Friday, August 28, 2009

சமூகமும் ஓரினச்சேர்க்கையும்...

http://uraiyurkaran.blogspot.com/2009/07/blog-post.html
என்கிற வலைப்பதிவின் கட்டுரையைப் படித்ததும் எனக்குத் தோன்றியது இது..

incest ஒரு காலத்தில் இருந்திருந்து பிற்காலத்தில் கைவிடப்பட்டது. தற்போதைய ஆணாதிக்க சமுதாயம் தோன்றிய பின் incest முற்றிலும் மறைந்துபோனது. ஆனால் இன்னும் சரோஜாதேவி கதைகளில் இவற்றைப் பார்க்கலாம். சமூகத்தின் வளர்ச்சியில் தற்போது தாயின் நிலை வேறாக உள்ளது. Freud சொல்லியது போல தாயின் மீதான குழந்தையின் 'காதல்' அமுக்கப்பட்டு மனதில் அதனது identity உருவாவதற்கு அடிப்படையான காரணமாக உள்ளது. தாயின் மீதான பெண்குழந்தை கொள்ளும் காதல் ஒருவகை ஓரினக் கவர்ச்சியாகும். இப்போது incest சமூகத்தில் இல்லை என்று உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் அது உள்ளவர்கள் யாரும் வெளியில் வந்து பகிரங்கமாக எங்களை அங்கீகரியுங்கள் என்று ‘சமூக’ அடையாளத்துக்காக போராடுவதில்லை. அதற்கான தேவையும், அவசியமுமில்லை.

தற்போது ஒரினச் சேர்க்கையின் நிலையும் அப்படித்தான். ஓரினச் சேர்க்கை எல்லாக் காலங்களிலும் இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் தண்டனைக்குரியதாக அமுக்கப்பட்டது. ஆனால் எல்லா சமூகங்களிலும் மறைமுகமாகப் படர்ந்திருந்துள்ளது. தற்போதைய சமூகத்தில் ஓரினச் சேர்க்கை சமூகத்தின் போக்கை, கலாச்சார ரீதியாக பெரிதும் பாதித்துவிடாது என்ற புரிதல் அறிவியலாளர்களால் முன்னிறுத்தப்படுகிறது.

இப்போது incest, homosexuality இவ்விரண்டு நிலைகளின் சமூக நிலைகளையும் கருதுவோம். Incest க்கு நேரடியான சமூக அங்கீகாரம் கிடையாது. ஆனால் அது தாயின் மீதான பாசப் பிணைப்பாக மறுவியிருக்கிறது. அதற்கான சமூக அங்கீகாரம் அளவுகடந்தது. தந்தையின் மீது முரட்டுத்தனமான பாசம் கொண்ட பெண் குழந்தைகளையும் பார்க்கிறோம். தந்தை-மகள் incest பெரும்பாலும் தந்தையின் வன்முறையாகவே வெளிப்படுகிறது. இவை சமூகத்தில் நிலவும் விதிவிலக்குகள். அதுபோல ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை குறைவு. மேலும் சமூகத்தின் அடிப்படைத் தேவையான, இனப்பெருக்கத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை. சமூகத்தில் அது மறைமுகமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பெண்ணுக்கும் பெண்ணுக்குமான பாலுறவு தெரிந்தும் தெரியாததுபோல இருப்பு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தான் ஆண்களுக்கிடையேயான பாலியல் உறவும்.

சட்டத்தில் தற்போது ஓரினச்சேர்க்கையை ‘தண்டனைக்குள்ளாக்கும் குற்றமல்ல’ என்று சொன்னது வரவேற்கத்தக்கது. அது சமூகத்தின் யதார்த்தத்தை சட்டம் உணர்ந்துள்ளதைக் குறிக்கிறது. சட்டம் தனிமனிதர்களின் படுக்கையறைக்குள் எட்டிப்பார்க்கும் வகையான இத்தகைய சட்டங்களை கைவிடுதல் நல்லதுதான். குறிப்பிட்ட அளவிற்குமேல் சட்டம் தனிமனித விருப்பங்களை கட்டுப்படுத்தல் இயலாது. உதாரணமாக சட்டத்தில் 'குறி சுவைத்தல்' அனுமதிக்கப்பட்டதல்ல. ஆனால் இச்செயல் இன்பம் துய்ப்பதில் ஒரு பங்கு வகிக்கிறது. இது சமூகம் தரும் மறைமுக அங்கீகாரம் ஆகும்.

