்ரீசாந்த் ஆக்க்படுகிறார். ஏனென்றால் ஏமாற்றப்பட்டதாக உணரும் ரசிகர்களின் கோபத்துக்கு ஒரு வடிகால் வேண்டுமே அதற்காகத்தான். மாறாக நீதி கிடைக்கவேண்டுமென்று அல்ல.

2008ல் ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எல்லில் ஐந்நூறு கோடி முதல் ஆயிரம் கோடிவரை ஊழல் புரிந்தார், மேட்ச் பிக்சிங்குகள் செய்தார் லலித் மோடி என்று 2010ல் புகார் கிளம்பியது. சிபிஐ கிளம்பியது. லலித் மோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் வெளிநாட்டுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. அவ்வளவு தான் கேஸ் போட்டு அது...நடந்..து கொண்டே இருக்கிறுது. இருக்கும் ஜெ அம்மையாரின் வழக்குகள் போல. சி.பி.ஐக்காரர்கள் அப்போது கிளம்பியவர்கள் இன்னும் வந்து சேரவில்லை போல அதற்குள் அடுத்த ஊழல் பிரச்சனை ஸ்பாட் பிக்சிங். இந்த முறை சீனிவாசன் தைரியமாக அறிவிக்கிறார் தான் பதவி விலக முடியாதென்று. யாருக்கு வரும் இந்த தில்லு? உங்களுக்கோ எனக்கோ வருமா ?

இன்று 2013. இன்று வரை அந்த ஊழல் புகார்கள் என்ன ஆனது ? இந்தப் போட்டிகளை எப்படி நிஜமான விளையாட்டுக்கள் என்று நம்புவது என்பது பற்றி எந்த முட்டாள் ரசிகனுக்கும் கவலை இல்லை. அவனது சொந்தப் பணமான 500 ரூபாயை செலவழித்து டிக்கெட் வாங்கி இந்த மோசடி மேட்ச்களை பார்க்கிறோமே என்று யாருக்கும் வருத்தமும் இல்லை. இந்த ஸ்பாட் பிக்சிங்கில் இதுவரை 17 புக்கிகளை கைது செய்துள்ளதாம் போலீஸ். புக்கிகள் என்பவர்கள் தரகர்கள் மட்டுமே. பச்சையாகச் சொன்னால் புரோக்கர். கமிஷனுக்காக வேலைகள் செய்பவர். ஆனால் உண்மையில் சூதாட்டம் ஆடுபவர்கள் பலநூறு கோடிகளை சில்லறையாக எறிபவர்களே. அவர்களில் ஒருவர் கூட சி.பி.ஐயின் காமாலைக் கண்ணில் இதுவரை பிடிபடவில்லை. இனியும் பிடிபட மாட்டார்கள் என்பதுவே நிஜம்.

இதில் பல லட்சம் பேர் நம்ம வீட்டு டி.வியில் சாயங்காலம் வீட்டுக்குப் போனால் நைட் தூங்கறவரைக்கும் விறுவிறுப்பான என்டர்டெய்ன்மன்ட். அது எப்படி இருந்தா எனக்கென்ன? என்று நினைக்கும் மனப்பாங்குள்ள எளிமையான ரசிகர்கள். அவர்களுக்கும் டாஸ்மாக்கின் வாசலில் காலை ஏழு மணிக்கே வந்து நின்று கை நடுங்க சரக்கடிக்கும் குடிகாரனுக்கும் பெரிய வித்தியாசமில்லை. டாஸ்மாக்கோ, கடாமார்க்கோ, கள்ளச் சாராயமோ எனக்கு அந்த நேரத்துக்கு கிடைச்சாப் போதும். அவ்வளவுதான்.

இப்படி தவறுகள் ஐ.பி.எல்லை ஆரம்பித்த லலித் மோடியிலிருந்து அதன் தற்போதைய உரிமையாளர்கள், கறுப்புப் பணமுதலைகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வரை எல்லோரிடமும் கொட்டிக் கிடக்கும் போது, சில பல லட்சங்களுக்காக ஸ்ரீசாந்த் மற்றும் ஒரு மூவரை மட்டும் கட்டம் கட்டி இவர்கள் தான் கிரிக்கெட்டுக்கு களங்கம் கற்பிப்பவர்கள், இவர்களை ஒழித்தால் போதும் ஐ.பி.எல் தூய்மையான கங்கை நதியாக மாறிவிடும் என்று படம் காட்டும் ஊடகங்களும் ஒன்றை மறந்துவிட்டார்கள்.

அது ஸ்ரீசாந்த் வெறும் ஒரு பலியாடு மட்டுமே என்பதை.
ஆனால் ஓநாய்களோ...