சமூகத்தின் பொதுவான வளர்ச்சிப் போக்கிற்கு ஓரினச்சேர்க்கை பங்களிப்பு செய்வதில்லை என்றாலும் அதன் இருப்பை சமூகம் மறைமுகமாவது அங்கீகாரம் செய்கிறது.
ஆனாலும் மேற்கத்திய கலாச்சாரத்தின் ‘தனிமனிதரீதியான’ கோட்பாட்டு சிந்தனை சமூகத்தின் எல்லா கூறுகளையும் பிய்த்து எறிய விரும்பும் போக்கைக் கொண்டுள்ளது. அது தனிமனித விடுதலை என்கிற போக்கில் சமூகமாய் வாழ்வதில் செய்யப்பட்டுள்ள சமரசங்களை உடைக்கிறது. ஆணகளையும், பெண்களையும் சமூக அளவில் தனித்தனியாக்க விரும்புகிறது. ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களின் தனிமனித விருப்பங்களை சத்தமாக வெளியிடச் செய்வதன் மூலம் இது சமூகத்தின் ‘குடும்பம்’ என்ற அமைப்பின் மேல் இன்னொரு தாக்குதல் தொடுக்கிறது. குடும்பம் என்ற அமைப்பு கட்டமைக்கப்பட்ட ஒன்று. அந்த ஒரு காரணத்துக்காகவே அது அழிக்கப்படவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அப்படிப் பார்த்தால் ஓரினச் சேர்க்கையின் ‘இயற்கைத்’ தன்மையும் கட்டமைக்கப்படுவதுதான். எல்லா ஓரினச் சேர்க்கையாளர்களும் இயற்கை உந்துதலால் ஓரினச்சேர்க்கையாளர்களானவர்களல்ல. சிறைகளில் நடைபெறும் ஓரினச்சேர்க்கை பாலியல் வன்முறைகளைப் பற்றிப் படித்திருக்கிறோம். இவ்வகையில் பார்க்கும் போது ஓரினச்சேர்க்கை எதிர்பால் சேர்க்கையாளர்களுக்கு எதிரான ஒரு மனப்போக்கை முன்னிறுத்துகிறது. இது ஓரினச்சேர்க்கையாளர் X எதிர்பால் சேர்க்கையாளர் என்ற இரு எதிர்போக்குகளாக உருவாக்கம் பெறுவதில் போய் முடிகிறது. இவ்வுருவாக்கம் இவற்றுக்கான அரசியலை சமூகத்தளத்தில் உண்டாக்குகிறது. இவ்விரண்டும் ஒன்றையொன்று மறுதலிப்பவைகளாக, எதிரிகளாக அடையாளம் காண்கின்றன. இது அரசியலாக்குவதின் ஒரு விளைவாகும். இந்த அரசியலில் இவ்விரண்டுக்குமிடையேயான சமரசப் பார்வைகளை முன்வைக்காமல் அடித்துக் கொண்டு சண்டையிடும் மனப்பான்மையை இரு பக்க ஆதரவாள அறிவுஜீவிகளும் போட்டிபோட்டுக் கொண்டு முன்வைப்பது தான் பிரச்சனை.

ஒரு ஆண் ஒரு பெண்ணை அடையாளம் காண்பதும், பெண் ஒரு ஆணை அடையாளம் காண்பதும் மிக வெளிப்படையான குறீயீடுகளான ஆடை போன்ற எளிய விஷயங்களாக உள்ளது. இதுபோல ஒரினச் சேர்க்கையாளர்களுக்கும் வெளிப்படையான குறியீடுகள் தோன்றலாம். அவற்றின் மூலம் ஒரு வகைச் சேர்க்கையாளர் இன்னொருவரின் சுயத் தேர்வில் குறுக்கிடாத தன்மை நிலவும் சூழல் ஏற்படலாம். அவ்வாறு குறுக்கீடற்ற நிலைமைகள் தோன்றும்போது இவ்விதமான ஓரினச்சேர்க்கைக்கு எதிரான கடுமையான மனநிலை இல்லாமல் போகும். மேற்கத்திய முறையிலான பிரித்தாளும் 'தனிமனித சுதந்திரம்' என்ற பார்வையை நான் அப்படியே ஆரோக்கியமானதாகக் கருதவில்லை. மனிதன் சமூகமாக வாழ்கிறோம் என்ற பிரக்ஞையுடன் வாழ, சிந்திக்க வேண்டும். தனிமனிதனுக்கும், சமூகத்திற்குமான தொடர்பு நெகிழ்வுத்தன்மையோடு இருக்கவேண்டும்.

எழுத்தாளர் சாரு நிவேதிதா முன்பு ஒருமுறை அவரது கோணல் பக்கங்களில் எழுதியதாக ஞாபகம். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்திலும் அதைச் சொல்லியிருந்தார். அந்நிகழ்ச்சி இதுதான்: அவரும் அவர் நண்பரும் (இவர் நண்பருடன் பயணித்தாரா என்பது சரியாக ஞாபகமில்லை) ஐரோப்பிய நாடொன்றில் சுற்றுப்பயணம் செய்தபோது காரில் போய்க்கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு காட்சி. சாலையோரத்தில் (பார்க்கில்?) வெளிநாட்டுத் தம்பதியினர் இரண்டுபேர் கொஞ்சிக் கொண்டிருந்திருக்கின்றனர். கொஞ்சல் முற்றிப் போய் கலவிக் கட்டத்திற்குப் போக ஆரம்பித்துவிட.. காரில் போன நண்பர் வாகனத்தை நிறுத்தி அதை ரசிக்க ஆரம்பித்துவிட்டார். கொஞ்ச நேரம் ரசித்துவிட்டு அவர் காரைக் கிளப்பிக்கொண்டு போக பாதிவழியில் போலீசு துரத்திப் பிடித்தது அவரை. அந்த வெளிநாட்டுத் தம்பதியினர் போலீசுக்கு "ஒருத்தன் எங்களை உத்துப் பார்க்குறான்" என்கிற ரீதியில் புகார் செய்ய போலீஸ் வந்து நண்பரைத் துரத்திப் பிடித்திருக்கிறது.

இந்நிகழ்ச்சியை அவர் குறிப்பிட்டு அங்கிருக்கும் பாலியல் சுதந்திரத்தையும், நாகரிகத்தையும்(?) நமது ஆசாமிகள் உற்றுப் பார்க்கும் செக்ஸ் வறட்சியையும்(?) ஒப்பிடுவார். இக்காட்சியை அவருடைய நண்பருக்குப் பதில் ஒரு ஐந்து வயதுக் குழந்தை பார்த்தால் என்ன ஆகும் ? ஐந்து வயதுக் குழந்தைக்கு உடலுறவு என்பது இயற்கையானது என்றாலும் மனரீதியாக பாதிப்பை உண்டாக்கவே செய்யும். அதனால் தான் 'எல்லாம் வளர்ந்த' மேலை நாடுகளில் கூட பொது இடங்களில் உடலுறவு கொள்வது மாதிரியான விஷயங்கள் தவறாகப் பார்க்கப்படுகின்றன. செக்ஸ் கல்வி என்ற விஷயத்திற்கு நான் எதிரி இல்லை. ஆனால் இந்தமாதிரி செக்ஸ் சுதந்திரங்கள் பற்றிப் பேசுவது, 'சமூகம் என்கிற கட்டமைப்பில் வாழ்கிறோம்' என்பதை மறந்துவிட்டு அல்லது சமூகம் என்பது ஒரு கட்டுமானம், அதை உடைக்கவே வேண்டும் என்கிற எண்ணங்களின் அடிப்படையில் எழும் வாதங்களாகும். நாம் வாழும் வாழ்க்கையில் சமூகம் உள்ளிட்ட நிறைய கட்டுமானங்கள் உள்ளன. அவற்றை 'சமூக அளவில்' நாம் அங்கீகரித்தே வாழ்கிறோம். தனிப்பட்ட மனித அளவில் நாம் அதை நிராகரிக்கலாம்; அதை சமூகம் ஒன்றும் சொல்வதில்லை. சமூகம் என்கிற போர்வையில் சில வலுக்கட்டாயமான, வன்முறையான விஷயங்கள் அதைக் கட்டமைக்கும் ஆதிக்க வர்க்கத்தால் திணிக்கப்படும்போது சமூகத்தை எதிர்த்து கிளர்ந்தெழுதல் என்பதும் நடைபெறும். நடைபெறுகிறது. இங்கு சமூகத்திற்கும், தனிமனித உரிமைக்குமான சமரசங்களும் இருபுறங்களிலும் நடைபெறல் வேண்டும் என்பது நான் வலியுறுத்த விரும்பிய விஷயமாகும். சமரசங்களும் சாத்தியமில்லாமல் போகும்போது தவிர்க்க இயலாமல் விலகல்கள் நிகழும். அப்போது அதை நாம் நினைத்தாலும் தடுத்து நிறுத்த இயலாது.

'எல்லாமே உடைதல் தான். உடைத்தல் தான் வாழ்க்கை' என்பது மட்டுமே இயங்கியல் அல்ல. ஒன்றையொன்று ஈர்த்தல், உள்வாங்குதல், முரண்படுதல், சமரசம் செய்தல், விலகிப்போதல், வெடித்தல் போன்ற எல்லாமும் நிகழ்வதுதான் சமூகம். மற்ற விஷயங்களைப் பார்க்காமல் உடைத்தல், வெடித்தல் இரண்டில் மட்டுமே விஷயங்களை கொண்டுபோய் நிறுத்துவது சரியான பார்வையாகாது. ஓரினச் சேர்க்கையாளர்களின் இயல்பான சமூக வாழ்க்கைக்கு சமூகத்தில் செய்யவேண்டிய விஷயங்களை விடுத்து அதன் அரசியலை எதிர்பால் சேர்க்கையாளர்களுக்கு எதிரானதாகத் தோன்றவைக்கும் அரசியல்கள் தவறாக நம் சமூகத்தை வழிநடத்தும்.

Saturday, August 8, 2009

தி மன்ஹட்டன் ப்ராஜக்ட்



மே 11, 1945. இலக்குக் கமிட்டி, விஞ்ஞானி ராபர்ட் ஓப்பன்ஹீமர்(RobertOppenheimer) தலைமையில் அமெரிக்காவில் லாஸ்அலோமோஸில் (Los Alomos)கூடுகிறது. தங்களது முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்பால் உருவான அதிக ஆற்றலுள்ள ஒரு நவீன ஆயுதம் அது; அதன் ஆற்றல் அவர்களுக்கே இன்னும் தெரியாது. அதன் ஆற்றலை, அழிவுசக்தியை ஆய்வகத்தில் சோதிப்பது சாத்தியமில்லை. எனவே ஒரு சோதனைக் களம் வேண்டும். இலக்கு வேண்டும். அதைத் தீர்மானிக்கத் தான் இந்த இலக்குக் கமிட்டி கூடியிருக்கிறது.

அவ்வாயுதத்தின் அளவிடப்படாத வீரியத்தால், அதன் அழிவு சக்தி எவ்வளவு என்று சரியாக அவர்களுக்கே தெரியாத காரணத்தால், தாக்குதல் இலக்கை பின்வரும் அளவுக் காரணிகளைக் கொண்டு அந்த அறிவு சார்ந்த பெரும் விஞ்ஞானிகள் தீர்மானிக்கிறார்கள்.

 1. இலக்கு 3 சதுர மைல்களை விட பெரிதாயிருக்கவேண்டும்.       பரிசோதனையின் படி ஆயுதத்தின் வீரியம் 3 சதுர மைல்களையும் தாண்டும்.
 2. இலக்கில் ஏற்படும் அழிவு பெரிதாய், முழுமையாய் தெரிய குண்டு வீசப்படும் பகுதி மக்கள் செறிவானதாய் இருக்கவேண்டும். எனவே இலக்கு மக்கள் தொகை மிகுந்த நகரமாயிருந்தால் நல்லது.
 3. தாக்குதல் தீர்மானிக்கப்படும் நாள் வரை இலக்கு வேரெதுவும் தாக்குதல்களுக்கு உட்படாதிருக்கவேண்டும். இது அதன் அழிவுசக்தியை மட்டும் தனியாக தனித்து அளக்க உதவும்.

அவர்கள் நாள் முழுவதும் உட்கார்ந்து விவாதித்து நான்கு இலக்குகளை தேர்ந்தெடுத்தார்கள். அவை க்யோட்டோ, ஹிரோஷிமா, யோகஹாமா மற்றும் கோகுரா. இந்நகர இலக்குகளை தாக்குதல் தினம் வரை நேசப்படைகளின் சாதாரண வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களிலிருந்து 'பத்திரமாக' விலக்கி வைக்க உத்தரவிடப்பட்டது.

 ஜூலை 26 1945. அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன், மற்றும் சில நேசநாடுகளின் தலைவர்கள் கூட்டாக சேர்ந்து ஜப்பானுக்கு சரணடையும்படி எச்சரிக்கை விடுத்தனர். அந்த எச்சரிக்கைக் கடிதத்தில் அவர்களின் புதிய ஆயுதம் பற்றி அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை. ஜப்பான் சரணடைய மறுத்தது; பாவம் விவரம் புரியாமல்.

ஆகஸ்ட் 6 1945. விடியற்காலை 2 மணிக்கு டினியன்(Tinian) தீவு ராணுவ தளத்திலிருந்து கிளம்புகிறது ஒரு அமெரிக்கப் போர் விமானம்.

பால் திபெத் (Paul Tibbet) என்கிற அமெரிக்க கமாண்டர் விமானத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். கடல்படை காப்டன் வில்லியம் பார்சன்ஸ் கூடவே மாரீஸ் ஜாப்ஸன் என்கிற துணை கமாண்டெர். இருவரும் பெரிதாக ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. அவர்கள் செயது கொண்டிருக்கும் பணியின் கணத்தால் அமைதியாக இயங்குகின்றனர். சின்னப் பையன்(Little Boy) பக்கத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறான். இவோ ஜிமா தீவை அடைந்து அதை மேலிருந்து சுற்றிவிட்டு அங்கிருந்து கிளம்பி ஜப்பானை நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது. காலை 8.00 மணியளவில் ஜப்பானின் ரேடார்கள் அத்துமீறி நுழைந்த அந்த அமெரிக்க விமானத்தை இனங்கண்டு கொண்டன. மூன்று விமானங்கள் தானே ஏதாவது உளவு பார்த்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டார்கள்.

அப்படியே அவை தாக்கினாலும் பெரிய சேதம் ஒன்றும் நிகழ்ந்துவிடாது. போரில் ஏற்கனவே தோல்விமுகம் கொண்டிருந்த ஜப்பான் ராணுவம், எரிபொருள் மற்றும் விமானங்களை மிச்சம் பிடிக்க இதுபோன்ற சிறு தாக்குதல்களை எதிர்த்துத் தாக்கத் தீர்மானிக்கவில்லை. காலை 8.15 மணிக்கு ஹிரோஷிமாவை வட்டமடித்த விமானம் யுரேனியம்-235 ல் செய்யப்பட்ட வெறும் 60 கிலோ எடை கொண்ட, 10 அடியே உயரமுள்ள சின்னப்பையன் என்கிற அந்த அணுகுண்டை வானில் 9 கி.மீட்டர் உயரத்திலிருந்து கீழே விடுவித்தது.

புவிஈர்ப்பு விசையால் கீழிறங்கிய 'சின்னப் பையன்', சரியாக ஷிமா அறுவைசிகிச்சை மருத்துவமனையின் மேல் தரைக்கு மேலே 600 மீட்டர் உயரத்தில் வெடித்தது. அந்த அணுகுண்டு வெடித்ததும் 13 ஆயிரம் டன் டி.என்.டியை வெடித்ததற்கு இணையான மாபெரும் தொடர் வெடிப்பை அது உண்டாக்கியது. அந்த ஆற்றல் பக்கவாட்டில் பரவாமல் கீழ்நோக்கி பரவியதால் சுற்றியிருந்த 5 சதுர கி.மீ பரப்பளவில் இருந்த அனைத்தையும்; சாதாரண செடிமுதல் உறுதியான இரும்புத் தூண்கள் வரை அது உருக்கி கருக்கி, சாம்பலாக்கி அழித்தது. கூடவே மனித உயிர்களையும்..

குண்டு வெடித்த இடத்திலிருந்து 45000 அடி உயரத்திற்கு வானில் குடைக் காளான் வடிவில் கரும் புகை வானைச் சூழ்ந்தது. இந்த நிகழ்வை, கூட பறந்து வந்த விமானங்களிலொன்று பல்வேறு அளவீடுகள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது.

4000 டிகிரி வெப்பம்; சுற்றிலும் அனல்.வெடித்த இடத்தைச் சுற்றியிருந்த அனைவரும் அலறியடித்து ஓடினார்கள். ஆனால் ஒருவரை மற்றவருக்கு அடையாளம் தெரியவில்லை. ஏனென்றால் அனைவரின் முகங்களும், கைகால்களும், உடல்களும் வெப்பத்தில் கருகிப் போய், தோல்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அனைவரும் சிறிது நேரத்தில் இறந்து போனார்கள். நகரத்தின் சுமார் 30% மக்கள், அதாவது எழுபதாயிரம் பேர் உடனே மரணமடைந்தார்கள். இன்னும் 30% பேர் சில வருடங்களில் சாவார்கள்.

டோக்கியோவிலிருந்து ஜப்பான் அதிகாரிகள் ஹிரோஷிமாவில் இருந்த ஒரு சிறிய ராணுவத் தளத்தைத் தொடர்பு கொள்ள முயன்று தகவில்லாமல் போகவே காரணம் அறிந்துகொள்ள ஒரு சிறிய விமானத்தில் ஒரு இளம் வீரரை அனுப்பினர். 3 மணிநேரம் விமானத்தில் பறந்து அந்த வீரர் ஹிரோஷிமாவுக்கு 100 கி.மீ தூரத்தில் வந்தபோது வானத்தில் தெரிந்தது காளான் புகைமண்டலம்.

ஆகஸ்ட் 7,8, 1945
. ஜப்பானிய அரசு செயலிழந்தது. ஒரு சின்ன விமானத்திலிருந்து வீசப்பட்ட ஒரேயொரு குண்டால் ஒரு நகரமே அழிந்தது என்ற அதிர்ச்சியிலிருந்து அவர்களால் எளிதில் விடுபட முடியவில்லை. சேதத்தின் அளவீட்டைக் கூட அவர்களால் சரியாக எடுக்க வழியில்லை. அவர்கள் அந்த ஆயுதம் பற்றி இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

ஆகஸ்ட் 9, 1945. அன்று காலை புறப்பட்ட மற்றொரு அமெரிக்க போர் விமானத்தில் 6 கிலோ எடையுள்ள, புளுட்டோனியம்-239 த்தால் ஆன, 'குண்டு மனிதன்'(Fat Man) இருந்தான். கோக்குராவை இலக்காகக் கொண்டு பயணித்த அவ்விமானம் கோக்குராவை காலையில் அடைந்தபோது, கோக்குரா மக்களின் அதிர்ஷ்டம், அங்கு வானில் ஒரே மேகமூட்டமாயிருந்தது. எனவே அக்குழு அங்கிருந்து துணை இலக்காக லிஸ்ட்டில் இருந்த 'நாஹாசாகி'யை நோக்கிப் பறந்தது.

அங்கும் மேகமூட்டமாயிருந்ததால் இலக்கு 'clear' ஆகவில்லை. ஆனால் அவர்கள் நம்பிக்கையைக் கைவிடவில்லை. பொறுமையாக வானில் சுற்றியபடியே இருந்தனர். கொஞ்ச நேரத்தில் மேகம் சிறிது விலகி இலக்கு தெரிய ஆரம்பித்தது. சரியாக காலை 11.00 மணிக்கு நாஹாசாகியின் மேல் குண்டு மனிதன் குதித்தான். இது குதித்த வேகத்தில் 12 ஆயிரம் டன் எடையுள்ள டி.என்.டியை வெடிக்கச் செய்த விளைவு உண்டானது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த குண்டைப் போடுவதற்கு சற்று முன்னால் ஜப்பானின் அணு விஞ்ஞானிக்கு இக்குண்டின் தீமைகள் பற்றிய கடிதம் ஒன்றையும் இதே விமானத்திலிருந்து வீசி எறிந்திருக்கின்றனர் இந்தக் குண்டை எறிந்தவர்கள். அந்த எச்சரிக்கைக் கடிதம், எல்லாம் முடிந்து போய், செத்தவர்களுக்கு பால் வார்த்து திவசம் செய்து ஒரு மாதம் கழித்து கண்டெடுக்கப்பட்டு, அந்த விஞ்ஞானியிடம் 'பத்திரமாக' வழங்கப்பட்டது. நாஹாசாகியில் ஐம்பதாயிரம் பேர் குண்டு விழுந்த உடன் சிலமணி நேரங்களில் மாண்டுபோயினர்.

ஆகஸ்ட் 6, 2009
.இன்று. நாஹாசாகியில் குண்டு வெடிப்பில் மாண்டுபோனவர்களின் புதைக்கப்பட்ட எலும்புகளிலிருந்தும், பாதுகாக்கப்பட்ட உடற்பாகங்களிலிருந்தும் உட்கதிர்வீச்சு எனப்படும் ஆல்பா கதிர்வீச்சு வெளிப்படுகிறது என்று இப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குண்டுவீச்சின் போது வெளியான புளூட்டோனியக் கதிர்வீச்சை அளவிலும் பண்பிலும் ஒத்துள்ளது என்கிற அதிர்ச்சியான தகவலும் வெளிப்படுகிறது. இவ்வளவு வருடங்களாக இந்த உட்கதிர்வீச்சு பற்றி விஞ்ஞானிகள் பெரிதாக எண்ணவில்லை. குண்டு வெடிப்பு நிகழ்ந்து 64 வருடங்கள் கழித்தும் கதிர்வீச்சு இவ்வாறு வெளிப்படுவதைக் கொண்டு நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன ?

ஒரு மாபெரும் அழிவைக் கூட அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்வது போல படிப்படியாக, குறிப்புக்கள் எடுத்து, புகைப்படங்கள் எடுத்து, அதன் கோரத்தை பதிந்து வைப்பது தான் இந்த கார்ப்பரேட் உலகில் அறிவியலின் வேலையாக இருக்கிறது. அதில் மனிதனும், மனிதாபிமானமும் இருப்பதில்லை. அணுவைப் பிளப்பது பற்றி மனிதன் கற்றுக்கொண்டது ஒரு கடலில் மிதக்கும் பனிப்பாறையைக் கண்டுபிடிப்பது போல் தான்; மேம்போக்கானது; அந்தப் பனிப்பாறை கடலின் அடியில், பெரும் மலையாக, மனிதகுலம் என்கிற டைட்டானிக் கப்பலையே கவிழ்க்கும் அளவிற்கு பெரிதாய்  இருக்கும் என்பதை நாம் இன்னும் உணரவில்லை.

அணு உலைக் கழிவுகளை கையாளுவதில் நாடுகள் காட்டும் அலட்சிய மனப்பான்மையைப் பார்த்தால் இது உங்களுக்குப் புரியும். சமீபத்தில் டெல்லி அருகே பயிற்சியில் ஈடுபட்ட ஒரு போர் விமானத்திலிருந்து தவறுதலாக பாய்ந்த குண்டு ஒன்று கிராமம் ஒன்றில் வயற்காட்டில் விழுந்து ஒரு ஏக்கர் நிலம் கரிந்து போனது. நல்லவேளையாக மனிதர்கள் யாரும் அருகிலில்லை.

இதுவே ஒரு அணு ஏவுகணையாக இருந்திருந்தால்...